“நான் ஒரு ரெண்டு நாள்ல பதில் சொல்றேன்”, என்றான் செல்வா.
சிறிது நேரம் கழித்து சௌமியைப் போனில் அழைத்தான் செல்வா. இவனுடைய அழைப்பைக் கண்டதும் அவள் போனைக் கட் செய்தாள்.
இரண்டு நாள் முன்பு நடந்த நிகழ்வு நினைவில் வந்தது. புதிதாக அந்த அலுவலகத்தில் சேர்ந்த சௌமி முதலில் செல்வாவைத் தான் தேடினாள். அவனுக்கு அழைத்துக் கொண்டே இருந்தாள்.
அவன் ஹாஸ்பிட்டலில் இருக்கும் போது போனை சைலண்டில் போட்டு வீட்டில் வைத்திருந்தான்.
அன்று முழுவதும் அவனை அழைத்து அழைத்து ஓய்ந்து போயிருந்தாள்.
அடுத்த நாள் அவளுக்கு அழைத்த செல்வா “என்ன ஆச்சு சௌமி இவ்வளவு கால் பண்ணிருக்க? வேலைல சேந்துட்டியா?”, என்று கேட்டான்.
“ரொம்ப சீக்கிரமா கேட்டுட்ட? இது தான் உன் அக்கறையா?”, என்று கேட்டவளின் குரலில் அடக்கப் பட்ட கோபம் இருந்தது.
“பாட்டிக்கு உடம்பு சரியில்லை சௌமி. ஹாஸ்பிட்டலில் இருக்காங்க. அதான் உன் போனைப் பாக்கல”
“ஐயையோ என்ன ஆச்சு?”
“ஹார்ட் அட்டாக், இப்ப சரியாகிட்டாங்க. ஆனா ஹாஸ்பிட்டல்ல தான் இருக்காங்க”
“சாரி டா, தெரியாம கோப பட்டுட்டேன். சரி இங்க ஆஃபிஸ்க்கு லீவ் சொல்லிட்டியா? வேலைல சேரலைன்னு எதுவும் சொன்னாங்களா?”
“நான் அந்த வேலை வேண்டாம்னு மெயில் அனுப்பிட்டேன் சௌமி”
“என்னது? வேண்டாம்னு அனுப்பிட்டியா? பைத்தியமா டா நீ? இது எவ்வளவு பெரிய வாய்ப்பு தெரியுமா? ஒரு வாரம் கழிச்சு வந்து சேந்துருக்கலாம்ல? எப்ப அனுப்புன?”
“அன்னைக்கு கிளம்பலாம்னு எல்லாம் எடுத்து வைக்கும் போது தான் என்னால என் வீட்டை விட்டு பிரிஞ்சு இருக்க முடியாதுன்னு தோணுச்சு.உடனே மெயில் அனுப்பிட்டு தான் வீட்ல எல்லார் கிட்டயும் போக மாட்டேனு சொன்னேன்.அந்த சந்தோஷத்தை தாங்க முடியாம தான் பாட்டிக்கு அப்படி ஆச்சு?”
“செல்வா நீ பன்றது தப்பு. உன்னோட படிப்புக்கு இங்க தான் வேலை இருக்கு. ஊர்ல இருந்து என்ன செய்ய போற? நீ பாட்டிக்கு சரியானதும் நேர்ல வா. ஹெச். ஆர் கிட்ட பேசுவோம்”
[the_ad id=”6605″]
“இல்லை சௌமி, எனக்கு இந்த வீட்ல தான் சந்தோசமே. நான் எங்கயும் போக மாட்டேன்”
“லூசா டா நீ? அப்ப வேலை?”
“அண்ணன் கூட சேந்து விவசாயம் செஞ்சிட்டு போறேன்? வேற வேலையே இல்லையா என்ன?”
