“இல்லை அத்தான், அப்ப நீங்க என்னை நினைச்சு ரொம்ப தவிச்சிருப்பிங்க தானே?”
“தவிப்பா? நொந்தே போவேன். நீ வேணும்னு ரொம்ப தோணும். அடிக்கடி பாக்கணும்னு வருவேன். வம்பிழுத்துட்டு போயிருவேன். ஏன் தேனு, ஒரு நாள் கூட நான் உனக்கு புடிச்ச மாதிரி இருந்தது இல்லையா? அதாவது நான் கல்யாணத்துக்கு முன்னாடி கேட்டேன்”
“புடிக்குமா புடிக்காதான்னு கேள்வியே என்கிட்ட கிடையாது. உங்களைக் கண்டாலே கோபம் தான் வரும். அதுவும் ரவுடி மாதிரி அந்த செயினைப் போட்டுக் கிட்டு, அதைப் பாக்கும் போது, கூட கொஞ்சம் தான் கோபம் வரும்”, என்று சொல்லும் போது கதிர் முகம் சிறிது வாடியது.
“ஆனா அத்தான், சில நேரம் எப்படி இருந்த நீங்க இப்படி அழகனா எப்ப மாறினீங்கன்னு அடிக்கடி யோசிச்சிருக்கேன்.என்னோட பிரண்ட்ஸ் எல்லாம் உங்களை அழகன்னு சொல்லும் போது செம கோபம் வரும். இவன் எதுக்கு இவளுங்க கண்ணு முன்னாடி வந்து நிக்குறான்னு உங்க மேல ரொம்ப கோபம் வரும்”, என்று தேன்மொழி சொன்னதும் கதிர் முகம் மலர்ந்தது.
“நிஜமாவா தேனு?”
“ஆமா அத்தான், அது காதல்னு சொல்ல முடியாது. ஒரு உரிமை உணர்வு. அந்த நாய் கூட கல்யாணம்னு பேச்சு வந்தப்ப நான் உங்களைத் தான் தேடுனேன். பெரிய இவனாட்டம் யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன்னு பேசுனான். இப்ப எங்க போய்ட்டான்னு ரொம்ப திட்டினேன். நம்ம ரெண்டு பேருக்குள்ளயும் நடக்குற சண்டையை நான் வீட்ல யார் கிட்டயும் சொன்னது இல்லை தெரியுமா? என் தாத்தாவுக்கு தெரியும். அவருக்கு நம்ம குடும்பம் சேரணும்னு ரொம்ப ஆசை”
“ரெண்டு தாத்தாக்கு மட்டுமில்ல, எல்லாருக்குமே நம்ம குடும்பம் ஒண்ணா இருக்கணும்னு ஆசை. நம்ம கல்யாணம் மூலமா பாதி நடந்துச்சுன்னா தினேஷ் கீதா கல்யாணம் மூலமா மீதி நடந்துருச்சு”
“ஆமா அத்தான்”
“சரி சரி கதை பேசினது போதும். கொஞ்ச நேரம் படு. நான் அம்மா கிட்ட சொல்லி ஜூஸ் எடுத்துட்டு வரேன்”
“நீங்க ரொம்ப லேட் அத்தான். ஏற்கனவே அத்தை நான் வந்த உடனே எனக்கு ஜூஸ் கொடுத்துட்டாங்க. குடிச்சிட்டே தான் பேசிட்டு இருந்தேன்”, என்று சொல்லி சிரித்தாள். அவள் புன்னகை அவனையும் தொற்றிக் கொண்டது.
அடுத்த நாள் காலேஜில் வைத்து “செல்வா டூருக்கு வாயேன்”,என்று அவனிடம் சொன்ன சௌமி “நீலவேணி, உன் பாசக் கார அண்ணனையும் வர சொல்லேன்”, என்று நீலவேணியிடம் சொன்னாள்.
“சௌமி, இவன் என் அண்ணன் கிடையாது. தம்பி”
“இப்ப இது ரொம்ப முக்கியம். அவனை வர சொல்லேன்
“செல்வா, நீயும் வா செல்வா. உன்னை விட்டுட்டு எங்களுக்கும் போக கஷ்டமா இருக்கு. சௌமியும் இவ்வளவு தூரம் சொல்லுறாள்ள?”,என்று கேட்டாள் நீலவேணி.
