அவளின் அந்த செய்கையைக் கண்ட மதனுக்கு அந்த சூழ்நிலையிலும் சிரிப்பு வந்தது. “இவ என்ன அதிர்ச்சியாகுறதுக்கு இப்படி ஒரு ரியாக்ஷன் கொடுக்குறா?”, என்று எண்ணிக் கொண்டே அவளைப் பார்த்தான்.
“டேய் என்ன டா இப்படி பண்ணிட்ட?”, என்று தீபக்கிடம் கேட்டான் நிர்மல்.
அடி வாங்கியவனோ கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு அவனை முறைத்தான். மற்ற சீனியர்களும் “எவ்வளவு தைரியம் இருந்தா சீனியர்ஸ் மேல கை வைப்ப? இன்னைக்கு நீ செத்த டா”, என்று சொல்லிக் கொண்டே தீபக்கை அடிக்க நெருங்க நிர்மல் மற்றும் மதன் இருவரும் தீபக்குக்கு சப்போர்ட்டாக வந்தார்கள். விக்னேஷ் மற்றும் தினேஷும் சீனியர்சை அடிக்க ரெடி ஆனார்கள்.
நிலைமை வேறு மாதிரி போவதைக் கண்ட காயத்ரி “சீனியர் பிளீஸ். ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளுங்க”, என்று சொல்லிக் கொண்டே இரண்டு குருப்புக்கும் இடையில் வந்தாள்.
அவள் இடையில் நின்றதால் சூழ்நிலை ஒரு நொடி அங்கே அமைதியாக மாற “சாரி சீனியர், அவன் செஞ்சதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். இதோட இதை விட்டுருங்க”, என்று கரம் கூப்பி சீனியர்களிடம் மன்னிப்பை வேண்டினாள்.
அதன் பின் தீபக் புறம் திரும்பியவள் “உனக்கு என்ன பெரிய ஹீரோன்னு நினைப்பா? நான் உன்னை கூப்பிட்டேனா? என்னை சீனியர் ரேகிங்க் பண்ணுறாங்க, காப்பாத்துன்னு நான் உன்கிட்ட வந்து கெஞ்சினேனா? பெரிய இவன் மாதிரி நீ முன்னே வந்தது தான் இங்க பிரச்சனை? உன்னை எவன் இங்க வரச் சொன்னான்? காலேஜ்ல ரேகிங்க் சகஜம் தானே? இன்னொரு தடவை என் விசயத்துல தேவையில்லாம தலையிட்ட நான் மனுசியா இருக்க மாட்டேன்”, என்று கத்தினாள்.
அதில் தீபக்கின் கோபம் எல்லை கடந்தது. அவளை முறைத்த படியே நின்றான். அவனுடைய நண்பர்களுக்கும் கோபம் வந்தது. இவளைக் காப்பாற்ற தானே தங்களின் நண்பன் அவனை அடித்தான். அதை புரிந்து கொள்ளாமல் அவள் அவ்வாறு பேசவும் அனைவரும் காயத்ரியை பொசுக்கி விடுவது போல பார்த்தார்கள். மதன் மட்டும் யோசனையாக அவளை பார்த்தான்.
அப்போதும் அங்கிருந்த சீனியர்ஸ் தீபக் குருப்பை முறைத்துக் கொண்டிருக்க “அவன் அடிச்சதுக்கு தான் நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுட்டேன்ல? பின்ன எதுக்கு இன்னும் இங்க நீக்குறீங்க? ரேகிங்க் சாதாரணமானது தான். ஆனா நீங்க உங்க எல்லையை கடக்குறீங்க? நீங்க என்னோட கையை பிடிக்க வந்தது ரொம்ப தப்பு. அதனால தான் அவன் உங்களை அடிச்சான். இது இதோட முடிஞ்சது. எல்லாத்தையும் விட்டுருங்க. இன்னொரு தடவை தேவையில்லாம நீங்க என்னையோ அவனையோ சீண்டினா என்ன ஆனாலும் பரவால்லன்னு சொல்லி நான் பிரின்சிபால் கிட்ட சொல்லிருவேன். வா டி நந்து போகலாம், ஆள் ஆளுக்கு பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு”, என்று கத்திய காயத்ரி நந்தினியை இழுத்துக் கொண்டு சென்று விட்டாள்.
