நானும் மூணு நாளா எதிர் பார்த்துட்டு போன .. அவன ஆளையே காணோம். எங்க போனா.. ப்ச் கடுப்பா இருக்கு. தினமும் அவன ஒரு தடவை ஆச்சும் பார்த்திடுவ.. மூணு நாளா என் கண்ணுல படாம என்னமோ மாதிரி இருக்கு. எதுவுமே பிடிக்கல… ஒருவேளை அவனுக்கு உடம்பு முடியாம இருக்குமோ. எதுக்கு வந்தா.. எதுக்கு என்ன ஆஸ்பிட்டல் கூட்டிட்டு போனா, இப்போ எங்க போனா ஒண்ணுமே புரியல. நாளைக்கு மட்டும் அவனை பார்க்கல.. எனக்கு பைத்தியமே பிடிச்சிடும்.
அனிதாவின் டைரியைப் படித்து கொண்டிருந்த மூவருக்கும் புரிந்தது அவங்க என பேசிய பெண் அவன் என்று தன்னையும் அறியாமல் அவனுக்குள் ஊடுருவியதை.
ஐயோ நான் இன்னிக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்க தெரியுமா. இன்னைக்கு அவனை பார்த்த… பேசுன. அவன் பேரு என்ன தெரியுமா.. சந்திரன். நல்லா இருக்குல்ல. கொஞ்சம் வேலை இருந்துதான்… அதான் என்னை பாக்க முடியலையா. இந்த மூணு நாளா என்ன பத்தி தான் அதிகமா யோசிச்சிட்டு இருந்தானாம். வேலை முடிஞ்சதும்… முதல் வேலையா என்னதான் பார்க்க வந்தானாம். உடம்பு எப்படி இருக்குன்னு ரொம்ப அக்கறையா கேட்டான். எனக்காக… ஒரு வாட்ச் வாங்கிட்டு வந்தான். ரொம்ப அழகா இருந்துச்சு. நாளைக்கு வெளிய போலாமா ன்னு கேட்டான்.. போகவா வேணாமா ஒரே யோசனையா இருக்கு. ஆனா அவனோட போகனுன்னு ரொம்ப ஆசையா இருக்கு. நாளைக்கு நான் போக போற.. இங்க வந்ததுல இருந்து ஒரு நாள் கூட வெளியே எங்கேயும் போனதில்ல. நாளைக்கு தான் போகப் போறேன் அதுவும் அவன் கூட.. செமையா இருக்கு நினைக்கவே.
அதன் பின்னான வார்த்தைகளும் தொடர்ந்து அவனுடன் அடிக்கடி வெளியில் சென்றதும். சந்திரன் வாங்கிக் கொடுத்த பரிசுப் பொருட்களைப் பற்றியும் எழுதி இருந்தாள். மாதங்கள் சில கடந்து.. அனிதா அவனுக்கு பரிசுப் பொருட்கள் வாங்கித்தர தன் சம்பளத்தை எடுத்து இருக்கிறாள் என்பதை அவள் எழுதி வைத்த டைரி சொல்லியது. டைரியின் முக்காவாசி பக்கங்கள் சந்திரனைப் பற்றிய இருக்க அவன் மேல் கொண்ட காதல் நாளுக்கு நாள் அதிகரித்து இருக்கிறது என்பதும் புரிய ஆரம்பித்தது.
மூவரும் மேற்கொண்டு படிக்க செல்ல தடுத்தது சரஸ்வதியின் குரல். கண்ணன் அங்கு இருப்பது தெரியாமல் இருவரை மட்டும் சாப்பிட அழைக்க, இம்முறை ஆரதியுடன் சித்துவும் தகிடுதத்தம் பண்ண கிளம்பினான்.
“அத்த என்ன சாப்பாடு.”
“ரெண்டு பேரும் இவ்வளவு நேரம் என்னதான் பண்றீங்க. சாப்பிட வரச் சொல்லி கெஞ்சனுமா.”
“அம்மா இவனை சாப்பிட வேணாம்னு நான் சொல்லல. என் பின்னாடி இவன் தான் சுத்திட்டு இருக்கான்.”
