அத்தியாயம் 2
கண் மூடி இருக்கும் போது
உன் அருகாமையை உணர்ந்தேன்.
கண் விழித்ததும் தெரிந்தது அது
உன் நினைவுகள் மட்டும் என்று!!!
காலேஜ் ஆரம்பித்து ஒரு வாரம் கடந்திருந்த நிலையில் கேண்ட்டீனில் தன்னுடைய தோழி நந்தினியுடன் அமர்ந்திருந்தாள் காயத்ரி. முந்தை கிளாஸ் இருவருக்கும் பெரிய தலை வலியை ஏற்படுத்தியிருந்ததால் ஒரு டீ குடிக்க தான் இங்கு வந்தார்கள்.
“இன்னைக்கு கிளாஸ் சரியான ரம்பம் மாதிரி போச்சுல?”, என்றாள் நந்தினி.
“கொஞ்சம் இல்லை, ரத்தம் வர அளவுக்கு ரம்பம் நந்து. அதுவும் ரெண்டு பீரியட் வச்சு செஞ்சிட்டாங்க. அதுக்கு பேர் கிளாசா? எதுக்கு கைல இருக்குற நோட்ஸ் ரீட் பண்ணுறதுக்கு ஸ்டாப் வரணும்? நம்ம கைல கொடுத்தா நாமளே படிச்சிக்க மாட்டோமா? இன்னைக்கு மாதிரி என்னைக்கும் தலை வலி எனக்கு வந்தது இல்லை. இந்த செமஸ்டர் நாம எப்படி தான் ஓட்டப் போறோமோ? எனக்கு அந்த மேடமை பிடிக்கவே இல்லை”
“எனக்கு மட்டும் பிடிக்கவா செஞ்சிருக்கு? வேற வழி நமக்கு இல்லையே? அப்புறம் என்ன சொன்ன? இந்த செமஸ்டர் மட்டுமா? நீ வேற? அவங்க நம்ம ஈ.சி.ஈ டிபார்ட்மெண்ட் ஸ்டாப். அதனால கடைசி வரைக்கும் நமக்கு ஏதாவது ஒரு சப்ஜெக்ட் எடுத்துகிட்டே தான் இருப்பாங்க”
“இது வேறயா? காலக் கொடுமை டி. சரி கூட்டம் குறைஞ்சிருச்சு. வா டீ வாங்கிட்டு வரலாம்”, என்று காயத்ரி சொன்னதும் இருவரும் எழுந்து சென்றார்கள்.
அவர்கள் டீ வாங்கி வந்து அமரும் போது பக்கத்து டேபிளில் தீபக்கும் அவனுடைய நண்பர்கள் நான்கு பேரும் அமர்ந்திருந்தார்கள்.
அவனைக் காணும் போதெல்லாம் “அவனுக்கு எப்படி என்னோட பேர் தெரியும்?”, என்ற கேள்வி காயத்ரி மனதில் எழுந்து அவளுக்கு குறுகுறுப்பை ஏற்படுத்தும். ஆனால் அதை அவனிடம் கேட்க அவளுக்கு இது வரை சந்தர்ப்பம் அமைந்ததில்லை. இத்தனைக்கும் இருவரும் ஒரே கிளாஸ் தான், ஒரே பஸ் தான்.
ஆனால் இருவரும் இது வரை பேசியதில்லை. அவளைப் பார்த்து அவன் ஒரு புன்னகையை சிந்தியிருந்தால் அவளே போய் அவனிடம் பேசியிருப்பாள். ஆனால் அவன் எப்போதுமே அவளைக் கண்டு கொள்ளாத மாதிரி செல்லும் போது அவள் மட்டும் எப்படி போய் அவனிடம் பேசுவாளாம்?
நந்தினியிடம் சீனியர்ஸ் ரேகிங்க் செஞ்ச கதையை சொன்ன நந்தினி தீபக் வந்து காப்பாற்றியதை சொல்ல வில்லை. அதை நினைக்க கூடாது என்று நினைத்தாலும் அவனைப் பார்த்ததும் எப்போதும் போல் இன்றும் மனது குறுகுறுப்பாக இருந்தது. அதை ஒதுக்கி விட்டு நந்தினியிடம் பேச ஆரம்பித்தாள்.
“நம்ம கிளாஸ் படை இங்க உக்காந்துருக்காங்க டி”, என்றாள் நந்தினி.
