அத்தியாயம் 5_ 1 விழி மொழி பேசு_கார்த்திகா கார்த்திகேயன்
Post Views:1,825
அத்தியாயம் 5
எந்தன் தனிமையில் உந்தன்
நினைவுகளுக்கு மட்டுமே அனுமதி
கொடுக்கிறது என் இதயம்!!!
“காலைல என்னைக் கூப்பிட வந்தவர் தான் விக்ரமா? விக்ரம் தான் அந்த டிரைவரா? அவர் தான் மாப்பிள்ளையா?”, என்று எண்ணிய ரேகா “நான் சரியா தான் யோசிக்கிறேனா?”, என்று குழம்பி போனாள்.
“இந்த அம்மா சொன்னதை நாம சரியா தான் கேட்டோமோ? ஒரு வேளை என் மனசுல அவன் மாப்பிள்ளையா இருக்கணும்னு ஏக்கம் இருக்குறதுனால இப்படித் தோணுதா? கடவுளே இவங்க சொல்றது மட்டும் உண்மையா இருந்தா எப்படி இருக்கும்?”, என்று எண்ணியவளுக்கு எதுவோ ஒரு தேவலோகத்தில் பறக்கும் உணர்வு வந்தது. அவன் தான் விக்ரம் என்றால் இப்போது அவனது பார்வை, அவன் கோபம் அனைத்துக்கும் விடை கிடைத்தது போல இருந்தது ரேகாவுக்கு.
அவள் முகத்தையே பார்த்த படி இருந்தார்கள் மூன்று பெண்களும். அவளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்றதும் “அம்மா இதை இப்ப தான் கேக்கணுமா? உங்க பையனைப் பத்தி தான் உங்களுக்கு தெரியுமே? அவன் எப்ப கோப படுவான், எப்ப சிரிப்பான்னே நமக்கு தெரியாதே? நீங்க கேட்டதும் ரேகா முகமே ஒரு மாதிரி போச்சு. ரேகா கிட்ட பாத்து பேசுங்கன்னு அவன் சொல்லித் தானே அனுப்பினான்?”, என்றாள் மஞ்சு.
“இல்லை டி. அவன் கைக்குள்ளே இருந்த பிள்ளை பாத்தியா? நீயும் ஆதியும் கூட ஹாஸ்டல் ஹாஸ்டல்ன்னு போய்ட்டீங்க? காலேஜ் படிக்கிற வரைக்கும் விக்ரம் என் கூட தான் இருந்தான். அதனால தான் அவன் முகம் மாறினாலே எனக்கு பதறுது. அதுவும் அவன் ஆசைப் பட்ட கல்யாணம் வேற? ரேகாவை கூப்பிடப் போகும் போது அவ்வளவு சந்தோஷமா போனான் டி. ரேகாவைப் பாக்க போறேன்னு குதிக்காத குறையா போனான். அதனால தான் கேட்டேன்”, என்றாள் சாரதா.
அவர்களின் பேச்சில் தன்னுடைய நினைவுகளில் இருந்து வெளியே வந்த ரேகா “எங்க வீட்ல யாரும் அவங்களை ஒண்ணும் சொல்லலை மா. என்னை இறக்கி விட்டுட்டு உடனே கிளம்பிட்டாங்க”, என்று பாதி பொய்யும் பாதி உண்மையும் சொன்னாள். அவனுடைய முகம் ஒரு மாதிரி இருக்க காரணமே அவள் தானே? இந்த உண்மை இப்போது தான் அவளுக்கே புரிந்தது.
ஆசையாக என்னைப் பாக்க வந்தவனிடம் தான் எப்படி நடந்து கொண்டோம் என்று நினைக்கையில் ரேகாவுக்கு அழுகை வரும் போல இருந்தது.
இப்போது கூட அவன் தான் மாப்பிள்ளை என்று அவள் மனது நூறு சதவீதம் நம்ப மறுத்தது. அவளுக்கு தெளிவாக தெரிய வேண்டும். தன்னை அழைக்க வந்தவன் தான் விக்ரம் என்று இவர்கள் சொன்னதில் பாதி புரிந்தாலும் அவளுக்கு இன்னும் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டியது இருந்தது. அதற்கு என்ன செய்யலாம் என்று மூளையைக் கசக்கி யோசித்தாள்.
அப்போது “அம்மான்னு சொல்லாத ரேகா. அத்தைன்னு சொல்லு”, என்றாள் சாரதா.
“சரி மா… சாரி…. சரி அத்தை”, என்றாள் ரேகா.
