குளிரினால் அவனது பூ போன்ற கன்னம் சிவந்து இருந்தது. அவன் சாதனாவை பார்த்து சிரித்தான். அவனை அவனது இருக்கையில் வைத்து குழந்தை வண்டியோடு பெல்ட் போட்டு விட்டு அந்த வண்டியை தள்ளியபடி நடந்தாள் சாதனா.
கலைவாணி அனைத்தையும் அதிசயித்து பார்த்தபடி நடந்து கொண்டிருந்தார்.
“என்னடி இது பூலோக சொர்க்கம் மாதிரி இருக்கு! எங்க பார்த்தாலும் கலர் கலரா லைட் பிரகாசமா எறிஞ்சிட்டு இருக்கு. எவ்வளவு அழகா இருக்கு !” என்றார்
“ஆமாம்மா. இது கிறிஸ்மஸ் டைம் இல்லையா? அதனால அப்படி தான் இருக்கும். எங்களுக்கு இதை பார்த்த சலிச்சு போச்சு.” என்றாள் சாதனா.
“சரி வாங்கமா. நான் உங்களுக்கு ஒரு ஸ்வெட்டர் வாங்கி தரேன்.” என்று அவரை அழைத்து கொண்டு ஒரு கடைக்கு சென்றாள் சாதனா.
அந்த கடையில் தொங்கிக்கொண்டிருந்த பல வண்ண ஸ்வெட்டர்களில் ஒரு சிகப்பு நிற ஸ்வெட்டரை காண்பித்தாள்.
“அம்மா உங்களுக்கு இது ரொம்ப நல்லா இருக்கும். பாருங்க. பெரிய காலர், ஸ்வெட்டர் முழுதும் பட்டன் வச்சு முட்டி வரைக்கும் நீட்டா இருக்கு. பாருங்க.” என்று காண்பித்தாள் .
அது அவருக்கு பிடித்துப்போனதால் வாங்கிக் கொண்டு வந்தாள். அதேநேரம் மற்றவர்களும் அந்த சோபாவிற்கு வந்திருந்தனர். அனைவரும் கிளம்பி வீடு வந்து சேர்ந்தனர்.
அனைவரும் ஒரு இடத்தில் சாப்பிட அமர்ந்தனர்.
அங்கு கிடைத்த பீசா, நூடுல்ஸ் வாங்கிக்கொண்டு வந்து மேஜையில் வைத்துவிட்டு நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்தனர். அப்போது ராஜேஷ் குளிர்ந்த குளிர்பானம் ஒன்று வாங்கி வந்தான். அதை எல்லோருக்கும் டம்ளரில் ஊற்றிக் கொடுத்தான்.
“அச்” என்று தும்மினான் சுகந்தன்.
சாதனா அவனை பார்த்தாள்.
அவனுக்கு ஜோதி ஒரு டம்ளரில் குளிர்பானம் எடுத்து வந்து கொடுத்தாள். அந்த குளிர்பானத்தை பார்த்ததும் சாதனா கந்தனை முறைத்தாள்.
மூக்கை உறிஞ்சிக் கொண்டிருந்தான் சுகந்தன்.
‘ஏற்கனவே சளி பிடிச்சி இருக்கு. இதுல கூல்ட்ரிங்ஸ் வேற.’ என்று அவனை பார்த்து நினைத்தபடி முறைத்தாள்.
அவள் பார்வையை பார்த்து அவள் மனதை புரிந்து கொண்டாலும் வேண்டும் என்று “ஜோதி ஒரு ஐஸ் கட்டி போடு.” என்று கேட்டு வாங்கி அதில் போட்டு அவள் கண் முன்னே குடித்தான்.
அவள் கோபம் அதிகமாவதை பார்த்து ரசித்தான்.
‘நீ மட்டும் நான் சொல்றதை கேட்க மாட்ட. நான் மட்டும் நீ சொல்றதை கேட்கணுமா? போடி” என்று மனதில் நினைத்துக் கொண்டு அவளை பார்த்தான்.
அவளுக்கு புரிந்தது ‘சரியான லூசு. எப்படியாவது போடா’. என்று கண்ணாலே பதில் கொடுத்தாள் அவள்.
அவன் அவள் பார்வையை அலட்சியப்படுத்தி மீண்டும் ஒரு டம்ளர் குளிர்பானம் ஐஸ் கட்டி போட்டு குடித்தான்.
“வா சதீஷ் வா. பாத்து எவ்வளவு நாளாச்சு. இப்போ எல்லாம் இந்தியா பக்கம் வருவதே கிடையாது.” என்றார் கலைவாணி தன் தங்கை சரஸ்வதி சதீஷ் இருவரையும் பார்த்து.
சரஸ்வதி தன் மகன் சதீஷ் உடன் சோபாவில் அமர்ந்தார்.
“எங்க வரணும்னு நினைச்சிட்டு இருப்பேன். ஆனால் ஏதாவது ஒரு வேலை வந்துடும். வரமுடிகிறது கிடையாது.” என்றார் சரஸ்வதி.
கலைவாணியின் தங்கை சரஸ்வதி தன் மகன் சதீஷ் உடன் ஹூஸ்டனில் வாழ்ந்து வருகிறார்.
“சரி என்னைப் பத்தி மட்டும் கேட்கிறாயே. நீ இங்க வந்து ரெண்டு மாசம் இருக்கும் இல்ல? நீ என்னை வந்து பார்க்க வேண்டியதுதானே?” என்று கேட்டார் சரஸ்வதி.