“ஆதி என்ன இது மரியாதை இல்லாம. இப்பவே மரியாதையா கூப்பிட்டுப் பழகு. கல்யாணத்துக்கு அப்புறமும் இதே பழக்கம் தான் வரும்.”
சரஸ்வதியின் வார்த்தையில் ஒருவரை ஒருவர் திரும்பிப்பார்த்து புரியாமல் முழிக்க ஆரம்பித்தனர்.
தட்டில் பரிமாறிக் கொண்டிருந்த மஹாலட்சுமியை தடுத்த சித்து,
“அம்மா நாங்க ரெண்டு பேரும் ரூம்ல சாப்பிட போறோம். நீங்க மொத்தமா போட்டு குடுங்க.. நாங்க மேல போய் பிரிச்சு சாப்பிடுகிறோம்.”
“ஆதி இது உன் வேலையா?”
“அம்மா உனக்கு வேற வேலையே இல்லையா. இவன் என்ன பண்ணாலும் அதுக்கு காரணம் நான்தானா. நான் காலையில சாப்பிட்ட மாதிரி இப்பவும் சாப்பிடலாம்’னு நினைச்சேன். இவனும் வரேன்னு சொன்னான். நானும் சரின்னு சொன்னேன். இது ஒரு தப்பா! சும்மா சும்மா என்னையவே திட்டாம சாப்பாடு போட்டு குடும்மா நாங்க கிளம்புறோம்.” என்றவள் கண்ணனுக்கும் சேர்த்து மூன்று தட்டுகளை கையில் எடுக்க, அதைக்கண்ட ரதிதேவி,
“சரி ரெண்டு பேர் தான சாப்பிட போறீங்க அதுக்கு எதுக்கு மூணு தட்டு”
ரதி தேவியின் வார்த்தையில் சரஸ்வதியும், மஹாலட்சுமியும் சந்தேகப் பார்வை பார்க்க, அதில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து வார்த்தை வராமல் தடுமாற ஆரம்பித்தனர்.
சித்து, “இப்ப என்ன இந்த வீட்டுல தட்டுக்கா பஞ்சம். எடுக்கும்போது தெரியாம ஒன்னு எக்ஸ்ட்ரா வந்துருச்சு. இதுகூடவா குத்தம் இந்த வீட்டுல.” என்றவன் மனதினுள்,
‘இந்த சதி தேவியை மொதல்ல வீட்டை விட்டு அனுப்பனும். கழுகு கண்ணு கூட இல்ல காலகேயன் கண்ணு போல எப்ப பாரு எங்களையே நோட்டமிடுது.’
மேற்கொண்டு கேள்வி எழுவதற்கு முன்னர் அங்கிருந்து நகர்ந்த இருவரும் அறையினுள் வந்தே மூச்சை விட்டனர். அவர்களின் நிலை கண்டு சிரித்த கண்ணனுக்கு சில செல்ல பரிசுகளை கொடுத்த இருவரும் கண்ணனுடன் சேர்ந்து உண்ண தொடங்க, வீட்டிற்கு வந்தும் தன் தாயை பார்க்காமல் இருப்பது கண்ணனுக்கு நெருடலாகவே தெரிந்தது அவரின் கை மணத்தில். ஒரு வேகத்தில் வந்து விட்டானே தவிர.. கல்யாணத்திற்கு முன் ஆரதியின் அறையில் தங்கியது தெரிந்தால் அத்தை மாமா முன்பு சங்கடமாக உணர்வார்கள் என்பதற்காகவே அமைதியாக அறையில் இருந்து கொண்டான்.
உண்டு முடித்த கையோடு அங்கிருந்து கிளம்ப முடிவெடுத்த கண்ணன்,
“ஆதி நான் கெளம்புறேன். ரெண்டு நாள்ல வேலைய முடிச்சிட்டு சீக்கிரமா வந்துடுறேன்.”
ஆரதிக்கும் அனிதா விஷயத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக பேசாமல் கிளம்பச் சம்மதித்தாள். அவள் சம்மதித்ததும் சித்துவிற்கு கண்ணைக் காட்ட அதனை புரிந்து கொண்டவனோ சம்மதமாக தலையசைத்தான்.