“பைத்தியம் மாதிரி பேசுற செல்வா. என்னைப் பத்தி கொஞ்சமாவது நினைச்சு பாத்துருந்தா இப்படி பேசுவியா? நம்ம கல்யாணம் முடிவாகுறதுக்கு, எங்க வீட்ல நான் உன்னைப் பத்தி பேசுறதுக்கு உனக்கு ஒரு வேலை வேணும் டா. உனக்கு ஏன் என்னைப் புரிஞ்சிக்க முடியலை. நீ தான் என்னை லவ் பண்ணுறேன்னு சொன்ன. நான் திருப்பி உன்னை லவ் பண்ணப்ப நீ என்னை கண்டுக்காம இருப்ப. ஒரு காதல் பார்வை கிடையாது, எங்கயும் வெளிய கூட்டிட்டு போனது கிடையாது. சரி வேலைக்கு போன அப்புறம் உன் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்னு பாத்தா.. நீ இப்படி சொல்ற. போ செல்வா”
“புரியுது சௌமி, உங்க அப்பா கிட்ட நான் பேசி பாக்குறேன்”
“அவர் எப்படி வேலை இல்லாதவனுக்கு கட்டி வைக்க ஒத்துக்குவார்?”
“அப்ப நல்ல வேலைல இருக்குறவனைப் பாத்து கல்யாணம் பன்னிக்கோ”, என்று அவன் சொன்னதும் அவளிடத்தில் ஒரு மௌனம்.
“சாரி சௌமி, தெரியாம சொல்லிட்டேன்”, என்று அவன் சொன்னதுக்கும் அவள் பதில் பேச வில்லை. அடுத்த நொடி இணைப்பை துண்டித்திருந்தாள். அதன் பின்னர் அவன் எத்தனை முறை அவளை அழைத்தும் அவளிடம் இருந்து பதில் இல்லை.
இதை எல்லாம் நினைத்து பார்த்தவன் அவளை மீண்டும் அழைத்தான். அப்போதும் அவள் போனை எடுக்க வில்லை.
அதே நிலையில் அமர்ந்திருந்தவன் அருகில் வந்த தேன்மொழி அவன் கையில் மதியமுதனை வைத்தாள்.
அவனை இறுக்கிக் கொண்ட செல்வா ஏதோ யோசனையில் இருந்தான்.
“நீ ஏன் டா இப்படி இருக்க? நீ ஊருக்கு போகலைன்னு எல்லாருக்கும் சந்தோஷம். ஆனா நீ எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்குற? இது நல்லாவே இல்லை செல்வா”, என்றாள் தேன்மொழி.
….
“உன்கிட்ட தானே டா பேசிட்டு இருக்கேன். எங்களை எல்லாம் விட உனக்கு அந்த வேலை தான் முக்கியமா டா?”
“புரியாம பேசாதே தேனு. உங்களை எல்லாம் விட்டுட்டு இருக்க முடியாதுன்னு நான் புரிஞ்சு தான் ஊருக்கு போகலைன்னு சொன்னேன். இப்ப பிரச்சனை வேற?”
“என்ன கல்யாணத்தை பத்தியா?”
“ஆமா”
“இதுல கவலைப் பட வேண்டி என்ன இருக்கு? சௌமி வீட்ல பேசிட வேண்டியது தான்”
“அவளே பேச மாட்டிக்கா தேனு”, என்று ஆரம்பித்து நடந்ததை சொன்னான்.
“அவ நினைக்கிறதும் சரி தான் டா செல்வா. காதலிக்கிறேன்னு வீட்ல பேசும் போது நீ நல்ல வேலைல இருக்கணும்னு நினைக்கிறா”
“ஆமா, ஆனா எனக்கு என்ன பண்ணன்னே தெரியலை. விவசாயம் பாக்குறேன்னு சொன்னா அவங்க அப்பா சிரிப்பார். அவங்க குடும்பம் அப்படி”
“நீ ஏன் டா அப்படி சொல்ற? வேற காரணம் சொல்லு”
“வேற என்ன சொல்லன்னு தெரியாம தான இப்படி உக்காந்துருக்கேன்”
“அதை நான் சொல்றேன்.இப்ப இல்லை நாளைக்கு நாம ஒரு இடத்துக்கு போறோம். பையனை பாத்துக்கோ”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.
அடுத்த நாள் கதிர் தேன்மொழி செல்வா மூவரும் காரில் கிளம்பினார்கள். அந்த ஊரில் உள்ள ஒரு பெரிய கோச்சிங்க் சென்டர் முன்பு கார் நின்றது.
கவர்ன்மெண்ட் வேலை வாங்க படிப்பதற்கான இடம் அது. “இங்க எதுக்கு தேனு?”, என்று கேட்டான் செல்வா.
