அத்தியாயம் 4
காதல் ஒரு எழுத்து
பிழை, அது எல்லோர்
வாழ்விலும் வந்தே தீரும்!!!
தங்கள் வீட்டில் நடக்கும் கொலைகளை பற்றி சுசிலாவுக்கு தெரியுமாதலால் அவளை இனி எங்கேயும் விடக் கூடாது என்று யுவன் முடிவெடுத்திருந்தான்.
அவன் எண்ணத்தைப் பற்றி அறியாத சுசிலாவோ அவனிடமே இங்கிருந்து செல்ல போகிறேன் என்று சொல்ல நினைத்தாள்.
சுரங்க வாசலுக்கு சற்று தள்ளி அவள் நிற்பதைப் பார்த்த யுவன் “சுசீ, உன்னை இங்க வரக் கூடாதுன்னு சொன்னேன் தானே? திருப்பி திருப்பி இங்க எதுக்கு வர?”, என்று கேட்டான். அவன் குரலில் சிறிது கடுப்பும் இருந்தது.
அமைதியாக பேசுவான். அப்போது அவனிடம் உதவி கேட்க வேண்டும் என்று அவள் எண்ணியிருக்க அவனுடைய கடுமை அவளுக்கு சிறிது தயக்கத்தைக் கொடுத்தது.
அவள் பயந்து போய் அவனைப் பார்க்கவும் முக பாவத்தை நொடியில் மாற்றியவன் “என்ன யோசனை மாமி உனக்கு? நான் கேள்வி கேட்டுட்டு இருக்கேன்? நீ பதிலே சொல்லாம இருக்க?”, என்று புன்னகையுடன் கேட்டான்.
அவளுக்கோ எப்படி ஆரம்பிக்க என்று தெரியாததால் அவனையே பார்த்த படி இருந்தாள்.
அவள் முகத்தில் இருந்த உணர்வுகள் அவனுக்குள் சந்தேகத்தை கிளப்ப “என்கிட்ட ஏதாவது பேசனுமா சுசீ?”, என்று கேட்டான் யுவன்.
“ஆமா”, என்னும் விதமாய் தலையை அசைத்தாள் சுசீலா.
“சரி வா”, என்று சொல்லி மொட்டை மாடிக்கு அவன் முன்னே செல்ல அவன் பின்னேயே சென்றாள் சுசீலா. ஜில்லென்ற பனிக் காற்று உடலைத் தீண்ட அந்த ஏகாந்தத்தை ரசித்தான் யுவன்.
ஆனால் அவன் மன நிலைக்கு எதிர் மாறான பயந்த மனபாவத்துடன் நின்றாள் சுசீலா. சுற்றி இருந்த ஏகாந்தம் அவள் மனதை நிறைக்க வில்லை.
இங்கிருந்து செல்ல எப்படி அவனிடம் கேட்க என்ற யோசனை மட்டும் தான் அவளுக்குள் இருந்தது.
“என்ன ஆச்சு சுசீ? இங்க இருக்க உனக்கு பிடிக்கலையா? உனக்கு இங்க என்ன குறை?”, என்று கேட்டான் யுவன்.
அவள் மனதில் இருப்பதை உணர்ந்து அவனாகவே பேச்சை ஆரம்பித்ததும் நிம்மதியானவள் “குறை ஒண்ணும் இல்லை. இத்தனை வருஷம் எங்க பக்கமே இருந்துட்டு இங்க எனக்கு வித்தியாசமா இருக்கு. நான் ஊருக்கே போயிரட்டுமா?”, என்று கேட்டதும் அவன் முகத்தில் சிறு கோபம் உருவானது.
அந்த கோபத்தைக் கண்ட சுசிலாவோ “கடவுளே என்ன இப்படி இவன் முகம் போகுது? என்னை இங்க இருந்து விடுவானா இவன்?”, என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.
“இங்க இருந்து எங்க போக போற சுசீ? உன்னை பணத்துக்காக வித்தாங்களே அந்த மாமா அத்தைக் கிட்ட போக போறியா?”, என்று சீற்றத்துடன் வந்தது அவன் கேள்வி.
“ஐயோ, இல்லை இல்லை. அங்க போனா அதை விட முட்டாள் தனம் வேற இல்லை. நான் அங்க போக நினைக்கலை”, என்று அவசரமாக பதில் சொன்னாள்.
“குட், வேற எங்க போக நினைக்கிற?”
“எங்கயாவது,, ஏதாவது வேலைல சேந்து என் வாழ்க்கையை ஓட்டிருவேன்”
“எங்க அம்மா நீ வந்ததுக்கு அப்புறம் தான் எழுந்து நடமாடவே ஆரம்பிச்சிருக்காங்க. எப்பவும் சுசீ சுசீன்னு தான் அவங்க பேசுராங்க. மாயாவும் இப்ப உன் மேல ரொம்ப அன்பு வச்சிருக்கா. நானும்… சரி அதை விடு. இப்படி எல்லாரையும் கஷ்ட படுத்திட்டு போக போறியா?”
