தொட்டிலிட்ட மறு நாள் இரவு விக்ரம் ஊர் திரும்ப வேண்டும். விடியற்காலை காயத்ரியையும் ரகுவையும் மதுரைக்கு ரயிலேற்றி விட்டு வந்தவன், உடனே குளித்து, டிபன் சாப்பிட்டு கிளம்பிவிட்டான்.
“என்னடா, உடனே கிளம்புற ?”, என்ற பர்வதத்திடம், “இல்லைமா இன்னைக்கு கொஞ்சம் முடிக்க வேண்டிய வேலை நிறைய இருக்கு. சாயந்திரம்தான் வருவேன். “ என்றான்.
“உன் பெட்டியெல்லாம் எப்ப அடுக்குவே ?”
“வந்து பார்துக்கறேம்மா. விடியக்காலை ரெண்டு மணிக்குதானே ஃப்ளைட். எல்லாம் பத்தரைக்கா கிளம்பினா போறும். என்னோடதெல்லாம் என் ரூம்ல வெச்சிடுங்க நான் வந்து பார்த்துகறேன்.”
அவன் வேலைகளை முடித்தவன், மதியம் மணி பன்னிரண்டைத்தாண்டவும், வேதாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். கையில் இருந்த பையை வைத்தவன், கோமதி கொடுத்த நீரைப் பருகி, கை, முகம் அலம்பி வரவும், ரூமிலிருந்த்து குழந்தையுடன் வேதா வரவும் சரியாக இருந்தது.
அம்மாவிடமிருந்த டவலை வாங்கி அவனிடம் கொடுத்தவள், “உங்க வேலை முடிஞ்சுதா ? “ என்றாள். “
ஆச்சு…”, என்று முகம் துடைத்தவன், “பட்டுக்குட்டி..”, என்று மகனை அவளிடமிருந்து வாங்கியவன், “அதை பிரிச்சி பாரு.”, என்று சோஃபாவில் வைத்தை பையைக் காட்டினான்.
என்னவோ என்று எடுத்தவள், “ஹய்… லாப்டாப். யாருக்கு ?”, என்றாள் அதன் கான்விகரேஷனைப் படித்தவாறே.
“உனக்குத்தான். உனக்கு வேண்டிய சாஃப்ட்வேர் எல்லாம் லோட் பண்ணியாச்சு. சுதீப் உதவி பண்ணினான்.”, என்றதும் அதிர்ந்துபோய் பார்த்தாள்.
“பழசே இருக்கே… இது புது மாடல்…விலை….”, முழித்தாள் வேதா.
“ஷ்…அது ஸ்லொவா இருக்குன்னு சொன்னதான ? உன் ப்ராஜெக்ட்டுக்கான வேலைக்கு இதை வெச்சிக்கோ. வெட்டி ப்ரொஸிங்க்கு அதை வெச்சிக்க. இது என்னோட கிஃப்ட்.”, என்றான் அவள் முகம் பார்த்து.
“பாருடா குட்டி, அம்மாக்கு கிஃப்ட் குடுத்தா, இப்படி முழிக்கறா ?”, என்று மகனிடம் பேசினான்.
“எண்பதுகிட்ட ஆச்சு. லைசன்ஸ், ஆன்டி வைரஸ், வாரண்டி எல்லாம் சேர்த்து. தேனூ.. பணம் இங்க முக்கியமில்லை. லாப்டாப் சரியா இருந்தாதான் உன்னோட டெஸ்டிங்க்கு நீ காலேஜ் போக வேண்டியிருக்காது. இங்கயே நீ பார்த்துக்கலாம். சுதீப்பும் இதேதான் வாங்கிருக்கான்.”
“அவனுக்கென்ன, அவங்க அப்பாகிட்ட கொட்டிகிடக்கு. அங்க எவ்வளவு கஷ்டப்பட்டு நீங்க சம்பாதிக்கறீங்க ?”
