வெளியே நின்றிருந்த சத்யாவிடம், “யார் வேணும்?” என்று கொஞ்சம் கறாரான குரலில் வினவினார் முத்துலட்சுமி.
“ராகமாலிகா வீடு??”
“இதான்.. நீங்க யாரு?”
“நான் ராகாவோட ஃப்ரெண்ட். பெங்களூர்ல இருந்து வர்றேன்” என்று தடுமாற்றம் இல்லாமல் கூறினான் சத்யா.
கிரில் கேட் கதவினைத் திறந்து அவனை உள்ளே அனுமதித்தவர், “வாங்க, உள்ள வாங்க” என்று விட்டு, சத்யாவை எடை போட்டுக் கொண்டே, “உட்காருங்க” என்று ஹாலின் சோஃபாவைக் காட்டினார்.
உள்ளிருந்து வெளிப்பட்ட ராகாவின் தந்தையிடம், “ராகா ஃப்ரெண்டாம்.” என்று அறிமுகப்படுத்திவிட்டு, ஹாலில் குப்புர விழுந்து கிடந்த மூன்று உருவங்களையும் தட்டி எழுப்பினார். “ஏ, ஏ, எந்திரிடீ! யாரோ உன் ஃப்ரெண்ட் பெங்களூர்ல இருந்து வந்திருக்காங்க பாரு! எந்திரிடீ”
ராகா, “ம்மா, நாளைக்கு வரசொல்லும்மா” என்று தூக்கத்திலேயே சொல்லிவிட்டு புரண்டு படுக்க, முத்துலட்சுமி, “சாரி, தம்பி,நேத்து ரெண்டு மணி வரைக்கும் படம் பார்த்துச்சுக, அதான். நீங்க உட்காருங்க. நான் காபி கொண்டு வர்றேன். ஏங்க நீங்க எழுப்புங்க” என்று கணவரைப் பணிந்துவிட்டு உள்ளே சென்றார்.
ராகாவின் தந்தை மகளின் அருகே மண்டியிட்டு, அவள் தலையை மெல்லமாய் வருடி, “ராகா, தங்கம் எந்திரிடா! உன்னைத் தேடி கெஸ்ட் வந்திருக்காங்க பாரு, எந்திரிம்மா” என்று அவ்வளவு அன்பாய் எழுப்பியது பார்க்க, சத்யாவிற்கு நெகிழ்ச்சியாக இருந்தது. ராகாவை மட்டும் அல்லாது, அவள் பக்கத்தில் உறங்கிய தன் தம்பி பிள்ளைகள் இருவரையும் அதே போன்று அவசரப்படுத்தாமல் ஆதுரமாய் எழுப்பினார்.
“எந்திரிச்சு உள்ள போய்ப் படுங்கம்மா! அக்காவ பார்க்க அக்கா ஃப்ரெண்டு வந்திருக்காங்க. நீங்க ரூம்ல போய்ப் படுங்க” என்று தம்பி மக்களை உள்ளே அறையினுள் அனுப்பினார்.
இதற்குள் ராகா தூக்க கலக்கத்தில் கண்களைக் கசக்கிக் கொண்டு எழுந்து அமர்ந்திருந்தாள். முழங்கால் அளவு பேண்டும், தொள தொளவென்றிருந்த அவள் அண்ணனின் சட்டையையும் போட்டுக் கொண்டு படுத்த இடத்திலிருந்து எழுந்து உட்கார்ந்தவளுக்குத் தூக்கம் இன்னமும் விலகவில்லை.
“இதென்ன இவன் எங்க வீட்டு ஹால்ல உட்கார்ந்திருக்கான்?” என்று சத்யாவைப் பார்த்ததும் முதல் எண்ணம் தோன்றியது, அத்தோடு, “ஓ, நான் இன்னும் தூங்கிட்டு தான் இருக்கேனா? கனவா இது? பார்ரா கனவுல எங்கம்மா இவனுக்குக் காபியெல்லாம் போட்டுக் கொண்டு வருது! அட, கொஞ்சம் சிரிச்சா மாதிரி வேற முத்துலட்சுமி மூஞ்சி இருக்கு. அப்போ கண்டிப்பா கனவு தான்!” என்று பேந்தப் பேந்த விழித்தவளிடம், “குட் மார்னிங்” என்று சிரிய புன்சிரிப்புடன் சத்யா கூற, கண்களை நன்றாகத் தேய்த்துக் கொண்டு நடுவீட்டில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தவனைக் கண்டு, இது கனவல்ல என்று உணர்ந்து வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தாள்.
