அத்தியாயம் 5
கட்டவிழ்ந்த எந்தன்
கண்கள் எப்போதும்
உன்னையே தேடுவதின்
மாயம் நானறியேன்!!!
கிளாசை விட்டு வெளியே வந்த தீபக் அங்கே நின்ற காயத்ரியை திரும்பிக் கூட பார்க்காமல் சென்றான். அவளோ அவனை முறைத்த படியே நின்றாள்.
“எப்படி போறான் பாரு சோடாபுட்டி சோடாபுட்டி, என்னைப் பாத்தா மட்டும் இவனுக்கு என்ன தான் ஆகுமோ? சாதாரணமா பேசிட்டு., இல்லைன்னா சிரிச்சிட்டு போக வேண்டியது தானே? என்னமோ நான் மட்டும் இந்த கிளாஸ்ல இல்லாத மாதிரி ரியாக்ஷன் கொடுக்குறான். என்னை மட்டும் எதுக்கு கண்டுக்கவே மாட்டிக்கான்”, என்று அவனை மனதுக்குள் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்.
அவள் அப்படித் தான் தன்னை திட்டுவாள் என்று அவனுக்கும் தெரியும். அதனால் தான் அவன் அப்படி அவளை கண்டுகொள்ளாமல் சென்றது. ஆனாலும் அவனது மனது அவளை
திரும்பிப் பார்க்க ஆவல் கொண்டது.
“திரும்பாத திரும்பாத”, தனக்குள் சொல்லிக் கொண்டே அவளைக் காணாமல் நடந்து சென்றான்.
மூளை திரும்பி பார்க்காதே என்று சொல்ல மனமோ அவளைக் காண ஆசை கொண்டது. ஒரு திருப்பம் வரும் போது அவனை அறியாமலே அவளை திரும்பி பார்த்து விட்டான். அவன் அனுமதி இல்லாமலே அவன் கண்கள் அவளை நோக்கி திரும்பி விட்டது.
அவன் திரும்பவே மாட்டான் என்று எண்ணி அவனை முறைத்துக் கொண்டே இருந்தவள் திடீரென்று அவன் திரும்பி பார்க்கவும் நே என்று விழித்தாள்.,
அவளின் அந்த செய்கை அவனை கொள்ளை கொண்டது. அடுத்த நொடி அவளைப் பார்த்து கண் சிமிட்டி விட்டு மயக்கும் புன்னகையுடன் அங்கிருந்து மறைந்தான். அவன் செய்கையைக் கண்டு பே என்று விழித்துக் கொண்டிருந்தாள் காயத்ரி.
அவனுடைய செய்கையும், அவன் புன்னகையும் அவளை ஏதோ ஒரு மாய உலகத்துக்குள் அழைத்து சென்றது போல இருந்தது. ஏற்கனவே அவளை அவன் கண்டு கொள்ளாததால் தான் அவன் மீது அவளின் கவனம் சென்றது. இப்போதோ அவன் செய்கை அவள் எதிர் பார்க்காதது. எதிர் பார்க்காதது மட்டும் அல்ல, அவளால் ஏற்றுக் கொள்ள முடியாது.
“எதுக்கு இப்படி செஞ்சான்? இவன் மனசுல என்ன தான் நினைச்சிட்டு இருக்கான்?”, என்று எண்ணி அவள் மூளை குழம்பித் தவித்தது.
அப்போது வெளியே வந்த நந்தினி “காயு என்ன ஒரு மாதிரி முழிச்சிட்டு நிக்குற? பஸ்க்கு நேரம் ஆச்சு வா”, என்று அழைத்தாள் நந்தினி.
“ஆமா ஆமா, என்னால தான் லேட்டா? நீ தான் பஸ்ஸை மறந்து கதை பேசிட்டு நின்ன?”, என்று ஆதங்கமாக வந்தது காயத்ரியின் குரல்.
அவள் குரலில் எதற்கு இந்த ஆதங்கம் என்று தான் தெரியவில்லை. தீபக் நந்தினியிடம் மட்டும் பேசுகிறான் என்ற ஆதங்கமா என்பது காயத்ரிக்கே தெரியவில்லை. அப்படி இருக்க நந்தினிக்கா தெரிய போகுது?
