அத்தியாயம் 3
என் உயிரோடு மட்டுமல்ல,
என் உணர்வோடும்
கலந்த காதல் தீ நீ!!!
சகுந்தலாவுக்கு வளைகாப்பு போட்டு கூட்டி வரும் போதே அவள் வயிரைப் பாத்து “அத்தை எதுக்கு உன் வயிறு பெருசா இருக்கு?”, என்று கேட்டான் கதிர்.
“உள்ள பாப்பா இருக்கா டா. வெளிய வந்த உடனே அவளை நீ தான் பாத்துக்கணும்”, என்று சொன்னாள் சகுந்தலா.
எல்லாருக்குமே ஆண் வாரிசு இருப்பதால் உள்ளே இருப்பது பெண்ணாக இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் ஆசைப் பட்டார்கள்.
கதிர் மனதிலும் தன்னுடைய அத்தை சொன்னது ஆழப் பதிந்தது. அன்றில் இருந்து பாப்பா எப்ப வெளிய வரும் என்று காத்திருந்தான் கதிர்.
அனைவரின் ஆசையை நிறைவேற்ற பிறந்தாள் தேன்மொழி. அவளுக்கு தேன்மொழி என்று மதியழகன் தான் பெயர் வைத்தார்.
“அண்ணன் தாய்மாமன் சீர் செய்ய ரெடியா இருந்துக்கோ”, என்று கிண்டல் அடித்தாள் சகுந்தலா.
“என் மருமகளுக்கு நான் செய்யாம வேறு யார் செய்வா?”, என்று பூரித்து போனார் மதியழகன்.
அப்போதே தாய்மாமன் சீராக ஐந்து பவுன் சங்கிலியை அவள் கழுத்தில் போட்டார் மதியழகன்.
கதிரோ தன்னுடைய வீட்டில் பிறந்த தேன்மொழியை அவன் வீட்டுப் பெண்ணாகவே கருதினான். அவள் வரவுக்காக காத்திருந்தவன் ஆயிற்றே. அவள் பெண்ணாக பிறக்காமல் போயிருந்தால் அழுதே ஊரைக் கூட்டியிருப்பான். அவ்வளவு எதிர்பார்த்தது அவன் மட்டுமே.
மதிவாணனும், அன்னமும் தங்கள் பேத்தியைக் தூக்கி கொஞ்சிக் கொண்டே இருந்தார்கள்.
[the_ad id=”6605″]மூன்று மாதம் வரை கதிர் “தேனு தேனு”, என்று அவளுடனே நேரத்தை கழித்தான். அவளை தூக்க முடியாமல் தூக்கி கொள்வது மடியில் வைக்க சொல்லி அடம் செய்வது, முத்தமிடுவது, கை காலை பிடித்து பார்ப்பது, பாப்பாக்கு இந்த டிரெஸ் போடு அத்தை என்று அதிகாரம் பண்ணுவது, இப்படி ஒவ்வொன்றிலும் அவன் தான் அவளை கவனித்துக் கொள்வான்.
அவள் பசியில் அழுதால் கூட அவனால் தாங்க முடியாது. அவன் உதடும் பிதுங்கும். அவன் தான் தேன்மொழி வயிற்றில் இருக்கும் போதே சகுந்தலா வயிற்றின் மீது கை வைத்து கதை பேசியவன் ஆயிற்றே. அதனால் அவன் சத்தம் கேட்டால் சில நேரம் அழுகையை நிறுத்தி விடுவாள் தேன்மொழி.
நாத்தனாரை வேணியும் நன்கு பார்த்துக் கொண்டாள்.
மூன்று மாதம் கழித்து சகுந்தலா தன்னுடைய புகுந்த வீட்டுக்கு சென்றாள்.
கதிருக்கு அவள் அவளுடைய வீட்டுக்கு சென்றது சுத்தமாக பிடிக்க வில்லை. அவனால் அவள் இல்லாமல் இருப்பதை தாங்க முடியவில்லை. அழுது ஆர்ப்பாட்டம் செய்தவனை அடித்து அடக்கி வைத்தார்கள் மதியழகனும் வேணியும்.
அதில் கதிர் அடங்கி போனாலும் “ஏன் அவ என்னை விட்டு போனா?”, என்று எண்ணி அந்த வயதிலே அவனுக்கு கோபமாக வரும்.
எப்போதாவது சகுந்தலா அவளை தூக்கிக் கொண்டு பிறந்த வீட்டுக்கு வரும் போது அவ்வளவு சந்தோஷப் படுபவன் அவள் போகும் போது தவித்துப் போவான்.
இரண்டு குடும்பத்திலும் முதல் பெண் வாரிசான அவளை அனைவரும் தாங்கு தாங்கு என்று தாங்கினார்கள்.
