அத்தியாயம் 2
காதல், நேசம், அன்பு,
பிரியம் என்று எத்தனை
வார்த்தைகள் இருந்தாலும் அதன்
வடிவம் நீ மட்டுமே!!!
மாயா தனக்கு கொடுத்துச் சென்ற அறை விசாலமாக இருந்தது. அவளின் மாமா வீட்டையே அந்த ஒற்றை அறைக்குள் அடைத்து விடலாம் அப்படி இருந்தது.
“நீங்க முதல்ல போய் குளிங்க. புது டிரஸ் இங்க இருக்கு. நான் கொஞ்ச நேரத்தில் வரேன்”, என்று சொல்லிச் சென்றாள் மாயா.
மாயா வைத்திருந்த உடையைப் பார்த்தாள் சுசீலா.
பின் தன்னுடைய உடலில் இருந்து வரும் வியர்வை வாடை, ரத்த வாடை அனைத்தும் சேர்ந்து அவளுக்கு குமட்டலைக் கொடுக்க உடனடியாக குளிக்க சென்று விட்டாள்.
மாயா நேராக தன்னுடைய தாயின் அறைக்கு தான் சென்றாள். அங்கே சாரு கட்டிலில் படுத்திருந்தாள். அவள் அருகில் அமர்ந்திருந்தான் யுவன்.
“வா மாயா, என்ன உங்க அண்ணன் என்னல்லமோ சொல்றான். என்னைப் பாத்துக்க புது சர்வண்ட் எல்லாம் வச்சிருக்கானாம்”, என்றாள் சாருமதி.
“ஆமா அம்மா, ஆனா அது சர்வன்ட்டா இல்லையான்னு பையா தான் சொல்லணும். அந்த பொண்ணு குளிக்குது மா. அப்புறம்
பையா, அவ உடம்புல கொஞ்சம் காயம் இருக்கு. பர்ஸ்ட் எய்டு கொடுக்கணும். அப்புறம் ரொம்ப சோர்வா இருக்கா. ஏதாவது சாப்பாடு கொடுக்கணும்”, என்றாள் மாயா.
“கொஞ்சம் பாத்துகோ மாயா. ரொம்ப இக்கட்டான சூழ்நிலையில் இருந்து அவளை காப்பாத்திருக்கேன்”, என்று சொன்ன யுவனுக்கு அவளை தப்பான பெண்கள் இருக்கும் விடுதியில் இருந்து தான் அழைத்து வந்தேன் என்று சொல்ல மனம் வரவில்லை.
அங்கே இருந்து வந்த பெண் என்றால் தாயும் தங்கையும் அவளை தவறாக நினைக்க வாய்ப்பு இருக்கிறது என்று எண்ணியே அவ்வாறு சொன்னான்.
அவள் எங்கே இருந்து வந்தாள் என்ற உண்மையை அவளும் இவர்களிடம் உளறி விடக் கூடாதே என்று சிந்தித்தவன் “மாயா, நீ கீழே போய் அவளுக்கு சாப்பாடு ஏற்பாடு பண்ண சொல்லு. நான் அவ கிட்ட ஒரு விஷயம் விசாரிக்கணும். கேட்டுட்டு வரேன். அம்மா இருங்க, அவளை கூட்டிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு அவசரமாக சென்றான்.
நன்றாக அழுக்கு போக குளித்த சுசீலா “இந்த டிரஸ் இனி வேண்டாம். இதை தூரப் போடணும்”, என்று எண்ணி அவள் அணிந்திருந்த பழைய உடைய குப்பைக் கூடையில் போட்டாள். அப்போது தான் உள்ளே வந்தான் யுவன்.
அவள் உடையை குப்பையில் போடுவதைக் கண்டு புருவம் உயர்த்தினான். அவன் கேள்வி புரிந்தவள் “அது எனக்கு கேவலமான அனுபவங்களை எப்பவும் நினைவு படுத்திட்டே இருக்கும். அது எனக்கு வேண்டாம்”, என்றாள்.
“குட், நல்ல முடிவு தான். வேண்டாத சிந்தனைகள் நமக்குள்ளே எப்பவும் இருக்க கூடாது. சரி உன்னைப் பத்தி சொல்லு. நீ எங்க இருந்து வர? யாரும் இல்லைன்னு சொல்லாத. இனி நாங்க எல்லாம் இருக்கோம். ஆனா நீ எப்படி ரெட்டி ஆளுங்க கிட்ட மாட்டினன்னு எனக்கு தெரியணும்”, என்றான் யுவன்.
