இந்த காட்சியை தற்செயலாக கண்ட அன்னத்தின் மனது நிறைந்து போனது. கண்களிலும் சிறு ஆனந்த கண்ணீர் வந்தது.
அப்போது அங்கே வந்த வேணி “என்ன அத்தை? என்ன ஆச்சு?”, என்று கேட்டாள்.
“உன்கிட்ட ஒண்ணு சொல்லணும் வேணி”
“என்னங்க அத்தை? ஏதாவது வேணுமா?”
“நீ மேடைய பாரு. உனக்கே புரியும் நான் என்ன சொல்ல வறேன்னு”
எல்லாரும் புன்னகையுடன் பேசிக் கொண்டிருக்க “இந்த அத்தை எதை பாக்க சொல்றாங்க?”, என்று குழம்பி போய் அன்னத்தைப் பார்த்தாள்.
“நான் சொல்ல வரது புரியலையா மருமகளே?”
“ஆமாங்க அத்தை”
“உன் கடைசி பையன் அவன் ஜோடியை கண்டு பிடிச்சிட்டான். இப்பவாது புரியுதா?”
திகைத்து போய் மேடையைப் பார்த்த வேணி “அத்தை… அப்ப சௌமி….நான் விளையாட்டுக்கு தான் பேசுறான்னு நினைச்சேன்”,என்று சொன்னாள்.
“குஞ்சு முகத்தில் இருக்குற சந்தோசத்தையும் அந்த பொண்ணு முகத்தில் இருக்கிற பரவசத்தையும் பாரேன்”
“புரியுது அத்தை”
“குஞ்சு கல்யாணத்துக்குள்ள நான் இருப்பேனோ இல்லையோ?”
“அத்தை, உங்களுக்கு ஒண்ணும் ஆகாது”
“எதார்த்தத்தை சொன்னேன் வேணி. அப்படி ஏதாவது நடந்தா செல்வாவுக்கு அவன் விரும்பின பொண்ணையே கட்டி வச்சிருங்க”
“பிள்ளைங்க சந்தோஷத்தை விட நமக்கு வேற என்ன அத்தை முக்கியம். குஞ்சு கல்யாணத்தைப் பார்த்து அவன் பிள்ளைகளையும் நீங்க தான் வளக்க போறீங்க. சரி வாங்க குடும்ப போட்டோ எடுக்கணும்”, என்று சொல்லி அழைத்து சென்றாள் வேணி.
போட்டோ எடுத்து உணவு உண்டு மணமக்களை விளக்கேற்ற வீட்டுக்கு அழைத்து சென்று விட்டார்கள்.,
அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல் செல்வாவை அழைத்தாள் சௌமி. “என்ன சௌமி?”
“வீட்டுக்கு போகணும்? என்னை பஸ் ஏத்தி விடுறியா? இல்லை எங்க போய் ஏறணும்னு சொல்லு. நான் போய்க்கிறேன்”
“உன்னை பஸ்ல ஏத்தி விட்டா உங்க அப்பா என் மேல புல்டோசரை ஏத்திருவார். நானே உன்னைக் கொண்டு போய் விடுறேன். இரு கதிர் அண்ணா கிட்ட சொல்லிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு சென்றான்.
அங்கே கதிர் தனக்கு தெரிந்தவரை சாப்பிட சொல்லிக் கொண்டிருக்க அவர்கள் அருகில் சென்ற செல்வா “அண்ணா”, என்று அழைத்தான்.
“நீங்க சாப்பிட போங்க, நான் வரேன்”, என்று அவரிடம் சொல்லி விட்டு இவன் அருகில் வந்த கதிர் “என்ன டா?”, என்று கேட்டான்.
“சௌமியை வீட்ல விட போயிட்டு வரேன்”
“சரி டா, பத்திரமா கூட்டிட்டு போயிட்டு வா. பணம் ஏதும் வேணுமா டா?”
[the_ad id=”6605″]
“அதெல்லாம் இருக்கு அண்ணா”
“வேற ஏதாவது ஹெல்ப் வேணும்னா அண்ணன் கிட்ட கேளு டா”, என்று சொல்லி கண்ணடித்தான் கதிர்.
“அண்ணன் சாரே, இப்ப உங்க ஹெல்ப் வேண்டாம். ஆனா என் மாமனாரை சமாளிக்க உன் உதவி உன் தம்பிக்கு தேவை தான்”, என்று சொல்லி சிரித்தான் செல்வா.
“என்னோட டெரர் மாமனாரையே பாத்தாச்சு. அதெல்லாம் பாத்துக்கலாம். சரி இன்னைக்கு விட்டா நீங்க ரெண்டு பேரும் வேற எங்கயும் போக முடியாது. வெளிய சுத்த வேண்டாம். நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போ. கொஞ்ச நேரம் தேனு கூட இருந்துட்டு அப்புறம் கூட்டிட்டு போ”
“சூப்பர் ஐடியா அண்ணா”, என்று சொல்லி சென்றவன் “வா சௌமி போகலாம்”, என்றான்.
