இவர்கள் இப்படியே ஒரு கால் மணி நேரம் அமர்ந்திருக்க ஒரு கார் வரும் சத்தம் கேட்டது. யாரென்று எட்டிப் பார்த்தாள் லிசா.
“உங்க மாமா வந்துட்டாரா?”, என்று கேட்டாள் சுசீலா.
“ஆமா, வா போகலாம்”, என்று சொன்னதும் அந்த கார் இவர்கள் அருகில் வர இருவரும் அதில் ஏறிக் கொண்டார்கள்.
இப்போது தான் நிம்மதியாக மூச்சு விட்டாள் சுசீலா.
டிரைவர் இருக்கையில் ஒரு பதினெட்டு வயதுள்ள பையன் தான் அமர்ந்திருந்தான். லிசாவும் அவனும் எதுவோ ஹிந்தியில் பேசினார்கள்.
“இவர் யாரு? உங்க மாமா தானே வருவார்னு சொன்ன?”, என்று கேட்டாள் சுசீலா.
“மாமாவோட பையன் தான் இவன். மாமா தான் அனுப்பிருக்கார். இன்னும் கொஞ்ச நேரத்துல எங்க மாமா வீட்டுக்கு போயிறலாம்”
“நான் ஊருக்கு போகனுமே?”
“இந்நேரம் டிரைன் இருக்காது. காலைலயும் போக முடியாது. ஏன்னா அந்த யுவனோட ஆட்கள் நம்மளை ஸ்டேஷன்ல தான் தேடுவாங்க. ஒரு ரெண்டு நாள் மாமா வீட்ல இருந்துட்டு போகலாம்”, என்று லிசா சொன்னதும் அரை மனதாக சரி என்றாள் சுசீலா.
சிறிது நேரத்தில் மும்பை சிட்டிக்குள் அவர்கள் கார் நுழைந்தது. பல அடுக்கு மாடி குடியிருப்புகள் இருக்கும் பகுதிக்குள் கார் நுழைந்தது.
அந்த இடத்தைப் சுற்றிப் பார்த்த படியே இறங்கினாள் சுசீலா. “இங்கே டீசண்டான ஆட்கள் தான் இருப்பார்கள் போல”, என்று எண்ணிக் கொண்டாள்.
“வா, மாமா வீடு இங்க தான் இருக்கு”, என்று சொல்லி ஒரு அப்பார்ட்மெண்டுக்கு அழைத்து சென்றாள்.
ஆறாவது மாடி வரை லிப்டில் சென்று ஒரு பிளாட் முன்பு நின்று அழைப்பு மணியை அழுத்தினாள் லிசா.
ஒரு பெண் கதவைத் திறந்தாள். கதவைத் திறந்த பெண்ணைக் கண்டு அதிர்ந்து போய் நின்றாள் சுசீலா.
கதவை திறந்தது வேறு யாரும் இல்லை அவளுடைய மாமாவின் பெண் அஸ்வதி.
அஸ்வதி என்று சுசீலா முதலில் கத்த தான் நினைத்தாள். அஸ்வதி தானா என்ற குழப்பத்தில் தான் அமைதியாக நின்றாள். “இது உண்மைலே அஸ்வதியா? ஆனா அவ எதுக்கு இந்த ஊருக்கு வாரா?”, என்று அந்த பெண்ணையே ஆராய்ச்சியாக பார்த்தாள் சுசீலா.
ஆனால் அஸ்வதி சுசிலாவை உடனே இனம் கண்டு கொண்டாள். சுசீலா ஏதாவது உளறி வைத்து விடக் கூடாதே என்று எண்ணியவள் அமைதியாக இருக்கும் படி கண்களால் சைகை செய்தாள்.
அதில் சுசீலா மேலும் குழம்பி போனாள். ஆனாலும் அவள் கண் அசைவை புரிந்து கொண்டு அமைதியாக இருந்தாள்.
“உள்ள வா சுசீலா, இது தான் என்னோட மாமா வீடு. இவ கூட என்னோட மாமா பொண்ணு தான்”, என்று அஸ்வதியை அறிமுகப் படுத்தியதும் சுசீலா மூளைக்குள் மணி அடித்தது.
