எனைச் சுற்றி ஏகாந்தம்
அத்தியாயம் 7
தான் கோப பட்டு எழுந்து சென்றால் கயல் தன்னை சமாதானம் செய்வாள் என்று எண்ணினான் தமிழ். சமாதானப் படுத்த வில்லை என்றாலும் தன்னுடைய அன்னையின் பேச்சுக்காக கோபமாவது படுவாள் என்று தான் எண்ணினான்.
ஆனால் அவனது நினைப்பை பொய்யாக்கி விட்டு அவனை பின் பக்கமாக கட்டி அணைப்பாள் என்று அவன் கனவில் கூட நினைக்க வில்லை.
அவளது இரண்டு கரமும் அவன் வயிற்றைச் சுற்றி இருக்க அவள் கன்னம் அவன் முதுகில் புதைந்திருக்க அவளது மொத்த மேனியும் அவன் உடலில் உராய்ந்தது.
முதன்முதலில் அவனை ஒரு பெண் நெருங்கி இருக்கிறாள். அதுவும் அவனை ஒட்டிக் கொண்டு. அவனுக்கு எப்படி இருக்குமாம்? இது வரை அவள் மேல் இருந்த வருத்தம் கோபம் எல்லாமே அவனை விட்டுச் சென்றிருந்தது. அவளது அருகாமை இன்னும் வேண்டும் வேண்டும் என்று அவன் மனம் பேராசை கொண்டது.
சில பல நொடிகள் அப்படியே ரசித்து நின்றான். அவன் கோபத்தில் இருக்கிறான் என்று எண்ணியவள் மெதுவாக அவனை விட்டு விலகி ‘சாரி’ என்றாள்.
அவள் புறம் திரும்பியவன் அவளையே பார்த்தான். அவளை இறுக்கிக் கட்டிக் கொள்ள வேண்டும் என்ற வேகம் பிறக்க அதை எப்படி செயல் படுத்த என்று தெரியாமல் தடுமாறினான்.
அவளது அருகாமையும் வேண்டும், அதே நேரம் அவளை தொட தயக்கமும் இருந்தது. என்ன செய்ய என்று தெரியாமல் அவன் தடுமாற அவளோ அவன் கோபத்தில் இருப்பதாக எண்ணிக் கொண்டாள்.
“நான் செஞ்சது தப்பு தான். என்னை மன்னிச்சிருங்க. என்னாலயும் நீங்க இல்லாம இருக்க முடியாது”, என்று அவள் சொல்ல நடப்புக்கு வந்தவன் “வேண்டாம் கயல், இதே மாதிரி கல்யாணத்துக்கு அப்புறமும் பிரச்சனை வரும். எங்க அம்மா ஏதாவது சொல்லுச்சுன்னு நீ என்னை விட்டுப் போயிருவ. இந்த நாலஞ்சு நாள் நீ பேசாம இருந்ததையே என்னால தங்கிக்க முடியலை. கல்யாணத்துக்கு அப்புறம், உன் கூட உயிரோட உணர்வோட வாழ்ந்த பிறகு எங்க அம்மா பேச்சைக் கேட்டு நீ என்னை விட்டு விலகிப் போனா என்னால சத்தியமா தங்கிக்க முடியாது. அதனால இப்பவே நீ உன் அப்பா கிட்ட சொன்ன மாதிரி இந்த கல்யாணத்தை நிறுத்திறலாம்”, என்று அவன் சொல்ல அவன் இதழில் தன்னுடைய கரத்தை வைத்து தடுத்தாள்.