“சரி அக்கா, நான் வரேன். பணம் கட்டிட்டு வரேன். வீட்ல கெஞ்சி கூத்தாடி சம்மதம் வாங்கினேன்”, என்று நீலவேணியிடம் சொன்ன செல்வா “உனக்காக தான்”, என்று சௌமியிடம் கண்களால் சொன்னான்.
அவன் சொன்னதைக் கேட்டு அவள் முகம் மலர்ந்து போனது. அவள் மட்டுமல்ல அனைவருமே டூருக்கு போகும் அந்த நாளை ஆவலுடன் எதிர் பார்த்தார்கள். அந்த நாளும் வந்தது.
“எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டியா குஞ்சு? அங்க போய் அதைக் காணல, இதைக் காணலன்னு சொல்லாத“, என்றாள் அன்னம்.
“நான் வச்சிக்கிறேன். நீ கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு இரு. நான் எதை எல்லாம் எடுத்து வைக்கணும்னு யோசிக்கணும்”
“என்னையா வாயை மூட சொல்ற? எனக்கு இந்த ரூம்ல சரி பங்கு உரிமை இருக்கு”
“ஐயோ, இந்த சீனியர் சிட்டிசன் தொல்லை தாங்க முடியலையே. படுத்தாத கிழவி”
“சரி சரி பொழைச்சு போ. அங்க இருந்து எனக்கு ஏதாவது வாங்கிட்டு வா டா”
“கிளிசரன் வாங்கிட்டு வரவா?”
“என்னது அழுற மருந்தா? ஆளை விடு”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றாள் அன்னம்.
அனைவரும் அவன் கிளம்பும் போது “பாத்து போனும்…. எல்லார் கூடவும் சேந்தே இரு.. தனியா எங்கயும் போகாத… தினமும் போன் பண்ணு. பணத்தை அடுத்தவங்களுக்கு தேவை இல்லாம செலவு பண்ணாத.. யார் கிட்டயும் வம்பிழுக்காம பொறுமையா வா…நல்லா எஞ்சாய் பண்ணிட்டு வா”, என்று ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு அறிவுரை வழங்கிக் கொண்டிருக்க வேணியோ எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தாள்.
“அம்மா போயிட்டு வரேன் மா”, என்று செல்வா சொன்னது தான் தாமதம் ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்து விட்டாள்.
“அம்மா, என்ன ஆச்சு? உனக்கு பிடிக்கலைன்னா நான் போகலை போதுமா?”, என்றான் செல்வா.
“வேணி, என்ன இது சின்ன பிள்ளை மாதிரி பண்ணுற? அவன் முகம் கலங்கி போச்சு பாரு”, என்று மதி சொல்ல “மருமகளே, சந்தோஷமா வழி அனுப்புத்தா”, என்றாள் அன்னம்.
“என்னை மன்னிச்சிரு டா குஞ்சு. சந்தோஸமா போயிட்டு வா. அம்மாக்கு தினமும் போன் பண்ணனும் என்ன? பத்திரமா இருக்கணும் தங்கம். தெரியாதவங்க ஏதாவது கொடுத்தா வாங்கி சாப்பிடாத கண்ணு. கவனமா இருக்கணும் ராசா”, என்று அழுது கொண்டே சொன்னாள் வேணி.
ஒரு பாச போராட்டம் நடந்து அனைவரிடமும் சொல்லி விட்டு கதிருடன் வண்டியில் ஏறினான் செல்வா. “அம்மா, இவனை ஸ்டேஷன்ல விட்டுட்டு நான் ஒரு ஆளைப் பாத்துட்டு தான் வருவேன்”, என்று சொல்லி விட்டு செல்வாவை அழைத்துக் கொண்டு சென்றான் கதிர்.
[the_ad id=”6605″]
அவர்கள் சென்ற பிறகும் முகத்தை தூக்கிக் கொண்டு இருந்த வேணி அருகில் வந்த தேன்மொழி “போங்க அத்தை நீங்க எவ்வளவு தைரியசாலின்னு நினைச்சேன். இப்படி பண்ணிட்டீங்களே”,என்றாள்.