தேன்மொழி வீட்டில் பெரியப்பா தர்மதுரை, அப்பா ராஜதுரை, சித்தப்பா துரைராசு என மூவரும் செல்லம் கொடுத்தாலும் பாப்பா பாப்பா என செந்திலும் கண்ணனும் கூட அவளை தரையில் விடாமல் தாங்கினார்கள்.
ஒற்றை பேத்தியின் அழகில் செல்லதுரையும் சண்முகம்மாளும் கூட பூரித்து போனார்கள். செல்வியும் அவளை தன் மகளாகவே கருதினாள்.
அப்பா வீட்டில் ராஜகுமாரி என்றால், அம்மா வீட்டில் இளவரசியாக வலம் வந்தாள் தேன்மொழி. ஆனால் அவள் வரும் போது சந்தோஷப் படுவதும் அவள் செல்லும் போது உயிரே தன்னை விட்டு செல்வது போலவும் துடித்துப் போனான் கதிர்.
அவன் மன வலி யாருக்கும் புரியாமலே போனது. ஆனால் வீட்டுக்கு வரும் போது அவள் அவனுடன் ஒட்டிக் கொள்வது அவனுக்கு பெருத்த சந்தோசத்தைக் கொடுத்தது.
அதன் பின்னர் தேன்மொழிக்கு ஏழு மாதம் இருக்கும் போது வேணி மாசமாக இருப்பதை அறிந்து சகுந்தலா அண்ணியைக் காண வந்து விட்டாள். வேணிக்கு அம்மா அப்பா இல்லை என்பதால் சகுந்தலா பிறந்த வீட்டில் இருந்தே தன்னுடைய அண்ணன் மனைவியை கவனித்து கொண்டாள்.
தேன்மொழி கதிர் பள்ளிக்கு சென்றதும் அன்னம் மற்றும் மதிவாணன் கையில் இருப்பாள். கதிர் பள்ளிக்கு சென்று வந்ததும் அவன் கையிலே தான் இருப்பாள். அவளும் அடுத்தவரிடம் செல்ல மாட்டாள். அவனும் அவளை கொடுக்க மாட்டான்.
அங்கு அவள் இருந்த ஆறு மாதமும் அவனுக்கு கொண்டாட்டமாக இருந்தது. ஆனால் வேணிக்கு அடுத்ததும் மகன் தான் பிறந்தான். அவனுக்கு தினேஷ் என்று பெயரிட்டார்கள்.
[the_ad id=”6605″]அவனுக்கு மூன்று மாதம் இருக்கும் போது “எத்தனை நாளைக்கு சகு, நீ என்னைப் பாத்துட்டு பிறந்த வீட்லே இருக்க முடியும்? இப்ப தான் எனக்கு உடம்பு சரியாகிருச்சே”, என்று சொல்லி அவளை அனுப்பினாள் வேணி.
சகுந்தலா அவளுடைய புகுந்த வீட்டுக்கு தேன்மொழியை அழைத்துக் கொண்டு சென்று விட்டாள்.
அதன் பின் கதிர் மனநிலை கொஞ்சம் மாறி விட்டது. மொத்தத்தில் அவன் நினைப்பு முழுவதும் தேன்மொழியே இருந்தாள்.
அவன் நிலை முதலில் கண்ணில் பட்டது அன்னத்துக்கு தான். கலகலப்பாக இருக்கும் பேரன் திடீரென்று அமைதியாக ஆகி போனால் அவளால் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்.
அவனை தூண்டி துருவி பேச்சு கொடுத்து விசாரித்ததில் தேன்மொழி இங்கேயே இருக்க வேண்டும் என்று அவன் எண்ணுவது அவளுக்கு தெரிந்தது. இதை எப்படி சரி செய்ய முடியும் என்று தவிப்பாக இருந்தது அன்னத்துக்கு.
மகளும் பேத்தியும் அவர்கள் வீட்டில் தான் இருக்க வேண்டும். அது தான் மரியாதை. ஆனால் இவன் இப்படி நினைக்கிறானே என்று எண்ணி தவித்து போனாள்.
மதிவாணனிடம் அன்னம் சொன்னதற்கு “அவன் சின்ன பையன், கொஞ்ச நாளில் சரியாகிருவான் விடு”, என்று சொல்லி விட்டார்.
அவனை தினேஷ் அருகில் விட்டு விட்டு அவன் மனநிலையை மாற்ற எண்ணினாள் அன்னம். தினேஷை பாசமுடன் பார்த்து கொள்வான் கதிர். ஆனால் கொஞ்ச நேரத்திலே அவன் கூட்டுக்குள் சென்று விடுவான்.
அதை உணர்ந்த அன்னம், “உன் அத்த மக வேற ஊர்லயா டா இருக்கா? அஞ்சாரு தெரு தள்ளி தான அவ வீடு இருக்கு. தினமும் சாயங்காலம் போய் பாத்துட்டு வா”, என்று அனுப்பி வைத்தாள்.
