அத்தியாயம் 1_ 1 விழி மொழி பேசு_கார்த்திகா கார்த்திகேயன்
Post Views:4,054
அத்தியாயம் 1
என்னுடைய ஒரே தேவை
உந்தன் நெஞ்சில் வசிக்கும்
பாதுகாப்பு மட்டுமே!!!
அரசு பேருந்து ஒன்று ஏற்காடு நோக்கி சென்று கொண்டிருந்தது. ஜூலை மாத தென்றல் காற்று வேகமாக வீசியது. மரங்கள் கூட வேகமாக அசைந்து கொண்டிருந்தன. காற்றின் சத்தம் கூட அனைவரின் காதிலும் விழும் படி அவ்வளவு சத்தமாக இருந்தது.
இது மலைப் பிரதேசம் என்பதால் வீசும் காற்றில் குளிர் பரவி ஜில்லென்று வீசியது. அந்த ஜில்லிப்பு உடலை அப்படியே சிலிர்க்க வைத்தது…
சிறிது நேரத்தில் மெதுவாக தூறலும் ஆரம்பித்தது. தூறல் ஆரம்பித்த சில நிமிடங்களில் பேய் மழையாக பெய்ய ஆரம்பித்தது. அடித்துக் கொட்டும் அடை மழையில் வானத்தை கிழித்துக் கொண்டது போல தண்ணீர் ஊற்றியது…
மழையைக் கண்டு கண்களில் மிரட்சியுடன் அந்த பஸ்ஸில் அமர்ந்திருந்தாள் ரேகா. பஸ் ஏற்காட்டை நெருங்கிக் கொண்டிருக்க மழையின் வேகமும் அதிகமானது. ஒல்லியாக உயரமாக, கொடி போன்ற உடலுடன் இருந்தாள் ரேகா.
சந்தன நிறம், இடையை தாண்டிய கருங்கூந்தல் அவள் முழங்காலை தொட்டது. அவளது நீழ் விழிகள் கூட பல மொழிகள் பேசுவது போல துறுதுறுவென்று இருந்தது. ஆரஞ்சு பழ சுளைகளை ஓட்ட வைத்ததை போல இருந்த அவளது அதரம் பார்ப்பவர்களை கட்டாயம் ஊமத்தம் கொள்ளச் செய்யும்.
பார்ப்பவரை மயக்கும் பேரழகுடன் இருந்தவளுக்கு தன்னுடைய அழகை பற்றி எந்த எண்ணமும் இருந்ததாக தெரியவில்லை. அவ்வளவு இயல்பாக இருந்தாள் ரேகா. இயல்பாக என்று சொல்லி விட முடியாது. அவள் முகத்தில் பதட்டமும் பரபரப்பும் குவிந்திருந்தது.
பஸ்ஸில் ஜன்னல் சீட்டில் அமர்ந்திருந்த ரேகாவுக்கு அந்த மழையை ரசிக்கும் மனநிலை அப்போது இல்லை. மழையை நினைத்து அவள் மனதில் இருந்த பயம் மேலும் கூடியது. சிறிது நேரத்தில் ஏற்காடு வந்ததும் அவள் பஸ்ஸில் இருந்து இறங்க வேண்டும். ஆனால் இந்த பஸ் நிற்காமல் எங்காவது சென்று கொண்டே இருக்காதா என்ற ஆவல் அவளுக்கு வந்தது.
பஸ் வேகமாக போய்க் கொண்டிருக்க, காற்று வேகமாக வீச, மழையும் கொட்டோ கொட்டோவென்று கொட்ட இந்த சூழ்நிலையை மற்ற நேரமாக இருந்தால் ரேகா கட்டாயம் ரசித்திருப்பாள்.
ஆனால் இப்போதோ அவள் மனது ரசிக்கும் நிலையில் இல்லையே. ஏதோ நெஞ்செல்லாம் பாரம் அழுத்தியது போல இருந்தது. அவளை எண்ணி, அவளுடைய நிலையை எண்ணி, அவளது எதிர்காலத்தை எண்ணி, அவள் நிம்மதி பறிபோனது.
அவளுக்கு என்று தாய், தந்தை இருந்திருந்தால் இப்படி கொட்டும் மழையில், அர்த்த ராத்திரியில் தனியே பயணம் செய்வாளா? அவளது சிறு வயதிலே நடந்த தாய் மற்றும் தந்தையின் இழப்பு இப்போது பெரியதாக தெரிந்தது.
