அவர் அப்படிக் கேட்டதும் இது வரை நடந்த அனைத்தையும் அவர்களிடம் சொன்னான் விக்ரம். அவன் சொன்னது அனைத்தும் ஏற்றுக் கொள்ளும் படி இருந்ததால் சாரதா கூட அவனை மன்னித்தாள். ஆனால் அவன் ஏமாற்றிய கோபம் மட்டும் அவளுக்கு இருந்தது.
“சரி சரி இப்ப தான் எல்லாம் சரியாகிருச்சே. எங்க மருமகளைப் போய் கூட்டிட்டு வா”, என்றாள் சாரதா.
அம்மா தன்னிடம் பேசியதும் சாரதாவைப் பார்த்து புன்னகைத்தான் விக்ரம். அவன் சிரிப்பைக் கண்ட சாரதா “எனக்கு ரேகா மேல தான் கோபம் இல்லை. உன் மேல உள்ள கோபம் அப்படியே தான் இருக்கு. எதுக்கு நீ எங்க கிட்ட இவ்வளவு பொய் சொல்லணும்? எனக்கு ரேகாவை பிடிச்சிருக்குன்னு சொன்னப்ப நாங்க யாருமே உனக்கு மறுப்பு சொல்லலையே? சந்தோஷமா தானே சரின்னு சொன்னோம். அப்புறம் எதுக்கு எங்க கிட்ட உண்மையை மறைச்ச? நான் வேற கோபத்துல ரேகாவை தப்பா நினைச்சு திட்டிட்டேன். பாவம் அதான் வீட்ல இருந்து போயிட்டா போல? அவளைக் கூட்டிட்டு வா டா”, என்றாள் சாரதா.
“சரி மா நான் இப்ப கிளம்புறேன்”, என்று விக்ரம் சொல்ல “இன்னைக்கு வேண்டாம் விக்ரம். நாளைக்கு கிளம்பி போ. அப்படியே அவளை வேலையை விடச் சொல்லி எழுதிக் கொடுத்துட்டு அவ ஹாஸ்டல் எல்லாம் ஒரெடியா காலி பண்ணிட்டு வந்துருங்க. முதல்ல இப்ப அவளுக்கு கால் பண்ணி பேசு”, என்று சேதுபதி சொன்னதும் சரி என்றான் விக்ரம்.
பின் தன்னுடைய அறைக்கு வந்த விக்ரம் அவளை போனில் அழைக்க அவனிடம் இப்போது பேசினால் பஸ்ஸில் வைத்து அழுது விடுவோம், அப்படி அழுதால் அனைவரின் கவனமும் தன் மீது தான் விழும் என்று எண்ணி அவன் போனை ரேகா எடுக்கவே வில்லை.
ஆனால் விக்ரமுக்கோ அவள் வேண்டும் என்றும் அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இருந்தது. கூடவே அவனது கோபமும் அவனுடனே இருந்தது. அடுத்த நாள் விடிந்ததும் சாரதா மற்றும் சேதுபதியிடம் சொல்லி விட்டு கிளம்பி விட்டான். போகும் போது அவளை போனில் அழைக்கலாமா என்று எண்ணினான். பின் நேரிலே பேசலாம் என்று எண்ணிக் கொண்டான்.
அவளை காணும் வேட்கை நிமிடத்துக்கு நிமிடம் அதிகமாகிக் கொண்டே சென்றது. அவளுடைய அலுவலகம் நோக்கி காரை வேகமாக செலுத்தினான்.
ஆபீஸ் வந்ததும் அவளைப் பார்க்க அனுமதி கேட்டான். அவர்கள் வெயிட் பண்ணச் சொன்னதும் வெளியே வந்து விட்டான்.
“ரேகா, கால் பார் யு. ரிசப்சன்ல இருந்து கூப்பிட்டாங்க. உங்களைப் பாக்க உங்க ஹஸ்பண்ட் வந்திருக்காங்களாம். இப்ப தான் புராஜெக்ட் முடிஞ்சிருச்சே. ஒன் வீக் லீவ் வேணா எடுத்துக்கோங்க”, என்று சொல்லிக் விட்டுப் போனார் புராஜெக்ட் மேனேஜர்.
