அத்தியாயம் 14_1 விழி மொழி பேசு_கார்த்திகா கார்த்திகேயன்
Post Views:1,694
அத்தியாயம் 14
உந்தன் சரி பாதியாக நான்
மாறும் நாள் தான் எந்தன்
காதலின் பிறந்த நாள்!!!
விக்ரம் அப்படி அவளுக்காக பேசியதைக் கேட்டதும் அவள் ஏங்கி ஏங்கி அழ ஆரம்பிக்க அவளுடைய அழு குரல் கேட்டு அதிர்ந்தான் விக்ரம்.
“ரேகா அழுறியா? ரேகா என்ன ஆச்சு?”, என்று பதறிய படியே கேட்டான்.
“ஒண்ணும் இல்லை”, என்று கண்ணீர் குரலோடு முணுமுணுத்தாள்.
“இப்ப சொல்லப் போறியா? இல்லை போனை வைக்கட்டுமா?”
“நீங்க பேசினது கஷ்டமா இருந்துச்சு அதான்”
“ஓ, சாரி போன்லயும் உன்னை அழ வச்சிட்டேன்ல? இப்படி செஞ்சிருவேன்னு தான் உனக்கு நான் கால் பண்ணாம இருந்தேன். சரி நான் வைக்கவா?”
“விக்ரம்”
“ம்ம்”
“நான் அங்க வரவா? சத்தியமா என்னால நீங்க யாருமே இல்லாம இருக்க முடியலை. அங்க நான் வந்தா உங்களால என்னை ஒரு பிரண்டா மட்டும் பாக்க முடியுமா? அப்படின்னா நமக்குள்ள எந்த சண்டையும் வராதே. உங்க கூட இருக்குற நிம்மதி மட்டும் எனக்கு போதும். நான் அங்க வந்தா நீங்களும் கண்டிப்பா சந்தோஷமா தான் இருப்பீங்க. இந்த புராஜெக்ட் முடிஞ்சு வந்துறட்டா?”
“வேண்டாம் ரேகா. நீ வர வேண்டாம்”, என்று அவன் சொன்னதும் “விக்ரம்”, என்று அதிர்ந்து போனாள்.
“ஆமா நீ வர வேண்டாம். சத்தியமா என்னால உன்னை பிரண்டா மட்டும் பாக்க முடியாது ரேகா. நீ என் உயிர்ல கலந்துருக்குற என்னோட உணர்வு மாதிரி. உன்னைப் பாத்தாலே என்னோட உணர்வுகள் பேயாட்டம் போடும். எப்போதுமே சுற்றி இருக்குறவங்க என்னைப் பெருமையா பாக்கணும்னு நினைக்கிற நானே அன்னைக்கு ஹோட்டல்ல சுத்தி அத்தனை பேர் இருக்காங்கன்னு தெரிஞ்சும் எப்படி நடந்துகிட்டேன்னு பாத்த தானே? உன் விசயத்துல மட்டும் என்னோட கண்ட்ரோல் என் கிட்ட இருக்க மாட்டிக்குது. உன் கிட்ட வெட்கத்தை விட்டுச் சொல்றேன். நீ கிட்ட இருந்தாலே உன்னை என்னோட கண்ணும் மனசும் என் மனைவியா மட்டும் தான் பாக்கும். உனக்கு புரியுது தானே? அந்த தவிப்பைக் காட்ட முடியாத கோபம் தான் வார்த்தையா சில நேரம் வெளிப்படுது. நீ வேணும்னு தான் எப்பவும் என் மனசு ஏங்கும். இதை உன் கிட்ட ஒப்பனா சொல்ல எனக்கு எந்த வெக்கமும் இல்லை. பாப்போம் எல்லாம் மாறுதான்னு. முடிஞ்சா அப்ப அப்ப எனக்கு கால் பண்ணு”, என்று சொல்லி விட்டு அவள் பதிலைக் கூட எதிர் பார்க்காமல் வைத்து விட்டான்.
