எனைச் சுற்றி ஏகாந்தம்
அத்தியாயம் 5
தமிழும் பிடித்த பெண்ணுடன் திருமணம் முடிவானதால் நிம்மதியாக தனது ஊருக்கு சென்று கொண்டிருந்தான். ஆனால் அடுத்த நாளே இருவரின் நிம்மதியும் குழி தோண்டி புதையப் போகிறது என்று அவர்கள் எதிர் பார்க்க வில்லை.
ஏனென்றால் வீட்டுக்கு தமிழ் சென்று சேர்வதற்குள் விஷயம் சரோஜா காதில் விழுந்து விட்டது. கயலின் பக்கத்து வீட்டுப் பெண் சரோஜாவுடன் பீடி சுற்றுவாள். அவள் சரோஜாவுக்கு தகவல் சொல்லி விட்டாள். தான் இல்லாமல் பெண் பார்க்க சென்றது மட்டுமல்லாமல் உறுதி செய்தார்களா என்ற கோபம் கனன்றது. தமிழ் வீட்டுக்கு வரும் போது வாசல் படியிலே எரிமலையாக அமர்ந்திருந்தாள் சரோஜா.
அதனால் அவர்களைக் கண்டு சரோஜா முறைக்க சிதம்பரம் மீனாட்சியின் கை பற்றி தங்கள் வீட்டுக்கு இழுத்து சென்று விட்டார். வீணான பேச்சு வார்த்தைக்கு அவர் தயாராக இல்லை. சரோஜா கட்டாயம் கேவலமாக தான் பேசுவாள். எதற்கு சாக்கடை மேல் கல் எறிய வேண்டும் என்று எண்ணி சென்று விட்டார்.
தமிழும் தாயை கண்டு கொள்ளாமல் வீட்டுக்குள் செல்ல “எங்க டா போய்ட்டு வர?”, என்று கேட்டாள் சரோஜா.
“எப்படி தான் அதுக்குள்ள நியூஸ் பரவிச்சோ தெரியலையே?”, என்று எண்ணிக் கொண்டு “அது….”, என்று இழுத்தான்.
“பூசி முழுக வேண்டாம். எனக்கு எல்லாம் தெரியும். அவங்க கூட சேந்து பெத்த அம்மாவையே தள்ளி வச்சிட்டல்ல? எனக்கு தெரியாம பொண்ணை முடிவு பண்ணிட்டு வந்துருக்க அப்படித் தானே?”, என்று சரோஜா கேட்க தமிழுக்கே கஷ்டமாக தான் இருந்தது. என்ன இருந்தாலும் பெற்ற தாயிடம் சொல்லாமல் போனது தவறு என்று அவன் மனசாட்சி குத்தியது.
“இல்லை மா, முன்னாடியே சொன்னா நீ தடுப்ப. அதான் பேசிட்டு வந்து சொல்லிக்கலாம்னு நினைச்சேன்”, என்று சமாதானமாக பேசினான்.
“உன் அத்தையும் மாமாவும் என் கிட்ட சொல்லக் கூடாதுன்னு சொல்லிருப்பாங்க. அப்படி தானே?”
“அவங்க சொல்ல தான் மா சொன்னாங்க. நான் தான் சொல்ல வேண்டாம்னு சொன்னேன். நாளைக்கே உன்னை அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் மா. பொண்ணு ரொம்ப அழகா இருப்பா. உனக்கும் பிடிக்கும்”
“ஓ. ஆமா பொண்ணு வீட்ல எவ்வளவு நகை போடுவேன்னு சொன்னாங்க”
“தெரியாது, அதைப் பத்தி பேசலை. பொண்ணுக்கு எதுவும் போட வேண்டாம்னு சொல்லிட்டேன்”
“யாரைக் கேட்டு அப்படிச் சொன்ன?”, என்று கொதித்துப் போய்க் கேட்டாள். தமிழுக்கும் எரிச்சல் வந்தது. இந்த ஜென்மத்தில் சரோஜா மாறப் போவதில்லை என்று உணர்ந்து கொண்டான்.
“அம்மா உனக்கு பிடிச்ச பண பேய், எனக்கு இன்னும் பிடிக்கலை. இப்படி பேசுவேன்னு தெரிஞ்சு தான் உன்னைக் கூட்டிட்டு போகலை”
“நான் இந்த கல்யாணத்தை நடத்த விட மாட்டேன் தமிழ்”
“நீ என்ன செஞ்சாலும் அவ தான் என்னோட பொண்டாட்டி, நான் முடிவு பண்ணிட்டேன். அவளைக் கல்யாணம் பண்ணியே தீருவேன்”
“கண்டிப்பா நான் தடுப்பேன். இந்த கல்யாணத்தை நடத்த விட மாட்டேன்”
“உன்னால முடிஞ்சதை செய். நீயெல்லாம் எனக்கு அம்மா? இதுல உன்னைக் கூப்பிடலைன்னு வேற உனக்கு குறை. ஒரு நிமிஷம் நீ திருந்திட்டேன்னு நானே தப்பா நினைச்சிட்டேன்”, என்று தலையில் அடித்த படி உள்ளே சென்று விட்டான்.
