“அப்புறம், உங்க அம்மா எல்லாத்தையும் சொன்னாங்க. 50 பவுன் போட்டு கல்யாணத்தை நான் பண்ணனுமாம். அப்புறம் எவ்வளவு பணம் வேணாலும் கொடுக்கலாமாம். அப்போ நீங்க வந்து தாலி மட்டும் கட்டிவிட்டு வருகிற பணம், நகை இதையெல்லாம் வைத்து உங்கள் கடனை அடைத்து விடுவீர்கள். அப்படித்தானே? பொண்ணைப் பெத்த நான் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து சேர்த்து வைத்தா, அதை நோகாம நீங்க வாங்கிட்டு போயிடுவீங்க. அப்படித்தானே? இதுதானே உங்க பிளான்?” என்று கேட்டார் கார்த்திகேயன்.
கோபத்தை
“அம்மா இப்படி கேட்டது தப்பு.” என்று நினைத்து தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியாகவே பேசினான் சுகந்தன்.
“அம்மா என்ன பேசினார்களோ எனக்கு தெரியாது. ஆனால் நீங்க உங்க பொண்ணுக்கு, என் வருங்கால பொண்டாட்டிக்கு ஒரு பவுன் நகை கூட போட வேண்டாம். கல்யாணத்துக்கு ஆகுற செலவை பாதியா பிரிச்சு அதில் ஒரு பாதியை நான் பார்த்துக் கொள்கிறேன். நான் உங்க கிட்ட எதிர்பார்க்கிறது உங்க பொண்ணை மட்டும்தான். உங்கள் பணத்தில் இருந்து எனக்கு ஒரு ரூபாய் கூட வேண்டாம்.” என்றான் நிமிர்ந்து அவரைப்பார்த்து.
“அப்படியா? உண்மையாகவா?”
“உண்மையா தான் சொல்றேன். இப்படி தான் இந்த கல்யாணம் நடக்கணும். இல்லைனா கல்யாணமே எனக்கு வேண்டாம்.” என்றான் உறுதியான குரலில்.
“அப்படியா? சாதனா…” என்று மகளை அழைத்தார் கார்த்திகேயன்.
“என்ன அப்பா?” என்று அங்கு வந்தாள் அவள்.
“இவர் என்னமோ சொல்றாரு பாரு.” என்றார் அவர்.
“என்னடா என்ன சொல்ற?” என்று சுகந்தனை பார்த்து கேட்டாள் சாதனா.
அவன் பதில் பேசாமல் இறுகிப்போய் இருந்தான்.
“சரி நான் சொல்றேன். இந்த கல்யாணத்துக்கு நான் உனக்கு ஒரு பவுன் நகை கூட போடக்கூடாதாம். கல்யாணத்துக்கு ஆகும் செலவை பாதி அவர்தான் கொடுப்பாராம். இந்த கண்டிஷனுக்கு ஒத்துக்கிட்ட தான் கல்யாணம்nu சொல்றார் சாதனா.” என்றார்.
“அப்படியா சொன்ன?” என்று அவனைப் பார்த்துக் கேட்டாள் சாதனா.
அவன் “ஆமாம்” என்று சொல்லவும்
சிறிது நேரம் யோசித்த சாதனா சரி கல்யாணத்துக்கு ஒத்துக் கொண்டாயே. அதுவே போதும். அவன் சொன்னபடியே பண்ணிடுங்க அப்பா.” என்றாள்.
சுகந்தன் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.
கார்த்திகேயன் முகத்தில் ஒரு சிறு ஏமாற்றத்தை கவனித்தான் சுகந்தன்.
வீடு வந்ததும் தாமரை சுகந்தன் இடம்
“கல்யாண செலவை பாதி நீ ஏத்துக்கரதா ஏன் சொன்ன? இருக்கிற கடன் ஓட இதுவும் சேர போகுது.” என்று நொந்து கொண்டார்.
