அத்தியாயம் 5
விழி மூடித் திறக்கும்
தருணத்தில் விலகிச் சென்றவனே
உன் வாசத்தை மட்டும்
விட்டு சென்றது ஏனோ?!!!
ஒரு பெண்ணை சுரங்க சிறைக்குள் கொண்டு சென்ற பின்னர் அந்த அறையில் இருந்து அந்த பெண் வெளியே வந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பதால் தான் அங்கே சென்றாள் சுசீலா.
புதிதாக எந்த மரக்கன்றும் நடவில்லை என்றதும் அந்த பெண்ணை அவர்கள் கொலை செய்ய வில்லை என்று புரிந்தது. இந்த பெண்ணையாவது தன்னால் காப்பாற்ற முடியுமா என்று எண்ணி தான் விக்ரம் அந்த சுரங்க அறையை விட்டு மேலே வந்ததும் இவள் உள்ளே சென்றாள்.
இருபது படிக்கு மேல் இறங்கி சென்றவளின் கண்களுக்கு சுற்றிலும் இருந்த இருட்டு தான் தெரிந்தது. மெதுமெதுவாக முன்னேறினாள். சிறிது தூரம் சென்றதும் வெளிச்சம் இருந்தது. அந்த வெளிச்சத்தை நோக்கிச் சென்றாள்.
அருகில் நெருங்கியதும் குடலைப் பிரட்டும் வாடை வந்தது, உடனே மூக்கை பொத்திக் கொண்டாள். பல பேருடைய ரத்தம் கெட்டு போனதால் வந்த வாடை என்று புரிந்து கொண்டாள்.
“கடவுளே அந்த பெண் செத்துப் போயிருக்க கூடாது”, என்று வேண்டிக் கொண்டாள். ஆனாலும் அங்கிருந்து வந்த துர்நாற்றம் அவளை ஏன் தான் இங்கு வந்தோமோ என்று எண்ண வைத்தது.
இருளில் இருந்து வெளிச்சத்துக்கு சென்றதும் அவள் கண்கள் கூசின. ஒரு விசாலமான அறை அங்கு இருந்தது. மெதுவாக சுற்றி பார்வையை ஓட்டினாள்.
ஜன்னல் எதுவுமே அங்கு இல்லை. காற்றோட்டமே அங்கு கிடையாது. அங்கிருந்த சுவர் முழுவதும் ரத்தக் கறை தெறித்து அலங்கோலமாக இருந்தது.
சிறுநீர் நாற்றம் கூட அடித்தது. சிறுநீர் போக கூட வழியில்லாமல் மிருகம் போல் அவர்களை கட்டி வைத்து துன்புறுத்திருக்கிறார்கள் என்று புரிந்தது.
இதற்கெல்லாம் காரணமான யுவன் மேல் கண் மூடித் தனமான வெறுப்பு வந்தது. ஒரு மனிதன் இவ்வளவு அரக்கனாகவா இருப்பான் என்று எண்ணி அந்த அறைக்குள் முன்னேறினாள்.
ஒரு மூலையில் அந்த பெண் கட்டி வைக்கப் பட்டிருந்தாள். அவள் முகத்தில் ஆங்காங்கே ரத்தம் கசிந்து போய் இருந்தது. கை கால்களில் எல்லாம் சிராய்ப்பு இருந்தது.
அவளை பயங்கரமாக அடித்திருக்கிறார்கள் என்று புரிந்தது. “ஒரு பெண்ணைப் போய் இப்படி சித்தரவதை செஞ்சிருக்காங்களே ராட்சசங்க”, என்று எண்ணியவள் எதனால் அந்த பெண் இப்படி கட்டி வைக்கப் பட்டிருக்கிறாள் என்று யோசிக்காமல் போனாள்.
கட்டி வைக்கப் பட்டிருந்த லிசா என்ற பெண்ணோ எதுவோ அரவம் கேட்டு கண் விழித்தாள். எதிரே நின்ற சுசிலாவைக் கண்டதும் லிசா கண்கள் பளபளத்தது.
