எனைச் சுற்றி ஏகாந்தம்
அத்தியாயம் 3
இப்போது தமிழின் குடும்பம் புது வீட்டில் தான் இருந்தார்கள். பழைய வீட்டின் சாவி இன்னும் இவனிடமே இருப்பதால் அதையும் எடுத்துக் கொண்டு சிதம்பரம் வீட்டுக்குச் சென்றான் தமிழ்.
அவனைக் கண்டதும் “வா மாப்ள”, என்றார் சிதம்பரம். வைஷ்ணவி மற்றும் மீனாட்சியும் அவனிடம் நன்கு பேசினார்கள். சிதம்பரம் தான் சேகர் பற்றியும் திருமணம் பற்றியும் சொன்னார். “உன் கிட்ட முன்னாடியே சொல்லணும்னு நினைச்சோம் மாப்ள. ஆனா ……”, என்று அவர் தயங்க “எனக்கு புரியுது மாமா. சேகர் அண்ணன் ரொம்ப நல்லவர். நம்ம வைஷுக்கு பொருத்தமா இருப்பார். தயங்காம பாருங்க. எந்த உதவின்னாலும் கேளுங்க”, என்றான் தமிழ்,
“என்ன இப்படி சொல்லிட்டு ஒதுங்கப் பாக்குற? நீ தானே கூட மாட ஒத்தாசை பண்ணனும்? உங்க அம்மா பேசினதை எல்லாம் விடு. சில பேரை மாத்த முடியாது. அதுக்காக நாமளும் மாறணும்னு எந்த அவசியமும் இல்லை. அப்படி நாம மாறினா தப்பா பேசினவங்க ஜெயிச்ச மாதிரி ஆகிரும். நீ என் மருமகன்னாலும் எனக்கு மகன் தான் டா. நாளைக்கு காலைல மாப்பிள்ளை வீட்டுக்கு போய் மத்த விவரம் எல்லா பேசிட்டு வரணும்? நான் எங்க தனியா போக? நீயும் வா”, என்று அவர் சொல்ல சந்தோஷமாக தலையசைத்தான்.
“அப்புறம் மாமா, உங்க அக்கவுண்டுக்கு ரெண்டு லட்சம் பணம் அனுப்பிருக்கேன்”, என்று சொல்ல அவனை வேதனையாக பார்த்தார்.
“ரோசப் பட்டு தானே அந்த பணத்தைக் கொடுக்குற? நான் பேசினது தப்பு தான் தமிழு. செஞ்ச உதவியை சொல்லிக் காட்டிட்டேனே? இந்த அத்தையை மன்னிச்சிருப்பா”, என்றாள் மீனாட்சி.
“ஐயோ, என்ன அத்தை என் கிட்ட போய் மன்னிப்பு கேக்குற? என்னைக்கு இருந்தாலும் நான் அதைக் கொடுக்க தான் செய்யனும்? அது மாமா வயல்ல உழைச்ச காசு அத்தை. நம்ம வைஷு கல்யாணத்துக்கு தேவைப்படும்”
“அப்படின்னாலும் அவ்வளவு எதுக்கு மாப்ள?”, என்று கேட்டார் சிதம்பரம்.
“என்னை பாரின் அனுப்புறதுக்கு முன்னாடி நீங்க தானே எல்லா செலவும் செஞ்சீங்க? அதை எல்லாம் கொடுக்கணும்ல? வாடகையும் கொடுக்கணும். ஆனா என்னால அவ்வளவு முடியாது மாமா. என்னைக்குமே நான் உங்களுக்கு கடன் பட்டவன் தான்”
“மொத்தமா கணக்கு முடிக்கிறியா மாப்ள? இல்லை உறவையே முடிக்கிறியா?”