“சொல்றேன். ஆனா, உங்களுக்கு எப்படி என்னைத் தெரியும்? என்னை எதுக்கு காப்பாத்துனீங்க?”
“நீ என்னோட உயிரைக் காப்பாத்தின. அதனால நான் உன்னைக் காப்பாத்தினேன்”
“இது என்ன புதுக்கதை? நான் யாரையும் காப்பாத்தலையே? உங்களை நான் பாத்ததே இல்லையே?”
“நானும் உன்னை சரியா பாக்கலை. ஆனா அன்னைக்கு நீ தான் என்னை காப்பாத்தின”
“புரியுற மாதிரி சொல்லுங்களேன்”
“அன்னைக்கு அந்த பஜார்ல நீ ஓடி வந்த நினைவு இருக்கா?”
“ஆமா இருக்கு. ஜெட் வேகத்துல ஓடினேன். ஒலிம்பிக்ல அந்த ஓட்டத்தை ஓடினா பரிசு தான். ஆனா என்ன செய்ய? அவன் கிட்ட அப்புறம் மாட்டிக்கிட்டேன்”
“ஹ்ம் அதை மறந்துரு. அன்னைக்கு நீ ஓடி வரும் போது ஒரு ஆளை இடிச்சிட்டு ஓடின. ஞாபகம் வருதா?”
“ஆமா, நான் இடிச்சதுல அந்த ஆளுக்கு எலும்பு கூட நல்லா உடைஞ்சிருக்கும். அந்த ஆளுக்கு ஒண்ணும் ஆகலையா?”
“இல்லை. அந்த ஆளே நான் தான்”
“என்ன? நீங்களா? நான் சரியா பாக்கலை”
“நீ பாக்கலைன்னு எனக்கு தெரியும். நான் அந்த இடத்துல நிக்கும் போது என்னோட நெஞ்சுக்கு தான் யாரோ குறி வச்சிருந்தாங்க. நீ என்னை இடிச்சு தள்ளி விட்டதுனால தான் நான் திரும்புனேன். அந்த குண்டு என்னோட தோள்ல பட்டுச்சு. இப்ப புரிஞ்சதா? நான் யார் உன்னை துரத்துறான்னு பாத்தேன். அது ரெட்டியோட ஆள்கள்னு தெரிஞ்சது. அவனோட கஷ்டடில இருந்து நீ தப்பிச்சிட்டேன்னு புரிஞ்சது. எனக்கு தெரிஞ்சவங்க ரெட்டியோட ஆள்கள் கூட கலந்து இருக்காங்க. அவங்களை தொடர்பு கொண்டு உன்னைப் பத்தி விசாரிச்சேன். ரெண்டு நாள் உன்னை அடைச்சு வச்சது தெரிஞ்சதும் உன்னை எப்ப வெளிய கொண்டு வராங்கன்னு பாத்து ஸ்கெட்ச் போட்டு தூக்கிட்டேன்”
“இவ்வளவு விஷயம் நடந்துச்சா? எனக்கு எதுவுமே தெரியாது. ரொம்ப தேங்க்ஸ். அங்க இருந்து தப்பிக்கவே முடியாதுன்னு தான் நினைச்சேன். ஆனா தப்பா யாராவது என் மேல கையை வச்சா செத்து போயிரணும்னு முடிவு செஞ்சு தான் பொறுமையா இருந்தேன்”, என்றதும் அவன் பார்வை வித்தியாசமாக அவள் மேல் பதிந்தது.
“என்ன அப்படி பாக்குறீங்க? அவங்க இடத்துல இருந்ததுனால நானும் அந்த மாதிரி பொண்ணுன்னு நினைச்சீங்களா?”, என்று வலியுடன் கேட்டாள் சுசீலா.
“இல்லை, நீ அப்படி பட்டவளா இருந்திருந்தா அவங்க கிட்ட இருந்து தப்பிக்க நினைக்க மாட்ட. நீ இக்கட்டான சூழ்நிலைல தான் இங்க வந்துருக்கேன்னு புரியுது. அப்புறம் அம்மா மாயா கிட்ட மும்பைல நீ எங்க இருந்தன்னு சொல்லக் கூடாது சரியா?”
“சரி”
“இப்ப சொல்லு, நீ எப்படி மும்பைக்கு வந்த?”, என்று யுவன் கேட்டதும் சுசீலா கண்களில் இருந்து கண்ணீர் அருவியாக வடிந்தது. கடந்த ஒரு வாரம் தன் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போட்டது என்று சொல்ல ஆரம்பித்தாள்.