“ஏன் மா, நான் எல்லாம் எங்க மாமியாரை அம்மான்னு தான் கூப்பிடுறேன். ரேகாவும் உங்களை அம்மான்னு கூப்பிட்டா என்ன? நீங்க அவளுக்கு அம்மாவா இருக்க மாட்டீங்களா?”, என்று கேட்டாள் மஞ்சு.
அதற்கு சாரதா பதில் சொல்வதற்குள் “அத்தை கண்டிப்பா ரேகாவுக்கு அம்மாவா தான் இருப்பாங்க. ஆனா அவங்களுக்கு அத்தைன்னு கூப்பிட்டா தான் பிடிக்கும். அதுல தனியா ஒரு உணர்வு வரும்னு சொல்லுவாங்க. அப்படி தானே அத்தை? நான் கல்யாணம் முடிஞ்சு வந்த புதுசுல அம்மான்னு கூப்பிட்டதுக்கு நீங்க அப்படித் தானே என் கிட்ட சொன்னீங்க?”, என்று கேட்டாள் காயத்ரி.
“ஆமா காயத்ரி. அம்மான்னு கூப்பிட்டா மகளா மட்டும் தான் நினைக்கத் தோணும். இதுவே அத்தைன்னு கூப்பிட்டா எனக்கு மருமகளை மகனோட சரி பாதியா நினைக்கத் தோணுது. உன்னைப் பாத்தா எனக்கு ஆதி தான் நினைவுக்கு வருவான். அவன் மேல இருக்குற மொத்த அன்பும் உன் மேல திரும்பும். இனி ரேகாவைப் பாத்தா விக்ரமோட பொண்டாட்டியா தான் நினைக்க தோணும். அம்மான்னு கூப்பிட்டா மஞ்சு மாதிரி நினைக்கத் தோணாதான்னு நீங்க நினைக்கலாம். ஆனா எனக்கு என்னமோ அப்படி தான் பிடிச்சிருக்கு”, என்றாள் சாரதா.
அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ரேகாவுக்கோ “கடவுளே இப்ப இந்த ஆராய்ச்சி எல்லாம் தேவையா? அம்மான்னு கூப்பிட்டா என்ன? அத்தைன்னு கூப்பிட்டா என்ன? நான் மாப்பிள்ளை யாருன்னு தெரியாம குழம்பிட்டு இருக்கேனே? அதை யாரும் தெளிவு படுத்தக் காணுமே?”, என்ற எண்ணம் தான் வந்தது.
“வாயுள்ள பிள்ளை தான் பிழைக்கும் ரேகா. வாயை விட்டு கேட்டுரு. இல்லைன்னா உன்னோட முகமே அவங்களுக்கு எதையாவது காட்டிக் கொடுத்துரும்”, என்று ரேகாவின் மனது அவளை எச்சரிக்க அடுத்த நொடி தைரியத்தை வரவழைத்துக் “உங்க குடும்ப போட்டோ இருந்தா காட்டுங்களேன்”, என்று மஞ்சுவிடம் கேட்டாள் ரேகா.
“இப்ப எதுக்கு ரேகா போட்டோஸ்? வீட்டுக்கு வா. எல்லாரையும் நேர்ல பாக்கலாம். எல்லாரும் நம்ம வீட்ல தான் இருக்காங்க”, என்று சொன்னாள் காயத்ரி.
“இல்லை… முதல் நாளே எல்லாரையும் தெரிஞ்சிக்க முடியலைனா கூட, நெருங்கின சொந்தத்தை மட்டும் தெரிஞ்சிக்கலாம்னு தான் கேட்டேன்”, என்று சொல்லி சமாளித்தாள் ரேகா.
“அவ தான் ஆசையா கேக்குறால்ல? அதான் போன்ல எல்லாரோட போட்டோவும் இருக்கே? அவளுக்கு காட்டுங்க”, என்று சாரதா சொன்னதும் அவளை நன்றியோடு நோக்கினாள் ரேகா.
“இரு காட்டுறேன்”, என்று தன்னுடைய போனை எடுத்த மஞ்சு அவளிடம் புகைப்படங்களை காட்ட ஆயத்தமானாள். தன்னை அழைக்க வந்தவன் அதில் இருப்பானா என்ற எதிர்பார்ப்புடன் அதை பார்க்க ஆரம்பித்தாள் ரேகா.
மஞ்சு முதலில் மஞ்சுவின் குடும்ப புகைப்படத்தை தான் காட்டினாள்.
“இது நான், இது என்னோட கணவர். அவர் பேர் சுதாகர். டெல்லில போலீசா இருக்கார். அப்புறம் இது என்னோட பொண்ணு. பேர் அஞ்சலி. இது என்னோட மாமனார் மாமியார். நாங்க டெல்லில தான் இருக்கோம். இப்ப உங்க கல்யாணத்துக்கு தான் வந்தோம்”, என்று மஞ்சு சொல்லிக் கொண்டிருக்க “கடவுளே இப்ப உங்க குடும்ப போட்டோவைப் பாக்குறதா முக்கியம்? உங்க தம்பியைக் காட்டுங்களேன்”, என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள் ரேகா.