“உனக்கு ஒரு வருஷம் டைம். நீ இங்க சேந்து படி. நம்ம ஊர்ல தான் உனக்கு வேலை இல்லை. ஆனா திருநெல்வேலில இல்லாத வேலையா? வி. ஏ. ஓ ஆகலாம், ரயில்வேல வேலை வாங்கலாம். பேங்க்ல வேலைக்கு போகலாம். இன்னும் நிறைய இருக்கு. எந்த வேலைன்னு முடிவு பண்ணுறது உன் சாமர்த்தியம்”, என்று தேன்மொழி சொன்னதும் “தேனு”, என்று உற்சாக மிகுதியில் கத்தினான் செல்வா.
“தேனு என்கிட்ட சொன்னப்ப எனக்கும் இது சரியா தான் டா பட்டுச்சு. ஆனா அவ சொன்ன மாதிரி ஒரு வருஷம் எல்லாம் டைம் இல்ல. எவ்வளவு நாள் வேணும்னாலும் எடுத்துக்கோ. நல்லா படி. நீ உடனே வேலைக்கு போய் சம்பாதிச்சு தான் ஆகணும்னு எந்த அவசியமும் இல்லை புரியுதா? வா அட்மிசன் போடலாம்”,என்று சொல்லி இருவரையும் உள்ளே அழைத்து சென்றான் கதிர்.
உள்ளே சென்று பணம் கட்டி தேவையான புக்ஸை வாங்கிக் கொண்டு கிளம்பியதும் கார் ஊருக்கு செல்லாமல் வேறு பக்கம் சென்றது.
“எங்கண்ணா போறோம்?”
“சௌமி அப்பாவை பாக்க போறோம்”
“அண்ணா”
“ஆமா டா, பாட்டி ஆசை முக்கியம் தானே? அவ தானே உன்கிட்ட பேச மாட்டிக்கா. அவ அப்பா பேசுவார் தானே? அவ வீடு எங்க இருக்கு டா? ஏரியா தெரியும். ஆனா வீடு தெரியாது”, என்றான் கதிர்.
“அவர் இப்ப குடவுன்ல இருப்பார்ணா. அங்கயே போகலாம்”, என்று சொன்னதும் கார் அங்கே சென்றது.
இவர்களைப் பார்த்ததும் சந்தோஷமாக வரவேற்ற சௌமியின் தந்தை விசயங்களைக் கேட்டறிந்தார்.
பயத்துடன் தான் அவரிடம் காதலை சொன்னான் செல்வா. ஆனால் அவரோ “எனக்கு முன்னாடியே தெரியும். நீங்க எழுதின பேப்பரை படிச்சேன். கல்யாணத்தை எப்ப வச்சிக்கலாம்னு பெரியவங்க கிட்ட கேட்டு சொல்லுங்க”, என்று சம்மதத்தை சொன்னார்.
சந்தோசத்துடன் வீட்டுக்கு சென்றவர்கள் மற்றவர்களிடமும் அந்த சந்தோஷத்தை பகிர்ந்தார்கள்.
விஷயம் அறிந்த சௌமிக்கும் மனதில் எழுந்த கோபமெல்லாம் மாயமாய் போனது. வேலை இல்லை என்றால் கல்யாணம் நடக்காதோ என்று தான் அவள் கோபப் பட்டாள். நேரடியாக அவன் தன் தந்தையிடம் பேசியதும் எல்லை இல்லாத சந்தோஷம் கொண்டவள் அவனிடம் பேச போனில் அழைத்தாள்.
[the_ad id=”6605″]
அவள் அழைப்பை ஏற்றவன் “சாரி”, என்று சொன்னான். “என்
ஹஸ்பண்டை நான் மன்னிச்சிட்டேன்”, என்று அவள் சொன்னதும் அதன் பின் அவர்கள் உரையாடல்கள் சந்தோஸமாக சென்றது.
ஆனால் திருமணம் என்றால் அவள் வேலையை விடவா வேண்டாமா என்ற பேச்சு வார்த்தை இரண்டு குடும்பத்திலும் உண்டானது.
“நான் ஒரு வேலைல சேருற வரைக்கும் சௌமி வேலை பாக்கட்டும்”, என்று சொல்லி விட்டான் செல்வா.
