அத்தியாயம் 15_2 விழி மொழி பேசு_கார்த்திகா கார்த்திகேயன்
Post Views:1,957
“இந்த அக்கா ஒரு ரெண்டு நிமிஷம் லேட்டா வந்துருக்க கூடாதா?”, என்று ரேகாவுக்கு மட்டும் கேட்குமாறு புலம்பிய படியே அவளை கட்டிலில் விட்டான். அவன் பேசியதைக் கேட்டு அவனைப் பார்த்து அழகாக சிரித்தாள் ரேகா. அவள் புன்னகையைக் கண்டு அவளை முறைத்தான் விக்ரம்.
“என்ன டா முணுமுணுக்குற?”, என்று மஞ்சு கேட்க “ஒண்ணும் இல்லை, டாக்டர் வரலையா? இது என்ன வெண்ணி?”, என்று கேட்டு பேச்சை மாற்றினான் விக்ரம்.
“டாக்டர் அரை மணி நேரம் கழிச்சு வருவாராம் டா. இப்ப அவ காலுக்கு சுடு தண்ணீர் வச்சு ஒத்தடம் கொடுக்க சொன்னாங்க. ரேகா காலைக் காட்டு”, என்று சொல்லி அவள் அருகில் அமர்ந்தாள் மஞ்சு.
தர்மசங்கடமாக காலை நீட்டினாள் ரேகா. ஆனால் புடவையை நகர்த்த அவளுக்கு கூச்சமாக இருந்ததால் அப்படியே இருந்தாள்.
“அக்கா உனக்கு எதுக்கு கஷ்டம்? நீ போய் அஞ்சலியைப் பாரு. நான் ரேகாவைப் பாத்துக்குறேன்”, என்றான் விக்ரம். அவனுடைய ஆசை ரேகாவுக்கு புரிந்தது. அதனால் அவள் முகம் சிவந்து விட்டது. ஆனால் மஞ்சுவுக்கு புரியவில்லையே?
“என் தம்பி பொண்டாட்டியை பாத்துக்குறதுல எனக்கு என்ன டா கஷ்டம்? அஞ்சலியை கீழே எல்லாரும் பாத்துக்குவாங்க. நீ வேணும்னா அவளை போய் பாத்துக்கோ. ரேகா, காலை நல்லா நீட்டு. ஒத்தடம் கொடுத்தா கொஞ்சம் வலி குறையும். கொஞ்சம் புடவையை நகர்த்து”, என்று சொல்லி அவளுக்கு ஒத்தடம் கொடுக்க ஆரம்பித்தாள் மஞ்சு.
வட போச்சே என்று எண்ணிக் கொண்டு முகத்தை தொங்க போட்டு விட்டு சென்றான் விக்ரம். அவனைக் கண்டு சிரிப்பு வந்தது ரேகாவுக்கு. எந்த பந்தாவும் இல்லாமல் தன்னுடைய காதலை வெட்கத்தை விட்டு ஒப்புக் கொள்ளும் அவனைக் கண்டு அவளுக்கு பெருமையாக இருந்தது. அவளை அவன் மனம் தேடுவதை எண்ணி அவளுக்கு சந்தோஷமாக இருந்தது.
“உன்னை எனக்கு பிடிக்கலை டி பிடிக்கலை டி”, என்று திருமணம் முடிந்த முதல் நாள் சொன்ன விக்ரமே “உன் மேலே பைத்தியமா இருக்கேன் டி”, என்று சொல்லும் போது அவன் மேல் அவள் தான் பைத்தியமாகிப் போனாள்.
ஒத்தடம் கொடுத்து விட்டு கீழே வந்த மஞ்சுவை பிடித்துக் கொண்டாள் காயத்ரி.
“மஞ்சு நீ போனப்ப அவங்க என்ன பண்ணினாங்க? சண்டை எதுவும் போட்டுக்கிட்டாங்களா?”, என்று கேட்ட காயத்ரியை வியப்பாக பார்த்தாள் மஞ்சு.
