“அப்புறம் எதுக்கு விக்ரம் இவன் கூட போராடிட்டு இருக்க? ஆளை முடிச்சிட்டு அடுத்த வேலையை பாரு”, என்று யுவன் சொன்னதும் அடுத்த நொடி அந்த சேரில் கிடந்தவனின் நெற்றியில் தோட்டாப் பாய்ந்தது.
அதே டுமீல் சத்தத்தில் மீண்டும் கண் விழித்தாள் சுசீலா. ஏதோ இம்முறை அந்த சத்தம் கனவாக தோன்றாமல் ஏதோ பயத்தைக் கொடுத்தது.
விக்ரம் மற்றும் யுவன் கைகளில் பார்த்திருந்த துப்பாக்கி அவளுக்கு ஏதோ ஒரு நெருடலைக் கொடுத்தது. இந்த கோட்டையில் பல மர்மங்கள் புதைந்திருப்பதாக அவளுக்கு தோன்றியது.
அதற்கு மேல் தூக்கம் வராமல், கட்டிலை விட்டு எழுந்தாள். இந்நேரம் அறையை விட்டு வெளியே செல்லவும் அவளுக்கு மனதில்லை. மனதில்லை என்று சொல்வதை விட பயமாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்க்கலாம் என்று எண்ணி ஜன்னலை திறந்து பார்த்துக் கொண்டிருந்தாள். சுற்றி இருந்த காடு அவளுக்கு மேலும் பயத்தைத் தான் கொடுத்தது.
திரும்பி செல்லலாமா என்று அவள் எண்ணும் போதே விக்ரம் சிங் மற்றும் சுமன் ஒரு ஆளை தூக்கிச் செல்வது சுசீலா கண்ணில் பட்டது. கண்களை கூர்மையாக்கி பார்த்தாள். அவர்கள் தூக்கிச் சென்றது ஆளை இல்லை. பிணத்தை. ஆம் அவர்கள் தூக்கிச் சென்றவன் தலை தொய்ந்து கீழே விழுந்து கிடந்தது. அவன் முகம் முழுவதும் ரத்தமாக இருந்தது.
உடல் நடுங்க அந்த காட்சியைப் பார்த்தவாறே நின்றாள். சுமனும் விக்ரம் சிங்கும் அந்த ஆளை ஒரு மரத்தடியில் போட்டார்கள். அப்போதும் இன்னும் இரண்டு ஆட்கள் அங்கே வந்தனர். நால்வரும் எதுவோ பேசினார்கள்.
பின் அந்த ஆட்கள் அந்த மரத்தின் அருகிலே ஒரு குழியை தோண்டினார்கள். அவர்களின் செய்கையை நெஞ்சில் கை வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள் சுசீலா. படத்தில் கூட பார்த்திராத சம்பவங்கள் அனைத்தும் அவள் இருக்கும் வீட்டிலே நடந்தது.
சிறிது நேரத்தில் அங்கே குழியை தோண்டி அந்த ஆளை அதே இடத்தில் புதைத்து மண் கொண்டு மூடினார்கள்.
பின் சிறிது நேரம் கழித்து அவனை புதைத்த இடத்தின் மீது ஒரு மரக்கன்றை நட்டி வைத்தார்கள். பின் நால்வரும் அந்த இடத்தில் இருந்து மறைந்தார்கள்.
அதிர்ச்சியில் அதே இடத்தில் மடங்கி அமர்ந்தாள் சுசீலா. அவள் கண் முன் நடந்த மற்றொரு கொலை இது. ஏதோ ஆடு மாடு செத்தது போல ஒரு மனிதனைக் கொன்று அதுவும் வீட்டுக்குள்ளே புதைத்த நிகழ்ச்சி அவள் கண்களை விட்டு அகல மறுத்தது.
அங்கே இருக்கும் நூற்றுக்கணக்கான மரங்களின் அடியிலும் ஒரு உயிர் புதைந்திருக்கிறதா என்று எண்ணும் போதே அவள் உடல் பயத்தில் சிலிர்த்தது.
கண் முன் நடந்த கொடூரம், அவளுடைய நிலை அனைத்தும் சேர்ந்து சிறிது நேரத்திலே காய்ச்சல் வந்து விட்டது அவளுக்கு.