“பிளீஸ் அப்படிச் சொல்லாதீங்க. உங்க அம்மா அப்படிச் சொல்லவும் நான் உங்களுக்கு பொருத்தமா இல்லைன்னு நினைச்சு…. அப்படி பண்ணிட்டேன். அது தப்புன்னு எனக்கு புரிஞ்சிருச்சு. இனி யார் என்ன சொன்னாலும் உங்களை விட்டு விலக மாட்டேன். உங்களை வேற யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்”
“உண்மையிலே நான் உனக்கு பொருத்தம் இல்லை தான் கயல். நீ நல்ல கலரா இருக்க. நான் கருப்பு. கொஞ்சம் வயசும் அதிகம். அது மட்டுமில்லாம நீ கவர்ன்மெண்ட் வேலை பாக்குற. நான் அப்படி இல்லை. அதான் எங்க அம்மா அப்படிச் சொன்னதும் என்னை விலக முடிவு பண்ணிட்ட”
“கடவுளே நான் அப்படி எல்லாம் நினைக்கலைங்க”
“என்ன நினைச்சியோ, ஆனா என்னை வேண்டாம்னு முடிவு பண்ணி தானே என் கிட்ட பேசலை. உங்க அப்பா கிட்டயும் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிருக்க. அது அப்படியே இருக்கட்டும். பத்திரிக்கையை எல்லாம் எரிச்சிரு. நான் வரேன்”, என்று சொன்னவன் கிளம்ப போக அடுத்த நொடி அவனது சட்டைக் காலரை பிடித்து இழுத்தவள் தன்னுடைய தயக்கம் உதறி அவனது கன்னத்தில் தன்னுடைய முத்திரையை பதித்தாள். கண்கள் மின்ன அவள் முத்த்தத்தை ரசித்தான்.
பட்டென்று அவனை விட்டு விலகி நின்றவளுக்கு வெட்கமாக வந்தது. அவள் செய்த செயலில் அவளே தடுமாறி நிற்க அவன் பார்வையோ ஆசையாக அவளை மொய்த்தது.
“கயல்”, என்று மென்மையாக அழைக்க அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் பார்வை அவளை தடுமாறச் செய்ய அவன் நெஞ்சில் அழுத்தமாக முகம் புதைக்க மனம் தவியாய் தவித்தது.
மனம் போகும் எண்ணங்களில் இருந்து தப்பிக்க நினைத்து “பிளீஸ் உக்காருங்க. நான் டீ போட்டு எடுத்துட்டு வரேன். அதுக்கப்புறம் நான் செஞ்ச தப்புக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடுங்க”, என்று சொல்லி விட்டு அவள் நகரப் போக அடுத்த நொடி அவள் கை பற்றி இழுத்தான்.
சட்டென்று அவன் நெஞ்சில் போய் மோதினாள் கயல். அவன் தேகத்தோடு தேகம் உரச நிற்கும் நிலை சற்று அவஸ்தையாக தான் இருந்தது. ஆனால் சில நிமிடங்களுக்கு முன்னர் இதற்கு தானே ஆசைப் பட்டாள்.
அவளது கரம் அவனது தோளில் பதிந்திருக்க முகம் அவன் நெஞ்சில் பதிந்திருந்தது. தன்னுடைய தோளில் இருந்த அவள் கரங்கள் நடுங்குவதைக் கண்டவனுக்கு சிரிப்பாக இருந்தது. ஆனாலும் அவள் தீண்டல், கலைந்திருந்த அவள் கூந்தல், அவளிடமிருந்து வந்த வாசனை, தன் நெஞ்சை சுடும் அவளது மூச்சுக் காற்றின் வெம்மை என அனைத்தும் சேர்ந்து அவனை மொத்தமாக தடுமாற வைத்தது.
அவள் முத்தம் கிடைத்த பிறகு அவனுக்கு எதற்கு தயக்கம் இருக்கப் போகிறது? அதனால் தைரியத்தை கூட்டி அவளை இடையோடு வளைத்தான்.
அவன் தொடுகையில் அவள் மூளை சுத்தமாக வேலை நிறுத்தம் செய்து விட்டிருந்தது. அவனது மூச்சுக் காற்றும் சற்று வேகம் எடுக்க அவனிடம் இருந்து விலக முயன்றாள்.
அவளை விடாமல் மேலும் இறுக்கி பிடித்தவன் “டூ மினிட்ஸ் இப்படியே இரு டி, பிளீஸ்”, என்று உரைக்க அவள் விலகுவாளா என்ன?
