எனைச் சுற்றி ஏகாந்தம்
அத்தியாயம் 6
தமிழ் வீட்டுக்கு வரும் போது சரோஜா திண்ணையில் தான் அமர்ந்திருந்தாள். “இந்த அம்மா கிட்ட கல்யாணம் பத்தி தகவல் சொல்லணுமே? எப்படிச் சொல்ல?”, என்று எண்ணமிட்டவன் மற்றொரு திண்ணையில் அமர்ந்து தங்கைகளை கான்பரன்ஸ் காலில் அழைத்தான்.
“சொல்லுண்ணா”, என்றாள் தேவி.
“உங்க மூணு பேர் கிட்டயும் ஒரு முக்கியமான விஷயம் பேச தான் கால் பண்ணினேன்”, என்று ஆரம்பிக்க சரோஜாவும் அந்த பேச்சைக் கவனிக்க ஆரம்பித்தாள்.
தேவி என்ன விஷயம் என்று கேட்க “சேகர் அண்ணனும் மாமாவும் சேந்து எனக்கு ஒரு பொண்ணு பாத்தாங்க. அவ பேர் கயல்விழி. நேர்ல போய் பாத்தோம். சேகர் அண்ணன் கூட தான் வேலை பாக்குறா. எனக்கு ரொம்ப பிடிச்சிருச்சு. உங்க கிட்ட கேக்காமலே நான் சம்மதம் சொல்லிட்டேன்”, என்றான்.
“இதுல என்ன அண்ணா இருக்கு? உன் வாழ்க்கை இப்படியே போயிருமோன்னு தான் பயந்தோம். உனக்கு ஒரு நல்லது நடந்தா சந்தோஷம் தாண்ணா”, என்றாள் ஜெயா. மற்றவர்களும் ஆமா என்றார்கள்.
“நீங்க இப்படிச் சொல்றீங்க? ஆனா சில பேர் நான் நல்லா இருக்க கூடாதுன்னு நினைக்கிறாங்க. கயல் வீட்ல போய் உங்க பொண்ணை வாழ விட மாட்டேன்னு சவால் விட்டுருக்காங்க”
“அண்ணா அம்மாவா அப்படி பண்ணினது?”, என்று தேவி கேட்க “ஆமா”, என்றான்.
“இந்த அம்மாவுக்கு கிறுக்கு தான் பிடிச்சிருக்கு. அண்ணே அது பேச்சை விடு. அது என்ன வேணும்னாலும் பேசட்டும். நாங்க அந்த பொண்ணு வீட்ல வந்து பேசுறோம். எங்க அம்மாவுக்கு கொஞ்ச நாளா மனநிலை சரியில்லை, அதான் அப்படி பேசிட்டுன்னு சொல்றோம். உனக்கு பிடிச்ச பொண்ணு தான் எங்களுக்கு அண்ணி. நீ மேற்கொண்டு பேசுண்ணா. எங்களுக்கு அண்ணி போட்டோ மட்டும் அனுப்பி வை”, என்று தேவி சொல்ல “போட்டோ இல்லை டா, நாளைக்கு எல்லாரும் கிளம்பி நம்ம வீட்டுக்கு வறீங்களா? நேர்ல போய் பூ வச்சிட்டு வந்துறலாம். வைஷுவையும் கூட்டிட்டு போகலாம்”, என்று சொல்ல அவர்களும் சரி என்று சொன்னார்கள்.
போனை வைத்து விட்டு அன்னையை நிமிர்ந்து பார்க்க அவளோ அவனை முறைத்த படி இருந்தாள். ஆனால் எதுவும் சொல்ல வில்லை. நாளை அனைவரும் கயலைப் பார்க்க வருவதை சமுத்திரத்திடம் சொல்லி அனுமதி வேண்டினார் சிதம்பரம்.
