“சரி சரி முறைக்காத. நீ இதை தூக்குமுதல்ல. நான் ரூமை பூட்டிட்டு அங்க போகணும். நிறைய வேலை இருக்கு”
“காலுல விழுந்ததுல தெரியலையா அதுல எவ்வளவு வெயிட் இருக்குனு. உனக்கு தேவைன்னா நீயே அதை தூக்கிட்டு வா. நான் ரூமைப் பூட்டுறேன்”, என்று சொன்ன காயத்ரி சாவியை கையில் எடுத்துக் கொண்டாள்.
“நேரம் தான்”, என்று முணுமுணுத்துக் கொண்டே அந்த அட்டைப் பெட்டியை தூக்கினான் தீபக்.
பின் வெளியே சென்றவன் “ஒழுங்கா பூட்டிருவல்ல புளி மூட்டை?”, என்று அவளை மீண்டும் வெறுப்பேத்தினான்.
“போடா சோடாபுட்டி”, என்று சொல்லிக் கொண்டே கதவை பூட்டினாள் காயத்ரி.
உதட்டில் எழுந்த புன்னகையை மறைத்துக் கொண்டே அங்கிருந்து சென்றான் தீபக். கதவை பூட்டி விட்டு அவன் பின்னே நடந்தவள் அவன் எப்படி பட்டவன் என்று கணிக்க முடியாமல் குழப்பத்துடனே சென்றாள்.
செமினார் ஹால் சென்றதும் “எதுக்கு டி லேட்?”, என்று கேட்டாள் நந்தினி.
“உங்களுக்கு வெயிட் இல்லாத பாக்ஸ், அதனால சீக்கிரம் வந்துட்டீங்க. எனக்கு அந்த பெட்டியை தூக்க முடியலை. அதனால தான் தீபக் தூக்கிட்டு வந்தான்”, என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே “பிரண்ட்ஸ், இப்ப உங்க வேலையை ஆரம்பிங்க. இந்த ரூமை எப்படி எல்லாம் டெக்கரேட் பண்ணணும்னு நினைக்கிறீங்களோ அப்படி பண்ணுவீங்களாம். பலூன் ஊதுறது, கலர் பேப்பர் டெக்கரேட்டிங்க் எல்லாம் பண்ணனும். அப்புறம் கோலம் நாளைக்கு சாயங்காலம் தான் போடுற மாதிரி இருக்கும். அதுக்கு பிளான் பண்ணுறதுனாலும் பண்ணலாம்”, என்று அறிவிப்பு கொடுத்தான்.
அதன் பின் வேலைகள் வேக வேகமாக நடந்தன. அதுவும் தீபக் கேங்க் ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொண்டு வேலை பார்த்தது பெண்களுக்கும் புன்னகையை வரவழைத்தது. காயத்ரியை தவிர மற்ற பெண்களும் ஆண்களிடம் கலகலப்பாக பேசினார்கள். அதனால் அங்கே சந்தோஷமான சூழ்நிலையே உருவானது.
அங்கே தீபக் இல்லையென்றால் காயத்ரியும் அனைவரிடமும் கலகலப்பாக பேசியிருப்பாள். தீபக்கை முறைத்துக் கொண்டே இருப்பது தான் காயத்ரியின் வேலையானது.
தீபக்கின் செயல்களும் அவளை கோப படுத்துவதாகவே இருந்தது. அவள் தனியாக நிற்கும் போது “புளி மூட்டை, என்னை சைட் அடிச்சது போதும். ஒழுங்கா ஓப்பி அடிக்காம வேலையை பாரு”, என்று சொல்லி அவளை வெறுப்பேத்தினான்.
அவள் அவனை முறைத்துப் பார்க்கும் போது கண்ணடித்து அவளை முகம் சிவக்க வைத்தான். மொத்தத்தில் அவன் இங்கிருந்து எப்போது போவான் என்று அவளை எண்ண வைத்தான் தீபக்.
அடுத்த பீரியட் சீனியர்ஸ் வந்தார்கள். அவர்கள் வந்ததும் இன்னும் ஜாலியாக சென்றது.
“டேய் நிர்மல், ஸ்கூல் படிக்கும் போது உனக்கு யாராவது லவ் லட்டர்ஸ் கொடுத்துருக்காங்களா?”, என்று கேட்டான் வினோத் என்ற சீனியர்.
“எங்கண்ணா, நம்மளை யார் லவ் பண்ணுவா? நம்ம என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?”, என்று சோகமாக சொன்னான் நிர்மல்.
