அத்தியாயம் 16_2 விழி மொழி பேசு_கார்த்திகா கார்த்திகேயன்
Post Views:2,178
அவளைக் கண்டு சாரதாவும் சேதுபதியும் வேண்டா வெறுப்பாக “வாங்க”, என்றார்கள்.
“வாங்க அத்தை, எப்படி இருக்கீங்க? மாமா வரலையா?”, என்று கேட்டாள் ரேகா.
“இந்த அத்தை சொத்தைன்னு நடிக்கிற வேலை எல்லாம் என் கிட்ட வச்சிக்காத சொல்லிட்டேன். பாவி உன்னை எடுத்து வளத்ததுக்கு மொத்தமா வச்சிட்டியே டி ஆப்பு?”, என்று கத்தினாள் வேணி.
“அத்தை என்ன சொல்றீங்க? எனக்கு புரியலையே?”, என்று கேட்ட ரேகாவுக்கு வேணி எதனால் அப்படி பேசுகிறாள் என்று புரிய வில்லை. ஒரு வேளை விக்ரமை வர்ஷாவுக்கு விட்டுக் கொடுக்காமல் திருமணம் செய்ததற்கு பேசுகிறாளா என்று குழப்பம் வந்தாலும் அதற்கு ஒரு மாதம் காத்திருந்து வந்து பேச வேண்டிய அவசியம் இல்லையே என்றும் தோன்றியது.
“நடிக்காத. முதல்ல நீ என்ன டி எங்க கிட்ட சொன்ன? விக்ரமை எனக்கு பிடிக்கலை. நான் இன்னொருத்தனை லவ் பண்ணுரேன்னு தானே சொன்ன? கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திருவேன்னு சொல்லித் தானே வீட்ல இருந்து இவங்க கூட கிளம்பின. ஆனா என் மகளுக்கு ஆசை கட்டி நீயே அவனைக் கட்டிக்கிட்ட. எதுக்கு டி நீ இந்த விக்ரமை கல்யாணம் பண்ணின? கார்ல வரும் போது இந்த அம்மா என் மகன் ரொம்ப பணக்காரன்னு சொல்லுச்சா? அதான் மனசு மாறிட்டியா? சரி அதை விடு. நீ இன்னொருத்தனை லவ் பண்ணினேன்னு சொன்னியே? அவன் நிலைமை என்ன ஆச்சு? பணக்காரன் கிடைச்சதும் உன்னை லவ் பண்ணினவனுக்கும் டாட்டா காமிச்சிட்ட அப்படி தானே?”, என்று வேணி கேட்க சேதுபதி மற்றும் சாரதாவைப் பார்த்தாள் ரேகா.
இதைக் கேட்டு தன்னை பற்றி அவர்கள் என்ன நினைப்பார்கள் என்று ரேகாவுக்கு பயமாக இருந்தது. ரேகா வேணிக்கு எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருக்கவும் “என்ன மா என்னன்னவோ சொல்ற? என் மகனும் மருமகளும் பல வருஷமா லவ் பண்ணுறாங்க”, என்றாள் சாரதா.
“அப்படியா? இது புதுக் கதையாவுல இருக்கு. இங்க இருக்காளே உங்க மருமக அவ கிட்ட கேளுங்க. கல்யாணத்துக்கு முந்தின நாள் வரைக்கும் இவ உங்க மகனை பாத்துருக்காளான்னு”, என்று வேணி சொன்னதும் சாரதா ரேகாவைப் பார்க்க ரேகா தலை குனிந்தாள்.
சேதுபதியும் சாரதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“என்ன உங்க மருமக லட்சணத்தை பாத்துக்கிட்டீங்களா? எப்படி தலை குனிஞ்சு நிக்குறா பாருங்க. அப்புறம் உங்க மகனும் ஒண்ணும் லேசு பட்டவன் இல்லை. என் மகளை பொண்ணு பாக்க தான் எங்க வீட்டுக்கு வந்தான். அப்புறம் என்ன நடந்துச்சோ தெரியலை. இவ தான் வேணும்னு சொல்லி கட்டி வைக்கச் சொல்லி என் புருஷனை மிரட்டினான். அவர் முடியாதுன்னு சொல்லி உங்க மகனைத் திருப்பி அனுப்பிட்டார். உங்க பையன் நல்லவன்னா என்ன பண்ணிருக்கணும்? ஒழுங்கா விலகனுமா இல்லையா? ஆனா அவன் எண்ண பண்ணினான் தெரியுமா? இவளோட வீட்டை அடையுறதுக்காக என் புருசனுக்கு ஆசை காட்டி இவ வீட்டு பத்திரத்தை வாங்கிக்கிட்டு எழுபத்தி அஞ்சு லட்சம் பணம் கொடுத்தான். அது இவளுக்காகவோ, இல்லை அந்த வீட்டுக்காகவோ? எதுக்கோ கொடுத்தான். அவ்வளவு பணம் எங்களுக்கு வந்தது உங்களுக்கு தெரிஞ்சு தான் நடந்ததா?”, என்று வேணி கேட்டதும் சாரதாவும் சேதுபதியும் அதிர்ந்தார்கள்.