“மீண்டும் தப்பான இடத்துக்கு வந்து விட்டோமோ? என்னோட மாமா பொன்னை இவளோட மாமா பொண்ணுன்னு சொல்றா? அஸ்வதி எப்படி இங்க வந்தா? அவ புகுந்த வீடு வேற ஊர்ல தானே இருக்கு?”, என்று எண்ணிக் கொண்டிருந்தாள் சுசீலா.
“வித்யா, இந்த பொண்ணுக்கு ஒரு ரூமைக் காட்டு. ரெண்டு நாள் இங்க தான் இருக்க போறா”, என்று சொல்லி விட்டு வேறொரு அறைக்குள் சென்றாள் லிசா.
“வித்யாவா?”, என்று சுசீலா ஏதோ கேட்கவும் தரதரவென்று அவள் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு ஒரு அறைக்குள் சென்றாள் அஸ்வதி.
அறைக்குள் சென்றதும் கதவை மூடி தாழிட்ட அஸ்வதி “நீ இவங்க கிட்ட மாட்டக் கூடாதுன்னு நினைச்சேனே? கடைசில நான் இருக்குற இடத்துலே வந்து மாட்டிக்கிட்டியே?”, என்று அழுதவாறு சொன்னாள் அஸ்வதி.,
“அஸ்வதி நீ என்ன சொல்ற? நான் இங்க இருக்குறது உனக்கு தெரியுமா? ஆமா நீ எப்படி இங்க இருக்க? உன் வீட்டுக்காரர், உன் மாமனார் மாமியார் எல்லாம் எங்க? ஏன் உன்னை வித்யான்னு அந்த பொண்ணு கூப்பிட்டா?”
“அதெல்லாம் பெரிய கதை சுசீ. வாழ்க்கை சீரழிஞ்சு திசை மாறி போயிட்டு. நீ எப்படி இவ கிட்ட மாட்டிக்கிட்ட? நீ முதல்ல எதுக்கு மும்பைக்கு வந்த?”
சுசீலா முகத்தில் ஒரு கசந்த முறுவல் வந்தது. “உன்னோட கல்யாணத்துக்கு வாங்கின கடனுக்காக என்னை உன்னோட அம்மா அப்பா வித்துட்டு போயிட்டாங்க அஸ்வதி”
“என்ன சொல்ற நீ? என்னோட அம்மா அப்பாவா?”
“ஆமா, அங்க உள்ள ஒரு ஆள் கிட்ட விட்டுட்டு போயிட்டாங்க. அங்க இருந்து மும்பைக்கு கூட்டிட்டு வந்தாங்க. ஏதோ ரெட்டின்னு ஒருத்தன் இருக்கானாமே. அவன் கிட்ட என்னை கூட்டிட்டு போகும் போது யுவன்னு ஒருத்தன் என்னை ஆள் வச்சி கடத்திட்டான். ரெட்டி தான் மோசம்னு பாத்தா அவன் அதை விட மோசம். தினமும் கொலை அஸ்வதி. இந்த லிசாவையும் கட்டி வச்சிருந்தாங்க. நான் தான் அவளை காப்பாத்தி அவ கூட நானும் தப்பிச்சு வந்துட்டேன். ரெண்டு நாள்ல என்னை டிரைன் ஏத்தி விடுறேன்னு சொல்லிருக்கா. உன்னை பாத்தது எனக்கு ஷாக்கா இருக்கு, ரொம்ப சந்தோசமாவும் இருக்கு. நீ எப்படி இருக்க? ஏதாவது விஸேஷம் உண்டா? உன் வீட்டுக்காரர் எங்க?”
“ஐயோ சுசீ.. சுசீ.. நீ எவ்வளவு பெரிய பிரச்சனைல மாட்டிட்டு இருக்கன்னு தெரியாம கூலா இருக்க?”
“ஏன் என்ன ஆச்சு? நீ கூட இங்க தானே இருக்க? பேசாம எனக்கு நீ உன் வீட்டுக்காரர் கிட்ட சொல்லி ஒரு வேலை வாங்கித் தரியா?”
“பாவி, இங்க இருந்தா உன் வாழ்க்கையே சீரழிஞ்சிரும் டி. என்னோட அம்மா அப்பா இப்படி பண்ணுவாங்கன்னு நான் நினைக்கலை சுசீ. ஒரு வேளை அவங்க உனக்கு இப்படி ஒரு கொடுமை செஞ்சதுனால தான் என்னோட வாழ்க்கை இப்படி ஆகிருச்சோ என்னவோ?”