“என்ன மாமா இப்படி பேசுற? நீ எனக்கு அப்பா மாதிரி. உன் உறவை முடிச்சிட்டு நான் எங்க போவேன்? இப்ப வைஷு கல்யாணத்துக்கு உனக்கு கண்டிப்பா பணம் தேவைப் படும். ஏற்கனவே அம்பது பவுன் நகை போடப் போற? கூட அஞ்சு பவுனை சேகர் அண்ணாவுக்கு போட்டா இன்னும் நல்லா இருக்கும்ல? அதான் இப்பவே கொடுத்தேன்”, என்று சொல்ல அரை மனதாக சமாதானம் ஆனார்.
“புரிஞ்சிக்கோ மாமா, என் கிட்ட இருந்தா அந்த பணம் கண்டிப்பா செலவாகிரும். தேவிக்கு நகை செய்யணும்னு எங்க அம்மா வாங்கிருவாங்க. அவளுக்கு நான் செய்வேன் தான். ஆனா என் கிட்ட ஒண்ணும் இல்லாம வழிச்சிருவாங்க. அவங்க கேக்கும் போது அள்ளிக் கொடுக்க தான் தோணும். இல்லாம இருந்தா தைரியமா இல்லைன்னு சொல்லுவேன்”
“சரி மாப்ள. உனக்கு வேணும்னா வாங்கிக்கோ. அப்புறம்…. சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத மாப்ள. உன் தங்கச்சிகளுக்கு செய், செய்ய வேண்டாம்னு சொல்லலை. ஆனா உனக்கும் கொஞ்சம் சேத்து வை. வீட்டையும் உன் பேருக்கு மாத்திரு. உன் அம்மா எப்ப எப்படி மாறுவான்னு தெரியலை”
“சரி மாமா பாக்குறேன்”
“அடுத்து என்ன பண்ண போற? பாரின் போறியா? இல்லை இங்க தானா?”
“இன்னும் முடிவு பண்ணலை மாமா. இங்கயே இருக்கணும்னு தான் வந்தேன். ஆனா இப்ப என்னவோ இங்க இருக்க முடியலை. எனக்கு ஒரு உதவி பண்ணுறியா மாமா? ஏதாவது ஒரு நல்ல பொண்ணா பாத்து எனக்கு கட்டி வைக்கிறியா?””, என்று கேட்டான். இதைக் கேட்கும் போதே வெட்கமும் சங்கடமும் அவன் முகத்தில் போட்டி போட்டது. தன்னுடைய திருமணத்தை தானே கேட்க வெட்கமாக இருந்தது.
“அடப் பாருடா என் மாப்ள வெக்கமெல்லாம் படுறான்? கண்டிப்பா பாக்குறேன் டே. உனக்கு நான் பாக்காம யார் பாப்பா?”, என்று சிரிக்க வைஷ்ணவி அவனை கிண்டல் அடித்துக் கொண்டிருந்தாள். வெகு நாட்கள் கழித்து தமிழ் சந்தோஷமாக இருந்தான்.
“சரி மாமா, நீ காலைல கிளம்பிட்டு எனக்கு ஒரு போன் அடி. நான் வரேன். சேகர் அண்ணா வீட்ல போய் பேசிட்டு வருவோம். வரேன் அத்தை. கல்யாணப் பொண்ணு வரட்டா?”, என்று கேட்டு விட்டுச் சென்றான்.
ஆனால் அவன் வீட்டுக்குச் சென்றதும் “அங்க போகாதேன்னு சொன்னா கேக்குறியா?”, என்று கேட்டாள் சரோஜா. எரிச்சலுடன் அவன் பதில் சொல்லாமல் போக “நான் கேள்வி கேட்டுட்டு இருக்கேன், பதில் சொல்லாம எங்க டா போற?”, என்று கேட்டாள்.
“தூங்கப் போறேன் மா”, என்று எரிச்சலுடன் சொன்னான்.
