கல்யாண வேலைகள் ஆரம்பமானது. கண்ணனுடன் சேர்ந்து கதிரும் தினேஷும் அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு செய்தனர். பெரியவர்களுக்கு பத்திரிக்கை கொடுக்கும் வேலை மட்டுமே இருந்தது.
கல்யாண நாளும் வந்தது. சம்மந்தி வீட்டுக்கார்கள் என்ற முறையில் மரகதமும் சண்முகமும் வந்திருந்தனர்.
வைஷ்ணவியின் பெற்றோர் சபாபதியும் வள்ளியும் புன்னகை முகத்துடனும் மரியாதையுடனும் அனைவரையும் நடத்தினர். இது மரகதம் கண்களிலும் பட்டது. தான் தங்களின் சம்பந்தியை மதிக்க வில்லையே என்று அவள் மனது சஞ்சலப் பட்டது.
அனைவரின் ஆசீர்வாதத்தோடும் வைஷ்ணவியின் கழுத்தில் தாலியைக் கட்டினான் செந்தில். தேன்மொழி தான் வைஷ்ணவிக்கு நாத்தனார் முடிச்சைப் போட்டாள்.
பின்னர் அனைத்து சடங்குகளும் முடிந்து காலை உணவை உண்டு விட்டு செந்தில் கோர்ட் சூட்டுடனும் வைஷ்ணவி வேறு புடவையுடனும் மேடை ஏறினார்கள்.
இருவர் முகத்திலும் வெட்கம் மிளிர்ந்தது. அதையே பார்த்துக் கொண்டு நின்றாள் மரகதம்.
“தேனு, கீதா, நீங்க ரெண்டு பேரும் ஏன் இங்க நீக்குறீங்க? மேடைல போய் நின்னுங்க”, என்று சொன்னாள் வள்ளி.
“இல்லை அத்தை நாங்க அங்க போய் என்ன செய்ய?”, என்று கேட்டாள் தேன்மொழி.
“நல்லா சொல்லிட்ட போ, உன் அண்ணி இன்னும் உங்க வீட்டு பொண்ணு. அவ கிட்ட நீங்க நிக்காம வேற யார் நிப்பா. நீங்க மேல போங்க. நான் கதிரையும் தினேஷையும் அனுப்பி வைக்கிறேன்”, என்று வள்ளி சொன்னதும் கீதாவும் தேன்மொழியும் மேடை ஏறினார்கள்.
“ஏட்டி வள்ளி, இந்த ரெண்டு பிள்ளைகளும் உன் மருமகன் கூட பிறந்தவங்க இல்லையே? அவங்களை எதுக்கு மேடைல நிக்க சொல்ற? உன் மூத்த பொண்ணுங்க ரெண்டு பேரையும் உன் மாப்பிள்ளைகளோட நிக்க சொல்லலாம்ல?”, என்று கேட்டாள் ஒரு பெண்மணி.
“அத்தாச்சி, தேனும் கீதாவும் கூட பிறந்தவங்க இல்லை தான். ஆனா ஒரே வயித்துல பிறந்தா தான் அண்ணன் தங்கை உறவு வருமா? அங்க பாருங்க மேடையை. மேடைக்கு போன கீதாவும் தேன்மொழியும் அவங்க அண்ணன் கூடவா பேசிட்டு இருக்காங்க? அண்ணி அண்ணின்னு என் மக கூட தான பேசிட்டு இருக்காங்க. அது தானே நமக்கு வேணும். நம்ம பொண்ணுக்கு நல்ல மாமனார் மாமியார், ரெண்டு சின்ன மாமனார் மாமியார், சண்முகம்மாள் அம்மா அவங்க பிள்ளைங்கன்னு எல்லாருமே நல்லவங்களா அமைஞ்சிருக்காங்க. எல்லாருமே ரொம்ப அன்பானவங்க”
…..