எப்போது உறங்கினாள் என்று கூட அவளுக்கு தெரியாது.
அடுத்த நாள் காலை “பையா இன்னும் சுசீலா கீழே வரலை. ரூமை தட்டினாலும் திறக்கலை”, என்றாள் மாயா.
புருவம் உயர்த்திய யுவன் “சாவி எடுத்துட்டு வா மாயா”, என்று சொல்லி சுசீலா அறைக்குச் சென்றான்.
அவனும் தட்டிப் பார்த்து திறக்காததால் சிறிது பதட்டம் தொற்றிக் கொண்டது. பின் மாயா சாவி எடுத்து வந்ததும் அறையைத் திறந்து இருவரும் உள்ளே சென்றார்கள். கட்டிலில் அவள் இல்லை.
அவள் எங்கே என்று அவர்கள் பார்க்கும் போது தரையில் கை கால்களைக் குறுக்கி யாருமே இல்லாத அநாதை போன்ற தோற்றத்தில் படுத்துக் கிடந்தாள் சுசீலா.
அவளின் அந்த நிலை அண்ணன் தங்கை இருவருக்கும் பழைய விஷயங்களை நினைவு படுத்த அடுத்த நொடி அவளை நெருங்கினார்கள்.
அவளை தன் மடி மீது போட்டுக் கொண்ட மாயா “பையா இவங்களுக்கு அதிகமா பீவர் இருக்கு”, என்றாள்.
“நீ போய் டாக்டரைக் கூப்பிடு மாயா”, என்று சொல்லிக் கொண்டே அவளை தூக்கி படுக்கையில் கிடத்தினான்.
அவள் உடல் நெருப்பாக சுட்டது. அவள் அருகே அமர்ந்தவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். “நீ யார் பெண்ணே? எதற்காக என்னுடைய கோட்டைக்கு வந்தாய்? ஏதோ உன்னைப் பார்க்கும் போது எனக்குள் உருவாகும் ஒரு மாய உணர்வுக்கு அர்த்தம் என்ன?”, என்று தனக்குள்ளே கேட்டுக் கொண்டான்.
மாயா டாக்டரை வரச் சொன்னதும் அவர் அரை மணி நேரத்தில் வந்தார். அவளை பரிசோதித்த டாக்டர் “சாதாரண காய்ச்சல் தான், ஏற்கனவே அவங்க உடம்பு ரொம்ப அசதில இருந்துருக்கு. கொஞ்ச நாளாவே சரியாவே தூங்கிருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன். இப்பவும் ஏதோ முனங்கிட்டு இருக்காங்க. நைட் அவங்க பயப் படுற மாதிரி ஏதாவது சம்பவம் நடந்ததா?”, என்று கேட்டார்.
இடவலமாக தலையசைத்த யுவனுக்கு சிந்தனை தலை தூக்கியது. அவள் ஜன்னல் ஓரத்தில் படுத்துக் கிடந்ததை வைத்து இரவு நடந்ததை அவள் பார்த்திருக்க கூடும் என்று யூகித்துக் கொண்டான்.
“அவளுக்காக மட்டும் இல்லை, இனி தனக்காகவும் இவள் இந்த வீட்டை விட்டுச் செல்லக் கூடாது”, என்று மனதுக்குள் முடிவெடுத்தவன் “சீக்கிரம் சரியாகிருமா டாக்டர்?”, என்று கேட்டான்.
“இஞ்ஜெக்சன் போட்டிருக்கேன். ஒரு ரெண்டு நாள்ல சரியாகிரும். பாத்துக்கோங்க”, என்று சொல்லி விட்டு சென்றார் டாக்டர்.
மருந்து மாத்திரைகளின் வீரியத்தால் அவள் தூங்கிக் கொண்டே இருந்தாள். அவளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டாள் மாயா.
காச்சலில் இருந்து எழுந்த சுசிலாவோ எந்நேரமும் எதையோ யோசித்துக் கொண்டே இருந்தாள். ஏனோ இங்கே இருப்பது ஆபத்து என்று அவள் மனது சொல்லிக் கொண்டே இருந்தது.
ஆனால் இங்கிருந்து தப்பிச் செல்ல அவள் உடல், மனம் இரண்டிலும் எந்த பலமும் இல்லை. அதனால் சோர்வாக அறைக்குள்ளே முடங்கிக் கிடந்தாள்.