“அதேதான். என் மனைவிக்கும் பிள்ளைக்கும்தானே சம்பாதிக்கறேன் ? நீ வீட்லயே உன் வேலையை பண்ண முடிஞ்சா, என் பிள்ளைக்கும் நல்லதுதானே ? என் பொண்டாட்டியும் அவ ஆசைப்படி ப்ரொஜெக்ட் செய்யணும். என் பிள்ளைக்கும் நேரத்துக்கு பால் கிடைக்கணும். அதுக்கு இதெல்லாம் ஒரு செலவே இல்லை.“, , என்று ஒரு கையால் அவள் தலையை ஆட்டிச் சிரித்தான்.
“கேடி… அநியாயத்துக்கு பிளான் போடறீங்களே ?, என்று புன்னகைத்தாள்.
“எங்க உங்கப்பாவைக் காணோம் ? “, என்று கேட்டவாறே அவள் அறைக்குச் சென்றான் விக்ரம்.
அம்மா சமயலறையில் மும்மரமாய் இருப்பதைப் பார்த்வாறே கதவை சாத்திவிட்டு,தூங்கிவிட்ட குழந்தையை தூளியிலிட்டவள், அவனை அணைத்து அழுந்த ஒரு முத்தமிட்டு “தாங்க்ஸ் வீரு “, என்றாள்.
அதில் சோகமாகி அவனை இறுக்கிக் கொண்டவள், “ வீரு, இதான் லாஸ்ட் டைம் இப்படி பை சொல்றது. பரீட்சை முடிஞ்ச அடுத்த நாள் நீ வந்து கூட்டிட்டு போற…”
“ம்ம்..உன் ஷெட்யூல் வந்ததும் சொல்லு, டிக்கெட் போட்டுடறேன். உங்கம்மா எங்கம்மாவையும் சரி கட்டணும். நாளு நட்சத்திரம்னு பார்த்து படுத்துவாங்க.”
அவளை தன் அருகில் அணைத்தவாறே கட்டிலில் படுத்துக் கதை பேசிக்கொண்டிருந்தான், கோமதி சாப்பாட்டிற்கு அழைக்கும் வரை.
சிங்கப்பூர் திரும்பி இரண்டு நாட்கள்தான் ஆனது. ஆனாலும் நீண்ட நாட்கள் ஆனது போலத் தோன்றியது விக்ரமிற்கு. தனிமையைப் போக்க இன்னும் வேலையில் தன்னை மூழ்கடித்துக்கொண்டான். இரவுகளில் போனில் குழந்தையோடும் மனைவியோடும் பேசி சமாளித்துக்கொண்டிருந்தான்.
அவன் சென்றதும், வேதாவிற்கு வருத்தமாய் இருந்தது. முன்பும் பிரிந்து சென்றான்தான், ஆனால் இம்முறை ஏனோ மனது மிகவும் பாரமாய் இருந்தது. விக்ரமிடம் சொல்லிக்கொள்ளவில்லை ஆனாலும் ஏன் என்றே தெரியாத ஒரு அழுகை திடீரென்று வரும். அவள் லாப்டாப்புடன் அமரும் போது, கோமதி சிறிதாய் எதாவது சொல்லிவிட்டாலும் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. சௌந்தர்ராஜன் முடிந்த வரை மகளை சமாதானப்படுத்தினார்.
அடுத்து செக்கப்பிற்கு டாக்டரிடம் சென்றபோது, கோமதி அவளின் கோபம், அழுகை பற்றி சொல்லியேவிட்டார். அதற்கும் வேதா, கோமதியை சுட்டெரிக்கும் பார்வை ஒன்றை பார்த்தாள்.
“என்ன வேதா ? மூட் ஸ்விங்க்ஸ் இருக்கா ?”, என்றார் டாக்டர் கீதா.
“சில நேரம் ஏன்னு தெரியாம அழுகையா வருது. சில நேரம் எரிச்சல்.”, மெதுவான குரலில் சொன்னாள் வேதா.
“ம்ம்…எப்ப இல்லை என்ன செஞ்சா நார்மலா சந்தோஷமா இருக்கு ?”
