“இன்னைக்கு நீ ஒரு மார்க்கமா தான் சுத்துற.. ம்ஹும்… இருக்கட்டும்..”
என சொன்னாலும் கைகள் அவளை தன்னோடு அணைத்துக் கொள்ளவே செய்தது.
பதில் எதுவும் சொல்லாமல் அவள் இளிக்க புன்னகையோடு அவள் முகத்தில் விழும் முடிக்கற்றை காதோரம் ஒதுக்கியவன் அவளின் கண்களில் அப்பட்டமாய் தெரிந்த சோர்வை கண்டு,
“கொஞ்ச நேரம் தூங்கி இருக்கலாமே சக்தி… இன்னமும் மயக்கம் தெளியல உனக்கு.. விடிஞ்ச பின்னாடி நிற்க நேரம் இருக்காது..” என்க மறுப்பாய் இடமும் வலமும் தலையசைத்து,
“எனக்கு தூங்க வேணாம்.. உன்கிட்ட பேசணும்..”
என்றாள். அதில் முறைத்த ஆரியன்,
“தெரியாமல் உங்க அப்பா சொன்னதை ஆரம்பிச்சு வைச்சுட்டேன்.. அதை முழுசா கேட்க தானே இப்படி அடம் பண்ற நீ..”
என மிரட்டலாய் கேட்கவும் மையமாய் தலையை உருட்டி,
“அதுவும் தான்..” என இழுத்தவள்
“ஆனால் வேற ஒன்னும் இருக்கு..”
என்று பீடிகை போட்டாள்.
“வேற.. என்ன..” குழப்பமாய் பார்த்தவனிடம்,
“அப்புறம் சொல்றேன்.. முதல்ல நீ சொல்லு.. உண்மையாவே அப்பா அப்படி சொன்னாரா ஆர்யா..”
என்று தவிப்பாய் கேட்க அமோதித்த ஆரியனும் விஷாகன் யாமினியிடம் சொன்னதையே தானும் கூறினான்.
“மாமா ஒன்னு நினைக்க நடந்தது எல்லாமே வேறையாகிடுச்சு.. இஷ்டம் போல ஓடிட்டே இருந்த வரையும் அவருக்கு எதுவும் பெருசா தெரியல போல… இப்ப அந்த ஓட்டம் பிடிக்காம நிற்கும் போது தான் குடும்பத்தோட அருமை புரியுது.. ஆனால் இப்ப நீயும் இல்ல.. உங்க அம்மாவும் நெருங்க விடல.. அன்னைக்கு ரொம்ப ஃபீல் பண்ணி பேசுனார்..”
சக்தி அமைதியாகவே வானை வைத்த விழி வாங்காமல் நோக்க அவள் மூளைக்குள் என்ன ஓடுதோ என நினைத்த ஆரியன்,
“என்ன சக்தி..” என்று அனுசரணையாய் பார்க்க அவனின் பயம் உணர்ந்து லேசாய் புன்னகைத்து,
“ஒன்னும் இல்ல.. முடிஞ்ச எதுக்குமே இனி நான் வருத்தப்பட போறது இல்ல ஆர்யா.. நடக்கணும் இருக்கிறது நடந்தே தீரும்.. ஆனால் எது எப்படி இருந்தாலும் அப்பாவிற்கு அம்மாவை விலகும் எண்ணம் இல்லைல.. அதுவே போதும் எனக்கு..”
என்றிட சக்தி பேச்சில் இருந்த நம்பிக்கை அவனையும் நிம்மதியுற செய்தது.
மலர்ந்த சிரிப்போடு அவள் நெற்றி முட்டி,
“சந்தோஷம் தானே.. இப்பவாவது போய் நிம்மதியா தூங்கு..”
என்று சொல்ல,
“போகவா..?? நான் ஒன்னு சொல்லணும்னு சொன்னேனே.. கேட்க வேணாமா..”
என அவள் முறைக்கவும்,
“சரி.. என்ன சொல்ல போற..”
என்று அவள் முகம் நோக்க மீண்டும் பார்வையை விலக்கி கொண்டவள்,
“அது.. வந்து.. குழந்தைங்க பத்தி என்ன நினைக்கிற..”
