அது முந்தைய பாடலை விட அருமையாக இருந்தது. தீபக்க்கு அவளை அப்படியே கட்டியணைத்து பாராட்ட வேண்டும் போல் இருந்தது.
“என்ன ஆனாலும் சரி, இவளிடம் பேசியே ஆக வேண்டும்”, என்று முடிவெடுத்தான்.
“கடைசி பெர்பார்மன்ஸ் யாரோடதுன்னா எங்களோட செல்ல தம்பி, உங்க கிளாஸ் ரெப் தீபக்குடையது தான்”, என்று அனோன்ஸ்மெண்ட் வந்தது கூட தெரியாமல் காயத்ரி நினைவில் இருந்தான் தீபக்.
அவன் அருகில் அமர்ந்திருந்த ரிஷி தான் “டேய், நீ தான் டா. போ”, என்றதும் தலையை குலுக்கிக் கொண்டு மேடை ஏறினான்.
அவனைப் பற்றி தெரியாதவர்கள் அவன் என்ன செய்ய போகிறான் என்று தெரியாமல் பார்வையிட்டார்கள். அவனுடைய நண்பர்களுக்கே அவன் என்ன செய்யப் போகிறான் என்று தெரியாது.
காயத்ரியும் “இந்த சோடாபுட்டி என்ன செய்ய போவுது?”, என்று தான் பார்த்தாள்.
ஒரு ஓரமாய் தன்னுடைய கண்ணாடியை கழட்டி வைத்த தீபக் நடுவில் வந்து நிற்க அவனுக்கான பாட்டு ஓட ஆரம்பித்தது.
“இவன் இப்படி ஆடுவானா?”, என்று தான் பார்த்தார்கள் அனைவரும்.
“பல்லி மாதிரி இருந்துட்டு என்னா ஸ்டெப் போடுறான்?”, என்று தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டார்கள்.
ஒரே பாடலாக இல்லாமல் பல பாடல்கள் கலந்து இருந்தது வேறு அவனுடைய நடனத்துக்கு சிறப்பைக் கொடுத்தது. அவன் எந்த பிராக்டிசும் செய்ய வில்லை. அதனால் பாடலுக்கேற்றவாறு அவனே ஸ்டெப் போட்டு ஆடிக் கொண்டிருந்தான்.
இரண்டு பாடலுக்கு தனியாக ஆடியவன் மூன்றாவது பாடலுக்கு தன்னுடைய நண்பர்கள் நான்கு பேரை அழைத்தான்.
மூன்றாவது பாடலுக்கு ஐந்து பேரும் ஆட ஆரம்பித்ததும் அவ்வளவு அழகாக இருந்தது. நான்காவது பாடலுக்கு சீனியர் மாணவர்களையும் அவன் அழைக்க வினித், வினோத், ரிஷி அனைவரும் மேலே சென்று மேடையை கலக்கு கலக்கு என்று கலக்கினார்கள்.
அவர்களின் நடனத்தை ஹெச்.ஓ.டியே சந்தோஷமாக பார்த்தார். அதன் பின் மேடை ஏறிய ஹெச்.ஓ.டி அனைவரையும் பாராட்டினார்.
