அத்தியாயம் 6
அழகிய நிறங்களைக்
கொண்ட வண்ணத்து பூச்சியல்ல நீ,
கைக்கு எட்டாத
அழகான வானவில்!!!
மலை போல் வந்த பிரச்சனை பனி போல் விலகியது. வீட்டுக்கு சென்ற தேன்மொழி மனதில் முழுவதும் உலா வந்தது கதிர் தான்.
“நடந்த பிரச்சனை எதுவும் யாருக்கும் தெரியாம போச்சே? இதுக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாம செஞ்சிட்டானே? இதுல அந்த ராஜேந்திரன் மூக்கை வேற உடைச்சிருக்கான்? ஆனா எதுக்கு சத்தியம் வாங்குனான்? அப்புறம் கண்டுக்காம இருந்தான். நான் வேற இன்னைக்கே கல்யாணம் நடக்கும்னு யோசிச்சிட்டு இருந்தேன்”, என்று எண்ணி குழம்பினாள்.
அவளை எதுவும் எண்ண விடாமல் அவளை மொத்த குடும்பமே தாங்கியது. அது கொஞ்ச நேரம் தான். சிறிது நேரத்தில் விசாரணை ஆரம்பித்து விட்டது. அனைத்தையும் சமாளித்து விட்டாள் தேன்மொழி, அதுவும் கண்ணீரால்.
அவள் கண்ணீரைக் கண்டு அவளை ஒய்வு எடுக்கும் படி சொல்லி விட்டு சென்று விட்டார்கள்.
அனைவரும் சென்றதும் “எப்பா எவ்வளவு கேள்வி கேக்காங்க? நல்ல வேளை அழுததால தப்பிச்சோம்”, என்று நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டாள்.
“அத்தான் எதுக்கு அந்த சத்தியத்தை வாங்குனான்?”,என்று குழம்பினாள் தேன்மொழி. கால்கள் அசைக்க முடியாமல் இருப்பதால் மதிய உணவு அவள் அறைக்கே வந்தது.
சகுந்தலா தான் அவளுக்கு ஊட்டி விட்டாள். ஒரு பிடி பிடித்தவள் உடனே உறங்கி விட்டாள். உறங்கி எழுந்ததும் மனம் அமைதியானது போல இருந்தது. ஆனால் மனதில் இருந்த குழப்பம் மட்டும் அவளை விட்டு செல்ல வில்லை.
அதே நேரம் தலையைப் பிடித்த படி தன்னுடைய அறையில் அமர்ந்திருந்தார் மதியழகன்.
“என்னங்க, என்ன ஆச்சு? காபி போட்டு தரவா?”,என்று கேட்டாள் வேணி.
“இல்லை வேணி, ஒண்ணும் இல்லை. சும்மா தான். பசங்க என்ன செய்றாங்க?”
[the_ad id=”6605″]“டிவி, போன், லேப்டாப்புன்னு குடஞ்சிட்டு இருக்கானுங்க. உங்க அம்மா பக்கத்து வீட்டுக்கு கதை பேச போயிருச்சு. ஆமா தேன்மொழி எதுக்குங்க திடீர்னு நம்ம பண்ணைக்கு வரணும்? அதுவும் சரியா நேத்து பாத்து அத்தை எதுக்கு அங்க தங்கணும்?”
“எனக்கும் அதே குழப்பம் தான் வேணி. கண்டிப்பா அந்த பிள்ளை இங்க வராது. இதுல உன் மூத்த மகன் வேலை எதுவும் இருக்குமோ? இந்த அம்மா மேலயும் சந்தேகமா இருக்கு”
“அப்படி இருந்தா சந்தோஷம் தாங்களே? நம்ம கதிருக்கு தேனை கட்டி வைக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசைங்க”
“நாம மட்டும் நினைச்சா போதுமா? என் தங்கச்சியும் மாப்பிள்ளையும் இன்னைக்கு என் முகத்தைக் கூட பாக்கலை. அப்படி இருக்கும் போது பொண்ணு தருவாங்களா? அப்பா செத்த அன்னைக்கு நானும் அப்படி பிடிவாதமா இருந்துருக்க கூடாது. வீட்டு மாப்பிள்ளையை நானே மதிக்காம நடந்துகிட்டேனே? செல்லதுரை மாமா இறந்தப்ப சாமிக்கு மாலை போட்டுருந்ததுனால அதுக்கும் போகல. இப்ப எந்த மூஞ்சியை வச்சு உங்க பொண்ணைக் கொடுங்கன்னு கேக்குறது?”