“அடுத்தது என்னோட அம்மா அப்பா போட்டோ. அம்மா இங்க இருக்காங்க. அப்புறம் இது அப்பா. வீட்ல இருக்கார்”, என்று சாரதா மற்றும் சேதுபதி புகைப்படங்களைக் காட்டினாள் மஞ்சு.
“சரிங்க அண்ணி”, என்று சொன்ன மஞ்சு “இதோ காயத்ரி அண்ணி குடும்பம். இது என் அண்ணன் ஆதித்யா. அவங்களுக்கு கல்யாணம் முடிஞ்சு ஒன்பது மாசம் தான் ஆகுது. அதனால பேபி இல்லை. அப்புறம் இது காயத்ரி அண்ணியோட அம்மா அப்பா. இது காயத்ரி அண்ணியோட தங்கை. பேர் உஷா. இவளைத் தான் விக்ரமுக்கு கட்டி வைக்கலாம்னு நினைச்சோம். ஆனா அவன் என்ன சொன்னான் தெரியுமா? ரேகாவைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டான்”, என்று சொல்லி சிரித்தாள் மஞ்சு.
அவள் சொன்ன விஷயங்கள் எல்லாம் ரேகாவை பல மனநிலையில் ஆழ்த்தியது. என்னை மட்டும் தான் திருமணம் செய்வேன் என்று சொன்னானா? எதனால்? ஏன்? எப்படி என்று பல கேள்விகள் அவளுக்குள் உதயமானது. எதிர்பார்ப்பு, குழப்பம், தவிப்பு, ஆசை என அனைத்து உணர்வுகளாலும் அவள் மனது இப்போது நிறைந்திருந்தது.
அடுத்து மஞ்சு என்ன காட்டுவாள் என்று தவிப்பாக போனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ரேகா. அவள் கையில் போனைக் கொடுத்திருந்தாலும் அவசர அவசரமாக திருப்பியிருப்பாள். ஆனால் மஞ்சுவே தான் அவளுக்கு காட்டிக் கொண்டிருந்தாள். மஞ்சுவுக்கு அவள் தவிப்பும் எதிர்பார்ப்பும் எப்படி புரியும்?
ஆனால் அவள் தவிப்பை கடவுள் உணர்ந்து கொண்டாரோ என்னவோ? “ரேகா, அடுத்து முழுக்க உன் ஆள் போட்டோ தான். விக்ரம் சரியான செல்ஃபி பைத்தியம். எல்லார் போன்லயும் அவன் தான் இருப்பான். இப்ப என் மக அஞ்சலியும் அப்படியே மாமாவை போல தான் வரா. இங்க பாரு ரெண்டு பேரும் எவ்வளவு போட்டோ எடுத்துருக்காங்க”, என்று சொன்ன மஞ்சு வரிசையாக போட்டோவைக் காட்டினாள்.
அவளுடைய போனையே பார்த்த படி ரேகாவின் கண்கள் நிலை குத்தி இருந்தது. காலையில் அவளை அழைக்க வந்த விக்ரம் தான் அனைத்து போட்டோக்களிலும் சிரித்துக் கொண்டிருந்தான். சந்தோசத்திலா இல்லை வேறு ஏதோ ஒரு உணர்விலா? எதுவென்று தெரியாமலே ரேகாவின் கண்கள் கலங்கியது.
பின் இருக்கும் இடம் உணர்ந்து தன்னைச் சமாளித்துக் கொண்டவள் இந்த முறை எந்த தயக்கமும் இல்லாமல் “ஒரு நிமிஷம் போனைத் தாங்களேன்”, என்று சொல்லி மஞ்சு கையில் இருந்து போனை வாங்கினாள். பின் அவன் போட்டோவையே அவள் கண்கள் வெறித்துப் பார்த்தன. அலையலையான கேசமும் எப்போதும் சிரிக்கும் உதடுகளும், ஷேவ் செய்யப் பட்ட கன்னமும், அனைத்து பெண்களும் விரும்பும் அளவான மீசையும், அடர்த்தியான இமையும், கூரான கண்களும் என அவ்வளவு கம்பீரமாக இருந்தான்.
விக்ரம் என்ற பெயருக்குறிய கம்பீரம் அவனிடம் இருந்தது. “பொருத்தமான பேர்”, என்று எண்ணிக் கொண்டாள் ரேகா.