“பாத்தேன் பாத்தேன். நமக்கு வந்த தலை வலி அவங்களுக்கும் வந்திருக்கும்? அதான் வந்திருப்பாங்க. அவங்க பக்கம் பாக்காத நந்து. பின்ன நாம அவங்களைப் பத்தி தான் பேசுறோம்னு நினைச்சிக்க போறாங்க”, என்று காயத்ரி சொன்னதும் வேறு பேச்சை பேசினார்கள்.
தீபக் கேங்கும் இவர்களைப் பற்றி தான் பேசிக் கொண்டிருந்தது. “நம்ம கிளாஸ்ல எந்த பொண்ணுங்களாவது வந்துருக்காங்களா பாரு? இவளுங்க மட்டும் முதல் ஆளா இங்க வந்து இருக்காங்க டா. பர்ஸ்ட் இயர் கேண்டீன் ரொம்ப வர மாட்டாங்க தானே?”, என்றான் தினேஷ்.
“டேய் மத்தவங்களுக்கும் வரணும் போல இருக்கும். பயந்து போய் உக்காந்துருப்பாங்க. இவங்க தைரியமா வந்துருக்காங்கன்னு நினைங்களேன் டா? ஏன் நாமளும் தானே வந்துருக்கோம்?”, என்று கேட்டான் தீபக். இந்த ஒரு வாரத்தில் எப்படி காயத்ரி, நந்தினி இருவரும் தோழிகளாக ஆனார்களோ அது போல தீபக் நான்கு பேருடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டான்.
தினேஷ், நிர்மல், விக்னேஷ், மதன் இந்த நான்கு பேர் தான் இப்போதைக்கு தீபக்கின் நண்பர்கள். தீபக்கும் இந்த நால்வரும் ஒரே பெஞ்ஜில் அமர்ந்திருப்பதால் அவர்களுக்குள் எளிதாக தோழமை உருவானது.
“தைரியத்தோட சேர்த்து அழகும் அதிகம் டா. ரெண்டு பேருமே சூப்பர் பிகர். அதுவும் காயத்ரி, செம அழகு டா. அன்னைக்கே உங்க கிட்ட சொல்லணும்னு தோணுச்சு. நீங்க எல்லாரும் என்ன நினைப்பீங்கன்னு தான் சொல்லலை”, என்றான் விக்னேஷ்.
“இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு விக்கி? உண்மையிலே காயத்ரி ரொம்ப கியூட். அது மட்டும் இல்லாம நந்தினி ரொம்ப ஜோவியலான டைப்பா இருப்பா போல? அன்னைக்கு கிளாஸ்ல அறிமுகம் செய்யும் போது டேன்ஸ் ஆடிட்டே பேசி எல்லாருக்கும் சிரிப்பை உருவாக்குனாளே”, என்றான் மதன்.
“இப்படியே அவங்களைப் பத்தியே பேசிட்டு இருந்தா நாம எப்படி காபி குடிக்க? காபி என்ன நம்ம கைக்கா வரும்? கூட்டம் குறைஞ்சிருச்சு. வாங்க வாங்கிட்டு வருவோம்”, என்று சொல்லி அனைவரையும் அங்கிருந்து கிளப்பிக் கொண்டு சென்றான் தீபக்.
தங்களைப் பற்றி ஒரு குருப்பே பேசிக் கொண்டிருப்பதை அறியாமல் காயத்ரியும் நந்தினியும் தங்களை மறந்து பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது முதல் நாள் காயத்ரியை ரேகிங்க் செய்த சீனியர் கும்பல் அங்கே வந்தது.
அவர்களைக் முதலில் பார்த்த காயத்ரி “ஏய், நந்து அங்க வருதே அந்த கொரில்லா கேங்க் தான் டி முதல் நாள் என்னை ரேகிங்க் பண்ணது. நாம இவங்க கண்ணுல பட வேண்டாம். வா கிளாஸ்க்கு போயிரலாம்”, என்று முணுமுணுத்தாள்.
“ஏய், நான் இன்னும் குடிச்சு முடிக்கலை டி?”
“இப்ப டீயா முக்கியம்? இவனுங்க கிட்ட இருந்து தப்பிக்கிறது தான் முக்கியம்?”
“நீ என்ன இவனுங்களைப் பாத்து இப்படி பயப்படுற? எங்க காயுவை மிரட்டின அந்த கேங்கை நான் சும்மா விட மாட்டேன்”, என்று சொல்லிக் கொண்டே அவர்களை திரும்பி பார்த்தாள் நந்தினி.
“பக்கத்துல வந்துட்டாங்க டி”
“இவங்க கொரில்லா கேங்க் இல்லை டி. தேவாங்கு கேங்க். இவனுங்க எல்லாம் பெரிய ஆளுன்னு இவங்களுக்கு பயந்துட்டு”, என்று தோழியிடம் சொன்னாள் நந்தினி.