“அப்ப அவங்க மேல உங்களுக்கு கோபம் எதுவும் இல்லையா?”
“வருத்தம் இருக்கு. ஆனா கோபம் இல்லை. விதியை யாரால மாத்த முடியும்?”
“சரி முதலில் சாப்பிட வாங்க. என்ன நடக்கும்னு அந்த கடவுள் பாத்துக்குவார்”, என்று சொல்லி மதியை சாப்பிட அழைத்துச் சென்றாள் வேணி.
அதன் பின்னர் தரையில் ஒருவர் ஒருவராய் வட்டமாக சாப்பிட அமர்ந்தார்கள். நடுவே உணவு சட்டிகளை கொண்டு வந்து வைத்தாள் வேணி.
முதல் வாய் உணவை வாயில் வைக்க போன செல்வாவை “டேய் குஞ்சு, போய் பாட்டியை சாப்பிட கூட்டிட்டு வா”, என்றாள் வேணி.
“ஏம்மா,,,,,,, என்னை அப்படி கூப்பிடாத மா. என் மானமே போகுது”, என்று சொல்லி முறைத்தான் செல்வா.
“இத்தனை நாளும் அப்படி தான கூப்பிடுறோம். ரொம்ப பண்ணாத. போய் கூட்டிட்டு வா”, என்று வேணி சொன்னதும் முறைத்த படி எழுந்து சென்றவன் “ஏய், கிழவி சாப்பிட வா”, என்று அழைத்தான்.
“முக்கியமான விஷயம் பேசிட்டு இருக்கேன் டா. அப்புறம் வரேன்”, என்றாள் அன்னம்.
“ஆமா, ஆமா உலக நடப்பையா பேசிற போற? எவ வீட்ல என்ன சண்டைன்னு தான பேசிட்டு இருக்கீங்க? அதை கொட்டிட்டு வந்து பேசு. அம்மா கூப்பிடுது”
அன்னம் வந்து அமர்ந்ததும் எல்லாரும் சாப்பிட ஆரம்பித்தார்கள். செல்வா, தினேஷ், கதிர் மூவரும் பேசிய படியே சாப்பிட்டார்கள்.
அப்போது “நேத்து என்ன படம் பாத்த செல்வா?”, என்று கேட்டார் மதியழகன்.
[the_ad id=”6605″]கதிர் நிமிர்ந்து செல்வாவுக்கு கண்ணைக் காட்டினான். ஆனால் அதை செல்வா கவனிக்க வில்லை.
“நேத்து நான் படமே பாக்கலைப்பா. ஒன்பது மணிக்கே தூங்கிட்டேன். காலைல அண்ணன் வந்து தான் எழுப்புனான்”, என்று உண்மையைப் போட்டு உடைத்தான் செல்வா.
மதியழகன் கதிரை ஒரு பார்வை பார்த்தார். அவர் பார்வையைப் பார்த்த செல்வாவுக்கு அப்போது தான் அண்ணன் சொன்னதே நினைவில் வந்தது.
பயந்து போய் கதிரைப் பார்த்த செல்வா “ஐயையோ, இந்த அண்ணன் நான் நைட் வந்தப்ப நீ தான் கதவை திறந்தன்னு சொல்லணும்னு சொன்னானே? உளறிட்டேனே?”, என்று எண்ணிக் கொண்டு “என்னை மன்னிச்சிரு டா அண்ணா”, என்ற பார்வையை வீசினான்.
அதற்கு “நீ தனியா மாட்டு. உன்னை வச்சிக்கிறேன்”, என்ற பதில் பார்வையைப் பார்த்த கதிர் “எனக்கு சாப்பாடு போதும்மா”,என்று சொல்லி விட்டு எழுந்து சென்றான்.