யுவன் வரும் நேரம் மட்டும் தூங்குவது போல நடிக்க ஆரம்பித்தாள். ஏனோ அவனைப் பார்த்தால் ஏதாவது அவனிடம் உளறி விடுவோம் என்று எண்ணி அப்படி முடிவெடுத்தாள். கொலையை அவள் பார்த்தாள் என்று தெரிந்தால் அவள் உயிருக்கு ஆபத்து வரலாம் என்று எண்ணினாள்.
அவள் எழுந்து நடமாட மூன்று நாட்கள் ஆனது. அவளைக் காண வந்த சாரு கூட “என்னை கவனிக்க வந்துட்டு, நீ நோயாளியா ஆகிட்டியா?”, என்று கேட்டு புன்னகைத்தாள்.
சாரு மாயா அங்கே இல்லை என்றால் சுசீலா என்ன உணர்ந்திருப்பாளோ? அவர்கள் இருவரையும் காணும் போது கொஞ்சம் தைரியம் கிடைக்க பெற்றாள். ஆனால் யுவனைத் தான் அவளால் நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை.
அவனைக் கண்டாலே ஒரு பயம் உதயமானது. அவன் அவளைக் காண வரும் நேரம் எல்லாம் அவள் உறங்குவதை வைத்தே அவனை அவள் அவாய்ட் செய்வதை அவன் புரிந்து கொண்டான்.
அதில் அவனுக்கு சிரிப்பு வந்தாலும் “இவ எப்படி என்னை அவாய்ட் பண்ணலாம்?”, என்று கோபமும் வந்தது.
“எங்க போயிறப் போறா?”, என்று எண்ணிக் கொண்டு அவள் கண்ணாம்பூச்சி ஆட்டத்தை ரசித்தான்.
உடல் நிலை கொஞ்சம் சீரானதும் அறையை விட்டு வெளியே வந்த சுசீலா சாருவை நன்கு கவனித்துக் கொண்டாள். சாரு தூங்க ஆரம்பித்ததும் அந்த கோட்டைக்கு வெளியே செல்ல ஏதாவது வழி இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தாள்.
துப்பாக்கியை கையில் ஏந்திய பல பேர் அங்கே இருந்தாலும் அவர்கள் மேல் எழும் பயத்தை மறைத்துக் கொண்டு தோட்டத்தில் உலாப் போவது போல தப்பிக்க வழியைத் தேடினாள்.
மாயா கூட “குளிரில் வெளியே நீக்காதிங்க”, என்று சொல்லிப் பார்த்து விட்டாள். ஆனால் சுசீலா கேட்ட பாடில்லை. தன்னைக் கண்டு சுசீலா ஒதுங்குவதை புரிந்து கொண்டிருந்த யுவனும் அவள் கண் முன் வராமல் இருந்தான்.
அந்த கோட்டையை சுற்றி வந்து கோட்டைக்கு பின்னால் ஒரு கேட் இருப்பதை பார்த்த சுசிலாவுக்கு அங்கே காவலும் சிறிது குறைவாகவே இருப்பதாக தோன்றியது.
தப்பிக்க அது தான் சிறந்த வழி என்று அவள் மனம் சொன்னாலும் அறிவாளியான மூளையோ “அந்த வழி எங்கே செல்கிறது என்று தெரியுமா? அந்த வழி இதை விட ஆபத்தானதாக இருந்தால் என்ன செய்வாய்?”, என்று கேள்வி எழுப்பியது.
இதையே யோசித்துக் கொண்டு அவள் உள்ளே செல்லும் போது ரத்தக் களரியாக ஒருவன் அவள் எதிரே ஓடி வந்தான். இவள் இதே இடத்தில் அதிர்ந்து நிற்கும் போதே இவளைக் கடந்து அவன் ஓடினான். அவன் பின்னேயே விக்ரம் சிங் துப்பாக்கியுடன் அவனை துரத்திக் கொண்டு ஓடினான்.