பஸ் ஜன்னல் வழியே வெளியே எட்டிப் பார்த்தாள். ஏதோ மலை மீது பஸ் சென்று கொண்டிருந்தது. அப்படியே இந்த பஸ் மலையில் இருந்து உருண்டு விழாதா என்ற எண்ணமும் அவளுக்கு வந்தது.
அப்படி ஒரு எண்ணம் மனதில் வந்ததும் தன்னையே மானசீகமாக கொட்டிக் கொண்டவள் “என் ஒருத்திக்காக பஸ்ஸில் இருக்கும் அத்தனை பேரும் சாகனுமா? ஒவ்வொருத்தருக்கும் எவ்வளவு கனவு இருக்கும்? நான் ஏன் இப்படி லூசு மாதிரி நினைக்கிறேன்?”, என்று எண்ணிக் கொண்டாள்.
ஆனால் ஏதாவது ஒரு விடுதலை தனக்கு வராதா என்று அவள் மனது கடவுளிடம் கெஞ்சியது.
வெள்ளிக் குத்தீட்டிகள் போல ஜன்னல் கண்ணாடியில் விழும் மழை நீரை பார்க்கும் போது அவளுக்கு பயம் கூடிக் கொண்டே சென்றது. விடிவதற்குள் அவள் ஊருக்கு சென்றாக வேண்டும். அதனால் தான் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிந்தும் கிளம்பி வந்தாள்.
பொதுவாக ஊருக்கு செல்வது என்றால் உறவினர்களை பார்க்க செல்வார்கள், இல்லை ஏதாவது தேவையான பொருள்களை வாங்கச் செல்வார்கள். ஆனால் ரேகா செல்வது உறவினர்களைப் பார்க்க இல்லை. அவள் பட்ட நன்றிக் கடனை அடைப்பதற்காக தான். ஆம் நன்றிக் கடனை அடைக்க தான் இந்த கொட்டும் மழையில் சென்று கொண்டிருக்கிறாள்.
நன்றிக் கடனை அடைப்பதற்கு அவள் எதற்கு இவ்வளவு பயப்பட வேண்டும் என்ற கேள்வி அனைவருக்கும் வரும். அவள் நன்றிக் கடனை அடைக்க அவளுடைய வாழ்க்கையையே பணையம் வைக்க போகிறாளே. அவள் வாழ்க்கை தொலைய போகிறது என்று தெரிந்து தான் போய்க் கொண்டிருக்கிறாள். ஆனால் அவள் மனம் அதை ஏற்றுக் கொள்ள தான் வில்லை.
மழையினால் வந்த குளிர், அவள் உடலில் இறங்கி அவள் உடலை ஜில்லிட வைத்தது. மூடியிருந்த சால்வையை இன்னும் இறுக்கி மூடிக் கொண்டாள். சுற்றி இருந்த இருள் போர்வையும் தன்னை கடந்து செல்லும் உயரமான மரங்களையும் அச்சம் நிறைந்த விழிகளோடு பார்த்தாள் ரேகா.
இப்போதும் அவளுக்கு தப்பிக்க வழி இருக்கிறது தான். வரும் நிறுத்தத்தில் இறங்கி அவள் வாழ்க்கையை பார்த்துக் கொண்டு போகலாம். இல்லை என்றால் ஏற்க்காட்டில் இறங்கி மீண்டும் சென்னை பஸ் பிடித்து சென்று விட்டால் அவளது வேலை அவளைக் காப்பாத்தும்.
ஆனால் அப்படி போனால் அவள் மனம் அவளை சும்மா விடுமா? அவளது மனசாட்சி கேட்கும் கேள்விகளுக்கு அவளால் பதில் சொல்ல தான் முடியுமா?
அவள் இப்போது போவது அவளுடைய மாமா வீட்டுக்கு தான். இதற்கு முன்னர் அங்கே போகும் போது சந்தோஷமாக இல்லாமல் போனாலும் கொஞ்சம் எதிர்பார்ப்புடன் போவாள். ஆனால் ஒவ்வொரு முறையும் அங்கே அவளுடைய சந்தோஷம் காலில் போட்டு மிதிக்கப் படும். அவளது எதிர்பார்ப்பு தூள்த் தூளாகும். அவளை அங்கே யாரும் ஒரு பொருட்டாய் கூட எண்ண மாட்டார்கள்.
