அவள் அப்படிச் சொல்வாள் என்று கௌதம் மற்றும் தீபக் இருவருமே எதிர் பார்க்க வில்லை. இருவருக்குமே அதிர்ச்சியாக இருந்தது.
தீபக்கோ நொந்து போனான். தன்னுடைய காதலைச் சொல்லாத மடத்தனத்தை நொந்த படி அவர்களின் சம்பாசனையைக் கேட்டான்.
“காயத்ரி நீ பொய் தானே சொல்ற?”, என்று கேட்டான் கௌதம்.
“நான் உண்மையைத் தான் சொல்றேன். நம்புறதும் நம்பாததும் உங்க இஷ்டம்”
“அப்ப யாருன்னு சொல்லு”
“அதை எதுக்கு உங்க கிட்ட சொல்லணும்? கண்டவங்க கிட்ட எல்லாம் நம்மளைப் பத்தி சொல்லணும்னு சட்டமா சீனியர்?”
“இல்லை, அப்ப நீ பொய் தான் சொல்ற? உண்மைலே நீ லவ் பண்ணிருந்தா யாருனு சொல்லிருப்பியே?”
“நான் உண்மையைத் தான் சொல்றேன்”
“அப்ப யாருன்னு சொல்லு. பேராவது சொல்லு”
“ஐயையோ அப்படி ஒருத்தன் இருந்தா தானே சொல்ல? என்ன பேர் சொல்லி தப்பிக்க?”, என்று அவள் மனதுக்குள் திணறிக் கொண்டிருந்தாள்.
“இப்ப நீ சொல்லியே ஆகணும் காயத்ரி. இல்லைன்னா என்னோட லவ்வை ஏத்துக்கோ. நான் வந்ததுல இருந்து உன்னைப் பாத்துட்டு தான் இருக்கேன். எனக்கு உன்னை அவ்வளவு பிடிச்சிருக்கு. பேர் மட்டுமாவது சொல்லு. அப்புறம் நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்”
“அவன் பேர்… பேர்”, என்று அவள் இழுத்துக் கொண்டிருந்தாள். பொய்யாக கூட ஏதோ ஒரு பேரை சொல்ல அவளுக்கு மனதில்லை.
அவள் திணறிக் கொண்டிருக்கும் போதே “தீபக்னு சொல்லு காயு”, என்ற படி வந்தான் தீபக்.
அவனை இருவருமே அங்கே எதிர் பார்க்க வில்லை. “என்னது நீயா?”, என்று கேட்டான் கௌதம்.
“ஆமா சீனியர், நாங்க ரெண்டு பேரும் தான் லவ் பண்ணுறோம்”, என்றான் தீபக்.
“நீ பொய் சொல்ற? ஒரே கிளாஸ்னால அவளுக்கு சப்போர்ட்டா பொய் சொல்றியா?”
“நீங்க நம்பலைன்னா போங்க. நாங்க ரெண்டு பேரும் சொந்தக்காரங்க. அவ என்னோட அத்தை பொண்ணு”, என்று சொல்லி மீண்டும் காயத்ரிக்கு வெறி ஏத்தினான் தீபக்.
கௌதம் முன்னிலையில் அவன் மீது கோபத்தை காட்ட முடியாமல் அடக்கி கொண்டு இருந்தாள் காயத்ரி.
“பொய் சொல்லாத தீபக், அவ ஒரு இடத்துல இறங்குறா, நீ ஒரு இடத்துல இறங்குற. ரெண்டு பேரும் பேசினதே இல்லை”, என்ற கௌதம் இருவரையும் நம்புவதாய் இல்லை.
“பேசிக்கிட்டே இருந்தா எல்லாரும் என்ன நினைப்பாங்க? ஒரே வீட்ல இருக்க நாங்க ரெண்டு பேரும் அண்ணன் தங்கச்சியா? என்ன சீனியர் நீங்க? எங்க லவ் யாருக்கும் தெரியாது. வீட்ல உள்ளவங்க தான் மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டாங்க. இப்பவே எல்லாருக்கும் தெரிஞ்சா எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்களே? அப்புறம் உங்க கிளாஸ் இருக்குற நவீன், அப்புறம் அவங்க கேங்க் கிட்ட கேட்டுப் பாருங்க”, என்று சொல்லி காயத்ரியை முதல் நாள் ரேகிங்க் செய்த கேங்கை கோர்த்து விட்டான் தீபக்.
அவன் எடுத்து விடும் பொய்களை அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்தாள் காயத்ரி.
