அத்தியாயம் 3
நீ என் தோழியோ
காதலியோ தெரியாது,
ஆனால் என் தாயின்
மறு உருவம் நீ!!!
சாருவைக் காண சுசீலாவை அழைத்துச் சென்றான் யுவன்.
யுவன், மாயா இருவரின் அன்னை என்றதும் சாரு ஒரு ஐம்பது வயது மதிக்கதக்க பெண்மணியாக இருப்பாள் என்று தான் எதிர் பார்த்தாள் சுசீலா.
ஆனால் சாருவுக்கு அறுபத்தி ஐந்து வயதுக்கு மேல் இருக்கும். அவள் முகத்தில் கருணை ததும்பியது. யுவனின் பாட்டி என்று சொல்லும் தோற்றத்தில் இருந்தாள்.
சுசிலாவைப் பார்த்து புன்னகைத்த சாருவுக்கு வணக்கம் சொன்னாள் சுசீலா. இருவருக்கும் ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய யுவன், “அம்மா இனிமே இவங்க தான் உங்களைப் பாத்துக்குவாங்க. எங்க கிட்ட ஏமாத்துற மாதிரி இனி சுசியை ஏமாத்த முடியாது”, என்று சொல்லி சிரித்தான்.
“யுவன், அதெல்லாம் அப்புறம் பேசலாம். சுசீலா ரொம்ப டயர்டா தெரியுறா. அவளை சாப்பிட வச்சு ரெஸ்ட் எடுக்க சொல்லு”, என்று யுவனிடம் சொன்ன சாரு “அவன் கூட போய் நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடு மா. இது உன்னோட வீடுன்னு நினைச்சிக்கோ. எந்த தயக்கமும் இல்லாமல் நீ இங்க இருக்கலாம்”, என்று சொன்னாள்.
சுசீலா சரி என்று சிரித்ததும் “வா சுசீ போகலாம்”, என்று சொல்லி அவளை கீழே அழைத்துச் சென்றான் யுவன்.
இருவரும் டைனிங் ஹாலுக்கு சென்ற போது அங்கே மாயா அனைத்து உணவுகளும் சுவையாக இருக்கிறதா என்று சுவை பார்த்துக் கொண்டிருந்தாள்.
இவர்கள் இருவரும் சென்றதும் புன்னகைத்த மாயா இருவருக்கும் உணவைப் பரிமாறினாள்.
யுவன் நான்வெஜ் உணவுகளை சாப்பிட்டுக் கொண்டிருக்க சுசீலா வெஜிட்டேரியனைத் தான் எடுத்துக் கொண்டாள். ஆனாலும் அவளால் சாப்பிட முடியவில்லை. நான்வெஜ் வாடை அவளுக்கு குமட்டலைக் கொடுத்தது.
அவன் சாப்பிடும் போது வந்த பட்டை, கரி மசால் வாடை அவளை நன்றாக சாப்பிட விட வில்லை.
பேருக்கு சிறிது உண்டு விட்டு உடனே எழுந்து விட்டாள். “என்ன ஆச்சு சுசீ? இங்க உள்ள சாப்பாடு உனக்கு பிடிக்கலையா? வேலையாளை மாத்திரவா?”, என்று கேட்டான் யுவன்.
“எனக்காக வேலையாளையே மாத்துறதா? அந்த அளவுக்கு நான் என்ன முக்கியம்?”, என்று எண்ணியவள் “இல்லை, எனக்கு பசியில்லை அதான்”, என்றாள்.
“ஐயோ பையா, அவங்க பசிக்காம எல்லாம் சாப்பிடாம இல்லை. அவங்க பக்கத்துல உக்காந்து நீ நான்வெஜ் சாப்பிடுறது அவங்களுக்கு பிடிக்கலை போல? இங்க பாருங்க சுசீ, இனிமே உங்க ரூம்கே சாப்பாடு கொடுத்து விடுறேன் ஓகே வா?”, என்று புன்னகையுடன் சொன்னாள் மாயா.
சரி என்னும் விதமாய் புன்னகைத்தாள் சுசீலா. “ஓ நீ மாமிங்குறதை மறந்துட்டேன். சாரி”, என்று சிரித்தான் யுவன்.
அவனுடைய நீலக் கண்களை ஒரு நிமிடம் பார்த்த சுசீலா “நான் ரூமுக்கு போறேன்”, என்று மாயாவிடம் சொல்லி விட்டு சென்று விட்டாள்.