“ஏய் என் மகனை கிண்டல் பண்ணாத டி. இப்ப இருக்குற முகம் கொஞ்ச நாள் கழிச்சு இருக்குமா? அதுக்கு தான் என் மகன் போட்டோவா எடுக்குறான். நாளைக்கு நம்மளை நாமே பாத்து ரசிக்கலாம்ல?”, என்று சொல்லி சிரித்தாள் சாரதா.
“உங்க மகனைச் சொன்ன உடனே பரிஞ்சு பேச வந்துருவீங்களே? நான் உண்மையைத் தானே சொன்னேன்? அப்படி தானே காயத்ரி அண்ணி?”, என்று கேட்டாள் மஞ்சு.
“ஆமா மஞ்சு, இங்க பாரு. என் போன்லயும் எவ்வளவு போட்டோ எடுத்து வச்சிருக்கான்னு?”, என்று காண்பித்தாள் காயத்ரி.
மஞ்சுவும் சாரதாவும் சிரித்தார்கள். சுற்றி இருந்த அனைவரின் பேச்சு எதுவுமே ரேகா மனதில் பதியவே வில்லை. கண்ணில் விழுந்த அவன் புகைப்படத்தையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள். வரிசையாக இருந்த அவன் போட்டோக்களை பார்த்துக் கொண்டே இருந்தாள்.
“விக்ரம் விக்ரம்.. அவனே தான் இவன்”, என்று அவள் மனது துள்ளியது. “கடைசியில் இவன் தானா மாப்பிள்ளை? ஐயோ என்ன இது இவ்வளவு இனிய திருப்பம்? இது கனவா நினைவா?”, என்று பூரித்து போனாள்.
“பாத்தியா மஞ்சு இவ்வளவு நேரம் நம்ம போட்டோ எல்லாம் பாக்கும் போது எல்லாம் ரேகா முகம் சாதாரணமா இருந்துச்சு. அவ ஆள் போட்டோ பாத்ததும் எப்படி அவ முகம் டாலடிக்குது பாரு”, என்று காயத்ரி சொன்னதும் தான் நடப்புக்கு திரும்பினாள் ரேகா.
தன்னை விக்ரமுடன் சேர்த்து கிண்டல் செய்ததும் அவளை அறியாமலே வெட்கம் அவள் முகத்தில் வந்திருந்தது. அவளது முகச் சிவப்பையும் வெட்கத்தையும் பார்த்த மற்ற மூன்று பெண்களுக்கும் மனது நிறைந்து போனது.
“அண்ணி, அட ஆமா. நான் இப்ப தான் பாக்குறேன். ரேகா உன் முகம் அப்படியே சிவந்து போச்சு. விக்ரம் பாத்தானோ அவ்வளவு தான். அம்மாடியோ எவ்வளவு அழகா இருக்க?”, என்று சிரித்தாள் மஞ்சு. அதைக் கேட்டு ரேகா மேலும் சிவந்து போனாள். அவள் முகத்தில் கல்யாண களையே இப்போது தான் வந்திருந்தது.
“அவங்க சொல்றதை பெருசா எடுத்துக்காத மா. இன்னும் கொஞ்ச நேரத்துல விக்ரம் உன் பக்கத்துல இருப்பான். அப்ப இவங்க உன்னைக் கிண்டல் அடிச்சா அவன் இவங்களைப் பாத்துக்குவான்”, என்றாள் சாரதா.
“அவன் இருந்தா நாங்க பயந்துருவோமா அத்தை? அவனையும் சேத்து கிண்டல் அடிப்போம். அப்படி தானே மஞ்சு?”, என்று கேட்டாள் காயத்ரி.
“அப்படிச் சொல்லுங்க அண்ணி. நம்ம கல்யாணம் நடந்தப்ப அவன் எப்படி எல்லாம் நம்மளை கிண்டல் பண்ணினான். இந்த தடவை அவனை நாம யாரும் சும்மா விடக் கூடாது. எல்லாரும் சேத்து வச்சு அவனுக்கு செய்யலாம். அதுவும் அவன் ஆசைப்பட்ட ரேகாவை கிண்டல் அடிச்சா போதும்? அவன் முகமும் மலர்ந்துரும்”, என்று சொல்லி சிரித்தாள் மஞ்சு.
ரேகாவுக்கு இன்னும் இன்னும் அவர்கள் பேசுவது பிடித்திருந்தது. தன்னவனைப் பற்றிய பேச்சைக் கேட்க எந்த பெண்ணுக்கு தான் பிடிக்காது? அவள் முகத்தில் அதே பூரிப்பு அப்படியே இருந்தது. மனதுக்கு பிடித்தவனுடன் திருமணம் என்னும் போது பூரிப்பு வராமல் எப்படி இருக்கும்?