“பெத்த பிள்ளைகள்னு வரப்ப தைரியமாவது ஒன்னாவது தேனு? குஞ்சு குறை மாசத்துலே பிறந்துட்டான். பிறந்ததும் இறந்துருவான்னு சொன்னாங்க. ஆனா கடவுள் அவனை காப்பாத்திக் கொடுத்துட்டார். அதுல இருந்தே அவனை பொத்தி பொத்தி வச்சே எனக்கு பழகிருச்சு”
“அப்புறம் எப்படி அத்தை நவீன் வீட்ல எல்லாம் தங்க அனுமதிச்சீங்க?”
“நம்ம வீட்ல இருந்து நாலாவது தெருல அவன் வீடு இருக்கு. அங்க அனுப்புறதுக்கு என்ன பயம்? நினைச்ச உடனே போய் அவனை பாத்துக்குற தூரத்துக்கு தான் அனுப்புவேன். சரி உனக்கு ஜூஸ் குடிக்க நேரம் ஆய்ட்டு நான் எடுத்துட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு சென்றாள்.
ஸ்டேஷன் சென்ற கதிர் செல்வாவை அழைத்துக் கொண்டு அவனுடைய நண்பர்கள் இருக்கும் இடத்துக்கு சென்றான். அனைவரும் அவனை நலம் விசாரிக்க நீலவேணியும் சௌமியும் கூட கதிருடன் பேசினார்கள்.
“அண்ணா டிரைன் வர நேரம் இருக்கு. நீ வேணும்னா கிளம்பு”, என்றான் செல்வா.
“பரவால்ல டா, இதை விட முக்கியமா ஒரு வேலையும் இல்லை. உன்னை ஏத்தி விட்டுட்டே போறேன். ஆமா எங்க இறங்குவீங்க?”
“பேங்களூர் வரைக்கும் டிரைன். அதுக்கப்புறம் பஸ் அரெஞ்ச் பண்ணியாச்சு. அங்க இருந்து ஹோட்டல் போய் ரெஃப்ரெஸ் பண்ணிட்டு டிபன் சாப்பிட்டு சுத்தி பாக்க கிளம்ப வேண்டியது தான்.ரெண்டு நாள் பேங்களூர். அடுத்த ரெண்டு நாள் மைசூர்ணா”
“சரி டா, அங்க சாப்பாடு எல்லாம் எப்படி இருக்கோ? அப்ப அப்ப ஜூஸ் வாங்கி குடி”, என்று சொல்லி அவன் சட்டை பையில் ஐயாயிரத்தை வைத்தான் கதிர்.
“ஏற்கனவே அப்பா கொடுத்துருக்கார் அண்ணா”
“பரவால்ல வச்சிக்கோ. தினேஷும் கொடுக்குறேன்னு சொன்னான். நான் கொடுத்துக்குறேன்னு சொல்லி வேண்டாம்னு சொல்லிட்டேன். தேனு ஸ்நாக்ஸ் வாங்கி கொடுக்க சொன்னா டா. நான் மறந்துட்டேன் பாரு. நேரம் இருக்குல்ல? நான் வாங்கிட்டு வரேன்”,என்று சொல்லி வண்டியை எடுத்துக் கொண்டு கடைக்கு வந்தவன் ஒரு பெரிய பை நிறைய வாங்கி வந்து செல்வாவிடம் கொடுத்தான்.
இப்படி பட்ட பாசத்துடன் கூடிய குடும்பம் கிடைத்ததுக்கு கடவுளுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் பத்தாது என்று செல்வா எண்ணிக் கொண்டிருக்க டிரைன் கிளம்பும் அறிவிப்பு வர அவர்களுக்கு துணையாக வந்த இரண்டு பேராசிரியர்களிடமும் “பத்திரமா பாத்துக் கோங்க”, என்று சொன்னான் கதிர்.
டிரைன் அங்கிருந்து கிளம்பிய பின்னர் தான் கதிர் கிளம்பினான். ஒரு ஐந்து நிமிடம் கழித்து வேணியை போனில் அழைத்தான் செல்வா.
