“இப்ப எதுக்கு கண்ணு அழுவுற? சொந்தக்காரங்க எல்லாம் அப்படி தான். என்னோட பேச்சை மட்டும் கேளு. உன்னை ராணி மாதிரி வாழ வைக்கிறேன்”, என்றான் செல்வம்.
“சீ உன்னோட ஆசை என்னைக்கும் நடக்காது”, என்று கத்திய சுசீலா “என்னை விட்டுருங்கோ. நான் எங்கயாவது கண் காணாத இடத்துக்கு போயிறேன்”, என்று கெஞ்சினாள்.
“நான் சொல்றதை செஞ்சு அவங்க வாங்கின கடனை அடைச்சிட்டு அப்புறம் எங்க வேனாலும் போ. இந்த தொழிலுக்கு வந்த அப்புறம் நீயே போகணும்னு நினைச்சாலும் உன்னால போக முடியாது. ரவி கிளியை உள்ள கூட்டிட்டு போ”
“அண்ணா இந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்க போறீங்களா?”, என்று கேட்டான் ரவி.
“டேய், என் பொண்டாட்டி என்னை விளக்க மாத்தால அடி பின்னிருவா. அவளை பாக்குறதுக்கு முன்னாடி இவளை பாத்துருந்தா கண்டிப்பா இவளைத் தான் கட்டிருப்பேன். நம்ம இவளை மத்த பொண்ணுங்க கூட சேத்து பாம்பேக்கு அனுப்ப போறோம். சேட்டு ஒரு ஆள் குறையுதுன்னு சொன்னான். இவளை விலை பேசிறலாம்”, என்றதும் சுசிலாவின் ரத்தம் கூட அதிர்ச்சியில் உறைந்தது.
இது நாள் வரை வீடு, பள்ளி, காலேஜ், கோவில் தவிர வேறு எங்கும் சென்றிராத சுசீலா இன்று விலைமாதாக விற்கப் படப் போகிறாள்.
“அண்ணா எங்களுக்கு எல்லாம் ட்ரீட் கிடையாதா?”, என்று இளித்த படி கேட்டான் ரவி. அவன் கண்கள் சுசிலாவை மேய்ந்தது.
அவன் பார்வையில் அருவருப்பு கொண்டவள் சேலை முந்தானையை எடுத்து போர்த்திக் கொண்டாள்.
“டேய் ட்ரீட்டுக்கு தான் அத்தனை பேர் இருக்காளுங்களே. இவளும் வேணுமா? இவ சரியான அக்ரகாரம் டா. இவளை மாதிரி ஆளுக்கு தான் பயங்கர கிராக்கி. நீங்க இவளை ஏதாவது செஞ்சா இவ அடி மாட்டு விலைக்கு தான் போவா. நமக்கு பணம் தான் இப்போதைக்கு முக்கியம்”, என்றவன் சேட்டை அழைத்து பேரம் பேச ஆரம்பித்தான்.
“இன்னும் என்ன இங்க இருக்க? இது எங்க இடம். நீ எங்கயும் தப்பிக்க முடியாது. உள்ள வா”, என்று ரவி சொன்னதும் அவன் பின்னேயே சென்றாள் சுசீலா.
ஒரு அறைக்குள் அவளை விட்டு வெளியே வந்தவன் “பயங்கர சோக்கா இருக்க? பெரிய பெரிய திமிங்கலம் எல்லாம் உன் வலையில மாட்டும். உசாரா இருந்து வாழ்ந்துக்கோ கண்ணு”, என்று ஜன்னல் வழியே சொல்லி விட்டு சென்றான்.
