அத்தியாயம் 15_1 விழி மொழி பேசு_கார்த்திகா கார்த்திகேயன்
Post Views:1,911
அத்தியாயம் 15
உன்னை விட்டு பிரிய மனமில்லாமல்
தன்னையே மாய்த்துக் கொள்ள சித்தமாக
இருக்கிறது எந்தன் இதயம்!!!
அவர்களின் ஆர்பாட்டமான வரவேற்பு ரேகாவுக்கு ஆறுதலாகவும் சந்தோசமாகவும் இருந்தது. தன்னை தேடும் உறவுகள் கிடைத்தால் அது வரம் தானே? அதை சந்தோஸமாக அனுபவித்தாள்.
சிறிது நேரம் அனைவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அதன் பின் உடை மாற்ற அவர்களுடைய அறைக்குள் வந்தார்கள் விக்ரமும் ரேகாவும்.
உள்ளே வந்ததும் அவளையே ஆர்வமாக பார்த்தான் விக்ரம். அவன் பார்வையில் இருந்த தாகத்தில் ரேகாவுக்கு எப்போதும் போல மனது துள்ளாமல் எரிச்சலாக வந்தது.
“இவனுக்கு இதே வேலை. இப்படி ஆசையா பாக்க வேண்டியது, அடுத்த நிமிசமே ஏதாவது கஷ்டப் படுத்துற மாதிரி பேச வேண்டியது. பங்ஷன் முடிஞ்ச உடனே இங்க இருந்து கிளம்ப போறேன். அது வரைக்கும் இவன் கிட்ட வாங்கிக் கட்டிக்காம இருக்கணும். இவனோட அருகாமை வேணும்னு ஆசை பட்டு தானே இங்க வந்தோம். அதை மட்டும் அனுபவிப்போம். வேற எந்த ஆசையையும் வளத்துக்க கூடாது”, என்று எண்ணிக் கொண்டாள்.
அவனோ அவளையே தான் இன்னும் ரசித்துக் கொண்டிருந்தான். சாதாரண காட்டன் சேலையிலே அவ்வளவு நளினமாக இருந்தாள் ரேகா.
இந்த அழகை அடைய முடியாத பெருமூச்சு அவனிடத்தில் வெளிப்பட்டது. “நீ இப்படி பெருமூச்சு விட்டுட்டே அலைய வேண்டியது தான்”, என்று அவனையே கலாய்த்தது அவன் மனது.
அவன் பார்வை தன் மீதே இருக்கவும் இதற்கு மேல் இங்க இருக்க முடியாது என்று எண்ணிய ரேகா குளிப்பதற்காக மாற்றுடையை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.
இவ்வளவு நாள் அவள் இல்லாத அறை இன்று அழகாக மாறியது போல இருந்தது அவனுக்கு. இத்தனை நாள் இருந்த வெறுமை மறைந்து அவள் வாசனை அறையெங்கும் வீசுவது போல இருந்தது அவனுக்கு. “இவ கிட்ட இருந்தாலே தனி நிம்மதி தான்”, என்று எண்ணி புன்னகைத்துக் கொண்டான்.
அவள் குளித்து முடித்து வந்ததும் மீண்டும் அவளை ரசித்துப் பார்க்க “இங்க பாருங்க நீங்க பண்ணுறது எதுவுமே சரியில்லை விக்ரம்”, என்று கடுப்புடன் சொல்லி விட்டாள் ரேகா.
அவள் பேச்சில் உல்லாசமாக சிரித்தவன் “நான் என்ன செஞ்சேன்? உன் கிட்ட கூட வரலையே? எதுக்கு தேவையில்லாம கோப படுற ரேகா? ஆனா ஒரு உண்மை தெரியுமா? நீ கோப பட்டா கூட ரொம்ப அழகா இருக்க?”, என்று சொன்னான். அவன் பதிலில் தலையில் அடித்துக் கொண்ட ரேகா “எதுக்கு வச்ச கண்ணு வாங்காம பாத்துட்டு இருக்கீங்க? நான் இந்த வீட்டுக்கு கெஸ்ட்டா தான் வந்திருக்கேன். ஒரே ரூம்ல நாம ரெண்டு பேரும் இருக்கும் போது நீங்க இப்படி பாக்குறது நல்லவா இருக்கு?”, என்று கேட்டாள்.