அவன் அழைப்பை பார்த்ததும் அதை எடுத்த வேணி “குஞ்சு”, என்று பாசத்துடன் அழைத்தாள்.
எப்போதுமே அந்த பெயரில் கோப படும் செல்வாவுக்கு இப்போது வேணியின் அக்கரையே தெரிந்தது. “டிரைன் கிளம்பிருச்சு மா. அண்ணன் பணம் தந்தான். நிறைய பண்டமும் வாங்கி தந்தான்”
“சரி டா, சீட் எல்லாம் வசதியா இருக்கா?”
“இருக்கு மா. தொடர்ச்சியா எங்க கிளாஸ் பசங்க தான் இருக்காங்க. பத்து மணி வரைக்கு விருப்ப பட்ட இடத்துல உக்காந்துக்கோங்க. அப்புறம் எல்லாரும் அவரவர் சீட்டுக்கு போயிரணும்னு சார் சொன்னாங்க. இப்ப பக்கத்துல நவீன், நீலவேணி, சௌமி, அர்ச்சனா, வெற்றி இருக்காங்க மா”
“சரிப்பா, சாப்பாடு பத்தாதே”
“அம்மா எல்லாருமே சாப்பாடு கொண்டு வந்துருக்கோம். சேந்து தான் சாப்பிட போறோம். அதனால நீ கொடுத்தது போதும்”
“சரி கண்ணு. சாப்பிட்ட அப்புறம், தூங்குறதுக்கு முன்னாடி அம்மாவை கூப்புடுவியா?”
“கூப்பிடுறேன் மா”, என்று சொல்லி போனை வைத்த செல்வா கண்களை மூடி ஒரு நிமிடம் அமைதியாக அமர்ந்து விட்டான்.
“என்ன ஆச்சு செல்வா? அம்மா என்ன சொன்னாங்க?”, என்று கேட்டாள் நீலவேணி.
“அவங்களுக்கு என்னை டூருக்கு விட மனசில்ல. அதான் கொஞ்சம் பீலிங்”
“கவலைபடாம இருக்க சொல்லு. உன்னை நாங்க கண்ணும் கருத்துமா பாத்துக்குறோம்”, என்று சொல்லி சிரித்தாள் சௌமி.
அதன் பின் நேரம் றெக்கை கட்டிக் கொண்டு பறந்தது. உணவு பார்சலை அனைவரும் பிரித்து மாற்றி மாற்றி சாப்பிட ஆரம்பித்தார்கள். பக்கத்து கம்பார்ட்மெண்டில் இருந்தும் உணவு மாற்றிக் கொள்ளப் பட்டது.
பின் சிறிது நேரம் பாட்டு கதை கிண்டல் என்று போக பின் அவரவர் இருக்கைக்கு சென்று படுத்து விட்டார்கள்.
கேர்ள்ஸ் தனி, பாய்ஸ் தனி என்று இருந்தாலும் “ஏதாவது பிரச்சனைன்னா அடுத்த நிமிஷம் என்னை கூப்பிடுங்க”, என்று நீலவேணி மற்றும் சௌமியிடம் சொல்லி அனுப்பினான் செல்வா.
அவன் அக்கறையில் இரு பெண்களும் நெகிழ்ந்தனர். தன்னுடைய பேகை தலையில் வைத்து படுத்தவன் வேணியை அழைத்து வீட்டில் உள்ள அனைவரிடமும் பேசி விட்டே வைத்தான்.
அடுத்த நாள் காலையில் கண் விழித்தவர்கள் டிரைனில் இருந்து இறங்கியதும் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த பஸ் தயாராக இருக்க, அதில் ஏறி ஒரு ஹோட்டலுக்கு சென்றார்கள். ஒரு அறைக்கு மூன்று பேர் என்று சொல்ல பட அடுத்த ஒண்ணறை மணி நேரத்தில் அனைவரும் குளித்து கிளம்பியதும் அருகே இருந்த ஒரு ஹோட்டலுக்கு சென்றார்கள்.