அவன் கைக்குள் இருந்த அவளது தேகம் நடுங்க “ப்ச், இப்ப எதுக்கு இவ்வளவு பயம்? உனக்கு பிடிக்காத எதையும் செய்ய மாட்டேன்”, என்று சொல்ல அவளால் தான் இயல்பாக இருக்க முடிய வில்லை.
அவனது கரம் மேலும் அழுத்தமாக அவள் இடையில் பதிய அவள் இதயம் தாறுமாறாக துடித்தது. சில நிமிடங்கள் அப்படியே கடக்க “பிளீஸ் விடுங்க”, என்று சொல்ல அவளை விட்டு விலகி நின்றான்.
“உக்காருங்க”, என்று சொன்னவள் அவன் மீண்டும் அமர்ந்ததும் அவன் கொடுத்த பத்திரிக்கையை அப்படியே எடுத்துச் சென்று பூஜை அறையில் வைத்தவள் சாமி கும்பிட்டு விட்டு அதில் இருந்து ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
அவன் முன்னிலையிலே அதை பிரித்துப் பார்த்தவள் இருவரின் பெயரையும் ஒரு முறை ஆசையாக வருடிக் கொண்டாள். அவளையே சிறு சிரிப்புடன் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
“என்ன பாக்குற? பத்திரிக்கைல என் முகம் தெரியுதா என்ன?”, என்று சிரிப்புடன் கேட்டான்.
“பத்திரிக்கை அழகா இருக்கு, அதுவும் உங்க பேர் கூட என் பேர் சேர்ந்திருக்குறது இன்னும் நல்லா இருக்கு. எல்லாமே கனவு மாதிரி இருக்கு. இனிமே நான் கயல்விழி தமிழரசன். சொல்லவே நல்லா இருக்குல்ல?”, என்று அவள் ரசித்து சொல்ல அவள் தன்னுடைய பெயரைச் சொன்னதைக் கேட்டு அவனும் சந்தோஷமாக புன்னகைத்தான்.
வந்ததில் இருந்து அவனுக்கு எதுவும் கொடுக்க வில்லை என்று புரிய “டீ போடவா? இல்லை உங்களுக்கு காபி பிடிக்கும்ல? போடட்டா?”, என்று கேட்டாள்.
“ஒண்ணும் வேண்டாம் கயல்”
“ஜூஸ் ஏதாவது போடவா? லெமன் ஜூஸ். நீங்க என்னைக்கு லெமன் ஜூஸ் பத்தி பேசுனீங்களோ அன்னைல இருந்து லெமன் என்னோட பேவரைட் ஆகிருச்சு தெரியுமா? அதுக்கப்புறம் அடிக்கடி போட்டுக் குடிப்பேன். உங்க நினைவும் தன்னாலே வந்துரும்”
“ஒண்ணும் வேண்டாம், உண்மையிலே அந்த அளவுக்கு நான் உன் மனசுல பதிஞ்சிட்டேனா கயல்?”
“அந்த அனுமாரா பிறந்திருந்தா சத்தியமா என் நெஞ்சை பிளந்து காட்டிருப்பேன்”
“ஏய் லூசு, என்ன பேசுற? ஆமா என்ன வீட்ல யாருமே இல்லை? எங்க போயிட்டாங்க?”, என்று தெரியாதது போல கேட்டான்.
“எல்லாரும் ஒரு கல்யாணத்துக்கு…. போயிருக்காங்க”
“அப்படியா? அப்படின்னா இன்னைக்கு எனக்கு கொண்டாட்டம் தான்”, என்று சிரிக்க அவளும் வெட்கத்துடன் புன்னகைத்தாள். அவள் வெகு நேரம் நின்று கொண்டே பேசிக் கொண்டிருப்பது புரிய “கயல் ஏன் நின்னுட்டே இருக்க? இங்க வா வந்து உக்காரு”, என்று அழைத்தான்.
“இல்ல பரவால்ல”, என்று தடுமாற்றத்துடன் சொன்னாள்.