“நல்ல கதையா இருக்கே. நான் இங்க என் பொண்ணு டெலிவரி பார்க்க வந்தேன். அதை விட்டுட்டு ஊர சுத்த முடியுமா?” என்று கேட்டார்.
“ஆமாம் ஊரை சுற்றி தான் ஆகணும். இங்க வருகிற பெரியவங்க எல்லோரும் அப்படிதான். டெலிவரிக்கு வந்துட்டு வந்த வேலையை முடிச்சுட்டு அப்படியே ஊரை சுத்தி பார்த்துட்டு போவாங்க. நீயும் அப்படி தான் செய்யணும். அதைவிட்டுட்டு இப்படி வீட்டிலேயே இருப்பியா?” என்று கேட்டார் சரஸ்வதி.
“நல்லா கேளுங்க சித்தி. நானும் அதை தான் சொல்லிட்டு இருக்கேன். அம்மா கேட்கவே மாட்டேங்கிறாங்க. நீங்க சொன்னாலாவது கேட்கிறார்களாnu பார்ப்போம்.” என்று அங்கு வந்தாள் சாதனா.
“சாதனா அதுதான் எங்க கிட்ட சொல்லிட்ட இல்ல. நாங்க பெரியம்மாவை கூட்டிட்டு போய் ஊரை சுற்றி காட்டி கூட்டிட்டு வருகிறோம்.” என்றான் சதிஷ்.
“ப்ளீஸ். செய் அண்ணா.” என்றாள் அங்கு வந்த சஞ்சனா.
சதீஷ் சாதனாவுக்கு இளையவன் சஞ்சனாவுக்கு மூத்தவன்.
“சரி நீ டிரஸ் எடுத்து வச்சுக்கிட்டு ஒரு வாரம் என் கூட தங்க ரெடியா இருக்கியா?” என்று கேட்டாள் சரஸ்வதி.
“ரெடியா தான் இருக்கிறேன். சாதனா ஒருவாரம் ஒர்க் பிரம் ஹோம் பண்றா. அதனால நான் அங்கு வந்து தங்கறேன்.” என்றார் கலைவாணி அரைமனதாக.
“அம்மா நீங்க எங்களை பற்றி யோசிக்காமல் ஜாலியா போயிட்டு வாங்க.” என்றாள் சஞ்சனா.
“சரிடி” என்று அவளிடம் சொல்லிவிட்டு
“சரிப்பா. சதீஷ், சரசு. வாங்க சாப்பிடலாம்.” என்று அழைத்தார்.
கலைவாணி.
அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
“அம்மா ஹூஸ்டன்ல மீனாட்சி அம்மன் கோயில் ரொம்ப நல்லா இருக்கும். நீங்க கண்டிப்பா போயிட்டு வாங்க. சதீஷ் கூட்டிட்டு போயிட்டு வா.” என்றாள் சாதனா.
“மீனாட்சியம்மன் கோயில் எங்க வீட்ல இருந்து பக்கம்தான். தினமும் கூட கூட்டிட்டு போயிட்டு வரேன்.”. என்றான்
“நான் கூட கேள்விபட்டிருக்கேன். அந்த கோயிலை கண்டிப்பா பார்த்துட்டு தான் ஊருக்குப் போகனும்.” என்றார் கலைவாணி.
“மீனாட்சி அம்மன் கோயில் மட்டுமில்ல இன்னும் நிறைய இடம் பார்க்க இருக்கு. நாம போய் பார்க்கலாம்.” என்றார் சரஸ்வதி.
“சுடிதார் எடுத்துட்டு வந்திருக்கியா?” என்று கேட்டார் சரஸ்வதி.
“எடுத்துட்டு வந்திருக்கேன். ஏன் கேட்கிற?”
“அது வசதியாக இருக்கும். அதனால சொன்னேன். காட்டன் புடவையை இந்த குளிர்ல காய வைக்கிறது கஷ்டம். டிரைவர்யல போட்டாலும் வீணாப் போயிடும். அதனால புடவை எடுத்துக் கொள்வதா இருந்தால் சிந்தடிக் புடவை எடுத்துக்கோ.” என்றார் சரஸ்வதி.
“சஞ்சனா இந்தியால இருந்து நான் கிளம்பும்போதே சொல்லிட்டா. அதனால நான் அதுக்கேத்த மாதிரி தான் டிரஸ் எடுத்துட்டு வந்திருக்கேன்.” என்றார் கலைவாணி.
“குட் எல்லாத்துக்கும் பிரப்பார்டா இருக்கீங்க.” என்றான் சதீஷ்.
பேசியபடி சாப்பிட்டு முடித்தனர்.
அப்போதுதான் விக்ரம் வீட்டுக்குள் நுழைந்தான்.
விருந்தினர்களை வரவேற்று நலம் விசாரித்து சிறிது நேரம் பேசி விட்டு சென்றான்.
அன்று இரவு சரஸ்வதி, கலைவாணி இருவரும் அவர்களுடைய சிறுவயது கதைகளை பேசியபடி ஒரு அறையில் உறங்கினர்.
சதீஷ் முதல் தளத்தில் இருந்த அறையில் உறங்கினான்.
அடுத்த நாள் காலை கலைவாணி, சரஸ்வதி, சதீஷ் மூவரும் சதீஷின் காரில் ஏறி ஹூஸ்டன் நோக்கி பயணித்தனர்.