அத்தியாயம் 2
உன் மீது கொண்ட
காதல் கடலில்
மூழ்கி விட துடிக்கும்
என்னை எரிக்கும் காதல் தீ நீ!!!
கதிரின் பின்னே நடந்த தேன்மொழிக்கு வாழ்க்கையை நினைத்து வெறுப்பு வந்தது. இவனுடன் இந்த நேரத்தில் நடக்கும் நிகழ்ச்சியை அவள் கனவில் கூட எண்ணியதில்லை.
அவனுடன் நடப்பது மட்டுமா? திருமணம் முடிந்த பின் இனி அவன் தான் அவளின் கணவன். கடைசி வரைக்கும் அவனுடன் தான் வாழ வேண்டும். தன்னை அனைவரும் ஆட்டி வைக்கும் பொம்மை போல உணர்ந்தாள் தேன்மொழி.
இத்தனை நாள் வரை பிறந்த வீட்டில் ஆட்டி வைத்தார்கள். இனி புகுந்த வீட்டில் ஆட்டி வைப்பார்கள். பாசம் என்ற நூல்கயிரை அல்லவா ஆட்டி வைக்கிறார்கள். அவளுடைய விருப்பத்தை கேட்பதற்கு உலகில் எவரும் இல்லை.
“இத்தனை நாள் அன்புக்கு அடி பணிந்தேன். இனி இவனுக்கு செய்த சத்தியத்துக்கு அடி பணிய வேண்டும்”, என்று எண்ணி விரக்தி சிரிப்பு சிரித்தாள்.
சுற்றிலும் இருள் போர்வை மூடியிருந்தது. பகலில் பச்சை பசேலென இருந்த சோளக்காடு, கம்பங்க்கொல்லை அனைத்தும் இப்போது சரசரவென்று ஒலி எழுப்பி அவளை அச்சுறுத்தியது.
இருட்டில் வரப்பில் நடப்பதற்கு தடுமாறினாள். கால்கள் பின்னி நடப்பதற்க்கே தடுமாறினாள். அவனோ அவளைப் பற்றி நினைப்பில்லாமல் முன்னே நடந்து கொண்டிருந்தான்.
எதை எதையோ யோசித்துக் கொண்டே வந்தவள் ஒரு வரப்பில் இருந்து அடுத்த வரப்பில் கால் வைக்கும் போது கால் வழுக்கி “ஆ அம்மா”, என்ற அலறலுடன் கீழே விழுந்தாள்.
அவள் அலறலில் அதிர்ந்து போன கதிர் “தேனு”, என்று கூவலுடன் அவளைப் பிடித்தான். “என்ன ஆச்சு? என்ன மா ஆச்சு? பாத்து வரலாம்ல?”, என்று கேட்டுக்கொண்டே அவளை தூக்க முயற்சி செய்தான்.
அவன் குரல், அவன் செய்கை, அந்த நேரத்தில் அவனுடைய தவிப்பு என்று எதையுமே உணர விடாமல் வலி உயிர் போனது. அவன் தூக்கும் போது தான் உணர்ந்தாள் காலை அசைக்க முடியாமல் .இருப்பதை.
“ஆ என்னால காலை அசைக்க முடியலை. என்னை விடு”, என்று கத்தினாள்.
[the_ad id=”6605″]
“சுழுக்கு விழுந்துருக்கா இருக்கும். நீ அசைக்காம இரு”, என்றவன் அப்படியே அவளை இரு கைகளிலும் அள்ளினான்.
சத்தியமாக அவன் இப்படி தூக்குவான் என்று அவள் எதிர் பார்க்க வில்லை. பிடிப்புக்காக அவன் சட்டையை இறுக பற்றிக் கொண்டாள் தேன்மொழி.
இருவரையும் நீல வானில் பவனி வரும் அந்த வெண்ணிலா புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தது. “நாளையில் இருந்து எனக்கு தேய்பிறை, ஆனால் இனி உன் வாழ்வில் என்றுமே வளர் பிறை தான்”, என்று வாழ்த்திய நிலவு மேகத்துக்குள் ஒளிந்தது.
