இரவு தாமதமாக வீட்டிற்கு வந்த நாராயணன் வேலை களைப்பில் உறங்கி விட.. காலையில் எழுந்தவருக்கு நேற்று ஆரதி சாப்பிடாமல் சென்றது நினைவு வந்தது. மகாலட்சுமியிடம் கேட்க ஹாலுக்கு வந்தவர் “ஆரதி சாப்பிட்டாளா” என விசாரிக்க… மகாலட்சுமி பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தார்.
மனைவியின் பதிலே நடந்ததை சொல்ல நேராக ஆரதி அறைக்கு சென்றார். அங்கு ஆரதி இல்லாமல் போக கீழே வந்தவர் அதைப் பற்றி விசாரிக்க…,
“அங்கிள் நேத்து ராத்திரி அவங்க ரெண்டு பேரும் வெளியே சாப்பிட போறோம் சாப்பாடு வேணாம்’னு சொன்னாங்க. காலைல எப்ப எந்திரிச்சு போனாங்கன்னு தெரியல ரெண்டு பேரும் வீட்ல இல்ல.” என ரதிதேவி கூற,
“மஹா! இது என்ன பதில் . வீட்ல இருக்க பிள்ளைங்க எப்ப போனாங்கன்னு கூட தெரியல. அவங்க சாப்பாடு வேணாம்’னு சொன்னா நீயும் விட்றுவியா. அப்படி என்னதான் உனக்கு கோபம்…” என்றவர் வாசலில் நிற்கும் காவலாளியிடம் ஆரதி எப்போ சென்றாள் என்பதை விசாரிக்க,
அவரோ, “சார் நேத்து ராத்திரி ரெண்டு பேரும் வெளியே போனது தான் சார். இன்னும் வீட்டுக்கு வரல. எங்கேயோ வெளியே போறாங்கன்னு நினைக்கிறேன் கைல பேக் இருந்துச்சு சார்.”
இவரின் பதிலை உள்ளே இருந்த மகாலட்சுமிக்கும் கேட்க… உடனே வெளியே வந்தவர் “என்ன சொல்றீங்க.. எப்ப போனாங்க.”
“நேத்து ராத்திரி ஒரு எட்டு மணி மேல இருக்கும்….. மேடம்.”
மகாலட்சுமிக்கு தான் இதை நம்பமுடியவில்லை. தன் பிள்ளையும், பிள்ளைக்கு மேலாக நினைப்பவளும் சொல்லாமல் சென்றதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. வீட்டிலிருக்கும் பிள்ளைகள் மூவரும் வெளியேறி இருக்க.. மகாலட்சுமிக்கு வருங்கால தனிமை பற்றிய பயம் ஏற ஆரம்பித்திருந்தது. இதை இப்படியே விடக்கூடாது என எண்ணியவர்.. ஆரதியின் தந்தை சண்முகத்திற்கு போன் செய்தார். நாராயணனும் மகாலட்சுமியின் நடவடிக்கையை பார்த்துக் கொண்டிருந்தாரே தவிர ஒரு வார்த்தை பேசவில்லை. அவருக்கு விளங்கியது சிக்கலே இல்லாத… சூழ்நிலையை மேலும் மேலும் சிக்கலாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று.
இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த ரதிதேவி தான் “ஆன்ட்டி!! இந்த ஆரதிக்கு அப்படி என்ன திமிரு. ஒரு வார்த்தை சொல்லிட்டு போய் இருக்கலாம்’ல. வீட்ல இருக்க பெரியவங்க தேடுவாங்க ன்னு கொஞ்சம் கூட அக்கறை இல்ல. வேணும்’னே பண்றாங்க ஆன்ட்டி. நீங்க கஷ்டப்படனும், அழனும் அதுக்காகத்தான் இப்படி பண்றாங்க. அன்னைக்கு சார் கூட சண்டை. இன்னைக்கு சித்துவை கூட்டிக்கிட்டு சொல்லாம கொள்ளாம போயிட்டாங்க. வீட்ல இருக்க ரெண்டு பசங்களும் இப்ப இல்ல. இப்படியே போனா…. நீங்கதான் ஆன்ட்டி கடைசியில கஷ்டப்படணும். இப்பவே சாரையும் சித்துவையும் உங்க கண்ட்ரோல்ல வச்சுக்கோங்க.” ரதிதேவியின் வார்த்தை காதில் விழுந்தாலும்.. பதில் சொல்லும் நிலைமையில் மகாலட்சுமி இல்லை.
