விடியற்காலை சூரியன் வரவிற்கு முன்னே, சூரியனை வரவேற்க எழுந்து விட்ட ரதிதேவி… நேராக நின்றது மகாலட்சுமியின் அறையில்தான்.
“ஆன்ட்டி இன்னைக்கு அம்மாவும் அப்பாவும் இங்க வராங்க. நேத்து நைட்டே உங்க கிட்ட சொல்லி இருப்ப ஆன்ட்டி.. சார் கிட்ட பேசிட்டு இருந்தால மறந்துட்டேன். சாரி! ஆன்ட்டி.
“கண்ணா உன் கிட்ட பேசினானா மா..”
“ஆமா! ஆமா!! ஆன்ட்டி நேத்து நைட்டு தான் பேசுனாங்க. பேசிட்டே இருக்கும்போது ஏதோ வேலை வந்துடுச்சி போல அவசரமா கட் பண்ணிட்டாங்க. டக்குனு போன் கட் ஆனதும் நான் ரொம்ப பயந்துட்டன் ஆன்ட்டி. விடாம கால் பண்ணிட்டே இருந்தேன். கொஞ்ச நேரத்துல சாரே.. கொஞ்சம் வேலையா இருக்க அப்புறமா பேசலாம்’னு சொன்னாங்க. அப்பதான் ஆன்ட்டி எனக்கு நிம்மதியா இருந்துச்சு.”
“எப்ப வரானா.. உன் கிட்ட ஏதாச்சும் சொன்னானா..” கேட்டவருக்கு… உதட்டைப் பிதிக்கியவள்,
“இல்லையே ஆன்ட்டி. நேத்து பேசிட்டு இருந்ததுல இத கேக்க மறந்துட்டேன். அவங்க ரொம்ப பாவம் ஆன்ட்டி … அத்தனை வேலைக்கு நடுவுலையும் என் கிட்ட கொஞ்ச நேரம் தான் பேசுனாங்க. நான் வேணா அப்புறமா கேட்டு சொல்ற … தப்பா நினைச்சுக்காதீங்க ஆன்ட்டி.”
“அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா. சும்மா தெரிஞ்சுக்கலாம்’னு கேட்ட. நீ அப்பா அம்மாவ கூட்டிட்டு வர கிளம்பு. “
“பையனோட விருப்பம் அதுவா இருந்தா சொல்றதுக்கு என்ன இருக்கு. இங்க தான வராங்க பொறுமையா பேசலாம் மஹா.”
நேற்று ஆறு மணிக்கு சொல்லியிருந்த மீட்டிங்கை நடத்த முடியாமல் போனதால்… அதை இன்று தொடங்கியிருந்தான் கண்ணன். அங்கு இருப்பவர்களுக்கு, நேற்று கண்ணன் அமைதியாக இருந்ததும், இரவில் கத்தியதும் நினைவு வர என்ன சொல்லப் போகிறான் என்பதற்காக காத்திருந்தனர்.
தனிப்படை காவல் அதிகாரிகள் ஆறு பேரின் மனநிலையை புரிந்தவன் போல், “நேத்து நைட்டு நடந்ததற்கு சாரி. அது கொஞ்சம் என்னோட பர்சனல். அகைன் சாரி நேத்து சொன்ன மீட்டிங்க நடத்த முடியாம போனதுக்கு. எனக்கு நானே முதல்ல புரிய வச்சுக்கணும். அதற்கான டைம் தான் நேத்து நான் எடுத்துக்கிட்டேன். இங்க நீங்க ஆறு பேர் இருக்கீங்க.. சோ, என்னோட மனசுல நான் யூகித்த யூகங்களை உங்ககிட்ட சொல்றேன். அத முழுசா கேளுங்க. கேட்டுட்டு உங்க ஆறு பேரோட.. எண்ணங்களும் என்னுடைய எண்ணங்களும் சரியா இருந்தா நம்ம சென்னைக்கு கிளம்பலாம். இங்க வேலை இல்ல”
சம்மதமாக தலையசைத்தவர்களுக்கு சொல்லத் தொடங்கினான்,”முதல்ல ராபர்ட் கேஸ் எப்படி இவ்ளோ பெரிய விஷயமா மாறுச்சு.