“விக்ரமா வந்திருப்பது? என்னைப் பாக்கவா வந்திருக்கான்? எதுக்கு வந்தான்? வேணி அத்தை பேசினதை எல்லாரும் அவன் கிட்ட சொல்லிருப்பாங்க. அப்ப நான் இன்னொருத்தனை லவ் பண்ணினேன்னு சொல்லி தப்பா பேச வந்திருக்கானா? கடவுளே அப்படி பேசினால் என்னால தாங்க முடியுமா? பேசாம அவனை பாக்காம இருந்துறலாமா? சே சே, அது மரியாதையா இருக்காது”, என்று எண்ணிக் கொண்டு கீழே சென்றாள். போகும் போது நெஞ்சம் எல்லாம் தடதடத்தது.
கூடவே அவனைக் காணும் ஆசையும் அதிகமாக இருந்தது. இப்போதிருக்கும் மனநிலையில் அவன் கைகளுக்குள் சரண் புகும் வேகம் இருந்தது. ஆனால் அவன் கட்டாயம் தன்னை உதறித் தள்ளுவான் என்று எண்ணிக் கொண்டே சென்றாள். ஒரு மரத்தடியில் காரில் சாய்ந்து அழகாக நின்றிருந்தான் விக்ரம். எப்போதும் அவன் நிற்கும் அந்த தோற்றம் அவளுக்கு பிடிக்கும்.
அவனைக் கண்டதும் அவள் கண்கள் அவனையே தான் ரசித்த படியே இருந்தது. அவனும் அவளைத் தான் பார்த்தான். வெகு நாட்கள் பிரிந்திருந்தது போலவே இருவருக்கும் தோன்றியது. அவளை இழுத்து அனைத்து அவள் இதழ்களைச் சுவைக்க ஆசை எழுந்தாலும் இருக்கும் சூழ்நிலையை உணர்ந்து தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டான் விக்ரம். கூடவே அவள் வீட்டில் இருந்து கிளம்பியதால் அவள் மேல் அவனுக்கு கோபமும் இருந்தது.
அது மட்டுமில்லாமல் அவனுக்கு அவளிடம் நிறைய பேச வேண்டும். அவனுடைய மனதில் இருப்பதைச் சொல்ல வேண்டும். அதற்கும் மேல் அவனுடைய அதிகப் படியான பேச்சுக்காக அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆனால் போது இடத்தில் எதுவும் செய்ய முடியாததால் அமைதியாக நின்றான். அவன் அருகே வந்து அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் ரேகா.
“ஆஃபிஸ்ல வேலை வேண்டாம்னு எழுதிக் கொடுத்துட்டு வா. முடியாதுன்னு சொன்னாங்கன்னா எத்தனை மாச சம்பளம் கட்டணும்னு கேட்டு கட்டிரு. இந்தா என்னோட கார்ட். உன்னோட பிறந்த வருஷம் தான் பாஸ் வேர்ட்”, என்று சொல்லி கார்டை நீட்டினான் விக்ரம். அவன் புன்னகையுடன் சொல்லியிருந்தால் சந்தோஷப் பட்டிருப்பாள்.
ஆனால் அவன் இறுக்கமான குரலில் சொன்னதும் “கண்டிப்பா திட்ட தான் வந்துருக்கான். இதுல வேலையை விட்டுட்டு இவன் கிட்ட திட்டு வாங்கணுமா?”, என்று எண்ணிக் கொண்டு “எதுக்கு அதெல்லாம்? என்ன விஷயம், இங்கயே சொல்லுங்க”, என்றாள் ரேகா.
“இப்ப வேலையை விட வேண்டாம். அதை அப்புறம் பாத்துக்கலாம். இப்ப பெர்மிசன் மட்டும் கேக்குறேன்’, என்று சொல்லி உள்ளே சென்றவள் ஐந்து நிமிடத்தில் வெளியே வந்தாள்.
“கார்ல ஏறு ரேகா. உன் கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்”, என்றான் விக்ரம்.
“அதோ ரெஸ்டாரண்ட் இருக்கு அங்க பேசலாமா?”, என்று தயங்கிய படியே கேட்டாள் அவள். ஏனென்றால் அவனிடம் திட்டு வாங்க அவளுக்கு மனதே இல்லை. எதையாவது சொல்லிக் காட்டி விடுவானோ என்று பயந்து தான் அவனுடன் செல்வதைத் தவிர்த்தாள்.
“எங்க பேசணும்னு நான் முடிவு பண்ணிக்கிறேன். இப்ப என் கூட நீ வரப் போறியா இல்லையா?”, என்று சற்று எரிச்சலுடன் கேட்டான் விக்ரம்.
