“நான் சும்மா பேசினதை இந்த சின்ன குட்டி போட்டு குடுத்துட்டாளே”,என்று எண்ணிக் கொண்டு “சமாதானமா இருந்துருந்தா கட்டிருக்கலாம்னு சொன்னேங்க”, என்று தர்மதுரையிடம் சொல்லி விட்டு தலை குனிந்தாள் செல்வி.
“உங்க தாத்தா மதியை ரொம்ப பாசமா வளத்தாரு கண்ணு. அவர் சாவுக்கு கூட உன் மாமன் வரலையே தேனு. அன்னம் மதினியும் எதிர்ல பாத்தா கூட ஒரு வார்த்தை பேசுறது இல்லை தெரியுமா?”, என்றாள் சண்முகம்மாள்.
தன்னுடைய தாத்தாவை ஒரு நொடி எண்ணிப் பார்த்த தேன்மொழி “நீங்க கேட்டீங்க. நான் பதில் சொல்லிட்டேன். இதுக்கு மேல முடிவை நீங்க தான் எடுக்கணும்”, என்று சொல்லி விட்டு அமைதியாகி விட்டாள்.
இவ்வளவு விவாதத்தையும் அங்கு பார்த்துக் கொண்டிருந்த ரேகாவுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
ராஜேந்திரனை தேன்மொழி வேண்டாம் என்று சொன்னதால் “நாங்க பண்ணுண தப்புக்கு மன்னிப்பு கேட்டுட்டோம்ல? அதுக்கு எதுக்கு என் அண்ணன் குடும்பத்தையே அசிங்க படுத்துறீங்க? ராஜேந்திரனுக்கு இவளை விட வேற நல்ல பொண்ணு கிடைப்பா. இதுக்கு தான் இந்த சனியன் பிடிச்ச வீட்டுக்கு வரக்கூடாதுன்னு சொன்னேன்”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினாள் ரேகா. அவளுடன் துரைராசுவும் கீதாவும் சென்று விட்டார்கள்.
தம்பி குடும்பம் கடைசி வரை பிரிந்து இருக்க வேண்டும் என்பது தான் விதி போல என்று எண்ணிக் கொண்டு தர்மதுரையும் ராஜதுரையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“இங்க சின்னவங்க எல்லாம் பெரிய பேச்சு பேசுராங்க”, என்று சொல்லி தேன்மொழியை ஒரு பார்வை பார்த்தார் தர்மதுரை.
அந்த ஒற்றைப் பார்வையில் தேன்மொழி தலை குனிந்து கொண்டாள்.
“பிள்ளைகளுக்கு நல்லது செய்யணும்னு தான் எல்லா அப்பாவும் நினைப்பாங்க. நானும் அதை தான் நினைச்சேன். இனி எல்லாம் விதிப்படி நடக்கட்டும். இதைப் பத்தி யாரும் இங்க அலச வேண்டாம். எல்லாரும் அவங்க அவங்க வேலையைப் போய் பாருங்க”,என்று சொல்லி விட்டு சென்று விட்டார்.
தன்னுடைய பெரியப்பா தன்னிடம் காட்டிய பாராமுகம் வேதனையைக் கொடுத்தது தேன்மொழிக்கு. அவர் மட்டும் அல்ல. அனைவருமே அடுத்த நொடி அவளை கண்டு கொள்ளாமல் அங்கிருந்து சென்று விட்டார்கள்.
அறைக்கு சென்ற தேன்மொழிக்கு மனம் வலித்தது. இது வரை அவளிடம் யாரும் ஒரு சுடு சொல்லை சொன்னதில்லை. இப்படி முகம் திருப்பியதும் இல்லை.
“இது எல்லாம் அந்த கதிர் எருமைனால தான். இவனால எனக்கு எப்பவும் தலை வலி தான். (biergardenencinitas.com) எனக்கு அவனைப் பிடிச்சிருக்குன்னு எப்படி நான் சொன்னேன்? எனக்கு எங்க இருந்து அவ்வளவு தைரியம் வந்தது?”, என்று யோசித்தவளுக்கு விடை தான் தெரியவில்லை.
“என்னை இந்த அளவுக்கு படுத்துற உன்னை என்ன செய்றேன் பாரு டா”, என்று மனதுக்குள் முடிவெடுத்தவளுக்கு நேற்று இரவு அவளை அவன் காப்பாற்றியது அந்த நிமிடம் மனதில் இல்லை.
அதன் பின்னர் அவளிடம் வீட்டில் உள்ளவர்கள் யாருமே பேச வில்லை. இரவு உணவைக் கூட அவளுக்கு யாரும் தர வில்லை. “இது தான் இவங்க பாசமா?”, என்று எண்ணிக் கொண்டே நடக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்.