“பயம் எல்லாம் இல்லை. லூசு மாதிரி பேசுவானுங்களா? பயங்கர கடுப்பா இருக்கும். நார்மலா பேசினா நாமளும் பேசலாம். ஆனா எரிச்சல் படுத்துற மாதிரியே பேசுவானுங்க. அதுவும் அந்த ஊதா கலர் சட்டை போட்டிருக்கானே? அவன் சரியான பொறுக்கி. அவன் தான் பைல்ஸான்னு எல்லாம் கேட்டான்”, என்று காயத்ரி சொல்லிக் கொண்டிருக்கும் போது அவர்களை நோக்கி தான் வந்தார்கள் அந்த சீனியர்ஸ்.
அவர்கள் தங்களை நெருங்குவதைக் கண்ட காயத்ரி சூடான டீயை மடக் மடக் என்று குடித்து முடித்தாள். அவள் பக்கத்தில் வந்த கேங்க் “ஹலோ”, என்று அழைக்க தன்னுடைய பயத்தை மறைத்துக் கொண்டு நிதானமாக திரும்பி அவர்களை பார்த்தாள்.
உள்ளுக்குள் கடுப்பு வந்தாலும் “ஹலோ”, என்று வேண்டா வெறுப்பாக சொன்னாள்.
“உன்கிட்ட ஒண்ணு கேக்கலாம்னு தான் வந்தேன்”, என்று ஒருவன் சொன்னதும் “சொல்லுங்க சீனியர்”, என்று பவ்வியமாக கேட்டாள் காயத்ரி. அவள் பாவனையைப் பார்த்து வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள் நந்தினி.
காபி அருந்திக் கொண்டிருந்த தீபக் கேங்கும் இவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தது. தீபக் குருப்பில் இருந்த நிர்மல் “என்ன மச்சான், சீனியர்ஸ் நம்ம கிளாஸ் பொண்ணுங்க கிட்ட வம்பு பண்ணுற மாதிரி இருக்கு”, என்றான்
“ஆமா டா. ஏதோ கலாட்டா பண்ணுறாங்க போல? அந்த ரெண்டு பொண்ணுங்க முகமே சரியில்லை. இப்ப நாம போய் தடுப்போமா?”, என்று விக்னேஷ் கேட்க “வேண்டாம், நாம கிளாஸ்க்கு கிளம்பலாம்”, என்றான் தீபக்.
“என்ன டா, நம்ம கிளாஸ் பொண்ணுங்களுக்கு நம்ம தானே பாதுகாப்பு கொடுக்கணும்”, என்றான் விக்னேஷ்.
“அந்த வெங்காயம் எல்லாம் எனக்கும் தெரியும். அந்த ரெண்டு பொண்ணுங்களும் பயந்த பொண்ணுங்க மாதிரி தெரியலை. அவங்களை அவங்க காப்பாத்திப்பாங்க. நாம நம்ம வேலையை பாத்துட்டு போகலாம். நாம போய் பேசினா தான் வேற ஏதாவது சீன் ஆகும்”, என்றான் தீபக்.
“சே சே ரெண்டு பேரையும் பாத்தா பச்சை மண்ணுங்க மாதிரி இருக்கு டா. எப்படி நடுங்கிட்டு இருக்காங்க பாரு”, என்றான் நிர்மல்.
இவர்கள் இங்கே வழக்கடித்துக் கொண்டிருக்க “ஆமா என்ன ஒரே வீட்ல இருந்துகிட்டு ரெண்டு பேரும் தனி தனியா உக்காந்துருக்கீங்க?”, என்று சீனியர்களில் ஒருவன் காயத்ரியிடம் கேட்க அவளுக்கு வேர்த்துப் போனது.
அவன் நிச்சயமாக தீபக்கைத் தான் சொல்கிறான் என்று புரிந்து போனது. நந்தினியிடம் அவள் இது வரை முதல் நாள் தீபக் வந்து
பேசியதை சொல்ல வில்லை. அதனால் இப்போது என்ன சொல்ல என்று தெரியாமல் விழித்தாள்.
நந்தினியோ சீனியர் பேச்சில் குழம்பி காயத்ரியைப் பார்த்தாள்.
“என்ன அமைதியா இருக்க? சொந்தகாரங்கன்னா எதுக்கு தனி தனியா உக்காந்து டீ குடிக்கணும்? ஒரே டேபிள்ள உக்காரலாமே?”, என்று சீனியர் ஒருவன் கேட்க காயத்ரியோ “நந்து வா நாம கிளாஸ்க்கு போவோம்”, என்று எழுந்தாள்.