“அம்மா அதை எல்லாம் நான் பாத்துக்குறேன். அப்புறம்,
நீங்க சாதனாவின் அப்பா கிட்ட 50 பவுன் நகை போட சொன்னீங்களா?” என்று கேட்டான்.
“ஆமாண்டா”
“ஏன் கேட்டீங்க?”
“ இதுல என்னடா தப்பு? எல்லாரும் கேட்கிறது தானே.”என்றார் சாதாரணமாக.
“அம்மா உங்களுக்கு என்ன வேண்டுமோ என் கிட்ட கேளுங்க. அவங்ககிட்ட கேட்காதீங்க. என்னால முடிஞ்சா உங்க ஆசையை நிறைவேற்றுவேன்.”
“இல்லடா. உனக்கு நிறைய கடன் இருக்கு. இப்படி வந்தால் உனக்கு உதவியா இருக்குமேன்னு பார்த்தேன்.”
“அம்மா இப்படி வந்தால் எனக்கு உதவியாக இருக்காது. உபத்திரமா தான் இருக்கும். நீங்க இனிமேல் அப்படி கேட்காதீங்க. என்னோட கடனை நான் அடைப்பேன். எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை” என்றான்.
சுகந்தன் தான் இருக்கும் இந்த வீட்டையும் அந்த வீட்டையும் ஒப்பிட்டுப் பார்த்தான். ‘அந்தப் பெரிய வீட்டில் வாழ்ந்து பழகின அவள் இங்கு வந்து எப்படி இருக்கப் போகிறா? அதுக்குதான் கொஞ்சம் லேட்டா கல்யாணம் பண்ணிக்கலாம்னு பார்த்தால் இப்படி எல்லோரும் அவசர படுறாங்க. எப்படி தான் சமாளிக்க போறேனோ தெரியல.’ என்று பலதையும் நினைத்தபடி அன்று இரவு படுக்கையில் விழுந்தான்.
அந்த பெரிய மண்டபத்தில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேடையில் இரண்டு மனைகள் ஏற்பாடு செய்யப்பட்டு பல வண்ணங்களில் ஆன பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
சாதனா, சஞ்சனா இருவரும் குங்கும நிற பட்டுப்புடவையில் இருந்தனர். சஞ்சனா வைர நகைகளில் ஜொலிக்க, சாதனா கவரிங் நகைகளில் பேரழகியாகவே இருந்தாள். சாதனா வருத்தப்படுவாள் என்று நினைத்து அவள் முகத்தை கவனித்த சுகந்தன் அவள் மகிழ்ச்சியாகவே இருக்கிறாள் என்பதை தெரிந்து திருப்தி அடைந்தான்.
சுகந்தன், விக்ரம் இருவரும் பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாக இருந்தனர். மொத்தத்தில் இரண்டு ஜோடிகளும் பார்ப்பவர்கள் கண் படும்படி ஒருவருக்கு ஒருவர் பொருத்தமாக இருந்தனர். திருமணம் இனிதே நடந்தேறியது. விக்ரம் ஒரு நண்பனைப் போலவே பழகினான்.
ஆனால் கார்த்திகேயன் விக்ரமை மட்டும் “மாப்பிள்ளை மாப்பிள்ளை” என்று வாயார அழைப்பார். கந்தனை அழைப்பதை ஏன் பேசுவதை கூட தவிர்த்தார்.
கந்தனுக்கு அது உறுத்தியது. அவனால் சாதாரணமாக இருக்க முடியவில்லை. விக்ரம், குடும்பத்தினரிடம் நன்கு பேசி கலந்தான். ஆனால் சுகந்தன், சற்று ஒதுங்கியே இருந்தான். எல்லா சம்பிரதாயங்களும் முடிந்து சாதனா, சுகந்தன் வீட்டிற்கு வலது காலை எடுத்து வைத்து நுழைந்தாள். சுகந்தனின் மனம் பூரித்தது.
பூக்களால் அலங்கரிக்கப்பட்ட இருந்த முதலிரவு அறைக்குள் கையில் பால் சொம்புடன் நுழைந்தாள் சாதனா.
