அத்தியாயம் 7
பிரம்ம தேவனுக்கு
இவ்வளவு ரசனையா
என்று கேள்வி எழுகிறது
உன்னைப் படைத்ததால்!!!
தீபக் அவள் கையை இறுக்கமாக பற்றியிருந்ததால் அவளால் விடுவிக்க முடியவில்லை. அத்தனை பேரின் முன்னிலையில் அவனை அசிங்கப் படுத்தவும் முடியவில்லை.
சிறிது நேரம் கழித்து போராடுவதை விட்டு விட்டு அவனை முறைத்துப் பார்த்தாள். அப்போதாவது அவன் கையை விடுவான் என்று எதிர் பார்க்க அவனோ அவள் கைகளை பற்றிய படியே இருந்தான்.
அவன் கண்கள் அவளிடம் எதையோ யாசித்தது. அந்த யாசிப்பில் அவளுடைய கோபம் அனைத்தும் விடை பெற்றுச் சென்றது போல இருந்தது.
சிறிது சிறிதாக தன் வசம் இழக்க ஆரம்பித்தாள் காயத்ரி. அந்த இடத்தில் கோபம் போய் ஒரு வித கூச்சமும் தவிப்பும் வந்து சேர்ந்தது.
கையைப் பிடித்த படியே அவன் விரல்கள் அவள் விரல்களை நீவி விட்ட போது அடிவயிற்றில் கிளர்ந்த உணர்வுக்கு விடை தெரியாமல் தவித்தாள்.
ஏனோ சத்தம் போட்டு, அதை அடுத்தவர்களுக்கு காட்ட மனதில்லை. என்ன பிரச்சனையாக இருந்தாலும் அது அவர்களுக்குள் இருக்க வேண்டும் என்று நினைத்தாள்.
சித்ரா அவளிடம் பேசிக் கொண்டே இருந்தாள். காயத்ரியும் தன்னுடைய உணர்வுகளை அவளுக்கு காட்டாமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். அதே போல தீபக்கும் தினேஷுமே பேசிக் கொண்டு தான் இருந்தனர். ஆனால் அவளுடைய கரம் மட்டும் அந்த பீரியட் முடியும் வரை அவன் கைக்குள் தான் இருந்தது.
அவனுடைய மனநிலையும் சொல்ல முடியாததாக தான் இருந்தது. எப்படியோ தைரியத்தை கூட்டி அவள் கையை பிடித்து விட்டான் . ஆனால் அதன் பின் விட தான் அவனுக்கு மனதில்லை.
அவளுடைய கைகளின் மென்மையும், கதகதப்பும் அவனுக்கு அதிகமான இதத்தைக் கொடுத்தது. அவள் கை தன்னுடைய கைக்குள் இருப்பதால் அவனுக்கு அவள் அவன் கூடவே இருப்பது போன்ற சந்தோசத்தைக் கொடுத்தது. அவனே விட நினைத்தாலும் அவனால் முடிய வில்லை.
அந்த பீரியட் முடிந்து எழுந்த பின்னர் தான் அவள் கையை விட்டான். நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் காயத்ரி. அப்போது அவன் உதடுகள் ‘தேங்க்ஸ்”, என்று முணுமுணுத்தது.
“எதுக்கு இந்த தேங்க்ஸ்”, என்று தெரியாமல் குழம்பியவள் “அன்னைக்கு செஞ்ச தப்புக்கு ஒரு சாரி சொல்றானா பாரு?”, என்று மீண்டும் கோப பட்டாள்.
“ஆமா அவன் கையை பிடிச்சிட்டு இருந்தப்ப உனக்கு இந்த கோபம் வரலையோ?”, என்று கிண்டல் செய்தது அவள் மனசாட்சி.
அதை கண்டு கொள்ளாமல் இருந்தாலும் அவளுக்கு இன்னும் அவள் கை அவன் கைக்குள்ளே இருப்பது போன்ற உணர்வு தான் இருந்தது. அது அவளுக்கு பிடிக்கவும் செய்தது.