அவன் போனை வைத்த பின்னரும் அவன் வார்த்தைகள் அவள் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அவனுடைய மனதை அவளிடம் வெளிப்படையாக அவன் சொல்வதை எண்ணி அவளுக்கு சந்தோசமாக இருந்தது. ஆனால் தன்னுடைய மனதில் இருக்கும் காதலைச் சொன்னால் மட்டும் அவன் நம்பாமல் இருக்கிறானே என்று வேதனையாகவும் இருந்தது.
அவன் நிலைமையும் அவளுக்கு புரியாமல் இல்லை. இத்தனை நாட்களில் அவன் மனது அவளுக்கு புரியத் தான் செய்தது. அவள் அவனின் அருகில் இருந்தாலே அவன் ஆண்மை விழித்துக் கொண்டால் அவனும் தான் என்ன செய்வான்?
“எதுக்கு உடனே போனை வச்சிட்டான்? இனி எப்ப அவன் கிட்ட பேச? அடிக்கடி பேசச் சொன்னானே? அப்ப அவனுக்கு கால் பண்ணலாமா?”, என்று யோசித்தவள் முதலில் குளிக்கச் சென்றாள். பின் இரவு உணவு முடிந்து அவனுக்கு அழைக்கவா வேண்டாமா என்று அவள் யோசித்துக் கொண்டிருக்க இரவு ஒன்பது மணி போல அவனே அவளை அழைத்து விட்டான். அவனுடைய போனைக் கண்டு அவள் உதடுகள் மலர்ந்தது.
“ரேகா”
“ம்ம்”
“சாப்பிட்டியா டி?”, என்று கிறக்கமாக கேட்டான்.
அவனுடைய நெருக்கமான குரலில் புன்னகைத்தவள் “ம்ம், நீங்க சாப்பிட்டாச்சா?”, என்று கேட்டாள்.
“ஏதோ, சாப்பிட்டேன். என்னன்னு தெரியலை. நீ கிட்ட இருந்தா உன்னைக் கடிச்சு குதறுறேன், ஆனா தள்ளிப் போன அப்புறம் உன்னை ரொம்ப தேடுது டி. என்ன செய்ய தெரியலை”, என்று அவன் கொஞ்சம் சோகமாக பேச அவன் மன நிலையை மாற்ற “அத்தை என்ன செய்றாங்க?”, என்று கேட்டாள்.
“இருக்காங்க, தினமும் அவளுக்கு வேலை வேண்டாம் டா, அவளை வரச் சொல்லுன்னு சொல்லிட்டு இருக்காங்க. நீயும் பேசிருப்பியே? உன் கிட்டயும் சொல்லிருப்பாங்களே?”
“அவங்க முன்னாடி கப்பல் கவுந்த மாதிரி உக்காந்துருக்கீங்க போல? அதனால அவங்க உங்களை நினைச்சு கவலைப் படுறாங்க? நீங்க ஏன் அவ்வளவு பீலிங்க்ஸா இருக்கீங்க?”
“என்னைச் சொல்றியே, நீ அங்க சந்தோஷமா இருக்கியா ரேகா? உன்னால சந்தோஷமா இருக்க முடியுதா?”, என்று அவன் பதிலுக்கு கேட்டதும் அவளிடம் பதில் இல்லை.
“ரேகா”, என்று அவன் கிசுகிசுப்பாக அழைக்க “ம்ம்”, சொல்லுங்க”, என்று தாபத்துடன் சொன்னாள் ரேகா.
அறைக்குள் படுத்திருந்த ரேகா அவள் மட்டும் தான் தனியாக அங்கே இருக்கிறாள் என்றாலும் போர்வையை தலை வரை மூடி முணுமுணுப்புடன் பேசிக் கொண்டிருந்தாள்.
“ரேகா”, என்று மீண்டும் அவன் அழைக்கவும் “ம்ம்”, என்றாள் அவளும். (இப்படி மொக்கை போட்டா நானே வெடிச்சிருவேன் – போன் மைண்ட் வாய்ஸ்)
“வீட்டுக்கு வந்துறேன் டி”, என்று தாபத்துடன் சொன்னான் விக்ரம். இரவும், தனிமையும், அளவுக்கு அதிகமான காதலும் அவனை அப்படிச் சொல்ல வைத்தது.