3. அங்க இருக்க இரண்டு பேரை பிடிச்சி விசாரிச்சதுல ராபர்ட் கடைசியா அங்க இருந்து போனதா தகவல் வந்துச்சு.
4. அதுக்கு நடுவுல திடீர்னு இறந்து போனவன் ராபர்ட் னு தெரிஞ்சுது.
5. டிஎன்ஏ டெஸ்ட் அது ராபர்ட் தான்னு சொல்லும்போது அவனோட பொண்டாட்டி அதை மறுத்தாங்க. அதுக்கு அவங்க சொன்ன காரணம் என்கிட்ட என் புருஷன் பேசிட்டு தான் இருக்கான்னு. பேசிட்டு இருக்குறப்ப எப்படி பிணமா இருப்பான்?
6. திடீர்னு அவங்க பொண்டாட்டி அது என் புருஷன்தான் னு சொல்லி டெட்பாடியை வாங்குறாங்க எப்படி?
7. வெங்கடாச்சலம் சொன்னத வச்சு பார்த்தா அவன் பிளான் பண்ணி கொல்கத்தாவுக்கு வரல… போக இடம் இல்லாம இங்க வந்திருக்கான்.
8. தப்பிச்சு போறதா சொன்னவன் அதே வீட்டுக்குள்ள எப்படி இருந்தான். நம்ம அங்க தேட மாட்டோம்னு அவன் எப்படி அவ்ளோ உறுதியா நம்பினான்.
9. இங்க இருக்கிறவன் ராபர்ட் இல்லன்னு உறுதி ஆயிடுச்சு. ஆனா ராபர்ட் பேர்ல எதுக்காக இருக்கான்.
10. யாருனே தெரியாதவன கண்டுபிடிக்க கொல்கத்தாவுல எதுக்காக இருக்கனும். இந்த பத்து கேள்விக்கும் நீங்க இப்போ விட சொல்லுங்க. இந்த விடை தான் அவனை கண்டுபிடிக்க போற ஆயுதம்.
அங்கிருந்த அதிகாரிகளுக்கு ஒவ்வொன்றாக புரிய ஆரம்பிக்க பதில் சொல்ல தொடங்கினார்கள்..
“சார் முதல் கேள்விக்கான பதில்.. வீட்டுக்குள்ள கொள்ளையடிச்சது அவனாவே இருந்தாலும் தனியாளா எப்படி பண்ணமுடியும்.”
“ஹ்ம்ம்! அதே தான் சார். அடுத்த கேள்விக்கு என்ன பதில்.”
மதுரையில பிடிப்பட்டவங்க சொன்னதை வைச்சி பார்க்கும்போது அந்த ஆறு மாசமும் ராபர்ட் மதுரையில தான் இருந்திருக்கான். ஏன்னா அவனோட கூட்டாளிகளுக்கு அவனோட முகம் நல்லா தெரியும்.
“இந்த பதில் மூன்றாவது கேள்வி க்கும் பொருந்தும். அடுத்து…”
“ஆறு மாசத்துக்கு அப்புறம் மதுரையில இருந்து சென்னை வந்திருக்கும் போதுதான் அவன் இறந்து இருக்கணும். “
“கரெக்ட் சார். மதுரையில் இருந்து தனியா வந்தவன் சென்னையில யாரைப் பார்க்க வந்தான். ஏன் இப்ப தப்பிச்சு போனவன் அவனா இருக்க கூடாது. “
“அடுத்த கேள்விக்கு பதில்…”
“ராபர்ட் மாதிரி அவனுடைய பொண்டாட்டி கிட்ட…. நமக்கு தெரியுறதுக்கு முன்னாடி வரைக்கும் பேசிட்டு இருந்திருக்கான். அதுவும் ராபர்ட் குரல்ல. அதுக்கு காரணம் அவன் மாட்டிக்க கூடாதுன்னு இருக்கலாம் சார். “
“அடுத்து…”
“திடீர்னு அவங்க பொண்டாட்டி சொல்ல காரணம்… இவனே அவங்க கிட்ட டெட்பாடிய வாங்க சொல்லி பேசியிருக்கலாம். புருஷனே சொன்னதால அவங்களும் அதற்கு சம்மதித்து இருக்கலாம் சார்.”