“நாளைக்கு காலைல சீனியர்ஸ் பாக்க போறதுக்கு முன்னாடி நம்ம ஸ்டாப் கிட்ட இன்பார்ம் பண்ணணும்னு தீபக் சொல்லிட்டு இருந்தான் டி. வேற என்ன கதை பேச போறேன்?”, என்று சொல்லிக் கொண்டே நடந்தாள்.
“இதை எதுக்கு அவன் என்கிட்ட சொல்லாம இவ கிட்ட சொல்றான்?”, என்று மீண்டும் குழம்பிய படியே நந்தினியுடன் சென்றாள் காயத்ரி.
வரும் வழி முழுவதும் நந்தினி எதை எதையோ பேசிய படியே வர
“இனி அவன் பக்கமே பாக்க கூடாதுப்பா? சரியான சோடாபுட்டி, என்ன வேலை பாத்துட்டான்”, என்று எண்ணி பஸ் இருக்குமிடம் சென்றாள் காயத்ரி.
அங்கே பஸ்ஸின் வாசல் அருகே அவன் நின்றிருக்க அவனைப் பார்க்காது நந்தினியுடன் பேசிய படியே சென்றாள்.
நந்தினி வேற பஸ் என்பதால் அவள் கிளம்பிச் செல்ல, பஸ் அருகே வந்த காயத்ரி, அவன் வாசல் அருகே நிற்பதால் எப்படி உள்ளே செல்ல என்று தடுமாறினாள்.
அவனை எப்படி நகரச் சொல்ல என்று தெரியாமல் அமைதியாக நின்றாள். இதுவே அந்த இடத்தில் வேற யாராவது இருந்திருந்தால் “எக்ஸ்கியூஸ் மீ, கொஞ்சம் நகருங்க”, என்று சாதாரணமாக சொல்லி விட்டு சென்றிருப்பாள். ஆனால் அங்கே நின்றது தீபக் என்பதால் அவளால் எதுவும் பேச முடியவில்லை.
அவளிடம் வம்பிழுக்க தான் அவனும் அப்படி நின்றான். ஏதாவது தன்னிடம் பேசுவாள், அட்லீஸ்ட் நகருங்க என்றாவது அவள் பேசுவாள் என்று அவன் எதிர் பார்க்க அவளோ வாயை இறுக்கமாக மூடிக் கொண்டு நின்றாள்.
“எப்படி தடி மாடு மாதிரி வழியை மறைச்சிட்டு இருக்கான் பாரு?”, என்று மனதுக்குள் அவனை வறுத்தெடுத்தாள்.
வேறு யாராவது பார்த்தால் தவறாக போய் விடும் என்பதால் அவள் ஏறுவதற்கு சற்று இடை வெளி விட்டு நகர்ந்து நின்றான்.
விட்டால் போதும் என்று அவள் பஸ்ஸில் ஏறி விட்டாள். ஆனால் அவன் மேல் இடித்து விட்டே ஏறினாள் காயத்ரி. ஏனென்றால் அந்த அளவுக்கு தான் அவன் இடமே கொடுத்தான்.
அந்த ஒரு நொடி தொடுகை இருவருக்குள்ளும் கரண்ட் ஷாக் அடித்த உணர்வைத் தான் கொடுத்தது.
சீட்டில் அமர்ந்த பின்னரும் அவனை மனதுக்குள் திட்டிக் கொண்டே அமர்ந்திருந்தாள்.
அவன் உள்ளே வரும் போதும் சரி, அதன் பின்னும் சரி அவனை இனி பார்க்கவே கூடாது என்று எண்ணியவள் அவனை காணும் போதெல்லாம் முறைத்து முறைத்து பார்க்க ஆரம்பித்தாள். அதில் அவனுக்கும் இன்னும் குதூகலமானது.
அடுத்த நாள் காலை, தங்களின் ஸ்டாப்களிடம் அனுமதி வாங்கிக் கொண்டு சீனியர்சை பார்க்க சென்றார்கள் தீபக் வகுப்பினர்.
சீனியர்ஸ், அவர்களை தங்களின் கிளாசில் அமர வைத்து விட்டு ஏதோ டிஸ்கஸ் பண்ணிக் கொண்டிருந்தார்கள். இவர்களும் தங்களுக்குள் கதை பேசிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது, “தீபக் இங்க வா”, என்று அழைத்தான் சீனியர்களில் ஒருவன்.
அவன் எழுந்து சென்றதும் அனைவரின் கவனமும் அவன் பக்கம் திரும்பியது.