தன் அறைக்கு சென்ற மகாலட்சுமி சண்முகத்துக்கு அழைத்து… வீட்டிற்கு வர சொல்ல அவரும் மனைவியுடன் கிளம்ப தயாரானார்.
நேற்றிரவு கிளம்பிய இருவரும் அதிகாலைப் பொழுது திருநெல்வேலி நெருங்கி இருக்க… ஒரு வார்த்தை கூட பேசாமல் காரில் அமைதியாக வந்து கொண்டிருந்த ஆரதியை கண்ட சித்து, “ஆதி பிசாசே.. எதுக்கு இந்த மாதிரி மூஞ்சிய வச்சுட்டு வர. சத்தியமா பார்க்க சகிக்கல.” வழக்கமாக வம்பிழுத்தால் சண்டைக்கு பாய்பவள் … அமைதியாக வர..,
இதற்கு முடிவு கட்ட எண்ணி காரை ஓரமாக நிறுத்திய சித்து,
“ஏஞ்சல்… இந்த மாதிரி இருக்காத. உனக்கும் கண்ணாக்கும் நடுவுல நான் வந்தது தான் இந்த சண்டைக்கு பெரிய காரணம்’னு கில்டியா இருக்கு. நான் மட்டும் அடிக்காம இருந்திருந்தா இவ்ளோ பெருசாகி இருக்காது. இந்த மூணு நாளா உன் முகத்தைப் பார்க்க முடியாம ரொம்ப கஷ்டப்படுற ஏஞ்சல். கண்ணாவ பத்தி உனக்கே தெரியும். அவனால உன் கிட்ட பேசாம இருக்க முடியாது. இப்போ அவனுக்கு வேலை கொஞ்சம் அதிகமாக இருந்திருக்கும். திரும்ப வந்ததும் உன் பின்னாடி தான் சுத்த போறான். அப்படியே உன் மேல கோவமா இருந்தாலும்.. நான் எதாச்சும் பண்ணி உன்கிட்ட பேச வைக்கிறேன் . ப்ராமிஸ் ஏஞ்சல். இந்த மாதிரி இருக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு. “
அவனது நிலையை உணர்ந்த ஆரதி.. ” சித்து ….. எனக்கு கண்ணா பேசாம இருக்கறது கூட கஷ்டமாக இல்ல. அத்தை பேசாம இருக்கறது தான் ரொம்ப வலிக்குது. என் முகத்தைப் பார்த்து… பேசி ரெண்டு நாளைக்கு மேல ஆகுது. என்னமோ என்னோட இடத்துல… அந்த ரதிதேவி வந்துட்ட மாதிரி தோணுது. அன்னைக்கு எதுவும் வேணும்’னு பண்ணல..”என்றவள் அவன் தோளில் சாய்ந்து அழ ஆரம்பிக்க ,
சித்துவைப் பொருத்த வரை பெண் என்றதுக்கு ரோல் மாடல் ஆரதி தான். ஆரதியைக் கண்டு பல நாள் ஆச்சரியப்பட்டு இருக்கிறான். தனியாக அவள் செய்யும் சாகசங்களும்…, பொது விஷயங்களைப் பற்றிப் பேசும் பொழுது அதில் இருக்கும் நுணுக்கங்களும், அதிரடியாக அவள் செய்யும் வேலைகளும் என்றுமே அவனுக்கு பிரமிப்பு தான். அதைவிட அதிக பிரமிப்பு கண்ணனிடம் அவள் நடந்து கொள்ளும் விதம்தான். அவனைக் கண்டதும் அவள் முகத்தில் தெரியும் வெட்கமே… சித்துவிற்கு எட்டாவது அதிசயமாக தெரியும். ஆரதி அழுதே பார்த்திராத சித்துவிற்கு… தானாகவே கண்கள் கலங்க, தோளில் சாய்ந்து இருப்பவளின் நெற்றியில் வழிந்து அவனது அழுகையை ஆரதிக்கு தெரியப்படுத்தியது.