“பாக்க கூட உரிமை இல்லையா? போடி”, என்று சொல்லி விட்டு பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டான் விக்ரம்.
அவன் கோபமாக சொன்னானா, இல்லை நக்கலாக சொன்னானா என்று குழம்பியவள் இதற்கு மேல் இங்கயே இருந்தால் மீண்டும் வந்து அதே போல பார்க்க ஆரம்பித்து விடுவான் என்பதால் அவசரமாக கீழே இறங்கிச் சென்று விட்டாள்.
குளித்து முடித்து வந்த விக்ரம் அவளை எண்ணி சிரித்துக் கொண்டே உடை மாற்றினான். அவன் பார்வையில் அவள் தப்பிக்க நினைக்க அவனோ அவன் பார்வையை அடிக்கடி அவள் மேல் வீசிக் கொண்டிருந்தான். அவர்கள் பார்வை பரிமாற்றத்தைக் காணாதது போல கண்ட ஆதியும் காயத்ரியும் “இதுக திருந்தாத கேஸ்”, என்று எண்ணிக் கொண்டார்கள்.
அதற்கு அடுத்த நாள் மஞ்சு குடும்பம் கிளம்பி வந்தது. அதற்கு அடுத்த நாள் காயத்ரி வீட்டில் உள்ளவர்களும், மற்ற நெருங்கிய சொந்தங்களும் வர ஆரம்பித்தார்கள்.
ஒரு வழியாக திருமண நாளும் அழகாக விடிந்தது. தெரிந்தவர்கள் சொந்தங்கள் என அனைவரும் வந்திருந்தார்கள். ரேகா மாமா வீட்டுக்கு போனில் அழைத்து ஆதி சொல்லியிருந்தாலும் அவர்கள் வீட்டில் இருந்து யாருமே வர வில்லை. அவர்களைப் பற்றி யாரும் எண்ணவும் இல்லை.
மஞ்சுவும் ரேகாவும் வீட்டாள்களாக இருந்து வந்தவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார்கள். காயத்ரியோ அஞ்சலியுடனே சுற்றிக் கொண்டிருந்தாள். அவளை எந்த வேலையும் செய்யக் கூடாது என்று சொல்லி கட்டளை போட்டிருந்தான் ஆதி.
அதே நேரம் விக்ரமின் கண்கள் ரேகாவை சுற்றி வளைத்துக் கொண்டே இருந்தது.
ரேகாவோ இந்த நாளை மிகவும் சந்தோஷமாக கடந்து கொண்டிருந்தாள். அவளுக்கு இந்த கூட்டம் பிடித்திருந்தது. அனைவரும் அங்கே இருந்தது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. “வீடுண்ணா இப்படி தான் இருக்கணும்”, என்று எண்ணி சந்தோஷப் பட்டாள். ஆனாலும் சில நேரம் அவள் மனம் சோர்ந்து போனது. ஏனென்றால் திருமணம் முடிந்ததும் மறுபடியும் அவள் ஊருக்கு போக வேண்டுமே? இந்த வீட்டை விட்டு, விக்ரமை விட்டு போக வேண்டுமே என்று கவலையாக இருந்தது.
அவனும் அவளை பார்த்துக் கொண்டு தான் இருந்தான். தன்னுடைய குடும்பத்தாருடன் சந்தோஷமாக பேசிக் சிரித்துக் கொண்டிருந்தவளைப் பார்த்து அவனுக்கு வியப்பும் வந்தது.
இவள் அவனுடைய குடும்பத்தில் ஒட்டிய அளவுக்கு காயத்ரி கூட முதலில் இங்கே ஓட்ட வில்லை. ஆதி காயத்ரி திருமணம் முடிந்ததும் ஒரு மாதம் கழித்து தான் அவர்கள் ஹனிமூன் சென்று விட்டுத் திரும்பினார்கள். அதன் பின்னரும் அதிகம் யாருடனும் பேசாமல் இருந்த காயத்ரி கொஞ்சம் கொஞ்சமாக தான் அனைவருடனும் சகஜமாக பேசினாள்.