அண்ணன் தம்பி இருவரும் சென்றதும்… அனிதாவின் டைரியை கையிலெடுத்தவள் தொடர்ந்து படிக்க ,
கடை ஓனர் சொன்னதுபோல் அனிதா அடிக்கடி லீவ் எடுத்து சந்திரனுடன் வெளியில் சென்று வந்திருக்கிறாள். தன் சம்பளப் பணத்தையும் அவனுக்காகவே செலவழித்திருக்கிறாள். இதற்கிடையில்.. ஒருநாள் சந்திரனோடு நண்பன் வீட்டுக்கு சென்று வந்திருக்கிறாள். அவனுடனான பழக்கங்களில் அவனை மட்டுமே விரும்பிய அனிதாவிற்கு வேறு எந்த தகவலும் தெரியவில்லை. அவன் படிப்பு குடும்பம் எதைப்பற்றியும் கவனிக்கும் நிலையில் அனிதா இல்லை. அல்லது சாமர்த்தியமாக சந்திரன் அவளை வழிநடத்தி இருக்கிறான் என்பது புரிந்தது.
தொடர்ந்து அவனுடனான காதல்களும் சண்டைகளுமே இருக்க அவனைப் பற்றிய தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. சலிப்புடன் பக்கங்களை திருப்பி அவளுக்கு,
‘இன்னைக்கு எங்க போயிட்டு வந்தோம் தெரியுமா.. மெரினா பீச்க்கு. ரொம்ப ஜாலியா இருந்துச்சு. நான் இப்ப தான் முதல் தடவை பீச்சுக்கு போனேன். இன்னைக்கு சந்திரனும் நானும் போட்டோ எடுத்தோம்.‘
என்ற வரிகளைப் படித்ததும் பரவசம் பெருக சாய்ந்திருந்தவள் நேராக அமர்ந்து படிக்க தொடங்க,
அந்த போட்டோ கூட ரொம்ப அழகா வந்திருக்கு. சந்திரன் நானே உன் ஞாபகமா வச்சிக்குறேன் வாங்கிட்டு போயிட்டான். அடுத்த தடவை பீச்சுக்கு போனா இதே மாதிரி இன்னொரு போட்டோ எடுத்து நான் வச்சுக்கணும். அப்புறம் கையில பச்சை குத்தினான்.. நான்தான் டிசைன் கூட செலக்ட் பண்ண. ஹாட் மாதிரி ரெண்டு பக்கமும் ரெக்கை வச்சு.. எங்க ரெண்டு பேரோட எழுத்தும் வர மாதிரி பச்ச குத்தி இருக்கான். சாதாரணமா பார்த்தா அவனோட முதல் எழுத்து சி மட்டும்தான் தெரியும். வீட்டில யார்கிட்டயும் மாட்ட கூடாதுன்னு இந்தஏற்பாடு. என்ஆளுக்குசெம அறிவு ல.
பரவசம் பொங்கிய கண்ணில் சலிப்பு தோன்ற.. தகவல்களுக்காக பொறுமையாக படிக்க தொடங்கினாள் ஆரதி.
கடை ஓனர். நேத்து லீவு போட்டதுக்கு அந்தப் பேச்சு பேசுறான். வேலையை விட்டு போகச் சொன்னதும் எனக்கு ரோஷம் வந்து கிளம்பி வந்துட்ட. சந்திரன் கிட்ட சொன்ன.. கவலைப்படாத… நீ கிளம்பி இரு நான் வந்து கூட்டிட்டு போறேன்னு சொல்லி இருக்கான். அன்னைக்கு ஒரு நாள் போனோம்’ல அவன் பிரெண்ட் வீட்டுக்கு அங்க தான் போகப் போறோம். சிக்கிரமா வேலையும் தங்க ஒரு இடமும் ஏற்பாடு பண்ணி தர்றேன்னு சொல்லி இருக்கான்.’