“சரி வரேன். ஆனா நாம இப்ப எங்க போறோம்?”, என்று கேட்டுக் கொண்டே காரில் ஏறினாள். மறுபக்கம் ஏறி அமர்ந்தவன் “ஏன் சொன்னா தான் என் கூட வருவியா? முதல் நாள் என் கூட ஜீப்ல வரும் போது நீ இவ்வளவு கேள்வி கேக்கலையே?”, என்றான்.
“ஆரம்பிச்சிட்டானா? இவனுக்கு எப்பவும் என்னைக் குத்திக் காட்டி பேசுறது தான் வேலையா? இவன் கூட வாழ்ந்த பிறகும் இவன் என்னை புரிஞ்சிக்கலையா?”, என்று எண்ணிக் கொண்டு அவனை அடி பட்ட பார்வை பார்த்தாள்.
அவள் பார்வையில் என்ன உணர்ந்தானோ காரை ஸ்டார்ட் செய்யாமல் அவளை இழுத்து அணைத்தவன் அவள் இதழ்களைச் சிறை செய்தான்.
அவனுடைய இந்த செய்கையில் பிரம்மித்துப் போனாள். அவள் உதடுகளில் இருந்து விலகியவன் அவள் காதில் முத்தமிட்டுவிட்டு “ஐ லவ் யு ரேகா”, என்றான்.
அந்த வார்த்தை அவளுக்கு உயிர் வரை சிலிர்த்தது. இதை விட அவளுக்கு வேறு என்ன வேண்டுமாம்?
அவள் அவனை ஆர்வமாக பார்க்க “என்ன டா?”, என்று கேட்டான்.
“என் மேல உங்களுக்கு கோபம் இல்லையா? என்னை நீங்க திட்ட வரலையா? உங்களுக்கு என் மேல நம்பிக்கை இருக்கா?”
“கோபம் தான். எதுக்கு வீட்ல இருந்து என் கிட்ட சொல்லாம வந்த? அதுல பயங்கர கோபமா இருக்கேன். ஆனா உன்னை நம்பாம வேற யாரை நம்புவேன் சொல்லு”
“விக்ரம்”, என்று சொன்னவளின் கண்கள் கலங்கியது.
“என்ன இது சின்ன குழந்தை மாதிரி கண்ணு கலங்கிட்டு இருக்க?”, என்று சொல்லி அவள் கண்ணீரை தன்னுடைய விரலால் துடைத்தான்.
“எனக்கு எல்லாமே கனவு மாதிரி இருக்கு. நீங்க நிஜமாவே என்னை திட்ட வரலையா? அத்தை சொன்னதை வச்சு நான் வேற ஒருத்தனை லவ் பண்ணிருக்கேனு திட்ட வந்துருக்கீங்கன்னு நினைச்சேன்”
“அவங்க சொன்ன நீ லவ் பண்ண ஆள் நான் தான்னு எனக்கு தெரியும்”
“விக்ரம்”, என்று கேவிய படியே அவன் தோள் சாய்ந்தாள்.
அவளை ஆதரவாக அனைத்துக் கொண்டவன் “சாரி ரேகா, உன் கிட்ட நிறைய பேசணும். ஒரு பத்து நிமிஷம் எனக்கு டைம் கொடு. நாம பேசலாம். இங்க வச்சு எதுவும் பேச முடியாது”, என்று சொன்னதும் அவனை விட்டு விலகி அமர்ந்தாள். கார் அங்கிருந்து கிளம்பியது.
எங்கே போகிறோம் என்று கேட்காமல் அவன் தோளில் சாய்ந்த வாறே சென்றாள் ரேகா. அவன் தன்னை புரிந்து கொண்டதே அவளுக்கு போதுமானதாக இருந்தது.
ஒரு பெரிய ஹோட்டல் முன்பு காரை நிறுத்தியதும் அந்த இடத்தைப் பார்த்தவள் “பேசணும்னு சொல்லி சாப்பிடக் கூட்டிட்டு வந்திருக்கான். மணி பதினோன்னு தானே ஆகுது? இன்னும் லன்ச் டைம் கூட ஸ்டார்ட் ஆகலையே?”, என்று எண்ணினாலும் அவனிடம் அவள் எதுவுமே கேட்கவில்லை.