வலி உயிர் போனதால் அவன் கழுத்தில் முகத்தை புதைத்துக் கொண்டாள் தேன்மொழி.
அவன் வியர்வை வாசம் அவள் மூக்கைத் துளைக்க ஒரு வித அவஸ்தையை உணர்ந்தாள். தாவணி சிறிது விலகி இருந்ததால் வெற்றிடையில் பதிந்த அவனுடைய கைகள் பிடிப்புக்காக சற்று அசைந்து அவளுக்கு மேலும் இம்சையை கொடுத்தது. வலியை கூட அப்போது மறந்து விட்டாள்.
முதல் முறை அவனுடைய முகத்தை அருகில் இருந்து பார்த்தாள். அவன் முகத்தை ரசிக்கும் முன்பே அவன் கழுத்தில் இருந்த சங்கிலி அவள் கண்ணில் பட்டது. அதில் இருந்த புலிநகம் டாலர் அவள் மனதில் எழும்பிய சலனத்தை துணி கொண்டு துடைத்துப் போட்டது. அவளுடைய தற்போதைய நிலை அனைத்தும் நினைவில் வந்தது.
அவனை அவளுக்கு பிடிக்காது தான். ஆனால் அவனை விட அந்த டாலர் அவளுக்கு அறவே பிடிக்காது. அவனை வெறுக்கும் காரணங்களில் அதுவும் ஒன்று.
“இவன் முகத்துலே முழிக்க கூடாதுன்னு நினைச்சேனே? கடைசில இவன் தூக்குற நிலைமை வந்துருச்சே”, என்று எண்ணினாள்.
[the_ad id=”6605″]“உன் வீட்ல உனக்கு என்னத்த டி கொடுத்து வளத்தாங்க? இந்த கணம் கணக்குற. பாக்க பச்ச புள்ள மாதிரி இருந்துகிட்டு என் பெண்டே நிமிருது”, என்று புலம்பினான் கதிர்.
“இப்படி இருட்டுக்குள்ள கூட்டிட்டு வந்தா வழுக்கி விடாம என்ன செய்யும்? அதை நீ முன்னாடியே யோசிச்சிருக்கணும். நீ மட்டும் என்ன தேவாங்கு மாதிரியா இருக்குற? செனைப்பன்னி மாதிரி தான இருக்க?”
“செனைப்பன்னியா? அதெல்லாம் என்னோட உடல் கட்டுகள் டி அத்தை பொண்ணே. உனக்கெல்லாம் அதெங்க தெரிய போகுது. அப்புறம் உன்னை இருட்டுல கூட்டிட்டு போகாம சீரியல் பல்ப் போட்டு மேள தாளத்தோடயா கூட்டிக்கிட்டு போவாங்க”
“பேசாம போ, நீ பேசினாலே எனக்கு எரிச்சலா இருக்கு”, என்று அவள் சொன்னதும் அவனும் வாயை மூடிக் கொண்டான். அவனுடைய பண்ணை வீட்டுக்கு சென்றவன் அங்கிருந்த திண்ணையில் அவளை அமர வைத்தான்.
“வீட்டுக்கு கூட்டிட்டு போகாம இங்க கூட்டியாந்த்துருக்கான். இவன் வீட்டுக்கு கூட்டிட்டு போனா இவனும் தான் செருப்படி வாங்குவான். ஆனா இவன் பிளான் என்னன்னே தெரியலையே”, என்று எண்ணிக் கொண்டு அவனைப் பார்த்தாள்.
அவனோ கதவை தட்டிக் கொண்டிருந்தான். “உள்ள யார் இருக்கா?”, என்று எண்ணிக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தாள் தேன்மொழி.