கண் முன் பரிமாறப் பட்ட இட்லியை வெறித்து பார்த்தான் செல்வா. அவன் கண்களுக்கு அது எதுவோ கல் போல இருந்தது. வேணி செய்து கொடுக்கும் மெது மெது இட்லி நினைவு வந்ததும் “ஐயோ அம்மாவுக்கு போன் பண்ணலையே”, என்று எண்ணிக் கொண்டு வேணியை அழைத்தான்.
“இறங்கின உடனே எதுக்கு டா கூப்பிடலை?”, என்று கேட்டாள் வேணி.
“அம்மா பஸ் பிடிச்சு ரூமுக்கு வந்து கிளம்புறதுக்கு தான் மா நேரம் இருந்துச்சு.இருந்தாலும் நான் பண்ணிருக்கணும், சாரி. நீ பண்ணிருக்கலாம்ல மா?”
“உனக்கு தொல்லையா இருக்க கூடாதுன்னு தான் டா பண்ணலை. சரி சாப்பிட்டியா?”
“கண்ணு முன்னாடி இட்லின்னு பேர்ல ஒண்ணு உக்காந்துருக்கு மா. ரவை இட்லி போல? கூடவே ரவை கிச்சடி.இது எப்படி மா உள்ள போகும்?”
“இதுக்கு தான் உன்னை போக வேண்டாம்னு சொன்னேன்”
“ஐயோ ஆரம்பிச்சிராத மா. நான் தோசை வாங்கி சாப்பிடுறேன்”
[the_ad id=”6605″]
“ஒரு டம்ளர் பாலும் வாங்கி குடி டா”, என்று சொல்லி போனை வைத்தாள் வேணி.
சுமாராக இருந்த அந்த சாப்பாடை சாப்பிட்டு முடித்து சுற்றிப் பார்க்க சென்றார்கள். பஸ் ஓட்டியவரே அவர்களுக்கு தேவையான தகவலை தர பொழுது நன்றாக போனது.
மியூசியம் சுற்றி பார்த்து விட்டு மதிய உணவு உண்ண ஹோட்டலுக்கு சென்றார்கள். மதிய உணவு அதற்கு மேல் இருக்க சாப்பாடையே வெறுத்தான் செல்வா. அவனுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் அப்படி தான் இருந்தது.
மாலை காபியை குடித்து விட்டு பிருந்தாவன் கார்டன் பார்க்க சென்றார்கள். தண்ணீர் நடனம் ஆடுவது போல ஆங்காங்கே இருந்த கண்ணை கவரும் பவுண்டைன்கள் அனைவரின் மனதையும் கவர்ந்தது.
மாற்றி மாற்றி போட்டோ எடுத்துக் கொண்டார்கள். போட்டோ எடுக்க செல்வா அருகில் வந்த சௌமி “உன்கிட்ட ஒண்ணு கேக்கணும்”, என்றாள்.
“என்ன சௌமி?”
“ஏன், என்னை கண்டுக்கவே மாட்டிக்க?”
“சௌமி, நாம டூர் வந்திருக்கோம். இந்த இடத்தை ரசுச்சு அனுபவி. நம்ம காதலை பரிமாற இந்த டிரிப் சரி வராது. ஹனி மூன் வரும் போது பாரு. அப்ப உன்னை தவிர வேற எதையும் பாக்க மாட்டேன்”, என்று சொல்லி கண்ணடித்தான்.
அவன் சொன்னது சரி என்று பட்டதால் அவனைப் பற்றி யோசித்து கவலைப் படாமல் சாதாரணமாக மாறி விட்டாள்.
அனைவருமே சந்தோஷமாக இருந்தனர். அன்று இரவு உணவை ஒரு வாய் வைத்ததும் நொந்தே போனான். நான் எனப்படும் ரொட்டி பரிமாறப் பட தொட்டுக் கொள்ள இருக்கும் குழம்பும் கொடுமையாக இருந்தது.
“டேய் நவீன், வீட்டுக்கு போறதுக்குள்ள அஞ்சாறு கிலோ குறைஞ்சு தான் போவேன் போல டா. என்னைப் பாத்துட்டு எங்க அம்மா இனி என்னை எங்கயும் விடாது”, என்று பாவம் போல சொன்னான் செல்வா.
“கேவலமா இருந்தாலும் நான் சாப்பிடுறேன்ல? நீயும் சாப்பிடு டா”
“அதான் என் டவுட். எப்படி டா இதை சாப்பிடுற?”
