அத்தியாயம் 23
காதல் கணைகளை
விழி கொண்டு வீசியவளே
என்னை எரித்துச் சாம்பலாக்கும்
காதல் தீயாக ஏன் ஆனாய்?!!!
மதியம் மூன்று மணிக்கு மறுவீடு என்று பத்திரிக்கையில் போட்டிருக்க இரண்டு மணிக்கு கண்ணனை கிளம்ப சொன்னார்கள் மொத்த குடும்பமும்.
“அந்த பொம்பளை இருக்குற வீட்டுக்கு போக மாட்டேன்”, என்று சொல்லி மறுத்துக் கொண்டிருந்தான் கண்ணன். ராதாவோ ஒரு ஓரமாக சோக பதுமை என நின்றிருந்தாள்.
“இங்க பாரு கண்ணா, அந்த அம்மா பேசுனது பெரிய தப்பு தான். நம்ம வீட்டு பொண்ணுங்களை பேசினது வேற யாராவது இருந்தா இந்நேரம் நடக்குறதே வேற? ஆனா இப்ப மூணாவது பொண்ணும் நம்ம வீட்டுக்கு வந்திருக்கே? அவளுக்காகவும் நாம பாக்கணுமே? அது மட்டுமில்லாம சண்முகம் ரொம்ப நல்லவர். அவர் அங்க சொந்த காரங்க முன்னாடி தலை குனியனுமா?”, என்று கேட்டார் தர்மதுரை.
“அப்பா, என்னால அங்க போக முடியலை. போகவும் முடியாது”
“நீ எப்ப இப்படி பிடிவாத காரனா மாறின கண்ணா? உன்னையே நம்பி வந்தவளோட மனசையும் பாக்கணுமே? முன்னாடி பிளான் பண்ண மாதிரி அங்க போய் தங்க வேண்டாம். தலையை காமிச்சிட்டு உடனே வந்துருவோம்”, என்று செல்வி சொன்னதும் ராதாவைப் பார்த்தான் கண்ணன்.
அவள் முகத்தில் எந்த உணர்ச்சிகளையும் காட்டாமல் நின்றாள். பின் ஒரு முடிவுடன் பெரியவர்களைப் பார்த்தவன் “சரி போகலாம். ஆனா தேன்மொழியையும், கீதாவையும் அங்க கூட்டிட்டு போக வேண்டாம். மறுபடியும் ஏதாவது அவங்களுக்கு நடந்தா நான் சும்மா இருக்க மாட்டேன்”,என்று சொல்லி கிளம்பினான்.
ராதாவும் தன் தந்தையை நினைத்து தான் கலங்கினாள். ஊர் முழுக்க சொந்த காரங்களை கூட்டி வைத்து அவமான படுவாரே என்று வருத்தமாக இருந்தது. இப்போது அவன் வருகிறேன் என்று சொன்னதும் சந்தோஷமாக கிளம்பியவள் தன்னுடைய தந்தைக்கும் தகவல் சொன்னாள்.
அங்கே சென்று வீட்டுக்கு வெளியே அமைக்க பட்டிருந்த மேடையில் சென்று அமர்ந்து கொண்டான் ராதாவுடன். வீட்டுக்குள் செல்ல மறுத்து விட்டான். அவன் வந்ததே போதும் என்று நினைத்து சண்முகம் வந்தவர்களை கவனித்தார்.
தன்னுடைய ஒரே மகளின் பாராமுகம் மரகதத்தை வெகுவாக வருத்தியது. கணவரும் வீட்டில் வந்து தன்னை விளாசி தள்ளி இருக்க முதல் முறையாக ஆனவத்தை விட்டு தப்பு செய்து விட்டோமோ என்று வருந்தினாள்.
அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போது அருகே பேச்சுக் குரல் கேட்டது. அங்கே கல்யாணி அவளுடைய மருமகனுக்கு கூல்டிரிங்க்ஸ் கொடுத்த படியே “வாங்கிக்கோங்க மாப்பிள்ளை, அம்மா அப்பா வரலையா? என் மக உங்க அம்மா அப்பாவை நல்லா பாத்துகிறாளா?”,என்று விசாரித்துக் கொண்டிருந்தாள்.
[the_ad id=”6605″]
“நீங்க வளர்த்த மகளாச்சே? குடும்பத்தையே கவனிக்காம இருப்பாளா? என் அம்மா அப்பாவை ரொம்ப அன்பா மரியாதையா பாத்துகிறா?”, என்றான் கல்யாணியின் மருமகன் விஷ்ணு.
இந்த காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த மரகதம் “என் தங்கச்சி கூட அவளோட மருமகனை எப்படி மரியாதையா பாத்துகுறா? ஆனா நான் என் மாப்பிள்ளையை வாய்க்கு வந்த படி எல்லாம் பேசிட்டேனே?”, என்று வருந்திக் கொண்டிருந்தாள்.
அப்போது அவள் அருகே வந்த கல்யாணி “பாத்தியாக்கா கூத்தை? உன் புருஷன் உன் சமந்தாரை எப்படி கவனிக்காருன்னு? விட்டா காலிலே விழுந்துருவார் போல? இவங்களுக்கு இவ்வளவு மரியாதை கொடுக்கணும்னு ஒரு கேடா?”, என்று கேட்டாள்.
“ஆக, நீ வேணும்னு தான் என்னை எல்லா விசயத்துலயும் தூண்டி விட்டுருக்க? அப்படி தான?”, என்று கேட்டாள் மரகதம்.
“நீ என்னக்கா சொல்ற?”
“உன் மருமகனை நீ காலில் விழாத குறையா கவனிச்சதை நான் தான் பாத்தேனே? நீ உன் சமந்தாருக்கு மரியாதை கொடுக்கணும். ஆனா நான் என் சம்மந்தி வீட்டுக்காரங்களுக்கு மரியாதை கொடுக்க கூடாது. அப்படி தானே? உன் பேச்சைக் கேட்டு எல்லாரையும் மட்டு மரியாதை இல்லாம பேசிட்டேனே? தங்கச்சினு நினைச்சதுக்கு ரொம்ப நல்லது பண்ணிட்ட? உன்னை எல்லாம் கூட பிறந்த தங்கச்சின்னு சொல்றதுக்கே அருவருப்பா இருக்கு. கூட பிறக்காத தங்கச்சிகளை சொல்லிட்டேனேன்னு என்னோட மாப்பிள்ளை என் முகத்துல முழிக்க மாட்டிக்காரு ஆனா நீ என் மகளை உன் மக மாதிரி நினைச்சிருந்தா இப்படி செஞ்சிருப்பியா? நான் தான் அறிவு கெட்டு வாய் பேசுனா நீ அப்படி பேசாதேன்னு எனக்கு நீ சொல்லிருந்தா உன்னை தங்கச்சின்னு சொல்லிருப்பேன். ஆனா இப்ப தானே தெரியுது நீ லேசா புகஞ்சதைக் கூட ஊதி ஊதி பெருசாக்குறவன்னு. ஒழுங்கு மரியாதையா இங்க இருந்து கிளம்பிரு. இனி உனக்கும் எனக்கும் எந்த ஒட்டும் கிடையாது உறவும் கிடையாது”, என்று சொன்ன மரகதம் அடுத்த நொடி மேடை ஏறினாள்.
அவள் மேடைக்கு வருவதைப் பார்த்து கண்ணன் முகம் சுளிக்க, ராதாவோ “ஐயோ இந்த அம்மா எந்த பிரச்சனையை இழுக்க போகுதோ?”, என்று பயந்து போனாள்.
