அத்தியாயம் 19
சின்ன சின்ன சண்டைகளால்
சில்மிஷம் செய்தவளே
சிறு சாம்பலாய்
என்னை எரித்தது ஏனோ?!!!
முதல் வகுப்பு கால் வாசி முடிந்திருக்கும் வேளையில் தான் கிளாசுக்கு சென்றான் செல்வா. பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியரிடம் பெர்மிசன் கேட்டான்.
தாமதமாக வருவதற்கு அவர் காரணம் கேட்க “பைக் ரிப்பேர்”,என்று சொல்லி தன் இருக்கைக்கு சென்று அமர்ந்தான்.
“வர மாட்டேன்னு சொல்லிட்டு வந்துட்ட. உன்னால இன்னைக்கு சீக்கிரமே எந்திச்சு பஸ்ஸை பிடிச்சு வந்துருக்கேன். சொல்லிருந்தா சேந்தே வந்துருக்கலாம்ல டா?”,என்றான் நவீன்.
“உனக்கு உன் கவலை. எல்லாம் அப்புறம் சொல்றேன் டா. இப்ப கிளாஸ கவனி”,என்று சொன்ன செல்வா மெதுவாக தலையை சுழற்றி சௌமி அமர்ந்திருக்கும் இடத்தை பார்த்தான். அது வெறுமையாக இருக்கவே நிம்மதியாக மூச்சு விட்டவனுக்கு “எதுக்கு இவ வரலை?”, என்ற குழப்பமும் வந்தது.
அதே யோசனையில் இருந்தவன் அந்த வகுப்பு முடிந்ததும் தான் நிகழ்காலத்துக்கு வந்தான். “செல்வா இந்தா பணம்”, என்று அவனிடம் நீட்டினாள் நீலவேணி.
“என்ன ஆச்சு வேணி? ஏது பணம்?”
“உன்னோடது தான். அன்னைக்கு தொலைஞ்சது”
“எப்படி கிடைச்சது?”
“அது அது வந்து எனக்கு தெரிஞ்சவங்க தான் விளையாட்டுக்கு எடுத்தாங்களாம்”
“உனக்கு பொய் சொல்ல வரலை வேணி”
“செல்வா, சௌமி தான் என் மேல உள்ள கோபத்துல எடுத்துருக்கா”
“எனக்கு தெரியுமே”, என்று எண்ணிக் கொண்டவன் “இப்ப உன் கைல எப்படி வந்துச்சு?”, என்று கேட்டான்.
அவள் வராமல் பணம் எப்படி வந்தது என்று அவனுக்கு குழப்பமாக இருந்தது. “அவ பக்கத்துல இருக்குற ராகினி தான் இதைக் கொடுத்தாள். சௌமி தெரியாம செஞ்சிட்டேன், என்னை மன்னிக்க சொல்லுன்னு சொல்லி கொடுத்து விட்டாளாம்”, என்று நீலவேணி சொன்னதும் சௌமி திருந்தியதில் மனதுக்குள் பெரும் பாரம் குறைவதை உணர்ந்தான்.
“எதுக்கு அவ வரலையாம்?”
“தெரியலை செல்வா. அது ராகினிக்கே தெரியலையாம். சௌமியோட அப்பா தான் ராகினி வீட்டுக்கு வந்து குடுக்க சொன்னாராம்”, என்றதும் “ஐயையோ, வீட்ல அவளை அடிச்சிருப்பாங்களோ? அதான் காலேஜ்க்கு வரலையோ?”,என்று தன் மனம் கவர்ந்தவளுக்காக கவலைப் பட்டான் செல்வா.
“ராகினி அவங்க அப்பா கிட்ட எதுக்கு அவ வரலைன்னு கேக்கலையா?”, என்று கேட்டான் செல்வா.