“என்ன அண்ணி எதுக்கு இப்படிக் கேக்குறீங்க? அவங்க சண்டை ஒண்ணும் போடலையே? நான் வெண்ணி சூடு பண்ணி எடுத்துட்டு போற வரைக்கும் விக்ரம் ரேகாவை கீழே விடவே இல்லை”, என்று குழப்பத்துடன் சொன்னாள் மஞ்சு.
“என்ன சொல்ற? அவங்க மாடிக்கு போன அப்புறம் தானே நீ வெண்ணி வைக்கவே போன?”
“ஆமா அண்ணி, என்ன பொண்டாட்டியை இறக்கி விட மனசில்லையான்னு கேட்ட அப்புறம் தான் அவளை இறக்கி விட்டான். அப்புறம் நான் ஒத்தடம் கொடுக்குறேன்னு சொன்னான். நான் தான் என் தம்பி பொண்டாட்டிக்கு நான் கொடுக்குறேன்னு சொன்னேன். அப்புறம் அவன் ரூம்ல இருந்து போய்ட்டான். எங்க அவன்?”
“ஐயோ காரியத்தை கெடுத்துட்டியே மஞ்சு?”
“என்ன அண்ணி சொல்றீங்க?“
“நீ ரேகாவுக்கு அவனையே ஒத்தடம் கொடுக்க விட்டுருக்கலாம்ல?”
“இதுல என்ன அண்ணி இருக்கு? நான் ரேகாவுக்கு செய்யக் கூடாதா?”
“மஞ்சு.. மஞ்சு உனக்கு எப்படி விஷயத்தை புரிய வைப்பேன்? உனக்கு முழுசா எல்லாம் சொன்னா தான் தெரியும். அவங்க ரெண்டு பேரும் இன்னும் வாழவே ஆரம்பிக்கலை. தனித் தனியா தான் இருக்காங்க. இன்னைக்கு அவங்க முகத்துல கொஞ்சம் சந்தோஷம் தெரிஞ்சது. அதான் ஏதாவது நல்லது நடக்கும்னு நினைச்சேன்”
“என்ன அண்ணி சொல்றீங்க? ரெண்டு பேரும் வாழவே ஆரம்பிக்கலையா? ரெண்டு பேரும் லவ் பண்ணித் தானே கல்யாணம் பண்ணினாங்க? அப்புறம் ஏன்?”
“இல்லை மஞ்சு, லவ் பண்ணினது விக்ரம் தான். முதல்ல ரேகா அவனை லவ் பண்ணலை. ஆனா ரேகாவும் இப்ப அவனை லவ் பண்ணுறா”
“அப்புறம் என்ன?”
“அது அவங்களுக்குள்ள ஏதோ பிரச்சனை போல? ரெண்டு பேரையும் நல்லா நோட் பண்ணி பாரு. கண்ணாலே பேசிக்குவாங்க. ஆனா விலகித் தான் இருக்காங்க. அவங்களை சேத்து வைக்க பிளான் பண்ணி தான் நாங்களும் உங்க வீட்டுக்கு வந்தோம். ஆனா எங்க?”, என்று சொல்லி பெருமூச்சு விட்டாள் காயத்ரி.
“ஹா ஹா அவங்களை ஒண்ணு சேத்து வைக்க வந்துட்டு நீங்க ரெண்டாவது ஹனிமூன் கொண்டாடின விளைவு தான் இந்த பாப்பாவா?”, என்று சிரித்தாள் மஞ்சு.
அதில் முகம் சிவந்த காயத்ரி “கிண்டல் பண்ணாத மஞ்சு. நானே அவங்க ஒண்ணு சேரணும்னு நினைச்சா நீ என்ன டான்னா அவனை விரட்டி விட்டுட்டு வந்துருக்க?”, என்றாள்.
“விடுங்க அண்ணி, என் கிட்ட விஷயத்தை சொல்லிட்டீங்கல்ல? நான் பாத்துக்குறேன். இதெல்லாம் பெரிய விஷயமா? இப்ப தான் சொல்லிட்டீங்களே? ஒரு தடவை ஒத்தடம் கொடுத்தா ஆச்சா? டாக்டர் வந்துட்டு போனதுக்கு அப்புறம் ரேகாவுக்கு எல்லாத்தையும் விக்ரமையே செய்ய வச்சிரலாம்”, என்று மஞ்சு சொன்னதும் “சூப்பர் ஐடியா”, என்று சிரித்தாள் காயத்ரி.
