அத்தியாயம் 21
உன் உதடு உச்சரிக்கும்
வார்த்தைகளை மட்டும் அல்ல,
உன் மௌனத்தையும்
ரசிக்கிறேன் நான்!!!
தினேஷ் மற்றும் கீதாவுக்கு ரிசப்ஷன் வைக்கலாம் என்று துரைராசுவிடம் சொன்னதற்கு வெகுவாக சந்தோஷப் பட்டார். ஒரே மகளின் திருமணம் இந்த கோலத்திலா நடக்கணும் என்று கவலையில் இருந்தவர் இதற்கு சந்தோஷமாக சரி சொன்னார்.
இந்த விஷயம் மதியிடமும் பேசப் பட இவ்வளவு நல்ல விஷயம் அவருக்கு மட்டும் கசக்குமா என்ன?
“என் மகன் கல்யாணம் தான் எளிமையா நடந்துருச்சுன்னு நினைச்சேன். இப்ப இது நடந்தா சந்தோஷம் தான். ஆனா கண்ணன் கல்யாணத்தன்னைக்கு வைக்கணுமான்னு தான் யோசனையா இருக்கு”, என்றார் மதி.
“எதுக்கு மதி அப்படி சொல்ற? உன் மகனுக்கு தனியா பெருசா செய்யணும்னு நினைக்கிறியா?”, என்று கேட்டார் தர்மதுரை.
“அப்படி எல்லாம் இல்லை மாமா. இதுல என் பையன் உங்க பையன்னு சொல்றதுக்கு ஒண்ணும் இல்லை. நம்ம பிள்ளைங்க சந்தோஷம் தான் எனக்கு முக்கியம். கண்ணன் மாமியார் வீட்ல என்ன சொல்லுவாங்கன்னு தெரியாதே. அதான்”
“இதுல அவங்க சொல்றதுக்கு என்ன இருக்கு மதி? நம்ம செலவு தான் எல்லாமே. அதுவும் இல்லாம ஒரு மூணு மணி நேரம் பிள்ளைங்க ரிசப்சன்ல நிக்க போறாங்க. அதுக்கு எதுக்கு இன்னொரு நாள் தனியா செலவு பண்ணணும்னு நினைச்சேன். நான் எதுக்கும் சம்பந்தி கிட்ட கேக்குறேன்”, என்று தர்மதுரை சொன்னதும் மதியும் சரி என்றார்.
தர்மதுரை உடனே இந்த விஷயத்தை ராதாவின் தந்தையிடம் சொல்ல அவரை போனில் அழைத்தார்.
போனை எடுத்த சண்முகம் “சொல்லுங்க சம்பந்தி”, என்றார்.
“இல்லை ஒரு விஷயம் சொல்லணும். உங்க அபிப்ராயம் கேக்க வேண்டியது எங்க கடமை. அதான்”
“மாப்பிள்ளை வீட்டுக்காரங்கான்னு திமிரா இருக்காம நீங்க மதிச்சு பேசுறதே பெரிய விஷயம் சம்பந்தி. தயங்காம சொல்லுங்க”
“இல்லை, என் தம்பி மகள்…”,என்று ஆரம்பித்து அனைத்து கதையையும் சொன்னவர் “அவங்களுக்கு கல்யாணம் தான் அப்படி நடந்துருச்சு. அதான் கண்ணன் தாலி கட்டி முடிச்ச அப்புறம் ரிசப்சன்ல நிக்கும் போது இவங்களையும் நிக்க வச்சா அவங்க கல்யாணத்துக்கும் ஒரு அங்கீகாரம் கிடைச்ச மாதிரி இருக்கும். உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா வேற ஒரு நாள் நாங்க வச்சிக்கிறோம்”, என்றார் தர்மதுரை.
[the_ad id=”6605″]
“இதுல என்ன சம்பந்தி இருக்கு? நம்ம பிள்ளைங்க கல்யாணத்துலே ரெண்டு ரிசப்ஷன் வச்சிரலாம். எதுக்கு அதுக்கு தனியா செலவு பண்ணிக்கிட்டு?”
“உங்களுக்கு ஒண்ணும் மன வருத்தம் இல்லையே?”
“அப்படி எல்லாம் இல்லை. எனக்கு பரிபூரண சம்மதம்”, என்று சொல்லி விட்டார் சண்முகம்.
இந்த விஷயத்தை சண்முகம் வீட்டில் சொல்ல இல்லை. சொல்லக் கூடிய அளவுக்கு இது பெரிய விஷயமும் இல்லை என்று பட்டது அவருக்கு.