தீபக்கை முறைத்து பார்த்து விட்டு சீனியர் கும்பலும் அங்கிருந்து கிளம்பிச் சென்றது. ஆனால் அவர்கள் பார்வையே இந்த பிரச்சனையை இதோடு விட மாட்டார்கள் என்று புரிய வைத்தது.
கோபமாக நின்ற தீபக்கை தொட்ட நிர்மல் “என்ன டா இதெல்லாம்?”, என்று கேட்டான்.
“இவளைக் காப்பாத்தணும்னு வந்தேன்ல? என்னை சொல்லணும்? எப்படி பேசிட்டு போறா பாத்தியா? இவளை பாத்து தான ரொம்ப பயந்தவன்னு சொன்னீங்க?”, என்று கடுப்புடன் கேட்டான் தீபக்.
“நாம நம்ம கிளாஸ் பொண்ணுன்னு காப்பாத்த வந்தோம். அதை அவ புரிஞ்சிக்கலை. ஆனாலும் கொஞ்ச நஞ்ச திமிர் இல்லை மச்சான் இவளுக்கு. பாக்க தான் அழகா இருக்கா. ஆனா சரியான ராங்கியா இருப்பா போல? நமக்கு இது தேவை தான். நீ அப்பவே கிளாஸ்க்கு போகலாம்னு சொன்ன? நாங்க தான் பாவம்னு சொன்னோம். எதுக்கும் இந்த சீனியர்ஸ் கிட்ட உசாரா இருக்கணும் மச்சி. அவங்க பார்வையே சரியில்லை”, என்றான் தினேஷ்.
“நீங்க எல்லாரும் நினைக்கிறது தப்பு டா. காயத்ரி சரியா தான் பிரச்சனையை கேண்டில் செஞ்சிருக்கா. எனக்கு அவ திமிர் பிடிச்சவளா தெரியலை”, என்றான் மதன்.
“வாங்கு வாங்குன்னு இவனை வாங்கிட்டு போயிருக்கா. நீ அவ பக்கம் பேசுற?”, என்று கேட்டான் விக்னேஷ்.
“இன்னைக்கு தீபக் சீனியரை அடிச்சது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா? உங்களுக்கே அதை நினைச்சு உள்ள பயம் வருது தானே? ஆனா இப்ப காயத்ரி இடைல புகுந்து பேசலைன்னா இங்க ஒரு கலவரம் தான் ஆகிருக்கும். ஏன்னா அவனுங்களும் சண்டைக்கு ரெடியானாங்க. நாமளும் வரிஞ்சு கட்டிக்கிட்டு நின்னோம். நாம யாருமே சமாதானம் ஆகுற மாதிரி இல்லை. இன்னைக்கு சண்டை நடந்திருந்தா என்ன ஆகிருக்கும்? அது பெரிய விஷயமாக ஆகிருக்கும். அப்படி நடக்காம தீபக்கையும் திட்டி, அதே நேரம் சீனியரையும் மிரட்டி சுமுகமா பிரச்சனையை முடிச்சது காயத்ரி தான். எனக்கு அப்படி தான் தோணுது”, என்றான் மதன்.
ஒரு வேளை அப்படியும் இருக்குமோ என்று எண்ணிய தீபக்கின் உதடுகளில் அழகாக ஒரு புன்னகை மலர்ந்தது. அதை நண்பர்களுக்கு தெரியாமல் மறைத்தான்.
“நீ சொல்ற மாதிரி இருக்கலாம் மதன். காயத்ரி தான் வர இருந்த பிரச்சனையை நிறுத்தினது. நான் இல்லைன்னு சொல்லலை. ஆனா அது அவளோட சுயநலத்துக்கு கூட இருக்கலாம்ல? பிரச்சனை பெருசாச்சுன்னா கண்டிப்பா அவ பேர் வெளிய வரும். அதனால தான் அப்படி பேசிருக்கா”, என்றான் நிர்மல்.
“சரி சரி எது எப்படியோ, நாம எச்சரிக்கையா இருக்குறது நல்லது. இதை அப்படியே விடுங்க. வாங்க கிளாஸ்க்கு போகலாம்”, என்று தினேஷ் சொன்னதும் அனைவரும் கிளம்பினார்கள்.
இவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்த காயத்ரியை திட்டிய படியே வந்தாள் நந்தினி. “நீ செஞ்சது கொஞ்சமும் சரியில்லை காயு. எப்படி நீ நம்ம கிளாஸ் பையனை திட்டலாம்? அவங்க நம்மளை காப்பாத்த தானே வந்தாங்க? நான் நீ இப்படி இருப்பன்னு நினைக்கலை”, என்றாள் நந்தினி.
“பேசி முடிச்சிட்டியா? உனக்கு இன்னும் இதோட சீரியஸ்னஸ் புரியலை நந்து. நான் இப்போதைக்கு ஒரு கமா போட்டு அதை ஸ்டாப் பண்ணிருக்கேன் அவ்வளவு தான். ஆனா பிரச்சனைக்கு இன்னும் புல் ஸ்டாப் வரலை”
“நான் நீ எதுக்கு தீபக்கை திட்டினேன்னு கேட்டுட்டு இருக்கேன். நீ சம்பந்தம் இல்லாம பேசுற?”
“நான் சம்பந்தத்தோட தான் பேசுறேன். சீனியர் ஜூனியர் சண்டையை பத்தி எல்லாம் இது வரை நீ கேட்டதே இல்லையா? இந்த தீபக் வேற அவனுங்க மேல கையை வச்சிருக்கான். அதை அவனுங்க அவ்வளவு ஈஸியா விடுவாங்களா? இவனுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை? இவனை யாரு கை நீட்டச் சொன்னது?”
“மறுபடி மறுபடி நீ தீபக்கை தான் திட்டுறேன் காயு. அவன் உன் நல்லதுக்கு தான்…”
“ஐயோ நான் இல்லைன்னு சொல்லலை. உனக்கே புரியும் போது எனக்கு புரியாதா? ஆனா பேச்சு பேச்சா இருக்கும் போது கை வச்சது தப்பு தானே?”
“அப்ப அவன் கையை பிடிச்சு உன்னை இழுத்துருந்தா அது சரின்னு சொல்றியா காயு?”
“அப்படி மட்டும் நடந்திருந்தா என்னோட செருப்பைக் கழட்டி அவனை அடிச்சிருப்பேன்”
“காயு……”
“இங்க பாரு நந்து, அவன் என் மேல கையை வச்சா நான் அவனை கட்டாயம் செருப்பை கழட்டி அடிச்சிருப்பேன். அது எங்களோட பிரச்சனையா முடிஞ்சிருக்கும். ஆனா தீபக் அடிச்சது வேற மாதிரி பிரச்சனையா மாறும்? அவனுங்க சும்மா விட மாட்டாணுங்க. அதான் இவனுக்கு இது தேவையானு கேட்டேன்”
“சாரி காயு, நான் கூட உன்னை தப்பா நினைச்சிட்டேன். நீ தீபக்காக தான் யோசிச்சியா?”
“ஆமா”
“சரி விடு. ஏதாவது நடந்தா பாத்துக்கலாம்”
“இல்லை, லஞ்ச் டைம்ல சீனியர்ஸ் பாத்து பேசணும். நீ வரணும்னா வா. இல்லைன்னா வேண்டாம்”
“இதுவும் தீபக்காக தானா?”
“ஆமா”
“சரி நாம ரெண்டு பேரும் போய் பேசலாம். நாம பேசியும் சமாதானம் ஆகலைன்னா நாம கம்பளைண்ட் பண்ணலாம். மெக்கானிக்கல் பசங்க வேற. அதனால கொஞ்சம் கவனமா கேண்டில் பண்ணனும். சரி அதை விடு. நானே கேக்கணும்னு நினைச்சேன்? அது என்ன அவனுங்க அப்படி கிண்டல் பண்ணினாங்க? ஒரே வீடு.. அத்தை பையன்னு…”
“அது ஒரு பெரிய கதை. நீ எப்படி எடுத்துப்பியோன்னு தெரியாம தான் உன்கிட்ட சொல்லலை”
“என்ன தான் நடந்தது?”
“முதல் நாள் ரேகிங்க் நடந்தப்ப தீபக் தான் சீனியர்ஸ் கிட்ட இருந்து காப்பாத்துனான்”, என்று ஆரம்பித்து நடந்த கதையை சொன்னாள்.
“அடடே தீபக் தான் இந்த அத்தை பையனா? நிஜமாவே அவன் உன் அத்தை பையன் தானா?”, என்று சிரித்த படி கேட்டாள் நந்தினி.