ஆனால் ரேகா அப்படி இல்லை. வந்த நாளில் இருந்து அனைவரிடமும் கதை தான். மாமியார் என்ற பயம் இல்லாமல் சாரதாவிடம் செல்லம் கொஞ்சுவாள். “மாமா, இந்த மாசம் டை அடிக்கலையா முடி கொஞ்சம் வெள்ளையா மாறிருச்சே?”, என்று சேதுபதியைக் கிண்டல் அடிப்பாள்.
“அண்ணி, அங்க பாருங்க அண்ணன் உங்களை தான் பாத்துட்டே இருக்காங்க. கல்யாணம் முடிஞ்சு இத்தனை வருஷம் கழிச்சும் எப்படி இவ்வளவு அன்பு உங்களுக்குள்ள? அந்த சீக்ரட்டைக் கொஞ்சம் எங்களுக்கும் சொல்லுங்களேன்”, என்று மஞ்சு மற்றும் சுதாகரை வாருவாள்.
அக்கா அக்கா என்று காயத்ரியிடமும் அன்பாக பழகினாள். ஆதியிடமும் ஒரு சகோதரனிடம் பேசுவதைப் போல தான் பேசுவாள். அவளைக் கண்டு வியப்பாக எண்ணிய விக்ரம் பின் அவனை யாரோ அழைக்கவும் அங்கே சென்று விட்டான்.
சிறிது நேரம் கழித்து சாரதாவும் சேதுபதியும் மணமேடையில் தம்பதிகளாக அமர்ந்திருந்தார்கள்.
விக்ரம், ஆதி, சுதாகர் மூவரும் பட்டு வேஷ்டி சட்டையில் இருந்தார்கள். ரேகாவுக்கும் அவர்கள் புது புடவை எடுத்துக் கொடுத்திருந்தார்கள்.
மாப்பிள்ளை போல இருந்த விக்ரமை அவன் பாராத நேரம் ரசித்துப் பார்த்தாள் ரேகா.
ஒரு முறை அவனை அவள் ரசித்துக் கொண்டிருக்க சுதாகரிடம் பேசிய படியே திரும்பிய விக்ரம் அவள் பார்வையைக் கண்டு கொண்டான். அவள் உடனே வேறு புறம் திரும்பிக் கொண்டாள். அவளின் கள்ளப் பார்வையைக் கண்டு கொண்ட அவன் விழிகளில் மின்னல் தெறித்தது. அவள் அவனை திரும்பிப் பார்க்க அவனும் அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான். இருவர் பார்வையும் பின்னிக் கொண்டது. அவளைக் கண்டதும் அவன் விழிகள் காதல் மொழி பேச அதை படித்தவளின் விழிகளும் அதற்கு பதில் காதலைக் கொடுத்தன.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்த படி இருக்க “பிள்ளைங்க எல்லாரையும் மேடைக்கு கூப்பிடுங்க”, என்று சொல்லிக் கொண்டிருந்தார் ஐயர்.
அனைவரும் அங்கே வந்து விட விக்ரம் அருகில் ஜோடியாக நின்றாள் ரேகா. ஒவ்வொரு ஜோடியாக பாத பூஜை செய்தார்கள். ஏனோ அவனுடன் சேர்ந்து சாரதா மற்றும் சேதுபதிக்கு பாத பூஜை செய்த போது ரேகாவின் மனம் நிறைந்து போனது. அதன் பின் சில பல சடங்குகள் முடிந்ததும் அனைவரும் அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கினார்கள்.
“ஆதிக்கு வாரிசு வரப் போகுது. கூடிய சீக்கிரம் நீங்களும் எங்களுக்கு நல்ல செய்தி சொல்லணும்”, என்று சொல்லி விக்ரம் மற்றும் ரேகாவை ஆசீர்வதித்தார்கள்.
அதன் பின் விருந்து ஆரம்பமானது. உணவு உண்ட பின்னர் சொந்தங்கள் அனைவரும் கிளம்பிச் செல்ல வீட்டாள்கள் மட்டுமே இருந்தார்கள்.
அனைவரும் வரவேற்பறையில் அமர்ந்து நிறைந்த மனதுடன் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க “கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வா மா ரேகா”, என்றார் சேதுபதி.