சுசீலா பிறந்த ஊர் காஞ்சிபுரம், பிரமாணக் குடும்பத்தில் பிறந்த அவளுக்கு தாய் தந்தை இல்லை. இருபத்தியொரு வயது வரை தாய் மாமன் வீட்டில் தான் வளர்ந்தாள். அவளுக்கு சாப்பாடு போட்டு படிக்க வைத்தார்கள். மற்ற படி புது உடை, அன்பு, பாசம் என்று எதுவுமே அவளுக்கு கிடைக்காது.
அஸ்வதி போட்ட பழைய உடைகள் தான் சுசிலாவின் உடைகள்.
தாய் மாமன் சீனிவாசன் மற்றும் அத்தை வத்சலாவுக்கு அஸ்வதி என்ற மகளும், நிரஞ்சன் என்ற மகனும் உண்டு. அஸ்வதிக்கு சுசீலா வயது தான். இவர்கள் இருவரையும் விட நிரஞ்சன் ஐந்து வயது சிறியவன். நிரஞ்சன் அக்கா என்று அழைத்து பாசமாக இருப்பான் அவ்வளவே.
ஒரு வருடம் முன்பு அஸ்வதிக்கு பெரிய இடத்தில் இருந்து சம்பந்தம் வந்திருந்தது. சுசிலாவுக்குமே அஸ்வதிக்கு திருமணம் என்றதும் சந்தோஷமாக இருந்தது.
சீனிவாசனும், வத்சலாவும் அஸ்வதிக்கு பார்த்து பார்த்து செய்ய தனக்கு என்று ஒருவரும் இல்லையே என்று சுசீலா வருத்த பட்டிருக்கிறாள். ஆனால் என்றுமே பொறாமை கொண்டதில்லை.
அஸ்வதியை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வந்த போது வத்சலா சுசிலாவை அறைக்குள் வைத்து அடைத்து விட்டாள். அவள் முன்னால் சுசீலா சென்றால் அவளை மாப்பிள்ளைக்கு பிடித்து விட்டால் என்ன செய்வது என்ற பயம்.
மகளுக்கு பெரிய இடத்தில் வாழ்க்கை என்றதும் அந்த பெற்றவர்கள் கண் மண் தெரியாமல் ஆடினார்கள். ஆனால் அவர்கள் வரதட்சனை கொஞ்சம் அதிகமாக செய்ய சொல்ல, என்ன செய்வது என்று தெரியாமல் அந்த ஊரில் இருக்கும் தாதா செல்வத்தை பணத்துக்காக பார்க்க சென்றார் சீனிவாசன்.
செல்வம் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்ததால் அவனைக் காணச் சென்றார்.
இவரைக் கண்டதும் செல்வம் “என்ன ஐயரே வராதவங்க வந்திருக்கீங்க? என்ன விஷயம்? நீங்க எல்லாம் எங்கவாளை தேடி வர மாட்டீங்களே”, என்று சொல்லி விசாரித்தான்.
“அது வந்து…. பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்கேன். சீர் செய்ய பணம் குறைவா தான் இருக்கு. நீங்க இப்ப குடுத்து உதவுனா ரொம்ப உபகாரமா இருக்கும்”
“இங்க பாருங்க ஐயரே, நம்ம கிட்ட எல்லாம் நீங்க வாங்கினா சரியா வராது. ஏன்னா நாங்க வேற, நீங்க வேற. மீட்டர் வட்டி ஸ்பீடு வட்டின்னு நாங்க போட்டுகிட்டே இருப்போம். நீங்களோ ஆச்சார்யமான குடும்பம். நாங்க கலீட்ஜ். நமக்குள்ள கொடுக்கல் வாங்கல் எப்படி ஒத்து வரும்?”
“புரியுதுண்ணா, ஆனா நேக்கு வேற வழி தெரியலை”
“சரி, சரியா வட்டி கட்டிருவீங்கன்னா மேற்கொண்டு பேசலாம்”
“சரியா கொடுத்துரேண்ணா”
“சந்தோஷம், சரி ஏதாவது அடமானம் வைக்க இருக்கா?”
“இப்போதைக்கு என்கிட்ட ஒண்ணும் இல்லை. ஆனா சரியா கொடுத்துருவேன்”
“வெறும் வாய் வார்த்தையை வச்சி என்ன செய்ய? சரி உம்மை பாத்தாலும் பாவமா இருக்கு. கணக்கு பிள்ளைக்கிட்ட போய் வாங்கிக்கோங்க. மாசம் மாசம் கொடுத்தா அஞ்சு பைசா வட்டி தான். ஆனா ஒரு மாசம் கொடுக்கலைன்னா கூட அது கூட்டு வட்டியாகிரும். அதையும் பாத்துக்கோங்க”
“சரிண்ணா, நான் சரியா கொடுத்துருவேன்”, என்று சொல்லி பணம் வாங்கிச் சென்றவர் மகள் கல்யாணத்தை சிறப்பாக செய்தார். அஸ்வதிக்கு சக்திக்கு மீறி சீர்வரிசை செய்ததால் அதிக கடன் ஆனது.