“இதுக்கும் சேத்து தான டா பணம் கொடுத்துருக்கோம். சாப்பிடலைன்னா கொடுத்த பணம் வம்பா போகுமே? அதான்”, என்று நவீன் சொன்னதும் “இது ஒரு காரணமா?”, என்று எண்ணி கொலை வெறியாக அவனை முறைத்தான் செல்வா.
அடுத்த நாளும் அங்கே சுற்றி பார்த்து விட்டு மைசூர் கிளம்பினார்கள்.
அங்கே கூர்க் எனப்படும் இடத்தில் தான் ரூம் எடுத்திருந்தனர். அங்கேயும் முக்கியமான இடங்களை சுற்றிப் பார்த்தார்கள். கடைசி நாள் ஒரு கோவிலுக்கு சென்று கும்பிட்ட பின்னர் ஷாப்பிங் செய்ய என்று நேரம் ஒதுக்க பட்டது.
அந்த நேரத்தில் அனைவருக்கும் விருப்பமானதாக வாங்க முடிவெடுத்த செல்வா வீட்டில் உள்ளவர்களுக்கு சால்வை சுவட்டர் என்று வாங்கினான். அப்பா, இரண்டு அண்ணன்கள் மற்றும் தனக்கு என்று ஒரே மாதிரியான டிசைனில் ஆனால் வெவ்வேறு கலரில் சட்டை வாங்கினான்.
நீலவேணிக்கு என்று ஒரு சுடிதார் வாங்கி கொடுத்தவன் சௌமிக்கு ஒரு சுடிதாரும் மேலும் காதலை உணர்த்தும் வகையில் சில கிஃப்ட்டும் வாங்கிக் கொடுத்தான். அவள் பதிலுக்கு அவனுக்கு ஒரு கைக் கடிகாரத்தை வாங்கிக் கொடுத்தாள்.
பின் அதே பஸ்ஸிலே பேங்களூர் வந்தவர்கள் மீண்டும் டிரைனைப் பிடித்து திருநெல்வேலி வந்தார்கள். சௌமியை அழைத்து செல்ல அவளுடைய தந்தை வந்திருந்தார். செல்வாவை அழைக்க கதிர் வந்திருந்தான்.
“என்ன டா? இப்படி இளைச்சு போய் வந்திருக்க? இனி உனக்கு டூரும் கிடையாது ஒண்ணும் கிடையாது”, என்றான் கதிர்.
“அண்ணா என்ன இப்படி சொல்லிட்ட?”
“நான் சொல்றது இருக்கட்டும். அம்மாவே அதை தான் சொல்லும்”
“எனக்கும் அதை நினைச்சு தான் பயமா இருக்கு. நான் என்ன செய்ய? சுத்தமா அங்க சாப்பிட முடியாலைண்ணா”
“சரி விடு. பாத்துக்கலாம்”, என்று சொன்ன கதிர் அவனை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றான்.
வீட்டுக்கு சென்ற பின்னர் அவன் பயந்தது போல தான் நடந்தது. வேணி புலம்பி தள்ளி விட்டாள். “அம்மா பசிக்குது மா. நல்ல சாப்பாடு சாப்பிட்டு நாலு நாள் ஆகுது”, என்று செல்வா சொன்னதும் “நீ குளிச்சிட்டு வா டா. சாப்பாடு ரெடியா இருக்கும்”, என்று சொல்லி தன் வேலையைப் பார்க்க சென்றாள் வேணி.
செல்வா குளித்து முடித்து வரும் போது சுட சுட இட்லியும் மட்டன் குளம்பும் பரிமாறப் பட ரசித்து ருசித்து சாப்பிட்டான் செல்வா. அவன் வயிறு நிறையும் வரை அவனை நகர விட வில்லை வேணி. இந்த பாசப் போராட்டத்தை அனைவரும் வேடிக்கை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
[the_ad id=”6605″]
அப்போது அங்கே சகுந்தலாவும் ராஜதுரையும் வந்தார்கள். அவர்களும் சந்தோசத்தில் ஐக்கியமானார்கள்.