கதவைத் திறந்த ஆளைப் பார்த்ததும் ஒரு முறை முறைத்தாள் தேன்மொழி. அவள் முறைப்பை கண்டு கொள்ளாமல் “இந்த எடுபட்ட சிறுக்கியை கூட்டியார தான் இந்த அர்த்த ராத்திரில போனியா பேராண்டி. உனக்கு வேற ஆளே கிடைக்கலையா டா?”, என்று கேட்டாள் இருவருக்கும் பாட்டியான அன்னலட்சுமி.
“உன் கிண்டலை அப்புறம் வச்சிக்கோ பாட்டி, முதல்ல வெண்ணி போடு. இவ காலுல சுழுக்கு விழுந்துருக்கு”, என்று சொல்லிக் கொண்டே அவளை தூக்கினான் கதிர்.
“தரைல கால் படாம ஆடிக்கிட்டு அலைஞ்சா இப்படி தான் நடக்கும்”, என்று சொல்லி கழுத்தை நொடித்து விட்டு உள்ளே சென்று விட்டாள்.
இவனும் அவளை தூக்கி கொண்டு ஒரு படுக்கை அறைக்கு சென்றான். மெதுவாக அவளை கட்டிலில் விட்டவன் அவள் காலைத் தூக்கி மேலே வைத்து அவளை படுக்க வைத்தான்.
வேண்டா வெறுப்பாக முகத்தை வைத்துக் கொண்டு இருந்தாள் தேன்மொழி.
சிறிது நேரத்தில் வெண்ணீருடன் வந்த அன்னம் “பாவாடையை தூக்குடி”,என்றாள்.
“இந்த கிழவியை அம்மிக்கல்லை போட்டுத் தான் கொல்லணும்”,என்று எண்ணிக் கொண்டு சற்று மேலே நகர்த்தினாள்.
கையை வைத்து அழுத்தி பார்த்தாள் அன்னம். கணுக்காலில் அழுத்தம் கொடுத்ததும் “ஆ”, என்று கத்தினாள் தேன்மொழி.
“கத்தாம இரு டி”, என்று சொல்லிக் கொண்டே எண்ணைய் போட்டு தேய்த்து விட்டாள் அன்னம். தேன்மொழியோ வலி பொறுக்க முடியாமல் கத்திக் கொண்டு தான் இருந்தாள்.
“கதிரு, தாத்தா வேட்டியை கொஞ்சம் கிழிச்சு தா டா”, என்று அன்னம் சொன்னதும் கதிரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அவனிடம் இருந்து அசைவும் இல்லை.
அதை உணர்ந்த அன்னம் அவனை திரும்பி பார்த்தாள். அவன் பார்வையோ வெள்ளை வெளேரென்று இருந்த தேன்மொழியின் கால்களில் தான் இருந்தது.
அவனைப் பார்த்து சிரிப்பு வந்தாலும் அதை அடக்கிய பாட்டி சிறிது தண்ணீரை எடுத்து அவன் முகத்தில் தெளித்தாள்.
[the_ad id=”6605″]அதில் சுயவுணர்வுக்கு வந்தவன் பாட்டியைப் பார்த்து அசடு வழிந்தான். “தாத்தா வேட்டியை கொஞ்சம் கிழிச்சு தான்னு சொன்னேன் டா”
“இதோ தரேன் பாட்டி”, என்று சொல்லி எடுக்க சென்றான்.
“நான் பாத்ததை இந்த பாட்டி பாத்துருச்சோ?”, என்று எண்ணி வெட்கமாக வந்தது அவனுக்கு.
அவன் துணியைக் கொடுத்ததும் கொதிக்க வைத்த மஞ்சணத்தி இலைகளை இதமான சூட்டில் அவள் காலில் வைத்து கட்டுப் போட்டாள்.
பின் பாட்டியும் பேரனும் வெளியே சென்று விட்டார்கள். அவர்கள் போன திசையை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் தேன்மொழி.