அதன் பிறகு வேலைகள் துரிதமாக நடந்தது. கீதாவுக்கும் தினேஷுக்கும் கூட சந்தோஷமாக இருந்தனர். புதிதாக திருமணம் நிச்சயம் ஆனவர்கள் போல சந்தோசத்துடன் நாட்களைக் கடத்தினர்.
“தம்பி ரிசப்ஷன் வேலையை எல்லாம் நான் பாத்துக்குறேன்”, என்று கதிர் சொன்னதும் “ஆமா கதிரு. அப்புறம் நீ தேனு வீட்ல போய் இரு. அவங்களுக்கு ஏதாவது வேலை இருந்தா நீ முன்ன நின்னு செய். தினேஷ் ரிசப்சனும் இருக்கே”, என்று சொல்லி தேனையும் கதிரையும் அனுப்பி வைத்தார் மதி.
அதன் பின் பந்தக்கால் நடுவது, பத்திரிக்கை அடிப்பது, திருமண உடைகள் வாங்குவது என நாட்கள் சென்றது.
பட்டு எடுக்க சென்ற அன்று சில பல பிரச்சனைகளை கிளப்பினர் ராதாவின் அம்மா மற்றும் சித்தி.
“ஏங்க இந்த அம்மா எதுக்கெடுத்தாலும் சண்டை இழுக்குற மாதிரி இருக்கே”,என்று கவலையாக தர்மதுரையிடம் சொன்னாள் செல்வி.
“விடு செல்வி, ராதாவும் சண்முகமும் ரொம்ப நல்லவங்க. அது மட்டுமில்லாம நாம ஒண்ணும் பொண்ணு கொடுக்கலையே? பொண்ணு எடுக்க தானே செய்யுறோம். பொண்ணு கொடுத்தா தான் பொண்ணைக் கொடுமை படுத்துவாங்களோன்னு கவலை படணும்?”, என்றார் தர்மதுரை.
“அதுக்கு சொல்லலைங்க. நாளைக்கு பொண்ணு வீட்ல இருந்து பல சீர்னு வருவாங்க. ஒவ்வொரு நேரமும் இப்படி சண்டை இழுத்தா என்ன செய்யுறது?”
“அப்படி எல்லாம் நடக்காது. நீ கவலைப் படாம இரு”, என்று சொல்லி அந்த பேச்சை முடித்து விட்டார்.
பத்திரிக்கை சொந்த பந்தங்களுக்கு கொடுக்கப் பட்டது. “அண்ணா உன் கல்யாணத்துக்கு பிரண்ட்ஸ் யாரையும் கூப்பிடலைன்னு எல்லாரும் கோப பட்டாங்க. தினேஷ் அண்ணன் ரிசப்சனுக்கு அவங்களை கூப்பிடவா?”, என்று கதிரிடம் கேட்டான் செல்வா.
“அதுக்கென்ன டா? தாராளமா கூப்பிடு. என் கல்யாணத்துல நான் உன் பிரண்ட்ஸை கூப்பிட சொல்லிருக்கணும். டென்சன்ல மறந்துட்டேன். எவ்வளவு பத்திரிக்கை வேணுமோ எடுத்துகோ”, என்று கதிர் சொன்னதும் பத்திரிக்கையை எடுத்துக் கொண்டு காலேஜுக்கு சென்றான்.
அவனுக்கு ரொம்ப குளோஸ் பிரண்ட்ஸ்க்கு மட்டும் பத்திரிக்கை கொடுத்தவன் நீலவேணியை அழைத்தான்.
அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த சௌமிக்கு தன்னை அழைப்பானா என்று ஏக்கம் இருந்தாலும் அமைதியாக இருந்தாள். அவனுக்கும் அழைக்க ஆசை தான். ஆனால் அழைத்தால் ஏதாவது வெடுக்கென்று சொல்லி விட்டால் என்ன செய்வது என்பது தான் அவன் கவலை.
நீலவேணியிடம் இருந்து பத்திரிக்கையை வாங்கி பார்த்துக் கொண்டிருந்த சௌமி “ஏன் வேணி எங்களுக்கு எல்லாம் பத்திரிக்கை கிடையாதா?”, என்று அவனுக்கு கேட்கும் வகையில் கேட்டாள்.
[the_ad id=”6605″]
“நான் கொடுத்தா நீ வருவியான்னு தெரியலை. இந்தா”, என்று அவள் கையிலும் ஒன்றைக் கொடுத்தான். சந்தோசத்துடன் அதை வாங்கிக் கொண்ட சௌமி “கல்யாணம் எப்ப முடிஞ்சது?”, என்று கேட்டாள்.