“இல்லை… அது வந்து… நான்… இங்க”
“நான் பேசி முடிச்சிறேன் சுசீ, நீ இங்க வந்த அன்னைக்கு நான் உன்கிட்ட கேட்டேன். எந்த ஊருக்கு போகணும்னு சொல்லு, நான் உன்னை அனுப்புறேன்னு சொன்னேன். அப்ப நீ எனக்கு யாருமே இல்லைன்னு சொல்லிட்டு இப்ப கிளம்ப போறேன்னு சொன்னா என்ன அர்த்தம்?”
“இங்க இருக்க ….”
“இங்க இருக்க பிடிக்கலைன்னு சொல்லப் போறியா? அதான் ஏன்? எங்க அம்மாவை பாத்துக்குறேன்னு சொன்ன நீ, இங்க இருந்து போக காரணம் என்ன?”
“எனக்கு இங்க இருக்க பயமா இருக்கு”
“என்ன பயம்?”
“இங்க நிறைய கெட்ட விஷயங்கள் தான் நடக்குது. கொலை… எல்லாம்…”
“நினைச்சேன்.. இதை உன் வாயால வர வைக்க தான் இவ்வளவு நேரம் பேசுனேன். சோ நீ இங்க நடக்குற கொலையை எல்லாம் பாத்துருக்க அப்படித் தானே?”
அவனுடைய உள்குத்து புரியாமல் “ஆமா”, என்றாள் சுசீலா.
“அப்படி நாங்க செய்ற கொலையை எல்லாம் பாத்த உன்னை நான் எப்படி வெளிய விடுவன்னு நினைச்ச?”, என்று அவன் கேட்டதும் அவளுக்கு திகில் பிடித்தது.
“ஐயையோ, நாமலே எல்லாம் உளறிட்டோமே?”, என்று மனதுக்குள் எண்ணியவள் “நான்… நான்”, என்று எதையோ அவனுக்கு உணர்த்த நினைத்தாள்.
“இங்க பாரு சுசீ. இது இந்த யுவனோட கோட்டை. இங்க யார் உள்ள வரலாம்னு நான் தான் முடிவு பண்ணுவேன். அதே மாதிரி இங்க இருந்து யார் வெளிய போகணும்னு நான் தான் முடிவு செய்யனும். எங்களைப் பத்தின எல்லா ரகசியங்களையும் நீ இப்ப தெரிஞ்சிக்கிட்ட. அதனால உன்னை இங்க இருந்து அனுப்ப முடியாது”, என்று அவன் எச்சரித்ததும் “யுவன்”, என்று கத்தினாள் சுசீலா.
“பாரு டா மாமிக்கு சத்தம் எல்லாம் பலமா வருது”, என்று நக்கலாக சொன்னான் யுவன்.
“இங்க பாருங்கோ. நான் வெளிய போய் யார் கிட்டயும் எதையும் சொல்ல மாட்டேன். நான் இந்த ஊரை விட்டே போயிறேன். என்னை விட்டுருங்கோ. இங்க எனக்கு பயமா இருக்கு. ஒரே ரத்தமா இந்த இடம் இருக்குற மாதிரி எனக்கு தோணுது. அருவருப்பா இருக்கு”
“நாங்க பண்ணுறதுக்கு எல்லாம் காரணம் இருக்கு சுசீ. அதை ஒரு நாள் உன்கிட்ட சொல்றேன். அது வரை நீ இங்க இருந்து போக முடியாது. போகவும் விட மாட்டேன்”
“இது அராஜகம், நான் நீங்க நல்லவங்கன்னு நினைச்சேன்”
“ஒரு கொலை பண்ணி தான் உன்னை இங்க நான் கூட்டிட்டு வந்தேன். அப்படி அந்த சரண் ரெட்டியை கொல்லாம விட்டுருந்தா அவன் உன்னை எங்கயாவது வித்து நீ பல பேர்க்கு இரையாகிருப்ப. அப்படி நடக்காம உன்னைக் கூட்டிட்டு வரதுக்கு தான் அந்த கொலை. உனக்காக கொலை பண்ணப்ப உனக்கு ஒண்ணும் தெரியலை. அதே வேற காரணம்னா உன்னால ஏத்துக்க முடியலையா?”
“நல்லதோ கெட்டதோ எனக்கு இதெல்லாம் பாக்க பிடிக்கலை. நான் இது வரை ஒரு எறும்பைக் கூட கொன்னது கிடையாது. ஆனா இங்க ஆட்களையே கொன்னு மரத்துக்கு கீழே புதைக்கிறீங்க. இங்க இருக்குறதுக்கு எனக்கு பயமா இருக்கு. என்னை வெளிய விடுங்க”, என்றவளின் குரலில் பிடிவாதம் தெரிந்தது.
