அத்தியாயம் 26(2)
புடவையைக் கையில் வைத்துக்கொண்டு நுனியை தேடிக் கொண்டிருந்த, அவளின் தோற்றம், இவனுக்குள் சில ஹர்மோனல் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இதற்கு முன்பு திருமணம் செய்து இல்வாழ்க்கை வாழ்ந்தவனாக இருந்தாலும், யாழினி அல்லாமல் வேறு பெண்ணை, அதுவும் தன் மனதுக்கு நெருக்கமாக்கி கொண்டிருக்கும் பெண்ணை இப்படிப் பார்க்கவும், அவனுக்கும் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்பட, அப்படியே அவன் நின்று கொண்டிருக்க, பக்கவாட்டில் கெளதம் நின்றுகொண்டிருப்பதால், புடவை கட்டும் ஆர்வத்தில் அவனை மிருதுளா கவனிக்கவில்லை.
தன்னை மீறி அவளிடம் மூழ்கி போயிருந்த கெளதமின் கைகள் பட்டு, பக்கத்து ஷெல்பில் இருந்த தேஜாவின் விளையாட்டுப் பொம்மை கீழே விழவும் தான், திடிக்கிட்டு திரும்பி பார்த்த மிருதுளா, அங்கே கௌதமை சற்றும் எதிர்பார்க்கவில்லை. தான் இருக்கும் நிலைமையை உணர்ந்தவள், சட்டென்று புடவையை எடுத்துத் தன்னை மறைத்துக் கொண்டவள், வெட்கத்தில் அவனுக்கு முதுகுகாட்டி நின்றுகொள்ள, அதன் பின்பே நினைவுக்குத் திரும்பிய கெளதம், சங்கடத்துடன் “சாரி ரிது.” என்றவன், விறுவிறுவென்று அறையை விட்டு வெளிய போக எத்தனிக்க, “ஒரு நிமிஷம்ங்க.” என்ற மிருதுளாவின் குரலில் சடன் பிரேக் போட்டு நின்றவன், மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு அசையாமல் நிற்க, அவளோ, “மாமா போன் பண்ணாங்க. டைம் ஆச்சுன்னு சொன்னதால, பாப்பாவை கூட்டிட்டு ஆராவும் ஜெய்யும் கிளம்பச் சொல்லிட்டேன். நீங்களும் நானும் பைக்ல வரோம்ன்னு சொல்லிட்டேன். நீங்க கொஞ்சம் ஹால்ல வெயிட் பண்றீங்களா, நான் ட்ரெஸ் சேஞ் செஞ்சுட்டு வரேன்.” என்று தயங்கி சொல்லவும், “ம்.” என்று அவளுக்குப் பதில் சொல்லிவிட்டு, அறை கதவை சாத்திவிட்டு, ஹாலுக்கு வந்த பின்பு தான் கௌதமுக்கு மூச்சே வந்தது.
“ஊப்!!” என்று பெருமூச்சை விட்டவன், வெட்க புன்னகையுடன் மிருதுளாவின் நினைவேலேயே ஹால் சோபாவில் அமர்ந்து அவளுக்காகக் காத்திருந்தான். மிருதுளாவுக்கும் கெளதம் முன்பு தான் நின்றிருந்த நிலையையை நினைத்து, வெட்கம் பூக்க, அந்தப் புன்னகையுடனே தயாரானாள். ஆனால் இவர்களைச் சோதிக்க வேண்டும் என்றே, அவள் ப்ளவ்ஸ் பின்பக்கம் கட்டி இருக்கும் கயிறு கழன்று கொள்ளவே, ‘இப்போ தானே கஷ்டப்பட்டுப் போட்டேன். மறுபடியும் கழன்ட்டிடுச்சே!‘ என்று எரிச்சலாக இருந்தது மிருதுளாவிற்கு. மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பார்த்தவள், முடியாமல் போகவே, வேறு வழியில்லாமல், கௌதமை அழைக்க முடிவு செய்தாள்.