எப்போதும் போல கத்தி விட்டு சரோஜா அமைதியாகி விடுவாள் என்று எண்ணிக் கொண்டான். ஆனால் அடுத்த நாள் காலையில் தமிழ் வேலைக்கு சென்றதும் கயல் வீட்டைக் கண்டு பிடித்து சென்று விட்டாள் சரோஜா.
வேணி அவளை யாரோ என்று பார்க்க “நான் தமிழோட அம்மா”, என்றாள்.
“வாங்க”, என்றாள் வேணி.
“நான் ஒண்ணும் உங்க வீட்ல விருந்து சாப்பிட வரலை. ஆமா உங்களுக்கு எல்லாம் வெக்கமா இல்லையா? மாப்பிள்ளையோட அம்மா நான் வராம கல்யாணம் பேசி முடிப்பீங்களா?”
“உங்களுக்கு உடம்பு சரி இல்லைன்னு சொன்னாங்களே…”
“அது பொய். இந்த கல்யாணம் நடக்காது. நீங்களே நிறுத்திட்டா உங்களுக்கு மரியாதை. சோத்துல உப்பு போட்டு தானே சாப்பிடுறீங்க? அதையும் மீறிக் கல்யாணம் பண்ணி வச்சா உங்க பொண்ணை நான் கண்டிப்பா வாழ விட மாட்டேன்”, என்று சொல்லி விட்டுச் செல்ல அதை உடனே சமுத்திரத்துக்கு சொன்னாள் வேணி.
கயல் நன்றாக இருக்க கூடாது என்று எண்ணிய வேணி கணவரிடம் “அந்த அம்மா பேசினா பேசிட்டு போகட்டுங்க மாமா. பையன் நல்லவரா இருக்காரு. நாம பேசின படி கல்யாணம் நடக்கட்டும்”, என்றாள்.
ஆனால் சமுத்திரமோ உடனே சிதம்பரத்தை அழைத்து “இந்த கல்யாணம் வேண்டாங்க. என் வீட்ல தான் என் பொண்ணு சந்தோஷமா இல்லை. உங்க வீட்டுக்கும் வந்தும் போராட வேண்டாம்”, என்று சொல்லி சரோஜா பேசியது எல்லாம் சொல்லி விட்டார். அதை சிதம்பரம் தமிழுக்கு சொல்ல தமிழ் உடனே அழைத்தது சமுத்திரத்தை தான்.
“நான் தமிழ் பேசுறேன் மாமா”
“சொல்லுங்க தம்பி, நான் உங்க மாமா கிட்ட எல்லாம் பேசிட்டேனே? இந்த கல்யாணம் வேண்டாம் தம்பி. நம்ம ரெண்டு குடும்பத்துக்கும் சரிப் பட்டு வராது”
“எங்க அம்மா பேசினதை வச்சு தானே இப்படி முடிவு எடுத்தீங்க?”
“ஆமா”
“வாழப் போறது நாங்க தானே? எனக்கு கயலை ரொம்ப பிடிச்சிருக்கு. அவளைக் கண்ணுக்குள்ள வச்சு நல்லா பாத்துக்குவேன். என்னை நம்புங்க”
“எனக்கு நம்பிக்கை இல்லை. உங்க அம்மா பேசின பேச்சு அப்படி தம்பி. இந்த பேச்சை விட்டுருங்க. உங்களுக்கு வேற பொண்ணை பாத்துக்கோங்க”, என்று சொல்லி போனை வைக்க தமிழ் தலையைப் பிடித்துக் கொண்டான்.
இந்த விஷயங்கள் எதுவும் தெரியாமல் இருந்த கயலிடம் சேகர் விஷயத்தைச் சொல்ல அவள் கண்கள் கலங்கியது. “எனக்கு எதுவுமே நல்லது நடக்காதா அண்ணா?”, என்று கண்ணீருடன் கேட்க சேகருக்கு கஷ்டமாக இருந்தது. அவன் தானே இந்த பேச்சை ஆரம்பித்தது. இப்போது கயல் அழுவது அவனால் அல்லவா? ஒரு சிறு பெண்ணை தேவையில்லாமல் சிக்கலில் இழுத்து விட்டுவிட்டோமோ என்று வருந்தினான்.