அனிதாவின் வீட்டு முகவரி ஏற்கனவே ஆரதிக்கு தெரியும் என்பதால் சரியாக அவளின் வீட்டு முன்பாக நின்றது கார். ஆரதியை உள்ளே இருக்க சொல்லி விட்டு வெளியில் வந்த சித்துவை வரவேற்றது அனிதாவின் பூட்டிய வீடு தான். அதை அறிந்து ஆரதியும் கீழே இறங்கி அக்கம்பக்கம் விசாரிக்க..
அடுத்ததாக இருவரும் நின்றது திருநெல்வேலியில் உள்ள அரசு மருத்துவமனையில் தான்.
ராசாத்தி அம்மா சென்னை சென்று வருவதால்.. அவர் மீது சந்தேகப்பட்ட கணவர் சேகர் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தார். அனிதாவை காணவில்லை என்ற தகவல் அவருக்கும் தெரியும். அதையெல்லாம் பற்றி கவலைப்படாதவர் ராசாத்தி சென்னை சென்று வரும்போதெல்லாம் அடிக்க செய்வார். அதேபோல் இந்த முறை வந்த ராசாத்தியை அடிக்க.. எப்பொழுதும் அமைதியாக இருக்கும் ராசாத்தி , தன் கணவனை எதிர்த்து பேச ஆரம்பித்திருந்தார். அதில் ஆத்திரமடைந்த சேகர் ராசாத்தியை மிருகமாய் தாக்க …., தடுக்க வந்த வானதிக்கும் அந்த அடி விழுந்தது. மகளை அடித்ததும் மேலும் ஆத்திரப்பட்ட ராசாத்தி கையில் கிடைக்கும் பொருளை எல்லாம் தூக்கி சேகர் மீது வீச… ஏற்கனவே போதையில் இருந்த சேகர் தன்னை மறந்து வீட்டிலிருந்த அம்மிக்கல்லை ராசாத்தி மீது தூக்கி அடிக்க, அது நடுவில் தடுக்க வந்த வானதியின் கால் முட்டியில் விழுந்தது.
மகளின் அலறலில் பதறிய ராசாத்தி அக்கம்பக்கத்தினர் உதவியோடு மருத்துவமனையில் சேர்க்க… போதை தெளிந்ததும் நடந்ததை நினைத்த சேகர் வீட்டை விட்டு ஓடி விட்டார். அன்று நடந்த கலவரத்தில் ராசாத்தியின் போன் உடைந்து இருக்க… ஆரதிக்கு தகவல் சொல்ல முடியாமல் போனது.
ஆரதியை அங்கு எதிர்பார்க்காதவர் கண்கள் கலங்கி… தன் நிலையை உணர்த்த தொடங்க அதற்கு முன்னரே காயங்களால் மாறி இருந்த முகம் சொல்லி விட்டது இருவருக்கும் . அழுகையில் கரைபவரை சித்து தான் சகஜமாக்கினான். பின் இருவரையும் வானதி சேர்த்திருக்கும் வார்டிற்க்கு அழைத்துச் செல்ல,
அங்கு.., ஒரு காலில் கட்டு கட்டி இருக்க.. மற்றொரு கால் தப்பித்த நிம்மதியில் பக்கத்தில் இருக்க, அதன் மேல் போர்வை போர்த்தியவாறு … அமைதியாக படுத்திருந்தாள் வானதி. கருவிழி மட்டும் அசைந்துக் கொண்டே இருக்க …. பார்ப்பவருக்கு புரியும் அது வலியின் அசைவு என்று. ஆரதியின் வரவை அறிந்து அவளும் எழுந்து விட சில பேச்சுக்களோடு நிமிடங்கள் ஓடியது. அதன் பின் பேச்சு அனிதா பக்கம் செல்ல… வானதியின் முகத்தில் வலியை தாண்டிய ஆர்வம். அக்காவின் நிலை அறிந்து அந்த ஆர்வமும் வாடியது.