“என்ன பரவால்ல? வான்னு சொல்றேன்ல? என் பக்கத்துல உக்கார மாட்டியா? வா. வா டி”, என்று சொன்னதும் அவன் அருகே சென்று அவனுக்கு சற்று இடைவெளி விட்டு அமர்ந்தாள். அதற்கு பின்னர் தான் அவளுக்கு படபடப்பு அதிகமானது. அவளது அமைதி அவனை பாதிக்க அவளைத் திரும்பிப் பார்த்தான். அப்போது தான் அவளது தடுமாற்றம் புரிந்தது. அவனுக்குள்ளும் ஏதேதோ எண்ணங்கள். உண்மையிலே அவளிடம் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆசையில் தான் அவளை அழைத்தான். ஆனால் இப்போதோ அவனுக்குள்ளும் தடுமாற்றங்கள்..
இருவருக்குள்ளுமே ஹார்மோன்களின் ரீங்காரம் அதிகமானது. இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் அதிகமாகவே தழுவியது. ஆனால் நேருக்கு நேர் இருவராலும் சந்திக்க முடிய வில்லை.
அவன் பார்வையின் வித்தியாசம் அவளை மயக்கவே செய்தது. இருவருக்குமே அந்த நிமிடம் என்ன பேச என்று தெரிய வில்லை. போனவர்கள் மதிய உணவை முடித்து விட்டு தான் வருவார்கள் என்று தெரிந்தாலுமே அவளது படபடப்பு குறையவே இல்லை.
அந்த இறுக்கமான சூழ்நிலையை அகற்ற எண்ணினானோ என்னவோ? தன்னுடைய சட்டை பையில் இருந்து ஒரு டேரி மில்க் சாக்லெட்டை எடுத்து அவளிடம் நீட்டினான்.
“எனக்கா?”, என்று கண்கள் விரித்துக் கேட்டவளை அள்ளி அனைத்துக் கொள்ள வேண்டும் போல வேகம் எழுந்தது.
“போதும் டா, கிளம்பிரு. வந்த, பாத்த, பேசிட்ட. கிளம்பி போய்க் கிட்டே இரு. அதான் ரெண்டு பேருக்கும் நல்லது. ஏதாவது செஞ்சு மானத்தை வாங்கிறாத”, என்று மனசாட்சி குரல் கொடுக்க அதை முழு மனதாக நிறைவேற்ற அவனால் முடிய வில்லை.
பேச்சில்லாத மௌனம் கூட தவிப்பைத் தான் கொடுத்தது. தலை குனிந்து அவன் கொடுத்த சாக்லெட்டை கையில் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் பார்வை தன்னையே துளைப்பதை அவளால் உணர முடிந்தது.
“சாக்லேட் சாப்பிடு, கயல்”, என்றான்
“அப்புறம் சாப்பிடுறேனே?”, என்று அவள் கேட்க “சரி, நான் கிளம்பட்டுமா?”, என்று சொல்லி அவன் எழுந்து கொண்டான். அவசரமாக அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவள் கண்கள் போகாதே என்று அவனைக் கெஞ்சியது.
அதை உணர்ந்தவன் “போகட்டா? திடீர்னு உன் அப்பா சித்தி வந்தா சங்கடமா இருக்கும்”, என்றான்.
“அவங்க லன்ச் முடிச்சிட்டு தான் வருவாங்க”, என்று அவள் அவசரமாக சொல்ல அவள் மனது புரிந்தது.
“அப்படின்னா கொஞ்ச நேரம் இருக்கவா?”, என்று ஆர்வமாக கேட்டான்.
“ம்ம்”, என்று சொல்ல அதே இடத்தில் அமர்ந்தான். அவள் மீண்டும் தலை குனிந்து கொள்ள “பேச மாட்டியா?”, என்று கேட்டான்.
என்ன பேச என்று தெரியாமல் அவள் அமைதியாக இருக்க அவளை நெருங்கி அமர்ந்தவன் அவளின் வலது கையை பிடித்து தன்னுடைய கைகளுக்குள் அடக்கினான்.
அவன் தொட்டதும் தேகம் முழுக்க அனல் பரவ தவிப்புடன் அமர்ந்திருந்தாள். ஆனால் கையை உருவிக் கொள்ள வில்லை. அதில் தைரியம் கொண்டவன் தன் இதழ்களை மென்மையாக அவள் புறங்கையில் பதித்தான்.