“ஆண்டவா, எனக்கு பொறுமையைக் கொடு. என்ன எல்லாம் பொய் சொல்றான். இவனை… இவன் எதுக்கு இப்படி இடைல வரான்? இப்படி மூக்கை நுழைக்கிறதே இவனுக்கு வேலையா போச்சு. நானா சொல்லிருந்தா வேற ஏதோ ஒரு பேரை சொல்லி தப்பிச்சிருப்பேன். ஆனா இப்ப நானும் இவனும் லவ் பண்ணுறோம்னு இந்த கௌதம் எல்லார் கிட்டயும் சொல்லிட்டா என்ன செய்றது?”, என்று மனதுக்குள் கொதித்து போய் நின்றாள். அவள் பார்வை தீபக்கை அணலாக சுட்டது.
நவீன் கேங்கைப் பற்றிச் சொன்னதும் இருவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து சென்றான் கௌதம். அவன் சென்றதும் இருவரும் மட்டும் தான் நின்றார்கள்.
அவளை நிமிர்ந்து பார்த்தான் தீபக். அவளோ அவனை கொலை வெறியுடன் முறைத்துக் கொண்டு இருந்தாள்.
“சாரி, நான் வேணும்னு செய்யலை. அவன் கிட்ட இருந்து உன்னைக் காப்பாத்த தான் அப்படிச் சொன்னேன்”, என்றான் தீபக் .
“உன் தலை. உன்னை நான் கூப்பிட்டேனா? என்னை காப்பாத்துன்னு நான் உன்னைக் கூப்பிட்டேனா?”, என்று கேட்டாள் காயத்ரி.
“இல்லை அது வந்து…..”
“பேசாத, நீ என்ன நினைச்சிட்டு இருக்குற உன் மனசுல? எதுக்கு எப்பவும் என்னோட விசயத்துல மூக்கை நுழைக்கிற? உன் மேல கொலை வெறில இருக்கேன். இங்க இருந்து போ முதல்ல. என் கண்ணு முன்னாடி நிக்காத”
“இல்லை காயத்ரி, உன்கிட்ட கொஞ்சம் பேசணும். இங்க பக்கத்துல ஒரு ரெஸ்டாரெண்ட் இருக்கு. ஒரு பத்து நிமிஷம் அங்க போயிட்டு வருவோமா? இல்லை நம்ம காலேஜ் கேண்டீன்க்காவது போகலாம்”
“ஓஹோ, உன் கூட வெளிய வருவேன்னு வேற உனக்கு நினைப்பு இருக்கா? யாரு டா நீ? நான் எதுக்கு உன் கூட வரணும்? நீ பாக்குற எல்லார் கிட்டயும் அத்தை பொண்ணு மாமா பொண்ணுன்னு அழந்து விட்டுட்டு இருக்க? என்ன நினைச்சிட்டு இருக்குற உன் மனசுல?”
“அதுக்கு நான் விளக்கம் சொல்றேன் காயத்ரி”
“எனக்கு எதுவும் வேண்டாம். நீ எந்த விளக்கமும் எனக்கு கொடுக்க வேண்டாம். பெரிய இவனா நீ? உன் இஷ்டத்துக்கு எப்ப பாத்தாலும் வந்து நிக்குற? என்ன தான் நினைச்சிட்டு இருக்க?”
“காயத்ரி முதல்ல நான் சொல்ல வரதை புரிஞ்சிக்கோ”
“என்ன புரியனும்? இல்லை என்ன புரிஞ்சிக்கணும்? நீ யாரு எனக்கு?”
“ஏண்டி புரிஞ்சிக்க மாட்டிக்கிற? என்னை கொஞ்சம் பேச விடு”
“என்னது டி யா? இவ்வளவு தான் உனக்கு மரியாதை. என்னை டி போட்டு பேச நீ யாரு?”
“ஆண் உன் புருஷன் போதுமா?”
“என்ன?….”
“என்ன என்ன? நானும் பொறுமையா பேசிட்டு இருக்கேன். நீ ஓவரா பேசுற?”
