அனைவரும் ஒவ்வொரு விஷயம் பேசிக் கொண்டிருக்க அனைவரின் மீதும் கவனம் வைத்திருந்தாலும் அருகில் அமர்ந்திருந்த தேன்மொழியை ஒரு வழி ஆக்கிக் கொண்டிருந்தான் கதிர்.
யாரும் பார்க்காதவாறு அவள் தட்டில் இருந்து எடுத்து சாப்பிடுவதும் அவள் முறைத்தால் கண்ணடித்து அவளை திகைக்கவும் வைத்துக் கொண்டிருந்தான் கதிர்.
அனைவரும் அவர்களை கவனித்தாலும் அதை யாரும் கண்டு கொள்ள வில்லை. தினேஷும் கீதாவும் என்ன கோபம் என்று கண்களால் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர். செல்வாவும் அன்னமும் ஏட்டிக்கு போட்டி பேசி அங்கே அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார்கள்.
அடுத்த நாள் காலேஜ் சென்ற செல்வாவுக்கு மேலும் அதிர்ச்சியாக அவள் அன்றும் வந்திருக்க வில்லை. தன்னால் தான் அவளுக்கு பிரச்சனை என்று புரிந்து கொண்டவன் நிலை கொள்ளாமல் தவித்தான்.
அன்று மாலை அதற்கு மேல் அவன் மனசாட்சியுடன் போராட முடியாமல் அவள் வீட்டுக்கே செல்ல முடிவெடுத்தான். அதில் வரும் சாதக பாதகங்களை அவன் மனது யோசித்துக் கொண்டிருந்தது.
அவள் வீடு எங்கே இருக்கு என்று அவனுக்கு தெரியும் ஆதலால் என்ன காரணம் சொல்லி போவது என்று மட்டும் யோசித்துக் கொண்டிருந்தான்.
அன்று மாலை காலேஜ் முடிந்ததும் அவன் கிளம்பும் போது எப்போதும் அவனுடன் வரும் நவீனும் கிளம்பினான். “இன்னைக்கு நீ பஸ்ல போ நவீன். எனக்கு ஒரு வேலை இருக்கு”, என்றான் செல்வா.
“நீயெல்லாம் நண்பனா டா? கழட்டி விடுற. ஆனால் நான் அப்படி எல்லாம் கிடையாது. உன்னை விட்டுட்டு எங்கயும் போக மாட்டேன். நானும் உன் கூடவே தான் வருவேன்”
“சரி வா, எனக்கென்ன? பின் விளைவுகள் எதுவும் வந்தா என்னை சொல்ல கூடாது”
“அப்படி எங்க போற?”
“சௌமி வீட்டுக்கு”
“என்னது?”, என்று அலறினான் நவீன்.
“ஆமா டா, ரெண்டு நாள் அவ வரலை. அதனால என்னனு கேக்க போறேன்”
[the_ad id=”6605″]
“நீ எதுக்கு அவளை கேக்குறன்னு கேள்வி வருது. ஆனா அதை அப்புறம் கேக்குறேன். ஆனா இப்ப எதுக்கு அந்த ஆந்தை வாயன் வீட்டுக்கு போற? அவளோட அப்பாவை பாத்துருக்க தானே?”
“அதெல்லாம் தெரியாது.போயே ஆகணும். வா போகலாம்”
“எப்பா சாமி, உன்கூட வந்து நான் பிரீயா அடி வாங்க விரும்பலை. நான் பஸ்லே போறேன் பா”, என்று சொல்லி அவன் கிளம்பியதும் செல்வா சௌமி வீட்டுக்கு சென்றான்.
அட்ரஸ் கண்டு பிடித்து அவன் சென்றதும் அங்கே இருந்த அவளுடைய பிரம்மாண்ட வீட்டைப் பார்த்தே திகைத்தான். “இவ்வளவு பெரிய வீடா? பணத்திலே தான் படுப்பாங்க போல? அதான் அவ அவ்வளவு திமிரா இருக்காளோ?”, என்று எண்ணிக் கொண்டவன் செக்யூரிட்டியிடம் “சௌமியை பாக்கணும். நான் அவ கூட தான் படிக்கிறேன்”, என்ற உண்மையை சொன்னான்.
