“அதை உன் புருஷன் கிட்ட கேளு. நான் போய் இட்லி ஊத்துறேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.
அறைக்கு சென்று அவன் அருகே அமர்ந்தவள் அவன் தலையை வருடினாள். அந்த தொடுகையில் விழித்தவன் “தேனு”,என்று அழைத்தான்.
“தேங்க்ஸ் அத்தான், என்னை இவ்வளவு சீக்கிரம் பாக்க வந்ததுக்கு”
“நேத்தே வந்திருப்பேன் டி, ஆனா வீட்ல விடலை”
“நீங்க இல்லாம கஷ்டமா இருந்துச்சு. சரி இந்தாங்க உங்களுக்கு காபி”, என்று அவன் கையில் கொடுத்தவள் “எனக்கு கொஞ்சமா தாங்களேன்”, என்று சிறு பிள்ளை போல் கெஞ்சினாள்.
அவளுக்கு ஒரு வாய் கொடுத்தவன் அவள் மீண்டும் கேட்கும் முன் அதை குடித்து முடித்தான். பின் அவனை உறங்க சொல்லி விட்டு வெளியே வந்தவள் அனைவரிடமும் அரட்டை அடித்தாள்.
“நேத்து அளந்து அளந்து பேசுனது என்ன? இன்னைக்கு வாயைப் பாரு. அதிசயமா இருக்கே”, என்று கேட்டுக் கொண்டே அங்கு வந்தாள் சண்முகம்மாள்.
“பாட்டி, தேனு வாய்ப் பூட்டு கழண்டு போனதுக்கு காரணம் கதிர் அண்ணா தான்”, என்றாள் ராதா.
“கிண்டல் பண்ணாதீங்க அண்ணி”,என்று சிணுங்கினாள் தேன்மொழி.
“என்ன ராதா சொல்ற?”, என்று கேட்டாள் சண்முகம்மாள்.
“உங்களுக்கு விஷயம் தெரியாதுள்ள? கதிர் அண்ணன் காலையிலே வந்தாச்சு. பொண்டாட்டியை தேடி”
“இவ சின்ன வயசா இருக்கும் போதே ஓடி ஓடி வந்துருவான். இப்ப கேக்கவா வேணும்?”, என்று சிரித்தாள் பாட்டி.
அதன் பின் நேரம் றெக்கை கட்டிக் கொண்டு சென்றது. காலை உணவை அவளுடன் உண்டு முடித்தவன் வயலுக்கு கிளம்பினான்.
“இன்னும் நாளைக்கு தான் வருவாங்களோ?”, என்று கவலையுடன் அவனைப் பார்த்தாள் தேன்மொழி.
“ஒழுங்கா ரெஸ்ட் எடு தேனு. நான் மதியம் வரேன்”, என்று அவன் சொல்லி சென்றதும் “அப்பாடி மதியம் சாப்பிட வருவான்”, என்று எண்ணிக் கொண்டாள்.
சொன்னது போல் மதியம் வந்தவன் அவளுடன் சிறிது நேரம் செலவிட்டு விட்டு கிளம்பினான்.
[the_ad id=”6605″]
அதன் பின் பியூஸ் போன பல்ப் போல முகத்தை வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தாள் தேன்மொழி.
“என்ன தேனு? மறுபடியும் உங்க முகம் இப்படி ஆகிருச்சு? கதிர்
அண்ணன் உங்களை ஒட்டிக்கிட்டே இருந்தா தான் நீங்க சிரிப்பீங்களா?”, என்று கேட்டாள் வைஷ்ணவி.
“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை வைஷு அண்ணி. அவங்க இங்கயே இருக்க முடியுமா? கொஞ்ச நேரத்துல சரி ஆகிரும்”
“இதெல்லாம் அநியாயம் தேனு. அண்ணா தான் சாயங்கலாம் வந்துருவாங்களே. அது வரைக்கும் பொறுக்க கூடாதா?”
“இல்லை அண்ணி எங்க வீட்டுக்கு போயிருவாங்க”
“போச்சு போங்க. உங்களுக்கு விஷயமே தெரியாதா? அத்தை அங்க வடைக்கு ஆட்டிட்டு இருக்காங்க. எதுக்குனு நினைக்கிறீங்க? கதிர் அண்ணனுக்கு தான்”
“சாயங்காலம் இங்க வருவாங்களா?”
