அத்தியாயம் 13_2 விழி மொழி பேசு_கார்த்திகா கார்த்திகேயன்
Post Views:1,926
அதே நேரம் விக்ரமோ “அப்பா நான் இன்னைக்கு ஆஃபிஸ்க்கு வரலை. லீவ் எடுத்துக்குறேன்”, என்று சேதுபதியிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
அவர் அவனைக் கண்டு குழப்பத்துடன் சரி என்று சொன்னார். அப்போது ஆதி அவனிடம் எதுவோ கேக்க வருவதற்குள் “பை அண்ணா”, என்று சொல்லி விட்டு அறைக்குள்ளே முடங்கிக் கிடந்தான்.
சாப்பிட வெளியே வந்தாலும் சாரதா மடியில் மௌனமாக படுத்துக் கொண்டான். அவனது சோர்வு சாரதாவை மிகவும் பாதித்தது. ரேகாவின் நினைவு அவனை அந்த அளவுக்கு வாட்டுகிறது என்றும் அவளுக்கு புரிந்தது.
அவனை காலை உணவு சாப்பிடச் சொல்லி விட்டு தன்னுடைய அறைக்குச் சென்ற காயத்ரி ரேகாவை அழைத்தாள். சாரதா அழைக்கவும் ஏதோ விக்ரமே அழைப்பது போல உற்சாகமாக இருந்தது ரேகாவுக்கு.
சந்தோஷமாக “அத்தை எப்படி இருக்கீங்க? மாமா எப்படி இருக்காங்க?”, என்று கேட்டாள்.
“நல்லா இருக்கோம் மா. விக்ரம் தான் சரி இல்லை. அவன் இது வரை இப்படி இருந்தது இல்லை. நீ எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நம்ம வீட்டுக்கு வந்துரு என்ன?”, என்று சாரதா சொன்னதும் சரி என்றாள் ரேகா.
“சரி ரேகா நான் சாயங்காலம் கூப்பிடுறேன். இப்ப உனக்கு வேலை இருக்கும்ல?”, என்று சொல்லி போனை வைத்த சாரதா விக்ரமைத் தேடிச் சென்றாள். அங்கே அவன் ஒரு தோசையைக் கூட உண்ணாமல் அமர்ந்திருந்தான். பின் சாரதா தான் அவனுக்கு ஊட்டி விட்டாள்.
உண்டு முடித்ததும் சாரதா சோபாவில் அமர டிவி பார்த்துக் கொண்டிருந்த விக்ரம் அவள் மடியில் படுத்து விட்டான்.
அந்த காட்சியைப் பார்த்தவாறே வந்த காயத்ரியோ அவனை வெளிப் படையாக முறைத்தாள். அவள் பார்வையைக் கண்டு விட்டு “என்ன அண்ணி?”, என்று கேட்டான் விக்ரம்.
“இரு காயு பிரிட்ஜ்ல பூ இருக்கு எடுத்துட்டு வரேன்”, என்று சாரதா எழுந்து சென்றாள்.
சாரதா அங்கிருந்து சென்றதும் “அவளை அங்க அனுப்பி வச்சிட்டு பசலை வந்த பொண்ணு மாதிரி அம்மா மடில படுத்துருக்க? இது தேவையா உனக்கு? ஒழுங்கா போய் அவளை கூட்டிட்டு வரப் பாரு. இல்லைன்னா நாங்க விக்ரமை எங்கன்னு தேடுற மாதிரி நிலைமை வந்துறப் போகுது”, என்று சொல்லி விட்டுச் சாரதாவைத் தேடிச் சென்றாள் காயத்ரி.
அன்றைய நாள் அவனுக்கு அவள் நினைவில் கடக்க ரேகாவுக்கோ பகல் முழுவதும் வேலையில் கடந்தது. அன்று மாலை வேலை முடிந்து அவள் ஹாஸ்டல் வந்த பிறகு மீண்டும் விக்ரம் நினைவு அவளுக்கு தலை தூக்கியது.
“விக்ரம் இந்நேரம் என்ன செய்வாங்க? ஆஃபிஸ்ல இருந்து வீட்டுக்கு வந்திருப்பாங்களே? வீட்ல இருக்குறவங்க கூட பேசிட்டு இருப்பாங்களா? இல்லை எங்க ரூம்ல இருப்பாங்களா? இனி அந்த ரூமுக்கு என்னால போக முடியுமா? இனி அந்த வீட்டுக்கு போகுற சந்தர்ப்பம் இனி வருமா?”, என்று அவனைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தாள்.