கண்ணன் வீட்டில் உள்ள அனைவருமே அதே கலக்கத்தோடு இருக்க, அடுத்த நொடி முழு கோபத்தோடு சண்முகம் “இவளை என்ன செஞ்சா தகும்?”, என்று எண்ணிக் கொண்டு மேடைக்கு ஓடினார்.
ஆனால் யாருடைய கலக்கத்தையும் பொருட்படுத்தாமல் கண்ணன் அருகே சென்ற மரகதம் கண்ணனைப் பார்த்து கை கூப்பி “என்னை மன்னிச்சிருங்க மாப்பிள்ளை”, என்று சொல்லி சாஷ்டாங்கமாக அவன் காலிலே விழுந்தாள்.
அங்கிருந்த யாருமே இதை எதிர்பார்க்க வில்லை. கண்ணனும் கூட பதறிப் போனான். “ராதா என்ன இது? உங்க அம்மாவை எழுப்பு”, என்று சொன்னதும் திகைத்து போய் நின்றவள் குனிந்து “அம்மா எந்திரி. என்ன பண்ணுற? எல்லாரும் பாக்குறாங்க”, என்றாள்.
கண்களில் வழிந்த நீரோடு எழுந்து நின்ற மரகதம் “புத்தி கெட்டு போய் நாக்குல நரம்பில்லாம பேசிட்டேன். என்னை மன்னிச்சிருங்க. சபைல வச்சு உங்க தங்கச்சிகளை அசிங்க படுத்திட்டேன். அதே சபைல வச்சு மனப்பூர்வமா மன்னிப்பு கேக்குறேன். உங்க தங்கச்சிங்க காலிலயும் விழுறேன்”, என்றாள்.
“பரவால்ல விடுங்கன்னு என்னால சொல்ல முடியலை. நீங்க மனசு திருந்துனதே போதும். ஆனா எல்லாத்தையும் உடனே மறக்க முடியாது.எனக்கு கொஞ்சம் அவகாசம் வேணும்”, என்றான் கண்ணன்.
“நீங்க இவ்வளவு சொன்னதே போதும் மாப்பிள்ளை. நீயும் என்னை மன்னிச்சிரு கண்ணு”, என்று சொல்லி விட்டு அழுது கொண்டே கீழே வந்தவள் கண்ணன் குடும்பத்தில் இருந்த அனைவரிடமும் மன்னிப்பைக் கேட்டாள்.
என்ன தான் மன்னிப்பு கேட்டாலும் நடந்ததை மாற்ற முடியாது என்பதால் அன்று அவர்கள் வீட்டில் தங்காமல் ராதாவை அழைத்துக் கொண்டு குடும்பத்தினருடன் வீட்டுக்கு வந்து விட்டான் கண்ணன்.
அவனுடைய அறையிலே அன்று இரவு முதலிரவு என்று ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
மாலை ஆறு மணிக்கு “தினேஷ், கீதாவை அழைச்சிட்டு கோயிலுக்கு போயிட்டு வா டா”,என்றாள் வேணி.
[the_ad id=”6605″]
“அவன் அவன் பொண்டாட்டி கூட இருக்கான். ஆனா எனக்கு காலேஜ் போகும் போதும் கோயிலுக்கு போகும் போதும் தான் உன் கூட இருக்க முடியுது”, என்று புலம்பிக் கொண்டே கீதாவுடன் சென்றான் தினேஷ்.
அவர்கள் சென்றதும் வேணி அருகில் சென்ற தேன்மொழி “அத்தை உங்க கிட்ட ஒண்ணு சொல்லணும்”, என்றாள்.
“என்ன தேனு? என்கிட்ட என்ன தயக்கம் சொல்லு”, என்று வேணி சொன்னதும் அன்னமும் தேன்மொழி என்ன சொல்ல போகிறாள் என்று பார்த்தாள்.
“அத்தை, இன்னும் கீதாவையும் தினேஷையும் தனி தனி ரூம்ல வச்சிருக்கணுமா? ஒரே ரூம்ல தங்க வைக்கலாமே”, என்று தயக்கத்துடன் சொன்னாள்.