யுவனின் கோட்டைக்குள் தான் இருப்பது மிகுந்த பாதுக்காப்பு என்று புரிந்தது சுசிலவுக்கு. சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாக உணர்ந்தாள் சுசீலா.
கை கால் எல்லாம் வலியாக இருக்கவே கட்டிலில் படுத்தாள். தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி, தற்போதைய நிலையைப் பற்றி, யுவனைப் பற்றி, மாயா சாரு பற்றி எண்ணிக் கொண்டிருந்தவள் அப்படியே தூங்கிப் போனாள்.
டுமீல் என்ற துப்பாக்கிச் சுடும் சத்தத்தில் பதறி எழுந்தவள் கனவு போல என்று எண்ணி தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்.
அறையை விட்டு வெளியே வந்து அந்த வீட்டை சுற்றிப் பார்த்தாள்.
பல அடுக்குகளாக அந்த கோட்டை பிரிந்து விசாலமாக இருந்தது. பெரிய பெரிய தூண்கள் அந்த கோட்டையை தாங்கியிருந்தன. அழகான வேலைபாடுகள் நிறைந்த பொருள்கள் அந்த கோட்டைக்கு அழகு சேர்த்தது. அந்த கோட்டையே பிரம்மாண்டமாக கலை நயத்துடன் தான் இருந்தது.
அதுவும் அந்த கோட்டைக் கதவுகள் பார்ப்பதற்கே பிரம்மிப்பை ஏற்படுத்தியது. ஏதோ ராஜ வம்ஸத்துக்குள் வந்தது போல இருந்தது.
ஒவ்வொரு இடமாக சுற்றிப் பார்த்துக் கொண்டே வந்தவள் அங்கே மாடியின் ஒரு ஓரத்தில் அழகான கதவு இருக்கவும் அதன் அருகே நெருங்கினாள்.
அந்த கதவின் மீது அவள் கை வைத்ததும் அந்த கதவு திறந்து கொண்டது. அங்கே இருப்பது ஏதோ ஒரு அறை என்று எண்ணி
தான் அவள் அதை திறந்தாள். ஆனால் அங்கே இருந்ததோ சுரங்கப் பாதைக்கான வழி. “வீட்டுக்குள்ளே சுரங்கப் பாதையா?”, என்று எண்ணி அவள் விழிகள் வியப்பில் விரிந்தன.
கீழே செல்வதற்கு படிக்கட்டுக்கள் வரிசையாக இருந்தன. இருட்டு அதிகமாக இருந்ததால் நான்கு படிகளுக்கு மேல் அவளுக்கு தெரியவில்லை. “நாளைக்கு காலைல போய் பாக்கலாம்”, என்று எண்ணி அவள் திரும்பி நடக்கும்போது யாருடைய காலடியோசையோ அவளுக்கு கேட்டது. மெதுவாக கேட்ட காலடிச் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமானது.
“யாரோ படியேறிக் கொண்டிருக்கிறார்கள் போல? யாரா இருக்கும்? ஒரு வேளை யுவனா இருக்கோமோ?”, என்று எண்ணி நின்று யாரென்று திரும்பி பார்த்தாள். அங்கே வந்தவனைக் கண்டதும் அவள் முகத்தில் அச்சம் வந்தது.
சிவந்த விழிகளும், கடுமையான முகபாவமும் கொண்ட ஒருவன் அந்த படியில் ஏறி மேலே வந்தான்.
அவன் அணிந்திருந்த கருப்புக் கோர்ட்டும், அவன் முகத்தில் இருந்த தழும்பும் அவனை கொடூரமானவனாக காட்டியது.
அவன் முகத்தில் இருந்த கடுமையைப் பார்த்து பயந்து போனாள் சுசீலா. அவன் மேலே வர வர இவள் அச்சத்துடன் பின்னோக்கி நடந்தாள்.
இவளை நெருங்கியவன் தன்னுடைய இடையில் இருந்து துப்பாக்கியை எடுத்து அவள் நெற்றிப் பொட்டில் வைத்து “யார் நீ?”, என்று கேட்டான்.