சொன்னது போல சரோஜாவைத் தவிர மற்ற அனைவரையும் அழைத்துக் கொண்டு கயல் வீட்டுக்குச் சென்றான் தமிழ். தங்கைகள், தங்கையின் கணவர்கள், வைஷ்ணவியின் குடும்பம் என வந்த மொத்தக் கூட்டத்தையும் கண்டு கயலே திகைத்து விழித்தாள். ஆனால் அனைவருமே கயலிடம் தங்கள் வீட்டு பெண் போல உரிமையாக பேச மனதளவில் இத்தனை வருடம் தனிமையாக இருந்த கயலுக்கு அவ்வளவு சந்தோசமாக இருந்தது.
அவர்களுக்காக சமுத்திரம் வேணியிடம் சமைக்கச் சொல்ல அவளோ “என்னால இவ்வளவு பேருக்கு செய்ய முடியாது. டீ தான் போட்டுக் கொடுப்பேன்”, என்று சொல்லி விட்டாள்.
மதிய உணவு உண்ணும் நேரத்தில் டீ கொடுப்பது சமுத்திரத்துக்கு சங்கடமாக தான் இருந்தது. ஆனால் தமிழ் வீட்டில் அதை பெரிதாக எடுக்க வில்லை. ஏனென்றால் அனைவருக்கும் கயலின் நிலை தெரியுமே?
முதல் நாள் வெறுங்கையுடன் பெண் பார்க்க வந்த மீனாட்சி இன்று கயலுக்கு தலை நிறைய பூ வைத்து உறுதி செய்தாள்.
தமிழுக்கு கயலிடம் தனியாக பேச வேண்டும் என்று அவ்வளவு ஆசை இருந்தது. ஆனால் சுற்றி அனைவரும் இருப்பதால் அதை அடக்கிக் கொண்டான். தமிழின் தங்கைகள் மூவருமே கயலை அண்ணி அண்ணி என்று அழைக்க கயலுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.
அடுத்து வந்த நாட்கள் மணமக்களுக்கு அழகாக கடந்தது. நேரில் பார்க்க முடிய வில்லை என்றாலும் தினமும் இரவு இருவரும் போனில் பேசி சந்தோஷப் படுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்கள். இருவருக்கும் இத்தனை வருடம் இருந்த இருண்ட வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக வண்ணமயமாகிக் கொண்டிருந்தது. அப்போது ஒரு நாள் கயலைத் தேடி அவளது அலுவலகத்துக்கே சென்றாள் சரோஜா.
அன்று சேகரும் ஏதோ மீட்டிங் சென்றிருந்ததால் சரோஜாவைக் கவனிக்க வில்லை. முதலில் அது யாரென்று கயலுக்கு கூட தெரிய வில்லை.
“நீங்க யாருமா? உங்களை நான் பாத்தது இல்லையே?”, என்று குழப்பமாக கேட்டாள் கயல்.
“ஆமா ஆமா, என்னை எப்படி தெரியும்? ஆனா ஆம்பளைங்கன்னா உனக்கு உடனே தெரிஞ்சிரும்”, என்று சரோஜா சொல்ல கயல் குழம்பினாள். கூடவே சரோஜாவின் பேச்சு கொஞ்சம் எரிச்சலையும் கொடுத்தது.
“நீங்க யாரு? எதுக்கு இப்படி பேசுறீங்க?”
“என்ன டி நல்லவ மாதிரி கேள்வி கேக்குற? என் வீட்டுக்கு மருமகளா வரணும்னு என் பையனை மயக்கி வச்சிருக்க? ஆனா என்னைத் தெரியலை அப்படி தானே? நான் இதை நம்பனுமா?”
“நீங்க தமிழோட அம்மாவா?”, என்று வியப்பாக கேட்டாள்.
“ஆமா”
“எப்படி இருக்கீங்க மா?”
“இந்த பசப்புற வேலை எல்லாம் என் கிட்ட வேண்டாம். ஆமா உனக்கு ஊர் உலகத்துல வேற ஆம்பளைங்களே கிடைக்கலையா? உனக்கு என் மகன் தான் கிடைச்சானா?”, என்று சரோஜா கேட்க கயலின் கண்கள் கலங்கி விட்டது. இப்படிப் பட்ட பேச்சை அவள் இது வரை கேட்டதில்லையே.