“என் பொண்ணுக்கு வந்திருக்க சொக்காரி அதான் ராதா பொண்ணு இருக்கே? அம்மா அம்மா ன்னு என் மேலயும் பாசமா இருக்கு. இப்படி பட்ட குடும்பத்துல போய் வாழுறதுக்கு நம்ம பொண்ணு கொடுத்து வச்சிருக்கணும் அத்தாச்சி. என் மக முகத்துல இருந்த பூரிப்பை பாருங்க. இந்த கல்யாண நாள் சந்தோஷம் அவங்க வாழ்க்கை முழுக்க இருக்க வேண்டாமா? என்னோட மூத்த ரெண்டு மக கல்யாணத்துலயும் நான் இப்படி தான் செஞ்சேன். இப்ப அவங்க சந்தோஷமா இருக்காங்க. சம்மந்தி வீட்டுக்காரங்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை நாம கொடுத்தா அந்த மரியாதையும் அன்பும் பல மடங்கு நமக்கு திருப்பிக் கிடைக்கும். சும்மா தேவை யில்லாம ஏதாவது பேசிட்டு இருக்காம போய் சாப்பிடுங்க”,என்று வள்ளி சொல்லிக் கொண்டிருக்கும் போது “வள்ளி இங்க வாயேன்”,என்று அழைத்தாள் சகுந்தலா.
“இதோ வரேன் அண்ணி”, என்று கத்தி சொன்ன வள்ளி “என்னோட சின்ன சம்பந்தி கூப்பிடுறாங்க”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.
இந்த பேச்சை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மரகதத்துக்கு யாரோ செருப்பால் அடித்தது போல இருந்தது. தான் செய்த இமாலய தவறு இப்போது தெளிவாக புரிந்தது.
[the_ad id=”6605″]
இந்த பேச்சை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தது மரகதம் மட்டும் அல்ல. ராதாவும் தான். மரகதம் அருகில் வந்து நின்றாள் ராதா.
மகளைப் பார்த்ததும் குற்ற உணர்வுடன் தலை குனிந்து கொண்டாள் மரகதம்.
“பாத்தியா மா? அம்மான்னா இப்படி இருக்கணும்? ஆனா நீ.. எனக்கு என்ன செய்ய இருந்த.. நீ பேசின பேச்சுக்கு வேற குடும்பமா இருந்துருந்தா இந்நேரம் நான் வாழாவெட்டியா உன் வீட்ல இருந்துருக்கணும். வைஷ்ணவி அம்மா எப்படி சொன்னாங்கன்னு கேட்டல்ல? இத்தனைக்கும் வைஷ்ணவி வீட்ல மூணு பொண்ணுங்க. ஆனா நம்ம வீட்ல நான் ஒரே பொண்ணு. ஆனா என் வாழ்க்கையை பத்தி நீ கவலைப் பட்டிருந்தா அப்படி எல்லாம் செஞ்சிருப்பியா?”
“ராதா கண்ணு…”
“பேசாத மா, அங்க பாரு வைஷ்ணவி முகத்துலயும் என் கொழுந்தனார் முகத்துலயும் இருக்குற சந்தோசத்தைப் பாரு. அப்படியே தலையை திருப்பி என் வீட்டுக்காரரைப் பாரு. நாங்க எங்க கல்யாணத்துல இப்படி இருந்தோமா? எங்க கல்யாண நாளையே இனி கொண்டாட முடியாத படி பண்ணிட்டியே? இனி வருஷம் வருஷம் நீ பேசுன பேச்சு தானே முன்ன வந்து நிக்கும். மட்டு மரியாதை எல்லாம என் புருஷனை, என் மாமனாரை, நாத்தனாரைன்னு எப்படி பேசின? எனக்கு வைஷ்ணவியை நினைச்சா பொறாமையா இருக்கு. உன் வயித்துல ஒத்த பிள்ளையா பிறந்ததுக்கு பதிலா வைஷ்ணவி வீட்ல நாலாவது மகளா பிறந்திருக்கலாம்”
“ஐயோ, என் மகளே என்னை மன்னிச்சிரு. என் சின்ன புத்தியால உன்னை கண்ணீர் சிந்த வச்சிட்டேனே? என் தப்பை நான் முன்னமே உணர்ந்திருந்தாலும் இன்னைக்கு வள்ளி பேசினது என்னை செருப்பால அடிச்ச மாதிரி இருந்தது மா”
“காலம் கடந்து யோசிச்சு என்ன பண்ண? என் சின்ன மாமியார் வள்ளின்னு சொன்ன உடனே அண்ணின்னு ஒடுறாங்களே? ஆனா நீ அவங்களைப் பொருட்டாக் கூட மதிக்கலை. இப்படிப் பட்ட உறவுகளை உன்னால ஏன் மா தக்க வச்சிக்க முடியலை?”