“ஆன்ட்டி கால் எப்போ சரியாகும் எதாச்சும் சொன்னாங்களா..?” சித்து.
“இன்னும் ஒரு பதினைந்து நாள் ஆகும்’னு சொன்னாங்க தம்பி. அது வரைக்கும் என் பொண்ண வச்சுக்கிட்டு என்ன பண்ணப் போறேன்னு தெரியல. கவர்மெண்ட் ஹாஸ்பிடல்’ னால காசு தேவை இல்ல. ஆனா சாப்பாட்டுக்கு….
இவளை விட்டுவிட்டு வேலைக்கும் போக முடியல. ஒரு பொண்ணு எங்க இருக்கான்னு தெரியல. இருக்க பொண்ணும் இந்த நிலைமையில . எதுக்காக வாழ்றோம்’னு தோணுது தம்பி.”என வாழ்வின் வருத்தத்தை வார்த்தைகளால் கூறிக் கொண்டிருக்கும் ராசாத்தியை பார்த்துக்கொண்டிருந்த ஆரதி, “சித்து அம்மாவ கூட்டிட்டு அவங்க வீட்டுக்கு போ. இவங்களுக்கு தேவையான எல்லாத்தையும் எடுத்துக்கட்டும். நானும் டாக்டர் கிட்ட பேசுறேன்…. இவங்க ரெண்டு பேரும் இனிமே நம்ம வீட்ல இருக்கட்டும். “
“இல்லக்கா நாங்க எங்கேயும் வரல. என்ன நடந்தாலும்… அதை நாங்களே பார்த்துக்கலாம்’னு முடிவு பண்ணிட்டோம். அங்க வந்து உங்களுக்கு கஷ்டத்தை தர விரும்பல. அதுவுமில்லாம அப்பாக்கு தெரிஞ்சா அங்க வருவாரு. எங்களுக்கு உதவி செய்ற உங்களுக்கும் தேவையில்லாத அசிங்கம் தான்.”
“எப்போ உங்க அம்மா எங்ககிட்ட வந்தாங்களோ அப்பவே அவங்க எங்க பொறுப்பு வானதி. உன்னோட அப்பாவால என்ன பண்ண முடியும். அப்படி என்னதான் பண்றாருன்னு நாங்களும் பார்க்குறோம். உன் அக்கா சம்பந்தமாக அடிக்கடி நீங்கள் சென்னைக்கு தான் வரணும். சும்மா சும்மா வந்துட்டு போயிட்டு இருக்க முடியாது. கேஸ் முடியிற வரைக்கும் அங்கேயே இருங்க. முடிஞ்சதும் நல்லபடியா உங்க வாழ்க்கைய பார்க்கலாம் நாங்க தடையா இருக்க மாட்டோம். “என்ற சித்துவை அப்போதுதான் முழுதாக நிமிர்ந்து பார்த்த வானதி … எதுவும் பேசாமல் இருக்க…, அதை சம்மதமாக எடுத்துக் கொண்டவன்.. கிளம்புவதற்கான வேலையில் இறங்கினான்.
பயணக்களைப்பில் இருந்தவர்கள் நாளை செல்லலாம் என்ற முடிவோடு அன்றைய இரவை அங்கேயே கழித்தனர். மறுநாள் மாலை இருவராய் தொடங்கிய கார் பயணம் நால்வராய் சென்னையை நோக்கி நகர்ந்து.
திருநெல்வேலியை விட்டு வருவதற்கு முன்னர்.. ராசாத்தியின் பக்கத்து வீட்டில் வசிப்பவரிடம் சேகர் வந்தால் மறக்காமல் இந்த முகவரியை கொடுக்க சொல்லி விட்டு புறப்பட்டான் சித்து. ஆரதியின் கோபத்தை அறிந்து.
இவர்கள் இல்லாத இவ்விரு நாட்களில்….. சென்னையில்,
மகாலட்சுமியின் அழைப்பில் சென்னைக்கு வந்திருந்த ஆரதியின் பெற்றோர்களை கண்ட ரதிதேவி.. யார் என புரியாது விழிக்க, மகாலட்சுமி தான் அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர் வழக்கம்போல் ரதிதேவி அவர்களிடம் ஒன்றிக் கொள்ள…அவளை பற்றி நல்ல எண்ணங்கள் பிறந்தது அவர்கள் மனதிலும்.