மிருதுளா கதவை திறக்கவும், புறப்பட நினைத்து, கெளதம் எழுந்துகொள்ள, அவளோ, உள்ளே நின்றுகொண்டு, “ஒரு நிமிஷம்ங்க. இந்த முடிச்சை கொஞ்சம் போட்டு விடுறீங்களா?!” என்று தயங்கி கேட்க, “ம்.” என்றவன் உள்ளே செல்ல, கண்ணாடி முன்பு அவள் நின்றிருக்க, அவள் அருகில் சென்றவன், என்ன விவரம் என்று அவள் சொல்ல, சிறு தயக்கத்துக்குப் பின், அவள் சொன்னதைச் செய்ய,
கையிற்றைப் பிடித்திருக்கும் அவன் விரல்களின் உரசலில், மிருதுளாவுக்குள் ஒருவித உணர்வை ஏற்படுத்த, இங்கே கௌதமுக்கோ, அவ்வளவு அருகில் நின்றுகொண்டிருந்த மிருதுளாவின் கூந்தல் வாசமும், அவளின் உடல் கூச்சமும், இவனுக்குள்ளும் புதுவித உணர்வை கொடுக்க, ஏனோ இன்று இந்த அருகாமை இருவருக்குள் ஒருவித உணர்வை ஏற்படுத்தியது. கௌதமிற்கு விரல் நடுங்க, மிருதுளாவுக்கு உடல் நடுங்கியது. அந்த அவஸ்தையுடனே ஒருவழியாக முடிச்சை போட்டு முடித்தவன், நகராமல் அவள் அருகில் இன்னும் நெருங்கியவன், பின்னில் இருந்து அவளை அணைக்க, அதில் இன்னுமே நடுங்கியவள், அவன் கைகளுடன் தன் கைகளைக் கோர்க்க, அவள் விரல்களை இறுக பற்றியவன், மெல்ல குனிந்து அவள் கழுத்து வளைவில் மிருதுவாக இதழ் பதிக்க, அதில் கூசி சிலிர்த்தவள், கண்களை இறுக மூட, அடுத்து கௌதமின் இதழ்கள் அவளின் கன்னத்தில் ஆழமாகப் பதிய, கூச்சத்தில் அவள் உடல் நடுங்க ஆரம்பித்தது. மேலும் கெளதம் முன்னேறும் முன், அவனின் மொபைல் ஒலி எழுப்ப, அதில் சுயநினைவு பெற்றவன், சட்டென்று அவளிடம் இருந்து விலகி நின்றான்.
ஜெய்தான் அழைத்திருந்தான். “ஹலோ! அண்ணா கிளம்புட்டீயா? எங்க இருக்க?!” என்று அந்தபக்கம் அவன் கேட்க, புன்னகையுடன் பின்னந்தலையை அழுத்த கோதியவன், “இதோ கிளம்பப் போறோம் டா. இன்னும் டென் மினிட்ஸ்ல வந்துடுவேன்.” என்று சொல்ல, “என்னண்ணா இன்னும் டென் மினிட்சா?! நீ எப்பவோ கிளம்பி இருப்பன்னு நினைச்சேன்.” என்று ஜெய் சொல்ல, சிரிப்புடன் மிருதுளா பக்கம் திரும்பிய கெளதம், அவளைப் பார்த்துக்கொண்டே, “அது, கிபிட் தேடிட்டு இருந்தேன் டா.” என்று சொல்ல, அண்ணனின் குறிலில் தெரிந்த வெட்கம், ஜெய்க்கு புரிய, சத்தமில்லாமல் சிரித்தவன், “அண்ணா, கிப்டை தேடுறியோ இல்லை….” என்று சொல்லிவிட்டு சிரித்தவன், “எதுனாலும் சீக்கிரம் முடிச்சிட்டு வாண்ணா. இங்க டைம் ஆச்சு. அத்தோட மாப்பிளையோட கிப்ட் மறக்காம கொண்டு வந்துடு ண்ணா. வேற நினைப்புல மறந்துடாத.” என்றவன் அதே சிரிப்புடன் போனை வைக்க, இங்கே கௌதமுக்கோ, தம்பியின் கிண்டலில் இன்னும் சிரிப்பு வர, என்னவென்று கேட்ட மிருதுளாவிடம் அவனின் கிண்டலை சொன்னவன், “மத்த வேலையை அப்புறம் வச்சுகோங்க. மொதல்ல சீக்கிரம் வரச்சொல்றான்.” என்று சொல்லிவிட்டு கண்ணடிக்க, அவன் பார்வை சொன்ன கிண்டலில், வெட்கத்தில் தலை குனிந்துகொண்டாள் மிருதுளா.