என்றதோடு அந்த டைரி தன் பக்கங்களை நிறுத்தி இருந்தது. அடுத்தடுத்து பக்கங்களை திருப்பிய அவளுக்கு வெள்ளை காகிதங்கள் காட்சியளிக்க.., இதுதான் அனிதா கடைசியாக எழுதிய வார்த்தை என்பதை புரிந்து கொண்டாள்.
வெகு நேரம் யோசனையில் சென்றவளை நிகழ்வுக்கு வர வைத்தது சித்து தான்.
“என்ன ஆதி டைரியை படிக்காம என்ன யோசிச்சிட்டு இருக்க.”
“படிச்சு முடிச்சுட்டேன் சித்து. ஆமா நீ எங்க போய்ட்டு வர…”என்ற அவளுக்கு பதில் தராத சித்து,
“என்ன ஏதாச்சும் தகவல் கிடைச்சுதா.”
டைரியில் படித்த அனைத்தையும் சித்துவிடம் சொல்லி முடிக்க,
“சோ, அந்த பொண்ணு வேலையை விட்டு போனதும் சந்திரன் கூட தான் தங்கி இருக்கா. திரும்ப ஒரு வாரத்துல வேலை கேட்டு வந்து இருக்கான்னா அவங்களுக்குள்ள ஏதாச்சும் பிரச்சினை ஆகியிருக்கலாம் ஆதி. அவனோட இருந்த நாட்கள்ல இந்த டைரிக்கு வேலை இல்லாம போயிருக்கும் அதான் எதுவும் எழுதல.”
“கரெக்ட் சித்து. திரும்ப வேலை கேட்டு வந்த அன்னைக்கு ரொம்ப அழுது இருந்தான்னு கடைக்காரர் சொன்னாரு. அவங்களுக்குள்ள நிச்சயமா அங்க ஏதாச்சும் பிரச்சினை ஒன்னு ஏற்பட்டிருக்கும். அதுல வந்த சண்டையால திரும்பவும் பழைய இடத்துக்கே வேலை கேட்க வந்து இருக்காள். ஒரு வாரத்துல அவங்க சண்டை சமாதானம் ஆகி இருக்கலாம்.”
“அதெல்லாம் சரிதான் ஆதி. நீ சொல்றதை வச்சே புரிஞ்சுக்க முடியுது. ஒன்னு மட்டும் தான் இடிக்குது.
திரும்பவும் வேலையை விட்டு நின்னதும்.. முன்ன மாதிரி அவன் கூடையே தங்காம எதுக்காக ரெண்டு மாசம் அந்த வீட்டுல தங்கியிருக்கனும் ஆதி.”
“ஹ்ம்ம்… ஒரு வாரம் தங்குனதோட விளைவு ரெண்டு மாசம் அவள போக விடாம பண்ணியிருக்கலாம். அடிக்கடி வெளிய போயிட்டு வந்ததா அந்த சுபா பொண்ணு சொல்லுச்சு. கண்டிப்பா சந்திரனை தான் பாக்க போய் இருப்பா.”
“இப்ப அவனை எப்படி கண்டு பிடிக்கிறது.”
“இத்தனை நாள் வரைக்கும் எதுவுமே தெரியாம இருந்த நமக்கு இன்னைக்கு அவனோட பேரும் அந்த டாட்டூ உம் ஆதாரமா கிடைச்சிருக்கு. இது போதும் சித்து… அவனை கண்டுபிடிக்கிறதா கஷ்டம். இன்னும் ஒரு வாரத்துல அவனை கண்டுபிடிக்கிறோம்.”
“முதல்ல அனிதா போன் நம்பர் வாங்கி.. அவ அதிகமா பேசின நம்பரை கண்டுபிடிக்கனும். அனிதா வேலை செஞ்ச இடத்துல
இருக்க அத்தனை சிசிடிவி கேமராவையும் பார்த்தா நிச்சயமா இவன பிடிச்சுடலாம். சாமர்த்தியமா அனிதாவ ஏமாத்தி இருக்கான் நம்மளை ஏமாத்த முடியாது. “
சித்துவின் வார்த்தைகளுக்கு தலையசைத்தவள், ” ஆமா சித்து. ஆட்கொணர்வு மனு என்னாச்சுன்னு கொஞ்சம் விசாரி. அப்படியே போலீஸ்காரங்க கிட்ட சொல்லி.. போன் நம்பரை டிரேஸ் பண்ண சொல்லு. அதிகமா பேசியிருக்க நம்பரை எடுத்து விசாரிச்சாலே போதும். நானும் அங்க இருக்க கடைக்கு போயிட்டு கேமரா பார்க்கிறேன்.”