அவனுடன் பைக்கில் ஏறியவள் அவன் தோளை பிடிக்கவா வேண்டாமா என்று மனதுக்குள் பட்டி மன்றம் நடத்தினாள். அவள் முடிவு எடுப்பதற்குள் வண்டி நின்று விட்டது.
“எதுக்கு பைக் இங்க நிக்குது?”, என்று எண்ணிக் கொண்டே அவனைப் பார்த்தாள்.
“அதுக்குள்ளே உங்க வீட்டுக்கு என்ன செய்ய போற? இது எங்க வீடு தான். கொஞ்ச நேரம் இருந்துட்டு போகலாம்.வா உள்ள”, என்று சொல்லி அழைத்து சென்றான்.
அவன் பின்னே சென்றவள் வாசலில் நின்று தயக்கமாக அவனைப் பார்த்தாள். அப்போது உள்ளே இருந்து வந்த தேன்மொழி “ஏய் சௌமி வா வா. அவசரத்துல உன்னை கூட்டிட்டு வரலையேன்னு நினைச்சேன். நல்லதா போச்சு செல்வா கூட்டிட்டு வந்துட்டான். உள்ள வா”,என்று அழைத்தாள்.
ஒரு புன்னகையுடன் உள்ளே சென்ற அவள் பின் அனைவரிடமும் கலகலப்பாக பேச ஆரம்பித்து விட்டாள்.
தினேஷுக்கும் கீதாவுக்கும் பால் பழம் வழங்க பட “அம்மா இதை தான் அன்னைக்கே சாப்பிட்டோமே”,என்றான் தினேஷ்.
“இன்னொரு தடவை சாப்பிட்டா குறைஞ்சா போயிருவ? ஒழுங்கா சாப்பிடு டா”, என்று சொல்லி அவன் வாயை அடைத்தாள் வேணி.
சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு சௌமி கிளம்ப அவளை விடுவதற்காக செல்வாவும் கிளம்பினான்.
அவனுடன் வண்டியில் ஏறியவள் இந்த முறை அவன் தோளைப் பிடித்துக் கொண்டாள். அதைக் கண்டு தனக்குள் சிரித்துக் கொண்டான் செல்வா.
சிறிது நேரம் அமைதியாக இருந்த சௌமி “செல்வா உன்கிட்ட ஒரு விஷயம் கேக்கணுமே?”, என்றாள்.
“சொல்லு சௌமி?”
“அது என்ன உன்னை எல்லாரும் குஞ்சுன்னு கூப்பிடுறாங்க?”, என்று அவள் கேட்டதும் நே என்று விழித்தான் செல்வா.
“அது.. அது வந்து… ஒண்ணும் இல்லை சும்மா தான்”, என்று இழுத்தான்.
[the_ad id=”6605″]
“என்கிட்ட எல்லாம் சொல்லுவியா? உனக்கு என்னை விட அந்த நீலவேணி தான் பெருசு. அவ கிட்ட மட்டும் நல்லா பேசுற? நான் உன் பேருக்கு காரணம் கேட்டாக் கூட சொல்ல மாட்டிக்க?”
“இவ மனசுல பொறாமை எல்லாம் வருதா?”, என்று மனதில் எண்ணிக் கொண்டவன் “அவ எனக்கு தங்கச்சி மாதிரி. அதனால நல்லா பேசுறேன்”, என்றான்.
….
“பேருக்கான காரணம் சொல்லக் கூடாதுன்னு இல்லை. எப்படி சொல்லன்னு தான் தெரியலை. அது வந்து சின்ன வயசுல ஒரு கோழி குஞ்சை பிடிச்சு வச்சிக்கிட்டு சமைச்சு தான்னு ஒரே அழுகையாம். அதனால எனக்கு அந்த பேர் வச்சிட்டாங்க”,என்று சொல்லி விட்டு திரும்பி அவள் முகத்தைப் பார்த்தான்.
அவள் முகம் சாதாரணமாக இருக்கவும் “அப்பாடி நம்பிட்டா, வீட்டுக்கு போய் இந்த அம்மாவுக்கு இருக்கு”,என்று மனதில் நினைத்துக் கொண்டான் செல்வா.
அவள் வீட்டின் முன்பு வண்டியை நிறுத்தியவன் அவள் இறங்கியதும் அவள் முகம் பார்த்து “நானும் உன்கிட்ட ஒண்ணு கேக்கணுமே?”, என்றான்.
“என்ன கேக்கணும்?”
“இல்லை எல்லாரும் சீக்கிரமே பெரிய பொண்ணா…. அது அது வந்து… நீ மட்டும் ஏன் லேட்?”, என்று தயக்கத்துடன் கேட்டான்.
அவனைப் பார்த்து திகைத்து விழித்தவள் வேறெங்கோ பார்த்துக் கொண்டு “அது எதுவோ ஹார்மோன் பிராப்ளம். அதான்”, என்றாள்.
“ஓ, சரி அந்த பேப்பர் எங்க வச்சிருக்க? கிழிச்சி போட்டுட்டியா?”