“தூங்கப் போறியா? அதுக்கு முன்னாடி உன் கிட்ட ஒரு விஷயம் பேசணும்”
“என்ன? சொல்லுங்க”
“நாளைக்கு காலைல நீ என் கூட வரணும்”
“எங்க? நீங்க எங்க வேணும்னாலும் போங்க. பணம் வேணும்னா தரேன். ஆனா என்னை விட்டுருங்க”
“பணம் இப்ப வேண்டாம். நாம நாளைக்கு உனக்கு பொண்ணு பாக்கப் போறோம். இப்ப தான் தரகர் போன் பண்ணினார்”, என்று சரோஜா சொல்ல “என்னது?”, என்று அதிர்ந்தான். கூடவே அவனுக்கு இது உண்மையா என்று குழப்பம் வந்தது.
“ஆமா டா, காலைல கிளம்பிரு”, என்று சொல்லிச் செல்ல குழப்பத்துடன் தனதறைக்குச் சென்றான். உடனே சிதம்பரத்தை அழைத்து அவன் விஷயத்தை சொல்ல “ரொம்ப சந்தோஷம் மாப்ள. உன் அம்மாவுக்கு இப்பவாது உன் மேல அக்கறை இருக்கே? எங்களுக்கும் வரணும் போல தான் இருக்கு. ஆனா உன் அம்மாவுக்கு பிடிக்காது. அதனால நீ முதல்ல போய் பாத்துட்டு வா. அப்புறம் நாம எல்லாரும் தனியா போய்ப் பாப்போம். உனக்கு ஒரு வாழ்க்கை அமைஞ்சிட்டுன்னா இந்த மாமனுக்கு சந்தோஷம் தான் யா. சேகர் மாப்ள வீட்டுக்கு சாயங்காலம் போய்க்கலாம்”, என்று சொல்லி போனை வைத்தார்.
அவனும் சில பல எதிர்பார்ப்புகளுடன் அந்த இரவைக் கடந்தான். அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு அவன் எழுந்து வரும் போது “என்ன தமிழ் இன்னும் கிளம்பாம இருக்க? சீக்கிரம் கிளம்பு”, என்றாள் சரோஜா.
“அம்மா, இவ்வளவு சீக்கிரமாவா? கொஞ்சம் பொறுமையா இரு. ஆமா பொண்ணுக்கு எந்த ஊர்? தங்கச்சிங்க மாப்பிள்ளைங்க எல்லாம் கிளம்ப வேண்டாமா? அதை விட பொண்ணு வீட்ல எந்திரிச்சிருப்பாங்களான்னு கூட தெரியாது”
“பொண்ணைப் பத்தின விவரங்கள் எல்லாம் போகும் போது பேசலாம். உன் தங்கச்சிகளை எல்லாம் இப்ப கூட்டிட்டு போக வேண்டாம். நீயும் நானும் போவோம் வா, கிளம்பு”, என்று சொல்ல குழப்பம் வந்தாலும் சிறு குறுகுறுப்புடன் கிளம்பினான்.
அவனுக்கு தங்கைகளை, வைஷ்ணவி வீட்டில் உள்ளவர்களை அழைக்க ஆசை தான். ஆனால் அது நடக்காது என்று தெரிந்து அமைதியாக கிளம்பினான்.
தங்கைகள் மூவரும் அவனுக்கு ஆல் தீ பெஸ்ட் என்று சொல்ல சிறிது வெட்கப் பட்டுக் கொண்டே அன்னையுடன் கிளம்பினான். இப்போது ஆட்டோவில் சரோஜா மற்றும் தமிழ் இருவரும் தான் சென்றார்கள்.
திருநெல்வேலியில் இருந்த ஒரு ஊரில் ஆட்டோ நின்றதும் இருவரும் இறங்கினார்கள். அந்த தெருவிலே ஒரு பெரிய வீடு மட்டுமே இருந்தது. வீடு என்பதை விட பங்களா என்று சொன்னால் சரியாக இருக்கும்.