கால் வலி ஒரு புறம், அனைவரின் பாரா முகம் ஒரு புறம் என்று திண்டாடிப் போனாள். அவளுக்கு ஆறுதலாக இருந்தது சண்முகம்மாள் மட்டுமே.
காலில் எண்ணைய் தேய்த்து, உணவு கொடுப்பது, குளிக்க அழைத்துச் செல்வது என்று அனைத்து வேலையையும் அவளுக்கு பாட்டி செய்ததால் மனது அமைதி அடைந்தது.
தேன்மொழி வேண்டாம் என்று சொன்னதை அறிந்த ராஜேந்திரன் “இவ பெரிய அழகின்னு நினைச்சா இவளை கட்டிக்க நினைச்சேன்? அந்த குடும்பத்தை கெடுக்க தான இந்த பிளான் போட்டேன். சரி வேற திட்டம் யோசிக்கணும்”, என்று எண்ணிக் கொண்டான்.
“ஆனா அவ எதுக்கு என்னைப் பத்தி வீட்ல யாருக்கிட்டயும் சொல்லலை?”, என்று எண்ணி அவனுக்கு குழப்பமாக இருந்தது. அவள் அனைவரிடமும் சொல்லி விடுவாள் என்ற பயத்தில் தான் யாருக்கும் தெரியாமல் தன்னுடைய நண்பன் வீட்டில் ஒளிந்துள்ளான் அவன்.
“எப்படியோ இந்த தடவை நான் தப்பிச்சா சரி. இனி வேற விஷயம் நடக்காமலா போயிரும்? அப்ப பாத்துக்குறேன். அந்த கதிரையும் சும்மா விட கூடாது”, என்று மனதுக்குள் கருவிக் கொண்டான்.
கல்யாணம் நின்றதையும், கதிரைத் தான் கட்டிக்குவேன் என்று தேன்மொழி சொன்னதையும் முத்து, கதிரிடம் சொன்னதும் அவன் முகம் வெற்றியில் பளபளத்தது.
“உண்மைலே தான் கதிரு. அந்த பிள்ளை சொன்னப்ப ஆள் ஆளுக்கு அடிச்சாங்களாம்”, என்றான் முத்து.
“என்னது அடிச்சாங்களா?”, என்று அதிர்ச்சியாக கேட்டவனுக்கு “என் மேல அவங்க வீட்ல அவ்வளவு வெறுப்பா இருக்கங்களா? அப்ப எப்படி எங்க கல்யாணம் நடக்கும்?”, என்று உள்ளுக்குள் தவிப்பாக இருந்தது.
“ஆமா கதிரு. நீயே மாப்பிள்ளை தேடிக்கிற அளவுக்கு பெரிய மனுஷி ஆகிட்டியான்னு அடிச்சாங்களாம். வீட்ல வேலை பாக்குற கனகு தான் சொன்னா. ஆனா அந்த பிள்ளை உறுதியா சொல்லுச்சாம். இப்ப அவ கூட வீட்ல யாருமே பேசுறது இல்லையாம்”
“இது எல்லாம் தன்னால் தான்”, என்று உள்ளுக்குள் வருத்தமாக இருந்தாலும் அடுத்த நொடி அதை காற்றில் விட்டான்.
“இனி அவ வீட்ல உள்ள ஆளுகளை அவ சம்மதிக்க வச்சிருவா. நம்ம வீட்ல உள்ள எல்லாரையும் சரி கட்டணுமே”, என்று எண்ணினான்.
ஒரு வாரம் கடந்திருந்தது. தேன்மொழி நன்றாக நடந்தாள். அனைவரும் அவளுடன் பேசாமல் இருப்பது முதலில் வருத்தத்தைக் கொடுத்தாலும் அவளே வலிய சென்று பேச்சுக் கொடுத்தாள்.
கண்ணனும் செந்திலும் அவளை கண்டு கொள்ளாமல் செல்ல அழுகை பொத்துக் கொண்டு வந்தது. “அவங்க பேசாம இருந்தா அதுக்கு நானா பொறுப்பு”, என்று நினைத்து சகஜமாக இருந்தாள்.
அதை அடக்கியவள் வீட்டில் கண்ணன் மற்றும் செந்தில் மட்டும் இருக்கும் போது “ஏண்ணா, உங்க ரெண்டு பேருக்கும் கூட என் மேல இருந்த பாசம் காணாம போயிருச்சுல்ல?”, என்று கேட்டாள்.