சிறிது நேரத்தில் டாக்டர் வந்து பார்த்து விட்டு சுளுக்கு இல்லை என்றும் சாதாரண ரத்தக் கட்டு தான் என்றும் சொல்லி ஆயின்மெண்ட் கொடுத்து விட்டுச் சென்றார்.
இந்த முறை தம்பி மனைவிக்கு நான் செய்வேன் என்று சொல்லாமல் “விக்ரம் ரேகாவைப் பாத்துக்கோ”, என்று சொல்லி அவனிடம் பொறுப்பை ஒப்படைத்தாள் மஞ்சு. அதில் அவன் முகம் மலர்ந்தது.
அதைக் கண்ட மஞ்சுவுக்கு காயத்ரி சொன்னது அனைத்தும் உண்மை என புரிந்தது. அவர்களுக்கு தனிமை கொடுக்க எண்ணி “விக்ரம் ரேகாவால கீழே வர முடியாது, நீ அவளுக்கு சாப்பாடு கொடு இந்தா. அப்புறம் அவளுக்கு ஆயின்மெண்ட் போடுறதுக்கு முன்னாடி ஒத்தடம் கொடு. விக்ரம் அவளை கூட நாலு நாள் மெடிக்கல் லீவ் போடச் சொல்லு. அவ கேக்கலைன்னா நான் அம்மாவை விட்டுச் சொல்லச் சொல்றேன்”, என்று சொல்லி விக்ரம் ரேகாவுடனே இருக்கும் படி செய்தாள் மஞ்சு.
அதன் பின் ரேகாவை கவனிக்கும் பொறுப்பு விக்ரமிடமே வந்தது. அவன் தான் அவளுக்கு உணவு கொண்டு போனான். அவள் தட்டை வாங்க கை நீட்ட அவனோ அவளுக்கு ஊட்டி விட ஆரம்பித்தான்.
“கால்ல தான் வலி இருக்கு”, என்றெல்லாம் சொல்லாமல் சந்தோஸமாக அவன் ஊட்டி விடுவதைச் சாப்பிட்டாள் ரேகா.
அதன் பின் அவன் உணவு உண்டு விட்டு வரும் போது கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் ரேகா. அவளைப் பார்த்த விக்ரம் அவள் மறுக்க மறுக்க அவளுக்கு ஒத்தடம் கொடுத்தான்.
பின் ஆயின்மெண்ட்டை எடுத்துக் கொண்டு அவள் அருகே அமர்ந்ததும் “கொடுங்க நானே போட்டுக்குறேன்”, என்றாள் ரேகா.
“ஏன் நான் போடக் கூடாதா?”, என்று வெடுக்கென்று சொன்னவன் “சேலையை நகர்த்து”, என்று சொன்னான்.
“இவனுக்கு என்னோட உணர்வுகளை கிளப்பி விடுவதே வேலை”, என்று எண்ணிக் கொண்டு சேலையை கொஞ்சம் நகற்றினாள்; வீங்கியிருந்த இடத்தை ஒரு முறை தன்னுடைய கையால் வருடி விட்டான் விக்ரம்.
அவளுக்கு வலி இருந்தாலும் அவன் தொடுகையில் கூச்சமும் வந்தது. பின் மெதுவாக அவளுக்கு மருந்து தடவி விட்டான்.
அது முடிந்ததும் “நான் கீழே படுத்துக்குறேன். கொஞ்சம் எந்திக்க ஹெல்ப் பண்ணுறீங்களா?”, என்று கேட்டாள் ரேகா.
“ஏண்டி இப்படி படுத்துற? இப்ப இங்க படுத்துருக்குறதுல என்ன உனக்கு? எதுக்கு இப்ப கீழே போகணும்னு சொல்ற?”
“நீங்க கட்டில்ல படுப்பீங்கல்ல? அதான்”
“ஏன் நான் இங்க படுத்தா என்ன? நான் என்ன நீ தீண்டத் தகாதவனா?”