அவன் சொன்ன வாழ்க்கை எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்த சுசிலாவுக்கு வாழ்க்கையே வெறுத்து போனது. “போராடுவேன் டா போராடுவேன். அப்படி ஒரு வாழ்க்கை தான் எனக்கு விதிச்சா அந்த வாழ்க்கை எனக்கு தேவையில்லை. கடைசி நிமிடம் வரைக்கும் போராடி என் உயிரை வேணும்னா கொடுப்பேன்”, என்று மனதுக்குள் முடிவெடுத்தவள் தன்னுடைய நிலையை எண்ணி, காப்பாற்ற யாருமே இல்லையே என்று எண்ணி, தன்னை வளர்த்தவர்களின் துரோகத்தை எண்ணி அழுது கொண்டே இருந்தாள்.
அதன் பின் இரண்டு நாட்கள் அந்த அறையிலே இருந்தவளுக்கு உணவு எல்லாம் வழங்கப் பட்டது.
இரண்டு நாட்கள் கழித்து “கிளம்பு கிளம்பு நல்ல விலை வந்துருக்கு”, என்று சொன்ன ரவி அவளை அழைத்தான்.
இந்த அறையிலே இருந்தால் தன்னால் தப்பிக்க முடியாது என்று எண்ணிய சுசீலா அவனுடன் சென்றாள்.
ஒரு பெரிய வேன் அங்கே இருந்தது. அதனுள்ளே அடைக்கப் பட்டாள் சுசீலா.
அந்த வேனுக்குள் பதினான்கு பெண்கள் இருந்தார்கள். சிலர் கண்களில் நீருடன் அழுது கொண்டிருக்க சிலர் நல்ல வாழலாம் என்று அவர்களுக்கு தைரியம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எப்படிப் பட்ட பெண்கள் என்று சொல்லாமலே சுசிலாவுக்கு புரிந்தது.
இந்த காட்சியை எல்லாம் படத்தில் பார்க்கவே விருப்ப படாதவள் இன்று அதே நிலையில் இருந்தாள். இவள் உள்ளே வந்ததும் அவளை அனைவரும் பார்த்தார்கள்.
“ஏமா, பாக்க சின்ன பொண்ணாட்டம் இருக்க. உன்னையும் இதுல இழுத்துட்டாங்களா?”, என்று கேட்டாள் அங்கிருந்த ஒரு பெண்.
எந்த பதிலும் சொல்லாமல் அழுது கொண்டே இருந்தாள் சுசீலா. அதிலே அவள் நல்ல பெண் என்றும் அவளை கட்டாயப் படுத்தி இருக்கிறார்கள் என்றும் அனைவருக்கும் புரிந்தது.
“அக்கா, அந்த ரவி சொன்னதை நீங்க கேக்கலையா? இந்த பொண்ணோட மாமன் தான் அவன் வாங்கின கடனுக்காக இந்த பொண்ணை இங்க கொடுத்துட்டு போயிருக்கான். பாவம் இந்த பொண்ணு. ரெட்டி கிட்ட தான் இந்த பொண்ணை செல்வம் வித்துருக்கானாம். பாவம் இவ வாழ்க்கை என்ன ஆக போகுதோ?”, என்றாள் மற்றொரு பெண்.
“என்ன பாக்கியம் சொல்ற? சொந்த மாமனே மாமா வேலை பாத்தானா? அதுவும் ரெட்டி கிட்டயா? அவன் கிட்ட போனா இவ எப்படி தப்பிப்பா? இந்தா பாரு மா பொண்ணு. இங்க இருந்து தப்பிக்க பாரு. எங்களுக்கு இது தான் வாழ்க்கைன்னு ஆகிருச்சு. எங்க குடும்பம் சரியில்லாததுனால எங்க நிலைமை இப்படி ஆகிருச்சு. என்னை என் புருஷன் தான் இங்க விட்டான். அதோ அவளை அவளோட சித்தி. அந்தா இருக்காளே அவளை அவளோட அம்மா அப்பாவே வித்துட்டாங்க. எங்களுக்கு பழகிருச்சு. நீ புதை குழில விழுந்துராத கண்ணு”, என்று அந்த பெண்மணி சொன்னதும் “அக்கா”, என்று அவள் தோளிலே சாய்ந்து கதறி அழுது விட்டாள் சுசீலா.