என்று கேட்க, “என்ன நினைக்கிறேனா..” என புரியாமல் பார்த்தாலும் சட்டென்று தலையில் பல்ப் எரிய,
“சக்தி.. என்ன பார்..” என தன்னை நோக்கி அவளை திருப்பினான். சில்லென்று ஏதோ தாக்கிய உணர்வில் உடல் சிலிர்க்க,
“என்னானு நேரா சொல்லுமா..”
என்று ஆர்வமாய் அவன் பார்க்க இதழ் ஓர வெட்க முறுவலோடு,
“நாள் தள்ளிபோய் 36 டேஸ் ஆச்சு… பேபி தான் நினைக்கிறேன்.. நேத்தில் இருந்தே இதே தான் தோணுது..”
என அவனை பற்றிக் கொள்ள சந்தோஷ படபடப்பில் தானும் அவளை தன்னோடு இறுக்கிக் கொண்டான்.
நெகிழ்ச்சியாய் ஆரியன் சொல்ல அவளுக்கும் கண்கள் கலங்கிற்று. புன்னகையோடு அவன் கூறியதை ஆமோதித்து தலையசைத்தவள்,
“இனிமே தான் டெஸ்ட் பண்ணனும்.. ஒரு மாதிரி நர்வஸா இருக்குடா.. இதுவரை குழந்தை பத்தி அதிகம் யோசிச்சது இல்ல.. இப்ப இது உண்மையா இருக்கணும்னு ரொம்ப ரொம்ப ஆசையா இருக்கு..”
என எதிர்பார்ப்போடு சொல்ல அவள் விழியில் முத்தமிட்டு,
“நல்லதே நினைப்போம்..” என்றவன் குரலும் உணர்ச்சி குவியலாய் விகசித்தது.
அந்த நேரம் இருவருக்குமே மற்றவர் அருகாமை அவசியமானதாய் இருக்க இருண்ட வானம் மெல்ல வெளுத்து விடியலை உணர்த்தும் வரையிலும் அவர்கள் நிலையில் மாற்றமில்லை.
அதிகாலையிலே முகூர்த்த பரபரப்பு தொடங்க யார் கவனமும் கவரா வகையில் மீண்டும் அவர்களோடு வந்துவிட்டாள் சக்தி.
மேக்னா மட்டுமே, “எங்க போனீங்க அண்ணி.. நைட் உங்களை காணுமே..”
என்று கேட்க அவள் முடிக்கும் முன்னரே அவள் வாயை மூடி,
“ஷ்ஷ்.. கல்யாண பொண்ணு.. அதை எல்லாம் மறந்துட்டு அண்ணாவை மட்டும் மைண்ட் ஃபிக்ஸ் பண்ணி கடகடன்னு ரெடி ஆகு..”
என்று சிரிக்கும் கண்களோடு அவசரப்படுத்த,
“ம்ஹும்.. இங்கே யாரு புது பொண்ணுனே புரியல ப்பா..” என குறும்பாய் சொல்லி சக்தியிடம் செல்லமாய் ஒரு இடியையும் பெற்றுக் கொண்டாள்.
அதன் பின்னர் ஒவ்வொரு சம்பிரதாயமும் முறையாய் நடக்க பொன்மஞ்சல் தாலியை அணிவித்து கார்த்திக் மேக்னா திருமண வைபோகம் இனிதே முடிந்தது.
முதல் நாளிரவு சிறிதும் கண்ணயரவில்லை என்றாலும் மனதின் மகிழ்ச்சி சக்தியை சுறுசுறுப்பாய் வைத்திருக்க தன் பிரியமான நாத்தனாரின் திருமணத்தில் உற்சாகமாய்
ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்ய,
“உன் மருமகள் தங்கமான பிள்ளையா இருக்கு ரம்யா..”
என்பதை சிலர் ரம்யாவிடம் நேரடியாகவே சொல்லி இருந்தனர்.
மண்டபத்தில் இருந்தே விஷாகனும் யாமினியும் விடைபெற்றுக் கொள்ள,
‘உறுதியாய் தெரியும் முன் சொல்ல வேண்டாம்..’ என நினைத்து இருந்தவள் அவர்கள் கிளம்பி செல்லும் போது மனம் கேட்காமல் சொல்லியே விட்டாள்.