ஒரு வாரம் முன்பு அதிக கடன் சுமையால் வட்டி கட்ட முடியாமல் மொத்தக் குடும்பத்தையும் செல்வம் ஆட்கள் தூக்கிச் சென்றனர். அதில் சுசிலாவும் அடக்கம்.
கேவலமான வார்த்தைகளைச் சொல்லி சீனிவாசனை செல்வம் திட்ட, அவர் மௌனமாக கண்ணீர் விட்டார். கடைசியில் அழகே உருவாக இருந்த சுசிலாவை பணம் வாங்கியதற்காக ஒப்படைக்க சொன்னார்.
அதைக் கேட்டு மொத்தக் குடும்பமும் அதிர்ந்தது. சுசிலாவோ அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றாள்.
“என்ன ஐயரே, நான் சொல்றது காதுல விழுறது தானே? உன்னோட தங்கச்சி பொண்ணு கிளியாட்டம் இருக்கா. என்கிட்ட விட்டுரு. நீ பணமும் தர வேண்டாம். வட்டியும் வேண்டாம். நான் மேற்கொண்டு ஒரு லட்சம் பணம் தரேன். அவளை விட்டுட்டு நீ உன் குடும்பத்தோட கிளம்பு”, என்றான் செல்வம்.
“இவன் சொன்னா என்னை விட்டுட்டு போயிருவாங்களா? இத்தனை வருஷம் என்னை பெத்த பொண்ணு மாதிரி வளத்தாங்க டா”, என்று இறுமாப்பாக எண்ணிக் கொண்டிருந்தாள் சுசீலா.
அவள் எண்ணத்தில் இடி விழுந்தது போல வத்சலா, சீனிவாசன்
காதில் எதுவோ சொன்னாள். அதைக் கேட்டு சீனிவாசன் திகைத்தாலும் அடுத்த நொடி “சுசிலாவை உங்க கிட்ட விட்டுட்டா எங்களை தொந்தரவு பண்ணமாட்டேளே?”, என்று கேட்டார்.
விக்கித்து போய் நின்றாள் சுசீலா. “அவர் மகளின் திருமணத்திற்காக வாங்கிய கடனுக்கு என்னை பணையம் வைக்கிறாரா?”, என்று எண்ணி அவள் கண்களில் கண்ணீர் வந்தது.
“இவர் மகளா இருந்தா இப்படி செய்வாரா? இதுக்கு தான் இத்தனை வருஷம் வளர்த்தார்களா? அம்மா அப்பா கூட செத்து போயிருந்தா கூட இந்த அளவுக்கு கஷ்டம் வராதே”, என்று விரக்தியாக எண்ணிக் கொண்டிருந்தாள்.
“இவ்வளவு பெரிய சொத்தை எனக்கு கொடுக்கும் போது நான் எதுக்கு உங்களை தொந்தரவு பண்ணப் போறேன்? நீங்க கிளம்பலாம். டேய் ரவி பாப்பாவை ரூம்ல அடை”, என்று செல்வம் சொன்னதும் “மாமா மாமா வேண்டாம் மாமா. மாமா, அத்தை என்னை கூட்டிட்டு போங்க. நிரஞ்சன் சொல்லு டா. நான் வேலைக்கு போறேன் மாமா. அந்த பணத்தை வச்சு இவங்க கடனை அடைச்சிருவோம் மாமா”, என்று கெஞ்சினாள் சுசீலா.
“நீ வேலைக்கு போனாலும் மொத்த கடனும் எப்ப அடைய? இத்தனை வருஷம் உனக்கு தெண்டச் சோறு போட்டாச்சு. உன்னை வளத்ததுக்கு நீ இதுக்காவது உதவுறேன்னு நினைச்சிக்கிறோம். வாங்க போகலாம்”, என்று வத்சலா சொன்னதும் மொத்த குடும்பமும் அவளை அங்கேயே விட்டுவிட்டு கிளம்பியது. அவர்களுடன் செல்லப் பார்த்தவளை செல்வம் ஆட்கள் விடவில்லை.
நின்ற இடத்திலே மடங்கி அழ ஆரம்பித்தவளை நிரஞ்சன் மட்டும் திரும்பி திரும்பி பார்த்து விட்டு சென்றான்.