அந்த பெண்மணியும் அங்கிருந்தவர்களும் தான் அவளை தேற்றினார்கள். அது மட்டுமில்லாமல் எப்படியாவது தப்பிச்சிறலாம் என்று சொல்லி அவளுக்கு தைரியம் சொன்னார்கள்.
“இங்க பாரு சின்னா. நாங்க பொண்ணுங்களை வித்துட்டோம். நீங்க பணமும் கொடுத்துட்டீங்க. இதுக்கு மேல நீங்க யாரோ, நாங்க யாரோ? இனி இவங்க விஷயமா எங்க கிட்ட எதுவும் பேசக் கூடாது. நம்ம டீல் முடிஞ்சிருச்சுன்னு சைன் போட்டுட்டு வேனை எடு”, என்றான் செல்வம்.
“என்னா செல்வம், இப்படி சொல்றே? நமக்குள்ள என்ன சைன் எல்லாம்?”, என்று கேட்டான் சின்னா.
“இந்த கதையே வேண்டாம். போன தடவை நான் அனுப்புன ஒரு பொண்ணு ஓடிப் போய்ட்டான்னு சொல்லி என்னை வந்து சத்தம் போட்டு பணத்தையும் திருப்பி பிடுங்கிட்டு போனீங்க? மறுபடியும் அப்படி ஏதாவது வந்தா நான் என்ன செய்யுறது? சைன் போட்டுட்டு வண்டியை எடு. இல்லையா நான் வேற புரோக்கரை பாக்குறேன்”
“கோப படாதே செல்வம். சரி சரி நான் எழுதிக் கொடுக்குறேன். பொண்ணுங்க இல்லாம போனா ரெட்டி என்னை பெட்டிக்குள்ள வச்சிருவான்”, என்று சொல்லி கையெழுத்தை போட்டான்.
பெண்கள் இருந்த வேன் கிளம்பியது. எங்கே போகிறது, எந்த வழியாக செல்கிறது என்று கூட தெரியாமல் அந்த இருட்டு
வேனுக்குள் இருந்தார்கள் பெண்கள்.
வேன் கிளம்பியதும் சுசீலா கதறிய கதறலில் மற்ற பெண்கள் அவளுக்கு ஆறுதல் சொல்ல ஆரம்பித்தார்கள். அவளை சாமளிப்பதில் அவர்களின் கவலைகள் கூட பின்னுக்கு சென்றது.
“இங்க பாரு கண்ணு, கண்டிப்பா நீ தப்பிச்சிருவ. ஒரு வேளை அதுக்குள்ள நாம பிரிய வேண்டியது வந்தா நாங்க சொல்றதை நல்லா நினைவு வச்சிக்கோ. முதல்ல எவன் கிட்டயாவது மாட்டிக்கிட்டா எனக்கு மாதாந்திர பிரச்சனைன்னு சொல்லி தப்பிக்க பாரு. அப்புறம் கண்டிப்பா அவங்க அசந்த நேரம் அங்க இருந்து ஓட்டம் பிடிச்சிரு. திரும்பி பாக்காம ஓடிக்கிட்டே இருக்கணும். நீ திரும்பி பாக்குறதுல கூட உன்னோட தைரியம் குறையும்”, என்று அவளுக்கு வழி முறைகள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
தான் தப்பிப்போமா, இல்லையா என்று தெரியாத நிலையிலும் அங்கிருக்கும் பெண்களுக்காக அவர்களின் கதைகளை கேட்டு அவர்களின் நிலைக்காக அழுதாள் சுசீலா.
மூன்று நாட்கள் வேன்கள் சென்று கொண்டிருந்தது. உணவு மட்டும் சரியாக அனைவருக்கும் கிடைத்தது. அந்த வேனுக்குள்ளே டாய்லெட் வசதியும் இருந்ததால் மூன்று நாட்களும் அவர்கள் யாரும் வெளி உலகத்தை பார்க்க வில்லை.