அவன் மீசை முடி கையில் ஏற்படுத்திய குறுகுறுப்பும் அவனின் இதழ்கள் தந்த ஈரமும் அவளை வெகுவாக அசைத்தது. அந்த உணர்வைத் தாங்க முடியாமல் கையை அவனிடம் இருந்து இழுத்தாள். மெல்லிய சிரிப்புடன் அவள் கைகளை விடுவித்தான்.
“சரி உன்னோட ரூம் எது? எனக்கு காட்ட மாட்டியா?”, என்று கேட்டு அவன் பேச்சை மாற்ற நடப்புக்கு வந்தவள் “வாங்க காட்டுறேன்”, என்று சொல்லி நேர் எதிரே இருந்த அறைக்கு அழைத்துச் சென்றாள்.
“இது தான் என்னோட ரூம்”, என்று காட்ட அவன் கண்கள் அந்த சிறிய அறையை அலசியது. அங்கிருந்த ஒற்றைக் கட்டிலும் ஒரு அலமாரியும் தவிர அங்கு வேறு எதுவுமே இல்லை. அலமாரியில் தான் உடைகளை வைத்திருப்பாள் போல என்று எண்ணிக் கொண்டான்.
ஒரே அறைக்குள் அவனுடன் தனிமையில் இருப்பது ஒரு அவஸ்தையை தர கொஞ்சம் சங்கடமாக நின்றாள். அதைக் கண்டவன் “சரி கயல், நான் இங்க இருந்தாலும் நீ என் கிட்ட பேசப் போறது இல்லை. நான் கிளம்புறேன்”, என்றான்.
அவள் மீண்டும் அவனைத் தவிப்புடன் பார்க்க “என்ன போகட்டுமா?”, என்று கேட்டான்.
ஒரு நொடிக்கு மேல் அவன் பார்வையை தாங்க முடியாமல் தலை குனிந்தவள் “வேண்டாம்”, என்னும் விதமாய் தலையை அசைத்தாள். அடுத்த நொடி அவளை நெருங்கி நின்றவன் “அப்படின்னா உன் கூடவே இருந்துறவா?”, என்று கிசுகிசுப்பாக கேட்டான். அவனது மூச்சுக் காற்று அவள் உச்சந்தலையில் சுட்டது.
இங்க இருந்து வெளிய போ டி என்று அவள் உள்மனது கதற அவள் காலால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடிய வில்லை. அவள் இதயம் தாறுமாறாக துடித்தது. அவள் அமைதி அவனுக்கு தைரியத்தைக் கொடுக்க இன்னும் அவளை நெருங்கினான்.
“பிளீஸ், கதவு திறந்திருக்கு. யாராவது வந்திரப் போறாங்க. நாம வெளிய போகலாம் வாங்க”, என்று சொன்னவள் அறையை விட்டு வெளியே செல்லப் போக ஒரு கையால் அவள் கையைப் பற்றி நிறுத்தினான்.
அவள் ஏதோ பேசப் போக அவள் இதழ் மேல் ஒரு விரலை வைத்து பேச விடாமல் செய்தவன் தன்னுடைய பார்வையை அவள் தலையிலிருந்து கால் வரை செலுத்தினான். அதுவும் லேசாக கீழிறங்கி இருந்த அவளின் உடையில் அவன் பார்வை நிலைக்க அவன் பார்வையின் வீச்சு தாங்காமல் சிறு வெட்கத்துடன் உடையை சரி செய்ய முயன்றாள்.
அவளை முறைத்துப் பார்த்தவன் “இப்ப நீ செஞ்ச வேலை எனக்கு பிடிக்கலை”, என்றான்.
ஒரு நொடி புரியாமல் விழித்தவள் புரிந்த போதோ சிவந்து போய் அவன் நெஞ்சிலே தன்னுடைய முகத்தை மறைத்துக் கொண்டாள். அதற்கு மேல் அவனாலும் கட்டுப் படுத்த முடியாமல் போக அவள் எலும்புகள் உடையும் அளவு அவளை இறுக அணைத்தவன் அடுத்த நிமிடம் முத்தத்தால் அவளைத் திணறடித்தான்.