அவன் மன நிலை புரிந்தவள் அவனை சகஜமாக்க எண்ணி “எதுக்கு நான் அங்க வந்த அப்புறம் என்னை வார்த்தையால நீங்க கொல்லவா? வேண்டாம்ங்க. நாம திருப்பி திருப்பி அதையே தான் பேசுவோம். விடுங்க. நான் வைக்கிறேன்”, என்று கோபத்துடன் சொல்வது போலச் சொன்னாள்.
“ஏய் வச்சிராத டி. இனி உன்னை வீட்டுக்கு கூப்பிடலை போதுமா? நாம வேற ஏதாவது பேசலாம்”
“சரி பேசலாம். உங்களைப் பத்தி எதுவுமே எனக்கு தெரியாதுங்க. எல்லாமே சொல்லுங்க. நீங்க நான் படிச்ச காலேஜ்ல தான் படிச்சீங்களா?”, என்று ஆவலாக அவள் கேட்டதும் “இந்த விஷயம் இப்ப பேச வேண்டாம் ரேகா”, என்று இறுக்கமான குரலில் சொன்னான் விக்ரம்.
அவன் குரலை வைத்தே இனி அவன் எதுவும் சொல்ல மாட்டான் என்று புரிந்து கொண்டவள் வேறு பேச ஆரம்பித்தாள். அவனும் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தான். இரவு பதினொரு மணி ஆனதும் “நேரம் ஆச்சு விக்ரம். தூங்க போகலாமா?”, என்று ரேகா கேட்க “ரேகா”, என்று ஆழ்ந்த குரலில் அழைத்தான் விக்ரம்.
அவன் குரலில் அவள் தான் தவித்துப் போனாள். போனில் வழியாக அவனது தாபம் வெளியே வந்து அவளை சுட்டது போல இருந்தது. அவளுக்கு மட்டும் அவனுடன் இருக்க ஆசை இல்லையா என்ன?
அவளுக்கு அவனைப் பார்க்க வேண்டும் போல இருக்க “விக்ரம்”, என்று அழைத்தாள்.
“ம்ம்”
“வேலை இல்லைன்னா நாளைக்கு என்னைப் பாக்க வறீங்களா? கட்டாயம் இல்லை. கேக்கணும் போல இருந்துச்சு. அதான். முடிஞ்சா வந்தா போதும்”, என்று கேட்டே விட்டாள். ஆனால் கேட்ட பின்பு ஏதாவது மனது கஷ்டப் படுற மாதிரி பேசி விடுவானோ என்று பயந்து போனாள்.
ஆனால் அவனோ “வரவா? எனக்கும் உன்னைப் பாக்கணும் போல இருக்கு?”, என்று சொன்னதும் அவள் கண்களில் கண்ணீர் வந்தது. அளவுக்கு அதிகமான அன்பை வைத்திருக்கும் கணவன் கிடைப்பது வரம். ஆனால் அந்த வரத்தை அனுபவிக்க முடியாத அளவு சாபத்தை வாங்கிய ரேகா நிலை கொடூரமானது.
அவள் அமைதியாக இருக்கவும் “சரி நாளைக்கு உன்னைப் பாக்க வருவேன். இப்ப போய் தூங்கு”, என்றான் விக்ரம்.
“நிஜமாவே வருவீங்க தானே?”
“நிஜமா வரேன்”, என்று அவன் உறுதியாக சொன்னதும் தான் போனை வைத்தாள்.
அடுத்த நாள் எப்போது வரும் என்று எண்ணி படுத்திருந்தாள் ரேகா. அவள் கண்கள் மீண்டும் மீண்டும் கலங்கிக் கொண்டிருந்தது. காலையில் அவள் எழுந்த போது அவள் கண்ணிமைகள் வீங்கியிருந்தன.
அவன் அருகில் இருந்தால் அவளுடைய துன்பம் எல்லாம் தீர்ந்து விடும். ஆனால் அதே அளவு துன்பத்தை அவனுடைய வார்த்தைகள் அவளுக்கு தரும். காயமும் நீயே மருந்தும் நீயே என்பது போல தான் விக்ரம் என்று எண்ணிக் கொண்டாள்.