அவள் கண்ணீரைக் கண்ட சரோஜா மேலும் தொடர்ந்தாள். “அவனுக்கு நான் எப்பேற்பட்ட பொண்ணு பாத்து வச்சிருக்கேன் தெரியுமா? ஆனா அந்த வீணாப் போனவன் உன்னைத் தான் கட்டுவேன்னு சொல்றான்? இங்க பாரு டி, எனக்கு என் மகன் வாழ்க்கை முக்கியம். அவன் பெரிய இடத்துல சந்தோஸமா இருக்கணும்? உன்னைக் கட்டினா என் மகன் எப்படி சந்தோஷமா இருப்பான்? நீயே உன் வீட்ல அண்டிப் பிழைச்சிட்டு இருக்கியாமே? நாளைக்கு அவனுக்கு ஒண்ணுன்னா உன் குடும்பம் வந்து நிக்குமா? உன் வீட்ல உன்னைத் தள்ளி விட நினைச்சு தானே என் மகனுக்கு கொடுக்குறாங்க? உனக்கு எந்த சீறும் செய்ய மாட்டாங்கன்னு கேள்விப் பட்டேன். இதுவே நான் பாக்குற பொண்ணை அவன் கட்டினா நல்லா வசதியா இருப்பான். அவனோட மூணு தங்கச்சிகளையும் நல்லா பாத்துக்குவான். உன்னைக் கட்டினா ஒரு பொங்கல் தீபாவளி வந்தா அவனோட மூணு தங்கச்சிகளுக்கும் அவனால சீர் செய்ய முடியுமா? நீ நல்ல குடும்பத்துல பிறந்திருந்தா ஒழுங்கு மரியாதையா என் மகனை விட்டு விலகிரு. நான் அவனுக்கு பணக்கார சம்பந்தம் பாத்து வச்சிட்டேன். நீயெல்லாம் என் மகனுக்கு பொருத்தமே இல்லை. அழகாவும் இல்லை. ஆனா நான் பாத்தா பொண்ணு அவ்வளவு அழகு. பெரிய இடம், உன்னை மாதிரி பிச்சைக்காரி இல்லை. உனக்கு ஆம்பளை தான் வேணும்னா வேற எவனையாவது பிடிச்சிக்கோ. என் மகனை விட்டுரு. சோத்துல உப்பு போட்டு திங்குறவளா இருந்தா இந்த கல்யாணத்தை நிப்பாட்டிரு. இல்லை என் மவன் தான் வேணும்னு வீட்டுக்கு வந்த நான் உன்னை என்ன செய்வேன்னு தெரியாது. நிச்சயம் உன்னை வாழ விட மாட்டேன். புரிஞ்சு விலகிப் போயிரு. என் மகனுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்க போறதுக்கு குறுக்க நிக்காத”, என்று சொல்லி விட்டுச் சென்றாள்.
அவள் போனதைக் கூட உணராமல் திகைத்துப் போய் நின்ற கயலின் கண்களில் கண்ணீர் வடிந்தது. அப்படியே அங்கு கிடந்த கல்லில் அமர்ந்தாள். சரோஜாவின் பேச்சும் அவள் குரலில் இருந்த ஆக்ரோசமும் அவள் கண்களில் இருந்த வன்மமும் கயலின் ரத்த ஓட்டத்தையே உறைய வைத்தது. சிறிது நேரம் வெளியே அமர்ந்தே அழுதவள் இனி தமிழ் தனக்கு வேண்டாம் என்று தவறான முடிவு எடுத்து கண்களை துடைத்து விட்டு உள்ளே சென்றாள்.
என்ன தான் தமிழ் வேண்டாம் என்று முடிவு எடுத்தாலும் மனதில் வேதனை அழுத்தியது. அவளால் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போக அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்று விட்டாள்.
வீட்டுக்குச் சென்றதும் “என்ன சீக்கிரம் வந்துட்ட?”, என்று கேட்டாள் வேணி.