போகும் போது அத்தை மாமா அவர்களின் பிள்ளைகளை பார்க்க போகிறோம் என்று சந்தோஷமாக போகும் ரேகா அங்கே அவளை வாவென்று கூட அழைக்காத குடும்பத்தை எண்ணி மனம் வெந்து போய், அவர்களின் கடுஞ்சொற்களைக் கேட்க முடியாமல் உடனே ஹாஸ்டல் திரும்பி விடுவாள். இது தான் இத்தனை வருஷமும் நடக்கும். இருந்தாலும் அடுத்த முறை போகும் போது அவர்கள் தன்னிடம் நன்றாக பேச மாட்டார்களா என்ற ஏக்கம் வரும். ஆனால் நடக்காது.
பள்ளி படிக்கும் போதும் சரி, காலேஜ் படிக்கும் போதும் சரி, இப்போது வேலை பார்க்கும் போதும் சரி, அவள் நிலை இதே தான். ஆனால் இந்த முறை அவள் மனதில் எந்த சந்தோஷமும் இல்லை. எதிர் கால வாழ்க்கை என்னவாகுமோ என்ற பயம் மட்டுமே இருந்தது.
என்ன தான் வீட்டுக்கு வருபவளை அவர்கள் வாவென்று அழைக்கா விட்டாலும் அவளுக்கான ஸ்கூல் பீஸ், ஹாஸ்டல் பீஸ், காலேஜ் பீஸ் என அனைத்தும் கட்டி அவளை படிக்க வைத்து இன்று ஒரு நல்ல வேலையில் அவள் இருப்பதற்கு அவளுடைய மாமா குடும்பம் தானே காரணம். அதனால் தான் அவர்கள் மேல் கொண்ட நன்றிக்காக, அந்த நன்றிக் கடனை அடைக்க இப்போது செல்கிறாள்.
அவளுடைய மாமா சங்கரன் ஒன்றும் அவளை சும்மா படிக்க வைக்க வில்லை. ரேகாவின் பதிமூன்றாம் வயதில் அவளுடைய தாய் தந்தை ஆக்ஸிடெண்டில் இறந்து விட்டார்கள்.
கண் முன்னே பிணமாக கிடந்த பெற்றவர்களை வெறித்து பார்த்த படி அமர்ந்திருந்தாள் ரேகா. இனி தன்னுடைய தாய் தந்தை வரவே மாட்டார்கள் என்று கூட அப்போது அவளுக்கு தெரியவில்லை.
சுற்றி இருந்த அனைவரும் அவளை இரக்கத்துடன் பார்த்தார்கள். அவர்களின் அடக்கம் முடிந்ததும் சொந்தங்கள் ஒவ்வொருவராக கழண்டு கொள்ள ஆரம்பித்தனர்.
அப்போது “ரேகாவை நான் வளத்துக்குறேன்”, என்று அனைவரின் முன்னிலையிலும் சொன்னார் அவளது மாமா சங்கரன். சங்கரன் அவளது சொந்த தாய் மாமா தான். தாய் மாமா உறவு என்பது மற்றொரு தாய்க்கு சமம் என்று சொல்வார்கள். அதனால் அக்கா மகளை தான் வளர்த்துக் கொள்வதாக சொன்னதும் அனைவரும் சங்கரனை கடவுளைப் பார்ப்பது போல பார்த்தார்கள்.
தாய் மாமா என்பது மற்றொரு தாய்க்கு சமம் என்பதெல்லாம் முன்பு இருந்த காலத்தில் தான். இப்போது அனைத்துமே பணக் கணக்கு மட்டும் தான். பணம் இருந்து விட்டால் அனைத்து உறவும் தேடி வரும். அது இல்லை என்றால் யார் நீ என்ற பார்வை தான் நம்மை நோக்கி வரும்.
சங்கரணை அனைவரும் நல்லவர் என்று பாராட்டினார்கள். கூடவே ரேகாவை தங்களை பார்க்க சொல்லி விடுவார்களோ என்று அஞ்சியவர்களும் சங்கரன் சொன்னதைக் கேட்டு நிம்மதியானார்கள்.