அதற்கு அடுத்த நாள் விக்ரம் சிறிது உற்சாகத்துடன் சுற்றிக் கொண்டிருந்தான். அவனை வீட்டில் உள்ள அனைவரும் வியப்பாக பார்த்தார்கள்.
“என்ன டா தலைக்கு பின்னாடி ஒளி வட்டம் தெரியுது? ரேகா வீட்டுக்கு வராளா?”, என்று கேட்டான் ஆதி.
“இல்லை நான் அவளைப் பாக்க போறேன்”, என்று சொல்லி சிரித்தான் விக்ரம்.
“இது தேவையா உனக்கு? பிரிஞ்சு இருந்து இப்படி தவிக்கிறது எல்லாம் நல்லாவா இருக்கு? இன்னைக்கு அவளைப் பாக்க போறல்ல? அப்படியே அவளை இங்க கூட்டிட்டு வா”
“இல்லைண்ணா கொஞ்ச நாள் ஆகட்டும்”
“நீ திருந்தவே மாட்ட. சரி எனக்கும் அப்பாவுக்கும் இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு. நாங்க கிளம்புறோம். அப்பா போகலாமா?”, என்று கேட்டான் ஆதி.
“மருமகளை கூட்டிட்டு வந்துரு விக்ரம். நாங்க கிளம்புறோம்”, என்று சொல்லி விட்டு சேதுபதியும் கிளம்பி விட்டார்.
அவர்கள் சென்றதும் சாரதாவும் விக்ரமும் சோபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவளும் ரேகாவை அழைத்து வருவதைப் பற்றி தான் பேசினாள்.
அப்போது பார்லர் செல்வதற்காக கீழே இறங்கி வந்து கொண்டிருந்த காயத்ரி தலை சுற்றி அப்படியே படிகளில் உருண்டு விழுந்தாள். அதைக் கண்டு சாரதாவும் விக்ரமும் பதறி விட்டார்கள்.
“காயத்ரி” “அண்ணி”, என்று கத்திக் கொண்டே அவளை நெருங்கினார்கள்.
மயங்கி கிடந்த காயத்ரியின் தலையில் இருந்து ரத்தம் வடிந்தது. “விக்ரம் காரை எடு. ஹாஸ்பிட்டல் போகணும். முதல்ல காயத்ரியை தூக்கு”, என்று சாரதா சொன்னதும் அவளை தூக்கி கொண்டு காருக்குச் சென்றான். பின் இருக்கையில் அவளை அமர வைத்தவன் காரை எடுக்க முன் சீட்டில் ஏறி அமர்ந்தான். காயத்ரி அருகில் ஏறிய சாரதா காயத்ரியை தன்னுடைய மடியில் சாய்த்துக் கொண்டாள்.
கார் ஹாஸ்பிட்டல் நோக்கி விரைந்தது. ஹாஸ்பிட்டல் சென்றதும் தீவிர சிகிச்சை பிரிவில் காயத்ரியை அட்மிட் செய்தார்கள். உடனே அவளுக்கு சிகிச்சை ஆரம்பித்தது.
“விக்ரம், அப்பாவுக்கும் அண்ணனுக்கும் விஷயத்தைச் சொல்லி இங்க வரச் சொல்லு”, என்று சாரதா சொன்னதும் அவர்களை அழைத்தான் விக்ரம். ஆனால் அவர்கள் அவன் போனை எடுக்க வில்லை.
“ரெண்டு பேருமே போனை எடுக்கலை மா. மீட்டிங் ஹால்ல இருப்பாங்கன்னு நினைக்கிறேன். அதான் சைலெண்ட்ல போட்டுட்டாங்க போல?”, என்று சொன்ன விக்ரமுக்கு காயத்ரியை நினைத்து மனதுக்கு கஷ்டமாக இருந்தது.