“நீ!, நீங்க எப்படி இங்க? எதுக்கு வந்தீங்க?” என்று வினவ,
“உன்னைப் பார்க்கத்தான். வேற எதுக்கு?” என்று மீண்டும் சிரிப்புடன் சத்யா பதில் சொல்ல, தன் கோபத்தைக் குரலில் வெளிக்காட்டாமல் இருக்க முயற்சித்தாள். இதற்குள், முத்துலட்சுமும், ராகாவின் அண்ணனும் ஹாலிற்கு வந்து அமர்ந்துவிட, வேறு வழியின்றி அவர்களின் முன் நல்லவள் நாடகம் ஆட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
“நீங்க பேசிட்டு இருங்க. நான் வந்துடறேன்” என்று போர்வையை சுற்றிக் கொண்டு தன் அறைக்குள் சென்றவள், முகத்தில் தண்ணீர் தெளித்து தலையைக் கோதிக் கொண்டு ஐந்து நிமிடத்தில் வெளிபட்டாள்.
இதற்குள் சத்யாவும், ராகாவின் தந்தையும் இயல்பாக ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். அண்ணன் பிரதீப் அன்றைய தின ஏற்றுமதி, கார் டீசல் விலையேற்றம், புதிதாக அறிமுகப்படுத்தியிருந்த BV6 பெட்ரோல் ஸ்கீம் என்று ஆண்களின் பிரியமான விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.
ஹாலிற்கு வந்த ராகா, மரியாதை நிமித்தம், பரஸ்பரம் அறிமுகம் செய்து வைத்தாள். “ம்மா, இவர் சத்யசாய்ராம்னு. பெரிய இண்டஸ்டிரியலிஸ்ட். பெங்களூர்ல எங்க ஷ்ருஷ்டீஸ் க்ளையண்ட். இவருக்கும் ஒன்னொரு பெரிய தொழிலதிபர் ராஜமாணிக்கம்னு, அவரோட பொண்ணுக்கும் என்கேஜ்மெண்ட் ஆகப் போகுது. மல்ட்டி மில்லியனர் ஃபேமிலி” என்று வீட்டினரிடம் அறிமுகப்படுத்தினாள்.
மிருதுவையும், திருமணத்தையும், பெரிய தொழிலதிபரென்ற விஷயத்தையும் சொல்லித் தான் அறிமுகப்படுத்த வேண்டும் என்று அவசியமில்லை தான். ஆனால் இதையெல்லாம் சொன்னால் தான் அவனுக்குக் குத்தும் என்று உணர்ந்தே பேசினாள்.
ஆனால், சத்யாவின் முகம் எந்த மாறுதலுக்கும் உட்படவில்லை. சட்டென அங்கே மாற்றம் காட்டியது, ராகாவின் அன்னையும், அவள் அண்ணனும் தான். அது வரையிலும் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்த அண்ணன் ப்ரதீப், சட்டெனப் பேச்சை நிறுத்திக் கொண்டான். முத்துலட்சுமியின் முகமோ ராகாவையும் சத்யாவையும், அவள் கணவரையும் மாறி மாறிப் பார்த்து கலவரப் பட்டது.
“ஒழுங்காக உபசரிக்கவில்லையோ! வெறும் காபி மட்டும் தான் கொடுத்திருக்கேன்! அதுவும் எவர்சில்வர் டம்பிளரில். அழகான காபி கோப்பையை உபயோகித்திருக்க வேணுமோ! இவங்க போனதுக்கு அப்பறம் என்னைத் திட்டுவாளோ?” என்று மகளை சற்றே பதற்றத்துடன் ஏறிட்டது.
ராகாவின் குத்தல் பேச்சு சத்யாவிற்குப் புரிந்த போதும், தன்னைப் பாதித்ததாய் காட்டிக் கொள்ளாமல் அமைதியாவே வீட்டினருடன் பேசினான்.
உள்ளே இருந்த ரேணுவிடம் சென்று, “சத்யா வந்திருக்கான்! இப்போ என்ன பண்ணறது?” என்று குசுகுசுவெனப் பேச, பின்னூடே முத்துலட்சுமி வந்துவிட்டார்.
“ஏண்டீ இவளோ பெரிய பணக்காரன்னு சொல்லற? இங்க உன்னைத் தேடி எதுக்குடீ வந்திருக்கார். அதும் வீடு வரைக்கும்?” என்று கண்களைக் குறுக்கிக் கொண்டு டீச்சர் அவதாரம் எடுக்க,
“ம்மா ஃப்ரெண்டுமா. சும்மா பார்த்துட்டு போக வந்திருக்கார்” என்று ராகா கூறியதை அவள் அன்னை ஏற்றுக் கொள்ளவில்லை.
“பரவயில்ல ராகா, ஆண்டிகிட்ட தானே சொல்லறீங்க. அதுனால ஒண்ணும் பிராப்ளம் இல்ல ராகா” என்று அடுப்படிக்கு காபி கோப்பையை வைக்க சத்யா வருவான் என்று பெண்கள் மூவருமே எதிர்பார்க்கவில்லை.