“நீங்க தீண்டத் தகாதவன் இல்லை. நான் தான் தீண்டத் தகாதவள்”, என்று விரக்தியாக சொன்னாள்.
“ரேகா”, என்று அதிர்வாக அழைத்தான் விக்ரம்.
“ப்ச் எதையும் பேசிக் கஷ்டப் படுத்திறாதீங்க. இப்ப எதையும் தாங்குற மன நிலைல நான் இல்லை. என் கிட்ட படுக்க உங்களுக்கு தான் பிடிக்காது. அதனால தான் கீழே போறேன்னு சொன்னேன். அதனால இன்னைக்கு ஒரு நாள் நீங்க கீழேயே படுத்துக் கோங்க”, என்று சொல்லி விட்டு அவனுக்கு முதுகு கட்டி கட்டிலிலே படுத்தாள்.
அவள் முதுகையே வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் விக்ரம். “இவளை கண்டிப்பா என்னால சுயநலவாதியா நினைக்க முடியலை. அன்னைக்கு நானும் இவ கிட்ட நான் தான் மாப்பிள்ளைன்னு சொல்லிருக்கணும். என் மேலயும் தப்பு இருக்கு. போனது எல்லாம் போகட்டும். இப்ப இவ என்னோட மனைவி. இவளை நெருங்குறதுல இனி எனக்கு எந்தக் குழப்பமும் இல்லை. இவ கெட்டவ அப்படிங்குற எண்ணமும் எனக்குள்ள இல்லை. இனி எதையும் தேவையில்லாம பேசி இருக்குற வாழ்க்கையை கெடுத்துக்க கூடாது”, என்று எண்ணிக் கொண்டு அவள் அருகே கட்டிலில் படுத்தான் விக்ரம்.
அவன் படுப்பதை உணர்ந்த ரேகா தனக்குள் சிரித்துக் கொண்டாள்.
அவளுடைய அருகில் படுத்து விட்டான் தான். ஆனால் அவனுக்கு இயல்பாக இருக்க முடியவில்லை. அவளை தன்னுடைய கைகளில் அள்ளிக் கொண்டு வந்த நினைவு வந்தது. மஞ்சு கொஞ்சம் தாமதமாக வந்திருந்தால் அடுத்து என்ன நடந்திருக்கும் என்று எண்ணி அவன் உடல் சூடானது.
அவளுடைய மனதும் அவனுக்கு தெளிவாக தெரிந்த பின்னர் இனி எதற்கு இந்த பிரிவு என்று எண்ணியவன் அவள் பக்கமாக திரும்பிப் படுத்தான்.
பின் தயக்கத்துடன் கொஞ்சம் கொஞ்சமாக அவள் பக்கம் நகர்ந்தான். அவனுடைய அசைவில் கண்களைத் திறந்த ரேகாவுக்கு திரும்பிப் பார்க்காமலே அவன் தன்னை நெருங்கி வருவது புரிந்தது. இதயம் எல்லாம் ரயில் ஓடுவது போல தடதடத்தது.
அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பு அவளுக்குள் கிளம்பியது. அவளுக்கு பின் பக்கமாக அவளை நெருங்கி படுத்த விக்ரம் அவள் வயிற்றில் தன்னுடைய கையைப் போட்டான்.
அவன் செய்கையில் அவள் அதிர்ந்து அசைவற்று இருக்க அவன் கைகள் அவளுடைய வெற்றிடையில் அழுத்தமாக பதிந்தது. அவன் கை சற்று அசைய அவன் கரத்தின் மீது தன்னுடைய கையை வைத்தவள் தன்னுடைய தலையை அவன் நெஞ்சில் சாய்த்தாள்.
அது வரை இருந்த தயக்கம் அவளுடைய செய்கையில் அவனை விட்டுச் சென்றிருந்தது. அவனுடைய உதடுகளை அவளுடைய பின்னங்கழுத்தில் பதித்தான் விக்ரம். அவனுடைய இதழ் தீண்டலையும் அவனுடைய சூடான மூச்சுக் காற்றையும் உணர்ந்த ரேகாவுக்கு உயிரும் உடலும் உருகிப் போனது.