மொத்தத்தில் அவன் மீதான கோபத்தையும் இழுத்து வைக்க முடியாமல், அவன் மீது எழும் பெயர் சொல்ல முடியாத உணர்வை வெளியே காட்டவும் முடியாமல் துவண்டு போனாள் காயத்ரி.
அவனோ இன்றைய நாள் இனிய நாள் என்று நினைத்துக் கொண்டான். இதே லேப் இன்னும் எப்போது வரும் என்று எண்ணி கனவு காண ஆரம்பித்தான்.
அதன் பின்னரும் காயத்ரியிடம் எவ்வளவோ பேச முயற்சி செய்தான் தீபக். ஆனால் அவனால் முடியவில்லை. அதற்கான சந்தர்ப்பமும் அமையவில்லை.
தினமும் அவர்கள் பஸ்ஸில் இருந்து இறங்கி கிளாசுக்கு நடந்து செல்லும் வழியில் தான் பேச முடியும் என்பதால் பல முறை அவளிடம் பேசுவதற்காக காத்திருப்பான். ஆனால் அவளோ அவனை கண்டு கொள்ளாமல் சென்று விடுவாள். கிளாசில் வைத்து பேசினால் ஏதாவது கதை கட்டி வீட்டுவார்கள் என்று எண்ணி ஒதுங்கியே இருந்தான்.
அடுத்த வார லேபில் அவளிடம் பேசலாம் என்று அவ்வளவு ஆர்வமாக இருந்தான் தீபக். ஆனால் முன்னேற்பாடாக சித்ராவுக்கு அடுத்து போய் அமர்ந்து கொண்டாள் காயத்ரி.
அதுவும் காயத்ரியால் அவனுடைய பார்வையை தாங்க முடியவே இல்லை. அவன் பார்வை அவளை டிஸ்டர்ப் செய்து கொண்டே இருந்தது. அவன் அருகில் தன் வசம் இழப்பது போல உணர்ந்தாள் காயத்ரி.
இப்படியே நாட்கள் கடக்க டெய்லி டெஸ்ட் வீக்லி டெஸ்ட் என்று ஆரம்பித்தத்து. அதனால் அனைவரின் கவனமும் படிப்பில் சென்றது. பிட் அடிக்கும் அனுபவும் அனைவருக்கும் கிடைத்தது.
தீபக்குமே அவன் கவலையை மறந்து படிக்க ஆரம்பித்தான். அவளுடைய கையை பற்றியதற்கு அவள் எந்த கோபமும் பட வில்லை என்பதை அவனுக்கு அப்போதைக்கு நிம்மதியை தந்தது.
கிண்டல் கேலி, என்று கிளாஸ் சென்றாலும் படிக்கும் பிள்ளைகள் படிக்கவும் செய்தார்கள். சில பசங்க படிக்காமல் திட்டும் வாங்கினார்கள்.
அனைத்து டெஸ்ட் முடிவில் தீபக்கே முதல் மாணவனாக வந்தான். அதனால் அவன் அனைவருக்கும் பிடித்தவனாகிப் போனான்.
எதற்கெடுத்தாலும் ஸ்டாப் முதல் ஸ்ட்டுடண்ட் வரை தீபக் தீபக் என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.
முதல் மாதத் தேர்வு ஆரம்பமானது. அப்போது காயத்ரி அருகில் அமர்ந்திருந்த தீபக்க்கு அவளிடம் பேச ஆசை இருந்தது. ஆனால் அவளோ அவனை முறைத்துக் கொண்டே இருந்தாள்.
அப்படியும் அவளிடம் பேச வேண்டும் என்று முடிவு எடுத்து ரப்பர், ஸ்கேல் என்று கடன் கேக்க ஆரம்பித்தான்.
அவனை ஒரு முறை முறைத்தவள் தன்னுடைய பவுச்சை தூக்கி இருவருக்கும் நடுவில் வைத்தாள்.
அவள் உபயோகப் படுத்திய பென்சில், ரப்பர், என்று எடுத்து தொட்டுப் பார்த்து சந்தோஷப் பட்டுக் கொண்டான் தீபக். அப்போதைக்கு அவனால் அது தான் முடிந்தது.