“இதோ கொண்டு வரேன் மாமா”, என்று சொல்லிக் கொண்டே நடந்த ரேகா யாரோ அங்கே போட்டிருந்த வாழைப் பழத் தோலில் காலை வைத்து விட்டாள். டைல்ஸ் தரையும் சேர்ந்து வழுக்கி விட்டதில் “ஆ அம்மா”, என்று அலறிய படியே கீழே விழுந்தாள்.
அவள் சத்தம் கேட்டதும் அனைவரும் பதறிய படியே அங்கே வந்தார்கள். எழுந்து நிற்க முடியாமல் வலி உயிர் போக அப்படியே தரையில் அமர்ந்திருந்தாள் ரேகா. அவள் கண்கள் கூட வலியில் கலங்கி விட்டது.
“ஐயோ, என்ன ஆச்சு ரேகா?”, என்று கேட்டாள் சாரதா.
“வாழைப்பழ தோலைப் பாக்காம அதுல காலை வச்சிட்டேன் அத்தை. கால் சுளுக்கிருச்சு போல? ரொம்ப வலிக்குது”, என்றாள் ரேகா.
“என்ன டா பாத்துட்டு இருக்க? அவளை. ரூமுக்கு தூக்கிட்டு போ. நான் டாக்டரை கூப்பிடுறேன்”, என்றார் சேதுபதி.
“இதோப்பா”, என்றவன் அடுத்த நொடி அவளை தன்னுடைய இரு கைகளிலும் வாகாக தூக்கிக் கொண்டான். அவன் கைக்குள் இருந்த படியே “அக்கா மாமாவுக்கு தண்ணி கொடுங்க”, என்று காயத்ரியிடம் சொன்னாள் ரேகா.
அந்த நேரத்திலும் அவளுடைய அக்கறையும் பொறுப்புணர்ச்சியும் மற்றவர்களை நெகிழ்த்தியது என்றால் விக்ரமோ “இப்படி எல்லார் மேலயும் அன்பா இருக்குறவ எப்படி தப்பானவளா இருக்க முடியும்? ஒரு வேளை நிஜமாவே அவ அந்த கல்யாணத்தை நிறுத்த தான் நினைச்சாளா? நான் தான் இவளை தப்பா நினைச்சிட்டேனா?”, என்று எண்ணினான்.
“அதெல்லாம் நாங்க பாத்துக்குறோம். நீ போய் ரெஸ்ட் எடு”, என்று சொன்ன காயத்ரி சேதுபதிக்கு தண்ணீர் எடுக்கச் சென்றாள். அவளைப் தூக்கிக் கொண்டு படிகளில் ஏறிக் கொண்டிருந்த விக்ரம் “பாத்து நடக்க கூடாதா ரேகா?”,. என்று கேட்டான். அப்போது தான் ரேகா கவனம் அவன் புறம் திரும்பியது.
“தோலை அங்க யாரோ போட்டுருப்பாங்கன்னு நான் எதிர் பாக்கலை விக்ரம்”, என்று அவன் கண்களைப் பார்த்துக் கொண்டே சொன்னாள்.
“ரொம்ப வலிக்குதா?”
“ம்ம், என்னை கீழே இறக்கி விடுங்க. நானே நடந்து வரேன். எனக்கு என்னவோ போல இருக்கு”
“ஏண்டி உன்னைத் தூக்க எனக்கு உரிமை இல்லையா?”, என்று அவன் கேட்டதும் அவள் முகம் சிவந்து விட்டது.
“யார் சொன்னா? நான் வெயிட்டா இருப்பேன்னு தான் சொன்னேன்”, என்று புன்னகையுடன் சொன்னாள்.
“அவ்வளவு ஒண்ணும் வெயிட் இல்லை. பூ மாதிரி தான் இருக்குற? என்ன முதுகு மட்டும் தான் கொஞ்சம் வலிக்குது”
“பாத்தீங்களா கிண்டல் பண்ணுறீங்க? அதுக்கு தண்டனையா என்னை பெட் வரைக்கும் நீங்க தான் தூக்கிட்டு போகணும்”, என்று சொல்லிக் கொண்டே அவன் கழுத்தில் தன்னுடைய கைகளைப் போட்டு கட்டிக் கொண்டாள்.