சிறிது நேரம் கழித்து அங்கே வந்த டாக்டரிடம் காயத்ரி உடல் நிலை பற்றி விசாரித்தார்கள் இருவரும். “கீழ விழுந்ததுல படிக்கட்டு அவங்க நெத்தில அடிச்சிருக்கு. அதனால தான் ரத்தம் நிறைய போயிருக்கு. டிரீட்மெண்ட் ஆரம்பிச்சிருக்கோம். ஆனா ஹெவி டோஸ் அவங்களுக்கு கொடுக்க முடியாது. ஏன்னா அவங்க கன்ஸீவா இருக்காங்க. அதனால தலை சுத்தி கீழே விழுந்துட்டாங்க. இப்ப ஹெவி ட்ரீட்மெண்ட் கொடுக்க கூடாது”, என்று அவர் சொன்னதும் இருவரின் முகமும் ஒளிர்ந்தது.
“டாக்டர் நீங்க நிஜமாவா சொல்றீங்க? காயத்ரி மாசமா இருக்காளா? கீழே விழுந்ததுனால வயித்துல இருக்குற குழந்தைக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே?”, என்று கேட்டாள் சாரதா.
“இல்லை இல்லை, குழந்தைக்கு ஆபத்து இல்லை. குறைவான டோஸ் மருந்து தான் இப்ப அவங்களுக்கு கொடுத்துருக்கோம். அதனால அவங்க இப்ப நல்லா தூங்குவாங்க. அவங்க எந்திக்க ஒரு நாலு மணி நேரம் ஆகும். அப்புறம் வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்”, என்று அவர் சொன்னதும் தான் இருவரும் நிம்மதியாக மூச்சு விட்டார்கள்.
நிம்மதியாக இருவரும் அமர்ந்தார்கள். அப்போது தான் ரேகாவின் நினைவு அவனுக்கு வந்தது. உடனே அவளை போனில் அழைத்தான்.
அவன் போனை ஆவலாக எடுத்த ரேகா “கிளம்பிட்டீங்களா விக்ரம்?”, என்று கேட்டாள்.
“இல்லை ரேகா, இன்னைக்கு என்னால வர முடியாது”, என்று அவன் சொன்னது தான் தாமதம் “நினைச்சேன். நீங்களாவது என் ஆசையை நிறைவேத்துறதாவது. இந்த உலகத்துலே நான் தான் தூரதிஷ்டசாலி விக்ரம். எனக்கு சந்தோஷமான விஷயம் எதுவும் நடக்காது. நேத்து பாக்க வருவீங்களான்னு கேக்கும் போதே கஷ்டப் படுத்துவீங்கன்னு நினைச்சேன். ஆனா இன்னைக்கு செமையா நம்ப வச்சு பல்ப் கொடுத்துட்டீங்க. தேங்க்ஸ்”, என்று பொரிந்தாள் ரேகா.
அவன் வர வில்லை என்ற ஏமாற்றத்தை அவளால் தாங்க முடிய வில்லை.
“ரேகா ஒரு நிமிஷம் பொறுமையா நான் சொல்றதைக் கேளு. நான் இப்ப எங்க இருக்கேன்னு தெரியுமா?”
“நீங்க எங்க வேணும்னாலும் இருங்க. அதைப் பத்தி எனக்கு என்ன? உங்களைப் பத்திக் கவலைப் பட நான் யாரு? எனக்கு தான் எதுவுமே நிரந்தரம் இல்லையே. என் கழுத்துல கிடக்குற தாலிக்கு கூட என்ன அர்த்தம்னு எனக்கு தெரியலை விக்ரம். பிளீஸ் இப்ப உங்க கிட்ட பேசுற மன நிலைல நான் இல்லை. இனி நாம போன்லயும் பேச வேண்டாம். உங்க கூட பேசினா உங்களைப் பாக்கத் தோணுது. பாக்கணும்னு ஆசைப் பட்டு நடக்காதப்ப ரொம்ப ஏமாற்றமா இருக்கு. இனி எனக்கு கால் பண்ணாதீங்க. நானும் பண்ண மாட்டேன்”, என்று சொல்லி வைத்து விட்டாள்.