“வார்த்தையால என்னைக் கொல்லாத ராதா. உங்க அப்பா என்கிட்ட பேசுறது இல்லை. மாப்பிள்ளை நம்ம வீட்டுக்கு வராததுனால நீயும் நம்ம வீட்டுக்கு வரது இல்லை. செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேட்டாலும் அது மாறாதுன்னு தெரியும். இருந்தாலும் இந்த அம்மாவை மன்னிச்சிரு கண்ணு”
“உடைஞ்ச பாத்திரத்தை ஒட்ட வைக்க முடியாது தான்.ஆனா ஏதாவது செஞ்சு அதை சரி செய்யலாமான்னு யோசிக்கணும். போ என் மாமியார் கிட்ட போய் சாதாரணமா பேசு. மன்னிப்பு அது இதுன்னு எல்லாம் பேச வேண்டாம். நான் ஏதாவது உதவி செய்யவா அண்ணின்னு கேட்டு போய் பேசு”
“நான் எப்படி டி திடீர்னு அண்ணின்னு கூப்பிட்டு போய் பேச?”
“அது உன் சாமர்த்தியம்? உனக்கு பேசவா சொல்லி தரணும்?”, என்று ராதா சொன்னதும் மரகதம் முகம் கூம்பிப் போனது.
“பாவம் போல எல்லாம் மூஞ்ச வச்சிக்காத. அன்னைக்கு கொஞ்ச பேச்சா பேசின? அங்க பாரு அப்பா, என்னோட மூணு மாமனார் கூட எவ்வளவு உரிமையா மச்சான்னு சொல்லி பேசிட்டு இருக்காரு? உனக்கு மட்டும் என்னவாம்? போ போய் பேசு. நாளைக்கு பிள்ளை உண்டானா நம்ம வீட்டுக்கு நானும் உன் மருமகனும் வரணும்னு நினைச்சா அவங்க கூட சுமுகமா போய் பேசு. இல்லைன்னா இப்படியே இரு”, என்று சொல்லி விட்டு நகர்ந்து விட்டாள்.
இதற்கு மேலும் வாயை மூடிக் கொண்டு இருக்க கூடாது என்று முடிவு பண்ணி செல்வி அருகில் சென்றாள் மரகதம்.
மரகதத்தை அருகில் கண்ட செல்வி “ஐயையோ இந்த அம்மா முகமே சரி இல்லை.கண்ணன் கல்யாணத்துல பிரச்சனை பண்ணுச்சு. இப்ப சின்னவன் கல்யாணத்துலயும் ஏதாவது சொல்லிருமோ?”, என்று பயந்து அவசர அவசரமாக “சம்மந்தி ஏதாவது வேணுமா? உங்களுக்கு ஏதாவது குறையா? ஜூஸ் ஏதாவது போட்டு தர சொல்லவா? சாப்பிடுறீங்களா?”, என்று கேட்டாள்.
செல்வி முகத்தில் இருந்த பயம் மற்றும் படபடப்பைக் கண்ட மரகதம் “இந்த அளவுக்கு இவங்களை பயப் பட வச்சிருக்கேனே?”, என்று எண்ணிக் கொண்டு “இல்லைங்க அண்ணி, அதெல்லாம் ஒண்ணும் இல்லை. நான் ஏதாவது உங்களுக்கு உதவி செய்யவான்னு கேக்க தான் வந்தேன்”, என்றாள்.
அவள் அண்ணி என்று சொன்னது முதல் அதிர்ச்சி என்றால் உதவி செய்வேன் என்று வந்து நிற்பது அடுத்த அதிர்ச்சியாக இருந்தது செல்விக்கு.
[the_ad id=”6605″]
தன்னுடைய பதிலுக்காக மரகதம் காத்திருப்பது புரிய “நீங்க எங்க சம்மந்தி, போய் கால் மேல கால் போட்டு கல்யாணத்தைப் பாருங்க. மத்ததெல்லாம் நாங்க பாத்துக்குறோம்”, என்றாள்.