“அவ லாப்டாப்பை வெச்சிகிட்டு எதையாவது படிச்சாள்னா, நேரம் போறதே தெரியாது டாக்டர். குழந்தைக்கு பாலை குடுன்னு நான் வந்து சொல்லணும். அப்படி ஒரு வார்த்தை எதாச்சம் சொல்லிட்டா போறும், உடனே கோவம், பின்னாடியே அழுகை…”, கோமதி பஞ்சாயத்தை ஆரம்பித்தார். அப்போதே கண்கள் கலங்கியது வேதாவிற்கு.
“ பேறு காலம் முடிஞ்சப்பறம் இப்படித்தான் ஒரு சில மாசம் இருக்கும். ஹார்மோன் தாறுமாறாய் ஏறி இறங்குறதுனாலதான் இப்படி. அழணும்னு தோணுச்சுன்னா அழு. அதுக்கப்பறம், எது உனக்கு சந்தோஷம் தருதோ, அதை செய். பால் குடுக்கற டைம் ரிமைண்டர் போடு ஃபோன்ல. அப்படியே மறந்துட்டாலும் நீ நல்ல அம்மாதான், உனக்கு பொறுப்பில்லைன்னு அர்த்தமில்லை புரிஞ்சுதா ? “, என்று வேதாவிடம் சொன்னவர், கோமதியின்புறம் திரும்பி,
“ படிக்கற ஆர்வத்துல பால் குடுக்க மறந்துட்டா, இல்லை ஈரம் பண்ணிட்டதை பார்க்கலைன்னா, நீங்க ஞாபகப்படுத்துங்க, துணி மாத்திவிடுங்க . அதுக்காக குழந்தைய பார்த்துக்கலைன்னு குறை சொல்லாதீங்க. பாட்டி தாத்தான்னு எதுக்கு இருக்கீங்க அப்பறம் ? ஒரு இரண்டு மாசம் வேதாவுக்கும் டைம் குடுங்க, அட்ஜஸ்ட் ஆகறதுக்கு. எடுத்தவுடனே எல்லாம் சரியா வந்துடாது. “, என்று அறிவுரைத்தார்.
இது ஹார்மோன் கோளாறு என்று புரிந்ததும், வேதாவும் கையாளப் பழகிக்கொண்டாள். சற்று முனைப்போடே ப்ராஜெக்டுக்குண்டான வேலைகளை வாணியுடனும், சுதீப்புடனும் ஆரம்பித்தாள். தலைப் பொங்கலுக்கு மாமியார் வீட்டிலிருந்து எல்லோரும் அவளைப் பார்த்துப்போனார்கள். பர்வதம்மா, எப்படியும் வாரத்தில் இரு முறையாவது கோவிலுக்கு போவதற்கு பதிலாக, பேரனைப் பார்க்க சிந்து, சித்துவுடன் வந்து விடுவார்,
சுதீப்பும் வாணியும் இருந்தால், மாமியாரிடம் சற்று பேசிவிட்டு, குழந்தையை அவர்களிடம் விட்டுவிட்டு வந்துவிடுவாள் படிக்க. இல்லையென்றால், சிந்து, சித்துவுடன் விளையாடுவாள் சற்று நேரம்.
முதல் செமஸ்டர், ரிசல்ட் வந்தது . சுதீப்பைவிட சற்று வித்தியாசத்தில்தான் இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தாள். அவள் கருவுற்றிருந்ததையும் மீறி முதல் வருட ப்ர்சென்டேஜுக்கு குறையாமல் எடுத்தது, விக்ரமிலிருந்து, அவள் ஆசிரியர்கள், மாலினி, ராகவன், பர்வதம் என்று அனைவரும் பாராட்டியிருந்தனர். காயத்ரிகூட போன் செய்தாள். “விக்ரம் சொன்னான். எங்க வீட்ல உன் புராணம்தான் ஓடுது. படிக்கணும்னு எண்ணமிருந்தா எதுவும் தடையில்லை. நீயும் படிங்கறார் என் வீட்டுக்காரர். ஏன் வேதா இப்படி மாட்டிவிடற என்னை.”, என்று கேலி செய்தாள்.