“இல்ல தேனு. அவளுக்கு இன்னும் படிப்பு முடியலை. அதான் யோசிக்கிறேன்”
“இதுல என்ன இருக்கு அத்தை. அவங்க படிச்சவங்க. இது தெரியாமலா இருப்பாங்க. என்னோட விருப்பத்தை சொன்னேன். நீங்க வேண்டாம்னு சொன்னா வேண்டாம்”
“நானே இதை சொல்லணும்னு நினைச்சேன் வேணி. இந்த கீதா பிள்ளையையும் உன் மவன் நைட்டு முழுக்க தூங்க விடாம போனுல பேசிட்டே இருக்கான். நொய் நொய்னு போன் சத்தம் கொடுத்துட்டே இருக்கு. பேசாம ரெண்டு பேரையும் ஒரே ரூம்ல தங்க வைக்கலாம். சின்னஞ்சிறுசுக பாத்தியா?”, என்றாள் அன்னம்.
“நீங்களே சொன்ன அப்புறம் நான் என்ன அத்தை சொல்ல போறேன்?”
“சூப்பர் அத்தை, நான் ஸ்டோர் ரூமை சுத்தம் செய்யவா?”
“வேண்டாம் தேனு. அதை சுத்தம் செய்ய அஞ்சாறு நாள் ஆகும். என்னோட ரூமை அவங்களுக்கு கொடுத்துறலாம். எனக்கும் மாடி ஏற கஷ்டமா இருக்கு. நான் குஞ்சு ரூம்ல தங்கிக்கிறேன்”, என்று அன்னம் சொன்னதும் வேணிக்கும் அது சரி என்று பட்டது.
“சரி அப்படியே செஞ்சிரலாம்”, என்று சொன்ன வேணி “கதிர், குஞ்சு ரெண்டு பேரும் இங்க வாங்க”, என்று அழைத்தாள்.
“என்ன மா?”, என்று கேட்டுக் கொண்டே இருவரும் வந்தனர். “பாட்டியோட பொருளை எல்லாம் உன்னோட ரூம்ல வைக்கணும் டா குஞ்சு. உன் ரூம்ல இருக்குற தினேஷ் பொருளை எல்லாம் மேல பாட்டி ரூம்ல வைக்கணும்”,என்று வேணி சொன்னதும் அவளை முறைத்தான் செல்வா.
“என்ன டா முறைக்கிற?”
“அண்ணன் தனியா போறது எல்லாம் எனக்கு வருத்தம் இல்லை மா. ஆனா எனக்கு ரூம் மேட்டா வைக்கிறதுக்கு உனக்கு இந்த கிழவி தான் கிடைச்சுச்சா?”
“குஞ்சு, பாட்டியை அப்படி சொல்லக் கூடாது”
“விடு வேணி, சின்ன பேராண்டி ஒண்ணும் பிரச்சனை இல்லை. நான் உன் கூட தங்குறது உனக்கு விருப்பம் இல்லைன்னா, நீ தாராளமா ஹால்ல தங்கிக்கலாம். நான் சுதந்திரமா உன்னோட ரூம்ல தங்கிக்கிறேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள் பாட்டி.
“இதுக்கு இருக்குற எகத்தாளத்தைப் பாரேன்”, என்று மனதில் எண்ணிக் கொண்டு அன்னத்தை முறைத்தான் செல்வா.
“செம பல்ப் டா உனக்கு. இது உனக்கு தேவையா? சரி வா எல்லாம் எடுத்து வைப்போம்”, என்று சொன்ன கதிர் தேன்மொழியிடம் திரும்பி “உன் ஐடியா சூப்பர் தேனு”, என்றான்.
“என்னண்ணா சொல்ற? தேனு என்ன செஞ்சா?”