அடுத்த நாளும் இதுவே தொடர்ந்தது. சாரதாவும் காயத்ரியும் ரேகாவை அழைத்துப் பேசினாலும் விக்ரம் மட்டும் அவளை போனில் அழைக்க வில்லை. அவளும் அழைக்கவா வேண்டாமா என்ற குழப்பத்திலே நாளைக் கடத்தினாள்.
ரேகா இங்கே ஹாஸ்டலுக்கு வந்து பதினைந்து நாட்கள் கடந்த நிலையில் ஒரு நாள் அவளை சேதுபதி அழைத்தார். சாதாரண நல விசாரிப்புக்கு பின் “ரேகா, மாமா ஒண்ணு சொல்வேன். நீ தப்பா எடுத்துக்க கூடாது மா”, என்றார்.
“உங்களை எப்படி மாமா தப்பா நினைப்பேன்? என்ன விஷயம் சொல்லுங்க”
“பேசாம நீ வேலையை விட்டு நம்ம வீட்டுக்கு வந்துரியா மா? உன் வேலைக்கு ஏதாவது காம்பன்சேசன் கேட்டா கூட கொடுத்துறலாம். இங்க விக்ரமை எங்களால கண் கொண்டு பாக்க முடியலை மா. அவன் நிம்மதி உன் கிட்ட தான் இருக்கு. நீ அவன் கிட்ட பேசினியா இல்லையா? அவன் ரொம்ப உடைஞ்சு போய்ட்டான். நீ வந்துறேன் மா”, என்றார்.
ரேகா அதற்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் அமைதியாக இருக்கவும் “நீ வேலைக்கு போகக் கூடாதுன்னு எல்லாம் சொல்லலை மா. நீ வேலைக்கு போகணும்னா நம்ம ஊர்ல எங்கயாவது போ. நான் நல்ல வேலையா உனக்கு வாங்கித் தரேன். நம்ம ஆஃபிஸ்க்கு கூட வா. ஆனா வாழ வேண்டிய வயசுல இந்த பிரிவு உங்க ரெண்டு பேருக்கும் தேவையா? இதுக்கு முன்னாடி நாங்க விக்ரமை இப்படி பாத்தது இல்லை. உன்னோட பிரிவு அவனை இவ்வளவு பாதிக்கும்னு நாங்க கனவுல கூட நினைக்கலை. இன்னைக்கு தான் இவ்வளவு நாள் கழிச்சு ஆஃபிஸ்க்கு வந்துருக்கான். ஆனாலும் வேண்டா வெறுப்பா தான் உக்காந்துருக்கான். நீ வந்தா தான் சரியாவான். நீ இங்க வரியா மா?”, என்று கேட்டார் அவர்.
முழு மனதுடன் அவரிடம் சரி என்று சொல்ல முடியாமல் “நான் ஆஃபிஸ்ல பேசிப் பாக்குறேன் மாமா”, என்று சொல்லி சமாளித்தாள் ரேகா. பின் சாரதாவிடம் பேசினாள். அவள் போனை வைத்ததும் விக்ரமை பற்றி எண்ணினாள். அதன் பின் அவளுக்கு வேலையே ஓட வில்லை. அனைவரும் அவனுடைய தவிப்பைப் பற்றிச் சொல்ல அவனிடம் போனிலாவது பேசலாமா என்று எண்ணினாள் ரேகா.
ஆனாலும் அவனிடம் பேச அவளது ஈகோ கொஞ்சம் தடுமாற வைத்தது. அன்று மாலை ஹாஸ்டல் வரும் வரைக்கும் அவனிடம் பேசவா வேண்டாமா என்ற யோசனையிலே இருந்தாள்.
“அவன் உனக்காக என்னல்லாம் செஞ்சிருக்கான்? நீ என்ன டான்னா அவனுக்கு போன் பேச கூட யோசிக்கிற? எல்லாரும் இப்ப விக்ரம் ரொம்ப பீல் பண்ணுறான்னு சொல்றாங்க. நீ பேசினா அவன் சரியாகிருவான். அவனுக்கு பேசு”, என்று அவளை இடித்துரைத்தது அவள் மனசாட்சி.
