‘நாலு மாசமா எப்ப கேட்டாலும் நேரமில்ல.. வேலையிருக்குன்னு சொல்லிட்டு இப்போ எதுக்கு இத்தனை முறை போன் செய்யற.? நான் சூட்டிங்கில இருக்கேன்.. சென்னை வர நாளைக்கு மதியம் ஆகிடும்..” என்றான் கடுப்பாக.
‘சரி சூட்டிங் முடிஞ்சதும் சக்தி ஹாஸ்பிடலுக்கு வந்திடு மாமா..” என்றாள். பிறகுதான் அவளின் குரல் வெகுவாய் சோர்ந்திருந்ததை கவனித்தவன்.. ‘ப்ரியா.. காய்ச்சலா.? என்னாச்சி.? எதுக்கு ஹாஸ்பிட்டலுக்கு வர சொல்ற.?” என்றான் சற்றே பதட்டமாக.
‘பெயின் ரொம்ப அதிகமாயிருக்கு மாமா.. என்னால பேச முடியல.. நீ முடிஞ்சவரை சீக்கிரம் வரப்பாரு.. தயவு செய்து வீட்ல யாருக்கும் எதுவும் சொல்லாத..” என இணைப்பை துண்டித்திருந்தாள்.
மீண்டும் ப்ரியாவிற்கு அழைக்கவே சுவிட் ஆஃப் செய்திருந்தாள். அதிரூபனிற்கு இருப்பே கொள்ளவில்லை.. ஆக்சிடன்ட் ஏது ஆகியிருக்குமா.? கவனமாகத்தானே இருப்பாள் என சிந்தனையெல்லாம் ப்ரியாவின் மீதே இருந்தது. வீட்டிற்கு அழைத்து சொல்லலாம் என்றாலும் எதற்கு வேணாம் என்றாள் என பலமாய் யோசித்திருந்தான்.
பத்து மணி சூட்டிங்கிற்கு நாயகன் வந்ததே பத்தரை மணிக்குத்தான்.. அதிலேயே அதீத கடுப்பில் இருந்தான் அதிரூபன். இதில் நான்கைந்து முறை டேக் வாங்கவும்.. ‘சார்.. கொஞ்சம் சரியா நடிச்சி முடிக்க பாருங்க சார்..” என்றான் கோபத்தை உள்ளடக்கி.
ஒரு டூப் ஆர்ட்டிஸ்ட் எப்படி தன்னிடம் இப்படி பேசலாம் என நாயகன் எகிற.. அதில் வேறு நேரம் போனது. அதிரூபனிற்கு ப்ரியா மிக மிக முக்கியமானவள்.. இப்படி ஒரு நாளும் தன்னை அழைத்ததில்லையே என நினைத்திருந்தவனுக்கு தற்போது பயமும் தொற்றிக்கொள்ள எதையும் யோசிக்காமல் நாயகனிடம் கடுகடுத்தான்.
இயக்குனர் அதிரூபனிடம் சமாதானம் பேசவே.. ‘இன்னும் ஒரே ஒரு முறைதான் குதிப்பேன்.. அதுவும் சரிவரலன்னா இன்னொரு நாளைக்கு சூட் செய்துக்கலாம் சார்.. உடனே சென்னை போக வேண்டிய கட்டாயத்துல இருக்கேன்..” என்றான் கவலையாக.
நாயகனிடம்.. ‘தம்பி இப்பல்லாம் பெரிய பெரிய ஆர்டிஸ்ட்டுங்களே எல்லாரோடவும் தன்மையாவும் ஃபிரண்ட்லியாவும் பழகுறாங்க.. ரூபன் இந்த ஃபீல்டுக்கு வந்து ஒரு வருசம்தான் ஆகுது.. எழுபது படங்களுக்கு மேல டூப் போட்டுட்டார்.. அதோட ரூபன் இப்போ டூப் ஆர்ட்டிஸ்ட் மட்டும் கிடையாது.. இருபது படங்களுக்கு மேல பின்னனி குரல் கொடுத்திட்டிருக்கார்.. உங்களை விட அவர் பிஸியான ஆள்.. நீங்க இப்போதான் இரண்டாவது படம் செய்துட்டிருக்கிங்க.. இப்படி மத்தவங்களை குறைச்சி பேசுனிங்கனா ரொம்ப நாளைக்கு தாக்கு பிடிக்க முடியாது..