பின் ஒரு இடத்தில் இறங்கச் சொன்னார்கள். அனைவரும் இறங்கி கீழே நிற்கும் போது சுசீலா அந்த இடத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். பெரிய பஜார் போல இருந்தது.
அவ்வளவு கடைகள் அவ்வளவு மக்கள் அங்கே இங்கே என்று அலைந்து கொண்டிருந்தனர்.
இது தான் சரியான நேரம். இப்ப தப்பித்தால் தான் தனக்கு யாராவது உதவுவார்கள் என்று முடிவு செய்த சுசீலா அங்கிருந்து ஓட்டம் எடுத்தாள்.
ஐயோ பாவம், அப்போது அந்த பேதைக்கு தெரியவில்லை. இங்கிருக்கும் பல பேர் ரெட்டியின் ஆட்கள் என்று. அதனால் அவர்கள் அவளைத் துரத்தும் போது தான் அங்கே வேறு ஒரு வேலையாக வந்த யுவனை இடித்து விட்டு ஓடினாள். அதன் பின் நடந்த துப்பாக்கி சுடும் சத்தம், மக்கள் அங்கே இங்கே என்று ஓடும் சத்தம் என அனைத்தும் சேர்ந்து மயங்கி சரிந்தாள் சுசீலா.
அவள் ரெட்டி ஆட்கள் கையில் சிக்கினாள்.
மும்பையில் உள்ள தாராவி என்ற பகுதி ஆசியாவிலே இரண்டாவது பெரிய குடிசை பகுதி. இல்லையென்றால் அதை சேரி பகுதி என்றும் சொல்லலாம்.
இங்கே தோல் தொழில் புகழ் பெற்று விளங்குகிறது. மராத்திய மொழி அதிகம் பேசப் பட்டாலும் அனைத்து மொழி பேசும் மக்களும் அங்கே இருக்கிறார்கள். ஆனால் தமிழ் மொழி பேசும் மக்கள் கொஞ்சம் அதிகமே. தமிழர்களால் தான் இந்த பகுதி உருவாக்கப் பட்டதாகவும் சொல்வார்கள்.
குஜராத்தில் இருந்து குடியேறிய மக்கள் அங்கே மட்பாண்டகள் செய்வதை தொழிலாக கொண்டனர். தமிழ் நாட்டில் இருந்து குடியேறியவர்கள் தோல் பதனிடும் தொழிற்சாலைகளை அமைத்தனர். உத்திரப் பிரதேசத்தில் இருந்து வந்தவர்கள் எம்பராயிடரி வேலைகளைச் செய்தனர். இதைத் தவிர்த்து மற்ற வேலைகளும் அங்கே உண்டு.
இங்கிருந்து மும்பையின் மற்ற பகுதிகளுக்கு எளிதாக சென்று விடலாம். இங்கே முக்கியமான பிரச்சனை சுகாதாரம். அநேக வீடுகளில் கழிப்பறையே இருப்பதில்லை. பொதுக் கழிவறைகளை பயன்படுத்துவோர் மிகவும் அதிகம். அதனால் இந்த பகுதியில் தொற்று நோய்களும் அதிகம் பரவி விடும்.
ஆனால் பல பொருள்கள் இந்த பகுதியில் தான் உற்பத்தி செய்யப் படுகின்றன. தாராவியை தாயாக தான் இங்கிருப்பவர்கள் பார்ப்பார்கள்.
நாயகன் படமும், ஸ்லம் டாக் மில்லியனர் படம் கூட இந்த பகுதியில் தான் எடுக்க பட்டது. காலா படம் கூட இந்த பகுதியை மையமாக வைத்து தான் எடுக்கப் பட்டது.