“அம்மா பொண்ணு வீட்டுக்கு போகலையா?”, என்று தமிழ் கேட்க “இது தான் பொண்ணு வீடு”, என்றாள் சரோஜா.
அந்த வீடே கொஞ்சம் பிரம்மாண்டமாக தான் இருந்தது. அந்த காம்பவுண்ட் போட்ட வீடும், கேட்டில் நின்ற வாட்ச்மேனையும் பார்த்தே இது தனக்கு செட் ஆகாது என்று உணர்ந்து கொண்டான் தமிழ்.
ஏனென்றால் அவன் கிராமத்தில் வளர்ந்தவன். அங்கெல்லாம் எல்லா வீடும் சாதாரணமாக தான் இருக்கும். அங்கே செக்யூரிட்டி எல்லாம் கிடையாது. கதவையே அடைத்து வைக்க மாட்டார்கள். அப்படி இருக்க அவனுக்கு இந்த மேல்தட்டு மக்கள் எப்போதும் கொஞ்சமும் தங்களுக்கு சரிக்கு சமமானவர்கள் அல்ல என்ற எண்ணம் தான்.
“அம்மா இந்த வீடே கொஞ்சம் பெரிய இடமா இருக்கு. நமக்கு செட் ஆகாது வா, நாம போகலாம்”, என்று சொல்ல “அதெல்லாம் ஒண்ணும் இல்லை. நீ வா. தரகர் எல்லாம் சொல்லிட்டார்”, என்று சொல்லி உள்ளே சென்றாள். செக்யூரிட்டி அவர்களை ஏளனமாக பார்க்க தமிழுக்கு எரிச்சலாக இருந்தது. செக்யூரிட்டி யார் என்ன என்று விசாரித்ததும் சரோஜா விஷயத்தைச் சொன்னாள்.
அவனும் அவர்களை ஏதோ பிச்சைக்காரர்கள் என்று நினைப்பது போல உள்ளே அனுமதிக்க தயக்கத்துடன் உள்ளே சென்றார்கள். அவர்கள் வருவதை செக்யூரிட்டி மூலம் அறிந்தும் உள்ளே இருந்து யாரும் அவர்களை வரவேற்க வரவில்லை. இவர்களாக தான் உள்ளே சென்றார்கள்.
இவர்கள் வீட்டுக்குள் சென்ற போது ஹாலில் கால் மேல் போட்டு அமர்ந்திருந்த தில்லைநாயகம் “தரகர் நீங்க வருவீங்கன்னு சொன்னார். வாங்க உக்காருங்க”, என்றார். அவர்களைக் கண்டு அவர் எழக் கூட இல்லை. அவர் மனைவியும் வாங்க என்றார். அவளும் அமர்ந்து தான் இருந்தாள்.
சரோஜா சென்று அமர தமிழ் தயக்கத்துடன் அமர்ந்தான். “தரகர் எல்லா விசயத்தையும் சொன்னாரா?”, என்று கேட்டார் தில்லைநாயகம். “சொன்னாருங்க. எங்களுக்கு சரி தான். நாங்க பொண்ணைப் பாக்கலாமா?”, என்று சரோஜா கேட்க தமிழுக்கு குழப்பமாக இருந்தது. தரகர் என்ன சொல்லிருப்பார் என்று.
தில்லைநாயகம் மனைவியைப் பார்க்க அவளும் சென்று மகளை அழைத்து வந்தாள்.