கொல்கத்தாவிற்கு செல்வதாக வீட்டை விட்டு வெளியேறிய கண்ணன் யாருக்கும் தெரியாமல் வேறு ஒரு சந்திப்பை நிகழ்த்தி விட்டு கொல்கத்தாவிற்கு வந்திருந்தான். தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டு விட்டு.. முகம் தெரியாத அவனின் தகவல்களை சேகரிக்க சொன்ன விஷயங்களை ஆராய தொடங்கியிருந்தான். அவன் வருவதற்கு முன்னரே அங்கிருந்து தனிப்படை காவல் அதிகாரிகள் அனைத்து வேலையும் முடித்து இருக்க அவர்களை பாராட்டவும் தவறவில்லை கண்ணன்.
கொல்கத்தாவிலிருந்து கண்ணன் யூகித்தது போல பஸ் டிரெயின் எதிலும் செல்லவில்லை அந்த குற்றவாளி. லாரி டிரைவரிடம் விசாரிக்க… அதிகாரிகளின் மிரட்டலுக்கு பயந்து ஒருவன் மட்டும் ஒப்புக்கொண்டான்.. சம்பவம் நடந்த அன்று திருச்சி வரை ஒருவனை ஏற்றிச் சென்றதை.
அந்த குற்றவாளியை பார்த்த இரண்டாவது சாட்சியும் கிடைக்க, அவனிடம் அங்க அடையாளங்களை விசாரித்து.. அனிதாவின் ஹவுஸ் ஓனர் சொன்ன அடையாளங்களும் அதுவும் ஒன்று போல இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டனர்.
கண்ணனுக்கு கிடைத்த சிம் கார்டுடை சோத்தித்து பார்த்ததில் இதற்கு முன்னர் ராபர்ட் போல் பேசி கொண்டிருந்த சிம் என்பதையும் உறுதி படுத்தி கொண்டனர். மேலும் அந்த சிம் ராபர்ட் மூலம் வாங்கபட்டிருப்பதும் தெரிய …இருவரும் நண்பர்கள் என்பதும் புரிந்தது. தேடி கொண்டிருப்பவன் ராபர்ட்டின் அனைத்து செயல்களிலும் இருந்திருக்கிறான். ராபர்ட் உடன் இதற்கு முன்னர் பிடிபட்டவர்களின் புகைப்படங்கள் காட்டி இரு சாட்சியிடமும் விசாரிக்க அவர்கள் அது இங்கிருந்து சென்றவன் இல்லை என்று உறுதியாக கூறினர். அப்படி என்றால் அனைத்தையும் செய்திருந்தாலும் நாசுக்காக மாட்டாமல் இருந்திருக்கிறான். நன்கு அறிந்த ஒருவனே இத்தனை தூரம் அலைய வைத்திருக்கிறான் என்பது புரிய மேலும் மேலும் கண்ணனுக்கு சினம் ஏறிக்கொண்டே இருந்தது. கையில் கிடைத்தால் அவனுக்கு நிச்சயம் நல்ல தழும்புகள் கிடைக்கும் வாழ்வில் மறக்க முடியாத அளவுக்கு.
மணிகண்டன் மகேஸ்வரி தம்பதி வந்து இரண்டு நாட்கள் கடந்து இருக்க.. ஊருக்கு செல்ல முடிவு எடுத்து அதை மகேஸ்வரியிடம் தெரிவிக்க,
அவரோ, கண்ணன் ரதிதேவி கல்யாண விஷயத்தை பேச வேண்டும் என்பதற்காக நாராயணனிடம் கூற அவரும் அங்கு வந்துவிட்டார்.