சத்யா, ராகாவின் அன்னையிடம் திரும்பி, “எங்களோடது சீ சைட் வெட்டிங் ஆண்ட்டி. கடற்கரை ஓரத்தில ரெசார்ட்ல கல்யாணம் பண்ணிக்கப் போறோம். அதுக்காக இங்க ஈ.சி.ஆர்ல டெஸ்டினேஷன் பார்க்க ராகா தான் இன்னைக்கு வர சொன்னாங்க” என்று கொஞ்சமும் தடுமாற்றம் இல்லாமல் கூற, முத்துலட்சுமிக்கு சத்யாவின் பேச்சில் நம்பிக்கை உண்டாயிற்று.
“ஆமா அத்த. நேத்துச் சாயந்தரம் கூட நாளைக்கு வேலை இருக்குன்னு ராகா சொல்லிட்டு தான் இருந்தா! நைட் அரட்டை அடிச்சுட்டு தூங்கினதுல இவரை வர சொன்னதை மறந்துட்டா போல! இல்ல ராகா!” என்று உள்ளே புகுந்து ராகாவைக் காப்பாற்ற முயற்சித்தாள் ரேணு.
“ஆமாம்மா, டெஸ்டினேஷன் பார்க்க வந்திருக்கார். ஆபீஸ் விஷயமா. நான் தான் சொல்ல மறந்திட்டேன்” என்று சமாளிப்பாக பதிலளித்தாள் ராகா அதே பரபரப்பான தொனியில் வேறு வழியில்லாமல்.
“நீங்க இன்னைக்கு வெட்டிங் டெஸ்டினேஷன் பார்க்க வர்றேன்னு சொன்னதை நான் முழுசும் மறந்துட்டேன் சத்யா சார். ஒரு ஹாஃப் எ நவர்ல ரெடி ஆகி வந்திடறேன். நீங்க ஏன் கிட்சனுக்குலாம் வந்துட்டு. ஹால்ல உட்காருங்க சத்யா சார்.” என்று அவனை இழுத்து வந்து தந்தையின் அருகே அமரவைத்துவிட்டு, அவன் கையில் டிவியின் ரிமோட்டைத் திணித்தாள்.
குளித்துத் தயாராகவெனத் தன்னறைக்குள் வந்ததும் தன் கைப்பேசியில் இருந்து அவசர அவசரமாகச் சத்யாவின் எண்ணிற்கு அடிக்க, அவனோ தொடர்ப்பை துண்டித்தான்.
இரு முறை முயன்றும் ஹாலில் அமர்ந்திருந்த சத்யா ராகாவின் கைப்பேசி அழைப்பை ஏற்கவில்லை. அறையினுள் இருந்து தோளில் தொங்கிய துண்டுடன் தொம் தொம்மெனக் கூடம் கடந்து கிட்சனுள் செல்வது போல, சத்யாவை முறைத்துக் கொண்டே இரு முறை நடந்தாள்.
மூன்றாம் தடவை ராகா, ஹாலிற்கு வரவும். “ஏ, குளிக்கப் போறேன்னு சொல்லிட்டு இன்னும் என்ன அங்கையும் இங்கையும் நடந்துட்டே இருக்க! போ, சீக்கரம் குளி, உனக்காகத் தானே சார் வெயிட் பண்ணறார்” என்று முத்துலட்சுமி கடிந்து கொள்ள, அதன் பின்னரே குளியலரைக்குள் சென்றாள்.
தலையில் கொட்டிய குளிர்ந்த நீர் ராகாவின் நெஞ்சு படபடப்பைக் குறைக்க இயலாமல், காலருகே குளம் கட்டி மன்னிப்பு வேண்டியது. “ஆய்ய்யோ! இப்படி ஒரு கல்லூலிமங்கனை நான் பார்த்ததில்லை கடவுளே! அங்க இருந்த வரைக்கும் ஒரு வார்த்தை பேசாம, பிடிச்சு வச்ச மஞ்சப் புள்ளையார் மாதிரி அமுக்கமா இருந்துட்டு, இன்னைக்குத் திடுதிப்புன்னு வீட்டுல வந்து உட்கார்ந்திருக்கான்!”
“என்ன ஆளு இவன்? இவனை நம்பறதா வேண்டாமான்னே தெரியலையே! சரி, டெஸ்டினேஷன் பார்க்கன்னு சொல்லி வெளிய கூட்டிட்டுப் போய், அப்படியே பேசி பெங்களூர் தக்காளிய பேக் பண்ணிட்டு தான் அடுத்தக் காரியம் பார்க்கணும்” என்று கருவி கொண்டே தயாரானாள்.