மதியழகன் அடுத்த பார்வையை அன்னத்தை நோக்கி வீசினார். தன் மகன் எதையோ கண்டு பிடித்து விட்டான் என்று உணர்ந்த அன்னம், “ரசம் நல்லா இருக்கு மருமகளே. ஆனா எனக்கு வயிறு சரி இல்லாதது மாதிரி இருக்கு. அதனால எனக்கு போதும்”, என்று சொல்லி விட்டு எழுந்து சென்று விட்டாள்.
“இந்த அத்தைக்கு என்னங்க ஆச்சு? பருப்பு சாம்பாரைப் போய் ரசம்னு சொல்றாங்க?”, என்று கேட்டாள் வேணி.
“நீ ரூமுக்கு வா சொல்றேன்”,என்று சொல்லி விட்டு எழுந்து சென்று விட்டார் மதி.
“இன்னைக்கு மட்டுமாவது அண்ணன் கண்ணுல மாட்டாம இரு டா தம்பி”, என்று சிரித்துக் கொண்டே சொன்னான் தினேஷ்.
“இன்னைக்கு மட்டும் இல்லை. ஒரு வாரத்துக்கு சிக்க மாட்டேன்”, என்று எண்ணிக் கொண்ட செல்வா “அம்மா எனக்கு புராஜெக்ட் வொர்க் இருக்கு. நான் நவீன் வீட்ல தங்கி வொர்க் பண்ண போறேன். ரெண்டு நாள் கழிச்சு வரேன்”, என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டான்.
அவன் அங்கு செல்வது எப்போதும் நடப்பது தான் என்பதால் வேணியும் எதுவும் சொல்ல வில்லை.
செல்வா கிளம்பி சென்றதை அறிந்த கதிர் “என்கிட்ட மாட்டாமலா டா போயிருவ? அப்ப வச்சிக்கிறேன். இந்த அப்பா பார்வையே சரி இல்லையே? கண்டு பிடிச்சிருப்பாரோ?”, என்று மனதுக்குள் புழுங்கினான்.
அதே நேரம் வான்வெளி முற்றத்தில் தேன்மொழி மெதுவாக நடக்க பழகிக் கொண்டிருந்தாள். வலி உயிர் போனதால் மீண்டும் அமர்ந்து விட்டாள்.
அப்போது அவளை அனைவரும் சூழ்ந்து கொண்டு விசாரிக்க துடங்கி விட்டார்கள். “எதுக்கு அங்க போன?”, என்ற அர்த்தத்தில் கேள்வி கேட்ட அனைவரையும் என்ன சொல்வது என்ற குழப்பத்துடன் பார்த்தாள் தேன்மொழி.
அவனுடைய சத்தியமும் நினைவில் வந்தது. “இப்படி கேள்வி கேப்பாங்கன்னு தெரிஞ்சு தான் சத்தியம் கேட்டானோ?”, என்று எண்ணிக் கொண்டு “எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலை”, என்றாள் தேன்மொழி.
[the_ad id=”6605″]“அன்னைல இருந்து இப்படி தான் சொல்லிட்டு இருக்க? அப்புறம் அமைதியா தான இருந்த? பொம்பளைப் பிள்ளை இப்படி இருக்கலாமா? வேற எங்கயாவது இருந்தேன்னா உன்னைப் பத்தி என்ன நினைச்சிருப்பாங்க?”, என்று கேட்டான் கண்ணன்.
“அண்ணா, நான் ஒண்ணும் ஓடிப் போகணும்னு நினைக்கல. சாக தான் போனேன். ஆனா கால் தடுக்கிருச்சு. அப்ப தான் பக்கத்துல மதி மாமா பண்ணை இருக்குறது நினைவுல வந்துச்சு. அங்க போனேன்”, என்றாள்.
சகுந்தலா அவளின் கன்னத்தில் ஒரு அரை வைத்து “என்ன வார்த்தை டி சொல்ற? உனக்கு செல்லம் கொடுத்து கெடுத்துட்டோம் போல? ஒத்த பிள்ளையை பெத்து வச்சிருக்கோம். உன்னை சாக கொடுக்கவா நாங்க குத்துக்கல்லாட்டாம் உக்காந்துருக்கோம்”, என்று புலம்பினாள்.