“என்ன மணிகண்டன் அதுக்குள்ள கிளம்புறீங்க இன்னும் ஒரு நாலு நாள் இருந்துட்டு போகலாமே.”
“வந்து ரெண்டு நாள் ஆகிடுச்சு. ஆபிஸ்ல நிறைய வேலை இருக்கு. அப்புறம் ரதி தேவியும் இங்க வந்து ரொம்ப நாள் தங்கிட்டா…. எனக்கு இதுல உடன்பாடு இல்ல சார். என் பொண்ணோட அழுகையை பார்க்க முடிமாம தான் இங்க விட்டுட்டு போனேன். அதுவும் இல்லாம உங்க கூட பழகுனதை வச்சி புரிஞ்சி தான்…………..” மணிகண்டன் தயக்கமாக கூற,
அதை புரிந்துகொண்ட நாராயணன்,
“நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு எனக்கும் புரியுது. ரதிதேவி இங்க இருக்குறதுல எந்த பிரச்சினையும் இல்ல. “
“அதுக்கு இல்ல சார்.. உங்ககிட்ட ஒரு விஷயம் கேக்கணும். என் பொண்ணுக்கு உங்க பையனை பிடிச்சி இருக்குன்னு நினைக்கிறேன்… உங்க பையனுக்கு கல்யாண ஏற்பாடு பண்றதா இருந்தா.. ரதி தேவிய …….அதான்” என குரலை வெகு நேரம் தாழ்த்த,
“நீங்க பேச தயங்குற விஷயம் எனக்கு புரியுது. நாங்களும் அதை தான் உங்ககிட்ட பேசலாம்’னு இருந்தோம்.நீங்க வரதுக்கு முன்னாடியே குடும்பமா இதைப் பற்றி நாங்க பேசி முடிவு எடுத்திருக்கோம்.
என் பையனுக்கு ரதி தேவிய கல்யாணம் பண்ணி இந்த வீட்டு மருமகளாக்க ஆசைப்படுறோம். உங்க முடிவு என்னன்னு சொல்லுங்க…… “
எதை நினைத்து மணிகண்டன்( அவர் மட்டும் அறிந்த ரகசியம்) இந்த பேச்சை ஆரம்பித்தாரோ அதை அவர்களை கூற, பெரும் மகிழ்ச்சியோடு நாராயணனின் கைபிடித்து, “இத தான் எப்படி கேக்குறதுன்னு தெரியாம இவ்வளவு நேரம் தயங்கிட்டு இருந்தேன். என் பொண்ண நீங்க தாராளமா உங்க வீட்டு மருமகளாக்கிகலாம். எங்களுக்கு முழு சம்மதம். கண்ணன் மாதிரி ஒரு பையனுக்கு பொண்ணு தர யார் மறுப்பாங்க. என் பொண்ணுக்கு உங்க பையன ரொம்ப பிடிச்சிருக்கு. இங்க வர வரைக்கும் எனக்கு இதுல பெரிய உடன்பாடு இல்ல. ஆனா இங்க வந்து உங்கள எல்லாம் பார்த்ததும் அந்த எண்ணம் மாறிடுச்சு. என் பொண்ணுக்கு இதைவிட ஒரு நல்ல குடும்பம் நிச்சயமா கிடைக்காது. அதும் உங்க பையன் குணத்துக்கு எதைக் கொடுத்தாலும் ஈடாகாது.”
“ரொம்ப சந்தோஷம் மணிகண்டன். சீக்கிரமா கண்ணனுக்கும் ரதி தேவிக்கும் கல்யாண ஏற்பாடு பண்ணிடலாம். ஏன்’னா அதுக்கப்புறம் சித்துக்கும் ஆரதிக்கும் கல்யாணம் பண்ணனும். இவங்க கல்யாணத்த எவ்வளவு சீக்கிரம் பண்ண முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பண்ணிடலாம்.”