இதெல்லாம் மையமாக இருந்தாலும் பல விதமான கெட்ட விசயங்களும் இங்கே உண்டு. மாஃபியா கும்பல், போதைப் பொருள் கடத்தல், மக்தா என்ற சூதாட்டம், கொலை, கொள்ளை, கட்டப் பஞ்சாயத்து செய்யும் தாதாக்கள் அதிகம் உள்ளனர்.
எப்போது என்ன நடக்கும் என்று கூட கணிக்க முடியாது. நிழலுலக தாதாக்களால் பல அக்கிரமங்கள் அங்கே நடக்கும்
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இது மாங்குரொவ் எனப்படும் சதுப்பு நிலக் காடுகளைக் கொண்ட ஒரு தீவாக இருந்தது என்று வரலாறு சொல்கிறது. இப்போதோ மக்கள் வெள்ளத்தால் நிறைந்திருந்தது.
அப்படிப் பட்ட இடத்தில் பயங்கரமான இருட்டு நிறைந்த அறையில் தூசு துரும்புகளுடன் கிடந்த சுசீலா அப்போது தான் கண் விழித்தாள்.
அறையில் இருந்த இருட்டு தவிர அங்கே எதுவுமே தெரியவில்லை. கண்களை கசக்கி சுழற்றி அந்த அறையைப் பார்த்தாள்.
இருள் சிறிது பழக்கப் பட்டதும் அது எந்த இடம் என்று அவள் மூளை ஆராய்ந்தது. சரியாக தெரிய வில்லை. சிறிது சிறிதாக மூளை செயல் நிலைக்கு வர பழைய விஷயங்கள் எல்லாம் நினைவு வந்தது.
தான் இங்கு வந்து சேர்ந்து எத்தனை நாட்கள் ஆனது என்று அவளுக்கு தெரியாது. ஆனால் இது மோசமான இடம் என்று அவளுக்கு தெரியும்.
பின் சிறிது நேரத்தில் உள்ளே வந்த சரண் ரெட்டி அவளை பயங்கரமாக அடித்தான். வலி உயிர் போனது. சாப்பிட உணவு கூட அவளுக்கு கொடுக்க பட வில்லை.
அவளைப் பற்றி பீமா ரெட்டிக்கு தெரிவிக்கப் பட்டது. ஐம்பதின் தொடக்கத்தில் இருந்த பீமா ரெட்டி “சரண், அந்த பொண்ணோட போட்டோவை அனுப்பு”, என்று சொன்னதும் சரண் அவளை போட்டோ எடுத்து அனுப்பி வைத்தான்.
அவள் அழகில் மயங்கிய பீமா ரெட்டி “அவ எனக்கு மட்டும் தான் வேணும். நாளைக்கு அவளை என்னோட வீட்டுக்கு தூக்கிட்டு வா. அது வரைக்கும் அவ மேல யார் விரலும் படக் கூடாது”, என்று உத்தரவிட்டான்.
அவன் உத்தரவு அங்கிருந்தவர்களுக்கும் தெரிவிக்கப் பட அது யுவன் காதுகளுக்கு சென்றது. உடனே அவளை காப்பாற்ற முடிவு செய்து விட்டான். காப்பாற்றியும் விட்டான்.
அனைத்தையும் கேட்ட யுவன் நாயக் “இங்க பாரு சுசி பழைய விஷயங்களை மறந்துரு. இனி உனக்கு நாங்க இருக்கோம். அம்மா மாயா கேட்டா உன்னோட மாமா குடும்பம் செய்த துரோகத்தால் ஊரில் இருந்து தப்பித்து வந்துட்டேன்னு மட்டும் சொல்லு. ரெட்டி இடத்துல இருந்ததை சொல்ல வேண்டாம். அப்புறம், இந்த கோட்டையை விட்டு நீ வெளிய வரக் கூடாது. அப்படி வந்தா அது உன்னோட உயிருக்கே ஆபத்து. சரி இப்ப வா அம்மாவை பாக்க போகலாம்”, என்று சொல்லி அழைத்துச் சென்றான்.
காதல் தொடரும்…..