அங்கு அமர்ந்து இருந்தான் சுகந்தன். அவள் படுக்கையில் அமர அவன் அவள் பக்கத்தில் அமர்ந்தபடி பொத்தென்று படுக்கையில் விழுந்தான்.
“சாது ஐ ஆம் ரியலி ரியலி ஹேப்பி. இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு.” என்றான்.
“சொல்லுவடா சொல்லுவ. இந்த கல்யாணத்துக்கு உன்னை ஒத்துக்க வைக்கிறது குள்ள நான் பட்ட பாடு எனக்குதான் தெரியும். என்னமோ நீ இந்த கல்யாணத்துக்கு எல்லா ஏற்பாட்டையும் பண்ண மாதிரி பீல் பண்ற.” என்றபடி அவன் கண்ணத்தில் ஒரு அரை கொடுத்தாள் .
“சரி யாரு ஏற்பாடு பண்ணா என்ன? அதான் நமக்கு கல்யாணம் ஆயிடுச்சு இல்ல? அது போதும்.” என்றான் வலித்த கன்னத்தை தேய்த்து விட்டபடி
“அப்புறம் ஹனிமூன் எங்கே போகலாம்?” என்று கேட்டாள் அவள்.
“என்ன ஹனிமூன்? ஏற்கனவே கடன் இருக்கு. இன்னும் நம்ம கல்யாணத்தால கடன் அதிகமாகி போச்சு. இதுக்கு மேல ஹனிமூன் செலவு வேறயா? கண்டிப்பா போகணுமா?”
“ப்ளீஸ் சுகந்தா. இதெல்லாம் வாழ்க்கையில ஒரு தடவை வருவது. நீ எந்த செலவும் செய்ய வேண்டாம். நான் பாத்துக்கிறேன். நானும் உன் அளவுக்கு சம்பாதிக்கிறேன் தானே. அப்புறம் என்ன கவலை? இருக்குற கடனை நாம ரெண்டு பேரும் சேர்ந்து அடைத்திடுவோம்.” என்றாள் அவனுக்கு தோள் கொடுக்கும் விதமாக.
ஆனால் அவன் அதெல்லாம்
“ஒன்னும் வேணாம்.” என்றான்.
“என்ன வேணாம்?”
“உன்னோட சம்பளம் எனக்கு வேண்டாம். என் கடனை நான் பார்த்துக்கிறேன்.”
“என்னடா இப்படி உன்னோடது என்னோடதுன்னு பேசிட்டு இருக்க?” என்று இடுப்பில் கை வைத்தபடி எழுந்து நின்று முறைத்து கோபமாக கேட்டாள்.
“ஏன்மா ஃபர்ஸ்ட் நைட்ல கொடுக்க வேண்டிய போசா இது? ஏதோ குழாய் அடியில் சண்டை போடற மாதிரி போஸ் கொடுக்கிற?”
என்று அவன் கேட்க அப்போதுதான் தான் கோபமாக சண்டை போடுவது போல நின்றுகொண்டிருந்த நிலை ஞாபகம் வர கோபத்தை மறந்து சிரித்தாள் .
“யாராவது கேட்டா சிரிப்பாங்க. சரி உட்காரு.” என்றான் அவன்.
அவள் அமர்ந்தாள்.
“போனால் போகிறதுன்னு கொஞ்சம் வெட்கப்பட்டு இருக்கலாம்.” என்று மெல்லிய குரலில் கூறினான்.
“அதெல்லாம் எனக்கு வராது போடா.” என்று அவன் தோளில் ஒரு தட்டு தட்டினாள்.
அவள் லேசாக தட்டி இருந்தாலும் அவன் வேண்டுமென்றே “ஆ “ என்று கத்தினான்.
“என்னடா? என்ன ஆச்சு? லேசா தானே …….” என்று அவனருகில் சென்று விசாரிக்க
அவன் அவளை அணைத்துக்கொண்டான். அவர்களது இல்லற வாழ்க்கை இனிதாகவே ஆரம்பித்தது.