அவனை ஒரு மாதிரி பார்த்தாலும் “உள்ள போங்க”,என்று அனுப்பி வைத்தான்.
தோட்டத்தில் அமர்ந்திருந்த சக்திவேல் அவனைக் கண்டு குழம்பி “யாருப்பா நீ?”, என்று அதிகாரத்துடன் கேட்டார்.
அவர் குரலில் திகைத்து திரும்பியவன் அவர் முகத்தைக் கண்டு எச்சில் விழுங்கினான். கை, காது கழுத்து என்று அவர் உடலை பல தங்கங்கள் இடம் பெற்றிருந்தது. மருந்துக்கு கூட சிரிப்பில்லாமல் ஒரு பெரிய மனித தோரணையில் இருந்தார் அவர்.
அவரை ஏற்கனவே கல்லூரியில் ஒரு முறை பார்த்திருந்தாலும் “தனியா வந்து சிங்க குகைக் குள்ள மாட்டிக்கிட்டேனோ?”, என்று எண்ணிக் கொண்டு “சௌமியாவைப் பாக்கணும் அங்கிள், தப்பா எடுக்காதீங்க.ரெண்டு நாளா அவ கிளாஸ்கு வரலை. என்னன்னு கேட்டுட்டு அப்படியே என்னோட நோட் அவ கிட்ட இருக்கு. அதை வாங்கிட்டு போகலாம்னு வந்தேன்”, என்றான்.
“இதை சொல்வதற்குள் வியர்த்து விதிர்விதிர்த்து போனான் செல்வா. “உள்ள வா பா. அவ கொஞ்ச நாள் காலேஜ் வர மாட்டா. அவளுக்கு உடம்பு சரியில்லை”, என்று அவனிடம் சொன்னவர் “லட்சுமி, தம்பிக்கு ஏதாவது சாப்பிட கொடு. அப்புறம் பாப்பாவை கீழ கூப்பிடு”, என்று மனைவியிடம் சொன்னார்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் அவன் கையில் காபியைக் கொடுத்த லட்சுமி மகளை அழைக்க போனாள்.
அங்கே செரில் அமர்ந்து தன்னுடைய போனை குடைந்து கொண்டிருந்தாள் சௌமி.
“ப்ச் என்ன பாப்பா இது? உன்னை தூங்க தானே சொல்லிட்டு போனேன்”, என்று அன்புடன் அரட்டினாள் லட்சுமி.
“தூக்கம் வரலை மாம்”
“சரி சரி., உன்னோட கிளாஸ் மேட் ஒரு பையன் உன்னை பாக்க வந்திருக்கான். உன்னோட நோட் உன்கிட்ட ஒண்ணு இருக்காமே. அதையும் எடுத்துட்டு கீழ போ”
“செல்வாவா இருக்குமோ? ஆமா கண்டிப்பா அவனை தவிர வேற ஆளா இருக்க முடியாது. என்ன நோட்? சும்மா கதை விட்டுருக்கானா? என்னை பாக்க அவ்வளவு ஆசையா டா உனக்கு?”, என்று எண்ணிக் கொண்டு தன்னுடைய ஒரு நோட்டை எடுத்துக் கொண்டு கீழே சென்றாள்.
“எப்படி போட்டு வச்சிருக்கா பாரு ரூமை”, என்று சொல்லிக் கொண்டே அதை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள் லட்சுமி.
“வா பாப்பா, இந்த தம்பி நோட் உன்கிட்ட இருக்காமே”, என்று சக்திவேல் கேட்டதும் “ஆமா பா, இந்தாங்க”, என்று அவர் கையில் கொடுத்தாள் சௌமி.
“தம்பி கிட்ட கொடு மா”, என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவருக்கு ஒரு போன் வர அவரும் எழுந்து சென்று விட்டார்.
இருவரும் தனித்து விடப் பட்டிருக்க என்ன பேச என்று தெரியாமல் ப\ட்டி மன்றம் நடத்திய செல்வா “இது என் நோட் இல்லை. நான் என்ன சொல்லிட்டு வரனு தெரியாம அப்படி செஞ்சேன்”, என்றான்.
“அப்படி தான் இருக்கும்னு எனக்கும் தோணுச்சு.இது என் நோட் தான். காலேஜ் வந்த அப்புறம் வாங்கிக்கிறேன்”
“என்ன அச்சு உடம்புக்கு? எதுக்கு கிளாஸ்கு வரலை?”