தகவலறிந்து நாராயணனும் வந்துவிட… மூவர் இல்லாத குறையை அழகாக தீர்த்து ஆரம்பித்தாள் ரதிதேவி நால்வருக்கும். வந்த காரணத்தை அறிய சரஸ்வதி மெல்ல பேச்சை ஆரம்பிக்க,அதை புரிந்துகொண்ட மகாலஷ்மி ..ரதி தேவியை அவள் அறைக்கு அனுப்பி வைத்தார்.
கண்ணன் ரதிதேவியைப் பற்றி பேசியதும், ஆரதி சித்துவை மணக்க விருப்பம் தெரிவித்ததும், அதன் பின்னான சண்டைகளும்… ஒவ்வொன்றாக இருவருக்கும் தெரியப்படுத்தினார் மஹாலட்சுமி.
ஆரதியின் பெற்றோருக்கு தர்மசங்கடமான நிலை. ஆரதியின் செயலுக்கு வெளியில் தடை விதித்தாலும் உள்ளுக்குள் பெருமைப்படவே செய்வார் சண்முகம். பல வருடங்கள் கழித்து பிறந்த ஒரே மகள் என்பதால் சரஸ்வதியும் அவளை இது வரை எதற்கும் தடுத்ததில்லை. அப்படியிருக்க வந்த இடத்தில் மகளால் பிரச்சினை ஏற்பட்டு இருக்க இருவரையும் வருத்தமடையச் செய்தது.
“மன்னிச்சிரு நாராயணா.. ஆதி இப்படி பண்ணுவான்னு நினைக்கல.”
“அண்ணா இப்ப எதுக்கு இவ்வளவு பெரிய வார்த்தை. நீங்க மன்னிப்பு கேட்கிற அளவுக்கு ஒன்னும் நடக்கல. என்ன நான் ஆதிய மூத்த மருமகளா ஆக்கணும்னு ஆசை பட்டேன். அது நடக்கல…. எப்படி இருந்தாலும் அவள் என் வீட்டு மருமகளா ஆனாலே போதும். அத பத்தி பேச தான் உங்களை வரச் சொன்னேன். இதுக்கு மேலயும் அமைதியா இருந்தா… இவங்க சண்டை மொத்தமா நம்ம எண்ணத்தை கலைச்சிடும்.”
மகாலட்சுமியின் பேச்சில் நிம்மதி அடைந்தாலும்.. அவர்களுக்கும் ஆரதியை கண்ணனுக்கு கொடுக்கவே ஆசை. அதிலும் சரஸ்வதிக்கு கண்ணன் பிரியப்பட்ட மருமகன் வேறு… சிறுவயதிலிருந்தே தன் வீட்டு மருமகனாய் பார்த்த சரஸ்வதிக்கு இது கசப்பான செய்தியாகவே தெரிந்தது. இருந்தாலும் மகளின் விருப்பத்தில் தலையிட விரும்பாது அதே நேரம் சித்துவையும் எதற்கும் குறை சொல்லிவிட முடியாது என்பதால், தன் கணவனிடம் சித்துவிற்கு கொடுக்க விருப்பம் என சொல்ல சொல்லி சைகை செய்ய அவரும் அதையே மகாலட்சுமியிடம் தெரிவித்தார்.
“அந்த பொண்ணு வீட்ல பேசிட்டியா ம்மா. அவளும் ரொம்ப நல்ல பொண்ணா தான் தெரியுறா. ” என சண்முகம் கேட்க,
“இல்ல ண்ணா… இனிமே தான் பேசனும். நம்ம எல்லாரோட எண்ணங்களும் ஒண்ணா இருக்கும்போது…. முதல்ல அதை சரிப்படுத்தாம பேச கூடாது’ன்னு தான் உங்க கிட்ட பேச முடிவு பண்ணேன். “
“அதெல்லாம் சரி அண்ணி . கண்ணாக்கு தான முதல்ல கல்யாணம் முடிக்கனும். அது முடிஞ்சி ஒரு ஆறு மாசம் கழிச்சு… ஆதி சித்து கல்யாணத்தை முடிவு பண்ணலாம். நீ இப்பவே ரதி தேவியோட வீட்ல பேசு. இதுல அவங்க சம்மதம் தான் முக்கியம்.”என்றார் சரஸ்வதி.