அதன் பின் திருமண வேலைகள் நடந்து கொண்டிருந்தது. அடுத்த நாள் திருமணம் என்று இருக்கும் போது அன்னம் சோர்வாக கட்டிலில் படுத்திருந்தாள். அவள் அருகில் சென்று அமர்ந்த செல்வா “இப்ப உனக்கு சந்தோஷமா பாட்டி?”, என்று கேட்டான்.
“ஆமா டா குஞ்சு. ரொம்ப சந்தோஷமா இருக்கு. என் உடம்புக்கு எல்லாம் சரியா போச்சு. ஆனா எல்லாருமே நோயாளி மாதிரியே என்னை பாக்குறீங்க”
“அப்படி எங்களை பயமுறுத்திட்ட பாட்டி. என்னால தான?”
“விடு டா. என் பேத்தி என்ன சொல்லுறா?”
“ஆமா ரெண்டு பேரும் தினமும் பேசுறீங்க தானே? பின்ன என்கிட்ட கேக்குற?”
“ஹா ஹா, ஆனா எனக்கு ஒரு விசயத்துல ரொம்ப ரொம்ப சந்தோஷம் டா”
“என்ன பாட்டி?”
“என் கண்ணு தப்பிச்சது. உன் காதலை சேத்து வைக்க என் கண்ணுல அந்த அழுற மருந்தை ஊத்தி விட்டுருவியோன்னு பயந்தேன். இப்ப தான் நிம்மதி”
“அது தான் கிளிசரின் இல்லாமலே எங்களை எல்லாம் அழ வச்சிட்டியே?”
“விடு டா. அதான் சரியா போய்ட்டே. ஆமா உனக்கு வேலை கிடைக்குற வரைக்கும் சௌமியை சென்னைலே இருக்க சொல்லிட்டீயாம்? அவ்வளவு நல்லவனா டா நீ?”
“ஹா ஹா, அவ இங்க இருந்தா நல்லவனா எப்படி பாட்டி இருக்க? அவளை வேலையை விட்டுட்டு இங்க வர சொன்னா நான் கோச்சிங்க் கிளாஸ் போகும் போது என் பிள்ளை ஸ்கூலுக்கு போகும். நீ தூங்கு”, என்று சொல்லி விட்டு எழுந்து சென்று விட்டான்.
கல்யாண நாளும் வந்தது. கதிர், கண்ணன் கல்யாணம் எல்லாம் சொந்த ஊரில் உள்ள மண்டபத்தில் நடந்திருந்தது. ஆனால் செல்வாவின் கல்யாணமோ டவுனில் நடந்தது.
அதிகாலை நான்கு மணிக்கே மண்டபத்துக்கு கிளம்பினார்கள். பின் மாப்பிள்ளையை மண்டபத்தில் விட்டுவிட்டு சௌமியை பெண்ணழைக்க சென்றார்கள்.
குறித்த முகூர்த்தத்தில் சௌமி கழுத்தில் தாலியைக் காட்டினான் செல்வா. மொத்த சொந்தமும் அங்கே கூடி இருந்து அர்ச்சதை தூவி மணமக்களை வாழ்த்தினர்.
பின் ரிசப்ஷன் நடை பெற்றது. கடைசியாக குடும்ப புகைப்படம் எடுக்கலாம் என்று முடிவு செய்து தனி தனி குடும்பமாக எடுத்து பின் அனைவரும் ஒன்றாக எடுத்தனர்.
மணமக்களை நடுவில் அமர வைத்து அவர்களுக்கு ஒரு புறம் அன்னமும் மற்றொரு புறம் சண்முகம்மாளும் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு பின்னே கதிர் குடும்பம், தேன்மொழி குடும்பம், ராதா குடும்பம், வைஷ்ணவி குடும்பம், கீதா குடும்பம், சௌமி குடும்பம் என்று அனைவரும் ஒரு புகைப் படத்தில் இருந்தனர்.
இந்த தருணத்தை எண்ணி அன்னம் மற்றும் சண்முகம்மாள் கண்களில் கண்ணீர் வடிந்தது சந்தோசத்தில். “நீங்க ஆசை பட்ட படி குடும்பம் ஒண்ணு சேந்துருச்சு. வீட்டுக்கு போன உடனே சுத்தி போட சொல்லணும்”, என்று எண்ணி தங்களின் கணவன்களை எண்ணிக் கொண்டார்கள்.