“ரொம்ப தலைவலி சித்தி அதான்”
“இப்படி தலைவலி கால் வலின்னு லீவ் போட்டா சம்பளம் குறைய தான் வரும். ஏற்கனவே கல்யாணம் முடியுற வரைக்கும் தான் உன் சம்பளம் எங்க கிட்ட வரும். அதையாவது உருப்படியா கொடுக்க வேண்டாமா? இனி லீவ் போட்ட பாத்துக்கோ”, என்று வேணி கேட்க ஏற்கனவே சிதைந்திருந்த அவளது மனம் மேலும் காயப்பட்டது.
வேறு எதுவும் பேசாமல் அறைக்குள் சென்று கட்டிலில் விழுந்தவள் குமுறி அழுதாள். தனக்கு எந்த சந்தோஷமும் நிரந்தரம் இல்லை என்று புரிந்தது. வெகு நேரம் அழுதவளுக்கு அடுத்து என்ன செய்ய என்று கூட தெரிய வில்லை.
திருமணத்தை நிறுத்த வேண்டும். ஆனால் எப்படி என்று தெரிய வில்லை. தமிழிடம் நேரில் மட்டும் இல்லை போனில் கூட அவளால் மறுக்க முடியாது. தந்தையிடம் சொல்ல வேண்டும். ஆனால் அன்று அவரையே மரியாதை இல்லாமல் பேசின பிறகு இப்போது எப்படி உரிமையாக திருமணத்தை நிறுத்துங்க என்று சொல்ல முடியும்?
ஊரை விட்டு சென்று விடலாமா என்று கூட தோன்றியது, ஆனால் அவளது வேலை என்ன ஆகும் என்ற யோசனை தடை செய்தது. ஆனால் தப்பித் தவறி கூட தற்கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் வரவே இல்லை. அது அவளது அன்னையின் தற்கொலையால் எழுந்த உறுதியாக இருக்கலாம்.
மனதில் அவ்வளவு வலி இருந்த போதும் இரவு உணவைச் செய்ய அவள் மறக்க வில்லை. மற்ற அனைவரும் உண்டு விட்டுச் சென்றதும் இரண்டு இட்லியை எடுத்து தட்டில் வைத்து அமர்ந்தாள். ஆனால் அவளால் ஒரு வாய் கூட உண்ண முடிய வில்லை.
அப்படியே எச்சிப் பானையில் போட்டு விட்டு அறைக்குள் முடங்கிக் கொண்டாள். அன்று இரவு எப்போதும் போல தமிழ் அவளை அழைக்க கண்ணீருடன் அந்த அழைப்பை பார்த்தவள் அதை எடுக்க வில்லை. என்ன சொல்ல முடியும் அவளால்.
மீண்டும் ஒரு முறை அழைத்தவன் அவள் எடுக்காததால் “வேலை முடிஞ்சா கால் பண்ணு டி”, என்று மெஸ்ஸேஜ் மட்டும் அனுப்பி வைத்தான். அதைப் பார்த்தாலும் அவள் அதை எடுக்க வில்லை. அவனுக்கு திருப்பி அழைக்கவும் இல்லை. இரவு பத்து மணிக்கு மேல் மீண்டும் அவளை அழைத்தான். அப்போதும் அவள் எடுக்கவே இல்லை. மீண்டும் மீண்டும் அவன் அழைக்க போனையே ஸ்விட்ச் ஆப் பண்ணி வைத்தாள். ஆனால் கண்கள் மட்டும் கண்ணீரைச் சொறிந்தது.
“என்ன ஆச்சு இவளுக்கு? எதுக்கு கால் எடுக்கலை? மெஸ்ஸேஜ் பாத்தும் ரிப்ளை பண்ணலையே? இப்ப போனை ஸ்விட்ச் ஆஃப்ம் பண்ணிட்டா?”, என்று குழம்பினான்.
அடுத்த நாள் காலை அவள் பஸ் ஏறும் நேரமும் அழைத்தான். அவள் எடுக்க வில்லை. காலை பத்து மணி போல் அழைக்கும் போதும் அவள் எடுக்க வில்லை என்றதும் உடனே சேகரை அழைத்தான்.
“சொல்லு தமிழ்”
“ஆபீஸ் போய்ட்டீங்களா அண்ணா?”