அதில் மரகதம் முகம் மேலும் கூம்பித் தான் போனது தன்னை ஒதுக்குகிறார்கள் என்று எண்ணி. அப்போது இவர்களையே பார்த்துக் கொண்டு நின்ற ராதா, செல்வி கண்களில் பட்டாள். ராதாவைக் கண்டதும் செல்வி முகம் மலர்ந்தது.
வீட்டுக்கு வந்ததில் இருந்து அதிர்ந்து ஒரு வார்த்தை பேசியதில்லை. அத்தை மாமா என்ற வார்த்தைக்கு எதிர்த்து பேசியதில்லை. இந்த வேலை செய்ய மாட்டேன், அந்த வேலை செய்ய மாட்டேன் என்று மறுத்துப் பேசியதில்லை.
எப்போதும் புன்னகையுடனும், அன்புடனும் தங்கள் வீட்டு மருமகளாக அல்லாமல் மகளாக வளைய வரும் ராதாவை அனைவருக்கும் பிடிக்கும்.
தேன்மொழி இல்லாத குறையை தீர்த்து வைப்பது ராதா தான். சண்முகம்மாளுக்கு கால் அமுக்கி விட்டு கதை வாசித்துக் காட்டுவாள்.
தர்மதுரையும் ராஜதுரையும் வெளியே போய் விட்டு வந்தால் அடுத்த நொடி கையில் செம்பு தண்ணீருடன் போய் நிற்பாள். “அத்தை, சின்ன அத்தை ரெண்டு பேரும் ரெஸ்ட் எடுங்க. எல்லா வேலையும் நான் பாத்துக்குறேன்”, என்று செல்வியையும் சகுந்தலாவையும் ஓய்வெடுக்க அனுப்பி வைப்பாள்.
அவளுக்கு தெரியாத சமையல் ஏதாவது இருந்தால் மட்டும் “அத்தை இது எனக்கு செய்ய தெரியாது. எப்படின்னு சொல்லுங்க, நான் செய்றேன்”, என்று பணிந்து தான் சொல்லுவாள்.
கண்ணனைக் கண்டால் அவள் முகம் மத்தாப்பாக மலர்ந்து காதல் மணம் பரப்பும். செந்திலிடம் இருந்து கொழுந்தன் என்று ஒதுங்காமல் அவனையும் ஒதுக்காமல் “சாப்பாடு எடுத்து வைக்கவா தம்பி? இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்க”, என்று அவனையும் கவனித்துக் கொள்வாள்.
அப்படிப் பட்ட மகள் இன்று ஆவலாக தன்னையும் அவளுடைய அன்னையையும் பார்ப்பதைப் பார்த்த செல்விக்கு “இப்படிப் பட்ட மகளை கொடுத்ததுக்காகவே இந்த அம்மாவை நாம மன்னிக்கலாம்”, என்று எண்ணி “இப்ப என்ன சம்பந்தி நீங்க எனக்கு ஒத்தாசையா இருக்கணும் அவ்வளவு தானே? ஒரு நிமிஷம் இருங்க”, என்று சொன்ன செல்வி “வேணி அண்ணி, இங்க வா”, என்று அழைத்தாள்.
“ரெண்டு பேருக்கும் ஒரே வயசு, நீ அண்ணின்னே இன்னும் சொல்லு. போ செல்வி. சரி எதுக்கு கூப்பிட்ட?”, என்று கேட்ட படி வந்தாள் வேணி.
“அதை விடு, பழகிருச்சு. நீயும் சம்பந்தியும் போய் நம்ம வீட்ல பிள்ளைகளுக்கு ஆரத்தியும் பாலும் பழமும் ரெடி பண்ணி எல்லா ஏற்பாடும் முடிச்சிட்டு வறீங்களா? கடைசில குடும்ப போட்டோ எடுக்கணும். அதனால வேலை முடிச்சிட்டு வந்துருங்க”
“சரி, நீங்க வாங்க அக்கா போகலாம்”, என்று சொல்லி மரகதத்தை அழைத்துக் கொண்டு சென்றாள் வேணி.