சிறிது நேரத்தில் கையில் தட்டுடன் வந்தாள் அன்னம். அதைப் பார்த்ததும் “இந்த கிழவி கிட்ட சாப்பாடு வேண்டாம்னு முகத்துல அடிக்கிற மாதிரி சொல்லணும்”, என்று எண்ணினாள்.
ஆனால் அன்னமோ தேன்மொழி அருகில் அமர்ந்து அவள் வாயில் ஊட்ட ஆரம்பித்து விட்டாள். அவளை அறியாமலே தேன்மொழி வாய் உணவுக்காக திறந்து விட்டது.
எப்போதும் ஏழு மணிக்கு வயிற்றை நிரப்பும் தேன்மொழி இன்று பத்து மணி வரைக்கும் பசியை தாங்கி கொண்டு இருப்பது அதிசயம். அதற்கு மேல் பசி தாங்க முடியாமல் அந்த நெத்திலி கருவாட்டுக் குழம்பை ருசித்து சாப்பிட்டாள்.
தட்டு காலியாகும் வரை உண்டாள். பின் கையை கழுவ அன்னம் எழும் போது “சாப்பாடு பத்தலை கிழவி. இன்னும் வேணும்”, என்றாள்.
உள்ளுக்குள் இளகினாலும் வெளியே காட்டாமல் “என்னையா கிழவின்னு சொல்ற? பசியோட கிட டி”, என்றாள் அன்னம்.
“என் அம்மா வீட்டு சொத்துக்கு நான் ஒரே வாரிசாக்கும். நீயும் உன் பையனும் உன் பேரனும் மொத்தமா ஆட்டையை போடலாம்னு நினைக்கிறீங்களோ? சோறு கொடு கிழவி. உன் கை சமையலுக்கு நான் அடிமைன்னு உனக்கு தெரியாதா?”
“ஆமா ஆமா சொத்து பெரிய சொத்து தான். அதை வச்சு தான் நான் வானத்தை வளைக்க போறேனாக்கும். என் மவளை ராணி மாதிரி வச்சிருக்கான் உன் அப்பன். அவளுக்கு எதுக்கு எங்க சொத்து தேவைப்படும்? அதான் சொந்தமும் வேண்டாம்னு போய்ட்டாளோ என்னவோ?”, என்று கேட்ட அன்னத்தின் கண்களில் கண்ணீர் வடிந்தது.
“எனக்கு சோறே வேண்டாம். ஆளை விடு”, என்று சொல்லி திரும்பிக் கொண்டாள் தேன்மொழி.
“இரு டி எடுத்துட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு எழுந்து சென்றாள்.
தேன்மொழியின் வயிறு நிறையும் வரை அவளுக்கு ஊட்டினாள் அன்னம்.
“எங்க போனான் உன் பேரன்?”, என்று கேட்டாள் தேன்மொழி.
“ஏட்டி, வயசுக்கு மூத்தவனை அவன் இவன்னு பேசுற? சரி அவனை எதுக்கு நீ கேக்குற?”
“ஹ்ம், பேன் பாத்து சிக்கெடுக்கத்தான். சரி சரி எனக்கு தூக்கம் வருது. நாளைக்கு நினைச்சா பயமா தான் இருக்கு. எனக்கு ஒரு சந்தேகம் கிழவி”
“என்ன?”
“நீ தான் குடும்பத்தை சேக்குறதுக்கு அவனை தூண்டி விட்டியா?”
[the_ad id=”6605″]
“நீ கேக்குறது நல்ல கேள்வி தான். இத்தனை நாள் எனக்கு இது தோணாம போச்சே. என் பேரன் உன்னை முழுகாம ஆக்கிட்டான்னா உன் வீட்ல உள்ளவங்க இங்க வந்து தான ஆகணும்? ஆனா என் பேரன் சுத்த தங்கமாச்சே. உரிமை இல்லாத பொண்ணை நிமிந்து கூட பாக்க மாட்டான். இப்ப கூட பாரு. நான் இங்க இருந்தா நல்லா இருக்காதுன்னு கிளம்பி போய்ட்டான். போன் போட்டு வர சொல்றேன். இன்னைக்கு முதலிரவு கொண்டாடு பேராண்டி, நாளைக்கு கல்யாணம் முடிக்கலாம்னு சொல்றேன்”, என்று அன்னம் சொன்னதும் தூங்குவது போல கண்களை மூடிக் கொண்டாள் தேன்மொழி.