“அண்ணா நீங்க கேட்ட கேள்வியே தப்பு. நிர்மல் எத்தனை பேருக்கு லவ் லட்டர் கொடுத்தான்னு தான் நீங்க கேட்டுருக்கணும்”, என்று தினேஷ் போட்டுக் கொடுக்க நிர்மல் தினேஷை முறைத்தான்.
“நிர்மல் அப்படியா டா? அவ்வளவு பேருக்கு கொடுத்தியா? யாருமே உன் காதலை ஏத்துக்கலையா? அதான் இவ்வளவு சோகமாக?”, என்று கேட்டு அவனை ஓட்ட ஆரம்பித்தார்கள்.
இப்படியே மாற்றி மாற்றி கலாய்த்துக் கொண்டிருந்தனர். சீனியர்ஸ் எல்லாரும் அவர்களுக்கு பாடம் எடுக்கும் ஸ்டாப் எப்படி என்று நடித்துக் காட்ட அந்த பீரியட் ஜாலியாக சென்றது.
இரண்டு பீரியட் முடிந்ததும் “தீபக், பங்ஷன்க்கு உங்க கிளாஸ்ல இருக்குற எல்லாரும் பெர்பார்ம் பண்ணனும். நம்ம ஹெச்.ஓ.டி அதை ரொம்ப எதிர் பார்ப்பாங்க. நீ எல்லார் கிட்டயும் சொல்லிரு”, என்றான் வினோத்.
“சரிண்ணா”, என்று சொல்லி விட்டு நாளைக்கு எப்போது வர வேண்டும் என்று கேட்டு விட்டு கிளாசுக்கு சென்றான். மற்றவர்களும் அவன் பின்னே சென்றார்கள்.
அப்போது பிரேக் டைம் என்பதால் கிளாசில் இருந்த மேடையில் ஏறிய தீபக் “பிரண்ட்ஸ், நாளான்னைக்கு நமக்கு பிரஷர்ஸ் டே. நமக்காக சீனியர்ஸ் தான் பெர்பார்ம் பண்ணுவாங்க. இருந்தாலும் நமக்கு கொடுக்குற டைம்ல நம்ம எல்லாரும் அவங்க அவங்க திறமையை வெளிக்காட்டனும். யார் என்ன செய்ய போறீங்கன்னு பிளான் பண்ணிக்கோங்க. அப்புறம் நாளான்னைக்கு நமக்கு என்ன சாப்பாடு வேணும்னு சீனியர்ஸ் கேக்க சொன்னாங்க. உங்களுக்கு என்ன ஐடியா இருக்குனு இப்ப ஷேர் பண்ணிக்கோங்க”, என்றான்.
“எங்களுக்கு பிரியாணி”, என்றது ஒரு கேங்க். “காலேஜ்ல எல்லா பங்க்சனுக்கும் பிரியாணி தான் போடுவாங்க. அதனால இந்த தடவை, பஃப்பே மாதிரி எல்லா ஐட்டமும் இருக்குற மாதிரி சொல்லுங்க”, என்றது மற்றொரு கேங்க்.
“ஓகே, பிரியாணி, அப்புறம் எல்லா ஐட்டமும் இருக்குற மாதிரி. இந்த ரெண்டு ஆப்ஸனையும் சீனியர்ஸ் கிட்ட சொல்லிறேன். அதுக்கப்புறம் அவங்களே பிளான் பண்ணிக்கட்டும்”, என்று சொல்லி விட்டு தன்னுடைய இடத்துக்கு சென்று அமர்ந்தான்.
அன்றைய நாள் அனைவரும் என்ன பெர்பார்ம் பண்ணுவது என்று பேசி பேசியே கழிந்தது.
அன்று மாலை வீட்டுக்கு சென்றதும் காயத்ரி தீபக்கை திட்டி திட்டியே சௌமியை சாகடித்தாள். அன்று நடந்த அனைத்தையும் தன்னுடைய தங்கையிடம் சொன்ன காயத்ரி அவன் கண்ணடித்ததை மட்டும் சொல்ல வில்லை. அதை எதனால் மறைத்தாள் என்று அவளுக்கே தெரியாது.
“அக்கா, அந்த அண்ணா சும்மா விளையாட்டுக்கு பண்ணிருப்பாங்க”, என்று சௌமி எவ்வளவோ சமாதானப் படுத்திப் பார்த்தாள். ஆனால் காயத்ரி சமாதானம் ஆகவே இல்லை.