உங்க ஹைட்டுக்கும் பாடி ஃபிட்டிங்குக்கும் ரூபனைத் தவிர யார் டூப் போட்டாலும் சரி வராது.. இதோட நாலுமுறை பில்டிங்கில இருந்து குதிச்சிட்டார்.. சரியா ரியாக்ஷன் கொடுக்க பாருங்க.. ரூபன்கிட்ட பிரச்சனையாகிடுச்சினா நீங்களேதான் செய்ய வேண்டிவரும்..” என எடுத்துரைத்தார். ஒரு வழியாக நள்ளிரவு ஒரு மணிக்கு சூட்டிங் முடியவே அதிரூபன் சென்னை வர காலை ஏழு மணியாகியிருந்தது.
சகதியில் புரண்டெழுந்ததால் நேரே ரூமிற்கு சென்று குளித்தவன் சக்தி மருத்துவமணை விரைந்தான். ப்ரியாவின் பெயர் சொல்லி விசாரிக்க.. ‘இருபத்தி இரண்டாம் நம்பர் ரூம்ல இருக்காங்க..” என்கவே விரைந்தான் அந்த ரூமிற்கு.
உள்ளே சென்றவனிற்கு பேரதிர்ச்சி.. ‘ப்ரியா..” என்றவன் அவளையும் குழந்தையையும் மாறி மாறி பார்க்கவே.. ‘மாமா.. என் குழந்தையை விட்றமாட்டிங்களே..” என காதலன் ஏமாற்றியதை சொல்லி ‘இனி நான் உயிரோடு இருந்து என்ன லாபம்..” என கண்ணீர் வடித்தாள் பிரியா.
இவளின் அவசர புத்திக்கு அத்தனை கோபம் வந்த போதும் தற்போது ப்ரியாவும் குழந்தையும்தான் முக்கியம் என நினைத்தவன்.. ‘தற்கொலை அது இதுன்னு முட்டாள்தனம் செய்யாம இருந்தினா உன் குழந்தைக்கு நான் அப்பாவா இருப்பேன்.. அதைவிட்டு குழந்தையைதான் என்கிட்ட ஒப்படைச்சாச்சேன்னு தற்கொலை முயற்சியேது செய்த.. நீ செத்த பின்னாடி உன் குழந்தை ஹாஸ்டல்ல அநாதையாதான் வளரும்..“ என மிரட்டினான் அதிரூபன்.
‘நம்பினவன் ஏமாத்திட்டான்.. இனி இந்த உலகத்துல எனக்கென்ன வேலை.?” என கண்ணீர் விட்டாள் ப்ரியா.
‘அத்தையும் மாமாவும் கூடத்தான் உன்னை நம்பினாங்க.. ஆனா இப்படி குழந்தை பெத்து அவங்களுக்கு துரோகம் செய்துட்டதான.? அவன் செய்த துரோகத்தை மறக்க அதை விட பெரிய துரோகம் பெத்தவங்களுக்கு செய்வியா..?” என்றான் கோபமாக.
‘ம்.. அது கஷ்டம்தான்.. இப்போவாவது புரியுதா.? இந்த ஃபாரின் மாதிரி லிவிங் டு கெதர்லாம் நமக்கு செட் ஆகாதுன்னு.. அங்க இப்படி நடந்தா ஆணானாலும் பொண்ணானாலும் ஈசியா கடந்து போய்டுவாங்க.. நம்மளால முடியாது.
ஆறுமாசமா நீ ஊருக்கு போகாம இருக்கிறதுக்கே அத்தையும் மாமாவும் தவிச்சி போய்ட்டாங்க.. இதுல உனக்கெதாவதுன்னா அவங்களால தாங்க முடியாது ப்ரியா. அவன் போனா போய்ட்டு போறான்.. அவனுக்கொரு வாழ்கையிருக்க மாதிரி உனக்கும் எதாவது நல்ல வாழ்க்கை காத்திருக்கும்..
குழந்தையைப் பத்தி இனி யோசிக்காத.. இனி இவ என் குழந்தை.. பத்து நாள் கழிச்சி வீட்டுக்கு போலாம்.. இனி வேலைக்கு போக விரும்பமில்லன்னு மாமாகிட்ட சொல்லிடு.. உன் விருப்பத்துக்கு அங்க யாரும் தடைவிதிக்க போறதில்ல.. கொஞ்ச நாள் ரெஸ்ட் எடு.. உடலும் மனமும் தேறட்டும்.. அதுக்கப்புறம் என்ன செய்யலாம்னு யோசிப்போம்..” என திட்டியும் ஆறுதல் செய்தும் பத்து நாள் வரை மருத்துவமனையில் வைத்தே பார்த்துக்கொண்டான்.