“அந்த பயம் இருக்கட்டும். வாயை மூடிட்டு படு சொல்லிட்டேன்”, என்று சொல்லி விட்டு வெளியே வந்த அன்னம் கதவை உள்ளே பூட்டி விட்டு தேன்மொழி இருக்கும் அறைக்குள் வந்து அந்த கதவையும் பூட்டி விட்டு அவள் அருகிலே படுத்து விட்டாள்.
தன்னுடைய பாட்டி உடன் இருக்கும் தைரியத்தில் நன்கு உறங்க ஆரம்பித்தாள் தேன்மொழி.
ஆறு மணியில் இருந்து அலைக்களித்தது, அழுதது, ராஜேந்திரனுடன் போராடியது என மனம் குழம்பி கிடக்க அடித்து போட்டது போல தூங்கினாலும் திடீரென்று விழித்து விட்டாள்.
அந்த அறையிலே பாத்ரூம் இருப்பதைப் பார்த்தவள் நொண்டி நொண்டி உள்ளே சென்று பின் மறுபடியும் வந்து படுத்துக் கொண்டாள்.
அன்னம் நன்கு உறக்கத்தில் இருந்தாள். இப்போது இங்கிருந்து எளிதாக தேன்மொழியால் சென்று விட முடியும் தான். ஆனால் தன்னுடைய தாய்மாமன் வீட்டில் இருக்கும் பாதுகாப்பு இவள் வெளியே போனால் கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.
அங்கே அவள் வீடே தவித்துக் கிடக்க அன்னம் அருகில் இருந்த தேன்மொழியோ கடந்த காலத்தை எண்ணிப் பார்த்தாள்.
அழகிய வீர பாண்டியபுரம் பெயருக்கு ஏற்றார் போல ஊரில் அழகும் வீரமும் எப்போதும் செழித்து இருக்கும்.
மதிவாணன் அன்னலட்சுமி தம்பதியரின் பிள்ளைகள் தான் கதிரின் அப்பா மதியழகனும், தேன்மொழியின் அம்மா சகுந்தலாவும். சகுந்தலாவும் மதியழகனும் ஒருவரையொருவர் விட்டுக் கொடுக்காத அண்ணன் தங்கைகள் தான்.
இரு பிள்ளைகளையும் அன்போடும் பாசத்தோடும் ஒழுக்கத்தோடும் தான் வளர்த்தார்கள் மதிவாணனும் அன்னலட்சுமியும்.
மதிவானனின் நண்பர் செல்லதுரைக்கும் அதே ஊர் தான். செல்லதுரை சண்முகம்மாள் தம்பதியருக்கு மூன்றுமே பையன்கள் தான்.
மூத்த மகன் தர்மதுரை அவர் அதே ஊரில் உள்ள செல்வியை திருமணம் செய்திருந்தார். அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். மூத்தவன் செந்தில், இளையவன் கண்ணன்.
தர்மதுரைக்கு அடுத்து பிறந்தது ராஜதுரை, அவருக்கு பெண் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கடைசி மகன் துரைராசு அதிக வருடம் கழித்து பிறந்ததால் அவன் இப்போது தான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்.
செல்ல துரை குடும்பமும் மதிவாணன் குடும்பமும் நட்பை தாண்டி
சொந்தமாக வேண்டும் என்ற ஆசையில் சம்பந்தம் கலக்க முடிவு செய்தார்கள்.
செல்லதுரைக்கு மகள் இருந்தால் அவளை மதியழகனுக்கு கட்டி வைத்திருப்பார்கள். ஆனால் அங்கே மூவருமே ஆண் வாரிசு என்பதால் மகள் சகுந்தலாவை ராஜதுரைக்கு மணமுடிக்க முடிவு செய்தனர்.