அவள் இதழ்களில் தன்னுடைய இதழைப் புதைத்தவன் சற்று முரட்டுத் தனமாக முத்தமிட்டான் என்று தான் சொல்ல வேண்டும். அவள் வெற்றிடையை ஆராய்ந்த அவன் கரங்கள் சற்று எல்லை மீறத் துடிக்க அதைச் செய்ய அவனுக்கு தயக்கமாக இருந்தது.
ஆனால் அவன் முத்தத்தில் கனவுலகில் மிதந்தவள் அவன் முதுகில் கை கொடுத்து இறுக்கி அனைத்து கொண்டாள். அவள் நெருக்கத்தில் தயக்கம் உதறியவனின் கைகள் முதல் முறையாக அவள் மேனியில் புதைந்தது. அவன் கரங்கள் அவளை உணர முயல அணை போட்டு அவனை தடுக்க முயன்றாள். அவனுடைய முதல் நெருக்கத்தில் திணறிக் கொண்டிருந்தாள் கயல் விழி.
அவள் வாழ்க்கையில் வாங்கிய முதல் இதழ் முத்தம். அதிலிருந்து அவளுக்கு மட்டும் அல்ல அவனால் கூட வெளியே வர முடிய வில்லை. ஒரு மீள முடியாத சுழலுக்குள் அவன் அவளை அழைத்துச் செல்ல அவளும் அவனோடு பயணித்துக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரம் கழித்து அவன் அவளை விட்டு விலக சிவந்து போய் நின்றாள் கயல். அவனை நிமிர்ந்து பார்க்க கூட அவ்வளவு வெட்கமாக இருந்தது. “சீக்கிரம் வெளிய போய்றலாம் டி. இங்கயே இருந்தா என்ன ஆகுமோனு எனக்கே பயமா இருக்கு”, என்று அவன் சொல்ல அவளால் அவனை விட்டு ஒரு அடி கூட எடுத்து வைக்க முடிய வில்லை.
அவள் வெட்கம் உணர்ந்தவன் மீண்டும் அவள் உதடுகளை சிறை செய்து விட்டு தான் விட்டான். லேசாக பெரிதாக மாறி இருந்த உதடுகளை கண்ணாடியில் பார்த்து விட்டு “நீங்க ரொம்ப மோசம்”, என்று மெதுவாக முனகியவள் அவனை வெட்கத்துடன் நிமிர்ந்து பார்த்தாள்.
“சீக்கிரம் கண்டு பிடிச்சிட்ட. ஆனா கண்டிப்பா உன் கிட்ட என்னால இப்படி தான் நடந்துக்க முடியும். உன் கிட்ட மட்டும் தான் நான் நானா இருக்க முடியும். என் பொறுக்கித்தனத்தை நீ அட்ஜஸ்ட் பண்ணி தான் ஆகணும்”, என்று சொல்லி சிரித்தவன் அவள் கரம் பற்றி வெளியே அழைத்துச் சென்று சோபாவில் அமர்ந்து அவளையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டான்.
அவள் அமைதியாக இருக்க “என்ன கயல் எதுவுமே பேச மாட்டிக்க? என் மேல ஏதாவது கோபமா? நான் செஞ்சது உனக்கு பிடிக்கலையா?”, என்று கேட்டு வம்பிழுத்தான்.
“பிடிக்கலைன்னு நான் சொன்னேனா?”, என்று சிணுங்க அவளை இறுக அனைத்துக் கொண்டவன் “தேங்க்ஸ் கயல், இந்த முத்தம் கல்யாணம் வரைக்கும் தாங்கும்”, என்று சொல்லி வெட்கப் பட வைத்தான்.
அது மட்டுமில்லாமல் அவன் வாங்கி வந்திருந்த சாக்லேட்டை பிரித்து ஒரு சின்ன பீசை வாய்க்குள் போட்டுக் கொண்டவன் அதை அவளுக்கு கடத்தவும் மறக்க வில்லை.
