‘உங்க தாத்தா வந்தார்னா அவருக்கு என்ன பதில்டா சொல்றது.? ப்ரியாவை உனக்குத்தான் கட்டி வைக்கனும்னு சொல்லிட்டிருக்கார்.. அதைகூட எப்படியோ ஒன்னு சமாளிச்சிடலாம்.. ஆனா இப்படி குழந்தை வளர்த்துறதெல்லாம் அவர் ஏத்துக்கவே மாட்டார்.. உண்மையை சொல்லாம எப்படிடா..” என தவித்தார் கணேசன்.
‘அவர்கிட்ட சொன்னா நிச்சயம் அத்த மாமாக்கு சொல்லாம இருக்கமாட்டார்ப்பா.. கொஞ்ச நாள் எதாவது சொல்லி சமாளிக்கலாம்.. சீக்கிரம் எதாவது தீர்வு கண்டுபிடிக்கிறேன்..” என்றான் அதிரூபன்.
மாதத்திற்கு ஒருமுறை மகளின் வீட்டிற்கு செல்லும் மாரியப்பன் ஒருவாரம் தங்கியிருந்துதான் இங்கு வருவார் என்பதால்.. ‘தாத்தா எப்பம்மா அத்த வீட்டுக்கு போனார்..?” என்றான்.
‘நீ வர ரெண்டு நாள் முன்னதான் போனார்.. அதுவும் ப்ரியா ஊருக்கு வந்தே ஏழுமாசமாச்சி.. அப்படியென்ன வேலை.? சென்னை போய் பார்த்துட்டு வர சொல்லி உங்க அத்த மாமாவை திட்டுறதுக்காகவே போனார்..” என்றார் கனகா.
இவர்கள் பேசிக்கொண்டிருக்க.. கணேசனிற்கு அழைப்பு வரவும்.. பேசி முடித்தவர்.. ‘ப்ரியா வந்துட்டான்னு நமக்கு சொல்றதுக்காக அப்பாதான் பேசினார்.. பத்து நாள் பேத்தியோட அங்கையே இருந்துட்டு வராராம்..” என்றார் கணேசன்.
சற்றே நிம்மதி வரப்பெற்றாலும்.. ‘பத்து நாள் கழிச்சி மாமா வந்ததும் குழந்தையைப் பத்திதான் கேப்பார்.. “ எனப் புலம்பினார் கனகா.
‘இப்போதைக்கு ப்ரியா கல்யாணத்துக்கெல்லாம் சம்மதிக்க மாட்டாப்பா.. அப்படியே வேற ஒரு கல்யாணம் செய்து வச்சாலும் இந்த குழந்தையை ஏத்துக்க மாட்டாங்க.. நம்ம ரத்தபந்தம் இன்னொருத்தன் வீட்ல வேண்டா வெறுப்பா வளர்ந்தா என்னால நிம்மதியா இருக்க முடியாது.. எப்படின்னாலும் இந்த குழந்தைக்கு இனி நான்தான் அப்பா.. இதுதான் இவ வீடு..” என்றான் முடிவாக.
வளர்ப்பு மகள் என்றில்லாமல் வளர்த்தால் மகனின் பெயர் கெடும் என்ற வேதனையும்.. ப்ரியாவின் உண்மை மறைத்து இன்னொரு வாழ்க்கைக்கு எப்படி உட்படுத்துவது.? அப்படியேயாகினும் அது அவளின் கணவனிற்கு இழைக்கும் பெரும் துரோகம் என்ற வேதனையும்.. மகளின் செயல் தெரிய வந்தால் அண்ணின் குடும்பத்திற்கு எத்தனை அவமானம் என்ற வேதனையும் என பெரும் துயரில் இருந்தார்கள் கணசேனும் கனகாவும்.
இப்படியொரு அவமானத்தை தேடித்தந்த ப்ரியாவின்மேல் அளவிற்கதிகமான கோபம் இருந்த போதும்.. ‘பச்ச உடம்புக்காரிடா.. வீட்டுக்கு தெரிஞ்சாதான அவளை சரியா கவனிப்பாங்க..” என பரிதவித்தார் கனகா.