“நீ என்ன சொன்னாலும் நீ இங்க இருந்து போக முடியாது”, என்று அவனும் அதே தீவிரத்துடன் உரைத்தான்.
“உங்களை கெஞ்சிக் கேக்குறேன். என்னை என் வழில போக
விடுங்க”
“நீ இங்க இருக்குற வரைக்கும் தான் உனக்கு பாதுகாப்பு. நீ வெளிய போனா கொத்திட்டு போக ஆள் இருக்காங்க. அதே மாதிரி நீ என்னைப் பத்தி வெளிய சொன்னா என்னோட நிலைமையும் மோசமா ஆகிரும். அதனால நீ இனி எங்கயும் போக முடியாது. என் பேச்சைக் கேட்டு இருந்தா, நீ இந்த கோட்டைக்குள்ள எங்க வேணும்னாலும் நடமாடலாம். அப்படி இல்லைன்னா உன்னை பாதாளச் சிறைல தான் போடுவேன். உனக்கு எப்படி விருப்பமோ அதை நீயே முடிவு பண்ணிக்கோ”
“சீ நீயெல்லாம் ஒரு மனுசனா? விருப்பமில்லாத பொண்ணை அடைச்சு வைக்க நினைக்கிற?”, என்று மரியாதை இல்லாமல் பேசினாள் சுசீலா.
“இதுக்கு மேல உனக்கு விளக்கம் சொல்ல எனக்கு விருப்ப மில்லை. நீ இந்த கோட்டைக்குள்ள சுதந்திரமா நடமாடனுமா? இல்லை ஒரு ரூம் குள்ள கைதியா இருக்கணுமான்னு நீயே முடிவு பண்ணிக்கோ”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.
அவனிடம் பேசியது வீண் என்று புரிந்தது. இனி எப்படி இங்கிருந்து தப்பிக்க என்று தான் யோசிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.
அடுத்த நாள், தன்னுடைய அறையிலே அமர்ந்து யோசனை செய்து கொண்டிருந்தாள் சுசீலா. புலிக்கு பயந்து சிங்கக் குகையில் மாட்டியது போல இருக்கும் தன்னுடைய நிலையைக் கண்டு அவளுக்கு கவலையாக இருந்தது.
அப்போது அவளுக்கு ஒரு வேலையாள் உணவைக் கொண்டு வர அதைச் சாப்பிட மனதில்லாமல் திருப்பி அனுப்பி விட்டாள். உணவு திரும்பி வந்ததும் மாயா அவளைத் தேடி வந்தாள்.
இருக்கும் மன நிலையில் சுசிலாவுக்கு மாயாவை பார்க்க பிடிக்க வில்லை என்றாலும் மாயாவிடம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
“ஏன் சுசீ சாப்பிடலை? உடம்புக்கு ஏதாவது சரியில்லையா?”, என்று அக்கறையாக கேட்டாள் மாயா.
அந்த அக்கறை மனதைச் சுட்டாலும் “எனக்கு பசியில்லை”, என்று முடித்துக் கொண்டாள். அதில் முகம் சுணங்கிப் போன மாயா திரும்பிச் சென்று விட்டாள்.
மாயா முகம் சோர்ந்து போனது சுசிலாவுக்கே ஒரு மாதிரியாக இருந்தது. இங்கே வந்ததில் இருந்து புது உடை, புது வகையான உணவுகள் என்று பார்த்து பார்த்து ஒரு தாய் போல் பார்த்துக் கொள்ளும் மாயாவின் மனதை கஷ்டப் படுத்தியது எண்ணி மிகவும் வருந்தினாள் சுசீலா.,
இது எல்லாத்துக்கும் காரணமான யுவனின் மேல் கோபமாக வந்தது. காப்பாத்துங்க காப்பாத்துங்க என்று கத்திய ஆளையும் அவர்கள் தோட்டத்திலே புதைத்து அதன் மேல் மரக்கன்று நடுவதையும் பார்த்தவளுக்கு யுவனின் மேல் இருந்த மதிப்பு படிப்படியாக சரிந்தது.
அவளை எப்போதும் ஈர்க்கும் அவனுடைய நீல விழிகள் கூட இப்போது ஆபத்தாக தெரிந்தது.
எப்படியாவது இங்கிருந்து தப்பிக்க வேண்டும் என்று குறிக்கோளாக கொண்டிருந்தாள். ஆனால் அது எப்படி என்று தான் அவளுக்கு தெரியவில்லை.
எந்நேரமும் கோட்டையைச் சுற்றி ஆட்கள் காவல் இருக்க அவளால் எப்படி அங்கிருந்து செல்ல முடியுமாம்? அப்படியே கோட்டைக்கு வெளியே சென்றாலும் சுற்றி இருக்கும் காட்டில் அவளால் ஓட தான் முடியுமா?