“ஐயோ இல்லை டி. நீ வேற கிண்டல் பண்ணாத. அவனுக்கு எப்படி என் பேர் தெரியும்னு கூட எனக்கு தெரியலை. அவன் கிட்ட கேக்கவும் இல்லை. இப்ப இந்த பிரச்சனை வேற”
“சொல்லிட்டல்ல? இனி கேட்டுருவோம். அப்புறம் இன்னைக்கு நடந்ததுல நம்ம கிளாஸ் பசங்க உன் மேல ரொம்ப கோபமா இருப்பாங்க டி. தீபக் இன்னும் கோபமா இருப்பான்”
“புரியுது. ஆனா என்ன பண்ண? சரி வா அப்பவே பெல் அடிச்சிருச்சு. நல்லா ரைட் வாங்க போறோம்”, என்று சொல்லி இருவரும் எவ்வளவு வேகமாக சென்றும் கிளாசுக்கு நேரமாக அவர்களை வெளியே நிறுத்தி விட்டார் புரோபஸர்.
தீபக் கேங்க் வகுப்பறைக்கு சென்ற போது நந்தினியும் காயத்ரியும் வெளியே தான் நின்றார்கள். காயத்ரி, தீபக்கை கண்டதும் அவனை எதிர்க் கொள்ள முடியாமல் அவன் புறம் பார்வையை திருப்ப வில்லை. தீபாக்கும் அவளை ஒரு ஆழமான பார்வை பார்த்து விட்டு திரும்பி விட்டான்.
அவனுடைய மற்ற நண்பர்களும் அவளை முறைத்த படி தான் நின்றார்கள்.
“மேடம் கிட்ட கிளாஸ்க்குள்ள போக பெர்மிசன் கேக்கவா டா?”, என்று கேட்டான் நிர்மல்.
“சும்மா இரு. அவங்க ரெண்டு பேரையுமே வெளிய நிறுத்திருக்காங்க. நம்மளை மட்டும் எப்படி உள்ள விடுவாங்க?”, என்றான் மதன்.
“இருந்தாலும் நாமளும் கேக்கணும் டா. பின்ன அதுக்கும் திட்டுவாங்க”, என்று அவனிடம் சொன்ன நிர்மல் புரோப்பசரை அழைத்து “மே கம்மின் மேம்”, என்று கேட்டான்.
“லேட்டா வந்ததுனால தான் அவங்களையே நான் உள்ள விடலை. அவங்களுக்கு அப்புறமும் லேட்டா வந்த உன்னை நான் உடனே உள்ள விடணுமா? இன்னைக்கு முழுக்க எல்லாரும் வெளிய நில்லுங்க. இப்ப ஹெச். ஓ. டி ரவுண்ட்ஸ் வரட்டும். அப்ப தெரியும்”, என்று திட்டி விட்டு பாடத்தை எடுக்க ஆரம்பித்தார் வசந்தா மேடம்.
நிர்மல் பல்ப் வாங்கியதால் “ஏண்டா, அதான் அவங்களே வெளிய நிக்காங்கன்னு தெரியுதுள்ள? அப்புறம் எதுக்கு மே கம்மின் மேம்னு கேட்டு பல்ப் வாங்குற? பாரு கிளாஸ்ல எல்லாரும் உன்னைப் பாத்து தான் சிரிக்காங்க”, என்று சொல்லி சிரித்தான் விக்னேஷ்.
மற்றவர்களும் அவனை கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள்.
“இன்னும் கோபமா தான் இருக்கானோ?”, என்று எண்ணி மெதுவாக தீபக்கை நிமிர்ந்து பார்த்தாள் காயத்ரி. தீபக் நண்பர்களுடன் புன்னகையுடன் உரையாடிக் கொண்டிருந்தான். அதனால் அவன் கவனம் இங்கு இல்லை என்று அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க எதற்கோ திரும்பி பார்த்த தீபக்கின் கண்கள் அவள் பார்வையை கண்டு கொண்டது. உடனே தலையைக் குனிந்து கொண்டாள் காயத்ரி. அதில் அவன் கண்கள் மின்னின.
“பாரு டா, பப்ளி நம்மளைத் தான் பாக்குது. அப்ப மதன் சொன்ன மாதிரி நம்மளை காப்பாத்த தான் அப்படி என்னை திட்டினாளா?”, என்று எண்ணிக் கொண்டே அவளைப் பார்த்தான் தீபக்.
காதல் தொடரும்…..