“தேங்க் யு மேம், உங்களால தான் இந்த விழாவை சிறப்பா எங்களால செய்ய முடிஞ்சது. எங்க டிபார்ட்மெண்ட்க்கு நீங்க ஒரு கிஃப்ட் மேம். மத்த டிபார்ட்மெண்ட்க்கு கிடைக்காத சுதந்திரம் எங்களுக்கு நீங்க கொடுத்துருக்கீங்க. இதை நாங்க கண்டிப்பா காப்பாத்துவோம்”, என்று சொன்ன வினித் ஜூனியர்ஸ் புறம் திரும்பி “டேய், வேற லெவல் பெர்பார்மன்ஸ் டா. நாங்க எல்லாரும் வந்தப்ப பயந்து பயந்து இருந்தோம். ஆனா இந்த வருஷ ஜூனியர்ஸ் செம. நீங்க எங்களுக்கு ஜூனியர்சா கிடைச்சதுக்கு நாங்க பெருமை படுறோம். மேம் சொன்ன மாதிரி நிறைய பிரண்ட்ஸை சம்பாதிங்க. நல்லா எஞ்சாய் பண்ணுங்க. கொஞ்சமா படிக்கவும் செய்ங்க. என்ன உதவின்னாலும் எங்க கிட்ட கேளுங்க. எதுக்கும் தயங்க வேண்டாம். ஜூனியர்ஸ் உங்களுக்கு ஒண்ணுன்னா நாங்க வந்து நிப்போம்”, என்று வினித் சொன்னதும் அனைவரும் கை தட்டினார்கள். விழா அத்துடன் நிறைவடைந்தது.
மதிய உணவு இடைவேளை வந்த போது அனைவரும் உணவு உண்ண போனார்கள். அங்கே பஃபே முறையில் உணவு தயாராக இருந்தது. தீபக்கும் அனைத்தையும் எடுத்து வைப்பதில் பிசியாகி விட்டான்.
மற்ற அனைவரும் கிளாசுக்கு செல்ல அவனும் அவனுடைய நண்பர்களும் செமினார் ஹாலை நீட் செய்வதில் களம் இறங்கி விட்டார்கள்.
ஒட்டியதை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் போது “இந்த ஊமைக்கோட்டான் இவ்வளவு நல்லா பாடும்னு நான் எதிர் பார்க்கவே இல்லை டா”, என்றான் விக்னேஷ்.
“அவ ஊமைக் கோட்டானா, அன்னைக்கு கேண்டீன்ல வச்சு பேசினதை பாத்தும் அப்படி சொல்றியே?”, என்றான் மதன்.
அவர்கள் காயத்ரியை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்து தனக்குள் சிரித்துக் கொண்டான் தீபக்.
அன்று மாலை காயத்ரி பஸ்ஸில் ஏறுவதற்கு முன்னே தீபக் அங்கே அமர்ந்திருந்தான். தன்னுடைய சீட்டில் அமர்ந்த பின்னர் அவனை திரும்பி பார்த்தாள்.
கைகளைக் கட்டிக் கொண்டு சீட்டில் சாய்ந்து அமர்ந்திருந்தான் தீபக். அவன் கண்கள் மூடியிருந்தாலும் அவன் தூங்க வில்லை என்று புரிந்தது. “இந்த ஒட்டடைக் குச்சி என்ன ஆட்டம் போடுது”, என்று எண்ணிய காயத்ரி உடனே திரும்பிக் கொண்டாள்.
அவனுக்கோ அவளிடம் பேச ஆசை. ஆனால் அதற்கான சந்தர்பம் தான் அவனுக்கு கிடைக்காமல் இருந்தது.
அடுத்த நாள் புரோபசர் சத்யன் கிளாசுக்கு வந்தார்.
“என்ன பங்ஷன் எல்லாம் சிறப்பா முடிந்ததா? இனி படிக்கிற வேலையை பாருங்க. சிலபஸ் எல்லார் கைலயும் இருக்கா?”, என்று ஆங்கிலத்தில் கேட்டார்.
“நோ சார்”
“கிளாஸ் ரேப் யாரு?”
“நான் தான் சார்”, என்று எழுந்தான் தீபக்.