“அவங்க அப்பாவை பாக்குறதுக்கே அவளுக்கு பயமா இருக்குமாம். பின்ன எங்க கேள்வி கேக்கன்னு கேக்காமலே வந்துட்டா. சரி சரி இந்தா பணம்”
“இதை எதுக்கு என்கிட்ட கொடுக்குற? நான் உனக்கு கொடுக்க இன்னைக்கும் பணம் வாங்கிட்டு வந்தேன், நீ அதை சார் கிட்ட போய் கொடுத்துரு”
“வேண்டாம் செல்வா. நான் போறது அந்த கடவுளுக்கே பிடிக்கலை போல? எனக்கு வேண்டாமே பிளீஸ்”
“அப்படி கடவுள் நினைச்சிருந்தா அந்த பணமே உன்கிட்ட வந்துருக்காது. அப்புறம் நான் உன்னை என் கூட பிறந்தவளா நினைச்சு தான் கொடுத்தேன். இப்படி ஒரு அண்ணன் உனக்கு வேண்டாம்னா அந்த பணத்தை அங்க வச்சிட்டு போயிரு”,என்றான் செல்வா.
அப்படி சொன்ன பிறகு அதை நீலவேணியால் மறுக்க முடியவில்லை. அவனைப் பார்த்து சிரித்தவள் “நீ ஒண்ணும் என் அண்ணன் கிடையாது. நான் உன்னை விட நாலு மாசத்துக்கு மூத்தவ. சோ நீ என் தம்பி”, என்று சொல்லி விட்டு சிரித்தாள்.
[the_ad id=”6605″]
அதைக் கேட்டு சிரித்த செல்வா “சரிங்க அக்கா”, என்றான். சிறிது நேரம் தன்னுடைய நண்பர்களிடம் பேசிய செல்வாவுக்கு சௌமியாவைப் பற்றி குழப்பமாக இருந்தது.
“எதுக்கு அவ காலேஜ்க்கு வரலை? அந்த பணத்தை அவங்க அப்பா பாத்துட்டு அவளை அடிச்சு காலேஜ்க்கு அனுப்பலையோ? என் மேல உள்ள கோபத்துனால தான் அவ அதை செஞ்சா. ஆனா இப்ப அவளுக்கு என்ன நிலைமையோ? நாளைக்கு வந்தா அவ கிட்ட சாரி கேக்கணும்”, என்று எண்ணிக் கொண்டான்.
ஒன்பதரைக்கு எழுந்த கதிர் மணியைப் பார்த்து அலறி அடித்து விட்டு தேன்மொழியை எழுப்பினான்.
தூக்கம் கலைந்தவள் “ஐயோ, மணி எத்தனை?”, என்று அவனிடமே கேட்டாள்.
“மணி ஒன்பதரை ஆகுது தேனு. சீக்கிரம் குளிச்சு கீழே போகணும்”
“ஐயோ நான் போக மாட்டேன் பா. அத்தை என்ன நினைப்பாங்க?”
“இங்கயே இருந்தாலும் ஏதாவது நினைப்பாங்க டி என் பொண்டாட்டி, வா சேந்து குளிக்கலாம்”’
“எதுக்கு பத்து நிமிச குளியலை ஒரு மணி நேரம் ஆக்கவா?”
“சரி சரி அப்புறம் பொறுமையா சேந்து குளிக்கலாம்.இப்ப நீ குளிக்க போ”, என்று அவளை அனுப்பி வைத்தவன் படுக்கையை ஒழுங்கு செய்தான்.
பாவாடையை ஏற்றிக் கட்டி ஒரு துண்டை மேலே போட்டுக் கொண்டு வந்தவளை அள்ளி அணைக்க ஆசை இருந்தாலும் கால நேரம் ஒத்துளைக்காததால் “உன்னை அப்புறம் கவனிக்கிறேன் டி. அம்மா கேட்டா ஏதாவது சமாளி”, என்று சொல்லி விட்டு குளிக்க சென்றான்.