“ஆமா டா, என்ன விஷயம் காலைலே கூப்பிட்டுருக்க?”
“கயல் வேலைக்கு வந்திருக்காளா அண்ணா?”
“ஆமா வந்தா. இப்ப ரீடிங்க் எடுக்க கிளம்பிட்டாளே? என்ன ஆச்சு?”
“கால் பண்ணுனேன். எடுக்கலை. போன் பிரச்சனையோ என்னவோ? வந்ததும் கால் பண்ணச் சொல்றீங்களா?”
“சொல்றேன் தமிழ்”, என்று சொல்லி போனை வைத்தான்.
சொன்னது போல கயல் வந்ததும் “போன் ரிப்பேரா கயல்?”, என்று கேட்டான் சேகர்.
“இல்லையேண்ணா”
“தமிழ் கால் பண்ணி பாத்துருக்கான். உனக்கு கால் போகலை போல. அதான் என் கிட்ட சொன்னான். நீ கூப்பிட்டு பேசு. எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு. நான் கிளம்புறேன்”
“சரிங்கண்ணா”, என்று அவள் சொன்னதும் அவன் கிளம்பிச் சென்று விட்டான். அதற்கு பின் அவன் அந்த பிரச்சனையே மறந்து விட்டான். கயல் பேசியிருப்பாள் என்ற நம்பிக்கை இருந்ததால் அதை அவன் பெரிது படுத்த வில்லை.
ஆனால் அன்றும் கயல் அவனை அழைக்க வில்லை. தமிழின் அழைப்பையும் எடுக்க வில்லை. மீண்டும் மீண்டும் சேகரை தொல்லை செய்ய மனதில்லாமல் சமுத்திரத்தை அழைத்தான்.
“சொல்லுங்க மாப்பிள்ளை”
“கயல் எங்க மாமா?”
“இப்ப தான் வேலை முடிஞ்சு வந்தா. வந்ததும் பிள்ளைக்கு தான் ரெஸ்ட் இருக்காதே. பாத்திரம் கழுவிட்டு இருக்கா போல?”
“அவ வேலை முடிஞ்சதும் எனக்கு கூப்பிடக் சொல்லுவீங்களா மாமா?”
“சரி மாப்ள”
“மாமா”
“என்ன மாப்ள?”
“கயல் நல்லா தானே இருக்கா? அவளுக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே?”
“நல்லா தான் இருக்கா மாப்பிள்ளை. அதுவும் உங்க கூட கல்யாணம் பேசின பிறகு தான் அவ முகத்துல சந்தோசமே இருக்கு. சரி மாப்ள நான் அவ கிட்ட சொல்லி பேசச் சொல்றேன்”, என்று சொல்லி போனை வைத்தார்.
கயல் வேலை முடிந்து வந்ததும் “மாப்பிள்ளைக்கு கால் பண்ணி பேசு கயல்”, என்று சொல்ல சரி என்னும் விதமாக தலையசைத்து விட்டு சென்றாள். அவள் எப்போதும் இப்படி தான் செய்வாள் என்பதால் அவரும் அதை பெரிது படுத்த வில்லை.
எப்போதும் போல எல்லாவற்றையும் மனசுக்குள்ளே அழுத்தி வெகுவாக காயப் பட்டு போய் இருந்த கயலை சமுத்திரம் கண்டு கொள்ளவே இல்லை. நேரில் சென்று பார்க்கலாம் என்று தமிழுக்கு தோன்றியது தான்.
ஆனால் அவனுக்கும் பகல் ஷிப்ட் இருந்தது. கூடவே அவனும் லீவ் எடுக்க முடியாத நிலை. சரி ஞாயிறு அன்று பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி போனில் மட்டும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்தான். ஆனால் பலன் பூஜியம் தான். அவளிடம் பேசாததால், அவளுக்கு என்ன பிரச்சனை என்று தெரியாததால் தமிழும் உள்ளுக்குள் நொறுங்கி கொண்டு தான் இருந்தான். அவளுக்கு சந்தோசத்தைக் கொடுக்க வந்த தேவதூதன் அவன் என்றால் அவனுக்கும் அவள் தானே தேவதை. அதனால் வெகுவாக கலங்கிப் போனான்.