“அடடா மணிகண்டன்… இருங்க இருங்க பொண்ண விட நீங்க ரொம்ப ஆர்வமா இருக்கீங்க போல. நல்ல நேரம் பார்த்து நிச்சயார்த்தம் பண்ணிக்கலாம். அதுக்கு முன்னாடி நமக்குள்ள சின்னதா ஒரு ஒப்பு தாம்பூலம் மாத்திக்கலாம்.” என்ற சண்முகம்.. தன் மனைவியிடம் நாட்குறிப்பை எடுத்து வரச் சொல்ல,
கொண்டுவந்த நாட்குறிப்பில் மூன்று தம்பதிகளும்… தங்களுக்கு தெரிந்த விஷயங்களை கூறி ஆராய்ச்சி செய்ய, நாளை மறுநாள் நேரம் நன்றாக இருப்பதால் அன்றே தாம்பூலம் மாற்ற முடிவு செய்தனர்.
“அப்புறம் என்ன மகேஸ்வரி.. ரெண்டு நாள்ல தாம்பூலம் மாத்திக்கிட்டு மனசு சந்தோஷமா ஊருக்கு போங்க.” தன் மகளின் எண்ணத்தை புரியாமல் சரஸ்வதி கூற,
“சரிங்க கா. இத என் பொண்ணு கேட்டா ரொம்ப சந்தோஷப்படுவா.”
“வரட்டும் என் மருமக கிட்ட நானே இதை பத்தி பேசுறேன். ” மஹாலட்சுமியின் வார்த்தையில் பூரித்த மணிகண்டன்,
“இல்ல’ங்க இப்ப சொல்ல வேணாம். தாம்பூலம் வைக்கிற அன்னைக்கு தான மாப்பிள்ளையும் கொல்கத்தாவில் இருந்து வரப்போறாங்க. அவருக்கும் ரதி தேவிக்கு சின்ன ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டும். “
“நீங்க சொல்றதும் சரிதான். பசங்களுக்கு ஒரு சர்ப்ரைஸா இருக்கும். அதுமட்டுமில்லாம… அன்னைக்கே சித்து ஆரதி இரண்டு பேருக்கும் ஒப்பு தாம்பூலம் மாற்றலாம். கண்ணன் கல்யாணம் முடிஞ்சு ஒரு ஆறு மாசம் கழிச்சு இவங்க கல்யாணத்த வச்சிக்கலாம்.” என்ற நாராயணனின் வார்த்தையில் சிறிது நேரம் யோசித்த சண்முகம்,
“சரிதான் நாராயணனா. இப்பவே இவங்க ரெண்டு பேரும் எங்க போனாலும் ஜோடியா தான் போறாங்க. யாராச்சும் பார்த்து ஏதாச்சும் கேள்வி கேட்கிறது குள்ள நம்மளே… ஒப்பு தாம்பூலம் மாற்றிக்கிறது நல்லது. இதை சொல்லியே கேக்குறவங்க வாயை அடைச்சிடலாம்.”
“பாத்தீங்களா ஒரு நல்ல பேச்சு ஆரம்பிச்சா தொடர்ந்து நல்லதாகவே நடக்குது. ஒரு பையனுக்கு கல்யாணம் பேச ஆரம்பிச்சு இப்போ ரெண்டு பையனுக்கும் ஒரே நேரத்துல தாம்பூல மாத்திக்கிற அளவுக்கு. அடுத்தடுத்து இனிமே நமக்கு கல்யாண வேலை தான் இருக்கப் போகுது. இப்பவே கிடைக்கிற நேரத்தை ரெஸ்ட் எடுத்துக்க பயன்படுத்திக்கனும்.” மணிகண்டனின் பேச்சில்,
தலையாட்டி சிரித்த சரஸ்வதி, “ஆமா இன்னும் ஆறு மாசத்துல கல்யாணம்.. அதுக்கடுத்து ஒரு கல்யாணம். அடுத்த ஒரு வருஷத்துல பேரப்பிள்ளைங்கன்னு நிக்க நேரமில்லாம இருக்கப் போறோம்.”
சரஸ்வதியின் பேச்சில் அங்கு இருப்பவர்களும் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தனர்.. இன்னும் இரு தினங்களில் வீட்டில் வெடிக்கப் போகும் எரிமலையை பற்றி தெரியாமல்.