“சாயங்காலம் மட்டும் இல்லை. இனி கதிர் அண்ணா உங்க கூட தான் இருப்பாங்க. போய் உங்க ரூம்ல போய் பாருங்க. பெரிய பையோட தான் இங்க வந்தார்”
“என்ன சொல்றீங்க?”, என்று அதிர்ச்சியானவள் வேகமாக தங்கள் அறைக்கு சென்றாள்.
கட்டிலுக்கு அடியில் ஒரு பேக் இருப்பதைப் பார்த்தவள் “ஒரு வேளை என்னோட துனியா இருக்குமோ?”, என்று எண்ணிக் கொண்டு அதைப் பார்த்தாள்.
பார்த்தவள் ஆனந்தத்துடன் திகைத்தாள், அனைத்தும் கதிரின் உடைகள். ஒரு நிமிடம் வாழ்க்கையே வண்ணமயமானதாக ஆனது. இப்படி பட்ட வீட்டுக்காரர் யாருக்கு கிடைப்பாங்க என்று பூரித்துப் போனாள்.
அன்று அவன் வீட்டுக்கு வந்ததும் மொத்த சந்தோசத்தையும் அவனிடம் கொட்டியவள் பதிலுக்கு அவன் காதலையும் வாங்கிக் கொண்டாள்.
நாட்கள் இப்படியே செல்ல ஒரு நாள் கதிர் வயலுக்கு சென்றதும் அனைவரிடமும் பேசிக் கொண்டிருந்தவளுக்கு வயிறு வலித்தது. அடுத்த நொடி கதிருக்கு தகவல் தெரிவிக்க பட அவன் உடனே வந்து விட்டான்.
அன்றே அவளை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து சென்றார்கள். “இது பொய் வலி தான். ஆனா அட்மிட் பன்னிரலாம். எப்ப வேணும்னாலும் டெலிவரி இருக்கும்”, என்று டாக்டர் சொன்னதும் அவளை அட்மிட் செய்தார்கள்.
பின் கதிரும் சகுந்தலாவும் மட்டும் அங்கிருக்க அனைவரும் வீட்டுக்கு சென்றார்கள். அடுத்த ஐந்து மணி நேரம் கழித்து அவளுக்கு வயிறு வலிக்க சுகப் பிரசவமாக ஒரு பொண்ணு ஒரு பையனைப் பெற்றெடுத்தாள் தேன்மொழி.
இரண்டு குழந்தைகளைக் கண்டு சகுந்தலாவும் கதிரும் பூரித்துப் போனார்கள். சுகப் பிரசவம் என்பது கூடுதல் போனஸ். பின் ஒருவர் பின் ஒருவராக குழந்தைகளையும் தேன்மொழியையும் பார்க்க வந்தார்கள்.
அடுத்த ஐந்து நாட்களில் வீட்டுக்கு அழைத்து வரப் பட்டாள் தேன்மொழி. இந்த நாட்கள் மட்டுமல்ல இனி வந்த நாட்களிலும் கதிர் அவளுடனே இருந்தான்.
அவளுடைய உடம்பைப் பற்றிய கவலையை சகுந்தலாவும் செல்வியும் பார்த்துக் கொண்டார்கள். அவளுடைய மனதை கதிர் பார்த்துக் கொண்டான். மொத்தத்தில் சந்தோஷமாக இருந்தாள் தேன்மொழி.
ஆள் ஆளுக்கு குழந்தையைக் தூக்கி சந்தோஷப் பட்டார்கள். கதிர் ஒரு குழந்தையையும் தேன்மொழி ஒரு குழந்தையையும் தூக்கி வைத்துக் கொண்டு கதை பேசுவது அழகான கவிதை.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் செல்வா, தினேஷ், கீதா மூவரும் தேன்மொழி வீட்டில் தான் இருப்பார்கள்.
குழந்தைகளுக்கு வெண்மதி, மதியமுதன் என்று பெயர் சூட்டப் பட தாய்மாமன் சீரை கண்ணனும் செந்திலும் செய்தார்கள்.
தன்னுடைய பெயர் வருமாறு பிள்ளைகளுக்கு பெயர் வைத்ததை எண்ணி பூரித்துப் போனார் மதியழகன்.
ஐந்து மாதம் கழித்து வைஷ்ணவியும் பிள்ளை உண்டானாள். அந்த மாதத்திலே ஒரு நல்ல நாளில் தேன்மொழி மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு தங்கள் வீட்டுக்கு சென்றான் கதிர்.