புடவை மாற்றியவள் மெதுவாக பூனை போல் கீழே வந்தாள். ஒரு ஓரமாக அமர்ந்து முருங்கை கீரை உருவிக் கொண்டிருந்த வேணி அங்கு சுற்றி முற்றி பார்த்துக் கொண்டே திருட்டு தனமாக வரும் தேன்மொழியைப் பார்த்ததும் அவள் முகத்தை ஆராய்ந்தாள்.
தேன்மொழி முகத்தில் ஒரு மலர்ச்சி இருப்பதைக் கண்டு வேணி முகமும் மலர்ந்தது. “அத்தை சொன்னது உண்மை தான் போல? பிள்ளைங்க சந்தோஷமா இருக்கணும்”, என்று எண்ணிக் கொண்டு “என் மருமக யாரையோ தேடுறா போல?”, என்று கேட்டாள்.
வேணி குரல் கேட்டு அசைய மறந்து நின்ற தேன்மொழி “அத்தை, நீங்க இங்கயா இருக்கீங்க? உங்களை தான் தேடுறேன், ஹி ஹி”,என்று அசடு வழிந்தாள்.
“மணி என்ன ஆகுது? சாப்பிடலையா தேனு?”
“ஆன்.. அத்தை அது வந்து நேத்து நைட் நானும் அத்தானும் படம் பாத்துட்டு இருந்தோமா? அதான் காலைல எந்திக்க நேரம் ஆச்சு”
அவள் அருகே வந்த வேணி “இப்படியே எப்பவும் சந்தோஷமா இருக்கணும் கண்ணு”, என்று சொல்லி அவள் கன்னம் தடவினாள்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே குளித்து முடித்து வந்த கதிர் “அம்மா பசிக்குது சாப்பாடு தா”,என்றான்.
“பதினொரு மணிக்கு காலைல சாப்பாடு சாப்பிட வந்தா பசிக்காம என்ன செய்யும்?”, என்று கேட்டாள் வேணி.
“அது மா… நானும் தேனும் ரொம்ப நேரமா சின்ன வயசு கதை எல்லாம் பேசிட்டு இருந்தோமா? அதான் நேரம் ஆகிட்டு”,என்று சொல்லி சிரித்தான். தேன்மொழி தன் தலையிலே அடித்துக் கொண்டாள்.
“தேனு அவன் கூட போய் சாப்பிடு”
“உங்களுக்கு வேலை செஞ்சி கொடுத்துட்டு நான் சாப்பிடுறேன் அத்தை”
[the_ad id=”6605″]
“அதெல்லாம் வேண்டாம். எல்லா வேலையும் ஆச்சு. கீதாவுக்கு சமைக்கும் போதே எல்லாருக்கும் சேத்து செஞ்சிட்டேன். சாப்பிடுறதுக்கு முன்னாடி கீரை மட்டும் வச்சிக்காலம். நான் ரூமுக்கு போறேன். நீங்க சாப்பிடுங்க”, என்று சொல்லி அவர்களுக்கு தனிமை கொடுத்து சென்று விட்டாள்.
கதிருக்கு சாப்பாடு பரிமாறிய தேன்மொழி அவளும் சாப்பிட அமர்ந்தாள். அப்போது அவன் கை சும்மா இருக்காமல் அவளுக்கு ஊட்ட, அவள் இடுப்பைக் கிள்ள என விளையாட அவனை முறைத்தாள் தேன்மொழி.
“ஏய், ஏண்டி என்னை முறைக்கிற?”
“என்னவாம்? சாப்பிடுற இடத்துல என்ன விளையாட்டு?”
“இங்க தான் யாரும் இல்லையே”
“ஏற்கனவே அத்தை கிட்ட மானம் போச்சு. நீங்க இப்படியே செஞ்சா வேற யாரும் பாத்தா என்ன நினைப்பாங்க?”
“என்ன மானம் போச்சு? அம்மா என்ன சொல்லுச்சு?”
“என்ன சொல்லுச்சா? என்கிட்ட என்ன சொன்னீங்க? ஏதாவது சொல்லி சமாளின்னு சொன்னீங்க. பின்ன நீங்க வந்து வேற காரணம் சொல்றீங்க?”