“இந்தா தீபக், ஸ்டோரூம் சாவி. அங்க டெக்கரேட்டிவ் திங்க்ஸ் எல்லாம் மேல இருக்கும். எல்லாரையும் கூட்டிட்டு போய் எடுத்துட்டு சேமினார் ஹால் போயிருங்க. எங்களுக்கு பர்ஸ்ட் பீரியட் ஓடி இல்லை. அதனால நாங்க செகண்ட் பீரியட் வந்துருவோம்”, என்று சொன்னான் ரிஷி என்ற சீனியர்.
“சரி அண்ணா, ஆனா அங்க போய் என்ன செய்ய?”
“செமினார் ஹாலை டேகரேட் செய்யனும். உங்களால் எப்படி முடியுதோ அப்படி செய்ங்க”
“என்னது நாங்க டெக்கரேட் பண்ணனுமா?”
“ஆமா, நாளான்னைக்கு பங்ஷன் வச்சிக்கலாம்னு பெர்மிசன் வாங்கியாச்சு. இன்னைக்கு டெக்கரேட் பண்ணிட்டோம்னா நாளைக்கு வேற அரெஞ்ச்மெண்ட் பண்ணிக்கலாம். நீங்க ஆரம்பிங்க, அதுக்குள்ள நாங்க வந்துருவோம்”
“ஒரு வேளை நாங்க நல்லா பண்ணலைன்னா?”
“நாலு பலூன், நாலு கலர் பேப்பர் செட் பண்ணினாலே அந்த இடம் அழகா தான் இருக்கும் தீபக். அதனால தைரியமா பண்ணுங்க. எப்படியும் அடுத்த வருஷம் நீங்க தானே எல்லாம் பண்ணனும்”
“சரிண்ணா, நாங்க செய்றோம். அப்புறம் எங்களை செமினார் ஹால் உள்ள விடுவாங்களா?”
“கண்டிப்பா விடுவாங்க. நாங்க பெர்மிசன் வாங்கிட்டோம். அப்புறம், செமினார் ஹால் சாவி நம்ம டிப்பார்ட்மெண்ட் கிளர்க் கிட்ட இருந்து மட்டும் வாங்கிக்கோ. அதையும் வாங்க தான் போனோம். ஆனா அப்ப அவங்க வரலை. இப்ப வந்துருப்பாங்க”
“சரிண்ணா”
“சாரி டா, நாங்க வந்துறலாம்னு பாத்தோம். பர்ஸ்ட் பீரியட் மேக்ஸ். அதனால சார் விடலை”
“பரவால்ல அண்ணா. நாங்க பாத்துக்குறோம். நீங்க பொறுமையா வாங்க”, என்று சொன்னவன் தன்னுடைய நண்பர்கள் அருகில் சென்றான்.
“அந்த அண்ணா என்ன டா சொன்னாங்க?”, என்று கேட்டான் மதன்.
“நாம இப்ப எல்லாரும் ஸ்டோர் ரூம் போகணும் டா. எல்லாரையும் கூட்டிட்டு என் பின்னாடி வா”, என்று சொல்லி விட்டு தீபக் நடந்ததும் அனைவரையும் அவன் பின்னே சென்றார்கள்.
ஸ்டோர் ரூம் சென்றதும் கதவை திறந்த தீபக் “பிரண்ட்ஸ், இந்த ரூம்ல தான் டெக்கரேடிவ் திங்க்ஸ் எல்லாம் இருக்கு. எல்லாத்தையும் என்ன என்னன்னு பாத்து எடுத்துட்டு இருங்க. நான் செமினார் ஹால் சாவி வாங்கிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்றான்.
“டேய், ஓடின்னா சும்மா ஜாலியா அரட்டை அடிக்கலாம்னு வந்தா இவன் என்ன வேலையா சொல்றான்”, என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தான் விக்னேஷ்.
“விக்கி, இதெல்லாம் ஓவர் டா. ஒழுங்கா உன் வாயை மூடிட்டு மேல ஏறி எல்லாம் எடுத்து கொடு. நான் வாங்கி வைக்கிறேன்”, என்று சொன்னதும் அங்கிருந்த சேரில் ஏறி ஒவ்வொன்றாய் எடுத்துக் கொடுத்தான் விக்னேஷ்.