சாப்பிட அழைத்துச் செல்வான் என்று அவள் எண்ணியிருக்க அவனோ ரிசப்சனில் “ரூம் இருக்கா?”, என்று கேட்டுக் கொண்டிருந்தான். அவனை அவள் குழப்பமாக பார்க்க அவனோ அவளைக் கண்டு அழகாக கண் சிமிட்டினான். அதில் அவள் முகம் சிவந்து விட்டது. கூடவே அவன் எதற்காக ரூம் கேட்கிறான் என்று புரிந்து குப்பென்று வியர்த்துப் போனது.
“அடப்பாவி, இவன் ஏன் இப்படி பண்ணுறான்?”, என்று அவனைத் திட்ட அவள் வாயடுக்க “ரூம் கிடச்சிருச்சு வா ரேகா”, என்று சொல்லி முன்னே நடந்தான்.
அவனுடன் நடந்து கொண்டே “விக்ரம் இப்ப எதுக்கு ரூம்? இதெல்லாம் வேண்டாம். நாம வேற எங்கயாவது போகலாம். பிளீஸ்”, என்று சிணுங்களாக சொன்னாள்.
“உன் முகம் பிரகாசமா மாறினதை வச்சு எதுக்கு ரூம்னு புரிஞ்சிருச்சுன்னு நினைச்சேன். ஆனா உனக்கு புரியலையா? ரெண்டு நிமிஷம் இரு, புரிய வச்சிறேன்”, என்று சொல்லி சிரித்தான் விக்ரம்.
“என்ன.. என்ன புரியனும்? வாங்க, நாம காருக்கு கிளம்பலாம்”, என்று தடுமாற்றமாக சொன்னாள்.
“ஏய் உன் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசணும் டி. உன் கிட்ட என் மனசுல உள்ளதைச் சொல்லும் போது யாரோட தொந்தரவும் இருக்க கூடாது. அதுக்கு தான் இந்த ரூம். நீ வேற எதையாவது கற்பனை பண்ணாத”, என்று சொல்லி அவன் சிரிக்க அவனை நம்பாத பார்வை பார்த்தாள் ரேகா. அவள் தோள் மேல் கை போட்டு அழைத்துச் சென்றான்.
அறைக்குள் நுழையும் போது ரேகா தேகம் நடுங்க ஆரம்பித்தது. அவன் என்ன தான் பேச வந்திருக்கிறோம் என்று சொன்னாலும் அவன் முகம் அவளுக்கு வேறு கதையை தான் சொன்னது. இருவரும் உள்ளே சென்றதும் கதவை தாழிட்ட விக்ரம் அடுத்த நொடி காற்று கூட அவர்களுக்கு இடையில் புக முடியாத படி அவளை இறுக அணைத்தான்.
“இது தான் நீங்க பேசுற லட்சணமா? நினைச்சேன், நீங்க இப்படி தான் செய்வீங்கன்னு”, என்று அவன் கரங்களுக்குள் இருந்தவாறே முணுமுணுத்தாள் ரேகா .
“பொண்டாட்டிக் கிட்ட இப்படி தான் டி பேசனும். இதை பப்ளிக்ல பேச முடியுமா?”, என்று கேட்டவனின் உதடுகள் அவளுடைய காது மடலில் ஊர்வலம் போனது.
“பேசணும்னு சொன்னீங்கல்ல? அப்ப பேசுங்க”, என்று சொல்லிக் கொண்டே அவன் கைக்குள் இருந்து அவள் விலக முயல அவன் அவளை விடவில்லை.
அவனுடைய இதழ்கள் தாகத்துடன் அவளுடைய இதழ்களை தஞ்சம் அடைந்தது. தாகத்தை தணிக்கும் அவனுடைய இதழ்களின் படையெடுப்பைத் தாங்க முடியாமல் அவன் கைக்குள் சரணடைந்தாள் ரேகா. அவன் கரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவளை ஆக்ரமிக்க ஆரம்பித்திருந்தது. ரேகாவுக்கும் பேச வேண்டியது இருக்கிறது என்று மறந்து தான் போனது.
திருமணத்திற்கு முன் ஹோட்டலில் வைத்தே அவளை அதிரடியாக சிறை செய்தவன் இப்போது மனைவியான பின்பு அவள் காதலையும் உணர்ந்த பிறகு சும்மா இருப்பானா?
அவன் கொடுத்த முத்தத்தில் அவள் தான் மூச்சுத் திணறி போனாள். அவன் கரங்கள் அவளை முழுதாக உணர முயன்று கொண்டிருந்தது.