“ஐயையோ நீ என்ன காரணம் சொன்ன?”
“நான் படம் பாத்தோம்னு சொன்னேன்,நீங்க வேற சொல்றீங்க. அத்தை கண்டு பிடிச்சிருப்பாங்க”
“சரி சரி விடு. இதெல்லாம் அவங்களுக்கே தெரியும். அதான் நம்மளை சாப்பிட சொல்லிட்டு கிளம்பிட்டாங்க”,என்று சொல்லி அவளை சமாதான படுத்தினான்.
அன்று மாலை காலேஜ் முடிவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பே காலேஜ் வெளியே கீதாவுக்காக காத்திருந்தான் தினேஷ். வெளியே வந்த கீதா முகம் கலை இழந்து காணப் பட்டது.
“என்ன ஆச்சு இவளுக்கு? போகும் போது நல்லா தானே போனா?”, என்று எண்ணிக் கொண்டு அவள் அருகே வந்ததும் “என்ன ஆச்சு கீது? எதுக்கு டல்லா இருக்க?”, என்று கேட்டான்.
“இல்லை நாளான்னைக்கு பேரண்ட்ஸ் மீட்டிங் இருக்கு. நான் யாரை…?”
அவள் கேட்பது புரிய “சரி வண்டில ஏறு பேசிக்கலாம்”, என்று சொல்லி அவள் ஏறியதும் வண்டியை எடுத்தவன் “கல்யாணத்தைப் பத்தி காலேஜ்ல சொல்லிட்டியா?”, என்று கேட்டான்.
“ஹிம் சொல்லிட்டேன். நீங்க என்னை விட வரும் போதும் கூட்டிட்டு போகும் போதும் நம்மளைப் பாத்து யாராவது ஏதாவது சொல்றதுக்கு முன்னாடி நம்மளே சொல்றது நல்லதுன்னு ஸ்டாஃப் கிட்ட என் பிரண்ட்ஸ் கிட்ட அவசரக் கல்யாணம்னு சொன்னேன். அது கொஞ்ச நேரத்துல எல்லாத்துக்கும் பரவிட்டு”
“கிண்டல் செஞ்சாங்களா மா? கஷ்டமா இருந்ததா?”
“அதெல்லாம் இல்லை, நீங்க எப்படி இருப்பீங்க? அழகா இருபீங்களான்னு கேட்டுட்டே இருந்தாங்க. பதில் சொல்றதுக்குள்ள திணறி போயிட்டேன்”
“கீது.. நீ என்ன பதில் சொன்னேன்னு எனக்கு தெரியும்”
“உங்களுக்கு எப்படி தெரியும்?”
“உண்மை எனக்கு தெரியாதா? என் புருஷன் கருவாயான்னு சொல்லிருப்ப”, என்று அவன் சொன்னதும் கோபத்தை அடக்க முடியாமல் “வண்டியை நிறுத்துங்க”, என்று கத்தி இருந்தாள்.
“ஏய், என்ன ஆச்சு கீதா?”
[the_ad id=”6605″]
“நீங்க பேசாதீங்க. உங்க கிட்ட பேச பிடிக்கலை. நான் பஸ்ல வரேன்”,என்று சொல்லி இறங்கிக் கொண்டாள்.
அவள் பின்னேயே வண்டியை செலுத்தியவன் “பிளீஸ் மா என்னன்னு சொல்லு.முதல்ல வண்டியில் ஏறு. எல்லாரும் பாக்குறாங்க”, என்று கெஞ்சினான்.
முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு வண்டியில் ஏறியவள் அவனைப் பிடிக்காமல் வண்டியைப் பிடித்துக் கொண்டாள்.