அவங்க சம்மதத்தை விட சம்பந்தப்பட்ட நாலு பேரோட சம்மதம் தான் ரொம்ப முக்கியம் சரஸ்வதி. முதல்ல அவங்க கிட்ட கேட்போம். அதுவும் கண்ணா… இன்னும் ஃபோன் கூட எடுக்கல. இவங்க ரெண்டு பேரும் எங்க போனாங்கன்னு தெரியல. ரதிதேவி நம்மகிட்ட நல்லா பேசுனாலும் அவளோட விருப்பமும் தெரிஞ்சா தான மேற்கொண்டு பேச முடியும்.” என்ற நாராயணனின் வார்த்தையில்…கோபமான மஹாலட்சுமி,
“ஆமாங்க கேளுங்க உங்க அருமை பசங்ககிட்ட. அதான் அன்னைக்கே தெளிவா சொல்லிட்டாங்கல. அன்னைக்கு நடந்த சண்டையில எங்க யாரும் முகத்தையும் கண்ணா பார்க்கல. ரதிதேவி மட்டும் பார்த்துட்டு போறான். அதுக்கு என்ன அர்த்தம்? இங்க உங்க அருமை மருமகளும் சின்ன பையனும் சொல்லாம எங்கேயோ போய்ட்டாங்க. ஆதி சாப்பிடாம சித்துவும் சாப்பிடல தெரியுமா.! இந்த ரதிதேவி என்ன’ன்னா கண்ணனைப் பத்தி பேச்சு வந்தாலே… அப்படி ஆர்வமா பேசுறா. இதுக்கு மேல என்ன சம்மதம் வேணும். அவங்க நாலு பேரும் இனி மூஞ்சிய பாத்து பேசுவாங்கலான்னு கூட தெரியல. இதையே வளர விட்டா நாளைக்கு குடும்பம் உடைந்துடும்..ங்க. நம்ம ஆதிக்கும் கண்ணாக்கும் சுத்தமா ஆக மாட்டுது. இப்பவே ஆதிகாக அண்ணன் தம்பி ரெண்டு பேரும் அடிச்சிக்குறாங்க. “
“ஆமா அண்ணா அண்ணி சொல்றதும் நல்லது தான். இவ்வளவு பிரச்சனை நடந்ததுக்கு அப்புறம்… பேச்ச வளர்குறது நல்லதா படல. அந்தப் பொண்ணும் கண்ணாக்காக தான இங்கே வந்திருக்கு.. அந்தப் பொண்ணோட அப்பா அம்மா கிட்ட பேசுங்க.”என சரஸ்வதியும் கூற,
வேறு வழியில்லாது அரைமனதோடு… பேசுவதாக ஒப்புக்கொண்ட நாராயணன் முதலில் கண்ணனுக்கு அழைக்க அவன் வழக்கம் போல் போனை எடுக்கவில்லை. அதில் மீண்டும் அவர் மனம் முரண்டு பிடிக்க ஆரம்பித்தது. அவரின் எண்ணத்தை புரிந்து கொண்ட சரஸ்வதி கண்ணனுக்கு தன் போனிலிருந்து அழைக்க,
கொல்கத்தாவிற்கு சென்றதிலிருந்து யார் போனையும் எடுக்காமல் இருந்தவன்.. தன் செல்ல அத்தையின் போனை மறுக்க மனம் வராமல் எடுத்தான் .
“கண்ணா நான் அத்தை பேசுறேன்.”
“சொல்லுங்க அத்தை எப்படி இருக்கீங்க. மாமா எப்படி இருக்காங்க.”