சுசீலா லிசாவை ஆராய்ச்சியாக பார்க்கவும் “என்னை அடிக்காதீங்க. எனக்கு வலிக்குது”, என்று தமிழில் அலறினாள் லிசா.
அந்த தமிழும் அவள் கதறலும் பூஞ்சை மனம் கொண்ட சுசிலாவை பாதிக்க “நான் உன்னை அடிக்க வரலை. உன்னை இங்க இருந்து காப்பாத்த தான் வந்தேன்”, என்றாள்.
அதில் லிசா முகம் மின்னியது. “நிஜமாவா? என்னை இவங்க கொன்னுட்டா கூட பரவாயில்லை. ஆனா ரொம்ப கொடுமை படுத்துறாங்க. உன்னால எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா?”
“கட்டை எல்லாம் அவிழ்க்க முடியும். ஆனா எப்படி வெளிய போகன்னு தெரியாது”
“அதை நான் பாத்துக்குறேன். நீயும் தமிழ் பேசுற? நீயும் இவங்க கிட்ட மாட்டிக்கிட்டியா? நாம இங்க இருக்குறது ஆபத்து. நான் உன்னையும் காப்பாத்தவா? நாம இங்க இருந்து கிளம்பி நம்ம ஊருக்கே போயிருவோமா?”, என்று ஆசை காட்டினாள் லிசா.
“நிஜமாவா? நிஜமாவே இங்க இருந்து தப்பிக்க முடியுமா? சுத்தி ஆட்கள் இருக்காங்க. நானே இங்க இருந்து எப்படி போகன்னு தான் காத்துட்டு இருக்கேன்”
“ரொம்ப நல்லாதா போச்சு. நீ என்னோட கட்டை அவிழ்த்து விடு. நான் உன்னை வெளிய கூட்டிட்டு போறேன். நாம ரெண்டு பேருமே இங்க இருந்து போயிரலாம். இங்க இன்னும் இருந்தா கண்டிப்பா என்னைக் கொன்னுருவாங்க. என் குடும்பம் ரொம்ப கஷ்டப் பட்ட குடும்பம். இங்க இருந்து தப்பிச்சா தான் அவங்களை வாழ வைக்க முடியும்”, என்று லிசா சொன்னதும் சந்தோஷமாக சரி என்று சொன்ன சுசீலா அவளுடைய கட்டுகளை அவிழ்த்து விட்டாள்.
“வா நாம இங்க இருந்து கிளம்பிறலாம்”, என்று சொல்லி சுசிலாவின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு ஓடினாள் லிசா.
“எப்படி யுவனோட ஆட்கள் கிட்ட இருந்து தப்பிக்க முடியும்? கடைசில ரெண்டு பேருமே மாட்டிக்க போறோமா?”, என்று எண்ணிக் கொண்டே தான் அவள் பின்னே ஓடினாள் சுசீலா. பதுங்கி பதுங்கி இருவரும் கோட்டையை விட்டு வெளியே வந்தார்கள். ஆனால் காவலர்களை மீறி எப்படி கோட்டைச் சுவரை விட்டு வெளியே செல்ல என்று தெரியவில்லை.
கோட்டையின் பின் பக்கம் குறைவான ஆட்கள் காவலுக்கு இருப்பதால் அந்த வழியே செல்ல நினைத்தார்கள்.
சிசிடிவி வழியே நடப்பதை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் யுவன். அவனுடன் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த விக்ரம் “பையா, என்ன இது? அவங்க ரெண்டு பேரும் தப்பிக்க பாக்குறாங்க. நீங்க சிரிச்சிட்டு இருக்கீங்க? நான் போய் எல்லாரையும் அலர்ட் பண்ணுறேன்”, என்றான்.
“பொறு விக்ரம், அவங்களை நாம தடுக்க கூடாது. அவங்க போகட்டும். நம்ம செக்யூரிட்டீஸ் கிட்ட அவங்க ரெண்டு பேரும்
வெளிய போறதுக்கு பாதுகாப்பை கொஞ்சம் தளர்த்த சொல்லு”
“பையா என்ன சொல்றீங்க? அவங்க வெளிய போயிட்டா?”