அவர்கள் அதிர்ந்த முகத்தை நக்கலாக பார்த்த வேணி “உங்களையும் அவன் ஏமாத்த தான் செஞ்சிருக்கானா? நல்லா வளத்து வச்சிருக்கீங்க பிள்ளையை. சரி அது இப்ப விஷயம் இல்லை. எங்க வீட்டுக்காரர் உங்க பையன் கிட்ட பத்திரத்தைக் கொடுத்து தான் பணம் வாங்கினார். ஆனா இப்ப ஒரு சேட்டு நான் தான் அந்த எழுபத்தி அஞ்சு லட்சம் கொடுத்ததா சொல்லி அதை திருப்பி கேக்குறான். அதான் வீட்டு பத்திரம் கொடுத்தாச்சுல்லன்னு சொன்னதுக்கு அது என் கிட்ட எங்க இருக்குனு கேக்குறான். உங்க மகன் கிட்ட கேட்டா நீங்களாச்சு ஷேட்டாச்சு. என் பொண்டாட்டி வீடு எனக்கு தான் சொந்தம். அதை எப்படி நீங்க உரிமை கொண்டாடலாம்னு சொல்றான்”, என்றாள்.
புருவம் நெரிய வேணி சொன்னதைக் கேட்ட சேதுபதி மகனின் புத்தி கூர்மையை வியந்த படி “சரியா தானே மா என் மகன் பேசிருக்கான். அவன் பொண்டாட்டி வீட்டு பத்திரம் தானே அவன் கைல இருக்கு. ரேகா வீடு அவனுக்கு தான் சொந்தம். அவ வீட்டை நீங்க எப்படி உரிமை கொண்டாடலாம்? அது மட்டுமில்லாம நீங்க எழுபத்தி அஞ்சு லட்சம் பணம் வாங்கிருக்கீங்க? அது இப்ப உங்க கிட்ட தானே இருக்கு? அந்த பணத்தைக் கொடுத்து கடனை அடைக்க வேண்டியது தானே?”, என்று கேட்டார்.
“அது… அது செலவாகிருச்சு”, என்றாள் வேணி.
“நீங்க கடன் வாங்கி செலவு பண்ணிட்டு இப்ப வந்து குதிச்சா அதுக்கு அவன் என்ன செய்வான்?”, என்று கேட்டார் சேதுபதி.
“என்னங்க அவன் பக்கம் நியாயம் இருக்குற மாதிரி பேசுறீங்க? அவன் பண்ணின ஏமாத்து வேலைக்கு நீங்களும் கூட்டா?”
“இந்த கூட்டு பச்சடின்னு பேசுற வேலை எல்லாம் என் கிட்ட வச்சிக்காத. பரம்பரை பரம்பரையா வீடு கட்டிக் கொடுக்குறது, நிலம் வாங்கி விக்குறதுன்னு பாத்துட்டு இருக்கோம். என் கிட்ட வாயைக் கொடுத்த வாழ வழி இல்லாம பண்ணிருவேன்”, என்று சேதுபதி அரட்டியதும் அவரை அதிர்ந்து போய் பார்த்தாள் வேணி.
ஆனாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “உங்க மகன் திருட்டு தனம் செஞ்சது சரின்னு சொல்றீங்களா?”, என்று கேட்டாள்.
“திருடங்க கிட்ட தானே திருட்டு தனத்தை காமிச்சிருக்கான். நல்லவங்க கிட்ட என் மகன் காட்டலையே? அவன் காட்டவும் மாட்டான். அக்கா மகனு கொஞ்சம் கூட மனசுல ஈரம் இல்லாம அவ சொத்தை அபகரிச்ச உன் புருசனுக்கும் உனக்கும் வெக்கமே இல்லையா? வெளிய போ முதல்ல. செக்யூரிட்டி இவங்களை கழுத்தை பிடிச்சு வெளிய தள்ளு”, என்று சேதுபதி சொல்ல வேறு வழியில்லாமல் அங்கிருந்து சென்றாள் வேணி. அவள் நினைத்து வந்தது வேறு. ஆனால் சேதுபதி இப்படி திமிராக பேசுவார் என்று அவள் எதிர் பார்க்கவே இல்லை. அதனால் பணம் கையை விட்டு சென்று விடும் என்ற கவலையில் வீட்டுக்கு திரும்பினாள்.