“எக்ஸாக்ட்லி”
“கொலை பண்ணிட்டு மாட்டிக்க கூடாதுன்னு அங்கிருந்து கொல்கத்தாவுக்கு வந்திருக்கான். இங்க அவனுக்கு யாரையும் தெரியாததால கிடைச்ச வெங்கடாசலத்தை யூஸ் பண்ணிக்கிட்டான்.”
“அடுத்து…”
“இங்க அவனுக்கு யாரையும் தெரியாது. வெளிய வந்தா மாட்டிப்போம்’ன்னு உள்ளேயே இருந்திருக்கலாம்.” என அங்கிருந்த தனிப் படை அதிகாரி ஒருவர் கூற,
“இல்ல சார். அவன் தப்பித்து வெளியே போயிருக்கான். நம்ம தீவிரமா தேடிட்டு இருக்குறதை தெரிஞ்சுக்கிட்டு… எப்படியா இருந்தாலும் தப்பிச்சு போனதை வெங்கடாசலம் சொல்லிடுவான். சோ, அவனோட வீட்டுக்குள்ள தேட மாட்டோம்’னு நம்பி இருக்கான். அதனாலதான் அவ்ளோ தைரியமா அந்த வீட்டுக்குள்ள இருந்திருக்கான்.
“ராபர்ட் பேர்ல இங்க இருக்க காரணம்… அவனும் பல வழக்குல சம்பந்தப்பட்ட ஒரு ரவுடியா இருக்கலாம். ராபர்ட் பேரைச் சொல்லி சுதந்திரமாக வாழ இந்த பிளான் பண்ணி இருக்கலாம்.”
“கடைசியா ஒரே ஒரு கேள்விக்கான பதில்…”
“முதல்ல மேல இருக்க இந்த ஒன்பது கேள்விக்கான விடையை ஆதாரத்தோட கண்டுபிடிச்சிட்டா தப்பி ஓடியவன் யாருன்னு தெரிஞ்சிரும் சார். “
“சூப்பர்… நான் என்ன பதில மனசுல வச்சு பேசுனனோ… அதை நீங்க ஆறுபேரும் கரெக்டா புரிஞ்சுக்கிட்டிங்க. அது மட்டும் இல்ல.. இங்க இருந்து தப்பிச்சவனுக்கு.. அப்போ உதவியா இருந்த அந்த ஒட்டு தாடியும் இல்ல. சோ, அவனோட உண்மையான முகத்தோட இங்க சுத்த மாட்டான். அது அவனுக்கு பாதுகாப்பு இல்ல. அத தெரிஞ்சிட்டும் அவன் எதுக்காக சார் இன்னும் இங்க இருக்கணும். அந்த வீட்டுக்குள்ள ஒளிஞ்சிட்டு இருந்த மாதிரி திரும்ப சென்னைக்கே போயிருந்தா……………………..”
“கரெக்ட் சார் அவன் இங்க இருக்க வாய்ப்பு ரொம்ப கம்மிதான். அதே மாதிரி பஸ், ட்ரெயின் வேற எதுலயும் போய் இருக்கவும் வாய்ப்பு கம்மி தான்.”
அவர்களின் பதிலில் சிரித்தவன் உண்மைதான் என்பது போல புருவம் உயர்த்தி தலையசைக்க… நேற்றைய கண்ணனின் மௌனம் புரிய ஆரம்பித்தது அவர்களுக்கு.
ரதி தேவியின் பெற்றோர்களும் வந்துவிட வீட்டில் ஆட்களுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. இந்த சூழ்நிலை வானத்திற்கும், ராசாத்திக்கு புதிதாக இருக்க, பழக தடுமாறியவர்களை சரஸ்வதியும், மகாலட்சுமியும் பார்த்துக் கொண்டனர். சில நிமிடங்களில் குடும்பம்.. சிரிப்பு சத்தத்தால் அதிரத் தொடங்கியது.