சொன்னபடிக்கு, அரை மணியில் தயாராகி வீட்டினரிடம் சொல்லிக் கொண்டு சத்யாவுடன் கிளம்பினாள். “ஆனா சும்மா சொல்லக் கூடாது, என்னா ஒரு நடிப்புடா சாமி? எங்கம்மாவோட வெல்லக்கட்டி பையன் பிரதீப் கூட இப்படிப் பண்பா, பொறுமையாலாம் பேச மாட்டான்! இவன் என்னடான்னா, முகத்தில் அந்தச் சிரிப்பை ஆணி அடிச்சு அங்கையே ஒட்ட வச்சுட்ட மாதிரி, என்ன சொன்னாலும் தலையாட்டறான்! சிரிக்கறான்.சை! இந்த நடிப்புலாம் நமக்கு வரமாட்டேங்குதே!” என்று புலம்பிக் கொண்டே வீட்டிலிருந்து வெளியேறினாள்.
கிளம்பும் சமயம், ரேணு, “பத்தரம்! எதுவா இருந்தாலும் எனக்கு மெசேஜ் பண்ணு. பீ இன் டச். கொஞ்சம் யோசிச்சு மட்டும் பேசு மாலி. எமோஷன்ல பேசிட்டு அப்பறமா வருத்தப்படாத” என்று மற்றவர் காதுகளில் விழாதவாறு முணுமுணுத்தாள். அவளிடம் மண்டையை ஆட்டிவிட்டு, சத்யாவின் பின்னால் பலியாடு போல நடந்த ராகாவைக் காண ரேணுவிற்குச் சற்றே சிரிப்பு மூண்டது.
எது நடந்தாலும் அது ராகாவின் நன்மைக்கே நிகழ வேண்டும் என்று ரேணுவின் மனம் ஒரு சின்னப் பிராத்தனையை முன்வைத்தது.
*****
சத்யா ராகாவை அழைத்துக் கொண்டு ஈ.சி.ஆர் ரோட்டில் அந்தப் பிரசித்தி பெற்ற உணவகத்திற்கு அழைத்து வந்திருந்தான். வீட்டிலிருந்து வெளியே வந்ததுமே, “என்ன நினைச்சுகிட்டு இதெல்லாம் பண்ணறீங்க நீங்க? யாரைக் கேட்டுட்டு வீடு வரைக்கும் வந்திருக்கீங்க?” என்று பட்டாசாய் துவங்கியவளிடம்,
“ராகா, நீ கோபப் படறது நியாயம். பட், உன்னைக் காண்டாக்ட் பண்ண எனக்கு வேற வழியே இல்லாம நீ பண்ணிட்ட.” என்று மட்டுமாகக் கூறினான். அதுவும் அவன் குரலில் வருத்தம் தொனித்ததே தவிர, ராகாவின் மீது குற்றம் சாட்டும் பாவனை இருக்கவில்லை.
“இருந்தாலும்..” என்று ராகா பேசத் துவங்க,
“ப்ளீஸ், ஒரு ஹாஃப் எ நவர் உன் கோபம் கேள்வி எதையும் கேட்காம, அமைதியா என் கூட ட்ராவல் பண்ணு. இது என்னோட சின்ன ரெக்வஸ்ட். அந்த ஹாஃப் எ நவருக்கு அப்பறம் நீ என்ன கேள்வி கேட்டாலும் நான் பதில் சொல்லறேன்” என்று கூறிவிட்டு, அவர்களது அப்பார்ட்மெண்டின் வாயிலில் நிறுத்தியிருந்த அவன் காரினை உயிர்பித்து, அவளை உள்ளே ஏறச் சொன்னான்.
ராகாவிற்குப் பல நூறு வார்த்தைகள் தொண்டையில் முட்டி மோதிய போதும், அவன் பேசிய குரலின் அழுத்தம் அவளை அமைதி கொள்ளச் செய்தது. மாம்பலத்தில் இருந்து ஈசிஆர் சென்று சேர எடுத்துக் கொண்ட அந்த முக்கால் மணி நேரப் பயணத்தில் ராகா ஒரு வார்த்தை கூடப் பேசாமல் ரேட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
அந்த உணவகம் வந்து சேர்ந்து, கடலைப் பார்த்தபடிக்கு அமையப்பட்டிருந்த சொகுசு நாற்காலியில் அமரவும், “சொல்லுங்க என்ன விஷயம்?” என்று தீர்க்கமாக அவனைப் பார்த்து வினவினாள்.
சத்யா சிப்பந்தியிடம் பதார்த்தங்களை ஆடர் செய்துவிட்டு, ராகாவினை நோக்கி கைகளைக் கட்டிக் கொண்டு அமர்ந்தான். “நீ தான் வீட்டில இருந்து கிளம்பறப்போ அவளோ கேள்வி கேட்க ஆரம்பிச்ச? என்ன கேட்கணுமோ இப்போ கேளு!” என்று அமைதியான குரலில் கூறினான்.