அவளது கால் வலி நினைவில் இதற்கு மேல் முன்னேறவா வேண்டாமா என்று யோசித்தான் விக்ரம். அவள் இடையில் போட்டிருந்த கரத்தை வைத்தே அவளை தன் புறமாக திருப்பினான். கண்களை மூடியவாறே திரும்பிய ரேகா அவன் கண்களைக் காண முடியாமல் அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள்.
“ரேகா”, என்று தாபத்துடன் வந்தது அவன் குரல்.
“ம்”
“என்னைப் பாரேன்”, என்று அவன் உருகிய குரலில் சொல்ல அவளோ மாட்டேன் என்னும் விதமாய் தலையசைத்து விட்டு அவன் மார்பில் இன்னும் ஒட்டிக் கொண்டாள்.
“ரேகா, இப்ப உனக்கு கால் வலி இருக்கு”, என்று நடுங்கிய குரலில் சொன்னான். அவனுடைய உணர்வுகள் அவள் வேண்டும் என்று கேட்க அதை அடக்கி விட்டு அவளிடம் அனுமதி கேட்டதால் தான் அவன் குரல் நடுங்கியது.
அதை உணர்ந்தவளுக்கு அவனுடைய தவிப்பும் குழப்பமும் புரிந்தது. அவனுக்கு எப்படி தன்னுடைய மனதைச் சொல்ல என்று தெரியாமல் அவன் வயிற்றில் தன்னுடைய கைகளைப் போட்டு இன்னும் அவனிடம் ஒண்டினாள் ரேகா.
அதிலேயே அவளுடைய சம்மதத்தை உணர்ந்தான் அவன். தன்னுடைய மார்பில் இருந்து அவளைப் பிரித்து அவள் முகத்தை ஆசையாகப் பார்த்தான். பின் அவளுடைய உதடுகளில் தன்னுடைய இதழ்களைப் பதித்தவன் அவளை இறுக்கமாக அனைத்துக் கொண்டான். அவன் கைகள் இரண்டும் அவள் இடையை இறுக்கிப் பிடித்தது. அவள் கரம் அவன் முதுகில் பயணம் போனது.
அவளுடைய ஒத்துழைப்பு அவனை மேலும் முன்னேறத் தூண்டியது.
அதற்கு மேல் உணர்வுகளை அடக்க முடியாமல் அவள் மேல் கவிழ்ந்தவனின் கரங்கள் அவளுடைய மேனியில் பயணிக்க துவங்கின. அவனுடைய முத்தமும் அவனுடைய கரங்களின் அத்துமீறலும் அவளை வேறு ஒரு புது உலகுக்கு அழைத்துச் சென்றது.
அவன் விரல் தீண்டிய இடங்கள் அனைத்திலும் அவனுடைய உதடுகளும் பயணிக்க அவன் கைகளுக்குள் கரைந்து காணாமல் போனாள் ரேகா.
அந்த இரவு அவர்களுக்கு விடியாத இரவாகிப் போனது. அவனுடைய தீண்டலில் அவளுக்கு கால் வலி கூட மறந்து போனதா, இல்லை மறைந்து போனதா என்று அவளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
இரவு முழுவதும் தன்னை விட்டுப் பிரியாத அவன் காதலில் கர்வம் கொண்டாள் ரேகா. அதுவும் அவன் பழைய விசயங்களைப் பற்றி பேசாதது அவளுக்கு நிம்மதியாகவும் இருந்தது.
மனதில் எவ்வளவோ குழப்பங்களும் கேள்விகளும் இருவருக்குள்ளும் அந்த நொடி இருந்தாலும் அதை எல்லாம் எண்ணாமல் வாழ்க்கையை அதன் போக்கில் வாழ ஆரம்பித்து விட்டார்கள்.
தன்னை விலக்கி வைத்த கணவன் இன்று தன்னை ஏற்றுக் கொண்டதை எண்ணி, அவன் காதலை எண்ணி சிறகில்லாமல் பறந்தாள்.
அவர்கள் தூங்க ஆரம்பிக்கும் போது ஆதவன் மேலே எழும்ப ஆயத்தமானான்.