பிறகு இருவரும் ஊருக்கு கிளம்பினர். ’ப்ரியா.. திரும்பவும் சொல்றேன்.. தப்பான முடிவுக்கு போனின்னா குழந்தையை அநாதை ஆஸ்ரமத்துல சேர்த்திடுவேன். ஊருக்கு கூட வரமுடியாத அளவுக்கு ஒர்க் டென்சன் அதிகம்.. என்னால வேலை செய்ய முடியாம ரிசைன் பண்ணிட்டன்னு மட்டும்தான் மாமாகிட்ட சொல்லனும்.. மத்தது அப்புறம் யோசிக்கலாம்..” என மீண்டும் அறிவுறுத்தி அனுப்பிவைத்து.. பிறந்து பத்து நாளேயான பச்சிளம் குழந்தையோடு தனது வீட்டிற்கு வந்தான் அதிரூபன்.
‘யார்டா இந்த குழந்தை.? எங்கையும் கிடந்ததுன்னு வீட்டுக்கு எடுத்துட்டு வந்துட்டியா.?” என பரிதவித்தார் கனகா.
‘இல்லம்மா.. பட்டு என் குழந்தை.. உங்க பேத்தி..” என்றான்.
‘என்னடா சொல்ற.? அச்சோ.. மோசம் போய்ட்டேனே.. ஏங்க.. இங்க வாங்களேன்.. உங்க மகன் என்னென்னவோ சொல்றான்..” என கண்ணீர் வடித்தார் கனகா.
கணேசன் வெளியே வர.. ‘இங்க பாருங்க.. இது இவன் குழந்தையாம்..” என்றார் தலையில் அடித்தபடி.
மனைவியின் செயலை தடுத்த கணேசன்.. ‘ஏய்.. அவன் சொன்னா நீ நம்பிடுவியா.? பிள்ள பெத்துக்கிற மூஞ்சை பாரு..” என கிண்டலாய் சொல்லி.. ‘தப்பா பிறந்த குழந்தைன்னு தெரியுது.. ஆனா அதை நீ தூக்கிட்டு வந்திருக்கன்னா நிச்சயம் நம்ம சொந்தத்துலதான் நடந்திருக்கனும்.. உண்மையை சொல்லு.. குழந்தை யாரோடது.?” என்றார் துளைக்கும் பார்வையோடு.
அதிரூபன்.. ‘என் குழந்தைதான்ப்பா..” என மீண்டும் சொல்ல.. தந்தை தன்னை கண்டுகொண்டார் என்ற பதட்டத்தில் இம்முறை குரல் இறங்கியிருந்தது.
‘ரூபா.. குழந்தை வளர்ப்புங்கிறது அவ்வளவு சாதாரணமில்ல.. குழந்தையைப் பார்த்தா பிறந்து ஒருவாரம்தான் ஆகிருக்கும்னு நல்லாவே தெரியுது.. நீ வந்து பத்து நிமிசம் ஆகுது.. இன்னும் இரண்டொரு நிமிசத்துக்குள்ள பசிக்கு அழும்.. அதுக்கு எப்படி பசியாத்தனும்னு கூட உனக்கு தெரியாது. எங்க தயவில்லாம உன்னால ஒன்னும் பண்ண முடியாது. ஒழுங்கா உண்மையை சொல்லு..” என்றார் மிரட்டலாக.
குழந்தை நெளிய ஆரம்பிக்கவும்.. ‘ப்ச் ப்பா.. என் குழந்தைதான்ப்பா.. வேலை செய்யிற இடத்துல..” என ஆரம்பிக்க.. கணேசன் ‘ரூபா..” என கத்தினார் கோபமாக.
அந்த நேரம் குழந்தை அழ ஆரம்பிக்கவும்.. ‘அம்மா..” என்றான் பரிதவிப்பாக.
‘நான் சொல்லாம கனகா குழந்தையை தொடக்கூட மாட்டா..“
குழந்தை நன்றாக அழ ஆரம்பிக்கவும்.. பதறிய அதிரூபனிற்கு கையிலிருந்த குழந்தையை எப்படி படுக்கவைக்க வேண்டுமெனக் கூட தெரியவில்லை. கையை அசைத்தால் குழந்தையின் தலை பிடிப்பின்றி சரிய.. ’ம்மா..” என்றான் கெஞ்சலாக.