“போகட்டும்னு தானே சொல்றேன்?”
“லிசா பத்தி கவலையில்லை, அவ கல்ப்பிரிட். ஆனா இந்த பொண்ணு இன்னொசண்ட்”
“இன்னொசண்ட் தான், ஆனா அந்த குணம் சில நேரம் அவளுக்கு ஆபத்து தான். அது மாறனும். யார் எப்படின்னு அவ புரிஞ்சிக்கணும். அது மட்டுமில்ல. அந்த லிசாவை பாலோ பண்ணினா தான் அந்த ரெட்டியை நெருங்க முடியும்”
“ஆனா அந்த பொண்ணு….”
“கவலைப் படாதே, ரெட்டி ஆசைப் பட்ட பொண்ணு மேல வேற யாரும் கை வைக்க மாட்டாங்க. சுசீ அந்த ரெட்டி கையில் கிடைக்கிறதுக்கு முன்னாடி அவளை மீட்டுறலாம். இப்ப நீ நான் சொன்னதை செய். அவங்க வெளிய போனதுக்கு அப்புறமும் அவங்களை பாலோ பண்ண ஆட்களை அரெஞ்ச் பண்ணு”, என்று சொல்லி அமைதியாக அமர்ந்து விட்டான்.
லிசாவும் சுசிலாவும் ஒரு செடிக்கு பின் இருட்டில் மறைந்து அமர்ந்திருந்தார்கள். “பாய்ஸ், நம்ம பையாவுக்கு ஒரு பிஸ்னஸ் டீல் சைன் ஆகிருக்கு. எல்லாரும் வாங்க, அதுக்கு டிரீட் கொடுக்க போறாங்க”, என்று அறிவித்தான் ஒருவன்.
“இப்ப எல்லாரும் போயிட்டா இங்க பாதுகாப்புக்கு யார் நிப்பா?”, என்று மற்றொருவன் கேட்க “இந்நேரம் எல்லாம் எந்த ஆபத்தும் வராது. நீங்க வாங்க”, என்று சொல்லி அனைவரையும் அழைத்துச் சென்றான்.
சட்டென்று லிசாவைப் பார்த்தாள் சுசீலா. “இது தான் சரியான நேரம். நாம வெளியே போயிறலாம். ஆனா மெயின் கேட் வழியா போக முடியாது. வேற வழி இருக்கா?”, என்று கேட்டாள் லிசா.
“பின்னாடி கேட் வழியா போகலாம். அங்க செக்யூரிட்டி கம்மியா இருக்கு. இப்ப இருக்குறவங்களும் போயிருப்பாங்க”
அவள் சொன்னது போலவே பின் பக்கம் கேட்டில் யாருமே இல்லை. சுற்றிலும் இருந்த இருட்டு அவர்களுக்கு உதவியது. புதர்ச் செடிகளுக்கு மத்தியில் பதுங்கி பதுங்கி கேட்டை நெருங்கினார்கள். இருவருக்குமே நெஞ்சம் படபடத்தது.
இவர்கள் கையில் மாட்டினால் நிச்சயம் மரணம் என்று இருவருக்கும் புரிந்து தான் இருந்தது. இதற்கு மேல் இங்கே இருந்தால் ஆபத்து என்று புரிந்தவர்கள் மின்னல் வேகத்தில் அந்த கேட்டைக் கடந்து வெளியே சென்று விட்டார்கள்.
எதனால் கேட் பூட்டுப் போடாமல் இருக்கிறது என்று கூட இருவரும் யோசிக்க வில்லை. “எல்லாம் அவன் செயல்”, என்று கடவுளை எண்ணிக் கொண்டாள் சுசீலா. அந்த அவன் யுவனே தான்.
கேட்டை கடந்ததும் இருவரும் தலை தெறிக்க ஓடினார்கள். இவர்கள் தேடியதும் ஊரா வரும்? முழுக்க முழுக்க காடாக இருந்தது.