இதற்கு இடையில் கீதாவின் படிப்பு முடிந்திருந்தது. எப்போது அவளுடன் சேர்ந்து வாழலாம் என்று தவித்து கிடந்தான் தினேஷ். ஆனால் இருவருக்குமே தயக்கம் தடுத்தது.
வீட்டுக்கு வந்த இரண்டு நாட்களிலே அவர்கள் நிலையை கண்டறிந்த தேன்மொழி அவர்களை தேனிலவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்து அதில் வெற்றியும் கண்டாள்.
[the_ad id=”6605″]
நாட்கள் அழகாக நகர்ந்தது. முதலில் கண்ணன் ராதாவுக்கு பிறந்த மகனுக்கு ரிஷி என்று பெயர் வைத்தனர். பின் செந்தில் வைஷ்ணவிக்கு பிறந்த மகளுக்கு கீர்த்தி என்று பெயர் சூட்டினர்.
அடுத்த ஐந்து மாதம் கழித்து கீதாவுக்கு குழந்தை பிறந்தது. அவளுக்கு ஸ்ரீமதி என்று பெயர் வைத்தார்கள். வீட்டில் இருக்கும் மூன்று குழந்தைகளை பார்ப்பதிலே நேரம் சென்றது.
இப்போது செல்வா தன்னுடைய படிப்பை முடித்திருந்தான். அவனுக்கு சென்னையில் வேலை கிடைத்திருந்தது. அப்போது பிரச்சனையை ஆரம்பித்தாள் வேணி.
“அவனை அவ்வளவு தூரம் அனுப்ப மாட்டேன்”, என்று அவள் சொல்ல “நல்ல வேலை மா. நல்ல சம்பளம். நான் போறேன்”, என்று அவன் சொல்ல என்று போராட்டமே நிகழ்ந்தது.
செல்வா என்ன தான் போறேன் போறேன் என்று சொன்னாலும் அவன் இரு மனதில் இருந்ததை முதலில் கண்டறிந்தது தேன்மொழியே.
ஆம் செல்வா இரு மனதில் தான் இருந்தான். சென்னையில் சௌமிக்கும் இவனுக்கும் ஒரே கம்பெனியில் தான் வேலை கிடைத்திருந்தது.
வேலைக்கு சென்று ஒரு ஆறு மாதம் கழித்து திருமணத்துக்கு இரண்டு வீட்டிலும் பேசலாம் என்று இருவரும் முடிவு பண்ணி இருந்தார்கள். அதனால் ஒரு மனது வேலைக்கு செல்லலாம் என்று ஆசைப் பட மற்றொரு மனமோ பாட்டி, அம்மா அப்பா, அண்ணன் அண்ணி, குழந்தைகள் என்று அனைவரையும் விட்டு விட்டு இருப்பதை எண்ணி துடித்துக் கொண்டிருந்தது.
அதற்காக ஒரு ஆண் வேலை இல்லாமலும் இருக்க முடியாதே. அவன் படித்த படிப்புக்கு இங்கே என்ன வேலை இருக்கிறது என்றும் கவலையாக இருந்தது.
வேலைக்கும் வீட்டுக்கும் நடுவில் திண்டாடிக் கொண்டிருந்தான். அவன் மனநிலையை புரிந்து கொண்ட தேன்மொழி நேராக போய் நின்றது வேணியிடம் தான்.
“அத்தை நான் சொல்றதை கேப்பீங்களா?”
“சொல்லு தேனு”
“செல்வா வேலைக்கு போக அனுமதி கொடுங்க”
“தேனு, என்னைப் பத்தி தெரிஞ்சு தான் பேசுறியா? என்னால அது முடியாது”
“அத்தை, அவன் கிட்ட உனக்கு அம்மா வேணுமா, இல்லை உன் வேலை வேணும்னான்னு பேசிருக்கீங்க? எப்பவும் சந்தோஷமா இருக்குறவன் இப்படி கவலையா இருக்குறதை பாக்க முடியலை”
“எல்லாருக்கும் அவன் கவலை தானே தெரியுது? என்னோட பயம் தெரியலையா? என் ரெண்டு பிள்ளைகளும் என் கூட இருக்கும் போது அவனும் என் கூட இருக்கணும்னு நான் ஆசை படக் கூடாதா? என்னை வேண்டாம்னு சொல்லிட்டு அவனை போக சொல்லு”
“இப்ப என்ன அத்தை, அவன் நம்ம கூடவே இருக்கணும் அப்படி தானே? அதுக்கு நான் பொறுப்பு”
“இப்ப என்ன சொல்ல வர தேனு? அவனை வேலைக்கு விட்டுட்டு அங்க போன அப்புறம் அவன் நம்மளை எல்லாம் பிரிஞ்சு இருக்க முடியாம வந்துடுவான்னு கதை சொல்ல போறியா?”