பர்வதம்மா ஒரு முறை வந்த போது ராஜேந்திரனைப் பார்க்கவும், கோமதியிடம், “பிள்ளைக்கு எப்ப கல்யாணம் பண்ணப்போறீங்க ? வேதா சிங்கப்பூர் போறதுக்குள்ளவே முடிச்சிட வேண்டியதுதானே “, என்று கேட்கவும் திடுக்கிட்டு அவரைப் பார்த்தவன்,
“ இல்லை அத்தை, இப்ப கொஞ்சம் வேலை நிறைய இருக்கு. அடுத்த வருஷம் பார்க்கலாம். வேதா வரும்போது கல்யாணத்தை வெச்சிகிட்டா போச்சு.”, என்றான்.
“சம்பாதிக்கற வயசு. செய்யட்டும். முப்பதுக்கு முடிச்சிடுங்க. அதுக்கு மேல தள்ள வேண்டாம்.” என்று அவர் பங்குக்கு சொல்லிவிட்டு சென்றார்.
[the_ad id=”6605″]
அன்று இரவு, சௌந்தர்ராஜனைப் பிடித்துக்கொண்டார் கோமதி. “ ராஜேந்திரன் ஜாதகத்தை ஜோசியர்கிட்ட காட்டி எப்போ கல்யாண பலன் வருதுன்னு பார்க்கலாங்க. சம்மந்தியம்மா கூட இன்னைக்கு கேட்டாங்க. அவனுக்கும் ஆவணி வந்தா இருவத்தியொன்பது ஆரம்பிக்குது. “
“அவன்தான் ஒரு வருஷம் போகட்டும்னு சொல்றானே.”, என்ற அவர் பேச்சு எடுபடவில்லை.
“அவன் சொல்லுவாங்க. இப்பத்துலர்ந்து நாம் பார்க்க ஆரம்பிச்சாதானே ? அதுக்கு மொதல்ல அவனுக்கு குரு பலன் எப்பன்னு தெரியணுமில்லை ? நான் சொல்றத செய்யுங்க. ஒரு நல்ல நாள் பார்த்து அவன் ஜாதகம் எடுக்கலாம். நான் வீட்ல பூஜை பண்ணிட்டு குடுக்கறேன். நீங்க ஜாதகத்தை எடுத்துகிட்டு போய் ஜோசியர்கிட்ட காட்டுங்க. நான் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கறேன். அவர் என்ன சொல்றார்னு பார்த்துட்டு அப்பறம் அவங்கிட்ட பேசிக்கலாம்.”, என்று முடிவாய் சொல்லிவிட்டார் கோமதி.
“சரி. உன்னிஷ்டம்.”, என்று எப்போதும் போல் சொல்லிவிட்டு படுத்துவிட்டார் சௌந்தர்ராஜன். மகன் இவர்களுக்கு வேலை வைக்காமல் பெண்ணை தேர்ந்தெடுத்துவிட்டான் என்பதோ, கல்யாண யோகத்திற்கு முன் மகனுக்கு காதல் யோகம் வந்து பல மாதங்கள் ஆகிறதென்றோ தெரியாமல் நிம்மதியாய் உறங்கினார் கோமதி.
நாட்கள் செல்ல, பிப்ரவரியிலிருந்து, வாரம் ஒரு நாள் குழந்தையை அம்மாவிடம் விட்டு கல்லூரி சென்றாள். முடிந்தவரை தாய்ப்பாலை பாட்டிலில் எடுத்து வைத்துவிட்டு செல்வாள். அடுத்து இரண்டு வேளை ப்வுடர் பால் கொடுத்து சமாளிப்பார் கோமதி. நான்கு மணிக்கெல்லாம் வந்துவிடுவாள் வேதா. பால் சேர்ந்து அவளுக்கு வலிக்கவே ஆரம்பித்திருக்கும் அந்நேரம். பால் ஒழுகுவது தெரியாமலிருக்க அதற்கான பாதுகாப்பை செய்திருப்பாள். இருந்தும் துப்பட்டாவை இருபக்கமும் மறைத்துப் போட்டிருப்பாள்.