“ஹாய்”, என்ற படி அங்கு வந்த தாரிகா அவர்கள் எதிரே அமர்ந்தாள். அவளை கண்டு தமிழுக்கு எந்த உணர்வும் வர வில்லை. முதலிலே இது தனக்கு ஒத்து வராது என்று அவன் மனம் முடிவு செய்தது உண்மை என்று புரிந்தது. சப்பாத்தி மாவு போல வெள்ளையாக இருந்த அவளை அவனுக்கு சுத்தமாக பிடிக்க வில்லை. அதுவும் அவள் உடை. இரவு உடையை தான் அணிந்திருந்தாள். ஒரு பெண்ணுக்கு இருக்கும் நளினம் வெட்கம் எதுவுமே அவளிடம் இல்லை. தமிழை அவள் மாப்பிள்ளையாக நினைத்துப் பார்க்க வில்லை. ஆய்வுக் கூட எலியைப் பார்ப்பது போல ஆராய்ச்சிப் பார்வை தான் பார்த்தாள்.
ஆனால் அந்த பெண்ணை சரோஜாக்கு மிகவும் பிடித்து விட்டது. “எங்க வீட்டு மருமக ரொம்ப அழகா இருக்கா. என்னைக்கு கல்யாணம் வச்சிக்கலாம்”, என்று சரோஜா கேட்க “அம்மா இது வேண்டாம், வா போகலாம்”, என்று முணுமுணுத்தான் தமிழ்.
“பேசாம இரு டா“, என்று மகனை அரட்டி விட்டாள் சரோஜா.
“மாப்பிள்ளை என்ன சொல்றார்?”, என்று தில்லைநாயகம் கேட்க “அவன் என்ன சொல்றது சம்பந்தி? என் மகன் நான் கிழிச்ச கோட்டைத் தாண்ட மாட்டான். எனக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு”, என்றாள் சரோஜா.
“ரொம்ப சந்தோஷம்… மத்த விஷயம் எல்லாம்?”
“எல்லாம் எனக்கு சம்மதம் தான். கல்யாணம் எப்ப எங்கன்னு மட்டும் சொல்லுங்க. என் மகன் வந்து என் மருமக கழுத்துல தாலி கட்டுவான். நாங்க இப்ப கிளம்புறோம்”, என்று எழுந்து கொண்டாள் சரோஜா. அங்கேயே இருந்தால் மகன் எதையும் குழப்பி விடக் கூடாதே என்று.
“சரி நாங்க கலந்து பேசிட்டு உங்க நம்பருக்கு கூப்பிடுறோம்”, என்று தில்லைநாயகம் சொல்ல இருவரும் எழுந்து கொண்டார்கள். தமிழுக்கு அவர்களிடம் போய் வருகிறேன் என்று சொல்லக் கூட மனதில்லை. அவனை ஏதோ அடிமை போல பார்ப்பவர்களிடம் எப்படி பேசுவானாம்? முதல் ஆளாக வெளியே வந்து விட்டான்.
வீட்டுக்கு வந்து சேரும் வரைக்கும் இருவரும் எதுவும் பேச வில்லை. வீட்டுக்குள் வந்ததும் சரோஜா அவளது அறைக்குள் செல்லப் போக “அம்மா நில்லு”, என்று சத்தமாக சொன்னான் தமிழ். தேவி கல்லூரிக்கு சென்றிருக்க ஜெயா மற்றும் அமுதா இருவரும் ஆவலாக வெளிய வந்தார்கள்.
“என்ன டா?”, என்று சர்வ சாதாரணமாக கேட்டாள் சரோஜா.
“என்ன நடக்குது இங்க?”, என்று அவன் கண்களில் கோபம் வெளிப்பட அமுதாவும் ஜெயாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“என்ன டா இப்படி கேக்குற? உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போறேன் தமிழ். பொண்ணு எம்புட்டு அழகா இருக்கா? எவ்வளவு பெரிய இடம்? எனக்கு சந்தோஷமா இருக்கு தமிழ்”
“அது எல்லாம் சரி தான். ஆனா இவ்வளவு பெரிய இடம் நமக்கு வேண்டாம்”
“வேண்டாமா? ஏன்?”