அதனால் பேசி விட வேண்டும் என்று முடிவு எடுத்தாள். பேச முடிவு எடுத்து விட்டாலும் எப்படி பேச, என்ன பேச என்று தவிப்பாக இருந்தது. கூடவே அவன் தன்னிடம் பேசுவானா? இல்லை ஏதாவது திட்டுவானா? எதுக்கு போன் பண்ணினேன்னு கேப்பானா? இல்லை போனை எடுக்கவே மாட்டானா? என்று விதவிதமாக எண்ணினாள்.
கடைசியில் என்ன ஆனாலும் சரி, இப்போது அவனிடம் பேசி விட வேண்டும் என்று எண்ணி தன்னுடைய போனில் பதிந்து வைத்திருந்த அவன் எண்ணை எடுத்து கால் பட்டனை அழுத்தினாள்.
ரிங் போக இங்கே நெஞ்சம் தடதடத்தது. இதயம் எம்பி வாய்க்கு வந்து விடும் போல இருந்தது. கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது.
“ஏய் உன் புருஷன் கிட்ட தான் டி பேச போற? இதுக்கு எதுக்கு இப்படி பயந்து சாகுற?”, என்று மனது கேட்டாலும் அதற்கு அவளிடம் பதில் இல்லை.
முதல் முறை அவள் அழைத்த போது அவன் போனை எடுக்கவில்லை. ரெஸ்ட் ரூம் போயிருந்தான். இவளுக்கோ சலிப்பாக இருந்தது.
“என் நம்பரை ஏதோ ஒரு நம்பர்னு நினைச்சு எடுக்கலையோ?”, என்று எண்ணி மீண்டும் டயல் செய்தாள். தன்னுடைய சீட்டில் வந்து அமர்ந்த விக்ரம் போன் அடிக்கவும் எடுத்துப் பார்த்தான்.
பார்த்தவன் சந்தோஷமாக அதிர்ந்து தான் போனான். ரேகாவா அழைக்கிறாள், அதுவும் இத்தனை நாட்களுக்கு பிறகு? அவன் ரத்த நாளம் எல்லாம் சூடேறியது போன்ற உணர்வு. உற்சாகம் கரை புரண்டு ஓடியது.
அந்த உற்சாகத்தை குரலில் காட்டக் கூடாது என்று எண்ணி ஒரு வழியாக அவள் அழைப்பை எடுத்த விக்ரம் “ஹலோ”, என்றான். அவனுடைய ஒற்றை வார்த்தை சிலிர்க்க செய்ய பேச மறந்து அமைதியாக இருந்தாள் ரேகா.
அவள் பேசாமல் இருக்கவும் “ஒரு வேளை தெரியாம என் நம்பரை அமுக்கிட்டாளோ? அப்ப எனக்கு பேசணும்னு பண்ணலையா?”, என்று சோர்ந்து போனான். அவள் முதல் முறை அழைத்ததை பார்த்திருந்தால் அவள் அவனிடம் பேச தான் அழைத்திருக்கிறாள் என்று புரிந்திருக்கும். அவன் தான் மிஸ்டு காலை பார்க்கவே இல்லையே. அதனால் தவிப்புடன் “ஹலோ”, என்று அவன் மீண்டும் சொல்ல அப்போதும் அவளுக்கு அவனிடம் பேசும் தைரியம் இருக்க வில்லை.
அப்போதும் பேசாததால் கடுப்பானான் விக்ரம். “கால் பண்ணிட்டு பேசாம இருந்தா என்ன அர்த்தம் ரேகா? ஒரு வேலையையும் உருப்படியா செய்ய மாட்டியா நீ?”, என்று எரிச்சலுடன் விக்ரம்.
அவன் தன்னுடைய பெயர் சொல்லவும் “நான் யார்னு உங்களுக்கு தெரிஞ்சிட்டா…?”, என்று சந்தோஷமாக கேட்டாள் ரேகா.
“அபத்தமா பேசாத. நீ என் மனைவி. உன் நம்பர் என் கிட்ட இல்லாம இருக்குமா?”, என்று கேட்ட விக்ரமின் குரலில் சுத்தமாக கோபமோ எரிச்சலோ இல்லை.