ராகாவிற்கு என்ன கேள்விகள் கேட்கவேண்டும் என்றே மறந்து விட்டிருந்தது. அவளுக்குச் சத்யாவிடம் கேட்க இருந்த கேள்விகளை விடவும், அவன் பதில் முக்கியமாகத் தோன்றியது. அவன் என்ன முடிவில் இருக்கிறான் என்று தெரிந்து கொண்டு மேலே பேசுவது சிறந்ததாகத் தோன்றியது. ராகா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்ததைக் கண்டு,
“சரி, நீ என்னை எதுவும் கேட்கப் போறதில்லன்னு தெரியுது. ஏன் உன் ஃபோனை எடுக்கலை? ஏன் என் நம்பரை ப்ளாக் பண்ணி வச்சேன்னுலாம் நானும் கேள்வி கேட்க மாட்டேன். இதெல்லாம் ஏன்னு எனக்கு ஏற்கனவே தெரியும். அதே மாதிரி நான் ஏன் உன்னைத் தேடி இவளோ தூரம் வந்தேன்னு உனக்கு தெரியணும். அதானே!”
“நான் நேரா விஷயத்துக்கு வர்றேன். ஆனா, நான் பேசி முடிக்கற வரைக்கும் நீ குறுக்க பேசக் கூடாது. ஒ.கேவா?” என்று வினவ, அவள் சம்மதம் என்று தலையசைத்தாள்.
ஆழ்ந்த குரலில் சத்யா பேசத் துவங்கினான். “எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும். உனக்கும் என்னைப் பிடிக்கும்னு எனக்குத் தெரியும்” என்று அவன் எடுத்ததுமே சொல்லவும், மறுப்பாக ராகா என்னவோ சொல்ல வாயெடுக்க, அவளைக் கையமர்த்திய சத்யா,
“எதுவும் மறுத்து பேச மாட்டன்னு சொல்லியிருக்க!” என்று எச்சரித்துவிட்டு,
அவன் குரலின் ஒலியே ஏதோ பிசினஸ் டீலிங் போலவே தென்பட்டது ராகாவிற்கு. தெளிவாக, கோடு போட்டது போலத் துல்லியமாய் வார்த்தைகள் வந்து விழுந்தன.
“அன்னைக்கு ராத்திரி நடந்த விஷயத்தைப் பத்தி நாம , ஐ மீன், நான் உன்கிட்ட பேசியிருக்கணும். அதை நான் செய்யாம விட்டுட்டேன். அதுக்கான காரணம்னு பார்த்தா, என் மனசோட குழப்பம். மனசு ஒண்ணு சொல்லுது, சுத்தி வேற விஷயம் நடக்குது. எனக்கு எந்தப் பக்கம் போகணும்னு சட்டுனு முடிவெடுக்க முடியலை.”
“இரு இரு நான் முடிச்சுடறேன். நீ எடுக்கற முடிவு, உன்னையும் உன் குடும்பத்தையும் தவிர வேற யாரையும் பாதிக்காது ராகா. ஆனா, எனக்கு அப்படியில்ல, என் கமிட்மெண்ட்ஸ் பெருசு. நான் எடுக்கற முடிவு, என்னை, என் ஃபேமிலியை, என் அப்பாவோட மரியாதையை, எங்க பிசினஸை, என் கம்பெனி ஷேர்ஸைன்னு நிறைய விஷயத்தைப் பாதிக்கும் ராகா. அதையெல்லாம் யோசிச்சு தான் நான் முடிவெடுக்க முடியும்”
“அதுவுமில்லாம, உனக்கும் அதே மாதிரி ஃபீல் இருக்கா இல்லையான்னு நாம பேசிக்காம, மிருது கூட என் கல்யாணம் வேணாம்னு நான் எப்படிச் சொல்ல முடியும்? உடனே பேசாம போனது என் தப்பு தான். ஆனா, அதுக்கான சரியான காரணம் இருக்கு.”
“நான் ஒரு நாள் யோசிச்சு, உன்கிட்ட இதைப் பத்தி பேசிமுடிவெடுக்கலாம்னு நினைச்சப்போ, நீ என்ன பண்ணியிருக்க, மிருதுவோட அப்பாவைப் பார்க்க ஹாஸ்பிடல்ல போயி, “சீக்கரம் உங்க நிச்சயதார்த்தம் வச்சுக்கப் பாருங்கன்னு” மிருதுளாட்ட சொல்லியிருக்க! இதை மிருது என்கிட்ட சொன்னப்போ, என் மனசில ஓடின ஒரே எண்ணம், “அப்போ அன்னைக்கு நடந்த விஷயத்தை நீ பெருசா எடுத்துக்கலை. என்னைப் பிடிக்கலை” இது மட்டும் தான்.”