குழந்தையருகே நெருங்கிய மனைவியை தன்னிடம் இழுத்தவர்.. ‘இந்த குழந்தை இவனுக்கு அவ்வளவு பர்சனல்ன்னா அவனே எல்லாம் பார்த்துக்கட்டும்.. நமக்கென்ன வந்தது.?” என தன்னோடே நிறுத்திக்கொண்டார் கணேசன்.
‘அப்பா..” என அலுத்துக்கொள்ள.. குழந்தை தற்போது பசிக்காக சற்று அதிகமாய் அழ ஆரம்பிக்க.. ‘ஓ.கே.. பட்டு என் குழந்தையில்லதான்.. ஆனா யார் குழந்தைன்னு தெரியாது.. நீங்க சொன்னதுபோல தப்பா பிறந்த குழந்தையாக் கூட இருக்கலாம்.. அதான் தனியா ரோட்ல கிடந்தது போல.. பார்த்ததும் மனசு கேட்கல.. தூக்கிட்டு வந்துட்டேன்.. ப்ளீஸ் நாம வளர்த்தலாம்ப்பா..” என்றான்.
மகன் பேச்சை சிறிதும் நம்பாத கணேசன்.. ‘நல்ல விசயம் செய்திருக்க.. குழந்தையை கொண்டுபோய் ஆஸ்ரமத்துல விட்டுடலாம் கிளம்பு..” என்றார்.
‘அப்பா.. எனக்கு பட்டுமாவை ரொம்ப பிடிச்சிருக்கு.. நாமளே வளர்த்தலாம்.. முதல்ல குழந்தை அழுகையை நிறுத்தனும்..” என்றான் தவிப்பாக.
‘கண்ட குழந்தையையும் வளர்த்துற அளவுக்கு உன்னைப்போல எங்களுக்கு பெரிய மனசு இல்லப்பா.. குழந்தை ஆஸ்ரமத்துல வளரதுதான் அதுக்கும் நல்லது.. நமக்கும் நல்லது..” என்றார் நல்லவிதமாகவே.
உறவுகளை எங்கே வைப்பான் மற்றவர்களை எங்கே வைப்பான் என மகனைப் பற்றி கணேசனிற்கு தெரியாதா என்ன.? நிச்சயம் இக்குழந்தை எங்கு சுற்றியாவது நம் குடும்பத்தை சேர்ந்ததாகத்தான் இருக்கும் என உறுதியாய் நம்பினார் கணேசன்.
குழந்தையை வளர்ப்பதை விட, தன் குழந்தையென சொல்வதைத்தான் கணேசனால் தாளமுடியவில்லை. நாளை இவனிற்கென ஒரு வாழ்வு வரும்போது எத்தனை கேள்விகள் எழும் என தந்தையாய் யோசித்தே.. குழந்தையின் அழுகையிலும் மனமிறங்காமல் மகனோடு மல்லுக்கு நின்றார்.
குழந்தையின் அழுகையில் மனம் கேளாமல் கிச்சனுள் நுழைந்த கனகா.. மிதமான சூட்டில் பாலை சூடேற்றி சிறிய ஸ்பூனோடு வந்தவர்.. ‘குழந்தை எங்கையோ வளரட்டும்.. இப்போ பசியாத்தலாம்..” என மகனின் கையிலிருந்து குழந்தையை வாங்கி கீழே அமர்ந்து மடியில் படுக்கவைத்து குட்டிக்கரண்டியால் சிறுதுளி பாலை வாய்க்குள் வைக்க.. குடிக்க தெரியாமல் பாலை வெளியனுப்பி கத்தியது குழந்தை.
பிறகு கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீர் கொடுத்து மீண்டும் பாலை கொடுக்க கத்தியபடியே கொஞ்சம் வெளியனுப்பி.. கொஞ்சம் பசியாறியது. மொத்தமாய் ஒரு சங்கடை பால் கூட குடித்திருக்காது. அதற்குள் குழந்தை பட்ட சிரமத்தையும்.. பசியாறிய பின்னே லாவகமாய் வாயை துடைத்துவிட்டு, பச்சிளம் குழந்தை லாவகமாய் கையாண்டு அன்னை டைப்பர் மாற்றுவதெல்லாம் பார்த்ததில் தனியொருவனாய் குழந்தை வளர்ப்பது பெரும் சிரமம் என உணர்ந்தான்.