பேச்சுவார்த்தைக்கு நடுவில் ரதி தேவிக்கு அழைப்பு வர.. அதை எடுக்க சென்ற தாயைத் அடுத்தவள், “அம்மா நீங்க எடுக்காதீங்க. அது சார் ஆ தான் இருக்கும். நேத்து நைட்டு அப்புறமா பேசறேன்’னு சொல்லிட்டு வச்சாங்க. ” நிறைந்த புன்னகையோடு அதை எடுக்க செல்ல,
வேறு ஒரு அழைப்பாக இருக்க ஒரு நொடி முழித்தவள்… மற்றவர்கள் கண்டு கொள்ளும் முன் தன் அறைக்கு ஓடிவிட்டாள்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆரதிக்கு தான்.. கண்ணனின் மேல் கொலைவெறியே வரத் தொடங்கியிருந்தது. சித்துவும் தன் பங்கிற்கு ரதிதேவியை நோட்டம் விட… ஆரம்பிக்க, வானதியின் பார்வையில் அது வேறாக தெரிந்தது.
ரதி தேவியின்யின் ஓட்டத்தில்… பெரிய தம்பதிகள் மனதில் ஒரே மாதிரியான எண்ணங்கள் ஊத்திக்க, ஒருவரை ஒருவர் அர்த்த பார்வை வீசிக் கொண்டனர். அவர்களின் பார்வையில் எதுவோ சரியில்லை என்றுணர்ந்த சித்து… தன் அண்ணனுக்கு அழைக்க, மீட்டிங்கில் இருந்தவன் கட் செய்ய தொடங்கினான். அதில் மேலும் குழப்பம் அடைந்த சித்து.. எதுவும் பேசாமல் ரதிதேவி சென்ற இடத்திற்கு செல்ல, வானதிக்கு அவளுடைய எண்ணங்கள் உறுதியாகியது.
அங்கு இருப்பவர்களுக்கு எதிரான மனநிலையில் இருந்த ஆரதி தன் கைபேசியில் கண்ணனுக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளை பார்க்க, படித்ததற்கான குறியீடுகள் காணப்பட்டது. அதைப் பார்த்தும் பதில் தராத கண்ணனின் நடவடிக்கை… ஆரதியின் தைரியத்தை அசைத்துப் பார்க்க ஆரம்பித்திருந்தது.
வெகு நேரமாக அமைதியாக அமர்ந்திருக்கும் தன் மகளைக் கண்ட சரஸ்வதி, “ஆதி என்ன டி அமைதியா இருக்க. அப்படி என்ன யோசிச்சிட்டு இருக்க.” என கேட்டவருக்கு,
தலைவலி என்று பொய் உரைத்தவள் தன் அறைக்குள் அடைந்து கொள்ள, நாராயணனுக்கு தான் ஆரதியின் இந்த செயல் விசித்திரமாக தெரிந்தது.