[the_ad id=”6605″]
“தினேஷையும் கீதாவையும் ஒண்ணா இருக்க வைக்கணும்னு பேசினதே தேனு தானே?”, என்று கதிர் சொன்னதும் “கிராதாகி, இது உன் வேலையா? இது உனக்கே நல்லா இருக்கா?”,என்று கேட்டான் செல்வா.
“போடா போடா, சரி நீ பாட்டி கூட தங்க போறியா? ஹால்ல தங்க போறியா?”, என்று நக்கலாக கேட்டாள் தேன்மொழி.
“கதிர் அண்ணா, உன் பொண்டாட்டி கொஞ்சம் விட்டா என்னை வீட்டை விட்டே துரத்திருவா. வா நாம போய் பொருள் எடுத்து வைப்போம்”, என்று செல்வா சொல்ல கதிர் புன்னகைத்தான்.
“சும்மா வாயடிக்காம அவங்க வரதுக்குள்ள சொன்ன வேலையை செய்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள் தேன்மொழி.
“ஏண்ணா, இப்படி பட்ட வாயாடி பொண்டாட்டி கூட எப்படி தான் இருக்குறியோ?”
“அது சௌமி நம்ம வீட்டுக்கு வந்த அப்புறம் தெரியும், வா டா போலாம்”, என்று சொல்லி விட்டு கதிர் சென்று விட்டான்.
“இவனும் நம்ம காதலை கண்டு பிடிச்சிட்டானா? அவ்வளவு பப்ளிக்கா அவ கிட்ட வழிஞ்சிட்டோமோ?”, என்று எண்ணிக் கொண்டு வேலையைப் பார்க்க சென்றான் செல்வா.
சிறிது நேரத்தில் அனைத்து பொருளும் மாற்றப் பட்டிருந்தது. தினேஷும் கீதாவும் வீட்டுக்கு வரும் போது அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
கீதா தன் அறைக்கு சென்று விட்டாள். தினேஷ் அவனுடைய அறைக்கு போகும் போது “டேய் உன் ரூம் இனி மேல தான்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள் வேணி.
மனதுக்குள் குத்தாட்டம் போட்ட தினேஷ் அங்கு அமர்ந்திருந்த தேன்மொழியை நக்கலாக பார்த்தான்.
“என்ன டா நக்கலா பாக்குற?”, என்று கேட்டாள் தேன்மொழி.
“யாரோ, ஒருத்தங்க கீதாவோட நம்பரைக் கூட தர மாட்டேன்னு சொன்னாங்க.இப்ப பாத்தியா ரெண்டு பேரும் ஒரே ரூம்ல?”, என்று நக்கலாக சிரித்த தினேஷ் அப்போது தான் சைகை காட்டிக் கொண்டிருந்த செல்வாவைப் பார்த்தான்.
செல்வாவின் சைகை அவனுக்கு புரியாமல் அவன் விழித்துக் கொண்டிருக்கும் போதே “அட்டை கொழுத்துப் போய் அருவாமனையில் ஏறுச்சாம்”, என்றாள் அன்னம்.
“என்ன பாட்டி சொல்ற? அப்படின்னா என்ன?”, என்று கேட்டான் செல்வா.
“இல்லை டா குஞ்சு, ரத்தத்தை குடிச்சு கொழு கொழுன்னு இருக்கும் அட்டை அருவாமனையில் ஏறுனா என்ன ஆகும்?”
“கீறல் விழுந்து செத்துரும். ஆனா இதை எதுக்கு இப்ப சொன்ன?”
“இவனை அவன் பொண்டாட்டி கூட சேந்து இருக்கணும்னு உன் அம்மா கிட்ட பேசினதே தேனு தான். அவளைப் போய் பகைச்சிக்கிறானே? அப்ப அவனுக்கு கொழுப்பு தானே?”, என்று சொன்ன அன்னம் “தேனு”, என்று அழைத்தாள்.