இவர்கள் குடும்பத்தையே அசிங்க படுத்தி இருந்தாலும் அதை மறந்து விட்டு அக்கா என்று அழைத்து தன்னை கூட்டிச் சென்ற வேணியிடம் மன்னிப்பை கேட்ட படியே அவளுடன் சென்றாள் மரகதம்.
அதை ஒரு புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த ராதா அருகில் வந்த செல்வி அவள் தலையை வாஞ்சையாக தடவிக் கொடுத்து “தேனு, கீதா அவங்க புருஷன்ங்க கூட மேடைல நிக்குறாங்க. எங்க
உன் புருஷன்? டேய் கண்ணா கண்ணா”,என்று சொல்லி அருகே தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த அவனை அழைத்தாள்.
“என்ன மா?”, என்று கேட்டுக் கொண்டே அங்கு வந்தான் கண்ணன்.
“என்ன நொன்ன மா? அந்த விளங்காத பயலுக கூட பேசக் கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல டா?”
“அம்மா அவனுங்க என் பிரண்ட்ஸ் மா”
“ஆமா பெரிய பிரண்ட்ஸ், அவனுங்க கூட வம்பளக்காம உன் பொண்டாட்டியைக் கூட்டிட்டு மேடைக்கு போ”
“மேடை போட்டுருக்குறது பொண்ணு மாப்பிள்ளை நிக்க தான்.இதுல என் தங்கச்சிங்களும் மச்சானுங்களும் வேற நிக்காங்க. நாங்களும் அங்க போய் என்ன செய்யுறது? இங்க வேலை வேற கிடக்கு மா”
“நீ வேலை செஞ்சு கிழிச்சது போதும். ஒழுங்கா ராதவைக் கூட்டிட்டு போ அங்க. எல்லாரும் ஒண்ணா நின்னு சிரிச்சு பேசுனா செந்திலும் சந்தோஷ படுவான்ல டா”, என்று செல்வி சொன்னதும் ராதாவை அழைத்துக் கொண்டு சென்றான் கண்ணன்.
இவர்களும் அங்கே சென்றதும் அனைவரும் அவர்களையும் சேர்த்து கிண்டல் செய்து கொண்டிருந்தனர்.
இந்த காட்சியை சோகமாக பார்த்துக் கொண்டிருந்தான் செல்வா. அவனருகில் இருந்த அன்னம் “என்ன டா குஞ்சு கண்ணால ஒண்ணுக்கு அடிக்க போறியா? உர்ருன்னு இருக்க?”, என்று கேட்டாள்.
“உனக்கு இருந்தாலும் ரொம்ப எகத்தாளம் கிழவி. எல்லாரும் அவங்க அவங்க ஜோடியோட இருக்க, நான் மட்டும் உன் கூட உக்காந்துருக்கேனே? பின்ன சோகமா இருக்காதா?”
அவனிடம் பதில் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து எழுந்து செல்லப் பார்த்தாள் அன்னம். “எங்க போற பாட்டி?”, என்று கேட்டான் செல்வா.
“அதோ நிக்கான்ல உன் அப்பன்., அவன் கிட்ட சொல்லிட்டு வரேன். உன் கடைசி பையனுக்கு கல்யாண ஆசை வந்துருச்சாம்னு சொல்லிட்டு வரேன்”
“ஐயோ கிழவி, நீ ஆணியே புடுங்க வேண்டாம். தேரை இழுத்து தெருவுல விட்டுருவ போலயே? என் கிட்டயே இரு”, என்று சொல்லி கையைப் பிடித்து இழுத்து அமர வைத்தான்.
“என்ன டா? உன் ஜோடி கூட நிக்க வேண்டாமா?”
“இப்போதைக்கு நீ தான் என் ஜோடி. அப்புறம் பாட்டி நான் ஒண்ணு கேக்கவா?”
“என்ன டா?”
“என் கல்யாணத்துக்கும் நீ உயிரோட இருக்கணும் பாட்டி. எல்லாரோட கல்யாணத்தையும் பாத்துட்டு என் கல்யாணத்தை பாக்கலைன்னா நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்”
“ஹா ஹா, அவசரப் பட்டு சபதம் எதுவும் செஞ்சிராத டா”
“போ கிழவி, நீ இருக்கணும் சொல்லிட்டேன்”
“உன் பிள்ளையையும் வளப்பேன் டா நான்”,என்று அன்னம் சிரித்ததும் செல்வாவும் சிரித்தான்.