“அன்னைக்கு நைட் உன் செய்கையும், அடுத்தத் தினம் உன் பேச்சும் என்னை ரொம்பக் குழப்பிடுச்சு ராகா. நான் ஒன்னு நினைச்சு, இந்த ஸ்பார்க், அட்ராக்ஷன்லாம் உண்மைன்னு நம்பி ஒரு டெசிஷன் எடுக்க வந்தா, நீ என்னைப் பயங்கரமா குழப்பிட்ட! மிருதுவோட அப்பா உடல் நிலை வேற என்னை ரொம்பத் தடுமாற வச்சிடுச்சு! நான் எடுக்கற முடிவு அவங்களைக் காயப்படுத்தும். அவங்க அப்பா கோவமா நாலு திட்டு திட்டற நிலைமையில இருந்தா கூடப் பரவாயில்ல.”
“படுத்த படுக்கையா இருக்க மனுஷனை ஏமாத்தற மாதிரி தோணுச்சு. அதனால நான் கொஞ்சம் டயம் எடுத்துகிட்டேன். ஆனா, இதை உன் கிட்ட பேசணும்னு தான் அன்னைக்கு ரெஸ்டரொண்ட் வந்தேன். அந்த நாள் நான் கார்ல இருந்து இறங்காதது ரொம்ப ரொம்பத் தப்பு தான். ஆனா, உண்மையில உன் முகத்தை ரெண்டு மணி நேரமா நான் அப்சர்வ் பண்ணினேன். நீ என்கிட்ட இருந்து தள்ளி இருக்கப் போற!”
“அதான் உன் முடிவுன்னு எனக்கு உன் முகம் அப்பட்டமா சொல்லுது. அப்படியிருக்கப்போ நான் எப்படி இறங்கி வருவேன் சொல்லு?” என்று கேட்டவனின் விழிகள் ராகாவின் முகத்தை விட்டு இம்மியளவு நீங்கவில்லை. ராகாவின் பதிலுக்காக அவன் காத்திருக்கவில்லை. அவன் மனதின் எண்ணத்தை வெளிபடுத்த மட்டுமே செய்தான்.
“என்னோட இந்தக் குழப்பமான மனநிலை உனக்குப் புரியும்னு எனக்குத் தெரியும் ராகா. நான் சொல்லாமலே என் மனசோட எண்ணங்களை உன் முகம் பிரதிபலிச்சு நான் நிறையத் தடவை பார்த்திருக்கேன். எனக்குப் பசிக்கறப்போ, நீயாவே எதாவது சாப்பிடலாமான்னு கேட்ப, நான் வேலை விஷயமா ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கறப்போ, எல்லாமே நல்லதுக்குத் தான் நடக்கும்னு ரொம்பப் பாசிடிவ்வா பேசுவ, இத்தனைக்கும் என் டென்ஷன் என்னன்னு கூட நான் சொல்லியிருக்க மாட்டேன்”
“அன்னைக்கு நீ என்னை அரவணைப்பா அணைச்சுகிட்டதும் அதனால தான். என்னோட ஏக்கம் எல்லாமே நான் சொல்லாமயே உனக்குப் புரியும். எதையும் நான் விளக்கணும்னு அவசியம் இல்ல உனக்கு. அப்படிபட்ட நீ நான் பெரிய குழப்பவாதின்னு நினைச்சிருப்ப! சரியா?” என்று வினவ, ராகா மறுக்காமல் மெல்ல தலையை மட்டுமாய் அசைத்தாள்.
“தெரியும். உன் இடத்தில யாருமே அப்படித் தான் நினைச்சிருப்பாங்க! அது தப்பில்ல! என்னோட கல்யாணம் வெறும் என்னையும் என் குடும்பத்தையும் மட்டுமே பாதிக்கற விஷயமா இருந்தா என்னைக்கோ நான் முடிவெடுத்திருப்பேன். ஆனா, அது அப்படியில்ல. நீ, உன் ஃபேமிலி பத்தி மட்டும் யோசிச்சு, நமக்குச் செட் ஆகுமான்னு டிசைட் பண்ணலாம். நான் நாலு பக்கமும் யோசிக்கணும்.”
“உன் பக்கம் என்ன பிரச்சனை இருக்கும்னு எனக்குத் தெரியலை. ஆனா நான் என் பிரச்சனைகளோட சாம்பிள் சொல்லறேன் கேளு. மொதல்ல மிருது! அவகிட்ட நான் என்ன சொல்லி புரிய வைக்கணும்னு எனக்குத் தெரியலை. மிருதுவோட அப்பா, என் கம்பெனியோட போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ்ல ஒருத்தர். காலத்துக்கும் அவரை நான் மீட் பண்ணியே ஆகணும். தவிர்க்க முடியாது. அப்பறம், எங்க ரெண்டு கம்பெனியோட ஷேர் பிரைஸ். இந்தக் கல்யாணம் நடக்கலைன்னா, அது ஷேர்ஸை அஃபெக்ட் பண்ணும். அதைச் சமாளிக்கணும்.”