“மதி நம்ம காலத்துக்கு அப்புறம் எல்லாமே மாறிரும்ல?”, என்றார் செல்லதுரை.
“ஹிம் ஆமா, நாம நண்பர்களா இருக்குற மாதிரி நம்ம பிள்ளைங்க இல்லை. அதுக்காக அவங்க சண்டையும் போடுறது இல்லை. ஆனா ஒரு ஒற்றுதல் இல்லாம இருக்காங்க”, என்றார் மதிவாணன்.
“பேசாம இப்படி செஞ்சா என்ன? நம்ம ரெண்டு பேரும் சொந்தக்காரங்களா ஆகிட்டா அவங்களும் பிரிய மாட்டாங்களே”
“நல்ல யோசனை தான், நீ சொல்ல வரது எனக்கு புரியுது. ஆனா..”
“என்ன ஆனா? வேற ஜாதின்னு யோசிக்கிறியா?”
“சே சே நம்ம ரெண்டு பேருக்குள்ள என்னைக்கு ஜாதி இடையில வந்துருக்கு? நான் நம்ம பிள்ளைங்க என்ன சொல்லுவாங்களோன்னு தான் யோசிக்கிறேன். நான் ராஜதுரை கிட்ட பேசுறேன். நீ சகுந்தலா கிட்ட கேளு”
“ஹ்ம் சரி, அதுக்கு முன்னாடி நம்ம தர்ம பத்தினிங்க கிட்ட உத்தரவு கேக்கணும்”
“அது தான் பா முக்கியம்”,என்று சொல்லி அன்னம் மற்றும் சண்முகம்மாளிடம் கலந்து ஆலோசிக்க பட்டது.
இருவரும் சரி சொன்னதும் அனைவரிடமும் அனுமதி கேட்டார்கள். சகுந்தலா “உங்க விருப்பம் பா”, என்று சொல்லி விட ராஜதுரையோ “அண்ணன் அண்ணி என்ன சொல்றாங்களோ அவங்க சொல்றதை தான் கேப்பேன்”, என்று சொல்லி விட்டார்.
அதில் தர்மதுரையும் செல்வியும் பூரித்துப் போனார்கள். பின் அவர்கள் தான் ராஜதுரையையும் துரை ராசுவையும் தம்பி, கொழுந்தன் என்று பாராமல் பெற்ற பிள்ளையாக தானே கருதினார்கள்.
அதே போல அடுத்த முகூர்த்தத்தில் சகுந்தலாவுக்கும் ராஜதுரைக்கும் திருமணம் முடிந்தது.
ராஜதுரையும் சகுந்தலாவும் காதலுடனும் அன்புடனும் தங்கள் வாழ்க்கையைத் துடங்கினார்கள்.
துரைராசுவை செல்வியும் சகுந்தலாவும் தங்கள் மூத்த பிள்ளை என தான் கருதினார்கள்.
[the_ad id=”6605″]
சகுந்தலா திருமணம் முடிந்து ஒரு வருடம் கழித்து தான் அவளுடைய அண்ணன் மதியழகன் வேணியை திருமணம் செய்தார். அடுத்த வருடத்தில் அவர்களுக்கு கதிர் பிறந்து விட்டான்.
சகுந்தலாவுக்கு திருமணம் முடிந்து ஐந்து வருடம் குழந்தை இல்லாமல் இருந்தது.
சகுந்தலா பிறந்த வீட்டுக்கு வரும் போதெல்லாம் அண்ணன் மகனை தூக்கி வைத்துக் கொள்வாள். அவனும் “அத்தை அத்தை”, என்று அவளிடம் உருகுவான்.
கதிருக்கு மூன்று வயது ஆகும் போது தான் சகுந்தலா மசக்கையில் விழுந்தாள்.
தீயை, நீர் அணைக்குமா???