“என்ன சகு, இவ்வளவு காலையிலே இங்க வந்திருக்க? முக்கியமான விஷயமா?”, என்று கேட்டாள் வேணி.
“ஆமாங்க அண்ணி, செந்திலுக்கு ஒரு பொண்ணு ஜாதகம் வந்திருக்குன்னு சொன்னேன்ல? அவங்க பொண்ணு பாக்க வர சொல்லிருக்காங்க. முதல்ல ஜாதகம் பாத்துட்டு பொண்ணு பாக்க போகலாம்னு நினைக்கிறோம்”
“நல்ல விஷயம் தான் சகு. ஜாதகம் பாக்காம பொண்ணைப் போய் பாத்துட்டு வந்து அப்புறம் ஜாதகம் சரி இல்லைன்னா பிள்ளைக மனசைக் கலைக்க வேண்டாம் பாரு”
“அது தான் எனக்கும் தோணுச்சு.அதான் நம்ம ஜோசியரைப் போய் பாக்கலாம்னு யோசிச்சோம். அக்கா வீட்ல செந்தில் ஜாதகத்தை எங்கயோ வச்சிட்டேன்னு தேடிட்டு இருக்காங்க. உங்களையும் அண்ணனையும் கூட்டிட்டு போகலாம்னு தான் நாங்க வந்தோம்”
“அதுக்கென்ன வந்துட்டா போச்சு. என்னங்க கிளம்பலாமா?”, என்று வேணி கேட்டதும் “கிளம்பலாம் வேணி. தங்கச்சிக்கும் மாப்பிள்ளைக்கும் சாப்பாடு கொடு. நான் கிளம்புறேன்”, என்று சொல்லி விட்டு சென்றார் மதி.
“சாப்பிட வா சகு.நீங்களும் வாங்கண்ணா”, என்று அழைத்தாள் வேணி.
“நான் ரெண்டு பேருக்கும் பரிமாறுறேன். நீ போய் கிளம்புத்தா”, என்று சொல்லி வேணியை அனுப்பி வைத்தாள் அன்னம்.
பின் இருவரும் கிளம்பி வந்த பிறகு “தேனு, காலைல கீதாவுக்கு மட்டும் தான் சாதம் வச்சேன். மதியம் எல்லாத்துக்கும் சாதம் மட்டும் வச்சிரு.குளம்பு மதியத்துக்கும் இருக்கு”, என்று சொன்னாள் வேணி.
“சரிங்க அத்தை”, என்று தேன்மொழி சொன்னதும் அனைவரும் கிளம்பினார்கள்.
ஜாதகம் பார்க்கும் இடத்தில் செந்திலுக்கும் வைஷ்ணவிக்கும் பொருத்தம் இருக்க அடுத்த வாரத்தில் பெண் பார்க்க வருகிறோம் என்று சொல்லி அனுப்பினார்கள்.
தர்மதுரையும் செல்வியும் கதிர் வீட்டினரை பெண் பார்க்க செல்ல அழைக்க வந்திருந்தனர்.
“நானும் வேணியும் வரோம்”, என்றார் மதி.
“தேனு, நீயும் கீதாவும் வரணும்”, என்றாள் செல்வி.
“தேனு கொஞ்சம் சோர்வா இருக்குறா அண்ணி, ரெண்டு பிள்ளையை தாங்க அவ கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும். பொண்ணு பாக்க நாம போவோமே”, என்று வேணி சொன்னதும் அனைவரும் சரி என்றார்கள்.
பெண் பார்க்க செந்திலையும் அழைத்துச் சென்றார்கள். அவனுக்கு பெண்ணைப் பார்த்த உடனே பிடித்து போக அவளிடமும் அபிப்ராயாம் கேட்டார்கள்.
வைஷ்ணவியும் சரி என்று சொல்லவே அடுத்த முகூர்த்தத்தில் திருமணம் என்றும் அதற்கு முந்தைய நாளே நிச்சயம் வைத்துக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்யப் பட்டது.
கிளம்பும் போது “இனி நீயும் எங்க வீட்டு பொண்ணு தான் கண்ணு”, என்று சொல்லி அவள் தலையில் பூவை சூடி விட்டார்கள் செல்வியும் சகுந்தலாவும்.