கேட்கும் போதே அவள் கண்களில் கண்ணீர் வந்து அது கதறலாகவே மாறி விட்டது. அதில் இருவரும் பதறிப் போனார்கள். பாசமாக இருந்த தங்கையின் கண்ணீரைக் கண்டால் அவர்களுக்கு எப்படி இருக்கும்?
“அழாத டா தேனு”,என்று சொல்லி இருவரும் அவளை சமாதானம் செய்தார்கள். அண்ணன்கள் பேசியதில் இன்னும் தெளிந்தாள் தேன்மொழி.
கதிரும் அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான். எங்கிருந்து ஆரம்பிக்க என்று கூட அவனுக்கு புரிய வில்லை.
அவன் தான் வேண்டும் என்று தேன்மொழி சொன்னதும் அவள் வீட்டில் இருந்து மாப்பிள்ளை கேட்க வருவார்கள். அப்போது அப்பாவை சமாளித்து சரி சொல்ல வைத்து விடலாம் என்று எண்ணி இருக்க அவன் எண்ணம் கிணற்றில் போட்ட கல்லாய் கிடந்தது.
அவள் பக்கம் இருந்து எந்த பதிலும் வர வில்லை. இதற்கு மேல் எதுவும் செய்யாமல் இருந்தால் அந்த ராஜேந்திரனுக்கு பதில் வேறு எவனாவது அவளை பெண் பார்க்க என்று கிளம்பி விடுவார்கள் என்று பயம் வேறு வந்தது.
பின் ஒரு முடிவுடன் தினேஷையும் செல்வாவையும் அழைத்து அன்று நடந்ததையும், தேன்மொழியை விரும்புவதாகவும் சொன்னான். அவள் அவளுடைய வீட்டில் தன்னை பற்றி பேசியதையும் கூறினான்.
“உன் காதலுக்கு நாங்க ஹெல்ப் பன்றோம் அண்ணா”, என்றான் செல்வா.
“எப்படி அன்னைக்கு அவ்வளவு படிச்சு படிச்சு சொல்லியும் அப்பா கிட்ட போட்டுக் கொடுத்தியே? அப்படியா?”, என்று கேட்டான் தினேஷ்.
“அப்பா அப்படி போட்டு வாங்குவார்ன்னு தெரியாதுண்ணா. அண்ணா எப்ப வந்தான்னு கேட்டுருந்தா கரெக்டா சொல்லிருப்பேன். ஆனா என்ன படம் பாத்தேன்னு கேட்டாரா? தெரியாம தூங்கிட்டேன்னு உண்மையை சொல்லிட்டேன்”
“சரி சரி விடு. என் கதைக்கு வா”, என்றான் கதிர்.
“இதுக்கு நம்ம பாட்டி தான் சரியான ஆள்ன்னு எனக்கு தோணுது அண்ணா”, என்றான் தினேஷ்.
“தினேஷ் அண்ணா சொல்றது சரிதாண்ணா. அப்பாவை மட்டும் தான் சமாளிக்கணும். அம்மா ஈஸியா சரி சொல்லிருவாங்க. இது நம்ம பாட்டியால தான் முடியும்”, என்று செல்வா சொன்னதும் மூவரும்
அன்னத்தைக் காண சென்றார்கள்.
இது வரை நடந்த அனைத்தையும் சொன்ன கதிர் “எனக்கு அவ தான் பாட்டி வேணும். அவளை தான் கல்யாணம் பண்ணிக்குவேன். நீ தான் உதவி செய்யனும்”, என்றான்.
“உங்க அப்பன் கிட்ட எப்படி டா பேச? ஏற்கனவே அன்னைக்கு நடந்ததுக்கு என்னை முறைச்சு பாத்துட்டே திரியுறான். நான் மாட்டேன் பா”, என்றாள் அன்னம்.
“நீ பேசவே செய்யாத. நீ அழுதாலே அப்பா கவுந்துருவார் பாட்டி”, என்றான் தினேஷ்.
“காரணமே இல்லாம எப்படி டா அழுறது?”,என்று கேட்டாள் அன்னம்.
“அதுக்கு நான் பொறுப்பு. நாளைக்கு உனக்கு ஒரு மருந்து தரேன். அதை போட்டா அழுகை தன்னால வரும்”, என்றான் செல்வா.
“காலம் போற கடைசில என்னை குருடாக்கிறாத டா குஞ்சு”
“கிழவி, என்னை அப்படிக் கூப்பிட்ட கொன்னுருவேன். இரு நாளைக்கு உன் கண்ணுல ஆசிட்டை ஊத்துறேன்”, என்று சொல்லி விட்டு சென்றான் செல்வா. மற்ற மூவரும் சிரித்தார்கள்.
காதல் தீயை நீர் அணைக்குமா….