பின் வீட்டில் சடங்கு, மறுவீடு என்று கழிய அடுத்த இரண்டு நாட்களில் சௌமி சென்னைக்கு கிளம்பி விட்டாள். செல்வா கிளாசில் சேர்ந்தான்.
அடுத்த ஒரு வருடம் எப்படி சென்றது என்று தெரியாமல் சென்றே விட்டது.
ஒரு நாள் நகத்தை கடித்த படி லேப்டாப்பை பார்த்துக் கொண்டிருந்தான் செல்வா. இத்தனை நாட்கள் அவன் கடினமாக படித்தான். அதற்கு பலன் இன்று தான் தெரியும்.
ஆம், இன்று அவனுக்கு ரெவனியு இன்ஸ்பெக்டர் வேலைக்கான ரிசல்ட் வரும் நாள். அவள் லேப்டாப்புடன் போராடிக் கொண்டிருக்க அதுவோ டவர் சரியாக கிடைக்காமல் அவனுக்கு போக்கு காட்டியது.
டென்சனில் நொந்து கொண்டிருக்கும் போது அவனை அழைத்தாள் சௌமி.
“சொல்லு சௌமி”
“ரிசல்ட் பாத்தியா டா?”
“இல்லை சௌமி, டவர் கிடைக்கல. நீ பாத்தியா?”
“நான் நைட் கிளம்பி காலைல ஊருக்கு வரேன் டா”
“ஏய், நான் என்ன கேக்குறேன்? நீ என்ன சொல்ற?”
“லூசு புரியலையா? நீ பாஸ் ஆகிட்ட டா. அதுவும் அதிக மார்க் வச்சிருக்க. இன்னும் நான் இங்க இருந்து என்ன செய்ய? அதான் கிளம்பி வரவான்னு கேட்டேன்”
“சௌமிமிமிமிமீமீ நிஜமாவா?”
[the_ad id=”6605″]
“ஆமா டா”
“நீ நைட் எல்லாம் கிளம்ப வேண்டாம்”
“ஏன் டா, என்னைப் பாக்கணும்னு ஆசை இல்லையா?”
“லூசு, இன்னும் ஒரு மணி நேரத்துலே தூத்துக்குடிக்கு பிளைட் கிளம்பும். அதுல வா டி”, என்று சொல்லி விட்டு போனை வைத்தவன் குடும்பத்தினருக்கு விஷயத்தை சொன்னான்.
அனைவருக்குமே சந்தோஷம் தான். “உன் பொண்டாட்டிக்கு டிக்கட் போடு டா. நைட் கிளம்பி காலைல வரட்டும். இன்னும் எத்தனை நாள் தான் அந்த பிள்ளை தனியா இருக்கும்? டிரைன்ல கிடைக்கலைன்னா பஸ்ல வர சொல்லு”, என்றாள் அன்னம்.
“நாளைக்கு எல்லாம் இல்லை பாட்டி. இன்னைக்கே வந்துருவா”, என்று சொல்லி சிரித்தான் செல்வா.
“எப்படி டா? பறந்து போய் தூக்கிட்டு வரப் போறியா?”
“ஹா ஹா, இல்லை பாட்டி அவ பறந்து வருவா. பிளைன்ல வர சொல்லிட்டேன் பாட்டி”, என்று அவன் சொன்னதும் அனைவரும் சிரித்தார்கள். சௌமியும் வந்ததும் சந்தோஷம் இரட்டிப்பானது.
வீட்டுக்கு வந்ததும் அவனை காதலாக பார்த்த சௌமி அனைவரும் அங்கு இருப்பதைக் கண்டு “செல்வா ரொம்ப சந்தோஷம்”, என்றாள்.
“புருஷனை பேர் சொல்லிக் கூப்பிடாத சௌமி”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து நகன்றார் மதியழகன். அதில் சௌமி முகம் சோர்ந்து போனது.
“அவர் கிடக்கார் முறைப்பு மன்னார் சாமி”, என்று சொல்லி சமாதானப் படுத்தினான் செல்வா.