தங்கள் மகளின் மகவு என்றதும் புதிதாய் ஓர் சந்தோஷம் அந்த மூத்த தம்பதியர் மனதில் வீச அதனை வார்த்தையில் வெளிப்படுத்தவும் தவரவில்லை.
சக்தியோ,
“எனக்கு நீங்க ஒரு ப்ராமிஸ் செய்யணும்..”
என்று பொதுவாய் இருவரையும் பார்த்தவள் அவர்களின்,
“என்ன வேணும் சொல்லுமா..” என்ற கேள்வியில்,
“நான் இன்னொர் யாமினியாவோ இல்லை நீங்க சொல்ற சராசரி பெண்ணாவோ இருப்பேனா தெரியாது.. ஆனால் என் பிள்ளை இன்னோர் சக்தியா இருக்க வேண்டாம்.. இதை சுயநலம்னு சொன்னாலும் சரி பேராசைனு சொன்னாலும் சரி.. என் பிள்ளைக்கு நிறைய நிறைய அன்பு கிடைக்கணும்.. அவங்க அப்பா அம்மா கிட்ட இருந்து.. அவங்க அப்பாவோட அம்மா அப்பாட்ட இருந்து மட்டும் இல்ல.. அவங்க அம்மாவோட அம்மா அப்பாட்ட இருந்தும் வேணும்.. நடக்கும் தானே..”
என கண்களில் ஆவலை தேக்கி நின்ற தோரணையில் அவர்கள் மனம் உருகி போனது.
தன் இயல்பை மீறி சக்தியை அனைத்துக் கொண்ட யாமினி,
“சாரி பேபி.. என் வோர்ட்ஸ் உன்னை ரொம்ப அஃபக்ட் பண்ணிருச்சு.. ஸோ சாரி..”
என்று உடைந்த குரலில் சொல்ல விஷாகனுக்கும் பேச்சே எழவில்லை.
அன்றிரவே கர்ப்ப பரிசோதனை அட்டைக் கொண்டு வீட்டிலே சோதிக்க அவர்களை ஏமாற்றாமல் இருக் கோடிட்டு மகிழ்ச்சியை உறுதிப் படுத்தியது.
வீட்டில் அனைவரிடமும் கூறியபின் மகிழ்ச்சி இரட்டிப்பாக புது வரவை ஆவலோடு எதிர்பார்த்து இருந்தனர்.
வரவேற்பில் தொடங்கிய மயக்கம் நாள் ஆக ஆக வாந்தி, தலைசுற்றல் என அதிகரிக்க மசக்கையில் பாடுபட்டவளை மொத்த குடும்பமும் அப்படி தான் தாங்கியது.
இவ்வாறு எல்லாமே மகிழ்ச்சி நிழலில் தான் போய் கொண்டு இருந்தது வாய்ஸ் எக்ஸ்பெர்ட்ஸிற்காக சென்னை கிளம்பும் வரை..!!
பயிற்சிக்காக நிகழ்ச்சியின் முதல் படபிடிப்பிற்கு ஒரு வாரம் முன்பாகவே
சென்னை செல்ல ஏற்பாடு செய்தபின் அதனை வீட்டிலும் சொல்ல யாரும் எதிர்பார்க்காத வகையில் ரம்யாவிடம் பலமாய் எதிர்ப்பு கிளம்பியது.
“நீங்களே எல்லாம் முடிவு பண்ணிக்குவீங்க.. எந்த விஷயத்திலும் எங்களை மதிக்க கூடாதுனு புருஷனும் பொண்டாட்டியும் முடிவோட தான் இருக்கீங்க இல்ல..”
சட்டென்று கோபமாய் ரம்யா பேசவும் சக்தி ஆரியன் இருவருக்குமே ஒன்றும் விளங்கவில்லை. திருவை பார்க்க அவரும் அமைதியாகவே இருந்தார்.
“என்ன ம்மா.. ஏன் அப்படி சொல்றீங்க..”
“ஏன் உனக்கு தெரியாதா..?? நாளைக்கு போக போறேன்னு இப்ப சொல்றீங்க.. அதுவும் மாசமா இருக்க பொண்ணை அழைச்சுட்டு போறேன்னு சொல்ற.. எங்க கிட்ட முன்னாடியே ஒரு வார்த்தை கேட்கணும்னு தெரியாது..”