பற்கள் தந்தி அடிக்க எதுவும் பேச முடியாமல், நடுங்கிய படி நின்ற சுசீலா அடுத்த நொடி அங்கிருந்து ஓட ஆரம்பித்தாள். அவன் கையில் துப்பாக்கி இருக்கிறது, தான் ஓடினாலும் நின்ற இடத்தில் இருந்தே அவனால் அவளைச் சுட முடியும் என்று கூட தோன்றாமல் ஓடிக் கொண்டே இருந்தாள்.
அவன் நில்லு நில்லு என்று கத்தியது அவள் காதில் விழுந்தாலும் காது கேளாத படி ஓடிக் கொண்டே இருந்தாள். அவன் அவளை விரட்டிக் கொண்டு வருவதும் புரிந்தது. அவனை திரும்பி பார்க்காமல் ஓடியவள் யுவனின் அறை என்று தெரியாமலே அவன் அறைக்குள் சென்றிருந்தாள்.
உள்ளே சென்று கதவை தாழ்ப்பாள் போட்ட பின்னர் தான் ஆசுவாசமாக மூச்சை இழுத்து விட்டாள். வியர்வை ஆறாக ஓடியது.
அவளை துரத்தி வந்தவனுக்கு அவள் யுவனின் அறைக்குள் சென்றது திகைப்பைக் கொடுத்தாலும் அதன் பின் எதுவும் செய்ய முடியாமல் அங்கிருந்து சென்றான்.
புஷ் புஷ் என்று மூச்சு வாங்கியவளின் இதயம் தடதடத்தது. “இன்னும் ஒரு நிமிஷம் அங்கேயே நின்னுருந்தா சுட்டிருப்பானோ?”, என்று எண்ணிக் கொண்டாள். அவள் உடல் வியர்வையில் குளித்தது போல இருந்தது.
திடீரென்று அந்த அறையில் எதுவோ சத்தம் கேட்டது. அவள் புலன்கள் விழித்துக் கொண்டன. மீண்டும் பயந்து போனவள் “ஐயோ இங்கயும் யாரோ இருக்காங்க போலயே? வெளிய போனா அவன் துப்பாக்கியோட இருப்பான். இப்ப உள்ள இருக்குறது யாருன்னு தெரியலையே?”, என்று எண்ணி அங்கிருந்த சோபாவுக்கு பின் மறைந்து கொண்டாள்.
அறைக்குள் இருந்த குளியல் அறையில் இருந்து யாரோ வெளியே வரும் சத்தம் கேட்டது.
“கடவுளே கடவுளே என்னைக் காப்பாத்து. என் கிட்ட அவங்க வரக் கூடாது”, என்று வேண்டினாள்.
ஒரு நொடி நிசப்தமாக இருக்க “உள்ள இருக்குறது யாரா இருக்கும்? எப்படி வெளிய போக?”, என்று அவள் யோசித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய யோசனை அனைத்தும் எப்படி வெளியே செல்ல என்பதிலே இருக்க யாரோ அவள் தலையை பிடித்து இழுத்தார்கள்.
“ஆஆ அம்மா”, என்று அலறிக் கொண்டே அவன் இழுப்புக்கு சென்றவள் அவன் விட்டதும் தொம்மென்று கீழே விழுந்தாள்.
கீழே விழுந்து கிடந்தவளைக் கண்ட யுவன் “ஐயோ சுசீ நீயா? நான் வேற யாரோன்னு நினைச்சுட்டேன்”, என்றான்.
நெஞ்சம் நடுங்க எழுந்து நின்றவள் அவனைப் பரிதாபமாக பார்த்தாள். ஆனால் அவள் பயம் மட்டும் அவளை விட்டு அகலவில்லை. ஏனென்றால் அவன் கையிலும் ஒரு துப்பாக்கி இருந்தது.
அவன் வேற யாரோ வந்திருப்பதாக என்று எண்ணி பாதுகாப்புக்காக தான் அதை எடுத்தான். அவளோ அந்த துப்பாக்கியையே வெறித்து பார்த்துக் கொண்டு நின்றாள்.
அவள் பார்வை போகும் இடம் உணர்ந்தவன் அதை பேன்ட் பாக்கெட்டில் வைத்து மறைத்த படியே அவளைப் பார்த்து சிரித்தான்.
ஒரு பொம்மை துப்பாக்கியை வைத்துக் கூட விளையாடி இராத சுசீலா இங்கே ஆளைக் கொள்ளும் நிஜத் துப்பாக்கிகளை கண்டு உள்ளுக்குள் கலவரமானாள்.