அவளை நேரில் பார்க்கும் சந்தர்ப்பத்துக்காக தவம் இருந்தான் என்று தான் சொல்ல வேண்டும். அவன் ஒரு மாதிரி சுற்றிக் கொண்டிருப்பதைக் கண்டு சிதம்பரமும் மீனாட்சியும் விசாரித்தார்கள். ஏதோ சொல்லி சமாளித்தான். ஆனால் அவன் அப்படிச் சுற்றுவதைக் கண்டு சந்தோஷப் பட்டது சரோஜா தான். தன்னுடைய பேச்சு வேலை செய்திருக்கிறது என்பதை மகனின் முகத்தை வைத்தே கண்டு கொண்டாள்.
வெள்ளிக்கிழமை இரவு வைஷ்ணவி குடும்பத்துடன் பிறந்த வீட்டுக்கு வந்தாள். எப்போதும் சனி ஞாயிறு இங்கே தான் அவர்கள் இருப்பார்கள். எப்போதும் போல அவர்கள் வர தமிழும் மாமா வீட்டுக்குச் சென்றிருந்தான்.
அவனை கண்ட சேகர் திகைத்துப் போனான். அவன் முகத்தில் அவ்வளவு சோர்வு. தாடி எடுக்க கூட மறந்தவன் போல இருந்த அவனது தோற்றமும் அவன் கண்களில் இருந்த சோகமும் சேகரை தாக்கியது. ஏனோ முந்தைய தமிழைப் பார்ப்பது போல இருக்க “தமிழ், என்ன ஆச்சு டா? ஏன் ஒரு மாதிரி இருக்க ?”, என்று கேட்டான்.
“நல்லா கேளுங்க மாப்பிள்ளை. நாலஞ்சு நாளா இவன் முகமே சரி இல்லை. எனக்கே பக்கு பக்குன்னு இருக்கு. கேட்டாலும் சொல்ல மாட்டிக்கான்”, என்றார் சிதம்பரம்.
“என்னது நாலஞ்சு நாளாவா? என்ன ஆச்சு தமிழ்? ஏதாவது பிரச்சனையா? பணம் ஏதாவது வேணுமா டா?”
“அதெல்லாம் ஒண்ணும் வேணாம் அண்ணா”
“அப்புறம் என்ன? ரொம்ப கலங்கிப் போய் இருக்க?”
“கயல் ஏன் கிட்ட பேசவே இல்லைண்ணா”, என்று சொல்லும் போதே வெகுவாக கலங்கிப் போனான்.
“என்னது? அன்னைக்கு பேசச் சொன்னீயே? அப்ப இருந்து பேசலையா?”
“ஆமாண்ணா. என் போனை எடுக்கவே மாட்டிக்கா. நான் அனுப்புற மெஸ்ஸேஜ் பாக்குறா. ஆனா ரிப்ளை பண்ண மாட்டிக்கா. என்னனு ஒண்ணும் புரியலை. கொஞ்சம் பயமா இருக்குண்ணா. முன்னாடி எப்படியோ தெரியலை. இப்ப அவ இல்லைன்னா என்னால….”, என்று சொல்லும் போதே அவன் கலங்க ஒரு முழுமையான ஆண் மகன் கலங்குவது சேகர் மற்றும் சிதம்பரத்துக்கு அவ்வளவு வேதனையைக் கொடுத்தது.
“இந்த பயலுக்கு எந்த சந்தோஷமும் வராதா?”, என்று கலங்கினார் சிதம்பரம்.
“இவ்வளவு நாள் பேசாம இருக்குறான்னா என்ன பிரச்சனைன்னு தெரியலையே. இரு தமிழ், நான் கயல் கிட்டயே என்னன்னு கேக்குறேன்”, என்று சொல்லி தன்னுடைய போனில் இருந்து அழைக்க அவன் அழைப்பது தெரிந்து கயல் எடுக்க வில்லை. நிச்சயம் இன்று சேகருக்கு தான் தமிழிடம் பேசாதது தெரிந்திருக்கும் என்று கயலும் கண்டு கொண்டாள். அதனால் தான் எடுக்க வில்லை.