ஷவரின் குளுமையிலும் தன்மன சூடு குறையாமல் இருக்க, அதை தணிக்கும் வழி தெரியாது பாவையவள் கண்ணீரை வெளியேற்ற… வெகு நேரம் கழித்தே வெளியில் வந்தாள். வேறு உடைக்கு மாறி விட்டு ஒரு முடிவோடு கண்ணனுக்கு குறுஞ்செய்தியில்,
“மிஸ் யூ ஆழி. என்கிட்ட பேசாம இத்தனை நாள் நீ எப்படி இருந்தேன்னு தெரியல. ஆனா நான் நல்லா இல்ல. ஒவ்வொரு நிமிஷமும் நான் மட்டும் தனியா நிக்கிற மாதிரி தோணுது. நீ போறப்போ கூடவே என்னோட நிம்மதியும், சந்தோஷமும் எடுத்துட்டு போயிட்ட மாதிரி தோணுது. தைரியமான பொண்ணுலாம் இந்த வெளி உலகத்துக்கு தான். உன் முன்னாடி என்னோட திமிரும், தைரியமும் காணாம போயிடும். தனிப்பட்ட முறையில் நீ இல்லாம ஒருநாள் கூட போக மாட்டேங்குது ஆழி. நான் அனுப்புனதை படிச்சுட்டு கூட உனக்கு பேசணும்’னு தோணலையா. அன்னைக்கு வேணும்’னே பேசல ஆழி. கோவம் ரொம்ப ரொம்ப கோவம்… அந்த ரதிதேவி வீட்டுக்கு வந்த கோவம். அவ உன்ன பத்தி பேசின ஒவ்வொரு வார்த்தைக்கும் உன் மேல கோவம். அது எங்க காட்றதுன்னு தெரியாம…… உன்கிட்ட…. வேணும்’னு பண்ணல ஆழி. இப்ப கூட அவ கிட்ட பேசுற.. என்னைய திட்டவாது ஒரு போன் பண்ணி இருக்கலாம் ல ஆழி. என்னால எந்த வேலையும் செய்ய முடியல, நிம்மதியா தூங்க முடியல, சிரிச்சு ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கு. என்னால தான் உன் அம்மா கிட்ட நீ பேசாம இருக்கியா. நான் இங்க இருக்கறதால நீ வீட்டுக்கு வராம இருக்கியா. அப்போ நான் இங்க இருந்து போற…. என்னால எல்லாரும் கஷ்டப்படுற மாதிரி இருக்கு. முக்கியமா நீ.” என்றவளின் சில கண்ணீர் துளிகளும் அந்த ஒலி பதிவு குறுஞ்செய்தியில் இடம்பெற, அதற்குமேல் பேச முடியாமல் கண்ணனுக்கு அனுப்பி வைத்தவள், மதிய உணவையும் மறுத்தவள், இரவு உணவையும் தவிர்த்து தூங்க தொடங்கினாள்.
இருவேளை உணவைத் தவிர்த்துவிட்டு உறங்கியவளை… சரியாக தூங்கவிடாமல் வயிறு சதி செய்ய, திரும்பித் திரும்பிப் படுத்தவள், பக்கத்திலிருக்கும் தலையணையை அணைத்துக் கொண்டு தூங்க முயற்சிக்க…..
தலையணையின் அணைப்பு சிறிது சிறிதாக இறுக்கமாக.. வலப்புற கண்ணும் இடப்புற கண்ணும் ஒரே மாதிரியாக வலப்புறம் சாய்ந்திருந்தவளின் விழி வழியே அவள் வைத்திருக்கும் தலையணையை நனைக்க ஆரம்பித்திருக்க, மௌனமான அழுகை.. சத்தத்தை அதிகபடுத்தி மெல்ல உதட்டை தேம்பி பேச வைத்தது “ஆழி”…….
அதுவரை அமைதியாக இருந்தவன் .. ஆழி என்ற அழைப்பில், இடையோடு கழுத்தையும் அவன் பக்கமே இறுக்கி அணைக்க.., பிரிவின் ஏக்கம் முகம் பார்க்காமலே கரையத் தொடங்கி இருந்தது இருவருக்கும். வந்ததை அவனும் தெரிவிக்கவில்லை… அவளும் அதை எதிர்பார்க்கவில்லை. மனங்கள் இரண்டும் தன் துணையின் அருகாமையை தானாக தேடி இருக்க… அழுகையோடு சில வார்த்தைகளும், முத்தங்களும் .
“ஆதி..”
” பேசாத…”
” ஆதி….. போதும் அழுதது.”
நெஞ்சோடு முகத்தை அழுத்திக்கொண்டு கண்ணீரில் அவள் பேசும் வார்த்தைகள் கண்ணனுக்கு புரியாமல் போக வலுக்கட்டாயமாக பிரிக்கத் தொடங்கினான்.
அவனுக்கு வாகாய் பிரிந்தவள், மீண்டும் பசையாக ஒட்டிக்கொள்ள…
மறுப்பு தெரிவிக்காமல் மீண்டும் அவளோடே ஒட்டிக் கொண்டான்.