விக்ரம் வேதாவின் முதல் கல்யாண நாள் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் சென்றது. ஜோசியர் சொன்னாறென்று பிடிவாதமாய் உடனே திருமணம் என்று ஒற்றைக் காலில் நின்ற தாயின் மீது எரிச்சல் மண்டியது. விக்ரமும் அதையே நினைத்திருந்தான். பணம் பணம் என்று வாழ்க்கையை தொலைப்பதுபோலிருந்தது. என்னவோ வார நாளாய் இருக்கவும், நேரம் சென்றுவிட்டது.
வேதா முன்பே சொல்லியிருந்தாள். “எல்லாம் அடுத்த வருஷம் சேர்த்து, சேர்ந்து கொண்டாடலாம் வீரு. இந்த வாட்டி நீங்க கோயிலுக்கு போங்க. நாங்க இங்க இருக்கிற கோயிலுக்கு போயிட்டு வரோம்.” அதனால் விக்ரமும் எதுவும் சொல்லவில்லை.
காலையில் அவன் அம்மா அண்ணியின் வாட்சப்பிலிருந்து போன் செய்து வாழ்த்து சொன்ன போதும், “ சரிம்மா, தாங்க்ஸ். அண்ணி ஆபீசுக்கு போகணும். நான் அப்பறமா சாயந்திரம் கூப்பிடறேன். இல்லாட்டி நாளைக்கு பேசுவோம். “, என்று வைத்துவிட்டான்.
மாலினியும் ராகவனும் வாழ்த்துச் செய்திகளை மட்டுமே அனுப்பியிருந்தார்கள் அவன் வருத்தம் புரிந்து.
இரவு, இருவரும் வேதாவை சென்று பார்த்து ஸ்வீட், பழம் என்று கொடுத்துவிட்டு வந்தார்கள். மாலினி வேதாவிடம் தனியே,
“ஆளா ஒரு பக்கம் இருக்கறது வருத்தம்தான். வருந்தினா மட்டும் சரியாகிடுமா ? இந்த பிரிவுக்கு அர்த்தம் குடுக்கணும்னா நீ நல்லபடியா உன் ப்ராஜெக்டை முடி. நீ ஆசைபட்ட வேலையை வாங்கு. உன் கனவை நீ அடையறதுதான் விக்ரமுக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கும்.”
“சரிக்கா. கண்டிப்பா நடக்கும். இது எதுவும் படிப்பையும் ப்ராஜெக்டையும் தொட விடமாட்டேன்.“,
“குட். ஆனா பிள்ளையையும் பார்த்துக்கோ. இது எல்லாத்தையும் விட அது முக்கியம்.”
“கண்டிப்பாக்கா. நான் மானேஜ் பண்ணுவேன். “ உறுதியாய் சொன்னாள். ஆனால் காப்பாற்றுவது கடினமென்பது சீக்கிரத்திலேயே புரிந்தது.
அன்றிரவு ராகவனும் மாலினியும் அதைத்தான் பேசிக் கொண்டிருந்தனர்.
“பாவங்க வேதா. நல்லா படிக்கற பொண்ணை ஜோசியம் ஜாதகம்னு கட்டி வெச்சு, விக்ரமும் தனியா விட்டு, இப்ப பிள்ளையும் பிறந்து, இத்தனைக்கப்பறமும், நான் கண்டிப்பா நெனச்சதை முடிப்பேன்னு நம்பிக்கையா சொல்லும் போது கண் கலங்கிடுச்சு.”, என்றாள் மாலினி.