“இல்லை அத்தை, அவன் போகவே மாட்டான்னு சொல்ல வரேன்”
“புரியுர மாதிரி சொல்லு தேனு”
“அத்தை, அவன் போறதுல இரு மனசா தான் இருக்கான். நீங்க போக கூடாதுன்னு சொல்றதுக்கு அவன் வீம்புல தான் போவேன்னு அடம் பிடிக்கிறான். நீங்க போக சொல்லிட்டாலும் அவனால கண்டிப்பா போக முடியாது”
“நிஜமாவா?”
“ஆமா அத்தை, அவன் கண்டிப்பா இங்க இருந்து போக மாட்டான். அவனால் போகவும் முடியாது. அவன் ஊருக்கு கிளம்புற கடைசி நிமிஷம் வரைக்கும் நான் சொல்ற படி நீங்க நடந்தீங்கன்னா அவன் நம்மளை விட்டு போகாம இருக்குறதுக்கு நான் உத்தரவாதம் கொடுக்குறேன்”
“அவன் போகாம இருந்தாலே போதும். என்ன செய்யணும்னு சொல்லு தேனு”, என்று வேணி கேட்டதும் தேன்மொழி தன்னுடைய திட்டங்களை சொல்ல ஆரம்பித்தாள்.
முதல் வேலையாக செல்வாவை அழைத்த வேணி “நீ வேலைக்கு போ செல்வா. இனி அம்மா உன்னை எதுவும் சொல்ல மாட்டேன். சந்தோஸமா போயிட்டு வா”, என்றாள்.
குழப்பமாக அவளைப் பார்த்த செல்வா “நிஜமாவா மா? நான் போறது உனக்கு வருத்தம் இல்லையா?”, என்று கேட்டான்.
“நீ வேலைக்கு தானே போற? அது மட்டுமில்லாம உன் ரெண்டு அண்ணனுங்க குடும்பம் என் கூட தான இருக்கு? எனக்கு எதுக்கு வருத்தம்? நீ கிளம்புர ஏற்பாடு செய்”, என்று வேணி சொன்னதும் செல்வா முகம் செத்து போனது.
“அப்ப அம்மாவுக்கு அண்ணனுங்க இருந்தா நான் முக்கியம் இல்லையா?”, என்று எண்ணியவன் மூளைக் குடைச்சலுக்கு ஆளானான்.
அடுத்த வேலையாக அவன் குழந்தைகளை தூக்கிக் கொஞ்சிக் கொண்டிருந்தால் அந்த குழந்தைகளை அவனிடம் இருந்து தூக்கிக் கொண்டு சென்றாள் தேன்மொழி.
“எல்லாரும் வேலையா தானே இருக்கீங்க? நான் சின்னவனை வச்சிருக்கேன்ல? எதுக்கு தூக்கிட்டு போற தேனு?”, என்று ஒருமுறை கோபமாக கேட்டான் செல்வா.
“ஆமா நீ அடுத்த வாரம் வேலைக்கு கிளம்பி போயிருவ. அப்ப எல்லாரும் வேலையா இருந்தாலும் எங்க பிள்ளைகளை நாங்க தானே பாத்துக்கணும். நீ ஊருக்கு போறதுக்கு முன்னாடி ரெஸ்ட் எடு. எதுக்கு பிள்ளைகளை தூக்கி கஷ்ட படணும்?”, என்று சொல்லி விட்டு சென்றாள்.
மற்ற யாருக்கும் தேன்மொழி மற்றும் வேணி திட்டம் தெரியாததால் சகஜமாக இருந்தார்கள். கதிரும் தினேஷும் அவனை வாழ்த்த தான் செய்தார்கள். அவனுக்கு சப்போர்ட் செய்ததில் கீதாவும் மதியழகனும் அடக்கம்.
அன்னம் அவன் என்று போக போறேன் என்று சொன்னானோ அதில் இருந்து அவனுடன் முகம் கொடுத்து பேசுவதில்லை. “ஏன் கிழவி நீயும் அம்மா மாதிரியே பண்ணுற? எதுக்கு என்கிட்ட பேசாம முகத்தை திருப்பிக்கிற?”, என்று ஒரு முறை அவன் கேட்டதற்கு “நான் என்ன பண்ணுறேன்? நான் காலம் போற கடைசில ஒரு ஓரமா தான கிடக்குறேன்? நீ உன் வேலையைப் பாத்துட்டு போ. உனக்கு உன் சந்தோஷம் தானே முக்கியம்? நாளைக்கு நான் செத்து போனா நீ வந்துருவ தானே?”, என்று ஒரு வார்த்தை சொல்லி விட்டு சென்று விட்டாள் அன்னம்.