அவனுடைய ஆறுதல் பேச்சைக் கேட்க கயல் அங்கே நிற்க வில்லை. தன்னுடைய வேலையைப் பார்க்கச் சென்று விட்டாள். ஆனால் மனம் மட்டும் தமிழையே சுற்றி வந்தது. அவன் கொடுத்த நெற்றி முத்தம் கூட இன்னும் பசுமையாக அவள் நெஞ்சில் நின்றது.
“பொண்டாட்டின்னு சொன்னீங்களே? அது உண்மை இல்லையா? என்னை விட்டுருவீங்களா? என் வாழ்க்கையில நான் ஆசைப் பட்டது உங்களைத் தான். ஆனா நீங்களும் கிடைக்க மாட்டீங்களா? உங்க அம்மாவுக்கு என்னை ஏன் பிடிக்காம போச்சு? உங்க அம்மா வேண்டாம்னு சொன்னா நீங்களும் அதை தானே கேப்பீங்க? எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கே? அம்மா ஏன் மா என்னை விட்டுட்டு போன? என்னையும் உன் கூடவே எடுத்துக்கோ மா”, என்று எண்ணி அவள் மனம் ஊமையாக அழுதது.
அவள் வருத்ததைப் பற்றி தமிழிடம் சொன்ன சேகர் அவள் இது வரை அவளது பிறந்த வீட்டில் பட்ட கஷ்டத்தை எல்லாம் சொல்லி முடித்தான். பின் “இப்ப என்ன செய்ய போற தமிழ்? நீ தான் முடிவு எடுக்கணும். கயலைப் பாக்க பாவமா இருக்கு. உங்க அம்மா குணம் தெரிஞ்சிருந்தும் நான் இந்த பேச்சை ஆரம்பிச்சிருக்க கூடாதுன்னு தோணுது டா. ஒரு சின்ன பொண்ணு மனசை நோகடிச்சிட்டேன்னு என் மனசாட்சியே என்னைக் கொல்லுது”, என்றான்.
“அவங்க அப்பா கிட்ட இன்னும் பொறுமையா பேசணும் அண்ணா. ஆனா என்னால கயலை விட்டுக் கொடுக்க முடியாது. எங்க அம்மா என்ன வேணும்னாலும் பண்ணிக்கட்டும். ஆனா கயல் தான் என்னோட பொண்டாட்டி. என் மேல முழுசா நம்பிக்கை வச்சு தான் அவ சம்மதம் சொன்னா. அவ நம்பிக்கையைக் கெடுத்தா நான் இந்த உலகத்துல இல்லாம போகணும் அண்ணா”
“அப்படி பேசாத டா. நீங்க ரெண்டு பேருமே வாழ்க்கைல இந்த வயசுல படக் கூடாத கஷ்டங்களை எல்லாம் பட்டுட்டீங்க. இனிமேலாவது நல்லா இருக்கணும். கடவுள் மேல பாரத்தைப் போடுவோம். சரி நான் கயல் நம்பரை அனுப்புறேன். அவ கிட்ட ரெண்டு வார்த்தை ஆறுதலா பேசு தமிழ். அவளைப் பாக்கவே ரொம்ப பாவமா இருக்கு. ரொம்ப கஷ்டப் பட்டுட்டா டா. இனி நாம தான் அவளை நல்ல படியா பாத்துக்கணும்”, என்று சொல்லி அவள் நம்பரை அனுப்பி வைத்தான்.
முதன்முதலில் தன்னுடைய மனதுக்கு இனியவளுக்கு அழைத்தான் தமிழ். வேலையில் இருந்தவள் போன் வரவும் எடுத்துப் பார்த்தாள். “யாருன்னு தெரியலையே?”, என்று எண்ணமிட்ட படி அதை எடுத்து காதில் வைத்து “ஹலோ யாருங்க?”, என்று கேட்டாள்.
“நான் தமிழ் பேசுறேன்”, என்று சொன்னதும் அவள் கண்கள் மேலும் கலங்க ஆரம்பித்தது. அவள் அமைதியாக இருக்க “கயல்… அழுறியா?”, என்று கேட்டான்.
“ம்ம்”, என்று அவள் முணுமுணுக்க “உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா? நான் தான் சொன்னேனே உன்னை விட்டுட மாட்டேன்னு. அப்புறம் ஏன் இந்த கலக்கம்?”, என்று கேட்டான்.
“தெரியலை, என்னமோ எனக்கு எதுவுமே நல்லது நடக்காதுன்னு கஷ்டமா இருக்கு. அம்மா இல்லை, வளர்த்த ஆச்சி தாத்தா இல்லை. அப்பா இருந்தும் இல்லாத நிலை. இப்ப நீங்களும் இல்லாம போய்ட்டா….. எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க”
“ஏய் லூசு நீ என்னோட பொண்டாட்டி டி. உன்னை நான் கை விட்டா நான் இந்த உலகத்துலே இல்லைன்னு அர்த்தம்”, என்று அவன் உரிமையாக பேச அவள் கொஞ்சம் தெளிந்தாள். அந்த உரிமை பேச்சு அவளுக்கு பிடித்திருந்தது.