‘ஊருக்கு போகும் முன்னாடி தானே சொல்றோம்.. மாசமா இருந்தால் இதுக்கு எதுவும் முறை இருக்கோ.. ‘
என்று யோசித்தாலும்,
“இல்ல அத்தை.. இன்னும் நிறைய ப்ராடீஸ் செய்யணும்.. ஆல்ரெடி நான் லேட் தான்.. ஒரு வாரம் ஆவது முன்னாலே போனா தான் சரியா இருக்கும்.. இல்லைனா கஷ்டம்.. அந்த கவலையில் வேற யோசிக்கல.. அடுத்தடுத்த ஷுட் கூட போக வர என்ன செய்யலாம்னு உங்க கிட்ட கேட்டுக்க தான் இருந்தேன்..”
என தன்மையாகவே சக்தி சொல்ல ஆரியன் தன் அன்னையையே பார்த்திருந்தான்.
அவர் வேறு எதற்கோ தான் சொல்கிறார் என்று அவனுக்கு தோன்றியது.
அவன் சந்தேகத்தை மெய்பிப்பது போல்,
“நீ போறது பத்தி பேசும் முன்னாடி இப்ப இந்த போட்டியில் கலந்துக்கிறதே வேணுமா வேணாமானு கேட்டியா சக்தி..”
என்று ரம்யா அழுத்தமாய் கேட்க சக்தி அதிர்ச்சியில் உறைந்து விட்டாள்.
‘இதென்ன கடைசி நேரத்தில் இப்படி சொல்றாங்க.. ‘ என பகீரென இருந்தது.
“கேட்க என்ன இருக்கு.. எல்லாருக்கும் முன்னமே தெரியும் தானே.. இப்ப வந்து ஏன் ம்மா புது பிரச்சனையை கிளப்புறீங்க..”
ஆரியனும் டென்ஷன் ஏற சிடுசிடுக்க,
“ஆமா டா.. பிரச்சனையை கிளம்புறது தான் என் வேலை இல்ல…! இதுவரை உனக்கு அப்படி எத்தனை பிரச்சனையை கொடுத்து இருக்கேன்.. சொல்லு.. எந்த பிரச்சனையும் வர கூடாதுன்னு என்னோட வீம்பை எல்லாம் விட்டுக் கொடுத்து உங்களுக்காக ஒன்னு ஒன்னையும் யோசிச்சு யோசிச்சு செய்யறேன்ல.. அப்போ இப்படி தான் பேசுவ..”
என அவரும் பதிலுக்கு கத்தினார். தன்னிடம் முன்பே போட்டி குறித்து அபிப்ராயம் கேட்பார்கள்.. நாம் நினைப்பதை சொல்லலாம் என்று அவர் எண்ணி இருக்க இவர்கள் நாளை போக இன்று வந்து தகவல் சொல்லவும் கோபம் தலைகேறியது.
“ரம்யா.. என்ன சொல்றதா இருந்தாலும் நிதானமா பேசு.. அது பிள்ளதாச்சி பொண்ணு.. அவ முன்னாடி ஏன் இப்ப கத்தி சண்டை போடுறா மாதிரியே பேசுற..”
சக்தியின் வெளிறிய முகத்தை கண்டு திரு சொல்லிய பின்னே ரம்யா கொஞ்சம் வாயை குறைத்தார். ஆனாலும் தன் பிடியை தளர்த்தவில்லை.
முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்த ஆரியனை விடுத்து சக்தியிடம்,
“முன்னாடி இருந்த நிலைமையும் இப்பவும் வேற சக்தி.. நீ அவ்வளவு பெரிய மேடையில் பங்கேற்க போறேன்னு எங்களுக்கும் ரொம்ப சந்தோஷமா தான் இருந்தது. ஆனால் இப்ப நீ மாசமா இருக்க.. இந்த நிலைல இந்த போட்டி எல்லாம் வீண் அலைச்சல் தானே..”
என எடுத்து சொல்ல அதனை அவளால் ஏற்கொள்ள முடியவில்லை.
“ப்ரெக்னென்ட்டா இருந்தால் என்ன அத்தை..??? நான் டான்ஸ் ஆட போறது இல்லையே.. உட்கார்ந்து வாசிக்க தான் போறேன்..”