அவன் ஒவ்வொரு செய்கையிலும் வேறு உலகத்தில் பறந்து கொண்டிருந்தாள் கயல்விழி. அவள் கண்களை நேருக்கு நேர் பார்த்தவன் “ஐ லவ் யு பொண்டாட்டி. நீ என் வாழ்க்கைல வந்த பிறகு தான் நான் இவ்வளவு சந்தோஷமா இருக்கேன். ஆனா என்னை விட்டு போயிறாத டி. நீ இல்லைன்னா நான் ஒண்ணும் இல்லாம போயிருவேன். எங்க அம்மா உன்னை கஷ்டப் படுத்தின மாதிரி பேசினதுக்கு நான் உன் கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன் கயல்”, என்றான்.
“நீங்க எதுக்கு மன்னிப்பு கேக்குறீங்க? நீங்க என் முன்னாடி கூட தலை குனிஞ்சு நிக்க கூடாது. அத்தை என் கிட்ட அப்படி பேசினதும் நான் உங்க கிட்ட சொல்லிருக்கணும். அதை விட்டுட்டு உங்க கிட்ட பேசாம இருந்தது தப்பு தான்”
“சரி விடு கயல். இனி என்ன நடந்தாலும் என் கிட்ட சொல்லு. இனி இந்த ஜென்மம் முழுக்க எனக்கு நீ தான் இருக்க மா. அதை உன் மனசுல பதிய வச்சிக்கோ. என்னை விட்டு விலகணும்னு நீ நினைச்சா கூட என்னால அதை தாங்க முடியாது டி”, என்று சொல்ல சரி என்று கேட்டுக் கொண்டாள்.
“அப்புறம் கயல் நான் உன் கிட்ட ஒண்ணு கேக்கவா?”
“என்ன கேளுங்க?”
“உங்க சித்தி உனக்கு சூடு வச்சதா சேகர் அண்ணா சொன்னாங்க. எங்க வச்சாங்க? கால்லயா?”
“ம்ம்”
“எங்க காட்டு”, என்று அவன் கேட்க சிறு வெட்கம் வந்தாலும் காலைத் தூக்கி டீபாயில் வைத்தவள் முட்டு வரை உடையை தூக்கினாள். அவள் காலைப் பார்த்தவன் அதிர்ந்து தான் போனான். ஆங்காங்கே சூடு வைத்த தழும்பு தெரிந்தது. அதைப் பார்த்தவனுக்கு கண்களில் கண்ணீர் வந்தது. அவன் விரல்கள் மெதுவாக அந்த தழும்பை வருடிக் கொடுக்க அவளுக்கு கூச்சமாக இருந்தது.
தன்னவளுக்கு இந்த காயங்களைக் கொடுத்த வேணிக்கு நிச்சயம் ஏதாவது தண்டனை கொடுக்க வேண்டும் என்று மீண்டும் எண்ணிக் கொண்டான்.
“இப்ப எதுக்கு கலங்குறீங்க? இது எல்லாம் ஆறிருச்சு. இனிமே நீங்க தான் எனக்கு எந்த காயமும் வர விடாம பாத்துக்குவீங்களே? அப்புறம் என்ன?”, என்று கேட்டு அவனை சமாதானப் படுத்தினாள்.
அவள் பேச்சில் சமாதானம் ஆனவன் “பசிக்குது டி. உன் கிட்ட சண்டை போடணும்னு சாப்பிடாம வந்துட்டேன். ஏதாவது தாயேன்”, என்று சொல்ல அவசரமாக அடுப்படிக்கு சென்றவளுக்கு கண்கள் கலங்கியது. இன்று வீட்டில் யாரும் இல்லாததால் அவள் எதுவும் சமைக்க வில்லை. முந்தைய நாள் மீதமிருந்த சோறு மட்டுமே இருந்தது.