செடியா மரமா என்று தெரியாமல் மோதி மோதி ஓடினார்கள். காடுகளின் அடர்த்தி அதிகமாகிக் கொண்டே வந்தது. சுசிலாவுக்கு கனவில் ஓடிய ஓட்டம் நினைவில் வந்தது.
லிசாவோ தப்பிக்க வேண்டும் என்ற வெறியுடன் ஓடினாள். சுசிலாவோ பயத்துடன் தான் ஓடிக் கொண்டிருந்தாள். ஒரு வழியாக இருவரும் எதிர் பார்த்த பை பாஸ் ரோட் வந்தது. நிம்மதியாக மூச்சு விட்டார்கள் இருவரும்.
“இங்கயே நிக்கலாமா? யாரோட காராவது வந்தா சிட்டிக்குள்ள போயிறலாம்”, என்றாள் சுசீலா.
“இல்லை, இங்க நிக்குறது ஆபத்து. நாம அங்க இருந்து தப்பிச்சிட்டோம்னு தெரிஞ்சா அவங்க இங்க தான் நம்மளை தேடி வருவாங்க”
“ஐயோ இப்ப என்ன செய்யுறது?”
“இந்த ரோட்ல கொஞ்ச நேரம் ஓடனும். கொஞ்ச தூரம் போனதுக்கு அப்புறம் தான் யார் கிட்டயாவது லிப்ட் கேக்கணும்”
“ஓ, சரி”, என்று சொல்லி மீண்டும் ஓட்டம் பிடித்தார்கள்.
சிறிது தூரம் ஓடியதும் ஒரு லாரி அந்த பக்கம் வந்தது. லிசா அந்த லாரியை நிறுத்தியதும் இரண்டு பெண்களையும் விசித்திரமாக பார்த்தான் அந்த டிரைவர்.
லிசா அவனிடம் எதுவோ ஹிந்தியில் பேசியதும் அந்த டிரைவர் போனை அவளிடம் கொடுத்தான்.
யாருக்கோ போன் செய்த லிசா எதையோ பேசி விட்டு போனை டிரைவரிடம் கொடுத்தாள்.
டிரைவர் அவர்களை அழைத்து செல்கிறேன் என்று சொல்லியும் பிடிவாதமாக நின்றாள் லிசா. சுசீலா எதுவும் புரியாமல் நின்றாள்.
அந்த லாரி கிளம்பிச் சென்றதும் “அவர் என்ன சொன்னார்?”, என்று கேட்டாள் சுசீலா.
“கூட்டிட்டு போறேன், வாங்கன்னு சொன்னார்”
“அப்படியா? அப்ப நாம ஏன் அவர் கூட போகலை? இங்க இருக்குறதுக்கு அவர் கூட போயிருக்கலாமே?”
“இல்லை அப்படி யாரையும் நம்பி போக கூடாது. இங்க யார் . எப்படின்னு தெரியாது. கவனமா இருக்கணும்”
“சரி தான். நான் எல்லாரையும் நம்பிறேன். இங்க இருந்து நாம எப்படி தப்பிக்கிறது?”
“கட்டாயம் தப்பிக்கலாம். நான் இங்க ஒரு சொந்தக்காரங்க வீட்டுக்கு தான் வந்தேன். அங்க இருந்து தான் என்னை கடத்திட்டாங்க. இப்ப என்னோட மாமாவுக்கு போன் பண்ணிட்டேன். அவர் காரோட வருவார்”
“அப்பாடி நல்ல காரியம் செஞ்ச”, என்று சுசீலா சொன்னதும் இருவரும் ஒரு புதருக்குள் சென்று மறைந்து அமர்ந்தார்கள்.
திடீரென்று யுவன், மாயா, சாரு மூவரும் நினைவில் வந்தார்கள் சுசிலாவுக்கு. அவர்கள் அவளை பாசமாக பார்த்துக் கொண்டது நிஜம். அதை நினைத்து அவள் கண்கள் கலங்கியது.