“எனக்கு ஏதோ சரியா படலை? அந்த பொண்ணை பிடிக்கவும் செய்யலை. வேற பொண்ணு பாரு”
“வேற பொண்ணு பாக்குறதா? இந்த பொண்ணு தான் என்னோட மருமக. இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கணும் தமிழ்”
“என்னால முடியாது மா. இதை விட்டுரு. ஆமா கேக்கணும்னு நினைச்சேன், எல்லா விவரமும் தரகர் சொன்னாரான்னு அந்த ஆள் ஏன் கேட்டார்?”
“அது…”
“எனக்கு உண்மை தெரியணும் மா. இல்லை நான் தரகர் கிட்ட கேப்பேன். அங்க வச்சே கேட்டுருக்கணும். உனக்கு மரியாதை கொடுத்து அமைதியா நின்னேன். என்னன்னு சொல்லு. அவ்வளவு பெரிய பணக்காரங்க எப்படி நம்ம வீட்ல பொண்ணு எடுக்க சம்மதிச்சாங்க? தரகர் எப்படி அவங்களை நம்ம கூட கோத்து விட்டார்?”
“பெருசா ஒண்ணும் இல்லை டா, அவங்க வீட்டோட மாப்பிள்ளையா நீ இருக்கணுமாம். அவ்வளவு தான்”, என்று சரோஜா சொல்ல “என்னது?”, என்று அதிர்ந்தாலும் தமிழுக்கு இதற்கு மேலும் ஏதோ இருப்பது போல பட்டது. சரோஜாவின் கண்களில் பொய்யைக் கண்டான்.
அப்போது பெண் பார்க்க போன விஷயம் என்னவாயிற்று என்று கேட்க வந்த தரகரிடம் எல்லா விசயத்தையும் கறந்து விட்டான் தமிழ். அனைத்தையும் கேட்டவனுக்கு அவ்வளவு அதிர்ச்சி. ஜெயா மற்றும் அமுதாவுக்கு கூட அவ்வளவு கோபம் வந்தது அன்னையின் மேல். தரகர் சொன்ன விஷயம் இது தான்.
சரோஜா அவரை அழைத்து மகனுக்கு பணக்கார இடத்தில் பெண் பார்க்க சொல்லியிருக்கிறாள். அதுவும் பெண் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் என்றும் பணம் மட்டும் அதிகமாக இருக்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறாள். அதனால் தான் தரகர் அந்த சம்பந்தத்தை சொல்லி இருக்கிறார். இதற்கு அவர்கள் கொடுத்த கண்டிஷன் வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க வேண்டும் என்பது. அது மட்டுமல்லாமல் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு இல்லை என்றும் சொல்லி இருக்கிறார்கள்.
அதாவது அந்த பெண்ணுக்கு பிறக்கும் போதே கர்ப்பப்பை இல்லாமல் போன விஷயமும் சரோஜா காதுக்கு வந்திருக்கிறது. அதற்கெல்லாம் சரி என்று சொன்ன சரோஜா கேட்ட விஷயம் ஒரு கோடி பணம். அதைக் கொடுத்தால் திருமணத்துக்கு சம்மதம் என்று சொல்லி இருக்கிறாள். அவர்களும் சரி என்று சொல்ல சரோஜாவும் மகனை அழைத்துச் சென்று அவர்களிடம் காட்டி திருமணத்துக்கு சம்மதம் சொல்லி விட்டு வந்து விட்டாள்.
தரகர் எல்லாம் சொல்ல திகைத்துப் போன தமிழ் “அந்த ஆள் கிட்ட சொல்லுங்க ஐயா அவங்க ஆசைக்கு இந்த தமிழ் சரிப்பட்டு வர மாட்டான்னு. அப்புறம் இனி எனக்கு நீங்க பொண்ணு பாக்க வேண்டாம்”, என்று சொல்லி தரகரை அனுப்பி வைத்தான்.