“சீக்கிரம் கிளம்புவோம் அம்மு. இப்படி நீ நின்னுட்டு இருந்தா, அப்புறம் இங்கேயே டேரா போட்டுடுவேன் நான். அப்புறம் நீ தான் பாவம்.” என்று அவளை மேலும் வம்பிழுக்க, அவளோ அடுத்த நிமிடம் ஹாலுக்குச் சென்றிருந்தாள். இப்படியே வெட்க சிரிப்புடன், ஒருவழியாக வீட்டில் இருந்து கிளம்பினர் இருவரும்.
முதல் முறை, மிருதுளாவுடன் பைக்கில் செல்லும் கௌதம், அந்தப் பயணத்தை மிகவும் ரசித்து அனுபவித்தான். இவனுடன் அவசர கூட்டணி வைத்துக்கொண்ட சாலையும், ஆங்காங்கே ஸ்பீட் பிரேக்கை வைத்து, இருவருக்குள்ளும் நெருக்கத்தை அதிகரித்தது. ஒரு திருப்பத்தில், மிருதுளா தடுமாற, வண்டியை நிறுத்தியவன், தோளில் இருந்த அவள் கையை எடுத்து தன் இடுப்பை சுற்றி வைத்துகொண்டான். ‘டேய்! டேய்! ரொம்ப ஓவரா செய்ற!’ என்று அவன் மனசாட்சி கிண்டல் செய்ததையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், நேற்று திருமணவானவன் போல, விசில் அடித்துக்கொண்டே வண்டியை ஓட்டிச்சென்றான்.
ஒரு வழியாக மண்டபம் வந்து சேர, கௌதமை, ஜெய் கிண்டல் அடிக்க, ஆராவோ, “என்ன அக்கா, திடீர்ன்னு உன் கன்னத்தில பிங்க் பல்ப் எரியுது. அத்தான் கடிச்சுவச்சுட்டரா!!” என்று மிருதுளாவை ஒட்டி எடுத்தாள். மணமக்கள் அவர்களா இல்லை கெளதம் – மிருதுளாவா என்று ஒரு நொடி குழம்பும் அளவுக்கு, இருவரின் முகத்திலும் அவ்வளவு வெட்கம். இப்படியே இவர்களுக்குள்ளான கிண்டலில், அங்கே மணமகன், மணமகள் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவிக்க, ஒருவழியாகத் திருமணம் முடிந்தது.
எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு, மாலை வீட்டுக்கு வந்து சேர்ந்தனர் ஐவரும். வரும்பொழுது, ஆராவும், ஜெய்யும் பைக்கில் வந்துவிட, மிருதுளாவும் கௌதமும் காரில் வந்தனர். காலையில் இருந்தே கௌதமின் பார்வை தன்னைத் தொடர்வதைப் பார்த்துக்கொண்டிருந்த மிருதுளாவுக்குள் அவளையும் அறியாமல், ஒருவித புது உணர்வு மனதுக்குள் ஓடியது.
பெரியவர்கள் அங்கேயே தாங்கிக்கொள்ள, இளையவர்கள் மட்டும் வீடு திரும்பினர். இரவு உணவை முடித்துக்கொண்டு, ஆராவும் ஜெய்யும், சித்ரா சொன்னதின் பேரில், வீட்டை பார்த்துக்கொள்ளவென, ஆராவின் தாய் வீட்டில் அன்று இரவு தங்கிக்கொள்ள, இங்கே இரவு உணவை சாப்பிட்டுவிட்டு டி.வி பார்க்கச் சென்றுவிட்டான் கெளதம். அதன் பின் அனைத்தையும் எடுத்து ஒதுங்க வைத்துவிட்டு, மிருதுளா தூங்கபோகும் வரை அவன் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. ஆனால் அவன் பார்வை மட்டும், இவளின் முகத்தில் தான் நிலைத்திருந்தது. அதை மிருதுளாவும் உணர்ந்தாள்.