“ஓ”, என்றாள் ரேகா.
“சரி எதுக்கு கால் பண்ணின?”, என்று கேட்டவனின் குரலில் துள்ளளுடன் கூடிய எதிர்பார்ப்பு வெளிப்பட்டது.
அவன் எதிர்பார்ப்பை உணர்ந்தவளுக்கு சிறு புன்னகை வெளிப்பட்டது. “இல்லை எப்படி இருக்கீங்கன்னு கேக்க தான் கால் பண்னினேன்”, என்றாள்.
“வேண்டாம்னு சொல்லிட்டு போனவ அதை கேக்க கூடாது”, என்று அவன் பட்டென்று சொன்னதும் அவள் முகம் வாடிப் போனது. விக்ரமும் தன்னுடைய தலையிலே கொட்டிக் கொண்டான்.
“அவளே உன் கிட்ட பேச ஆசையா கால் பண்ணிருக்கா. நீ இப்படி பேசினா எப்படி டா அவ உன் கிட்ட பேசுவா?”, என்று அவன் மனதும் அவனை இடித்துரைத்தது.
ஒரு நொடி அமைதியாக இருந்த ரேகா “சரி நான் வைக்கிறேன்”, என்று சிறு கோபத்துடன் சொன்னாள்.
“தெரியாம ஹார்ஷா பேசிட்டேன். உடனே வைக்கணுமா?”, என்று அதட்டிய படியே மென்மையாக கேட்டான் விக்ரம்.
“பேசினா தான் நீங்க திட்டுறீங்களே?”, என்று கொஞ்சம் சிணுங்களுடன் கூடிய கோபத்தில் கேட்டாள்.
“தெரியாம சொல்லிட்டேன் போதுமா? சாரி”
“சரி, சாப்பிட்டீங்களா?”
“இல்லை, இனி தான்”
“மணி ஆறு ஆகுதே. நான் மதிய சாப்பாடு சாப்பிட்டீங்களான்னு கேட்டேன்”
“மதியம் எங்க சாப்பிட? அப்பா அண்ணன் சாப்பிட கூப்பிட்டாங்க. நான் தான் போகலை”
“ஏன்?”
“பசிக்கலை”
“சாப்பிடாம இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும்?”, என்று கேட்ட மனைவியின் அக்கறையில் உள்ளம் நனைந்தான் விக்ரம்.
“கடவுளே என்னோட கோபம் மட்டும் இல்லைன்னா இந்நேரம் இவள் என் கைக்குள்ளே இருந்திருப்பாளே? ஆனா என்னால என் கோபத்தை அடக்க முடியலையே”, என்று மனதில் எண்ணிக் கொண்டான்.
அவன் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கவும் “சாரி, என்னால தானே உங்களுக்கு இவ்வளவு மனக் கஷ்டம்? நான் உங்க வாழ்க்கையில் வந்திருக்கவே கூடாது”, என்று தவிப்புடன் சொன்னாள் ரேகா. அவள் அப்படிச் சொன்னதும் அவன் உருகி போனான்.
“அப்படி எல்லாம் இல்லை”, என்றான் விக்ரம்.
அடுத்து என்ன பேச என்று இருவருக்குமே தெரியவில்லை. அமைதி என்னவோ போல இருக்க “நீ சாப்பிட்டியா?”, என்று கேட்டான் விக்ரம்.
“ஹிம்“
“ரேகா”
“என்ன?”
“நீ நிஜமாவே அங்க நல்லா இருக்கியா ரேகா? நான் சத்தியமா நல்லா இல்லை. நீ இங்க கிளம்பி வந்துறியா?”, என்று கேட்டதும் அவள் கண்கள் சந்தோசத்தில் கலங்கியது.
இப்படி தன்னைத் தேடும் கணவன் கிடைத்தும் அவனுடன் இருக்க முடியாத நிலையை அறவே வெறுத்தாள். அவள் பதில் சொல்லாமல் அமைதியாக அழுத படி இருக்கவும் “வேண்டாம் வேண்டாம், இங்க நீ வந்தா நானே உன்னை காயப் படுத்துவேன். நீயும் பாவம் தானே, என்ன செய்வ?”, என்று அவளுக்காக அவன் பேசியதும் ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்து விட்டாள் ரேகா.