“அது ரொம்ப எளிமையா முடிஞ்சிருச்சு. அதான் ரிசப்ஷன் பெருசா வைக்கிறோம்.அப்புறம் அன்னைக்கு தான் எங்க அண்ணியோட அண்ணனுக்கு கல்யாணம். அதனால ரெண்டையும் ஒரே பங்க்ஸனா வச்சிட்டோம்”, என்று பதில் சொன்னான்.
வெகு சாதாரணமான உரையாடல் தான். ஆனால் சகஜமாக பேசியது இருவருக்கும் சந்தோஷமாக இருந்தது.
திருமண நாளும் வந்தது. காலையில் நான்கு மணிக்கு எழுந்த தேன்மொழி தன்னை அணைத்த படி உறங்கிக் கொண்டிருந்த கதிரின் நெற்றியில் முத்த மிட்டாள். அதில் விழித்தவன் “அங்கயா டி முத்தம் கொடுக்குறது? இந்த மென்மையான லிப்ஸ்க்கு தானே நீ கொடுக்கணும்?”,என்று அவளிடம் வம்பிழுத்தான்.
“அத்தான் காலையிலே வம்பிழுக்க ஆரம்பிச்சிட்டீங்களா? அங்க நான் முத்தம் கொடுத்ததே இல்லையோ? குளிச்சிட்டு வந்து தரேன்”
“அப்ப கொடுத்தா எப்படி கிக்கா இருக்கும்? இப்ப கொடுத்தா தான் நல்லா இருக்கும்”, என்று சொன்னவன் அவள் ஏதோ சொல்ல வரவும் அவள் உதடுகளை சிறை செய்திருந்தான்.
அவன் முத்தத்தில் திளைத்தவள் நேரம் ஆவதை உணர்ந்து அவனிடம் இருந்து விலக முயன்றாள். அவள் முயற்சி அறிந்து அவளை இன்னும் தன்னுள் இறுக்கி கொள்ள “என் செல்ல அத்தான் தானே நீங்க? பொண்ணழைக்க போகணும். நேரம் ஆகிருக்சு. வந்து தான் கீதாவையும் ரெடி பண்ணனும். நிறைய வேலை இருக்கு. இப்ப நீங்க விட்டா நைட் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்லுவேன்”, என்றாள்.
“அது என்ன டி செல்லம் நல்ல செய்தி? இப்பவே சொல்லு”, என்று சொன்னவன் கைகள் அவளுடைய அழகில் விளையாட அதை தடுக்க முடியாமல் துவண்டவள் “அதை நம்ம வீட்ல நம்ம ரூம்ல வச்சு தான் சொல்லுவேன்”,என்றாள்.
“அப்படி என்ன டி விஷயம்? எங்கயாவது டூர் போறோமா? சரி சை நீ நைட் சொல்லு. நைட் நம்ம வீட்டுக்கு போயிரலாமா? இல்லை இங்கயே தானா?”
“நம்ம வீட்டுக்கு போய்ராலாம். காலைல இங்க வரலாம். நான் போய் குளிக்க போறேன். நீங்க கொஞ்ச நேரம் தூங்குங்க”, என்று சொல்லி விட்டு குளிக்க சென்றாள்.
சிறிது நேரத்தில் வேன் கிளம்ப அனைவரும் பெண்ணழைப்புக்காக சென்று விட்டனர். இங்கே செந்தில் கதிர் செல்வா தினேஷ் சேர்ந்து கண்ணனை வம்பிழுத்துக் கொண்டிருந்தனர்.
வேணி, தேன்மொழி பெண்ணழைக்க சென்று விட்டதால் அன்னம் கீதாவை அழைத்துக் கொண்டு மண்டபத்துக்கு வந்தாள். சிறிது நேரத்தில் செல்வாவின் பிரண்ட்சும் வந்துவிட்டனர்.
செல்வாவின் கண்கள் சௌமியை தேடியது. அவள் வரவில்லை. “நினைச்சேன், இவ வர மாட்டான்னு. பின்ன எதுக்கு என்கிட்ட பேசணும்?”, என்று அவன் கோபமாக எண்ணமிடும் போதே அங்கு ஒரு கார் வந்தது.
அதில் இருந்து சௌமியும் அவளுடைய அப்பாவும் இறங்கினார்கள். அவளுடைய அப்பாவை வரவேற்ற செல்வா அவரிடம் நலம் விசாரித்து உள்ளே அழைத்தான்.