“என்ன கோபம்னு சொல்லு கீதா”
“இப்ப நீங்க பேசாம வண்டி ஓட்டுங்க.இல்லைன்னா என்னை இறக்கி விடுங்க”, என்று சொன்னதும் வாயை கப்பென்று மூடிக் கொண்டு வண்டியை செலுத்தினான் தினேஷ்.
வீட்டுக்கு செல்லும் வரைக்கும் இருவருக்குள்ளும் மௌனம் நிலவியது. தன்னுடைய வார்த்தை அவளை காய படுத்தி விட்டது புரிய அமைதியாக இருந்தான்.
அவர்கள் வீட்டுக்கு சென்ற போது சகுந்தலாவும் ராஜதுரையும் அங்கு வந்திருந்தார்கள். “பெரியம்மா, பெரியப்பா எப்படி இருக்கீங்க?”, என்று ஆவலாக விசாரித்தாள் கீதா.
“நல்லா இருக்கோம் கண்ணு. நீ போய் முகம் கழுவிட்டு வா”, என்று அவளை அனுப்பினாள் சகுந்தலா. அவள் முகம் கழுவி வந்ததும் அவளை அருகில் அழைத்து தேன்மொழிக்கு செய்தது போலவே கீதாவின் தலையிலும் பூவை வைத்து விட்டாள் சகுந்தலா.
எல்லாருக்கும் பலகாரம் மற்றும் காபியை தேன்மொழியும் வேணியும் பரிமாறினார்கள். “பிள்ளைகளை விருந்துக்கு கூப்பிட வந்தோம்”, என்று பேச்சை ஆரம்பித்தார் ராஜதுரை.
“அதுக்கென்ன மாப்பிள்ளை, இப்பவே கூட கதிரையும் தேனையும் அழைச்சிட்டு போங்க”, என்றார் மதி.
“அது இல்லை மச்சான். நாங்க அழைக்க வந்தது கீதா தினேஷையும் சேத்து தான்”, என்று அவர் சொன்னதும் அனைவரின் முகமும் மலர்ந்தது.
“சந்தோஷம் மாப்பிள்ளை, தாராளமா அழைச்சிட்டு போங்க. ஆனா கீதாவுக்கு காலேஜ் இருக்கே”
:”அதான் நானும் கேக்க வந்தேன். அப்ப வெள்ளிக்கிழமை சாயங்காலம் கூப்பிட வரோம். ரெண்டு நாள் அங்க இருந்துட்டு வரட்டும்”
“அதுவும் சரி தான்”, என்று மதி சொன்னதும் அனைவரும் வேற விசயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.
காலேஜ் முடிந்து வீட்டுக்கு வந்த செல்வா அனைவரிடமும் பேசிக் கொண்டிருந்தாலும் சௌமியை பற்றி அவனுக்கு மண்டை குடைச்சலாக இருந்தது. அவளுக்கு என்னவோ என்று குழம்பி தவித்தான். “நாளைக்கு காலேஜ் வந்திருவாளா?”, என்று அவனுக்கு யோசனையாக இருந்தது.
சகுந்தலா ராஜதுரை கிளம்பி சென்ற பின்னர் அன்று இரவு உணவின் போது “அம்மா அப்பா, கீதாவுக்கு பேரண்ட்ஸ் மீட்டிங் இருக்காம். அதுக்கு நாம போகணும்”, என்று பேச்சை ஆரம்பித்தான் தினேஷ்.
அதிர்ந்து அவனை நிமிர்ந்து பார்த்தவள் கண்களால் அவனுக்கு நன்றி சொன்னாள். அவளே அவர்களை எப்படி அழைப்பது என்று தெரியாமல் தான் இருந்தாள். அவனே வழி சொல்லிக் கொடுக்கவும் நிம்மதியாக உணர்ந்தாள்.
“அதுக்கென்ன டா போயிட்டா போச்சு. எத்தன மணிக்கு வரணும்னு கேட்டு சொல்லு மா கீதா. நானும் உன் மாமாவும் வரோம்”, என்று சொல்லி அந்த பேச்சை முடித்தாள் வேணி.