“கண்ணா நான் நம்ம வீட்ல தான் இருக்கேன். அண்ணி இப்ப தான் எல்லாத்தையும் சொன்னாங்க. இன்னும் உனக்கு கோவம் போகலையா… கண்ணா. ஆதிக்காக அத்தை நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்குற …………” மன்னிப்பை முழுதாக முடிக்க விடாமல் தடுத்து விட்ட கண்ணன்,
“அத்தை… எதுக்கு இப்படி பேசி என்னை சங்கடப்படுத்துறிங்க. எனக்கு கொஞ்சம் வேலை.. இருக்கறதால யாரு போனையும் எடுக்கல அத்தை. அதுவும் இல்லாம யாரையும் பார்க்காம வேற கோவமா வந்துட்டேன். இப்போ போன்ல பேச ஒரு மாதிரியா இருக்கு…..
அம்மா ஏதாச்சும் வருத்தப்பட்டு பேசினா இங்க இருந்து உடனே கிளம்பிடுவேன். அதுக்காகத்தான் எடுக்காம இருக்கேன். வேற எதுவும் இல்ல அத்தை. “
“அப்போ அம்மா கிட்ட பேசு கண்ணா.”என்ற அவரின் வார்த்தையை மறுக்க மனமில்லாமல் மகாலட்சுமியுடன் பேச சம்மதம் தெரிவிக்க,
மஹாலட்சுமியோ மறுத்துவிட்டார். “வேணா அண்ணி யாரும் என்கிட்ட பேச வேணாம். நானும் யார்கிட்டயும் பேச போறது இல்ல. ஒண்ணு மட்டும் கேட்டு சொல்லுங்க. ரதியோட கல்யாண ஏற்பாடு பண்றோம்….. அவனுக்கு சம்மதமான்னு ” என்றவரின் வார்த்தையை போனில் கண்ணனும் கேட்டுக் கொண்டிருக்க,
‘அம்மாக்கு எப்படி நம்ம ரதி சொல்றது தெரியும். எப்படி கண்டுபிடிச்சாங்க.’ என்று மனதில் சிந்தித்தவன் ரதி தேவியை மறந்தே போனான்.
“இல்லத்தை இப்ப வேணாம். நான் அங்க வந்ததும் பேசிக்கலாம் . “
“அதெல்லாம் முடியாது அண்ணி . அவங்க பேச்ச கேட்டதெல்லாம் போதும். இனிமே நான் சொல்றத கேக்க சொல்லுங்க. ரதியோடு அவனுக்கு கல்யாணம் பண்ண போறோம் அவ்வளவுதான். சீக்கிரமா கிளம்பி வர சொல்லுங்க.”
ஏற்கனவே பேசாமல் இருப்பதால் கஷ்டப்படும் அன்னையை மேலும் வறுத்த மனமில்லாமல்…”சரி அத்தை என்னமோ பண்ணுங்க. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு அப்புறம் பேசுறேன்.”என்று வைத்து விட்டான்.
தண்ணீர் குடிக்க வெளியே வந்த ரதி தேவி கண்ணனிடம் பேசுவதை கேட்க…, உடனே தன் பெற்றோருக்கு இங்கு வரும்படி உத்தரவிட்டாள். ஆனால் ரதி தேவியின் தந்தை, இரண்டு நாட்களுக்கு வேலை இருப்பதால் வார இறுதியில் வருவதாக கூற…. வார இறுதிக்காக காத்திருந்தாள்.
கண்ணன் அழைப்பை துண்டிக்கவும்…. அனிதா அங்கு வரவும் சரியாக இருந்தது. வந்தவள் வேகமாக கண்ணன் அருகில் சென்று “சார்! சார் ! நீங்க தேடிக்கிட்டு இருக்கிற ஆள் என் வீட்டுக்கு மேல் வீட்ல தான் ஒளிஞ்சி இருக்கான்..சார். இன்னிக்கு தான் எனக்கு தெரிய வந்துச்சு.” ஏற்கனவே இது கண்ணனுக்கு தெரிந்த விஷயம் என்பதால்
அமைதியாகவே நின்றிருக்க,
“எங்க வீட்டு ஹவுஸ் ஓனரை அடிச்சிட்டு தப்பிச்சு ஓடிட்டான் சார். ”
என்ற அனிதாவின் வார்த்தையில் பதைப்புடன் எழுந்து நின்ற கண்ணன்…
“என்ன சொல்றீங்க… .”