அவனைப் பார்த்தாலே பரிதாபமாக இருந்தது. உடல் முழுவதும் காயமாக இருந்தது. அதீத பயம் எழுந்தாலும் சுசிலாவும் அவர்கள் ஓடிய பக்கம் ஓடினாள். அவள் கோட்டையை விட்டு வெளியே வரும் போதே இரண்டு காவலர்கள் விக்ரம் சிங் தலைமையில் அவனை தரதரவென்று இழுத்துக் கொண்டு மீண்டும் வீட்டுக்குள் சென்றார்கள்.
அந்த பாதாளத்துக்குள் தான் அவனை கொண்டு செல்கிறார்கள் என்று புரிந்தது. அவளை பார்த்து ஹிந்தியில் அவன் எதுவோ சொன்னான். அதே வார்த்தையை பல முறை சொன்னான்.
அதற்கு அவளுக்கு அர்த்தம் தெரிய வில்லை. உடனே மாயா அருகில் சென்று அவன் சொல்லிய வார்த்தைக்கு அர்த்தம் கேட்டாள்.
இவள் எதற்கு கேட்கிறாள் என்று தெரியாத மாயாவோ “அதுக்கு என்னைக் காப்பாத்துங்கன்னு அர்த்தம்”, என்று சொன்னாள்.
“கடவுளே அவனுக்கு ஆபத்து போல? ஏற்கனவே ரெண்டு கொலை பாத்தாச்சு. இவனையாவது காப்பாத்தணும். யுவன் கிட்ட சொல்லணும்”, என்று எண்ணி யுவனின் அறைக்கு சென்று பயத்துடன் அவன் அறைக் கதவை தட்டினாள்.
அங்கே அவன் இல்லை என்றதும் அந்த சுரங்க பாதையை நோக்கிச் சென்றாள். இவள் முதல் படியில் கால் வைக்கும் போதே அதே டுமீல் சத்தம் கேட்டு அவளை அடுத்த அடி எடுத்து வைக்க விடாமல் தடுத்தது.
“கொன்னுட்டாங்க., அவனைக் கொன்னுட்டாங்க. கடவுளே இவ்வளவு கொலைகாரங்களுக்கு மத்தியிலா நாம இருக்கிறோம்?”, என்று எண்ணி அவளுக்கு பயமாக இருந்தது.
ஒருத்தனைக் கொன்றதால் தான் அவளே காப்பாற்ற பட்டிருக்கிறாள் என்ற உண்மையை அப்போது மறந்து போனாள் சுசீலா.
கொலை செய்வதைக் கண்டவள் அதற்கான காரணத்தை அறிய முற்படவில்லை. அதனால் இங்கே இருந்து தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் அவளுள் ஆழமாக உருவானது.
உயிர் பயத்தில் அவன் ஓடிய ஓட்டம் நினைவில் வந்து அவளை நடுங்கச் செய்தது. இருக்கும் இடம் ஆபத்தானது என்று தீர்க்கமாக எண்ணினாள் சுசீலா.
அந்த சுரங்கப் பாதைக் கதவு அருகே நின்று கொண்டிருக்கும் போதே கீழே இருந்து இறங்கி மேலே வந்தான் யுவன். அவன் கையில் துப்பாக்கி இருந்தது.
“இவ்வளவு அழகா இருக்கும் யுவன் இவ்வளவு கொடூரமான கொலைகாரனா?”, என்று எண்ணி அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள் சுசீலா.
“நான் இங்கே இருந்து தப்பிக்க நினைச்சா எனக்கும் இதே நிலைமை தான். ஆமா, நாம ஏன் தப்பிக்கணும்? நான் ஊருக்கு போறேன்னு சொன்னா யுவனே அனுப்பி வச்சிருவானே? அவன் டிக்கட் போட்டுத் தறேன்னு தானே சொன்னான்? கண்டிப்பா அவன் கிட்ட சொன்னா அவனே என்னை அனுப்பி வச்சிருவான். மாமா ஊருக்கு போகாம வேற ஏதாவது ஊருக்கு போய் வேலை செஞ்சு பொழைச்சிக்கலாம்”, என்று முடிவெடுத்தவளுக்கு இங்க இருந்து போய் விடலாம் என்ற நம்பிக்கை வந்தது.
அவள் நம்பிக்கை நிஜமாகுமா? அவள் ஆசைப் படி யுவன் நாயக் அவளை அனுப்பி வைப்பானா?
காதல் தொடரும்….