“குட், தீபக் இங்க வாப்பா. இந்தா சிலபஸ் பேப்பர். எல்லாருக்கும் அப்புறமா பிரிண்ட் அவுட் எடுத்து கொடுத்துரு”
“ஓகே சார்”
“எல்லாரும் தீபக் கிட்ட அதுக்கான பணத்தைக் கொடுத்துரனும். சரி சிலாபஸ்க்கு வருவோம். பர்ஸ்ட் யூனிட் ரொம்ப பேசிக்கா தான் இருக்கும். அதை நான் நடத்தணும்னு அவசியமே கிடையாது. அப்புறம் செகண்ட் யூனிட், தேர்ட் யூனிட் நான் நடத்துறேன். போர்த் யூனிட் நீங்க தான் சேமினார் எடுக்கணும். பிஃப்த் யூனிட் நீங்களே படிச்சிக்கோங்க”, என்று சொல்லி அவர் பாடம் நடத்த ஆரம்பிக்க அனைவரும் நே என்று விழித்தனர்.
“இவர் என்ன டா, இப்படி சொல்றார். எல்லாத்தையும் நம்மலே படிக்க இவருக்கு எதுக்கு சம்பளம்?”, என்று கேட்டான் விக்னேஷ்.
“அட போடா பர்ஸ்ட் யூனிட் தான் எல்லாத்துக்கும் பேசிக். அதையே நடத்தாம போறார். பேசாம நம்ம மரியா மேம் கிட்ட கம்பளைண்ட் பண்ணிருவோமா?”, என்று கேட்டான் மதன்.
“புரியலைன்னா நாமளே அட்ஜஸ்ட் பண்ணி படிச்சிக்குவோம் டா. இப்பவே நாம ஸ்டாப் மேல கம்ப்லைண்ட் பண்ணினா நமக்கு தான் அது ஆப்பா மாறும். அப்புறம் அவர் செகண்ட் யூனிட் நடத்த ஆரம்பிச்சதும், நாம கேக்குற டவுட்ல அவர் பர்ஸ்ட் யூனிட்டை நடத்த ஆரம்பிக்கணும். அப்படியே எல்லார் கிட்டயும் நியூஸ் பாஸ் பண்ணு”, என்று ஐடியா கொடுத்தான் தீபக்.
சாப்பிட்டு முடிந்த முதல் பீரியட் அவர் நடத்த ஆரம்பித்ததும் அனைவரின் கண்களிலும் தூக்கம் வழிந்தது. ஒரு வழியாக பல்லைக் கடித்துக் கொண்டு அந்த கிளாசை கவனித்தார்கள்.
அந்த பீரியட் முடிந்து பெல் அடித்ததும் அப்பாடா என்று அனைவரும் மூச்சு விட்டுக் கொண்டு அனைவரும் நன்றி சொல்ல எழுந்து நிற்க “என்ன எழுந்துட்டீங்க? அடுத்த பீரியடும் நான் தான் எடுக்க போறேன். பரினா மேம்க்கு வேலை இருக்குனு சொல்லிட்டாங்க”, என்று குண்டை தூக்கிப் போட்டார்.
இதற்கு மேல் அமைதியாக இருந்தால் வேலைக்காகாது என்று எண்ணிய தீபக் சரியான சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தான்.
அப்போது புரபசரும் “யாருக்காவது டவுட் இருக்கா?”, என்று கேட்க தீபக் தன்னுடைய சந்தேகத்தை கேட்டான். அவன் அப்படி கேட்கவும் அவர் அதற்கு விளக்கம் சொல்ல அதன் பின் ஒரு பெண் தன்னுடைய சந்தேகத்தை கேட்டாள். இப்படி மாற்றி மாற்றி சந்தேகம் கேட்பது அனைவருக்கும் இருந்த தூக்கத்தை விரட்டியது.
அனைவர் கேட்ட கேள்விக்கும் விளக்கம் சொன்ன புரபஸர் “அடுத்த கிளாஸ்ல நான் பேசிக்ல இருந்து போறேன். முதல் யூனிட் எடுத்துட்டு நெக்ஸ்ட் இதை பாப்போம்”, என்று சொல்லி விட்டே கிளம்பினார்.