இப்படியே நாட்கள் கடக்க ஒரு நாள் காலை “காயத்ரி ஒரு நிமிஷம்”, என்று அழைத்தான் தீபக். அவன் குரலைக் கேட்டு திடுக்கிட்டு நின்றவள் அவனை முறைத்து பார்த்து விட்டு கண்டு கொள்ளாமல் சென்று விட்டாள்.
அவளுடைய ஐ. டி கார்டை கொடுக்க தான் அழைத்தான் தீபக். அவள் கண்டு கொள்ளாமல் சென்றதும் இன்னைக்கு முழுக்க தேடி அலையட்டும் என்று எண்ணிக் கொண்டான்.
கிளாசுக்கு வந்த பின்னர் தான் தெரிந்தது அவளுடைய ஐ. டி கார்டை காண வில்லை என்று.
பதட்டத்தில் நகத்தை கடித்து துப்பிக் கொண்டிருந்தாள் காயத்ரி.
“ஏண்டி உங்க அம்மா இன்னைக்கு உனக்கு சாப்பாடு போடலையா?”, என்று கேட்டாள் நந்தினி.
அவளை முறைத்து பார்த்தாள் காயத்ரி. “இல்லை, நகத்தை கடிச்சி யோசிச்சிட்டு இருந்தியா? விரலை தின்னுருவியோன்னு நினைச்சேன்”
“என்னோட காலேஜ் ஐ.டி காணுய்ம் டி. அதான் எங்க தொலைச்சென்னு யோசிச்சிட்டு இருக்கேன்”
“பஸ்ல மிஸ் ஆகிருக்குமா?”
“தெரியலை”
“வீட்ல இருந்து எடுத்துட்டு வந்தியா?”
“ஆமா பஸ்ல ஏறும் போது கழுத்துல தான் இருந்தது”
“அப்ப பஸ்ல தான் விழுந்துருக்கும். கேட்டுப் பாரு டி”
“ஹிம் ஈவினிங் தான் கேக்கணும். இல்லைன்னா வேற புதுசு தான் அப்ளை பண்ணனும்”
“ஒழுங்கா தேடு டி. புதுசு வாங்கணும்னா லெட்டர் கொடுக்கணும், தொலைச்சதுக்கு பைன் கட்டனும், அதை விட இனி தொலைக்க கூடாதுன்னு பாடம் வேற எடுப்பாங்க. புது கார்ட் வரதுக்குள்ள செக்யூரிட்டி முதல் கொண்டு லேப் அசிஸ்டண்ட் வரைக்கும் பதில் சொல்லணும். சாயங்காலம் பஸ்ல உள்ளவங்க கிட்ட கேளு. நம்ம இருக்கோமோ இல்லையோ நம்ம கழுத்துல அந்த நாய்ச் சங்கிலி இருந்தே ஆகணும்”, என்று நந்தினி சொன்னதும் சரி என்றாள் காயத்ரி.
அன்று மாலை, பஸ்ஸுக்கு சென்றதும் டிரைவர் அருகில் சென்றவள் “அண்ணா என்னோட ஐ. டி கார்டை மிஸ் பண்ணிட்டேன். இங்க கிடந்துச்சா?”, என்று கேட்டாள் காயத்ரி.
“இல்லையே பாப்பா, நான் பாக்கலை. இரு வேற யாராவது எடுத்தாங்களான்னு கேப்போம்”, என்றவர் “இந்த பொண்ணோட ஐ. டி கார்டை யாராவது பாத்தீங்களா?”, என்று கேட்டார்.
அப்போது தான் பஸ்ஸில் ஏறிய தீபக் “என்கிட்ட தான் இருக்குண்ணா, காலைல அவங்க சீட்க்கு கீழே கிடந்துச்சு. இந்தாங்க கொடுத்துருங்க”, என்று நிதானமாக தன்னுடைய பேகில் இருந்து எடுத்து அவரிடம் கொடுத்தான்.