“நீ தான் ஓவரா பேசுற? வந்து அத்தை பையனு சொல்ற? வெக்கமே இல்லாம ஒரு பொண்ணைப் பாத்து கண்ணடிக்கிற? கையை பிடிக்கிற? பப்ளிக்ல கட்டிப் பிடிக்கிற? நீ எல்லாம் மனுசனா? சரியான பொறுக்கி. இப்ப பொண்டாட்டினு வேற சொல்ற? இதுக்கு மேல ஏதாவது பேசின ஹெச்.ஓ.டி கிட்ட கம்ப்லைண்ட் பண்ணிருவேன் பாத்துக்கோ”
“கம்ப்லைண்ட் பண்ண வேண்டியது தானே? உன்னை யார் பண்ண வேண்டாம்னு சொன்னா? உன்னை மாமா பொண்ணுன்னு சொன்னப்பவே பண்ண வேண்டியது தானே? கட்டிப் பிடிச்சப்ப, கண்ணாடிச்சப்ப, உன் கையைப் பிடிச்சப்பவே கம்ப்லைண்ட் பண்ணிருக்க வேண்டியது தானே? நானும் பொறுமையா பேசலாம்னு பாத்தா நீ ஓவரா பேசுற. அன்னைக்கு நான் செஞ்சது தப்பு தான். அது ஒண்ணும் உன்னை கட்டிப் பிடிக்கணும்னு எண்ணத்துல பண்ணலை”
…..
“அன்னைக்கு டிரைவர் அண்ணா, யாரும் இறங்காதீங்கன்னு சொன்னாங்க. அதைக் கூட கேக்காம நீ இறங்க போன? டிரைவர் பஸ் எடுத்துட்டாங்க. நீ கீழே விழுந்து மூஞ்சு முகரையை பேத்துக்க கூடாதுன்னு தான் உன்னை பின்னால இருந்து பிடிச்சேன்? நான் தடுத்தது தப்பு தான். விழுந்து சாவு டி ன்னு விட்டுருக்கணும். உனக்கு கொஞ்சமாவது சென்ஸ் இருக்கா? எனக்கு உன்னைக் கட்டிப் பிடிக்கணும்னு நினைச்சா பஸ்ல அத்தனை பேர் இருக்கும் போதா கட்டிப் பிடிப்பேன்? நான் செஞ்சது தப்பா பட்டாக் கூட என்கிட்ட என்னன்னு கேட்டுருக்கலாம்ல? அப்ப கூட அதுக்கப்புறம் எத்தனை தடவை உன்கிட்ட பேச முயற்சி செஞ்சேன்?”
…..
“பெரிய இவ மாதிரி மூஞ்சை தூக்கிட்டு போற? என்கிட்ட விளக்கம்
கேக்க கூட உனக்கு மனசில்லைல? அந்த அளவுக்கு நான் உனக்கு சீப்பா போயிட்டேன் அப்படித் தானே? உன்னைப் பொறுத்த வரைக்கும் நான் ஒரு கேடு கெட்டவன். அதனால தானே துன்னு திட்டிட்டு போன? உன் மனசுல என்னைப் பத்தி இவ்வளவு உயர்ந்த அபிப்ராயம் இருக்குன்னு தெரியாம உன் கிட்ட பேசணும்னு உன் பின்னாடி தொங்கிட்டு இருக்கேன் பாரு. என்னை செருப்பால அடிக்கணும். நீ என்னை கண்டுக்காம போனாலும் இப்பவும் உன்னைக் காப்பாத்த தான் வந்தேன். தப்பு தான், எல்லாமே தப்பு தான். இன்னும் உன் விசயத்துல நான் எப்பவும் தலையிட மாட்டேன். அப்படி உன் விசயத்துல நான் மூக்கை நுழைச்சா என்னை செருப்பைக் கழட்டி அடி. கௌதம் கிட்ட நான் சொல்லிக்கிறேன். அவங்க யார் கிட்டயும் போய் நம்ம விஷயத்தை சொல்லாம நான் பாத்துக்குறேன். இனி நீ யாரோ நான் யாரோ. குட் பாய்”, என்று சொன்னவன் வேறு பக்கம் சென்று அமர்ந்து கொண்டான்.
தான் சொல்ல வருவதைக் கூட கேட்காமல் இருக்கும் அவள் செய்கை அவனுக்கு எரிச்சலைத் தந்தது. அவளோ அவன் பேசிச் சென்ற வார்த்தைகளில் ஆனி அடித்தது போல அசையாமல் நின்றாள்.
அப்போது தான் அன்றைய நாளைப் பற்றி நினைவே அவளுக்கு வந்தது. “ஒரு வேளை அவன் சொல்றது உண்மையா இருக்குமோ?”, என்று எண்ணியவளுக்கு அன்று பஸ் மூவ் ஆன விஷயம் நினைவில் வந்தது.
“சே நான் தான் இவனை தப்பா நினைச்சிட்டேனா?”, என்று எண்ணிக் கொண்டு அவனைப் பார்த்தாள். அவனோ அவள் பக்கம் பார்க்கவே இல்லை.