கிசுகிசுப்பாக பேசிய படி அவனும், புன்னகையுடன் அவளுக்கு பதில் கொடுத்த படி அவளும் செல்வதை அனைவரும் வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“என்னங்க, இவங்க ரெண்டு பேரும் என்ன கனவுல நடந்து போற மாதிரி போறாங்க?”, என்று ஆதியின் காதில் கேட்டாள் காயத்ரி.
“எப்படியோ ரெண்டு பேரும் ஒண்ணு சேந்தா சரி தான். இப்ப ரேகா விழுந்ததை வச்சு அவளை வேலைக்கு போக விடாம நம்ம வீட்லே இருக்க வைக்கணும்”, என்றான் ஆதி.
“நான் அத்தைக் கிட்ட சொல்லிச் சொல்ல சொல்லிறேன். அத்தை சொன்னா தான் ரேகா கேப்பா. எப்படியும் விக்ரம் அவளை இருக்கச் சொல்ல மாட்டான்”, என்றாள் காயத்ரி.
“நான் ரேகாவுக்கு ஒத்தடம் கொடுக்க வெந்நீர் போடப் போறேன்”, என்று சொல்லி விட்டுச் சென்றாள் மஞ்சு.
இயல்பாக தன்னுடைய கழுத்தில் கரங்களைப் போட்ட படி புன்னகையுடன் அவனுடைய கைக்குள் இருந்தவளைக் கண்டு சந்தோஷம் வந்தது விக்ரமுக்கு. “எப்போதுமே இவள் என் கைக்குள் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்?”, என்று ஆசை கொண்டான்.
ரேகாவுக்குமே இந்த நெருக்கம் தேவையாக தான் இருந்தது. அவளுக்கு பிடித்தமான இடமே அவன் கைக்குள் இருப்பது தான். அதை அவன் தராமல் ஒதுக்கி வைக்க, இப்போது இயற்கையாக அமைந்த வாய்ப்பை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.
இப்படி தூக்குவான் என்றால் தினமும் கூட கீழே விழலாமே என்று எண்ணியது ரேகாவின் மனது.
அவர்களின் அறையும் வந்தது. உள்ளே சென்று கட்டிலின் அருகில் நின்ற விக்ரம் அவளை இறக்கி விடவே இல்லை. கீழே விட்டுவிடுவானோ என்று தவித்து அவன் கழுத்தை இன்னும் இறுக்கி பிடித்தாள் ரேகா. அவள் மனதை உணர்ந்தவனுக்கும் அவளை கட்டிலில் விட மனதே இல்லை.
அவள் முகத்தைப் பார்த்தான் விக்ரம். அவளும் அவனை ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தாள். எந்த தடுமாற்றமும் இன்றி அவனையே ரசித்தாள். அவளுடைய காதல் முழுவதும் அவளுடைய விழிகள் பிரதிபலித்தது.
அவள் விழிகள் சிந்தும் காதலை புரிந்து கொண்ட விக்ரமுக்கு சத்தியமாக அவளை இறக்கி விட முடியும் என்று தோன்றவில்லை. இருவர் பார்வையும் பின்னிப் பிணைந்து கொண்டது. அவனுடைய தோளை அவள் இறுக்கிப் பிடிக்க அவளுடைய இடையை முதுகோடு சேர்த்து அவன் கரங்கள் இறுக்கியது. அவன் அருகாமையில் கால் வலி பற்றிய எந்த உணர்வும் ரேகாவுக்கு இல்லை.
முகம் சிவந்த படி தன்னையே பார்த்துக் கொண்டிருந்த மனைவியின் முகம் பார்த்த விக்ரமின் உணர்வுகள் கிளம்பியது. அடுத்த நொடி அவளுடைய இதழ்களை சிறை செய்ய அவள் முகம் நோக்கிக் குனிந்தான் விக்ரம்.
அதற்குள் “என்ன டா இன்னும் உன் பொண்டாட்டியை இறக்கி விட உனக்கு மனசு இல்லையா?”, என்று கேட்ட படி கையில் வெண்ணீருடன் உள்ளே வந்தாள் மஞ்சு.