“சும்மா தான் உடம்பு சரியில்லை அதான்”
“என்ன ஆச்சு உடம்புக்கு? என் மேல ஏதாவது கோபமா?”
“நான் தான் உன்னை ரொம்ப கஷ்ட படுத்திருக்கேன் செல்வா. நீ தான் என்னை மன்னிக்கணும்”
“மன்னிப்பு எல்லாம் எதுக்கு? நீ மனசு மாறினாலே போதும். உடம்புக்கு என்ன?”
“ஒண்ணும் இல்லை சும்மா தான்”
“என்ன ஆச்சுன்னு சொல்லு. காச்சல் மாதிரியும் தெரியலையே”
[the_ad id=”6605″]
“அது ஒண்ணும் இல்லை விடேன்”
“நீ எப்ப காலேஜ் வருவ?”
“ஒரு ரெண்டு வாரம் ஆகும்?”
“ரெண்டு வாரமா? அந்த அளவுக்கு உடம்புக்கு என்ன?”
“ஒண்ணும் இல்லை செல்வா. அதை விடு”
“நீ சொல்லு சௌமி. உனக்கு ஒரு வேளை கேன்சரா? அது தெரிஞ்சு தான் மனசு திருந்திட்டியா?”, என்று கேட்ட அவன் குரலில் உண்மையான அக்கரையே தெரிந்தது.
“உன் கற்பனைல இடி விழ. அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை”
“சொல்லு சௌமி. மண்டையே வெடிக்குது”
“சரி சொல்றேன். காலேஜ்ல காச்சல்னு தான் சொல்லி வச்சிருக்கோம். அங்க போய் உளறிராத. நான் பெரிய பொண்ணா ஆகிட்டேன் போதுமா?”, என்று சிறு வெட்கத்துடன் சொன்னாள்.
“நீ ஏற்கனவே பெரிய பொண்ணு தானே?”, என்று சொல்லிக் கொண்டிருந்தவன் சக்திவேல் வரவும் அவர் பக்கம் திரும்பிக் கொண்டான். அவளும் அறைக்கு சென்று விட்டாள்.
“நோட் வாங்கிட்டேன் சார், நான் கிளம்புறேன்”, என்று அவன் எழுந்து கொள்ள அவனை அமர வைத்தவர் அவனிடம் சகஜமாக பேசி தினேஷ் கீதா திருமணம் வரைக்கும் அவன் குடும்பத்தைப் பற்றிக் கறந்து விட்டார்.
அவரிடம் சொல்லி விட்டு வெளியே வந்தவன் மனதில் “இது என்ன பெரிய பொண்ணா ஆகிட்டேன்னு சொல்றா?”, என்று யோசனையாக இருந்தது.
“நவீன் கிட்ட நேரம் கிடைக்குறப்ப கேக்கணும்”,என்று முடிவெடுத்து கொண்டு வீடு திரும்பினான்.
அந்த வார இறுதியில் இரண்டு ஜோடிகளும் விருந்துக்கு தேன்மொழி வீட்டுக்கு சென்றார்கள். அவர்களை அழைக்க செந்திலும் கண்ணனும் வந்தார்கள்.
கதிர் வீட்டில் தினேஷையும் கீதாவையும் தனி தனியே பிரித்து வைத்திருந்தாலும் தேன்மொழி வீட்டில் அவர்களை யாரும் எதுவும் சொல்ல வில்லை. அதில் தினேஷ் சந்தோஷமாக உலாவிக் கொண்டிருந்தான். இதில் அவனுக்கு அடுத்த அதிர்ஷ்டம் என்னவென்றால் ஒரு ரூமை தேன்மொழி கதிருக்கும் மற்றொரு ரூமை தினேஷ் கீதாவுக்கு கொடுத்திருந்தது தான்.
அதில் வாயெல்லாம் பல்லாக தினேஷ் மாற “இவன் கூட ஒரே ரூம்லயா?”, என்று அதிர்ந்து போனாள் கீதா.
தங்களுடைய அறைக்குள் இரண்டு ஜோடிகளும் நுழைந்தார்கள். உள்ளே சென்றதும் கதிர் தேன்மொழியை அணைத்து தன் வேலையை ஆரம்பிக்க, உள்ளே சென்ற கீதாவும் தினேஷும் சுவரை பார்த்த படி நின்றார்கள்.