அந்த நாள் அனைவருக்குமே சந்தோஷமாக சென்றது. எல்லாரும் சந்தோஷமாக இருக்க துரைராசு மற்றும் ரேகா முகம் மட்டும் சிறு கவலையை பிரதிபலித்தது. அதைக் கண்டது கதிர் தான்.
“கீதா”, என்று அழைத்தான் கதிர்.
“என்ன மாமா?”
“உனக்கு நம்ம வீடு பிடிச்சிருக்கா?”
இது என்ன சம்மந்தம் இல்லாத கேள்வி என்று எண்ணினாலும் “ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு மாமா”, என்றாள்.
தேன்மொழி மற்றும் தினேஷ் கூட அவர்கள் பேச்சை புரியாமல் பார்த்தார்கள்.
“உன்னை தப்பா பேசின மரகதம் அம்மா கூட உன்கிட்டயும் தேனு கிட்டயும் மன்னிப்பு கேட்ட உடனே மன்னிச்சிட்டீங்க. உன் அம்மா அப்பாவையும் நீ மன்னிக்க கூடாதா கீதா?”
….
“நான் சொல்றதை நீ கேக்கணும்னு சொல்ல வரல. எல்லாரும் சந்தோஷமா இருக்கும் போது அவங்க சோகமா இருக்குறது கஷ்டமா இருக்கு. எங்க தாத்தா சாவுக்கு காரணமான உங்க அப்பாவைக் கூட எங்க அப்பா ஏத்துகிட்டாரு. அதுவும் உனக்காக. உறவுகளுக்குள்ளே இன்னும் இப்படி முகத்தை திருப்பனுமா?”
[the_ad id=”6605″]
….
“உன் அம்மா அப்பா உன்னை நம்பாம இருக்க போய் தானே நீ எங்க வீட்டுக்கு மருமகளா வந்த? அதனால தானே உனக்கு தினேஷ் புருசனா கிடைச்சிருக்கான். அதெல்லாம் நல்ல விஷயம் தானே? இதெல்லாம் கடவுள் முடிவு பண்ணுறது மா. நீ அவங்க கிட்ட பேசினா நாங்க எல்லாரும் சந்தோஷ படுவோம்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான் கதிர்.
அவன் சொன்னதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்த கீதா அருகில் இருந்த தேன்மொழி “சித்தி சித்தப்பாவை மன்னிச்சிறேன் கீதா”,என்று சொல்லி விட்டு சென்றாள்.
“எனக்கும் மாமனார் மாமியார், மாமியார் வீடு, விருந்துன்னு இருக்கணும்னு ஆசையா இருக்கு கீதா”, என்று தினேஷும் சொல்லி விட்டு சென்று விட்டான்.
அடுத்த நொடி துரைராசு மற்றும் ரேகாவை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் கீதா. தங்கள் அருகில் நின்ற மகளை அவர்கள் ஏக்கமாக பார்க்க “அம்மா, அப்பா”, என்று அழைத்தாள்.
அடுத்த நொடி அங்கே ஒரு பாச போராட்டமே நடந்தது. கீதா அவர்களிடம் பேசியது அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தந்தது.
அந்த நாள் அனைவருக்குமே அழகானதாக சென்றது. அடுத்த மூன்று மாதங்களும் தேன்மொழி மசக்கையால் வெகுவாக கஷ்ட பட்டாள். எது சாப்பிட்டாலும் வாந்தி என்ற நிலையில் “நீ வாந்தி எடுத்தா பரவால்ல. ஆனா வாய்க்குள்ள போகணும்”,என்று சொல்லி அவளுக்கு பிடித்த உணவுகளை உண்ண வைத்தாள் வேணி.
அவளை பழங்களை உண்ண வைப்பது கதிரின் வேலையாக இருந்தது. அவளை சாப்பிட வைப்பதற்குள் வீட்டில் இருப்பவர்கள் தான் சோர்ந்து போவார்கள்.