மகனின் பார்வையறிந்தவராய்.. ‘குழந்தை யாருன்னு உன்ன கேட்டுத்தான் தெரிஞ்சிக்கனும்னு இல்ல ரூபா.. ஒரு டெஸ்ட் எடுத்தா போதும்.. ஆனா என்ன.? நீ யாருக்காக உன் குழந்தைன்னு சொல்லிக்கிறியோ அவங்க வெளிச்சத்துக்கு வருவாங்க.. அதுக்கப்புறம் இன்னும்தான் அசிங்கமாகும்..
அதோட சென்னைல இப்படி பச்ச குழந்தையை கட்டாயம் உன்னால தனியா வளர்த்த முடியாது.. உண்மையை சொன்னினா அடுத்ததா என்ன செய்யலாம்னு யோசிப்பேன்.. இல்ல நீ சென்னை கிளம்பினதும் குழந்தையை ஆஸ்ரமத்துல சேர்த்துடுவேன்..” என்றார் மிரட்டலாக.
எப்படியும் இவர்கள் தயவில்லாமல் குழந்தையை வளர்க்க முடியாதென்றும்.. அப்படியே பிடிவாதம் செய்து மறைத்தாலும் குழந்தையை அக்கறையாய் பார்த்து கொள்ளமாட்டார்கள் என்றும் தோன்றவே குழந்தை ப்ரியாவினுடையது என அனைத்தும் சொன்னான்.
கனகாவின் அண்ணனிற்குத்தான் கணேசனின் தங்கையை திருமணம் செய்திருந்தனர். இவர்களுக்கு பிறந்தவள்தான் ப்ரியா. சற்றும் நினைத்துப் பார்த்திராத நிகழ்வை ஏற்க முடியாமல் தவித்தனர் கனகாவும் கணேசனும்.
நீண்ட அமைதிக்கு பிறகு.. ‘ப்ரியா இப்படியாகிட்டான்னு உனக்கு முன்னமே தெரிஞ்சிருக்கும்தான.? நீயாவது எங்களுக்கு சொல்லியிருக்கலாமில்ல.? வாரவாரம் இரண்டு பேரும் பார்த்துக்கிறிங்கன்ற தைரியத்துலதான உங்கத்தை இருந்தாங்க..” என வேதனையடைந்தார் கணேசன்.
‘நான் அவளைப் பார்த்தே ஐஞ்ச மாசம் பக்கம் ஆகிடுச்சிமா.. நாலு மாசமா நானும் ரொம்ப பிஸி.. அப்படியிருந்தும் கொஞ்சம் ஃப்ரீ கிடைச்சாலும் பார்த்துட்டு வந்திடலாம்னு போன் செய்வேன்.. எப்போ போன் செய்தாலும் பிசியா இருக்கேன்.. இன்னொரு நாள் மீட் பண்ணலாம்னு என்னை அவாய்ட் பண்ணிட்டே இருந்தா..
எனக்கும் கோபம் வந்ததால அவளே கூப்பிடும்போது பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன்.. இப்படி விசயத்தை மறைக்கத்தான் சொல்லிருக்கான்னு நினைச்சே பார்க்கலம்மா..” என்றான் வேதனையாக. இரண்டு நாட்கள் குழப்பத்தோடும் வேதனையோடும் செல்ல.. ப்ரியாவை போய் பார்த்து வர கேட்டார் கனகா.
‘இப்போதைக்கு நீங்க போனா உண்மை தெரிஞ்சி வந்திருக்கிங்கன்னு புரிஞ்சிப்பாம்மா.. ஒரு மாசம்போல ஆகட்டும்.. அப்பவும் கூட குழந்தை விசயம் உங்களுக்கு தெரிஞ்சதா காட்டிக்க வேணாம்.. சமயம் வரும்போது எல்லாம் பார்த்துக்கலாம்..” என எடுத்துரைத்தான்.
‘காதலிச்சவன் ஏமாத்தினா என்ன ரூபா.. நீ..” என தயக்கத்தோடு நிறுத்தினார் கனகா.
‘அம்மா.. ப்ரியாவோட அப்படி எண்ணம் தோணினதே இல்லம்மா.. குழந்தைக்காக என்னவேணாலும் செய்யலாம்.. அவளை கல்யாணம் செய்துக்கிறதை தவிர.. ப்ரியாவும் இதுக்கு சம்மதிக்கமாட்டா.. என்கிட்ட கேட்டமாதிரி அவகிட்ட போய் கல்யாணத்துக்கு கேட்டுடாத.. ஏற்கனவே நொடிஞ்சிருக்கா.. இந்த மாதிரி நேரத்துல சின்னதா யாராவது தப்பு சொன்னாலும் செத்துருவாம்மா..” என்றான் வேதனையோடு.