அனைவரும் அவனைப் பாடாய் படுத்தி, அவனும் அனைவரையும் பாடாய்ப் படுத்தி ஒரு வழியாக அவன் கிளம்பும் நாளும் வந்தது. பெட்டியை அடுக்கி கொண்டிருந்தவன் அருகில் வந்து இட்லி பொடி, ஊறுகாய், காயப் போட்ட வத்தல் வடகம் என்று கொண்டு வந்து வைத்தார்கள் தேன்மொழியும் வேணியும்.
[the_ad id=”6605″]
எல்லாத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தவனுக்கு மனம் வெகுவாக வலித்தது. அப்போது ஊர்ந்து வந்த வெண்மதி அவன் பேன்டை பிடித்து இழுக்க அவளை தூக்கி கொண்டவனுக்கு “இந்த வீட்டை விட்டு சென்றால் சத்தியமாக சந்தோஷமா இருக்க மாட்டேன்”, என்ற உண்மை புரிந்தது. மனதில் ஒரு முடிவு எடுத்துக் கொண்டான்.
“என்ன டி, நீ என்னவோ சொன்ன? அவன் நிஜமாவே கிளம்பிட்டான்”, என்று புலம்பிக் கொண்டிருந்தாள் வேணி.
“அத்தை, கொஞ்சம் பொறுங்க”, என்று அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள் தேன்மொழி.
அனைவரும் அவன் கிளம்பி வருவதற்காக ஹாலில் காத்திருந்தார்கள். வெண்மதியை கையில் தூக்கி கொண்டு அறையில் இருந்து வெளியே வந்தான் செல்வா.
“கிளம்பலாமா டா? இப்ப கிளம்பினா தான் டிரைனை பிடிக்க முடியும்”, என்றான் கதிர்.
“நான் ஊருக்கு போகலைண்ணா. என்னால உங்களை எல்லாம் விட்டுட்டு போக முடியலை”, என்று தலை குனிந்து கொண்டே சொன்னான். அனைவர் முகமும் மலர்ந்து போனது. வேணி சந்தோசத்துடன் தேன்மொழி கையைப் பற்றிக் கொண்டாள்.
அனைவரும் சந்தோஸ்மாக இருக்க அடுத்த நொடி யாரும் எதிர் பார்க்காத வகையில் அன்னம் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு மயங்கி விழுந்தாள்.
அனைவரும் பதறிப் போனார்கள். உடனே ஆண்கள் அனைவரும் வேணியை அழைத்துக் கொண்டு பாட்டியை மருத்துவமனைக்கு தூக்கி செல்ல, உடனடியாக பாட்டிக்கு சிகிச்சை செய்தார்கள் மருத்துவர்கள்.
“ரொம்ப கவலை பட்டுட்டே இருந்துருப்பாங்க போல? இது முதல் அட்டாக் தான். ஆனாலும் கொஞ்சம் கவனமா பாத்துக்கோங்க. வயசானவங்க பாத்தீங்களா? ட்ரீட்மெண்ட் கொடுத்துருக்கோம். ஒரு மூணு நாள் ஹாஸ்பிட்டல்ல இருக்கட்டும்”, என்றார் டாக்டர்.
ஹார்ட் அட்டாக் என்று சொன்னதும் அனைவரும் திகைத்து போனார்கள்.
“இப்ப அவங்களை நாங்க பாக்கலாமா டாக்டர்?”, என்று கேட்டான் கதிர்.
“ஒரு ரெண்டு மணி நேரம் கழிச்சு ஐ. சி. யுல இருந்து ரூமுக்கு மாத்திருவாங்க. அப்ப போய் பாருங்க”, என்று சொல்லி விட்டு அவர் சென்று விட்டார்.
“என்னால தான் பாட்டிக்கு இப்படி ஆச்சு”, என்று சொல்லி அழுது கொண்டே இருந்தான் செல்வா.
“நீ தான் போக மாட்டேன்னு சொல்லிட்டியே? சீக்கிரம் பாட்டிக்கு சரியாகிரும் டா செல்வா”, என்று அவனுக்கு ஆறுதல் சொன்னான் கதிர்.