அதில் கொதித்துப் போன சரோஜா “என்ன டா விளையாடுறியா? இந்த கல்யாணம் நடந்தே ஆகணும்? எவ்வளவு பணம், எவ்வளவு சொத்து? அவருக்கு அஞ்சு பேக்டரி இருக்கு. அது எல்லாம் அவர் பொண்ணுக்கு தான். இருநூறு சவரன் நகை போடுவாங்களாம். எல்லாமே உனக்கு தான் டா. உன் வாழ்க்கை முழுக்க நீ பணக்காரனா இருக்கலாம்”, என்றாள்.
“அம்மா உனக்கு பைத்தியமா?”, என்று கேட்டாள் ஜெயா.
“உங்க அண்ணனுக்கு எவ்வளவு பெரிய வாழ்க்கை அமையப் போகுது? நீ என்னடான்னா பைத்தியமான்னு கேக்குற? வீட்டோட மாப்பிள்ளையா இருந்தாலும் இவன் தானே அங்க ராஜா?”, என்று கேட்க தமிழ் பேசவே இல்லை. பேசி என்ன ஆகப் போகுதாம்?
அமுதாவும் அன்னையை திட்ட “நீ சும்மா இரு டி. உனக்கு ஒண்ணும் தெரியாது”, என்று வாயை அடைத்தாள்.
“என்ன மா தெரியாது? அண்ணனை நீ பணத்துக்காக விக்கப் பாக்குற மா? அங்க போயிட்டா நம்மளை எல்லாம் அண்ணா பாக்க கூட வராது”
“பரவால்ல, பாத்து என்ன செய்யப் போறோமாம்?”, என்று சரோஜா கேட்க “உண்மையிலே இவள் என்னுடைய அம்மா தானா?”, என்ற கேள்வி எழுந்தது தமிழுக்கு.
“அம்மா, நீ பேசுறது தப்பு மா”, என்று ஜெயா சொல்ல “என்ன தப்பு? உனக்கும் அமுதாவுக்கும் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டான். தேவிக்கு நகை சேத்துட்டான். எனக்கு வீடு கட்டிக் கொடுத்துட்டான். இனி அவன் அவனோட வாழ்க்கையைப் பாத்துட்டு போக வேண்டியது தானே? அதுக்கு என்ன கசக்குதாம்?”, என்று கேட்டாள் சரோஜா.
“எங்களுக்கு தேவையான எல்லாம் செஞ்சிட்ட. இனி நீ எங்களுக்கு தேவை இல்லை, அதனால உன்னை விக்குறேன்னு சொல்லுறியா மா?”, என்று கேட்டான் தமிழ்.
“லூசு மாதிரி பேசாத டா. இவ்வளவு பெரிய பணக்காரங்க வீட்டுக்கு மருமகனா போக உனக்கு கசக்குதா என்ன?”
“நான் லூசா? சரி உனக்கு எவ்வளவு கோடி கொடுக்குறேன்னு சொன்னாங்க?”
“அது….”
“பரவால்ல சொல்லு”
“ஒரு கோடி என் அக்கவுண்டுக்கு அனுப்புறேன்னு சொல்லிருக்காங்க”
“ஓஹோ, சரி உனக்கு பணம் வந்துரும். எனக்கு அதுல இருந்து எவ்வளவு தருவ?”
“உனக்கு எதுக்கு டா? நீ தான் அங்க போகப் போறியே?”
“அங்க போனாலும் எனக்கு யார் செலவுக்கு பைசா தருவா?”
“அதெல்லாம் அவங்க தருவாங்க”
“ஓஹோ, நான் இப்ப வெளிய போறேன், எனக்கு செலவுக்கு பணம் தாங்கன்னு நான் அவங்க கிட்ட கேக்கணுமா?”
“உனக்கு கேக்க கஷ்டமா இருந்தா சொல்லு. நானே உன் அக்கவுண்டுல பணம் போடச் சொல்றேன்”
“சரி பணத்தை விடு. குழந்தைக்கு என்ன பண்ண? நம்ம குடும்பத்துக்கு வாரிசு வேண்டாமா? அமுதா ஜெயா பிள்ளைங்க அவங்க குடும்பத்துக்கு தான் வாரிசாவாங்க. நம்ம குடும்பத்துக்கு….?”