“அது சரி.. ரொம்ப சாதாரணமா சொல்லிட்ட.. இங்கிருந்து அவ்வளவு தூரம் போறதும் வரதும்.. ஓய்வே இல்லாம கண் முழிச்சு நீ பிராடீஸ் பண்ணுவ.. அங்க படப்பிடிப்பும் எத்தனை மணி நேரம் நடக்குமோ.. எல்லாம் யோசிச்சு தான் சொல்றேன்.. முதல் மூணு மாசம் ரொம்ப கவனமா இருக்கணும்.. இந்த நேரத்தில் இந்த ரிஸ்க் எடுக்க எல்லாம் நான் சம்மதிக்கவே மாட்டேன்..”
அவர் பிடிவாதமாய் மறுத்து சக்தியின் இரத்தழுத்ததை எகிற வைத்தார்.
“அவ கவனமா இருப்பா அம்மா.. நீங்க இதை பெரிசாக்காத்தீங்க..”
“என்ன இருந்துப்பா.. சேர்ந்தா மாதிரி ஒரு ஒரு மணி நேரம் உட்கார்ந்து இருந்தாலே இடுப்பு வலி வந்திடுது.. அப்படியே கிறக்காம சாஞ்சுடுறா.. இப்படி இருக்கும் போது எப்படி சமாளிப்பான்னு கேட்குறேன்..”
என்று ரம்யா சொன்னதில் அவனாலும் பதில் சொல்ல முடியவில்லை. உண்மை தானே அது..!! மசக்கை கஷ்டங்கள் அவளை அதிகமாகவே வாட்டுகிறது தான்.. ஆனால்..!!
அவன் நிமிர்ந்து அவள் முகம் பார்க்க அதில் எக்கசக்கமாய் டென்ஷன் கொட்டிக் கிடந்தது.
“சக்தி.. இந்த தடவை தானே வேணாம்ணு சொல்றா.. அந்த நிகழ்ச்சி வருஷா வருஷம் நடப்பது தானே.. நீ அடுத்த முறை கலந்துக் கொள்ளலாம் இல்லையா..?”
“நான் மட்டும் என்றா பரவாயில்ல மாமா.. எங்க டீம் வொர்க் இது.. எனக்காக அவங்க வாய்ப்பையும் விட்டுக் கொடுக்க சொல்வது அபத்தம்..”
என சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடையிட்டு,
“அப்போ அவங்க இப்ப பங்கேற்கட்டும்.. நீ மட்டும் அடுத்த முறை பண்ணு.. உங்க அம்மாவோட நிகழ்ச்சி தானே.. உனக்கு கிடைக்காதா என்ன..”
என்று ரம்யா கேட்க அவருக்கு என்ன சொல்லி புரிய வைப்பது என ஆயாசமாய் வந்தது.
“இல்ல அத்தை.. அப்படி எல்லாம் செய்ய முடியாது.. “
என சொல்லிவிட மேற்கொண்டு பேச்சு வளரும் முன் யாரோ விருந்தாளி வந்ததால் தடைபெற்றது.
அதன்பின் நாள் முழுக்க சக்தியும் ரம்யாவும் ஆளுக்கு ஒரு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டு திரிய ஆரியன் தான் திண்டாடினான்.
இருவருமே இறங்கி வருவதாய் இல்லை.
“அவ இதுக்காக நிறைய உழைச்சு இருக்கா ம்மா.. கடைசி நேரத்தில் கலந்துக்க வேண்டாம்னு எப்படி சொல்ல முடியும்.. ப்ளீஸ் ம்மா.. “
என தனிமையில் தன் அன்னையை அவன் சமாதானம் செய்ய முனைய,
“புரியாம பேசாத ஆர்யா.. நீங்க ரெண்டு பேருமே சின்ன பசங்க.. உங்களுக்கு தெரியல.. போட்டி முக்கியம் தான்.. அதைவிட குழந்தை முக்கியம் இல்லையா..?? அவளோட உடல்நிலையும் சரியில்லை.. இப்பவே ரொம்ப சிரமப்படுறா.. அந்த சூழலில் எல்லாம் நிறைய டென்ஷன் தான் கொடுக்கும்.. எதாவது ஒன்னு கிடக்க ஒன்னு நடந்தால்.. நினைக்கவே பயமா இருக்கு..”