பெண்கள் அனைவரும் ஒரு ஓரமாக நின்று ஆண்கள் அடிக்கும் லூட்டியை ரசித்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கும் போது அங்கே வந்த தீபக் “எல்லாம் எடுத்தாச்சா டா? நான் செமினார் ஹால் திறந்துட்டேன். இதை எல்லாம் எடுத்துட்டு அங்க போய் வைங்க”, என்றான்.
ஒவ்வொருவராய் ஒவ்வொரு பெட்டியை எடுத்துக் கொண்டு சென்றார்கள்.
கடைசியாக அங்கே காயத்ரி மட்டும் இருந்தாள். அவள் எவ்வளவு முயன்றும் அவளால் அந்த அட்டைப் பெட்டியை தூக்க முடியவில்லை.
கதவைப் பூட்டுவதற்காக தீபக்கும் அங்கே நின்றான். காயத்ரியும் தீபக்கும் மட்டுமே அந்த அறையில் இருந்தார்கள். .
அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் அட்டைப் பெட்டியை தூக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள் காயத்ரி. ஆனால் அவளால் அது முடிய வில்லை.
அவளையும் அவள் முறைப்பையும் கண்டு புன்னகை புரிந்தான் தீபக்.
“புளி மூட்டை மாதிரி இருக்க. இந்த சின்ன பெட்டியை உன்னால தூக்க முடியலையா?”, என்று கேட்டான் தீபக். அவன் குரல் திடீரென்று கேட்டதும் அதிர்ந்து போய் நிமிர்ந்து பார்த்தாள் காயத்ரி.
அங்கே நக்கலாக அவளைப் பார்த்த படி நின்றான் தீபக். அவன் தன்னிடமா பேசினான் என்று அவள் ஆச்சர்யமாக எண்ணும் போதே அவன் சொன்ன விஷயம் நினைவில் வந்தது.
“என்னையா புளி மூட்டைன்னு சொன்னான்?”, என்று எண்ணி அவனை பயங்கரமாக முறைத்தாள்.
“என்ன லுக்கு? நேரம் ஆகுது. சீக்கிரம் எடுத்துட்டு போ”, என்று மீண்டும் அவன் திமிராக பேச “அவ்வளவு திமிரா டா உனக்கு? என்னையவா புளி மூட்டைன்னா சொல்ற? உனக்கு இப்ப இருக்கு”, என்று எண்ணிக் கொண்டு “வெயிட்டா இருக்கு. கொஞ்சம் தூக்கித் தா”, என்றாள்.
இருவரும் இன்று தான் நேருக்கு நேர் பேசுகிறார்கள். ஆனால் முறைத்துக் கொண்டு தான் பேசினார்கள்.
“பில்டிங்க் ஸ்ட்ராங்க் பேஸ்மெண்ட் வீக் போல?”, என்று சொல்லிக் கொண்டே அவள் அருகில் சென்றவன் அதை தூக்கி அவள் கையில் வைக்கப் போனான். அவளும் அதை பிடிப்பது போல ஆக்ஷன் செய்து ஆனால் அதை பிடிக்காமல் அப்படியே கீழே போட்டாள். அவள் பிடித்து விட்டாள் என்று எண்ணி அவனும் கையை விட அது அப்படியே அவன் காலில் போய் விழுந்தது.
“ஆஆ, அம்மா”, என்று கத்திய படியே காலை உதறிக் கொண்டு இருந்தான் தீபக்.
அவன் நிலையைக் கண்டு சந்தோஷமாக புன்னகைத்தாள் காயத்ரி.
“இப்படியா காலுல போடுவ? ஒழுங்கா பிடிக்க வேண்டியது தானே?”, என்று எரிச்சலாக கேட்டான் தீபக். அவனுக்கு வலி உயிர் போனது.
“நான் தான் அதை பிடிக்கவே இல்லையே. அப்புறம் எங்க ஒழுங்கா பிடிக்க?”, என்று நக்கலாக கேட்டாள் காயத்ரி.
“வேணும்னு தான் பண்ணுனியா?”
“ஆமா இதுல என்ன சந்தேகம்?”
“எதுக்கு?”
“பாத்த முதல் நாளுல இருந்து என்னை வெறுப்பேத்திட்டே இருந்த. இப்ப கூட என்னை புளி மூட்டைன்னு சொன்னல்ல? அதுக்கு தான்”
“நான் உண்மையை தானே சொன்னேன்?”, என்று சொல்லி அவளிடம் இருந்து மீண்டும் ஒரு முறைப்பை பெற்றுக் கொண்டான் தீபக்.