“ம்ம்… அமைதியான பொண்ணு, ஆனா அழுத்தமானவ கூட. முதல்ல கொஞ்சம் தடுமாறினா, அப்பறம் தெளிவாகிட்டா.”, என்றான் ராகவன்.
“கரெக்ட். அந்த ஃபைடிங்க் ஸ்பிரிட் இருக்கு அவகிட்ட. படிக்கணுமேன்னு கடனுக்காக படிக்காம ஆர்வத்தோட படிக்கறா. அதான் எந்த நேரம் டைம் இருக்கோ படிச்சிக்கறா. மூட் வேணும்னு சொல்றதே இல்லை. இந்த கோமதியம்மாவுக்கு அவ அருமை தெரியலை.”, மாலினி பொருமினாள்.
“கல்யாணம், குடும்பம், குழந்தைன்னு ஒரு சின்ன வட்டத்துக்குள்ள வாழறாங்க அவங்க. வேற என்ன எதிர்பார்க்க முடியும் ? இந்த வட்டத்தை விட்டு வெளிய யோசிக்க ஒரு பக்குவம் வேணும், அது அவங்களுக்கு இல்லை. அதுக்காக வேதா மேல பாசமில்லைன்னு கிடையாது. “, சமாதானம் கூறினான் ராகவன்.
“கண்மூடித்தனமா பாசம் மட்டும் போதாதுங்க. அந்த ஜோசியர் பேச்சை கேட்டு அ நியாயத்துக்கு ஆடினாங்க. பத்தாததுக்கு அத்தையையும் பயமுறுத்தி, கடைசீல அவஸ்தை படறது அவங்க பொண்ணுதான். அது புரியலை அந்தம்மாவுக்கு. இதுல நம்ம மஞ்சரி அந்த வீட்டுக்குப் போக போறா.”
“மஞ்சரியா ? என்ன சொல்ற ?”, புதிராய்ப் பார்த்தான் ராகவன்.
“ம்ம்… எனக்கென்னவோ மஞ்சரி ராஜேந்திரனுக்குள்ள ஒரு லவ் ட்ராக் ஓடுதுன்னு நினைக்கிறேன்.”
“ஹே… நீயா எதுவும் நினச்சிக்காதே. அவங்க சாதாரணமா கூட பேசிகிட்டு இருந்திருக்கலாம்.”
“ம்ம்… அப்படி நெனச்சிதான் கொஞ்சம் விட்டு திரும்ப கவனிச்சேன். அவங்க பார்வை, பாடி லாங்குவேஜ் எல்லாமே லவ் பண்ற மாதிரிதான் இருக்கு. நல்ல ஜோடிதான். ராஜேந்திரனும் நல்ல பிள்ளைதான்.”, என்றாள் மாலினி.
அவள் கன்னம் பிடித்துக் கொஞ்சியவன், “ என் சமத்து, உன் தம்பிக்காகன்னு நீ நெனச்சது நடக்கலைன்னால்லும், மஞ்சரி செல்க்ஷனை குத்தம் சொல்லாம பாராட்டற.”
“அவினாஷ் குணத்துக்கு மஞ்சரி செட் ஆவான்னு நெனச்சேன். நா நெனச்சா போறுமா ? இதுல மஞ்சரிய எப்படி குறை சொல்றது. பார்ப்போம், அவனுக்கு யார் அமையறான்னு.”, என்று முடித்தாள்.
[the_ad id=”6605″]
“வேதாவைப் பார்த்தப்பறம் எனக்குமே M.B.A படிக்கற ஆசை திரும்ப வருதுங்க. இத்தனைக்கும் நடுவுல சின்ன பொண்ணு படிக்கறா. நம்மால முடியாதான்னு இருக்கு. “, என்றாள் மாலினி கனவுடன்.
“மயிலு… நெஜமாத்தான் சொல்றியா ? படிக்கறியா ?”, படுத்திருந்தவன் எழுந்து அமர்ந்தான்.