“மாமா முன்னாடி பேர் சொல்லி கூப்பிடாத சௌமி. மத்த எல்லாரும் இருக்கும் போதும் பேர் சொல்லி என்ன? வா டா, போ டான்னு எல்லாம் கூப்பிடலாம். நாங்க தப்பாவே நினைக்க மாட்டோம். ஆனா மாமா முன்னாடி கூட இவனை வாங்கங்க போங்கங்கன்னு சொல்றது கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும். அப்படி தானே கீதா?”, என்று சொல்லி விட்டு சென்றாள் தேன்மொழி.
“ராட்சசி, அப்பா முன்னாடியாவது மரியாதை கிடைக்கும்னு நினைச்சா இப்படி என் பொண்டாட்டிக்கு சொல்லிக் கொடுக்குறாளே”, என்று வாய் விட்டே புலம்பினான்.
“உனக்கு அப்படி கூப்பிட்டா தான் பிடிக்கும்னா அப்படியே கூப்பிடுறேன் செல்வா”, என்று சௌமி சொன்னதும் “நீ எப்படியும் கூப்பிட்டுக்கோ. முதல்ல நம்ம ரூமுக்கு வந்து ஒரு கிஸ் கொடு டி. இதுக்கு மேல எல்லாம் தாங்காது”, என்று சொல்லி தங்கள் அறைக்கு அழைத்து சென்றான்.
சரியாக இரண்டு மாதம் கழித்து முதல் நாள் வேலைக்கு கிளம்பினான் செல்வா. அதிக மதிப்பெண் வாங்கியிருந்ததால் அவனுடைய தாலுக்காவிலே அவனுக்கு வேலை கிடைத்தது.
அடுத்த இரண்டு மாதம் கழித்து ஒரு நாள் தலை சுற்றி கீழே விழுந்தாள் சௌமி. அவள் உண்டாகி இருப்பதை அறிந்து அனைவரும் சந்தோஷப் பட்டார்கள்.
“தீயா வேலை செஞ்சிருக்க போல டா”, என்று செல்வாவை கிண்டல் அடித்தார்கள் கதிரும் தினேஷும்.
அதற்கு அடுத்த மாதத்தில் சண்முகம்மாள் உயிர் இந்த உலகத்தை விட்டு சென்றிருந்தது. கண்ணன் கதிரிடம் தகவல் சொன்னதும் அனைவரும் இறுதி சடங்குக்கு சென்றார்கள்.
தூக்கத்திலே தான் அவள் உயிர் பிரிந்திருந்தது. “நல்ல சாவு தான். பேரன் பேத்தி எடுத்தாச்சு”, என்று பலரும் பேசிக் கொண்டிருந்தாலும் வீட்டில் உள்ளவர்களுக்கு சண்முகம்மாள் இல்லாதது பெரிய வலியைக் கொடுத்தது.
பல வருடங்களாக ஒரு சகோதரியாக தோழியாக இருந்த சண்முகம்மாளின் இழப்பு அன்னத்துக்கும் சற்று வலியைக் கொடுத்தது.
அதில் இருந்து அவர்கள் மீண்டு வர சில மாதங்கள் ஆகின.
பிரசவத்துக்காக ஹாஸ்பிட்டலில் அனுமதிக்க பட்டிருந்தாள் சௌமி. அனைவரும் கவலையுடன் வெளியே காத்திருக்க செல்வாவின் மகன் இப்பூவுலகில் அடி எடுத்து வைத்தான்.
வீட்டுக்கு அழைத்து வந்ததும் அவனை தூக்கி அன்னம் கையில் கொடுத்த செல்வா “இவனுக்கு மதிவாணன்னு நம்ம தாத்தா பேரை தான் வைக்க போறேன். இவனுக்கு கல்யாணம் செஞ்சு வச்சிட்டு நீ செத்து போனா போதும். அதுக்குள்ள அவசரப் பட்டு சண்மு பாட்டி மாதிரி போனா உன்னை கொன்னுறுவேன் பாத்துக்கோ”, என்று மிரட்டியதும் அனைவரும் சிரித்தார்கள்.
இந்த சந்தோஷம் அவர்கள் வாழ்வில் தொடரும்…
காதல் தீயை நீர் அணைக்கும்….முற்றும்!!!