“அட இரு மா, என்ன அவசரம்? எதுக்கு உங்க அத்தை பையன் கூட உக்காந்து டீ குடிக்காம தனியா குடிக்கிற?”, என கேட்க “காயு இவங்க எல்லாரும் என்ன சொல்றாங்க? யார் உன்னோட அத்தை பையன்?”, என்று கேட்டாள் நந்தினி.
காயத்ரி என்ன சொல்ல என்று தெரியாமல் தடுமாறினாள். “டேய், இங்க பாருங்க டா. கூட இருக்குற உயிர் தோழி கிட்ட கூட இவளோட அத்தை பையனைப் பத்தி சொல்லலையா?”, என்று நக்கல் அடித்தான் சீனியர்களில் ஒருவன்.
இவர்களையே பார்த்துக் கொண்டிருந்த தீபக் நேராக அவர்கள் அருகில் வந்தான்.
“இங்க என்ன பிரச்சனை?”, என்று கேட்டான் தீபக்.
“இந்தா வந்துட்டான்ல, நம்ம ஹீரோ”, என்று சீனியர்கள் கலாய்க்க தீபக்கின் நண்பர்களோ “நம்மளை கிளாஸ்க்கு போகலாம்னு சொல்லிட்டு, இவன் எங்க டா அங்க போய்ட்டான். வாங்க நம்மளும் கேட்போம்”, என்று அவர்கள் அருகில் சென்றார்கள்.
தீபக் அப்படிக் கேட்டதும் நந்தினிக்கு தங்களின் கிளாஸ் பையன் வந்தது நிம்மதியாக இருந்தது. தீபக்கின் நண்பர்களும் வர அங்கே கூட்டம் கூடியது போல இருந்தது. இதற்கு மேல் இங்கே இருப்பது நல்லது அல்ல என்று நந்தினிக்கு உள்ளுணர்வு சொல்லியது.
“காயு, கிளாஸ்க்கு நேரம் ஆச்சு. வா போகலாம்”, என்று சொல்லி காயத்ரியை அழைத்தாள் நந்தினி.
காயத்ரியும் அவளுடன் செல்ல போக அவளை வழி மறைத்து நின்றார்கள் சீனியர்கள். அதைக் கண்டு தீபக்க்கு கடுப்பாக வந்தது.
அவர்களை கலக்கமாக பார்த்த படி “இங்க பாருங்க சீனியர், எதுன்னாலும் அப்புறம் பேசிக்கலாம். நாங்க இப்ப கிளாஸ்க்கு போகணும். வழியை விடுங்க”, என்றாள் காயத்ரி.
“அதெப்படி விட முடியும்? எங்க கேள்விக்கு விடை தெரியனும்ல? எதுக்கு நீ உன் அத்தை பையன் கூட உக்காந்து டீ குடிக்கலை? நம்ம காலேஜ்ல பொண்ணுங்க தனியா, பசங்க தனியா டீ குடிக்கணும்னு இல்லையே? அது மட்டுமில்லாம உன் அத்தை பையனை உன் பிரண்டுக்கு அறிமுகப் படுத்தலையா?”, என்று கேட்டான் சீனியர்.
“உங்களுக்கு பதில் சொல்லிட்டு இருக்கணும்னு எங்களுக்கு என்ன அவசியம்? தேவையில்லாம என்னை சீண்டினீங்கன்னா, நான் பிரின்சிபால் கிட்ட கம்ப்லைண்ட் பண்ணிருவேன். வழியை விடுங்க”, என்று காயத்ரி சுற்றி வளைத்துக் கொண்டு செல்ல போனாள்.
“ஜூனியரா இருந்துட்டு எவ்வளவு திமிர் பாத்தியா டா?”, என்று ஒருவன் கேட்க மற்றொருவன் அவள் கையை பிடித்து இழுக்க போக அவன் கரம் காயத்ரியை பற்றுவதற்குள் தீபக்கின் கரம் அவன்
கன்னத்தில் அழுத்தமாக பதிந்தது.
தீபக் விட்ட அறையில் அனைவரும் திகைத்து நின்றார்கள். இப்படி நடக்கும் என்று யாருமே எதிர் பார்க்க வில்லை. ஏன் தீபக்கே கூட எதிர் பார்க்க வில்லை தான். காயத்ரியோ கண்களை விரித்து தீபக்கை பார்க்க நந்தினியோ அதிர்ச்சியில் தன்னுடைய இருக்கைகளையும் எடுத்து வாயைப் பொத்திக் கொண்டாள்.