“அவன் எப்படி டி, என்னை புளி மூட்டைன்னு சொல்லலாம்? நான் அப்படியா இருக்கேன்? வேணுக்குன்னு பண்ணுறான் டி? முதல் நாளுல இருந்து அவன் என்னை மட்டும் இரிட்டேட் பண்ணிக்கிட்டே இருக்கான். என்னைப் பாத்து அவன் எப்படி புளி மூட்டைன்னு சொல்லலாம்? நான் ஹைட்டுக்கு ஏத்த வெயிட் தானே இருக்கேன்?”, என்று சொல்லி சொல்லி அவன் மீதான கோபம் அவளுக்கு அதிகமானது.
காயத்ரியின் புலம்பலைக் கேட்டு சௌமிக்கு தான் தலை வலி வந்தது.
“புதுசா பேசுற பொண்ணுகிட்ட இப்படியா டி பேசுவாங்க? பயங்கர திமிர் டி அவனுக்கு”, என்று பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தாள்.
அதே நேரம் கட்டிலில் படுத்திருந்த தீபக்க்கு வானில் கலைந்து செல்லும் மேகம் போல் காயத்ரியின் நினைவு தான் வந்தது. இது வரை நடந்த நிகழ்வுகளை அசை போட்டான்.
அவனை முறைத்துக் கொண்டே திரியும் அவளை ரசித்தான். அவளின் கோபத்தை பற்றி எண்ணியவனுக்கு முகம் பூவாய் மலர்ந்தது.
காயத்ரி அவனைப் பொறுத்தவரை அழகான தேவதை. அவள் எப்போதோ அவன் மனதில் குடி புகுந்து விட்டாள். அவளிடம் வேண்டும் என்றே தான் வம்பிழுத்துக் கொண்டிருக்கிறான்.
அவளைப் பார்த்து கண்ணடித்ததும் செவ்வானமாய் சிவந்த அவள் முகம் இப்போதும் அவனுடைய கண்ணுக்குள் நின்றது.
மறுபுறம் அவளுடைய கோபத்தை நினைத்து சிறிது பயமும் வந்தது. “அவளுக்கு என்னை பிடிக்காம போயிருமோ? சீண்டி விடுறேன்னு அவளோட வெறுப்பை சம்பாதிக்கிறேனோ?”, என்று எண்ணி பயந்தான்.
அவளைப் பற்றியே எண்ணியவனுக்கு தூக்கமும் அவனை விட்டு சென்றது. மானசீகமாக தன்னுடைய தேவதையிடம் மன்னிப்பை வேண்டினான்.
காதல் என்ற காய்ச்சல் அவனை பாடாய் படுத்தியது. இது சரியாக வேண்டும் என்றால் அவளிடம் காதலைச் சொல்ல வேண்டும். ஆனால் அவளிடம் காதலைக் காட்ட தான் அவனால் முடிய வில்லை.
நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று சொல்ல அவனுக்கு ஒரு நொடி போதாது. ஆனால் அதைச் சொல்ல இது சரியான நேரம் இல்லை என்று எண்ணினான் தீபக். இப்போது அவள் மனதில் காதலை விதைப்பது தவறு என்று அவன் உள் மனது சொல்லியது.
படிக்கும் வயதில் காதலைச் சொன்னால் அவளுடைய எதிர்காலம் என்ன ஆகும் என்று குழப்பம் வந்தது. ஆனாலும் சில நேரம் அவனை மீறி கறையுடைக்கும் காதலை அவனால் பிடித்து நிறுத்த முடியவில்லை. அவனையும் மீறி ஒரு உரிமை உணர்வைக் காட்டி விடுகிறான். கண்ணடித்ததும் அப்படி தான், புளி மூட்டை என்று சொன்னதும் உரிமை உணர்வில் தான்.
இப்போது அவனுக்கு அவளிடம் காதலையும் சொல்லக் கூடாது, அதே நேரம் அவளுடைய கோபமும் மாற வேண்டும். இது இரண்டுக்கும் என்ன செய்ய என்று யோசித்தான்.
“அவளை பிரண்டா ஆக்கிக்கலாமா? அப்ப தான் அவளுக்கு என் மேலே வெறுப்பு வராது”, என்ற யோசனை வந்தது. அதன் பிறகு அதையே கெட்டியாக பிடித்துக் கொண்டான். நாளைக்கே அவளிடம் பேசிவிட வேண்டும் என்று முடிவெடுத்த பின்னர் தான் அவனுக்கு நிம்மதியாகவே இருந்தது.
நட்புக்கு தான் எந்த வரைமுறையும் இல்லையே. நட்பைக் காட்டினால் அவள் அவனுடனே இருப்பாள் என்று அவன் மனது நம்பியது. அடுத்த நாள் அவளிடம் நட்பை யாசிக்க ஆவலாக காத்திருந்தான்.