கண்களில் ஒளி வந்தது கதிருக்கு. சந்தோசத்துடன் தேன்மொழி வீட்டுக்கு செல்பவனை அங்கேயேயும் அனைவரும் அரவணைத்துக் கொள்வார்கள். ஆனால் அவன் போவது முதல் திரும்பி வீட்டுக்கு வருவது வரை தேன்மொழியுடன் மட்டும் தான் இருப்பான்.
கண்ணனும் செந்திலும் அவனை விளையாடக் கூப்பிட்டால் கூட அவன் செல்ல மாட்டான்.
பள்ளி முடிந்து உடையை மாற்றி விட்டு செல்பவன் இரவு உறங்கும் போது தான் வீட்டுக்கு செல்வான். இப்படி போனால் அவனால் எப்படி படிக்க முடியும்?
குறைவான மதிப்பெண்கள் வாங்கி இருக்கிறான் என்று பள்ளியில் இருந்து பெற்றோருக்கு அழைப்பு விடுக்க, தேன்மொழி வீட்டுக்கு போவதை தடை செய்தாள் வேணி.
மறுபடியும் கதிர் தன்னுடைய கூட்டுக்குள் சென்றான். அன்னமும் இதற்கு மேல் தான் செய்வதற்கு எதுவும் இல்லை என்று எண்ணி விட்டு விட்டாள்.
விடுமுறை தினம் மட்டும் தேன்மொழியைக் காண சென்று விடுவான் கதிர்.
இப்படியே நாட்கள் நகர்ந்தது. தேன்மொழி மெதுவாக நடை பழகினாள். கதிரும் அவள் கையை பற்றிக் கொண்டு நடக்க வைப்பான்.
அவளிடம் “அத்தான் சொல்லு அத்தான் சொல்லு”, என்று சொல்லி பேச வைப்பான். அவள் “அத்தான்”, என்று தான் முதன் முதலில் சொல்ல ஆரம்பித்தாள். அதில் அவன் பூரித்து போனான்.
[the_ad id=”6605″]அந்த ஊரில் ஐந்து வரை மட்டும் இருப்பதால் பக்கத்து ஊரில் அவனை சேர்க்க வேண்டும் என்று எண்ணினார் மதியழகன்.
வேணியோ “அந்த பள்ளிக்கூடம் வேண்டாம். இங்க இருந்தா நல்ல படிக்க மாட்டான். டவுன்ல செப்போம்”, என்று சொன்னாள். கடைசியில் கதிரை ஹாஸ்டலில் சேர்த்து விட்டார்கள்.
“போக மாட்டேன்”, என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்தவனை கட்டாயப் படுத்தி அனுப்பி வைத்தார்கள். வேறு வழியில்லாமல் சென்றான்.
வருடம் இரண்டு மூன்று முறை விடுமுறைக்கு வரும் போது அவளைக் காண செல்வான். கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பித்திருந்த தேன்மொழிக்கு அவனுடன் இப்போது அதிக பழக்கம் இல்லாததால் அவன் மீது ஒட்டுதல் ஏற்படவில்லை.
அவளுடைய விலகல் அவனை வெகுவாக பாதித்தது. அது சிறிது சிறிதாக கோபமாக உருமாறியது.
ஆனாலும் அவளை இழுத்து பிடித்து மடியில் இருத்திக் கொள்வான். அவள் அழுது கொண்டே இருப்பாள்.
“அவ தான் அழுறாளே? அவளை விடுப்பா”, என்று அனைவரும் சொல்லுவார்கள். ஆனாலும் இழுத்து பிடிப்பான் அவன். அதனால் அவனைக் கண்டு மிரளுவாள் அவள்.
மொத்தத்தில் காலம் இருவருக்கும் இடையில் பெரிய விரிசலை ஏற்படுத்தி இருந்தது.
அதன் பின் வந்த விடுமுறைகள் அனைத்திலும் அவனை காண ஆசையாக வருவான் கதிர். அவனைக் கண்டு ஓடி ஒளிந்து கொள்வாள் தேன்மொழி.
இல்லையென்றால் முறைத்து விட்டோ அவனை திட்டிவிட்டோ சில நேரம் அடித்து விட்டு அகன்று விடுவாள்.
அவன் கன்னத்தில், தோள் பட்டையில் என்று அவள் கடித்து வைத்த நினைவுகளும் உண்டு.
அவனுக்கு பக்குவம் இருந்திருந்தால் அவளிடம் நயமாக பேசி அவள் மனதை வென்றிருப்பான். அதுவும் இல்லாமல் போனதால் அவன் குணம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிப் போனது. எப்போதும் கோபத்துடன் இருப்பது போலவே இருக்கும் அவன் முகம்.
அந்த கோபம் தேன்மொழியை அவனிடம் இருந்து இன்னும் பிரித்து தான் வைத்தது.