“என் போனையும் எடுக்க மாட்டிக்கா தமிழ். நாளைக்கு ஆபீஸ் வருவா. நான் என்னன்னு கேக்குறேன். எதுக்கும் நீ உன் மாமனாருக்கு கால் பண்ணி கேளு”, என்று சொல்ல சரி என்று கேட்டுக் கொண்டான்.
அன்று இரவு உறங்குவதற்கு முன் சமுத்திரத்தை அழைத்த தமிழ் “கயல் எப்படி இருக்கா மாமா?”, என்று கேட்டான்.
“நல்லா தான் இருக்கா மாப்ள. நீங்க பேசலையா?”
“என் போனை எடுக்கவே மாட்டிக்கா மாமா. ஏன்னு தெரியலை. என் மேல அவளுக்கு ஏதாவது கோபமானு கூட புரியலை. பிளீஸ் மாமா அவளை என் கிட்ட பேச வைக்கிறீங்களா?”
“கண்டிப்பா மாப்ள. இருங்க அவ கிட்ட பேசிட்டு உங்களைக் கூப்பிடுறேன்”, என்று சொன்ன சமுத்திரம் கயலைத் தேடிச் செல்ல அவளது அறையில் சோகமே உருவாக அமர்ந்திருந்தாள் கயல்.
சமுத்திரம் மகளின் அறைக்குப் போவதைப் பார்த்து விட்டு வேணியும் பின்னேயே சென்றாள்.
“மாமா எதுக்கு இங்க வந்துருக்கீங்க? உங்களுக்கு என்ன வேணும்? வாங்க நான் எடுத்து தரேன்”, என்று வேணி அவசரமாக கேட்க அதற்கு பதில் சொல்லாமல் “கயல் மாப்பிள்ளை கிட்ட பேசுறது இல்லையா? போனை எடுத்து அவர் கிட்ட பேசு”, என்றார்.
“இல்லை நான் பேசலை. எனக்கு இந்த கல்யாணமும் வேண்டாம்”, என்று எங்கோ பார்த்துக் கொண்டு கயல் உரைக்க இருவரும் திகைத்தார்கள்.
“என்னது பேசாலையா? என்ன சொல்ற நீ? இன்னும் ரெண்டு வாரத்துல கல்யாணம் இருக்கு. இன்னும் மூணு நாள்ல முகூர்த்த சேலை எடுக்க போறோம். விளையாடுறியா?”, என்று சூடு ஏறியது அவரது குரலில்.
“அதானே, என்ன டி திமிரா? கல்யாணம் முடிக்காம வீட்லயே இருந்து எங்களை அழ வைக்க நினைக்கிறியா? ஏற்கனவே உன்னைக் கொடுமை படுத்துறேன்னு ஊர் உலகத்துல எனக்கு நல்ல பேரு. இதுல கல்யாணம் பண்ணாம வீட்ல உக்கார வச்சா ஊர் உலகம் என்ன சொல்லும்? அது மட்டுமில்லாம உனக்கு கல்யாணம் ஆனா தான் என் பொண்ணுக்கு கல்யாணம் ஆகும்”, என்றாள் வேணி.
“என்ன பிரச்சனை கயல்? ஏன் இப்படிச் சொல்ற?”, என்று சமுத்திரம் கேட்க அவள் பதிலே சொல்ல வில்லை.
“அதெல்லாம் இந்த கல்யாணம் நடக்கும். நாம இவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க தான் போறோம். நீங்க வாங்க மாமா”, என்று சொல்லி கையோடு அவரை இழுத்துச் சென்று விட்டாள் வேணி. மீண்டும் கண்ணீரில் கரைந்தாள் கயல்விழி.
வேணியை வேறு வேலையில் திசை திருப்பி விட்டு மொட்டை மாடிக்குச் சென்ற சமுத்திரம் தமிழை அழைத்தார்.