என்று அவர் பேச பேச அவனே யோசிக்க தொடங்கிவிட்டான்.
குழந்தை என வரும்போது தகப்பனாய் அவனுக்கும் மனம் தடுமாறவே செய்தது.
அதன் விளைவாய்,
“சக்தி..பொறுமையா யோசிச்சு பாறேன்.. அம்மா சொல்றா மாதிரி ப்ரெக்னென்ஸி சிக்னஸ் உன்னை நிறையவே படுத்துது.. இந்த நிலைமைல ரிஸ்க் வேணாமே டா.. நெஸ்ட் டைம் முயற்சி பண்ணலாமே..”
என்று சொல்ல ஆரியனே அப்படி சொன்னதும் சட்டென்று கண்கள் கலங்கிவிட்டது.
“நீயுமா இப்படி சொல்ற..”
என்று மட்டுமே கேட்டாள். அதற்கும் மேல் எதுவும் சொல்ல கூட அவளுக்கு தெம்பில்லை. அழுகை தான் பொங்கியது.
“இல்ல டா..” என அவன் மேலும் எதுவும் சொல்லும் முன்,
“வேணாம்.. விட்டுடு..”
என்று தலையை பிடித்துக் கொண்டு கட்டில் தலைமாட்டில் சாய்ந்து படுத்துக் கொண்டாள். சற்று முன் சாப்பிட்ட அனைத்தும் வாந்தி எடுத்ததில் களைத்து இருந்தவள் இன்னமும் வாடிய கொடியாய் தெரிந்தாள்.
சக்தியே முதலில் போட்டியில் எல்லாம் பெரிதாக ஆர்வம் இல்லாமல் தான் இருந்தாள். ஆனால் அவர்கள் நிகழ்ச்சியில் தேர்ச்சி பெற்றபின் தானாய் ஒரு ஆர்வமும் ஆசையும் ஒட்டிக் கொண்டது. அதன்படி இந்த இரண்டு மாதத்தில் தயாராக நிறைய மெனக்கெட்டு இருக்கிறார்கள். தன் மனதை வெற்றி பெற வேண்டும் என முழுதாய் அர்ப்பணித்து பயின்றாள். இவ்வளவு செய்தபின் கடைசி நேரத்தில் பின் வாங்க சொல்வதை அவளால் துளியும் ஒப்புக் கொள்ள முடியவில்லை.
அதுவும் இது அவளை சார்ந்த முடிவு மட்டும் இல்லையே..!!
‘ஆர். ஒ. எல்’ லின் செயலாக்கம் அவர்கள் ஐவரையும் சார்ந்தே உள்ளது. அதில் தான் மட்டும் விலகுவதால் மற்றவர்களுக்கு இழப்பு தான்..!! அத்தை மாமாவிற்கு தான் புரியவில்லை என்றால் ஆரியனும் இப்படி சொல்லி விட்டானே என ஆற்றாமையாய் இருந்தது.
நாளை சக்தி வந்துவிடுவாள் என்ற நம்பிக்கையோடு வாட்ஸ்சப் குழுவில் உற்சாகமாய் அவர்கள் வகுக்கும் திட்டங்களை காண குற்றவுணர்வாய் இருக்க அலைபேசியை அமர்த்திவிட்டு மீண்டும் படுத்துவிட,
“சக்தி..” என சிறிது நேரத்தில் பாலோடு ஆரியன் வந்து எழுப்பினான்.
“எனக்கு வேண்டாம்..”
முகம் சுணங்க மறுத்தவளை,
“சாப்பிட்ட எல்லாமே வெளியே வந்திடுச்சு.. பசிக்கும்னு தெரியும்.. சும்மா கோபத்தில் பிடிவாதம் பண்ணாத..”
என்று அவன் அதட்டவே,
விடமாட்டான் என்பதால் வாங்கி கடகடவென குடித்துவிட்டு அவனை பார்க்காமல் மீண்டும் படுத்துக் கொள்ள ஆரியனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.
அவளுக்காகவும் யோசித்து அன்னை சொல்வதையும் யோசித்து முடிவெடுக்க முடியாமல் மனம் ஊசலாடியது.