சிறிது நாள் அவளை தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்று கவனிக்கலாம் என்று எண்ணி செல்வியும் சகுந்தலாவும் அவளை அழைக்க வந்திருக்க அதைக் கேட்டு கதிர் முகம் உர்ரென்று ஆனது. அதைப் பார்த்து “நான் வரலை மா, இங்கயே இருக்கேன்”, என்று தேன்மொழி சொன்னதும் கதிர் முகம் மலர்ந்தது.
தங்களை விட பல மடங்கு அதிகமாக அவளை அனைவரும் தாங்குவதைக் கண்ட செல்வியும் சகுந்தலாவும் அவள் அங்கே தான் உயிர்ப்புடன் இருப்பாள் என்று உணர்ந்து “அடிக்கடி வந்து பாத்துட்டு போறோம்”, என்று சொல்லி விட்டு சென்றனர்.
காலையில் லேட்டாக எழுந்து பகல் முழுவதும் அன்னம் மற்றும் வேணியிடம் நேரம் செலவு செய்பவள் மாலை ஆனதும் தினேஷ் மற்றும் செல்வாவிடம் வம்பு செய்வாள். கீதாவையும் தன்னுடன் சேர்த்துக் கொள்வாள்.
பின் இரவு உணவை முடித்து விட்டு கதிருடன் தான் அவள் பொழுது கழியும். அவன் தோளில் சாய்ந்து கதை பேசும் தருணத்தை இருவரும் ரசித்தார்கள்.
செல்வா மற்றும் கீதாவுக்கு விடுமுறை என்றால் அனைவரும் தோட்டத்துக்கு செல்வது, சீட்டு, செஸ் என்று விளையாடுவதில் நேரம் செல்லும்.
அடுத்தடுத்த மாதங்களில் வாந்தி குறைந்தாலும் எப்போதுமே சோர்வாகவே இருந்தாள் தேன்மொழி. மருத்துவரிடம் அழைத்து செல்லும் போதெல்லாம் அவரிடம் கேட்பான் கதிர்.
இரண்டு குழந்தைகள் என்பதால் இப்படி தான் இருப்பாள் என்று அவர் சொல்வதும் வழக்கமானது.
சத்தான உணவு, ஹாஸ்பிட்டல், ஸ்கேன் என்று அவர்களுக்கு நாட்கள் நகர்ந்தது.
கண்ணனின் மனைவி ராதாவிடம் சில மாற்றங்களைக் கண்டான் கண்ணன். எப்போதும் புன்னகையோடு இருக்கும் ராதா சில நேரம் ஏதாவது யோசனையிலே இருப்பதைப் பார்த்தான்.
அவளிடம் கேட்டாலும் தகுந்த பதிலும் தெரிய வில்லை. அதற்காக மற்றவர்களிடம் கோப பட்டோ, எரிச்சல் பட்டோ பேச மாட்டாள். இருந்தாலும் சிறிது அமைதி அவளிடம் வந்திருந்தது. இந்த மாற்றம் வேறு யாருக்கும் தெரிந்து விடக் கூடாதே என்று எண்ணினான் கண்ணன்.
ஒரு வேளை வைஷ்ணவி இந்த வீட்டுக்கு வந்ததால் இப்படி இருக்கிறாளோ என்று அவன் ஒரு முறை எண்ணிய போது அந்த எண்ணத்தை தகர்த்தவளும் ராதா தான்.ஏனென்றால் வைஷ்ணவியை தன்னுடைய சொந்த தங்கையாக தான் அவள் பார்த்தாள்.
வயலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தவனை “கண்ணா”, என்று அழைத்தாள் சகுந்தலா.
“என்ன சித்தி?”
“இல்லை உன் தம்பியும் வைஷ்ணவியும் அவ ஊருக்கு போயிருக்காங்க. வைஷ்ணவியோட ரெண்டு அக்காவும் கூப்பிட்டாங்கன்னு போயிருக்காங்க. ராதா வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்குறா. அவ வீட்டுக்கு போக ஆசைப் பட்டா உன் கோபத்தை விட்டுட்டு கூட்டிட்டு போப்பா”
“சரி சித்தி”, என்று சொன்னவனுக்கு ஒரு வேளை அவளுடைய வீட்டுக்கு போகாததால் இப்படி இருக்கிறாளோ என்று சந்தேகம் வந்தது.