‘அதெல்லாம் ப்ரியாவே பார்த்துப்பா.. உடம்பு சரியில்ல.. டாக்டர் நல்லா ரெஸ்ட் எடுக்க சொல்லியிருக்காங்கன்னு அத்தை மாமாகிட்ட சொல்ல சொல்லியிருக்கேன்.. என் பேச்சை மீறாத அளவுக்கு மிரட்டியும் இருக்கேன்..” என்றான் நம்பிக்கையாக.
ஆனால் அனைவரின் நம்பிக்கையையும் பொய்யாக்கினாள் ப்ரியா. பச்சிளங்குழந்தையின் பசியாற்றவேண்டிய உணவு அவளின் உடையை நனைக்க.. குழந்தைக்கு பசிக்குமே என துடித்து போனாள். குழந்தைக்கு பசியாற்றாமல் இருக்கவே காய்ச்சல் வந்திருந்தது.
சாப்பிட வா என எத்தனை அழைத்தும் தனதறையை விட்டு வெளிவரவில்லை ப்ரியா. தன்மீது அடிக்கும் தாய்பால் வாடையையும் காய்ச்சலையும் வைத்து அன்னை சுலபமாய் கண்டுபிடித்திடுவார்.. தன்னிலை தந்தைக்கு தெரிந்தால் மொத்தமாய் மனமுடைந்திடுவார் என பல யோசனைகள் ஓடியது ப்ரியாவினுள்.
வேலையை விட்டுவிட்டேன் என்றதும் தன்னை திருமணம் செய்துகொள்ள வீட்டில் வற்புறுத்துவார்கள்.. தன்னால் அது முடியவே முடியாது.. திருமணம் வேணாம் என எத்தனை நாள்தான் தள்ளிபோட முடியும்.? தன் வாழ்வை சீர் செய்ய ரூபனும் குழந்தையை வைத்து மிரட்டுவான்.. என தீர்க்கமான முடிவிற்கு வந்தவள்.. டெலிவரிக்கு முன்பே வாங்கி வைத்திருந்த விஷத்தை கண்ணீரோடு குடித்தாள்.
‘பெரும் சுமையை உங்களுக்கு கொடுத்துட்டு போறேன்.. என்னை மன்னிச்சிடு மாமா.. மிஸ் யூ மாமா.. மிஸ் மை பேபி.. மிஸ் யு ஆல்..” என அதிரூபனிற்கு குறுஞ்செய்தி அனுப்பினாள். கால் மணிநேரம் ஆனபின்பும் அவன் செய்தியை பார்த்தற்கான அடையாளம் வரவில்லை. ராதா வேறு மகளை சாப்பிட வைக்க கதவை தட்டிக்கொண்டே இருந்தார்.. ‘வரேன் வரேன்..” என்றவள் உடல் உபாதை ஏற்பட ஆரம்பித்த பிறகுதான் கதவைத் திறந்தாள்.
‘என்ன ப்ரியா இப்படி அணலா கொதிக்குது.?” என ராதா பதற.. அன்னையிடம் அனைத்தும் சொல்லி கண்மூடினாள். ஒவ்வொரு வார்த்தைக்கும் மாமாவை தப்பா நினைச்சிடாதிங்க.. அவருக்கும் குழந்தை பிறந்த பிறகுதான் தெரியும் என அத்தனை முறை சொன்னாள் பாசத்தோடு.
எதோ திகில் கதை கேட்பதுபோல் கேட்டுக்கொண்டிருந்த ராதாவிற்கு மகள் விஷமருந்தியது தெரியாமல் போகவே.. ‘என்னங்க..” என கணவனை அழைத்தார் கண்ணீரோடு.
பாலன் வரவும் மகள் சொன்னதை கணவனிடம் சொல்ல.. ‘அவளுக்கு விஷம் கொடுத்துட்டு நானும் செத்து தொலையறேன்..” என பாலன் வேதனையோடும் கோபத்தோடும் சொல்ல.. அந்த பாவத்தை நீங்க செய்ய வேணாம்ப்பா என கலங்கினாள் கண்மூடிய நிலையிலேயே.