“தப்பு நம்ம மேல தான். அவன் கிட்ட சாரி கேட்கலாம்”, என்று எண்ணி அவன் அருகே அவள் செல்ல போக அப்போது பஸ் வந்து விட்டது. அனைவரும் அதில் ஏறினார்கள். தீபக்கும் பஸ்ஸில் ஏறி விட்டான். காயத்ரியால் அவனிடம் சாரி கேட்க முடியவில்லை.
அவளுக்கு நேரே எதிர் பக்கம் இருந்த சீட்டுக்கு பின்னால் தான் அவன் அமர்ந்திருந்தான். அதனால் அவனை திரும்பி திரும்பி பார்த்தாள். அவன் அவள் பக்கம் திரும்பவே இல்லை.
அவன் பார்ப்பான் என்று எண்ணிய காயத்ரி அவன் கடைசி வரை திரும்பாததால் வேறு வழியில்லாமல் “சாரி”, என்று ஒரு சின்ன துண்டு பேப்பரில் எழுதி அவன் காலுக்கு கீழே தூக்கிப் போட்டாள்.
துண்டு பேப்பர் விழுந்ததும் அவள் பக்கம் பார்த்தான். அவளோ அந்த பேப்பரையும் அவனையும் மாறி மாறி பார்த்தாள்.
மனதுக்குள் உற்சாகமானவன் அதை வெளியே காட்டாமல் அந்த பேப்பரை எடுத்துப் பார்த்தான். அதில் இருந்த சாரி என்ற சொல் அவனுக்கு புன்ன்கையை வரவைத்தது. அதையும் மறைத்தவன் அவளை முறைத்து பார்த்தான்.
அவன் முறைக்கவும் சோர்ந்து போன மனதுடன் திரும்பிக் கொண்டாள் காயத்ரி. அவன் உதடுகளில் புன்னகை விரிந்தது. அதே பேப்பரில் தன்னுடைய மொபைல் நம்பரை எழுதி அவள் காலருகே தூக்கிப் போட்டான்.
அந்த பேப்பரை எடுத்து பார்த்த காயத்ரி விக்கித்து போனாள். அதை கையில் எடுத்தவள் அவளுடைய மன்னிப்பை ஏற்காமல் தான் அவன் திருப்பி போட்டு விட்டான் என்று எண்ணினாள்.
அவனுடைய உதாசீனத்தில் அவள் மனது துவண்டு போனது. அவள் கண்கள் கூட கலங்கியது. அடுத்து அவள் இறங்க வேண்டிய ஸ்டாப் என்பதால் அப்போதைக்கு அவசரமாக அதை திறந்து பார்க்காமலே, தன்னுடைய பேகில் இருந்த சைட் ஜிப்பில் போட்டு கொண்டு அவள் நிறுத்தம் வந்ததும் இறங்கி விட்டாள்.
அதை அவனும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான். அவள் வருத்தம் கண்டு உற்சாகமாக இருந்தது. அதே போல் அவனுடைய போன் நம்பரை அவள் பார்க்க வில்லை என்றும் புரிந்தது.
“வீட்டுக்கு போய் அந்த பேப்பரை திருப்பி பார்ப்பாளா, தூரப் போட்டு விடுவாளா?”, என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவன் அருகில் வந்து அமர்ந்தான் கௌதம்.
“ஐயையோ இப்ப இவன் என்ன கேக்க போறான்னு தெரியலையே”, என்று எண்ணி கௌதமைப் பார்த்தான் தீபக்.
“தம்பி”
“சொல்லுங்கண்ணா”
“நீ சொன்னது உண்மை தான் டா தம்பி. இன்னைக்கு ரெண்டு பேரும் லட்டர் பாஸ் பண்ணுனதுக்கு அப்புறம் தான் ரெண்டு பேரும் லவ் பண்ணுறீங்கன்னே எனக்கு புரிஞ்சது”
“என்னண்ணா சொல்றீங்க? என்ன லட்டர்?”
“ஏய் பொய் சொல்லாத, இப்ப தான் நான் பாத்தேனே? இனி இப்படி பஸ்ல வச்சு லட்டர் பாஸ் பண்ணாதீங்க. நான் பாத்த மாதிரி வேற யாராவது பாத்தா பிரச்சனை ஆகிரும். நான் வேற யார் கிட்டயும் சொல்ல மாட்டேன். மத்தவங்க என்னை மாதிரியே இருப்பாங்களா?”, என்று கௌதம் கேட்டதும் அவனைக் கண்டு ஈ என்று இளித்து வைத்தான் தீபக்.
“அப்பாடி, இந்த பிரச்சனை முடிஞ்சிருச்சு”, என்று எண்ணிக் கொண்டான் தீபக்.
காதல் தொடரும்!!!