“முகத்தை காட்டு..” என்றவன் மீண்டும் அவளை விலக்க இம்முறை அமைதியாக விலகியவள் கண்ணை மட்டும் திறக்காமல்,
“பேசாதே என்கிட்ட. அழுகையின் இடையே ஒவ்வொரு வார்த்தையாக பேசியவளை கண்டவன் மனம் உள்ளுக்குள் உடைய … அவனின் ரதியை பேச வைக்க.., அவளின் ஒலிப்பதிவு குறுஞ்செய்தியை ஓடவிட்டான்.
வலியில் அப்போது பேசிய வார்த்தைகள்… அவனுடன் இருக்கும் பொழுது வெட்கம் கலந்த அவமானமாக மாற அதை நிறுத்தும் முயற்சியில் ஆரதி இறங்க, அவளை பேச வைக்கும் முயற்சியில் கண்ணன் இறங்கியிருந்தான்.
“எப்படி எப்படி ரிப்பேரு சாப்பிட முடியல, தூங்க முடியல, சிரிக்க முடியல…. நீ இல்லாம ஒரு நாள் கூட ஓடல, அப்புறம் என்னமோ சொன்னியே…. என்ன அது……ஆஹான்!! தனியா இருக்கிற மாதிதிதிரிரிரி… இருக்கு. “
கண்ணனின் ஒவ்வொரு வார்த்தையிலும் அடி கூடிக்கொண்டே போக,
“இருடி அடிக்காத…. ஆமா நான் போகும்போது டிரஸ் மட்டும் தான்டி எடுத்துட்டு போன. நீ என்னமோ நிம்மதியையும், சந்தோஷத்தையும் தூக்கிட்டு ஓடிட்டே மாதிரி சொல்ற… போலீஸ்காரனுக்கு திருட்டுப் பட்டம் கட்றியா….”
“ஆழி மரியாதையா அத நிறுத்து…”
“என்கிட்ட பேசறன்னு சொல்லு நிறுத்துற.”
“ம்ஹூம்… மாட்ட”
“அப்ப போ…. நானும் நிறுத்த மாட்ட.”என்றவன் மேலும் அவள் பேசிய வார்த்தைகளை அவளைப்போலவே அழுது கொண்டு பேச,
“இப்ப எதுக்கு என்னை கிண்டல் பண்ற. உன் கிட்ட பேசினது தப்புதான். நான் அவ்ளோ பீல் பண்ணி சொன்னது உனக்கு சிரிப்பா இருக்குல….” அவனை விட்டு விலகி பால்கனியில் நின்று கொள்ள,
பின்னோடு சென்றவன்… பின்னால் நின்று அணைத்துக்கொண்டு ,
“பேச மாட்டியா….ரிப்பேரு.”
“ம்ஹூம் … ம்ஹூம்.”
“அப்போ நான் கிளம்புற டி.”என்றவன் கைகளை பிரிக்க.. அணைத்துக் கொண்டவள், “உனக்கு கொஞ்சம் கூட வருத்தமா இல்லையா ஆழி.”
“ம்ம் இருந்துச்சு…”
“எப்போ…. சார்.”
“உன்னை பார்க்காத வரைக்கும். பேசாத வரைக்கும். இங்க வராத வரைக்கும். நீ கட்டி பிடிக்காத வரைக்கும். இதோ இப்படி முத்தம் கொடுக்காத வரைக்கும்….” என்றவன் அவள் காதில் முத்தமிட ஆரதியின் வார்த்தை தானாய் அடங்கியது.
அவள் அமைதியில்.. அணைத்துக் கொண்டே நகர்ந்தவன் சுவற்றில் சாய்ந்தமர்ந்து..அவளையும் அவன் மீது சாய்த்துக் கொண்டான். இருவருக்கும் வார்த்தைகள் தேவைப்படாது… வீசும் காற்றை போர்வையாய் மாற்றி, நிலவை காவலுக்கு வைத்துக்கொண்டு இரவின் இனிமையை ரசிக்கத் தொடங்கியது காதல் கிளிகள்.