“தன்னோட பொண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் தான் கம்பெனின்னு நினைச்சு, மிருதுவோட அப்பா, எங்க கம்பெனில கோடிக்கணக்கா இன்வெஸ்ட் பண்ணியிருக்கார். இப்போ இந்தக் கல்யாணம் நடக்கலைன்னு ஆகறப்போ, அவர் எங்கிட்ட இருந்து போக நினைப்பார். அவருக்குப் பதிலா நான் வேற இன்வெஸ்டர் தேடணும்.”
“இதெல்லாத்துக்கும் மேல, என் அப்பா, மிருது அப்பாவுக்குக் குடுத்த வார்த்தை. என் பையன் உங்க பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்குவான்னு. ஈவன், இப்போ மிருது அப்பாவை ஹாஸ்பிடல்ல பார்க்க வந்தப்போ கூட, “சம்பந்தி எனக்கு எதாவது ஆகிட்டா நீங்க தான் மிருதுவை உங்க பொண்ணு மாதிரி பார்த்துக்கணும்”னு என் அப்பா கையைப் பிடிச்சு அழுதவரை, “நாங்க இருக்கோம். உங்களுக்கு எதுவும் ஆகாதுன்னு பேசி சமாதானம் பண்ணியிருக்கோம்” அந்த நம்பிக்கையை உடைக்கணும்”
“இதெல்லாம் வெளிய இருந்து பார்த்தா “வெறும் பணம், ஷேர்ஸ்னு பேசற” சொத்து பத்து பேச்சு மாதிரி இருக்கும் ராகா. ஆனா, இதையெல்லாமே நான் ஹேண்டில் பண்ணற நிலைமையில தான் இருக்கேன்.”என்றவன் கண்ணாடித் தடுப்புகளுக்கு அப்பால் தூரத்தில் தெரிந்த கடலை வெறித்துக் கொண்டு கைகளைப் பிசைந்தான்.
“இதெல்லாம் என்னோட குப்பைகள் தான் ராகா! எனக்குப் புரியும். இதை உன் தலையில கொண்டு வந்து கொட்டறது தப்பு. அதை நான் செய்யவும் இல்லை. என் முடிவுகள், அதோட கான்சிகுவன்சஸ் எப்படியெல்லாம் இருக்கும்னு சொல்ல வர்றேன் அவளோ தான். உனக்கு நான் சொல்லறது புரியுதா ராகா?” என்று அவன் வினவ. ராகாவிற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
அவள் வரையில், அவள் உள்ளத்து உணர்வுகளை மட்டுமே முன்னெடுத்து தன் முடிவை எட்டியிருந்தாள். மிருதுவை ஏமாற்றுகிறோமே என்ற குற்ற உணர்வு இருந்த போதிலும், சத்யாவிற்கு இத்தனை பிரச்சனைகள் இருக்கக் கூடும் என்றோ, அவன் இவ்வளவையும் சமாளித்தாக வேண்டிய நிலையில் இருக்கிறான் என்றோ அவள் எண்ணியிருக்கவில்லை.
“அவன் பக்க நியாயத்தைக் கேட்க கூட நான் அவகாசம் கொடுக்கவில்லையே. பாவம் அவன்! “என்ற எண்ணம் பிரதானமாகத் தோன்றியது.
“இதெல்லாம் என்னோட அஃபீஷியல் பிரச்சனைகள் தான். இன்னும் நெருங்கின சொந்த பந்தம், சுற்றம் நட்புன்னு வம்பளக்கிற வாய்க்கு தீனி போடணும். பத்தா குறைக்கு மேகஜீன்ல குடுத்த இண்டர்வியூ! அது ப்ரிண்ட் ஆகி வந்துருச்சு. சோ, எதனால எஞ்கேஜ்மெண்ட் கேன்சல்னு முழுசுமா சொல்லாட்டியும், இந்தக் கல்யாணம் நடக்காதுன்னு மீடியாக்கு சொல்லியே ஆகணும்.”
“மத்தது கூடப் பெருசில்ல, சொந்த பந்ததுக்கும் ஃப்ரெண்ட்ஸுக்கும் என்ன பதில் சொல்லறது? எப்படி டிசைன் டிசைனா கம்பி கட்டுனாலும் “என்ன என்ன சொல்லறான் பாருங்க”ன்னு பின்னாடி போய்ப் பேசுவாங்க” என்று சின்ன முறுவலுடன் சொல்ல, ராகாவின் முகத்திலும் புன்னகை அரும்பியது.
சிப்பந்தி கொணர்ந்த பதார்த்தங்களை இருவருமாக மெல்ல மெல்ல உண்ணத் துவங்க, ராகா, எதுவுமே பேசாமல் நீண்டதொரு சிந்தனையில் இருந்தாள். அவளது மெளனமும், அமைதியும் சத்யாவை கவலை கொள்ளச் செய்தன. ஏனென்றால் அவன் அடுத்துச் சொல்லவிருந்த விஷயம் அப்படியானது.