“அந்த பாப்பா கிட்ட கொடுத்துரு தம்பி. எல்லாரும் வந்தாச்சா? பஸ் எடுக்கலாமா?”, என்று கேட்டு விட்டு தன் வேலையை பார்க்கச் சென்றார்.
அவன் நீட்டியதும் அவனை முறைத்து பார்த்த காயத்ரி “இதை கிளாஸ்ல வச்சு கொடுத்துருக்க வேண்டியது தானே? சரியான திமிர் பிடிச்சவன்”, என்று எண்ணி கொண்டாள். அவனோ அவள் முறைப்பை கண்டு கொள்ளவே இல்லை.
அன்று முழுவதும் ஐ. டி கார்ட் நினைப்பில் இருந்த காயத்ரிக்கு எரிச்சலாக இருந்தது. அதே கோபத்தில் தன்னுடைய சீட்டில் அமர்ந்தாள்.
அப்போது அங்கே வந்த பஸ் டிரைவர், “ஒரு கால் மணி நேரம் எல்லாரும் வெயிட் பண்ணுறீங்களா? பஸ்ல சின்ன பிரச்சனை. சரி பண்ணிட்டு கிளம்பலாம்”, என்றதும் அனைவரும் இறங்கினார்கள்.
அப்போது ஒரு மரத்தடியில் சென்று அமர்ந்தாள் காயத்ரி. அந்த பஸ்ஸில் வரும் சீனியர் ஒருவன் அவள் அருகே வந்தான். அவளையே பார்த்துக் கொண்டிருந்த தீபக்கின் பார்வை அவன் மீது கூர்மையாக பதிந்தது.
“இந்த நெட்ட கொக்கு எதுக்கு அவ பக்கத்துல போறான்னு தெரியலையே?”, என்று எண்ணிக் கொண்டு அவர்களையே பார்த்த படி நின்றான்.
திடீரென்று சீனியர் ஒருவன் அருகில் வந்து நிற்கவும் பயந்து போனாள் காயத்ரி.
அப்போது “ஹாய் காயத்ரி”, என்றான் கௌதம்.
“சொல்லுங்க சீனியர்”
“என் பேர் கௌதம், இனி நீ என் பேர் சொல்லி தான் கூப்பிடணும்”
அவனை குழப்பமாக பார்த்தவள் “சரி சொல்லுங்க கௌதம்”, என்றாள். அவனை தினமும் பஸ்ஸில் பார்ப்பதால் பஸ் மேட் என்று எண்ணி தான் அவனிடம் பேசினாள்.
“வெளிய போய் ஒரு ஜூஸ் குடிச்சிட்டே பேசுவோமா? காலேஜ் பஸ் போனாலும் பரவால்ல. ஒரு ஆட்டோ புடிச்சு உங்க வீட்டுல உன்னை விட்டுறேன்”
“அந்த மாதிரி நான் யார் கூடவும் வெளிய போனது இல்லை”, என்று வெடுக்கென்று சொன்னாள். அவளுக்கு அவன் பேச்சு பிடிக்க வில்லை.
“என்னன்னு தெரியலையே திடீர்னு வந்து பேசுறான். புரோப்போஸ் எதுவும் பண்ணி தொலைப்பானோ?”, என்று பயமாக இருந்தது அவளுக்கு.
ஆழ்ந்த மூச்சை வெளியேற்றிய கௌதமோ “கொஞ்சம் அந்த பக்கம் வாயேன். உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்”, என்றதும் பக்கத்து மரத்தடிக்கு அவனுடன் சென்றாள்.
அவர்கள் அருகே தீபக்கும் சென்றான்.
தயங்கி தயங்கி “நான் உன்னை… “, என்று இழுத்தான் கௌதம்.
அவனுடைய வெட்கமும், அவன் வார்த்தைகளும் அவன் மனதை அவளுக்கு உணர்த்த “நான் வேற ஒருத்தரை விரும்புறேன் சீனியர்”, என்று பட்டென்று சொல்லி விட்டாள் காயத்ரி.