“என்ன ஆச்சு அஸ்வதி? உன் வீட்டுக்காரர் வீட்ல உன்னை கொடுமை படுத்துராங்களா?”
“ஐயோ சுசீ…. உனக்கு நான் எப்படி சொல்வேன்? முதல்ல இது வீடே கிடையாது”
“பின்ன?”
“இது தப்பான பொம்பளைங்க இருக்குற இடம். இங்க பணத்துக்காக பல ஆண்கள் வருவாங்க”
“என்ன?…. என்ன சொல்ற.. நீ? அஸ்வதி நீ என்ன சொல்ற?”, என்று அதிர்ச்சியாக கேட்டாள் சுசீலா.
“உண்மையை தான் சொல்றேன் சுசீ. இது அந்த மாதிரி இடம் தான். நீ இந்த மும்பைல தான் இருக்கேன்னு ரெண்டு நாளைக்கு முன்னாடியே தெரிஞ்சிக்கிட்டேன். எப்படியாவது நீ தப்பிக்கணும்னு கடவுள் கிட்ட வேண்டிக் கிட்டேன். இப்படி இங்க வந்து மாட்டிக்கிட்டியே?”
“எனக்கு அதிர்ச்சியா இருக்கு அஸ்வதி.. கொஞ்சம் தெளிவா சொல்லு. நான் இங்க வந்தது உனக்கு எப்படி தெரியும்?”
“இன்னும் சொல்ல என்ன இருக்கு? அந்த ரெட்டி உன்னை வலை வீசி தேடுறான். எல்லாருக்கும் உன்னோட போட்டோ பரப்ப பட்டிருக்கு. எல்லா புரோக்கரும் உன்னை தேடிட்டு தான் இருக்காங்க. இந்த லிசாவும் ஒரு புரோக்கர் தான். நீ யுவன் நாயக் கிட்ட இருக்குற வரைக்கும் உன்னை யாரும் நெருங்கிருக்க முடியாது. அங்க இருந்து இப்படி சாக்கடைல வந்து மாட்டிக்கிட்டியே?”
“ஐயோ என்னல்லாமோ சொல்றியே? எனக்கு பயமா இருக்கு. உனக்கு யுவனைத் தெரியுமா?”
“பையாவை எல்லாருக்குமே தெரியும். பையாவோட இரும்புக் கோட்டைக்குள்ள இருந்து இங்க வந்து மாட்டிக்கிட்டியே? என் தலையெழுத்து தான் இப்படி ஆகிட்டுன்னா உன்னோட தலையெழுத்தும் இப்படியா ஆகணும்?”
“கடவுளே, எனக்கு நெஞ்சு வலிக்குது. நீ எப்படி இந்த இடத்துல அஸ்வதி?”
“விதின்னு சொல்றதா? இல்லை வேற பேர் வைக்கிறதான்னு தெரியலை. என்னைக் கட்டிக்கிட்டவன் நல்லவன் இல்லை சுசீ. பக்கா அயோக்கியன். அவன் கூட மூணு மாசம் தான் இருந்தேன். ஆனா என்னை தினம் தினம் சாகடிச்சான். அதை வார்த்தையால சொல்ல முடியலை. புது இடம் புரியாத மொழி எங்கேயும் தப்பிக்க முடியலை. அம்மா அப்பா கிட்ட கூட பேச முடியலை. அவன் கூட வந்தவங்க அவனோட அம்மா அப்பாவே இல்லை. நடிக்க வந்தவங்க. அவன் தொழிலே பொண்ணுங்களை ஏமாத்தி விக்குறது தான். இங்க மும்பைக்கு கூட்டி வந்து ஒரு வீடு எடுத்து தான் குடித்தனம் வச்சான். ஆனா தினம் தினம் அவனோட பிரண்ட்ஸை கூட்டிட்டு வந்து…, சொன்னா வெக்க கேடு. அவங்க கூட எல்லாம் குடும்ப நடத்த வச்சான்”, என்று சொல்லி ஏங்கி ஏங்கி அழுதாள் அஸ்வதி.
“நெஞ்சம் நடுங்க அவளை அணைத்துக் கொண்ட சுசிலாவின் கண்களிலும் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்தது.