தாய் தந்தையை பரி கொடுத்து விட்டு அனாதையாக உலகம் புரியாத வயதில் இருந்த ரேகா தாய் மாமன் குடும்பத்துடன் ஏற்காடு வந்தாள். முதலில் சங்கரனும் அவர் மனைவி வேணியும் அவளை நன்றாக தான் பார்த்துக் கொண்டார்கள். ஆனால் யாருக்கும் தெரியாத உண்மையை போக போக ரேகா புரிந்து கொண்டாள். தாய் மாமன் வெறும் ரேகாவை மட்டும் அழைத்து வரவில்லை. அவளுக்கு உண்டான சொத்துக்களையும் சேர்த்து தான் எடுத்து வந்திருக்கிறார் என்று. எல்லா உண்மையும் ரேகாவுக்கு போக போகத் தான் தெரிந்தது.
வீட்டுக்கு வந்த உடனே பாசமாக பார்த்துக் கொண்ட அத்தையும் மாமாவும் அதன் பின் அவளை ஒரு பொருட்டாக கூட எண்ண வில்லை. அதை புரிந்து கொண்ட ரேகாவுக்கு தன்னுடைய நிலை அந்த வீட்டில் என்ன என்பது புரிந்தது.
அதனால் தன்னைக் காத்துக் கொள்ள படிப்பில் கவனம் செலுத்தினாள். கெட்டதிலும் நல்லதாக அவளை இருப்பதிலே மிகப் பெரிய பள்ளியில் தான் அவர்கள் படிக்க வைத்தார்கள். ஏனென்றால் சங்கரனின் பிள்ளைகள் பெரிய பள்ளியில் படித்து ரேகாவை சாதாரண பள்ளியில் படிக்க வைத்தால் மற்றவர்கள் கேள்வி கேட்பார்களே? அதனால் அவளையும் பெரிய பள்ளியிலே படிக்க வைத்தார்கள்.
ரேகாவும் அவர்கள் எதற்கு இந்த பள்ளியில் சேர்த்திருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டாள். அதனால் அந்த பள்ளியில் என்ன எல்லாம் கற்றுக் கொள்ள முடியுமோ அனைத்தையும் கற்றாள்.
பள்ளியிலே முதல் மாணவியாக அவள் வருவதால் அவளுக்கு உதவித் தொகையும் கிடைத்தது. அதை வீட்டில் மூச்சு விட மாட்டாள். அந்த பணத்தை வைத்து கம்ப்யூட்டர் கிளாஸ் போவாள், ஹிந்தி தனியே படித்தாள்.
சில நேரம் சங்கரனின் பிள்ளைகள் மூலமாக பள்ளியில் நடப்பதை அறியும் சங்கரனும் வேணியும் ஏதாவது அவளைத் திட்டுவார்கள். ஆனால் அவர்கள் என்ன சொன்னாலும் அதை ரேகா கண்டு கொள்ள மாட்டாள். அவளுக்கு தேவை படிப்பு. அது கிடைத்ததால் அவள் நிம்மதியாக இருந்தாள். அவள் நன்றாக படித்து முடித்ததும் அவளது மதிப்பெண்ணுக்கு சென்னையில் உள்ள பெரிய அரசு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. கல்லூரிப் படிப்பை முடித்தவளுக்கு சென்னையிலே வேலையும் கிடைத்து விட்டது.
ஏற்கனவே ரேகாவின் தாயின் நகைகளை வேணி சுருட்டிக் கொண்டாள். பேங்கில் கிடந்த பணத்தை எல்லாம் தன்னுடைய பெயருக்கு மாற்றிக் கொண்டார் சங்கரன். ரேகாவின் விவசாய நிலங்களையும் “பொம்பளை பிள்ளை நாளைக்கு இங்க வந்து விவசாயமா செய்யப் போகுது?”, என்று சொல்லியே உறவினர்களிடம் நல்ல விலைக்கு விற்று அந்த பணத்தை வைத்து தன்னுடைய பிள்ளைகள் பெயரில் சொத்து வாங்கினார்.
எப்படியும் மாமா குடும்பத்திடம் போன சொத்து தனக்கு வராது என்று தெரியும். அது அவளுக்கு தேவையும் இல்லை. ஆனால் வீட்டுக்கு செல்பவளை வா மா என்று கூட அழைக்காதவர்களை கண்டு தான் அவள் மனம் ஊமையாய் கண்ணீர் சிந்தும்.
“எனக்கு அம்மா அப்பா இருந்திருந்தா இன்னைக்கு நான் இப்படி அனாதையா நிற்க வேண்டிய நிலை வந்துருக்காதே? கடவுளே என்னை எதுக்கு இப்படி படைச்ச?”, என்று அடிக்கடி சொல்லி அழுவாள் ரேகா.