ஒரு வித படப்படப்புடேன் அறைக்குள் சென்ற மிருதுளா, குழந்தையைக் கட்டிலில் படுக்கவைத்துவிட்டு, உடை மாற்றி வந்தவள், காலையில் போட்டுச் சென்றிருந்த நகைகளைக் கழற்றிக் கொண்டிருக்க, அப்பொழுது அறைக்குள் நுழைந்த கெளதம், நேரே சென்று தேஜாவை கட்டிலில் இருந்து தூக்கியவன். அவள் உறக்கம் களையாமல், கட்டிலின் அருகில் இருந்த கரிப்பில் அவளைப் படுக்கவைக்க, இவனின் செயலை பார்த்துக் கொண்டிருந்த மிருதுளாவிற்கு, ஏனோ காரணமில்லாமல் கைகள் சில்லிட ஆரம்பித்தது. நகைகளைப் பெட்டியில் வைத்து எடுத்துப் பீரோவில் வைத்துவிட்டு இவள் திரும்ப, அவளின் வெகு அருகில் நின்றிருந்தான் கெளதம்.
ஒன்றும் சொல்லாமல் தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவனின் பார்வை வீச்சை தாங்காமல் மிருதுளா தலை குனிய, கெளதமோ, அவள் முகத்தை நிமிர்த்தி, அவள் நெற்றியில் இதழ் பதித்தவன், அவள் கைகளைத் தன் கைகளுக்குள் வைத்துகொண்டு, சில நொடி இடைவெளிக்கு பிறகு, “அம்மு, நான்….என்….எனக்கு…இப்போ நீ வேணும்னு தோணுது. உனக்கு ஓகே வா? வேண்டாம்ன்னா…….” என்றவனின் இதழ்களைத் தன் கையால் மூடிய மிருதுளா, “என்னைக்கு நான் உங்க மனைவின்னு மனசால சொன்னீங்களோ, அப்பவோ என் மனசில நீங்க என் கணவரா ஆகிட்டீங்க. இதுக்கு மேல உங்களுக்கு இந்தத் தயக்கம் வேண்டாங்க. எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.” என்று குனிந்த தலையுடன் சொல்ல, “தேங்க்ஸ் அம்மு.” என்றவன் அவளை இறுக அணைத்துக் கன்னத்தில் ஆழமாக இதழ் பதிக்க, அவளோ அவன் மார்பிலேயே முகம் புதைத்துக்கொண்டாள். அதில் சிரித்தவன், அவள் முகத்தை நிமிர்த்தி, மெல்ல அவள் இதழில் தன் இதழை பதிக்க, அவள் கைகளும் இவனை இறுக அணைத்துக்கொள்ள, அழகிய புரிதலுடனான தாம்பத்தியம் அங்கே அரங்கேறியது.
அடுத்த நாள் காலை தலைக்குக் குளித்துவிட்டு, தேஜாவை எழுப்ப வந்த மனைவியையே பார்த்துக்கொண்டிருந்த கௌதமின் முகத்தில் தெரிந்த, காதலில், கன்னங்களில் செம்மையைப் பூசிக்கொண்ட மிருதுளா, “என்ன அப்படிப் பார்த்துட்டு இருக்கீங்க?!” என்று குரலே எழுப்பாமல் கேட்க, எழுந்து அமர்ந்தவன், தீவிரமாக யோசிப்பது போலப் பாவனைச் செய்ய, அதில் லேசாகக் கலக்கம் அடைந்த மிருதுளா, அவன் பக்கத்தில் வந்து, “என்னங்க ஆச்சு?! ஏன் உங்க முகம் ஒரு மாதிரி இருக்கு?!” என்று கேட்க, “அதுவா…” என்றவன், சட்டென்று அவளின் கைகளைப் பிடித்து இழுக்க, அவன் மேலேயே விழுந்தாள் அவள். “என்னங்க நீங்க?!! பாப்பா எழுந்துக்கப் போறா.” என்றவள் எழ முயற்சிக்க, அவளை இன்னும் தன்னோடு இருக்கிக்கொண்டவன், “என்ன விஷயம்ன்னு கேட்டல, கேளு. அப்போதான் விடுவேன்.” என்று வம்பிழுக்க, சிரிப்புடன், “சரி சொல்லுங்க.” என்றாள் பதிலுக்கு மிருதுளா.