அவளுடைய அமைதியும் பயமும் அவனை பாதிக்க “சுசீ இங்க என்ன பன்ற நீ?”, என்று கேட்டான்.
திடீரென்று கேட்ட அவன் சத்தத்தில் அவள் உடல் பயத்தில் தூக்கிப் போட்டது. பயத்துடன் அவன் முகத்தை ஏறிட்டாள். அவள் பயத்தில் அவன் பார்வை கூர்மையாக அவளை அளவிட்டது.
மருண்ட விழிகள், மென்மையான உதடுகள், அழகான முகம், சின்ன மூக்கில் மின்னும் கள் வைத்த மூக்குத்தி அவளை பேரழகியாக காட்டியது. உயரத்துக்கு ஏற்ற உடல் வாகு கொண்டிருந்தாலும் முகத்தில் மட்டும் குழந்தை தனம் தவழ்ந்தது. அவளையே அளவீட்டுக் கொண்டிருந்தான்.
அவளும் அவனை தான் ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தாள். ஆறடி உயரத்துக்கு மேல், அளவான உடற்கட்டுடன் இருந்தான் யுவன். அவன் கண்கள் மட்டும் மிகவும் வசிகரமாக இருந்தது.
“பயந்துட்டியா?”, என்று மென்மையாக கேட்டான்.
தன்னை சமாளித்துக் கொண்டவள் “இல்லையே, இல்லவே இல்லை. எதுக்கு பயம்?”, என்று கேட்டாள்.
அவளின் சிறுபிள்ளைத் தனமான செய்கை அவனுக்கு சுவாரசியத்தைக் கொடுத்தது.
“சரி நீ பயப்படலை. நம்பிட்டேன். எதுக்கு என்னோட ரூமுக்குள்ள வந்த?”
“இது உங்க ரூமா? அது.,.. அது வந்து.. வெளிய ஒரு ஆள்.. துப்பாக்கி வச்சு…”
“வெளிய யாரு?”
“அந்த சுரங்க பாதைல இருந்து ஒரு ஆள் வந்து… துப்பாக்கி எல்லாம் வச்சிருந்தான்”
“ஓ விக்ரம் சிங்கை பாத்தியா?”
….
“அவன் நம்ம ஆள் தான். உன்னை அவனுக்கு தெரியாதுள்ள? அதான் மிரட்டிருப்பான். இனி அங்க எல்லாம் போகாத. உன்னோட ரூமுக்கு போய் ரெஸ்ட் எடு”, என்று சொன்னதும் அவனை திரும்பி திரும்பி பார்த்த படி சென்றாள்.
அன்று இரவு ரொட்டியும் குருமாவும் அவள் அறைக்கு வந்தது. அதை உண்டு விட்டு படுத்து விட்டாள்.
இரவு நேரத்தில் மெதுவாக அந்த சுரங்கத்தில் இறங்கினான் யுவன் நாயக். கீழே அவனுக்காக காத்திருந்தான் விக்ரம் சிங்.
அங்கே சேரில் கட்டப் பட்டு கிடந்தான் ஒரு ஆள். அவள் காலில் இருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. அவன் கத்தி அழாதவாறு அவன் வாய் கட்டி வைக்கப் பட்டிருந்தது.
“என்ன ஆச்சு விக்ரம்?”, என்று கேட்டான் யுவன்.
“உண்மையை சொல்லலை பையா. பேச்சும் சரியா இல்லை. அதனால தான் காலில் சுட வேண்டியதா போச்சு”
“ரத்தம் நிக்காம போகுது போல?”
“ஆமா பையா, டாக்டரை வர சொல்லவா?”
“அது எதுக்கு வீணான செலவு? இவனுக்கு ஏதாவது உண்மை தெரியுமா?”
“தெரியும். ஆனா அந்த உண்மையை அவனை சொல்ல வைக்கிறது கஷ்டம்னு தோணுது. அந்த அளவுக்கு ட்ரைனிங் கொடுத்துருக்காங்க. உயிரையே பறிச்சாலும் உண்மையை சொல்ல மாட்டான். நம்ம ஆட்கள் இவனை வித விதமா கவனிச்சிட்டாங்க. ஆனா ஒரு யுஸும் இல்லை”