உணவை முடித்துக் கொண்டு சற்றே சாய்வாக நாற்காலியில் அமர்ந்திருந்த ராகாவின் கண்களை இமைக்காமல் பார்த்த சத்யா, “நான் இவளோ நேரம் சொன்ன விஷயம் என்னோட சூழ்நிலை தான் ராகா! உன்னைத் தேடி இவளோ தூரம் நான் வந்தது என்னோட சிட்யூவேஷனை விளக்கறதுக்காக மட்டும் இல்ல. உன்னோட முடிவையும் எதிர்பார்த்து!” என்று சற்றே திணறலாய்ப் பேசினான்.
இப்போது வரையிலும் அவன் குரலில் இருந்த அமைதி விடைபெற்றிருக்க, அந்த இடத்தைச் சிறு அச்சம் வந்து அழுத்தியது. நிமிர்ந்து அமர்ந்து ராகாவின் கண்களைவிட்டு பார்வையை விலக்காமல், “நேத்து மிருது அப்பாவை விசாரிக்க என் டாட் வந்திருந்தார். மிருதுவோட அப்பாவுக்குத் தன்னோட உடல் நிலை பத்தி ரொம்பவும் கவலைவந்துடுச்சு. யாருமே எதிர்பார்க்காத ஸ்டிரோக் இது.
என்னோட அப்பா கையைப் பிடிச்சுகிட்டு, “என் பொண்ணு கல்யாணத்தைப் பார்க்கற குடுப்பினை எனக்கு இருக்குமான்னு தெரியலை. அட்லீஸ்ட் அவ நிச்சயதார்த்தத்தையாவது ஆசைதீர பார்க்க நினைக்கறேன்னு சொல்லி கண்கலங்கிட்டார்” அவரோட கவலை நியாயமானது. என் கூட நிச்சயம் முடிச்சுட்டா, மிருதுவைப் பத்தின கவலையில்லாம இருக்கலாம்னு அவர் ஆசைப்படறார். ஒரு செக்யூர்ட் ஃபீல் வந்துரும் இல்லையா. தனக்கு எதாவது ஆகிட்டாலும், தன்னோட மகளை இவங்க பார்த்துக்கு வாங்கன்னு நம்பிக்கை வந்துடும்.”
“அதனால..” என்று கூறி மெல்ல நிறுத்தியவன், கண்மணிகளில் லேசாய் நீர் கோர்க்க அவன் பேசுவதை இமைக்காமல் கேட்டுக் கொண்டிருந்த ராகாவின் கைகளை மெல்ல அழுத்தி தன் கைகளில் பொத்திக் கொண்டான்.
“அதனால, அடுத்த வாரமே எண்கேஜ்மெண்ட் வச்சுக்கலாம்னு ரெண்டு வீட்டுலையும் முடிவெடுத்திருக்காங்க.” என்று சொல்லி நிறுத்தவும், ராகாவின் கண்களில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் அவன் கைகளில் விழவும் சரியாக இருந்தது.
ராகாவின் கண்ணீர் சத்யாவை குத்திக் கிழித்தது என்றால், கலங்கியிருந்த சத்யாவின் கண்கள் ராகாவின் மனதை பிசைந்தது. “நான் இன்னும் எந்த டெசிஷனும் எடுக்கலை. ஏன்னா, உன்கிட்ட பேசாம என்னால என்ன முடிவெடுக்க முடியும்? அதனால நீ என்ன நினைக்கறன்னு எனக்கு இப்போ தெரிஞ்சா தான் என்னால மேற்கொண்டு யோசிக்க முடியும்” என்றவன்,
“இவளோ நேரம் நான் சொன்னது என்னோட பிரச்சனைகளைத் தான்! அதை வச்சு நீ முடிவெடுன்னு நான் சொல்லலை. ஏன்னா அதெல்லாம் என்னோட ப்ராப்ளம்ஸ். அன்னைக்கு உடனே என்னால ஏன் முடிவெடுக்க முடியலைன்னு நீ யோசிச்சிருப்ப, அதுக்கான காரணங்கள் மட்டும் தான் அது. சரியா?”
“சோ, என் பிரச்சனையெல்லாம் தீர்க்கத் தெரியாம நான் இல்ல, அதெல்லாம் நான் பார்த்துக்குவேன். நீ உன் முடிவு என்னன்னு எனக்குச் சொல்லணும்.அன்னைக்கு என்கிட்ட நைட் என்ன சொல்ல வந்த? ஒரு வார்த்தை மறுத்துப் பேசாம, நீ சொல்லறதை கேட்க நான் தயார் ராகா. ப்ளீஸ் ஸ்பீக் நவ்.” என்று சொல்லிவிட்டு, கைகளை மீண்டும் கட்டிக் கொண்டு அவள் பேசுவதற்காகக் காத்திருந்தான் சத்யா.