அவள் சென்றதும் அவர்களை நிமிர்ந்து பார்க்கவே ரேகாவால் முடியவில்லை. தான் வேறு ஒருவனை விரும்பியதாக அவர்கள் தன்னை தவறாக நினைத்து விடுவார்களோ என்று பயந்து போய் இருந்தாள்.
“என்னங்க நடக்குது இங்க? நம்ம விக்ரம் இப்படி எல்லாம் நம்மளை ஏமாத்துவானா? ஏம்மா ரேகா நீயும் எங்க கிட்ட நடிச்சிருக்க அப்படி தானே? உன்னை பெண்ணழைச்சிட்டு வரும் போதே உன் கிட்ட விக்ரம் உன்னை லவ் பண்ணுற கதையை சொன்னோம்ல? ஆனா நீ கமுக்கமா இருந்திருக்க? எங்க மகனை முந்தின நாள் வரைக்கும் பாக்காத நீ, உங்க அத்தைக் கிட்ட கல்யாணத்தை நிறுத்திருவேன்னு சொன்ன நீ, எதுக்கு விக்ரமைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட. எங்க பணத்துக்காகவா?”, என்று சாரதா கேட்டதும் விக்கித்துப் போனாள் ரேகா.
“அத்தை”, என்று அவள் அதிர்வாக அழைக்க “சாரதா என்ன பேச்சு பேசுற? உண்மை தெரியாம எதையும் பேசாத. விக்ரம் வரட்டும் எல்லாம் பேசலாம். நீ உள்ள வா”, என்று சொல்லி அவளை கைத்தாங்களாக அழைத்துச் சென்றார் சேதுபதி.
அவர்களையே பார்த்த படி நின்ற ரேகாவுக்கு சாரதா பேசிய வார்த்தைகளும் கஷ்டமாக இருந்தது. சேதுபதி பேசாமல் சென்றதும் கஷ்டமாக இருந்தது.
கண்களில் நீருடன் தன்னுடைய அறைக்கு சென்ற ரேகாவுக்கு இதற்கு மேல் யாரையும் பார்க்க முடியும் என்று தோன்ற வில்லை. இங்கு நடந்த விஷயங்களை கேட்டால் விக்ரம் என்ன நினைப்பான் என்றும் அவளால் அனுமானிக்க முடியவில்லை .
நான் கல்யாணாத்தை நிறுத்த நினைச்சேன்னு அவனுக்கு தெரிஞ்சதும் என்னை நல்லவன்னு நினைப்பானா? இல்லை நான் இன்னொருத்தனை விரும்பிருக்கேன்னு என்னை தப்பா பேசுவானா என்று குழப்பமாக இருந்தது.
இத்தனை நாள் அவளைக் காயப் படுத்திய வார்த்தைகள் எல்லாம் நினைவில் வந்து அவனும் தன்னை தவறாக தான் நினைப்பான் என்று எண்ணிய ரேகா அதற்கு மேல் அங்கே இருக்க முடியாமல் உடனே அங்கிருந்து கிளம்பி விட்டாள்.
குழப்பமாக பார்த்த செக்யூரிட்டி அவளை என்ன ஏது என்று கேட்காமல் கேட்டைத் திறந்து விட அங்கிருந்து வேகமாக நடந்த ரேகா ஒரு ஆட்டோ எதிரே வரவும் அதில் ஏறிக் கொண்டாள். பின் பஸ் ஸ்டாண்ட் சென்றவள் சென்னைக்கு பஸ் ஏறி விட்டாள். டிக்கட் எடுத்து விட்டு தளர்ந்து போய் அமர்ந்த ரேகாவுக்கு எதுவுமே தனக்கு நிரந்தரம் இல்லை என்று எண்ணி மனது வேதனை அடைந்தது.
இந்த இரண்டு நாட்கள் அவனுடன் வாழ்ந்த நினைவே போதும் என்று எண்ணி மனதை சமாதானப் படுத்தினாலும் இப்போது அவனது அருகாமை வேண்டும் போல இருந்தது ரேகாவுக்கு.