இங்கே தற்போதுதான் ப்ரியா அனுப்பிய குறுஞ்செய்தியை பார்த்து பதறியவனாய் அவளிற்கு அழைக்க.. ரூபன்தான் அழைப்பான் என புரிந்தாலும் கண்ணை திறக்க முடியவில்லை ப்ரியாவால்.
அத்தைக்கு அழைத்தான். ராதா ஏற்கவும்.. ‘அத்த.. ப்ரியா எதோ தப்பான முடிவுக்கு போய்ட்டான்னு நினைக்கிறேன்.. அவ என்ன செய்துட்டிருக்கான்னு பாருங்க..” என்றான் பதட்டமாக.
‘நல்லா பேசினா..” என்றதில் சந்தோசமடைந்தாலும் காய்ச்சல் என்றதால்.. ‘ஹாஸ்பிட்டல்க்கு கூட்டிட்டு போங்க.. நான் வந்துட்டே இருக்கேன்..” என்றான் அவசரத்தோடு.
பிறகுதான் மகளை நெருங்கி.. ‘ப்ரியா எழுந்துரு ஹாஸ்பிட்டல் போலாம்..” என தலையை உயர்த்த அது பலனின்றி சரிந்தது. முடித்துக்கொண்டாள் தன்னை.
‘ப்ரியா.. ப்ரியா.. என்ன பண்ணுதுடி.? இப்போ பேசினதான.? எழுந்துரு ஹாஸ்பிட்டல் போலாம்..” என்றார் சற்று பதட்டத்தோடு.
சிறு அசைவுமில்லை அவளிடம். ‘அச்சோ.. நான் என்ன பண்ணுவேன்..” என தலையில் அடித்துக்கொண்டார் ராதா.
ப்ரியாவின் தவறான நடத்தை தற்போது மரணம் என அடுத்தடுத்த இரு நிகழ்வையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் தடுமாறிய பாலன்.. மகளிற்கு அதிகப்படியான சுதந்திரம் கொடுத்திட்டோமா.? என நொந்துபோனார். எதுவாகினும் எல்லாம் கை மீறிவிட்டது.. ராதா கத்திய கத்தலில் அருகிருப்பவர்கள் வந்திட.. அனைவருக்கும் விஷக்காய்ச்சலால் மரணித்ததாக சொல்லியிருந்தனர்.
ப்ரியா அனைவரிடமும் கபடமின்றி கலகலப்பாக பழகுபவள் ஆதலால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை.. இரண்டு மணிநேரத்திற்குள்ளாகவே ப்ரியாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
ராதா குழந்தையை கொடுக்குமாறு கேட்டார். ப்ரியாவின் அண்ணன் சுதாகரன் குழந்தையை தான் வளர்த்துக்கொள்வதாக கேட்டான்.. ‘குழந்தையை நான் வளர்த்தா என்னை அப்பான்னு கூப்பிட வைப்பேன்.. ஆனா உன்னால அது முடியாது.. அதோடு குழந்தையை நீ வளர்த்தா ப்ரியா கல்யாணமாகாம குழந்தை பெத்தது ஊரெல்லாம் தெரிந்து இன்னும்தான் தப்பா பேசுவாங்க..” என குழந்தைதயை யார் கேட்டும் ரூபன் கொடுக்க மறுத்தான்.
குழந்தை விசயம் வெளியே தெரியக்கூடாது.. என்னைக்கும் பட்டுமாதான் என் முதல் குழந்தை. குழந்தையை கைவிடமாட்டன்னு என்னை நம்பித்தான் ப்ரியா விசத்தை குடிச்சிருப்பா. அவ நம்பிக்யை என் உயிர் இருக்கும்வரை பொய்யாக்க மாட்டேன். அவ குழந்தை அப்பாம்மா இல்லாம வளரக்கூடாது.. என் பேச்சை மீறி குழந்தை விசயம் வெளில தெரிஞ்சது காலம் பூரா கல்யாணம் செய்துக்காம பட்டுமாவே போதும்னு இருந்திடுவேன்..” என்றான் உறுதியோடு.