அப்போது அனைத்து கிளாஸ் ரெப்ரசென்டேட்டிவ்க்கும் அழைப்பு வந்தது. இவர்கள் கிளாசில் இருந்து தீபக் சென்றான். கிளாசில் உள்ள அனைவரின் ஐ. டி கார்டும் அவனிடம் கொடுக்கப் பட்டது. அதை வாங்கியவன் முதலில் தன்னுடைய போட்டோவைப் பார்ப்பதற்கு முன் காயத்ரியின் போட்டோவைத் தான் பார்த்தான்.
அவளுடைய போட்டோவை சிறிது நேரம் ரசித்து விட்டு தான் அனைத்தையும் கிளாசுக்கு எடுத்து சென்றான்.
பின் ஒவ்வொருவருக்கும் அவனே அவன் கையால் கொடுத்தான். காயத்ரியிடம் கொடுக்கும் போது தலை குனிந்த படியே தான் அதை வாங்கினாள். எப்போது அவள் தன்னை நிமிர்ந்து பார்ப்பாள் என்று மனதுக்குள் குமுறினான் தீபக்.
அடுத்த நாள் காலை முதல் பீரியட் முடிந்ததும் லேப் என்பதால் அனைவரும் கோர்ட், சூ மற்றும் நோட்டுடன் கிளம்பி விட்டார்கள்.
மொத்தம் அறுபது பேரில் பாதி பேருக்கு ஒரு லேப் என்றால் மற்ற முப்பது பேருக்கு வேறு லேப்.
அப்படி பிரிக்கும் போது தீபக், தினேஷ், மதன் மூவரும் ஒரு லேப் என்றும் விக்னேஷ் மற்றும் நிர்மல் வேறு லேப் என்றும் பிரிக்கப் பட்டது.
அதே போல் நந்தினியும் காயத்ரியும் வேறு வேறு லேப் தான்.
அந்த லேபுக்குள் நுழைந்ததும் முதலில் அட்டண்டன்ஸ் ஆர்டர் படி நிற்கச் சொன்னார்கள்.
அந்த வரிசையில் தீபக், தினேஷ், காயத்ரி மூவரும் ஒன்று போல் லைனில் நின்றார்கள்.
நான்கு நான்கு பேராக பிரிக்கப் பட சித்ரா, தீபக், தினேஷ், காயத்ரி மூவரும் ஒரே குருப். காயத்ரி தன்னுடைய குருப்பில் வந்ததற்கு தீபக் சந்தோஷப் பட்டான். அப்படியாவது அவளிடம் பேசலாம் என்று காத்திருந்தான்.
ஒவ்வொரு குருப்புக்கும் ஒவ்வொரு டேபிள் கொடுக்கப் பட அங்கே அமர்ந்தார்கள்.
அப்போது பழைய அப்சர்வேசனை கொண்டு வந்த மேடம் “இந்தாங்க ரெண்டு நோட் தான் இருக்கு. அதனால முதல் குருப் டக்குன்னு எழுதிட்டு உங்க நோட்டையும் சேத்து அடுத்த குருப் கிட்ட கொடுத்துடுங்க. நான் இப்ப வரேன், எந்த சத்தமும் வெளிய வரக் கூடாது. அப்புறம் முதல் எக்சிபிரிமெண்ட் மட்டும் எழுதுங்க. ஓகே”, என்று சொல்லி விட்டு சென்றார்கள்.
அதன் படி முதல் குருப் எழுதி முடித்ததும் இரண்டாவது குருப்பான தீபக் குருப்புக்கு ஒரு நோட் கொடுக்கப் பட்டது. அதை நடுவில் வைத்து அருகருகே அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தார்கள்.
“என்ன டா ஒரு எழவும் புரியலை. இதை எப்படி செய்யப் போறோமோ?”, என்று புலம்பிக் கொண்டு இருந்தான் தினேஷ்.
“வாயை மூடிட்டு எழுதுடா”, என்று சொன்ன தீபக் கடகடவென்று எழுதினான்.