மஞ்சு குடும்பத்தை அனுப்பி வைத்து விட்டு வீட்டுக்கு வந்த விக்ரம் ஹாலில் யாரும் இல்லாததால் “அம்மாவும் அப்பாவும் தூங்குறாங்க போல? அப்ப நம்ம சிட்டு ரூம்ல தனியா தான் இருக்கும்”, என்று எண்ணி உல்லாசமாக அவர்களின் அறைக்கு சென்றான்.
அங்கே சென்றதும் அங்கிருந்த வெறுமை தான் அவன் முகத்தில் அறைந்தது.
ரேகா ஹேன்ட் பேக், போன் எதுவும் இல்லாததால் திகைத்தவன் “பங்ஷன் முடிஞ்சதும் கிளம்புறேன்னு சொன்னதுனால கிளம்பிட்டாளா? அப்ப இந்த ரெண்டு நாள் என் கூட வாழ்ந்தது எல்லாம் பொய்யா?”, என்று விரக்தியாக எண்ணினான்.
அவசரமாக சேதுபதி மற்றும் சாரதாவைத் தான் காணச் சென்றான். “அம்மா உங்க ஆசைப் பொண்ணு எங்க போனா? ஆளையே காணும்”, என்று தனது சோகத்தை மறைத்துக் கொண்டு கேட்டான் விக்ரம். அவனை முறைத்துப் பார்த்த சாரதா “அவ எனக்கு பொண்ணும் இல்லை. நீ எனக்கு மகனும் இல்லை”, என்று சொல்லி விட்டு அழுதாள்.
சாரதா பேசியதைக் கேட்டு அதிர்ந்து போனான் விக்ரம். அவனால் சாரதா அப்படி பேசியதை நம்பக் கூட முடியவில்லை. ஏனென்றால் சாரதாவுக்கு விக்ரம் என்றால் உயிர்.
மகனின் அதிர்ந்த தோற்றத்தைக் கண்ட சேதுபதி “சாரதா கோபத்துல நிதானம் இழக்காதேன்னு எத்தனை தடவை சொல்றேன்? அன்பு கட்டினாலும் அதிகமா காட்டுற? கோபத்தைக் காட்டினாலும் அதிகமா காட்டுற? இது தப்பு மா. அவன் முகமே செத்து போச்சு பாரு”, என்றார் சேதுபதி.
“நான் பேசினது தப்பு தான். ஆனா இவன் இப்படி பண்ணலாமாங்க? என்னால என் விக்ரம் இப்படி நம்மளை ஏமாத்திருப்பான்னு நம்பவே முடியலைங்க”, என்று அழுதாள் சாரதா.
“அதான், அவன் இங்க தானே இருக்கான். அவன் கிட்ட கேக்கலாம்”, என்று சொன்ன சேதுபதி “விக்ரம், ரேகாவை உனக்கு எப்படி தெரியும்? அவ மாமா கூட என்ன பஞ்சாயத்து? அதுவும் அவ்வளவு பணம் நீ எப்படி புரட்டிக் கொடுத்த? அவங்க அத்தை வந்து தப்பு தப்பா பேசிட்டு போறாங்க. அது மட்டுமில்லாம ரேகா உன்னை பாத்தது கூட கிடையாதாம்? அவ வேற யாரையோ விரும்பிருக்கான்னு வேற சொல்றாங்க. கல்யாணத்தை நிறுத்த தான் கிளம்பி வந்துருக்கா. ரேகாவும் அவங்க சொன்னதை மறுக்கலை. அதான் அம்மாவுக்கு ரொம்ப குழப்பம். முதல்ல என்னன்னு தெளிவா சொல்லு. அதுக்கு முன்னாடி ரேகாவையும் இங்க கூட்டிட்டு வா. நீ வந்த அப்புறம் அவ கிட்ட கேக்கலாம்னு தான் அவ கிட்ட எதையும் நாங்க கேக்கலை”, என்றார் சேதுபதி.
திருமணத்தை அவள் நிறுத்த எண்ணியிருக்கிறாள் என்ற செய்தி விக்ரமுக்கு அவ்வளவு நிம்மதியைக் கொடுத்தது. ஆனாலும் அவள் தன்னை விட்டு போனது அதே அளவு வலியையும் கொடுத்தது.
“அவ எப்படி என்னை விட்டு போகலாம்? என்ன நடந்துருந்தாலும் அவ இங்க இருந்துருக்கணும் தானே? இல்லை இப்படி நடந்துருச்சுன்னு ஒரு போனாவது பண்ணிருக்கணும். ஆனா அவ எதுவுமே செய்யலை. அப்ப அவ என் கூட வாழ்ந்ததுக்கு என்ன அர்த்தம்?”, என்று எண்ணி அவள் மேல் கோபமாக வந்தது விக்ரமுக்கு.