“ படிச்சா அது முழு நேரமும் படிக்கணும். எங்கேர்ந்து வேலையை விட்டுட்டு ஒண்ணரை வருஷம் பிரேக் எடுக்கறது ? அப்பறம் வேலை தேடி உக்காரன்னு ரெண்டு வருஷமாகிடும்.”, பெருமூச்சு விட்டவள், “ ம்ச்… இந்த நினைப்பே வேண்டாம்னுதான் இந்த ஆசையை மூட்டை கட்டி பரண்லே போட்டிருந்தேன். வேதாவைப் பார்க்கவும் எட்டிப் பார்க்குது.”, ஒரு வரட்டுப் புன்னகை சிந்தினாள் மாலினி.
“நீ அப்ளை பண்ணு. வேலையை விட்டுட்டு படி. இரெண்டு வருஷம்தான பார்த்துக்கலாம். இப்ப தலை போற பணத்தேவைன்னு ஒண்ணும் இல்லை. ஜுன்ல சேர அப்ளிக்கேஷன் போடு. உன் எக்ஸ்பீரியன்சுக்கு கண்டிப்பா எங்கன்னாலும் கிடைக்கும்.”
கண்கள் விரித்து ராகவனைப் பார்த்தவள், “ரகு, இனித்தான் நமக்குன்னு சேர்க்க ஆரம்பிச்சிருக்கோம்.வீட்டு லோன் இருக்கு. கார் வாங்க யோசிக்கறோம். உங்க சம்பளம் செலவுக்கு போறும், சேமிப்புக்கு ? இன்னும் படிக்கணும்னா அதுக்கும் செலவாகும். அத்தை விரும்ப மாட்டாங்க.”
“ஷ்.. அம்மாவை சரி கட்டிக்கலாம். உனக்கு அது ஈசி. இப்ப ஜனவரிதானே. உன் அடுத்த அஞ்சு மாச சம்பளம், காலேஜுக்கு. சம்பளம் செலவுக்குப் போனா, போனஸ் வெச்சு சமாளிக்கலாம். எமர்ஜென்சி டெபாசிட் அப்படியேதான் இருக்கு. கார் வாங்கறது கொஞ்சம் டிலே பண்ணிக்கலாம். லோன், ஒரு வருஷத்துக்கு பதிலா ரெண்டு வருஷமா மாத்திகிட்டா. அப்ப மாச டியு ஈசியா கட்டிக்கலாம். வீடு லோனுக்கும், விக்ரம் வாடகை பணம் கைகுடுக்குது. “ வேகமாய் ப்ளான் போட்டான் ராகவன்.
“ரகு… கைக்கும் வாய்க்குமா இருந்தது, இப்பத்தான் கொஞ்சமா ரிலீவ் ஆனோம். திரும்பவும் அதே நிலமைக்குப் போகணுமா ? அவசரப்படாதீங்க.”
“இத்தனை வருஷமா உன் ஆசையெல்லாம் எனக்காகவும் இந்த வீட்டுக்காகவும் விட்டுக்குடுத்த. இனியாச்சம் உன் ஆசைய நிறைவேத்தணும் மாலினி. உங்க அம்மா இளக்காரப் பேச்சை அடைக்கத்தான் வீடு, கார்னு இறங்கினது. அதுக்கே பத்து வருஷம் கிட்ட ஆகப் போகுது. நீ படி. இதுதான் கரெக்ட் டைம். “, அவள் கண்கள் பார்த்து உறுதியாய்க் கூறினான்.
“நெஜம்மாவா ?”, கண்களில் ஆவல் எட்டிப் பார்த்தது.
“யெஸ். பணத்தேவையெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ படிக்கறதுக்கு வேண்டியதைப் பாரு.”, சொன்னதும் பாய்ந்து அவனைக் கட்டிக்கொண்டாள்.
“தாங்க்ஸ் ரகு… “
“தாங்க்ஸ் எப்படி சொல்லணும் ஹூம் ?”, என்று கேட்டவனுக்கு வேண்டிய வகையில் பரிசுகளை அள்ளி அளித்தாள் மாலினி.