அத்தை பொண்ணு என்ற எண்ணமெல்லாம் ப்ரியாவிடம் எப்பொழுதும் ரூபனிற்கு இருந்ததில்லை. ப்ரியாவும் அதிரூபனும் சிறு வயதுமுதல் நெருங்கிய நண்பர்கள் ஆதலால் ப்ரியா விசயத்தில் ரூபன் சொன்னதை செய்வான் என்ற பயம் வர ரூபன் சொன்னது போலவே செய்தனர்.
ப்ரியா இறந்த முப்பதாவது நாளே தனக்கு பெண்பார்க்க சொன்னான் அதிரூபன். இதற்கும் அப்பொழுது இருபத்தி ஐந்து வயதுதான்.. ரூபனின் எண்ணமெல்லாம் குழந்தைக்கு விபரம் வரும்முன் அவளிற்கு அம்மாவை கொண்டுவர வேண்டும். அப்பொழுதுதான் தன் அன்னை என்ற பிணைப்பு குழந்தைக்கு வரும் என நினைத்தான். ஆனால் பத்து மாதமாகியும் இன்னும் பெண்தான் அமையவில்லை.
— —– —– —–
கடவுளை வணங்கி வெளியே வந்தவன் தன் மகளின் முயற்சியை அதிசயித்து பார்த்திருந்தான். முதன்முதலாய் தானே எழுந்து நின்று ஓரடி எடுத்து வைத்த குழந்தை அடுத்த அடி எடுத்து வைக்கும் முயற்சியில் தோல்வியடைந்து விழப்பார்;க்க.. அள்ளி அணைத்துக்கொண்டான் அதிரூபன்.
‘ப்பா..” என அதிரூபனிற்கு முத்தமிட்ட குழந்தை மீண்டும் கீழிறங்க முயற்சிக்க.. ‘கீழ இறங்கனுமா..” என இறக்கிவிட்டவன்.. ‘அம்மா பட்டு நடக்க டிரை பண்றா..” என்றான் சந்தோசமாக.
‘ம்..ம்.. அது இரண்டு நாளா முயற்சி செய்துட்டிருக்கா.. இரண்டெட்டு வச்சதும் விழுந்துடறா.. இவளை பார்க்கவே சரியா இருக்கு..” என அலுத்தபடி மகனிற்கு டிபன் எடுத்து வர என சமையலறை சென்றார்.
நான் இல்லாத நேரம் குழந்தையை அத்தனை அன்போடும் அக்கறையோடும் பார்த்துக்கிறது.. என் முன்ன மட்டும் என்னவோ எல்லாம் எனக்காகத்தான்ற மாதிரி அலுத்துக்கிறது என நினைத்தவன்.. ‘ஏம்மா.. நானா கல்யாணம் வேணாங்கிறேன்..? எனக்கேத்த பொண்ணு அமையமாட்டுது.. நான் என்ன செய்ய.?” என்றான் சலிப்பாக.
‘பொய் சொன்னா எப்படி பொண்ணு அமையும்.?” என ஆதங்கத்தோடு டிபனை வைத்தார் கனகா.
‘ம்மா.. பட்டு என்னோட நிஜம்.. பொய்யில்ல.. குழந்தையோட இருக்கிற ஆம்பிளைங்க யாரும் கல்யாணம் செய்துக்கிறதில்லையா.?”என கடுகடுத்தவன்..
‘என் பட்டுவ ஏத்துக்கிற பொண்ணு எங்கையாவது இருப்பா.. கூடிய சீக்கிரம் என் கண்ல படுவா..” என நம்பிக்கையோடு சொல்லி சாப்பிட ஆரம்பித்தான்.