ஆனால் அவளிடம் எப்படி பேச என்று படபடப்பாக இருந்தது. தன்னுடைய நட்பை அவள் ஏற்பாளா என்று அவனுக்கு பயமாகவும் இருந்தது.
பஸ்ஸில் அவளை காண ஆவலாக காத்திருந்தான். அவளுடைய ஸ்டாப் வரும் போது அவளை அவன் கண்கள் ஆவலாக எதிர் பார்த்தது. ஆனால் அவனால் அன்று முழுவதும் அவளிடம் பேச முடியவில்லை.
கிளாஸ் ரெப்பாக அவனுக்கு பல வேலைகள் இருந்ததால் அவள் முகத்தைக் கூட அவனால் அதிகம் பார்க்க முடியவில்லை.
நாளைக்கு பேசலாம் என்று முடிவெடுத்தான். அடுத்த நாளும் பஸ்ஸில் ஏறி அமர்ந்ததும் அவளுடைய ஸ்டாப் எப்போது வரும் என்று தவம் இருந்தான். ஆனால் அவளைக் கண்டதும் அவன் பிளாட் ஆனது நிஜம். அவளை முதல் முறை பார்த்து காதல் கொண்ட போது எந்த உடை அணிந்திருந்தாளோ அதே உடையில் வந்திருந்தாள் காயத்ரி.
தென்றல் வீசும் போது அதை தாலாட்டு என்று எண்ணி எப்படி மரம் அசைந்தாடுகிறதோ அது போல அவள் அழகைக் கண்டு அவன் மனமும் அசைய தான் செய்தது.
அவள் பஸ்ஸில் ஏறி அமர்ந்ததும் மீண்டும் மீண்டும் அவன் பார்வை அவள் பக்கமே சென்றது.
ஐந்தடி உயரமும் மாநிறமும் களையான குழந்தை முகமும் கொண்டவளை ரசித்தான். இடையை தாண்டி நீண்டிருந்த கூந்தலை பின்னலில் அடக்கியிருந்தாள். காலர் வைத்த பிங்க் நிற லாங் டாப் அணிந்து, இரு பக்கமும் துப்பட்டாவை வைத்து கவர் பண்ணியிருந்தாள்.
காதில் ஒரு குட்டி ஜிமிக்கி, கையில் ஒரு கருப்பு கைக்கடிகாரம், மற்றொரு கையில் ஒரு கோல்டன் வளையல். கழுத்தில் மீன் டாலர் கொண்ட ஒரு குட்டி செயின், உடைக்கேற்ற பொட்டு, இவை தான் அவளின் அணிகலன்கள்.
முகத்தில் பவுடரைத் தவிர வேறு எந்த ஒப்பனையும் கிடையாது. மாசு மருவற்று நிர்மலமாக இருந்தது அவள் முகம். கண்ணிற்கு மை கூட தீட்டும் பழக்கம் அவளுக்கு கிடையாது என்பதால் கண்களுக்கு மை கூட வைக்க வில்லை. ஆனாலும் அவளுடைய அடர்த்தியான புருவம் அவளுக்கு அழகாக இருந்தது. அதுவும் கோலி குண்டு போல் இருந்த அந்த குண்டு கண்களில் விழுந்து எழ ஆசை கொண்டான் தீபக்.
பஸ்ஸில் இருந்து இறங்கி கிளாசுக்கு செல்லும் நேரத்தில் அவளிடம் பேசி விடலாம் என்று எண்ணி இறங்க தயாராக இருந்தான் தீபக். பஸ் நின்றதும் முதலில் சில பெண்கள் இறங்கினார்கள். அடுத்து படியில் நின்று கொண்டிருந்த காயத்ரி இறங்க போனாள். அப்போது அவர்களின் பஸ்ஸுக்கு பின்னால் வந்த பஸ்க்கு இடம் விடுவதற்காக “ஒரு நிமிஷம், யாரும் இறங்காதீங்க”, என்று சொல்லி விட்டு டிரைவர் வண்டியை எடுத்தார்.
அதை கவனிக்காத காயத்ரி கீழே இறங்க போனாள். அப்போது டிரைவர் பஸ்ஸை எடுத்ததும் கால் தடுமாறி கீழே விழப் போனவளைக் கண்ட தீபக் அவள் இடையோடு கை வைத்து தாங்கிக் கொண்டான். அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்ற காயத்ரிக்கு ஒரு நிமிடம் என்ன நடந்தது என்று கூட தெரியாமல் மூளை வேலை நிறுத்தம் செய்தது.
காதல் தொடரும்….