“நான் சௌமியை விட தான் வந்தேன் செல்வா. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் உடனே சென்னைக்கு கிளம்பனும். அப்புறம் சௌமியை எங்க வீட்ல விட்டுருவியா? காரை நான் எடுத்துட்டு போறதுனால தான் கேக்குறேன்”, என்று சொல்லி அவன் சரி என்று சொன்னதும் அவளிடமும் சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
அவ்வளவு நேரம் அவளுடைய அப்பா முன்பு சரியாக பார்க்காத செல்வா முதல் முறை ரசித்துப் பார்த்தான். முதல் முறையாக சேலை கட்டி தகுந்த நகைகள் அணிந்து தலை நிறைய பூச்சூடி தேவதையாக இருந்தாள் சௌமி.
அவளுக்கு இவ்வளவு முடி உண்டு என்று கூட அவனுக்கு இன்று தான் தெரியும். இத்தனை நாளும் ஏதாவது விதமாக கொண்டையைப் போட்டுக் கொண்டு காலேஜ் வந்த சௌமி முதல் முறையாக இப்படி வந்தது அவனுடைய கண்களை அங்கே இங்கே நகர விடாமல் செய்தது.
அவன் பார்வையில் வெட்கம் கொண்டவளோ அந்த வெட்கத்தை அவனுக்கு நேரடியாக உணர்த்தினாள். அந்த வெட்கம் அவனை இன்னும் போதை கொள்ள தான் செய்தது.
“டேய் குஞ்சு வாசல்லே என்ன டா செஞ்சிட்டு இருக்க? உன் அண்ணன் உன்னை தேடிட்டு இருக்கான்”, என்ற படி அங்கு வந்தாள் அன்னம்.
[the_ad id=”6605″]
பாட்டியின் அழைப்பைக் கேட்டு அதுவும் அவனுடைய பட்ட பெயரை அவள் முன்பு அழைத்து வைத்து விட்டாளே என்ற கொலை வெறியோடு அன்னத்தை முறைத்தான் செல்வா.
“இது என்ன குஞ்சு?”, என்று எண்ணி யோசனையாக இருந்த சௌமிக்கு அவன் முகம் போகும் போக்கைக் கண்டு சிரிப்பாக வந்தது.
“நீ அப்புறமா முறை. அது சரி இது யார் டா?”
“பாட்டி.. இது வந்து சௌமி. என் கூட தான் படிக்கிறா. சௌமி, இது என் பாட்டி. அப்பாவோட அம்மா”, என்று இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தான்.
அவளை பார்த்து மென்மையாக சிரித்த அன்னம் அவன் புறம் திரும்பி “நாங்க ரெண்டு பேரும் பேசிக்கிறோம். நீ முதல்ல உள்ளார போ”,என்று அவனை அனுப்பினாள்.
திரும்பி திரும்பி பார்த்த படி சென்றான் செல்வா. அவன் பார்வையும் அவளுடைய தவிப்பும் பாட்டிக்கு எதையோ உணர்ந்த “உள்ள வா கண்ணு. சாப்பிடுறியா?”, என்று கேட்டாள்.
“காலைல வீட்ல சாப்பிட்டேன் பாட்டி”, என்று சொல்லிக் கொண்டே பாட்டியுடன் உள்ளே சென்ற சௌமி நீலவேணி அருகில் போய் அமர்ந்து கொண்டாள்.
ராதாவை அழைத்து வந்து மண்டபத்தில் விட அதன் பின் நேரம் அனைவருக்கும் றெக்கை கட்டிக் கொண்டு பறந்தது.
கண்ணன் திருமணம் மற்றும் தினேஷ் ரிசப்சனுக்கு அழைப்புக் கொடுத்திருந்ததால் இரண்டு குடும்பத்து சொந்தங்களும் அங்கே குவிந்திருந்தது. அதுவும் பெண் வீட்டு கூட்டமும் கூட அந்த இடமே கோலாகலமாக இருந்தது.
குறித்த நேரத்தில் அனைவரின் ஆசியோடு ராதாவின் கழுத்தில் மாங்கல்யத்தைக் கட்டினான் கண்ணன். கண்களில் கனவோடும் மனம் முகம் முழுவதும் சந்தோசத்துடனும் தலை குனிந்து அவன் கட்டிய தாலியை வாங்கிக் கொண்டாள் ராதா.
அதே நேரம் சௌமியை திரும்பி பார்த்த செல்வா அவளுடைய கண்களில் எதையோ தேடினான். அதை உணர்ந்த சௌமி தலை குனிந்து கொண்டாள். இந்த பார்வை பரிமாற்றத்தைக் கண்ட அன்னம் “அட பாவிகளா, இந்த குஞ்சு பய இன்னொரு தடவை என் கண்ணுல அந்த எழவு மருந்தை ஊத்தி என்னை அழ வைக்க திட்டம் போடுவானோ? கல்யாணத்துக்கு பொண்ணு பாத்துட்டானே இவனும்”, என்று எண்ணிக் கொண்டாள்.