வந்ததில் இருந்து காயத்ரி அவன் பக்கம் பார்க்கவே இல்லை. அந்த கடுப்பில் இருந்தான் தீபக். காயத்ரியின் உதாசீனம் அவனுக்கு மிகவும் வலித்தது. எப்படியாவது அவளிடம் பேச வேண்டும் என்று ஆசை கொண்டான்.
பஸ்ஸில் நடந்ததை விளக்க கூட அவனுக்கு நேரம் கிடைக்க வில்லை. இப்போதாவது அவள் பார்ப்பாள் என்று பார்த்தான். எதிர் எதிரே இருந்தாலும் அவள் பார்வை அவன் பக்கம் செல்ல வில்லை.
கடகடவென்று எழுதி முடித்து விட்டு அனைவரும் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது அங்கே வந்த மேடம் “என்ன எழுதி முடிச்சாச்சுன்னா கதை தான் பேசனுமா? அன்னைக்கு இந்த எக்ஸ்பிரிமெண்ட் கிளாஸ்ல நடத்துனேன் தானே? சரி ஸ்டோர்க்கு போய் அப்பேரட்டஸ் வாங்கிட்டு வாங்க”, என்று சொன்னதும் அனைவரும் திருதிருவென்று விழித்தார்கள்.,
“என்ன முழிச்சிட்டு இருக்கீங்க? என்ன புரியலையா? ஒவ்வொரு குருப்ல இருந்தும் ரெண்டு பேர் போய் அங்க இருக்குல்ல அந்த ரூம், அங்க ஸ்லிப் இருக்கும். அதுல உங்க எக்ஸ்பிரிமெண்ட்க்கு என்ன தேவையோ அதை வாங்கிட்டு வாங்க”, என்று சொன்னதும் இவர்கள் குருப்பில் தீபக்கும் தினேஷும் சென்றார்கள்.
ஒரு வழியாக அப்பேரட்டஸ் வாங்கி, கனெக்சன் கொடுத்து அன்றைய எக்சிபிரிண்ட் முடிந்து அவுட்புட் எடுத்து மேடமிடம் ரிசல்ட் காட்டுவதற்கும் அனைவருக்கும் போதும் போதும் என்று இருந்தது.
ஒன்றாக செய்வதால் பெண்கள் இருவரும் ஆண்களிடம் பேச வேண்டியது இருந்தது. சித்ரா, காயத்ரி, தினேஷ், தீபக் நால்வரும் நன்றாக தான் பேசினார்கள். ஆனால் காயத்ரி மற்றும் தீபக் இடையே மட்டும் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை.
“அடுத்த வாரம் ரெக்கார்ட் நோட் எழுதிட்டு வந்துரனும். பெல் அடிச்ச அப்புறம் எல்லாரும் கிளம்புங்க. அது வரை இங்க தான் இருக்கணும்”, என்று சொல்லி விட்டு சென்றார்கள் மேடம்.
அப்பாடா என்று நிம்மதியுடன் அனைவரும் கதை பேசிக் கொண்டிருந்தார்கள். சித்ராவும் காயத்ரியும் கதை பேசிக் கொண்டிருக்க பொறுத்து பொறுத்து பார்த்த தீபக் யாரும் பார்க்காத போது டேபிளுக்கு அடியில் இருந்த காயத்ரியின் கைகளை பற்றி விட்டான்.
அதிர்ச்சியாக அவனை நிமிர்ந்து பார்த்தாள் காயத்ரி. “உன்னை பாக்க வைக்கிறதுக்கு எனக்கு வேற வழி தெரியலை”, என்று அவன் கண்கள் கெஞ்சியது.
அவன் கண்கள் பேசிய பாஷையும், அவள் கைகளைப் பற்றி இருந்த அவனுடைய கைகளின் திண்மையும் அவளுக்கு சொல்லொண்ணா உணர்வுகளை ஏற்படுத்தியது.
யாருக்கும் தெரியாமல் கைகளை உருவ போராடினாள். ஆனால் அவன் விட்ட பாடில்லை.
காதல் தொடரும்!!!