“அது வந்து, எனக்குத் திடீர்ன்னு ஒரு குழப்பம்.” என்று சொல்ல, என்னவென்று அவள் கேட்க, “அது வந்து, தேஜாவுக்கு, அடுத்து தம்பி பாப்பா கிபிட் பண்ணலாமா? தங்கச்சி பாப்பா கிபிட் பண்ணலாமா இல்லை ஒரே நேரத்தில ரெண்டு கிபிட் பண்ணலாம்ன்னு ஒரே குழப்பமா இருக்கு. நீயே சொல்லு அம்மு. என்ன பண்ணலாம்.“ என்று கேட்டுவிட்டு, அவள் இதழ் நோக்கி குனிய, அவனின் கைகளில் நறுக்கென்று இவள் கிள்ள, “ஸ்ஸ்ஸ் ஆஹா, அம்மு, நீ ரொம்பச் சைலன்ட் நினைச்சேன். இப்படி வன்முறைலாம் செய்வியா?!!” என்றான் கெளதம், தன் கைகளைத் தேய்த்துக்கொண்டே.
அவனிடம் இருந்து விடுபட்டவள், “மொதல்ல சீக்கிரம் எழுந்து குளிச்சிட்டு வாங்க. ஆரா வந்துடுவா.” என்று சொல்ல, “அம்மு, என் குழப்பத்துக்குப் பதில் சொல்லு. இல்லை தேஜாகூடச் சேர்ந்து என்னையும் குளிப்பாட்டனும். அதுதான் உனக்குப் பனிஷ்மென்ட்.” என்று கத்த, அதற்குள், தேஜாவுடன் பாத்ரூம் சென்றிருந்த மிருதுளா, இவன் வருவதற்குள், குளியல் அறை கதவை அடைத்து தாழ்போட்டாள். அவள் போவதையே சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் கெளதம்.
அதற்குள் நேரம் வேகமாக ஓட, அனைவரும் தயாராகி சாப்பிட்டுக் கொண்டிருக்க, அப்பொழுது டைனிங் டேபிளுக்கு வந்த ஆரா, தன் அக்காவின் முகத்தில் தெரிந்த ஜொலிப்பில், உள்ளுக்குள் பூரித்துபோனவள், உற்சாகக் குரலில், “அத்தான், வித் யுவர் பெர்மிஷன்…” என்றவள், மிருதுளாவின் கன்னத்தில் இதழ் பதிக்க, “அம்மு, என்னதிது…” என்று வெட்கத்துடன் மிருதுளா சொல்ல, இருவரின் முகத்தைப் பார்த்துச் சிரித்த கெளதம், “பார்த்து ஆரா, அப்புறம் ஜெய் கோச்சிக்கப் போறான்.” என்று சொல்ல, அங்கே சிரிப்பலை கேட்க, என்னவென்று தெரியாமல், தேஜாவும் தன் குட்டி பற்கள் தெரிய சிரிக்க, “என் பொண்ணுக்குச் சிரிப்பை பாரேன்.” என்று சொன்ன ஆரா, குழந்தையை வாங்கித் தன் மடியில் உட்கார வைத்துக்கொண்டு உணவு ஊட்ட, அங்கே அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி நிறைவாக இருந்தது.
இங்கே மகிழ்ச்சி என்னும் மலர் பூத்து குலுங்க ஆரம்பிக்க, அங்கே சந்துருவோ, எப்படியாவது தன் உரிமை பொருளான தன் மனைவியை, எப்படி மீட்டெடுப்பது? எப்படிக் கௌதமிடம் இருந்து பிரிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தவனின் மனதில், ‘பேசாமல் உண்மையைச் சொல்லி விடலாமா‘ என்ற விபரீத எண்ணம் உதித்தது. அவன் என்ன செய்யக் காத்திருக்கிறான்.