ரூபனை திருமணம் செய்ய சம்மதிக்கும் பெண்கள் வீட்டில்.. குழந்தை தாத்தா பாட்டியிடம்தானே இருக்கும்.. கல்யாணம் முடிஞ்சதும் நீங்க பொண்ணோட சென்னைலதான இருப்பிங்க.? என்ற கேள்வி வர.. இதுபோல் ஆறேழு சம்பந்தங்களை தவிர்த்திருந்தான்.
இதோ இன்று பெண்பார்க்க சென்றவன் அங்கேயே இது சரிவராது நீங்க வேற இடம் பார்த்துக்கோங்க என்றுவிட்டான்.. வீட்டிற்குள் வந்ததும்.. ‘வாழ்ந்து பார்த்தாதான தெரியும்.? அவங்கதான் குழந்தையை பார்த்துக்கிறேன்னு சொன்னாங்கதான.?” என அங்கலாய்த்தார் கனகா.
‘டூப் போட்டு போட்டு உனக்குத்தான் எல்லாம் டூப்பாவே தெரியுது.. இருபத்திரண்டு வயசு பொண்ணுக்கு எப்படி மெச்சூரிட்டியில்லாம போகும்.. தனக்குத்தான் எல்லாம் தெரியும்னு நினைக்க கூடாது..” என்றார் கடுப்பாக.
குழந்தைக்கு போக்கு காட்டிக்கொண்டிருந்த மாரியப்பன்.. ‘கணேசா.. நாம வேணா ராமசாமி பேத்திய கேட்டு பார்க்கலாமா.?” என்றார். அன்னையை முறைத்துக் கொண்டிருந்தவனுக்கு தாத்தாவின் பேச்சு ஆச்சர்யத்தை தந்தது.
ராமசாமி தன் தாத்தாவின் உயிர்தோழன் என்பதும்.. எதோ கோபத்தில் தற்போது ஏழெட்டு வருடங்களாக முன்புபோல் அதிகம் வைத்துக்கொள்வதில்லை என்பது வரை அதிரூபனிற்கு தெரியும்.. ஆனால் ராமசாமியின் முதல் தாரத்து பெண் பற்றியெல்லாம் தெரியாது.
ராமசாமியின் குணம் மாறிடுச்சி.. அவன் செய்யிறது எதுவும் சரியில்லன்னு புலம்புவார்.. இப்போ என்ன அங்க பொண்ணு கேட்க சொல்றார் என்று அதிசயித்தவனிற்கு அழைப்பு வரவும் போனை எடுத்தவன் தாத்தாவின் பேச்சை யோசித்தவாறு வெளியே போனான்.
காஞ்சனா மகளை மனதில் வைத்துதான் அப்பா சொல்கிறார் என கணேசனிற்கு தெரியும் ஆதலால்.. ‘அப்படி செய்தா உங்க ஃபிரண்டு ரொம்ப சந்தோசம் அடைவார்தான்.. ஆனா காஞ்சனா புருசன் சரியான முசுடு.. ரோசக்கரன்.. உங்க பேரன்றதுக்காகவே ரூபனுக்கு பொண்ணை கொடுக்க மாட்டார்.. இதுல ஒரு குழந்தையிருக்குன்னு பொண்ணு கேட்டா தையதக்கான்னு குதிப்பான்.. கேட்டு அவமானப்படறதுக்கு கேக்காமலே இருந்துடலாம்..” என்றார் கணேசன்.
கணேசன் சொல்வது உண்மைதான்.. ஆறுமுகம் நிச்சயமாக தன் பேரனிற்கு பெண்தர மாட்டான்.. ஆனால் காஞ்சனாவின் அன்பான குணமும் சகிப்பு தன்மையும் பொறுமையும் அறிந்த மாரியப்பனிற்கு நிச்சயம் அவளின் மகளை நல்ல குணநலன்களோடு வளர்த்திருப்பார் என்ற நம்பிக்கையோடு அவர் மகளையே கேட்டு முடிக்க வேண்டும் என்ற ஆசையும் துளிர்க்கவே.. எப்படி..? யாரிடம் பேசி கேட்கலாம் என யோசிக்கலானார்.