“உண்மை தான் சுசி சொல்றேன். அம்மா அப்பாக்கு போன் பண்ணி பணத்தை கரந்தான். என்னை வீட்டுக்குள்ள வச்சு பூட்டிட்டு தான் போவான். அவங்க கிட்ட பேச விட மாட்டான். தினமும் அடி உதையைக் கூட தாங்க முடிஞ்சது, ஆனா தாலி காட்டின புருசனே வேற ஆம்பளைங்களுக்கு…. என்னால முடியலை சுசீ. எத்தனை முறை சாக முயற்சி செஞ்சேன் தெரியுமா? சாக விடாம காப்பாத்திட்டான். குழந்தை உருவானா ஏதாவது விடிவுகாலம் வரும்னு நினைச்சேன். ஐயோ கொடுமை, ஒரு தடவை நான் சாக முயற்சி செஞ்சப்ப என்னால குழந்தையே பெத்துக்க முடியாத படி செஞ்சிட்டான். அதுக்கப்புறம் என்னை இந்த விடுதில விட்டுட்டு போய்ட்டான். நான் இங்க தான் இருக்கேன்”
“ஐயோ அஸ்வதி உனக்கா இந்த நிலமை வரணும்?”, என்று சுசிலாவும் அழுதாள்.
கண்களில் பெருகிய கண்ணீரை துடைத்த அஸ்வதி “இது அழ நேரம் இல்லை சுசீ. இங்க இருந்து நீ தப்பிக்கணும்”, என்றாள்.
“அப்ப நீ?”
“என்னை விடு. எனக்கு பழகிருச்சு, முதல்ல உன்னை காப்பாத்தினது நிச்சயமா யுவன் தானா? உனக்கு கண்டிப்பா தெரியுமா சுசீ”
“ஆமா அஸ்வதி யுவன் தான். ஏன் கேக்குற?”
“யுவன் பையா எதுக்கு உன்னைக் காப்பாத்தணும்? அவர் எப்பவுமே பொண்ணுங்க விசயத்துல தள்ளி தான் நிப்பார். அப்படிப் பட்டவர் உனக்கு அடைக்கலம் கொடுக்கணும்னா நீ அவர் மனசுல ஏதோ விசயத்துல பாதிச்சிருக்க”
“அஸ்வதி…”
“ஆமா சுசீ, இல்லைன்னா கண்டிப்பா பையா உனக்கு அடைக்கலம் கொடுக்க மாட்டாங்க”
“நான் அவங்க உயிரைக் காப்பாத்துனதுக்காக இருக்கலாம்”, என்று ஆரம்பித்து அந்த கதையைச் சொன்னாள் சுசீலா.
“அதுக்காகன்னா உனக்கு பாதுகாப்பு பன்னிருப்பாங்க. சொந்த வீட்லே அடைக்கலம் கொடுத்துருக்க மாட்டாங்க”
“அது அவங்க அம்மாவை பாக்குறதுக்கு”
“யுவனுக்கு அம்மா இல்லை. இது வேற யாராவது இருக்கும்”
“என்ன சொல்ற? அவங்களுக்கு அம்மா இருக்காங்க. தங்கச்சி இருக்குறா”
“எனக்கு நிஜமாவே நீ யுவன் வீட்ல தான் இருந்தியானு டவுட் வருது சுசீ. பையாவுக்கு அம்மா கிடையாது. குடும்பமே கிடையாது. சரி விடு. உனக்கு பையா நம்பர் தெரிஞ்சா சொல்லு உன்னை காப்பாத்த வழி கேக்கலாம்”
“நம்பர்..நம்பர்.. எனக்கு தெரியாதே….. ஆன்… மாயா நம்பர் தெரியும்”
“அதைச் சொல்லு”, என்று சொல்லி விட்டு தன்னுடைய சட்டைக்குள் மறைத்து வைத்திருந்த போனை எடுத்த அஸ்வதி சுசீலா சொன்ன எண்ணுக்கு அழைத்தாள்.
“ரிங் போகுது. பையா கிட்ட பேசு சுசீ. சீக்கிரம்”, என்று சொல்லி அவள் கையில் போனைக் கொடுத்தாள்.
“நான் பண்ணின காரியத்துக்கு அவன் எப்படி ஹெல்ப் பண்ணுவான்?”, என்று எண்ணிக் கொண்டே போனைக் காதில் வைத்தாள் சுசீலா.
காதல் தொடரும்….