“அதான் நிறைய பண இருக்கே? அதுல சரி பண்ணிக்கலாம்?”
“இவ்வளவு நாள் ஏன் சரி பண்ணலையாம்? அதான் அவ்வளவு பணம் வச்சிருக்காங்கல்ல? அப்படின்னா இதுக்குள்ள அந்த பொண்ணுக்கு இருக்குற பிரச்சனையை சரி பண்ணிருக்கலாம் தானே?”
“அது…. தெரியலையே?”
“அம்மா இங்க பாரு, எனக்கு எந்த குறையும் இல்லை. கருப்பா இருந்தாலும் என்னோட அழகுல கூட எனக்கு குறை தெரியலை. அப்படி இருக்க நான் இப்படி பட்ட ஒரு பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கணும்னா அது காதலால தான் இருக்க முடியும். நான் அந்த பொண்ணைக் காதலிச்சு அவளுக்கு இப்படிப் பட்ட நிலைமைன்னா கண்டிப்பா நான் அவளைக் கல்யாணம் பண்ணிப்பேன். ஆனா பணத்துக்காக எல்லாம் என்னால விலை போக முடியாது“
“எனக்கு தெரியாது. இந்த கல்யாணம் நடந்தே ஆகணும் தமிழ். இல்லைன்னா நீ என்னை உயிரோட பாக்க முடியாது. இவ்வளவு பணம் யாரு தருவாங்க? நான் இந்த கல்யாணத்தைக் கண்டிப்பா நடத்துவேன்“, என்று சொல்லிச் செல்ல அன்னையின் உண்மையான குணம் அறிந்த விரக்தி சிரிப்பு அவனுக்கு வந்தது.
அடுத்து என்ன செய்ய என்று முடிவு எடுத்தவன் போனை எடுத்து அதற்கு உண்டான ஏற்பாடுகளைச் செய்தான். அடுத்த நாளில் இருந்து வைஷ்ணவியின் திருமண ஏற்பாடுகளை முன்னே நின்று சிதம்பரத்துடன் செய்தான். அன்னையிடம் பேச்சை நிறுத்திக் கொண்டான்.
தில்லை நாயகம் வேலை விஷயமாக பாரின் சென்றுள்ளதால் அவர்கள் திருமண பேச்சு கொஞ்சம் தள்ளிப் போனது. அதனால் தான் சரோஜாவும் பொறுமையாக இருந்தாள்.
இந்த விஷயம் எல்லாம் தேவி மூலம் கேள்விப் பட்ட வைஷ்ணவி வீட்டினருக்கு வேதனையாக இருந்தது. “கெட்ட பொண்ணு இருக்கலாம். ஆனா கெட்ட அம்மா இருக்கவே முடியாதுன்னு சொல்லுவாங்க. ஆனா இங்க இப்படி இருக்கே? எந்த அம்மாவாது பெத்த மகனுக்கு இப்படி ஒரு கொடுமை செய்வாளா?”, என்று கோபத்துடன் கேட்டாள் மீனாட்சி.
“உன் மதினிக்கு பணக்கிறுக்கு பிடிச்சு ஆட்டுது. இந்த பய வாழ்க்கையை எப்படி தான் அவ கிட்ட இருந்து காப்பாத்த போறோம்னு தெரியலை”, என்று புலம்பினார் சிதம்பரம். ஆனால் அவன் அசராமல் இருந்தான். சரியாக வைஷ்ணவி திருமணம் முடிந்த அடுத்த நாள் தேவியிடம் மட்டும் சொல்லி விட்டு பிளைட் ஏறி விட்டான். அதற்கு பின் அவன் இந்தியா வரவே இல்லை.