தன்னுடைய அறைக்குள் சென்றவன் கண்ணில் பட்டாள் ராதா. ஜன்னல் ஓரத்தில் நின்றவள் வெளியே இருந்த மரத்தையே வெறித்துப் பார்த்த படி நின்றாள்.
அவள் அருகே சென்றவன் அவள் தோளில் கை வைத்தான். திடுக்கிட்டு திரும்பியவள் அவனைப் பார்த்ததும் சிரித்தாள்.
“காபி தரவாங்க?”
“அதெல்லாம் வேண்டாம், இங்க வா. உன் கூட கொஞ்சம் பேசணும்”, என்று சொல்லி அவள் தோளைப் பற்றி அழைத்துச் சென்று கட்டிலில் அமரவைத்து அவனும் அமர்ந்து கொண்டான்.
“உனக்கு என்ன ஆச்சு ராதா?”
“எனக்கா? எனக்கு என்ன?”
“உன்கிட்ட இருக்குற மாற்றம் எனக்கு தெரியுது ராதா. வீட்ல இருக்குறவங்களுக்கும் தெரியுறதுக்கு முன்னாடி நான் அதை சரி செஞ்சே ஆகணும்.என்னை உனக்கு பிடிக்கலையா?”
“எனக்கு உங்களை மட்டும் தான் ரொம்ப பிடிக்கும்”, என்று சொல்லிக் கொண்டே அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
அவளை அணைத்துக் கொண்டவன் அவள் நாடியைப் பிடித்து தூக்கி தன் முகத்தைப் பார்க்க வைத்தான்.
“அத்தை மாமாவை பாக்கணும் போல இருக்கா? கூட்டிட்டு போகவா? என்ன அப்படி பாக்குற? நானும் அங்க தங்குறேன் போதுமா? நீ என் வீட்டை உன் வீடா பாக்கும் போது உன் வீட்டை நான் என் வீடா தான பாக்கணும். போகலாமா?”
“அதெல்லாம் இல்லைங்க. அதான் அம்மா ரெண்டு நாளுக்கு ஒரு தடவை இங்க வந்து நாள் முழுக்க இருந்துட்டு தானே போறாங்க. தேவையானப்ப நாம போகலாம்”
“அப்புறம், என்ன தான் மா உன் பிரச்சனை?”
“அது… அது வந்து…. என்னை தப்பா நினைப்பீங்களா?”
“உன்னை எப்படி ராதா தப்பா நினைப்பேன்? மனசுல வச்சு கஷ்ட படாம என் கிட்ட சொல்லு டி”
“இல்லை… கல்யாணம் ஆகி மூணு மாசம் ஆகுது. உங்க தம்பிக்கும் கல்யாணம் ஆகிருச்சு… நமக்கு … குழந்தை… நமக்கு முன்னாடி அவங்களுக்கு குழந்தை வந்தா… நான் பொறாமைல நினைக்கலைங்க…”, என்று உளறிக் கொட்டினாள்.
“நீ சொல்ல வரது புரியுது ராதா, ஆனா நமக்கு கல்யாணம் ஆகி இன்னும் ஒரு வருஷம் கூட ஆகல. அதுக்குள்ளே கவலைப் படணுமா?”
“மூளைக்கு தெரியுதுங்க. ஆனா மனசுக்கு தெரியலை”
“வேணும்னா ஹாஸ்பிட்டல் போவோமா?”
“ஐயோ அதெல்லாம் வேண்டாம்”
“இன்னொரு ஐடியா சொல்றேன், அது படி செஞ்சா நமக்கு சீக்கிரம் பாப்பா வந்துரும்”
“என்ன ஐடியாங்க?”, என்று ஆவலுடன் கேட்டாள் ராதா.
“இனி செவ்வாய் வெள்ளின்னு மனுசனை காயப் போடாம என்னை ஒட்டிக்கிட்டே இருந்தேன்னு வை….”, என்று சொல்லிக் கொண்டே வந்தவனின் வாயைப் பொத்தியவள் அவன் நெஞ்சிலே சாய்ந்து கொண்டாள்.
காதல் தீயை நீர் அணைக்குமா?…