“ஏன் இப்படி பேசுறீங்க? எனக்குன்னு வேற யார் இருக்கா? நீங்க ரொம்ப வருஷம் வாழணும்”, என்றாள்.
“நான் தான் உனக்கு முக்கியம்னு நினைச்சா நீ தைரியமா இரு. யாரை நம்புறியோ இல்லையோ என்னை நம்பு கயல்”
“நம்புறேன். ஆனா அப்பா…. சும்மாவே சித்திக்கு என்னைப் பிடிக்காது. இப்ப கண்டிப்பா சம்மதிக்க மாட்டாங்க”
“ஏன் கயல், உங்க வீட்ல சம்மதிக்கலைன்னா என்னை விட்டுருவியா?”
“உங்களை விட்டுட்டு நான் எங்க போவேன்? உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? என் மேல அக்கறை காட்டின முதல் ஆள் நீங்க தான். சேகர் அண்ணா, அப்புறம் ஸ்கூல் பிரண்ட்ஸ் பாசமா இருப்பாங்க தான். நான் அழுதா என் கண்ணீரைத் துடைப்பாங்க தான். ஆனா நீங்க எனக்காக நின்னீங்க. பஸ்ல அவ்வளவு பேர் முன்னால எனக்காக பேசுனீங்க. அப்பவே உங்களை லவ் பண்ணிட்டேன்னு எல்லாம் என்னால சொல்ல முடியலை. ஆனா நீங்க அப்பவே என் மனசுல பதிஞ்சிட்டீங்க. அதுவும் மாப்பிள்ளையா வந்தப்ப நீங்க தான் எல்லாம்னு நான் முடிவு பண்ணிட்டேன். எனக்கு நீங்க வேணும். எனக்கு உங்க கூட இருக்கணும். பிளீஸ் ஏதாவது பண்ணுங்க. என்னை எனக்காகவே கூட விட்டுக் கொடுத்துறாதீங்க. நீங்க இல்லைன்னா நான் இல்லாமலே போய்ருவேன்”, என்று மறைமுகமாக அவள் காதலைச் சொல்லி அவனுக்கு நிம்மதியைக் கொடுத்தாள்.
“லூசு வீட்டுட மாட்டேன்னு தானே டி சொல்லிட்டு இருக்கேன்? நமக்குன்னு தான் அந்த கடவுள் முடிச்சு போட்டுருக்கார். எப்பவும் ஊருக்கு கார்ல போற நான் ஏன் அன்னைக்கு பஸ்ல வரணும்? எதுக்காக உன்னைப் பாக்கணும்? நீ எதுக்கு சேகர் அண்ணனுக்கு தெரிஞ்ச பொண்ணா இருக்கணும்? எல்லாமே விதி. அதனால நம்மளை அந்த கடவுளே சேத்து வைப்பார். எங்க அம்மா பேசினதுனால தான் உங்க அப்பா அப்படி முடிவு பண்ணினார். எங்க அம்மாவை மாத்த என்னால முடியாது. ஆனா உங்க அப்பாவை சம்மதிக்க வைக்க முடியும். நான் பேசிக்கிறேன், நீ கவலைப் படாம இரு”, என்று சொல்ல சரி என்றாள் கயல்விழி.
அடுத்த நாளே சமுத்திரத்தை நேரில் சென்று பார்த்து பேசினான் தமிழ். அவரிடம் எவ்வளவோ போராடி விட்டான். ஆனால் அவர் சொன்னது ஒன்றே ஒன்று தான். “என் மக சந்தோஷம் எனக்கு முக்கியம் தம்பி. எங்க வீட்ல அவ ஒரு நாளும் சந்தோஷமா இல்லை. அதை என்னால தட்டி கேக்க முடியலை. என்னோட சபல புத்தி என்னை அடிமையா ஆக்கி வச்சிருச்சு. பொண்டாட்டியை கண்டிக்கிற உரிமையை நான் எப்பவோ இழந்துட்டேன். பின்ன எப்படி மகளுக்காக பேசுவேன்? அவ போற வீட்ல நல்லா இருக்கணும். ஆனா உங்க அம்மா வாழவே விட மாட்டேன்னு சொல்லிட்டு போயிருக்கு. என் பொண்டாட்டி வேற என் கயல் நல்லா இருக்க கூடாதுன்னு இந்த சம்பந்தத்தை முடிங்கன்னு சொல்லிட்டு இருக்கா. ஆனா நான் சம்மதிக்க மாட்டேன்”, என்று தெளிவாக சொல்லி விட்டார்.