அந்த மௌனத்தை தாங்க முடியாமல் “தேங்க்ஸ்”, என்றாள் கீதா.
“நீ எனக்கு தேங்க்ஸ் எல்லாம் சொல்ல கூடாது.அதை புரிஞ்சிக்கோ கீது., இப்ப என் மேல உள்ள கோபம் போயிருச்சா?”
“ஹிம்”
“என்ன கோபம் என் மேல?”
“நீங்க என் வீட்டுக்காரரை கருவாயான்னு சொல்லலாமா?”, என்று அவள் சிறு சிணுங்களுடன் கேட்டதும் வானத்தில் பறந்தான் தினேஷ்.
“ஏய், அதுக்கு தான் கோப பட்டியா?”
“ஆமா, நீங்க ஒண்ணும் கருப்பு கிடையாது.இனி அப்படி சொல்லக் கூடாது”, என்று அவனுக்கு கட்டளையும் விதித்தாள் அவனுடைய இளம் மனைவி.
அவளை நெருங்கி சில்மிஷம் செய்ய ஆசை இருந்தாலும் பெரியவர்களுக்காக தனி தனியே இருக்க ஆசைப் பட்டார்கள்.
அன்று இரவு தூங்கும் போது ஒரே அறையில் ஒரே கட்டிலில் படுத்தாலும் இருவருக்குள்ளும் இடைவெளி அதிகம் இருந்தது.
அவளிடம் கதை பேச அவனுக்கும் ஆசை தான். ஆனால் அவள் அருகே நெருங்காமல் இருப்பது தான் இருவருக்கும் நல்லது என்பது புரிய சீக்கிரமே தூங்க துடங்கி விட்டான்.
[the_ad id=”6605″]
அடுத்த நாள் விருந்துண்டு தூங்கி ஓய்வெடுத்தவர்கள் அதற்கு அடுத்த நாள் தோட்டத்துக்கு போகலாம் என்று முடிவு எடுத்தார்கள். அவர்களுக்கு தேவையான உணவை சகுந்தலாவும் செல்வியும் செய்து கொடுக்க அனைவரும் கிளம்பினார்கள். செல்வாவுக்கு அழைத்து அவனையும் வர சொன்னதால் எல்லாருக்கும் நன்றாக பொழுது போனது.
“வர மாட்டோம்”, என்று சொன்ன கண்ணன் செந்திலையும் அழைத்துக் கொண்டு சென்று விட்டார்கள்.
எல்லாருக்கும் நேரம் றெக்கை கட்டிக் கொண்டு பறந்தது. அன்று மாலை கதிர் தினேஷ் தங்கள் வீட்டுக்கு மனைவிகளுடன் கிளம்ப அவர்களை அனுப்பி வைத்து விட்டு கண்ணனுக்கு ஒரு வரன் பார்க்க பக்கத்து ஊருக்கு சென்றார்கள்.
கண்ணனை அழைக்க “நீங்க முதல்ல போய் பாருங்க மா. உங்களுக்கு பிடிச்சிருந்தா மேற்கொண்டு பேசுவோம்”, என்று சொல்லி விட்டான் கண்ணன்.
அதனால் தர்மதுரை செல்வி, ராஜதுரை சகுந்தலா நால்வரும் பெண் பார்க்க சென்றார்கள். அவர்களுக்கு பெண் பிடித்து விட அடுத்து ஜாதகம் பார்க்க என்று பேச்சு சென்றது.
“பொண்ணு அம்ஸமா இருக்கா டா. பேரு ராதா. எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நல்ல குடும்பமாவும் இருக்கு. நீ என்ன சொல்ற?”,என்று செல்வி கேட்டதும் கண்ணனை முதலில் கவர்ந்தது ராதா என்ற பெயர் தான். கண்ணனின் ராதை அவள் தானோ என்று மனதுக்குள் கவிதை சொல்லிக் கொண்டவன் “உங்களுக்கு பிடிச்சிருக்குள்ள மா?அப்புறம் என்ன? மேற்கொண்டு பேசுங்க”, என்று சொல்லி விட்டான்.
காதல் தீயை நீர் அணைக்குமா?….