“நான் என்ன செய்ய? இந்த கல்யாணம் வேண்டாம்னு நான் தான் படிச்சி படிச்சி சொன்னேனே? யாராவது என் பேச்சைக் கேட்டீங்களா? நான் பேசாம செத்தே போயிருக்கலாம். உங்க தம்பி குடும்பம் உங்க கூட செருறதுக்கு என் வாழ்க்கை தான் கிடைச்சதா?”
“ராஜேந்திரன் நல்ல மாப்பிள்ளை தேனு”, என்றார் ராஜதுரை.
“அவன் நல்லவனோ கெட்டவனோ? எனக்கு நீங்க பாத்த மாப்பிள்ளையை பிடிக்கலை. இதுக்கு மேலயும் அவனை தான் நான் கட்டிக்கணும்னு நினைச்சீங்கன்னா என்னை உயிரோட பாக்க முடியாது”, என்றாள்.
அதற்கு மேல் அவள் உயிருடன் விளையாட யாருக்கும் விருப்பம் இல்லை என்பதால் “சரி கண்ணு, கவலையை விடு. வேற மாப்பிள்ளையை பாப்போம்”, என்றார் தர்மதுரை.
“இப்ப சொல்லலைன்னா அப்புறம் சொல்ல முடியாது”, என்று மனதில் நினைத்த தேன்மொழி “எனக்கு கதிர் அத்தானைத் தான் பிடிக்கும். அவரை மட்டும் தான் கட்டிக்குவேன். அவரைக் கட்டி வைங்க. அப்படி இல்லைன்னா உங்க கூடவே இருக்கேன். அதை விட்டுட்டு வேற மாப்பிள்ளை பாத்தா நான் செத்துருவேன்”, என்று தைரியத்தை சேர்த்து சொல்லி விட்டாள்.
அடுத்த நொடி அவளை ஒரு அடி அடித்தாள் செல்வி. “மாப்பிள்ளையை நீயே தேடிக்கிற அளவுக்கு பெரிய மனுசியா ஆகிட்டியோ? எதுக்கெடுத்தாலும் சாவு சாவுன்னு பேசிக்கிட்டு”, என்று கேட்டு மறுபடியும் ஒரு அடியை வைத்தாள்.
“இன்னும் நாலு போடுங்கக்கா. வாய் கொழுப்பு கூடிருச்சு. என்னையவே எங்க அம்மா மகளே இல்லைன்னு சொல்லுது. உன்னை மட்டும் மருமகளா என் அண்ணன் வீட்ல ஏத்துக்குவாங்களா? அவங்க நம்ம எல்லாரையும் சொந்தமா பாக்கல டி. பகையா பாக்குறாங்க. உங்க பெரியப்பாவையும் அப்பாவையும் எப்படி எல்லாம் எங்க அண்ணன் மரியாதை இல்லாம பேசிட்டான் தெரியுமா? அதெல்லாம் மறக்க முடியாது”, என்றாள் சகுந்தலா.
“சித்தி ஒரு நிமிஷம்”, என்று சொன்ன செந்தில் “உனக்கும் கதிருக்கும் என்ன சம்பந்தம் தேனு? அவன் வந்து உன்னை கட்டணும்னு கேட்டானா?”, என்று கேட்டான்.
“அப்படி எல்லாம் இல்லை. எனக்கு தான் அத்தானை பிடிச்சிருக்கு. கண்டவனைக் கட்டிக்கிறதுக்கு என் மாமன் பையனை கல்யாணம் பண்ணுனா என்னவாம்? ஏன் அன்னைக்கு பெரியம்மா கூட அத்தானுக்கு என்னை கட்டி வைக்கிறது பத்தி பேசினாங்க. அம்மா கூட அண்ணன் அண்ணன்னு மாமா மேல பாசமா தான இருக்கு. பழசை எல்லாம் மறந்துரலாம்ல?”, என்று தேன்மொழி சொன்னதும் தர்மதுரை செல்வியை முறைத்தார்.