அறைக்கு மாற்ற பட்ட பின்னரும் கண் விழிக்காமல் இருந்த அன்னம் அடுத்த ஒரு மணி நேரம் கழித்து தான் கண் விழித்தாள்.
எப்போதும் துருதுருவென்று இருக்கும் அன்னம் இப்போது ஆக்ஸிஜன் மாஸ்க் பொருத்தப் பட்டு கட்டிலில் கிடப்பது அனைவருக்கும் வருத்தத்தைக் கொடுத்தது.
கண் விழித்ததும் அனைவரும் அருகில் சென்று கண்ணீரோடு பேசினார்கள்.
“எனக்கு… ஒண்ணும் இல்லை… சரி..யாகிருச்சு”, என்று திக்கி திணறி பேசினாள் அன்னம்.
“என்னால தானே பாட்டி, உனக்கு இந்த நிலைமை”, என்று கேட்டான் செல்வா.
“ஆமா”, என்று அன்னம் சொன்னதும் செல்வா மேலும் அழுதான்.
“குஞ்சு… நீ கைக்குள்ளே இருந்துட்டியா? உன் அண்ணனுங்க எல்லாம் ஹாஸ்டல்ல படிச்சாங்க. ஆனா நீ அப்படி இல்லை. அதனால தான் நீ போறேன்னு சொன்னது கஷ்டமா ஆகிருச்சு. அதையே நினைச்சுட்டு இருந்தேன். அப்புறம் நீ போகலைன்னு சொன்ன உடனே சந்தோஷமா ஆகிருச்சு. உடனே நெஞ்செல்லாம் வலிச்சிருச்சு. இனி சரியாகிரும்”, என்று திக்கி திணறி பேசியவளை அங்கிருந்த நர்ஸ் அமைதியாக இருக்கும் படி எச்சரித்து விட்டு சென்றாள்.
அடுத்த மூன்று நாட்களில் அன்னத்தை சொந்தங்கள் அனைவரும் ஒருவர் மாற்றி ஒருவர் பார்க்க வந்தனர். அன்னம் உடல் நிலையிலும் நன்றாக முன்னேற்றம் இருந்தது.
வீட்டுக்கு அழைத்து வரப் பட்ட அன்னத்தை அறையில் படுக்க வைத்தனர். ஆனால் முன்பு போல் நடமாடாமல் அறைக்குள்ளே தான் இருந்தாள் அன்னம். அனைவரும் அன்னம் இருக்கும் அறையில் தான் அமர்ந்து சாப்பிட்டார்கள்.
ஒரு இடத்தில் அமராமல் சுற்றிக் கொண்டே இருக்கும் அன்னத்தின் நடமாட்டம் வெகுவாக குறைந்தது. வீட்டுக்குள்ளே மட்டும் தான் நடமாடிக் கொண்டிருந்தாள். அன்னத்தை கவனித்து கொள்வதற்காக செல்வாவை அவனுடைய அப்பாவுடன் தங்க வைத்து விட்டு வேணி அந்த அறையில் தங்கிக் கொண்டாள்.
ஒரு நாள் அனைவரும் சாப்பிடும் போது “எப்பா மதி, உன்கிட்ட ஒண்ணு சொல்லணும் பா”, என்று ஆரம்பித்தாள் அன்னம்.
“என்ன மா?”
“நான் ரொம்ப நாள் இருப்பேனான்னு தெரியாது..”, என்று அன்னம் சொன்னதும் “அம்மா, அத்தை… பாட்டி”, என்று பல குரல்கள் கண்டிப்புடன் ஒலித்தது.
“நீங்க பதறினாலும் அது தான் உண்மை”
“அம்மா உனக்கு தான் எல்லாம் சரியாகிருச்சே? எதுக்கு இப்படி பேசுற?”, என்று கேட்டார் மதி.
“எனக்கு வயசு என்ன தெரியுமா என்பத்தி இரண்டு. நான் இன்னும் ஆரோக்கியமா இருக்க காரணம் சின்ன வயசுல நாங்க சாப்பிட்ட சாப்பாடு தான். ஆனா சாவு எப்பவேணும்னாலும் வந்து தானே ஆகணும். அதுக்குள்ள நம்ம குஞ்சுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும். அவன் கல்யாணத்தையும் பாத்துட்டா நிம்மதியா போய் சேருவேன்”, என்று அன்னம் சொன்னதும் அனைவரும் செல்வாவைப் பார்த்தார்கள்.