“ஆழி .. எப்படி வந்த. அப்போ நான் மெசேஜ் பண்ணும் போது இங்கதான் இருந்தியா.”
“சொல்ல முடியாது…” என்றவனை கழுத்தைத் திருப்பி பார்த்து முறைத்தவள்,
“இப்ப மட்டும் நீ சொல்லல எடுபுடி…. மண்டையில இருக்க முடி மொத்தமும் கொட்டிடும்.”
“ரிப்பேரு…..பழைய ஆதி வந்துட்டா போல…..” என்றவன்,
“இங்க வர இன்னும் ரெண்டு மூணு நாள் ஆகியிருக்கும்..ஆதி. அங்க ஏகப்பட்ட வேலை. இந்த ராபர்ட் கேஸ் எனக்கு ரொம்ப பெரிய தலைவலி. மீட்டிங்கை முடிச்சுட்டு சாப்பிடலாம்’னு உட்கார்ந்த… அப்போ தான் உன்னோட மெசேஜ் பார்த்தேன். என்னமோ இருக்கும்’னு நினைச்சு ஓபன் பண்ண ஆதி. சத்தியமா உன்னோட அழுகிய எதிர்பார்க்கல… அதைக்கேட்ட நிமிஷம் என்னையவே நான் வெறுத்துட்ட. நீ சொன்னது தான் ஆதி. உன்னைத் தவிர மற்ற எல்லாரும் முன்னாடியும்… வீம்பா இருக்க தெரிஞ்ச எனக்கு உன்கிட்ட மட்டும் முடியல. இப்போ மட்டும் இல்ல எப்பவுமே முடியாது. நீ இங்க அழுதுட்டு இருக்கன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமும் எப்படி எங்க இருக்க முடியும்… உன்னோட நினைப்பே என்னை கொன்னுடும் டி…” என்றவனின் வார்த்தை தடுமாற.. அதற்கு பதில் கைகள் அணைப்பை அதிகபடுத்தி பேசியது.
“அங்க இருக்க போலீஸ்காரங்க கிட்ட சொல்லிட்டு… ஃப்ளைட் பிடிச்சு இங்க வந்த. நல்ல வேளை சிக்கிரமா நீ அனுப்புனத பார்த்த.. இல்லன்னா வந்திருக்க முடியாது ஆதி. நான் வந்தது யாருக்கும் தெரியாது. நாளைக்கு கிளம்பிடுவ ஆதி. நான் வந்ததை யார்கிட்டயும் சொல்லாத. ஒரு ரெண்டு நாள்ல வேலைய முடிச்சுட்டு வந்துடுற ஆதி ப்ளீஸ்.”
“ஏன் ஆழி அங்க வேலை ரொம்ப அதிகமா…” என்றவளுக்கு கொல்கத்தாவில் நடந்த சம்பவங்களை கூற, அவனை குற்றம்சாட்டிய வார்த்தைகள் நினைவில் வந்து வருத்தத்துடன் சாரி கேட்க,..
அதைப்பற்றி பேசாதவன்… நகர்ந்து அவள் மடியில் தலை வைத்து உறங்க ஆரம்பித்தான். தூக்கம் கண்ணில்.. அலைமோதிக் கொண்டிருந்தாலும் பசி எடுக்கும் வயிறு அதை நிறுத்த விடாமல் தடைசெய்ய… தானாக கண்ணனின் கைகள் வயிற்றை பிடித்தது. புரிந்து கொண்டு உணவு எடுத்துவர.. எழுந்தவள், அறையின் மேஜையில் இருக்கும் உணவு கண்ணில் பட … சித்துவின் செயல் என்பதை புரிந்துக் கொண்டாள் . உணவுடன் அவன் அருகில் வர… காரணத்தை அறிந்தவன் தானாகவே எழுந்து அமர்ந்தான்.
ஒருவர் மாற்றி ஒருவர் ஊட்டி உணவை காலி செய்ய, அதன் பின்னான பேச்சுக்கள் அந்த இரவை அழகாக நகர்த்தி கொண்டிருந்தது.