“எந்த பேப்பர்? லவ் லட்டரா?”, என்று புன்னகையுடன் கேட்டாள்
“ஹி ஹி கொஞ்சம் அப்படி தான்”
“எவனாவது இப்படி லவ் லட்டர் கொடுப்பானா? மானே தேனேன்னு உருகிருப்பாங்க. நீ நாயே பெயேன்னு திட்டிருக்க?”
“அது அப்ப கோபத்துல எழுதினது. நீ தான் இப்ப மாறிட்டியே?”
“இப்ப எழுதினா எப்படி எழுதிருப்ப?”, என்று வெட்கத்துடன் கேட்டாள் சௌமி.
“இன்னொரு தடவை எழுதி கொடுக்குறேன். அப்ப வாங்கிப்பியா?”
“ம்ம்”
“தேங்க்ஸ், சரி அந்த பேப்பர் எங்க? கிழிச்சு போட்டுட்டியா?”
“இல்லை பத்திரப் படுத்தணும்னு தான் நினைச்சேன். ஆனா எங்க போச்சின்னே தெரியலை. ஒரு வேளை எங்க அப்பா எடுத்து வச்சிருப்பார்ன்னு நினைக்கிறேன்”, என்று அவள் சொன்னதும் அவளைப் பார்த்து மிரண்டவன் “ஐயையோ இன்னும் உன் வீட்டுப் பக்கமே வரமாட்டேன் பா. உன் அப்பா மீசையைப் பாத்தாலே தெரிச்சு ஓடனும் போல தான் இருக்கு”, என்றான்.
“உங்க அப்பா மீசை மட்டும் சின்னதா இருக்குனு நினைப்போ?”
“ஹா ஹா ரெண்டு சம்பந்திக்கும் கண்டிப்பா மீசைல ஒத்துப் போகும் சௌமி”
“செல்வா, இதெல்லாம் உண்மையா?”
“எது?”
“லவ் லட்டர்னு சொல்ற? சம்பந்தின்னு சொல்ற?”
“நான் உண்மையா தான் உன்னை லவ் பண்ணுறேன். உனக்கும் பிடிச்சிருக்குன்னு தோணுது. அப்படி தானே?”
“ஆமா”
“தேங்க்ஸ் சௌமி. அப்புறம் இந்த காதல் எல்லாம் அப்ப அப்ப பண்ணிப்போம்.ஓகே வா?”
“சரி, ஆனா நீ ஒண்ணு பண்ணனும்”
[the_ad id=”6605″]
“என்ன?”
“எங்க கூட டூர் வரணும்”
“அம்மா விட மாட்டாங்க”
“பிளீஸ், நீ வந்தா ….”
“நான் வந்தா?”
“நீ வந்தா நல்லா இருக்கும்னு தோணுது, வா பிளீஸ்”
“சரி சரி கதிர் அண்ணா கிட்ட கேட்டு வர பாக்குறேன். நீ உள்ள போ”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.
அவளைப் பற்றியே நினைத்துக் கொண்டே வீட்டுக்கு சென்றவனை பார்த்த வேணி “டேய் குஞ்சு, மண்டபத்துல இருக்குற நம்ம பொருளை எல்லாம் எடுத்துட்டு வரணும். கதிர் கூட போயிட்டு வா”, என்றாள்.
வேணி அருகில் சென்ற செல்வா முறைத்த படியே “நீயெல்லாம் அம்மா வா?”, என்று கேட்டான்.
“ஏன் டா? சீரியல்ல வர அம்மா மாதிரி தானே இருக்கேன்? ஒரு வேளை தினமும் பட்டு சேலை கட்டணுமோ?”
“அம்மா… உன்னை.. நீ இப்படி குஞ்சு குஞ்சுன்னு கேட்டு இன்னைக்கு சௌமி எதுக்கு அப்படி கூப்பிடுராங்கன்னு கேக்குறா”
“ஹா ஹா சொல்ல வேண்டியது தானே? சின்ன வயசுல அந்த இடத்துல அடி பட்டதுனால தான் அப்படி கூப்பிடுறோம்னு”
“உன்னைக் கொன்னுறுவேன் மா”
“நீ கொல்லுறது இருக்கட்டும். சௌமிக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?”
“ஐயோ மாட்டிக்கிட்டேனே?”, என்று எண்ணிக் கொண்டு “ஒண்ணும் இல்லையே. என்னோட கிளாஸ்ல தான் படிக்கிறா. அவ்வளவு தான்”, என்றான்.
“அப்படியா? நம்பிட்டேன் டா நம்பிட்டேன். கத்தரிக்கா முத்தினா சந்தைக்கு வந்து தானே ஆகணும். அப்ப பாத்துக்குறேன். சரி சரி அண்ணன் கூட போயிட்டு வா”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.
“அப்பாடி தப்பிச்சிட்டேன். எடுக்கும் கொஞ்சம் உசாரா இருக்கணும்”,என்று எண்ணிக் கொண்டான் செல்வா.
காதல் தீயை நீர் அணைக்குமா?….