அவனுக்கு பழையதைக் கொடுக்க மனதில்லாமல் பிரிட்ஜில் இருந்து மாவை எடுத்தவள் சூடாக தோசை வார்க்க ஆரம்பித்தாள். அவள் அடுப்படிக்குச் சென்றதும் தமிழ் அவசரமாக அவளது அறைக்குச் சென்று அந்த கப்போர்டைத் திறந்து அவளது உடைகளை ஆராய்ந்தான். அங்கே விசேசமாக ஒன்றும் தெரிய வில்லை. சேலைகள் மட்டும் கொஞ்சம் அதிகம் இருந்தது. அதுவும் அவளது அன்னையின் புடவைகள் என்று புரிந்தது.
அவளுக்கு என்ன என்ன வாங்க வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டு மீண்டும் வெளியே வந்து அமர்ந்து கொண்டான். மொறுமொறுவென்று இருந்த தோசையை தட்டில் வைத்து எடுத்து வந்தவள் பூண்டு சட்னியையும் எடுத்து வந்தாள்.
“சாரி, உங்களுக்கு கொடுக்க இப்போதைக்கு இது தான் இருக்கு. சாப்பிடுங்க”, என்று சொல்ல “உன் கையால சாப்பிடுறதே பெரிய விசயம் பொண்டாட்டி”, என்று சொன்னவன் புன்னகையுடன் அதை வாங்கிக் கொண்டான். ஆனாலும் அவள் கலங்க “என்ன டி? இது எல்லாம் பெரிய விஷயமா? காலம் முழுக்க உன் கையால தானே விருந்து சாப்பிடப் போறேன்? அப்புறம் என்ன?”, என்று கேட்டு சமாதானப் படுத்தினான்.
அவள் அடுத்த தோசையை எடுக்கப் போக அவள் பின்னேயே அடுப்படிக்குச் சென்றவன் சமையல் மேடையில் ஏறி அமர்ந்து அவளுக்கு சிறிது தோசையைப் பிய்த்து ஊட்டினான். அவள் வாங்கிக் கொள்ளாமல் அவனை இமைக்காமல் பார்க்க “என்ன டி?”, என்றான்.
“இது வரைக்கும் எனக்கு யாரும் ஊட்டி விட்டதில்லை. நீங்க இப்படி எல்லாம் செஞ்சா எனக்கு அழுகை வரும்”
“இங்க பாரு கயல். உனக்கு மட்டும் இல்லை, எனக்குமே யாரும் ஊட்டி விட்டதில்லை. உனக்கு அம்மா இல்லை. எனக்கு இருந்தும் இல்லாத நிலை அவ்வளவு தான். இனி உன்னோட அம்மா, அப்பா, உன்னோட மொத்த சந்தோஷம் நான் மட்டும் தான். அதே மாதிரி எனக்கும் நீ மட்டும் தான். இதை உன் மனசுல நல்லா ஏத்திக்கோ. இப்ப சாப்பிடு”, என்று சொல்ல அவள் சந்தோஷமாக வாங்கிக் கொண்டாள்.
அவன் மீண்டும் ஊட்ட “நீங்க சாப்பிடுங்க, பசிக்குதுன்னு சொன்னீங்களே?”, என்று மறுத்தாள். “நான் ஊட்டினா சாப்பிடணும். மறுப்பு எல்லாம் சொல்லக் கூடாது. மறுத்தா தண்டனை கிடைக்கும் ஆமா”, என்று சொல்லி ஊட்டி விட்டான்.
அடுத்த தோசையை எடுத்து அவன் தட்டில் வைத்தவள் “என்ன தண்டனை கிடைக்குமாம்?”, என்று சிரிப்புடன் கேட்டாள்.
“பெருசா ஒண்ணும் இல்லை. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உன்னோட ரூம்ல வச்சு கொடுத்த தண்டனை தான்”, என்று சொல்ல அவள் முகம் சிவந்தது.
சாப்பிட்டு முடித்தவன் அவளையும் சாப்பிட வைத்து ஹாலில் வந்து அமர்ந்தான். ஒரு ஐந்து நிமிடம் அவள் மடியில் தலை வைத்துப் படுத்தான். எந்த எதிர்ப்பும் இல்லாமல் அவனை மடி தாங்கியவள் அவன் தலையைக் கோதிக் கொடுக்க அவனுக்கு தூக்கம் கண்களைச் சுழற்றியது. ஆனால் அவன் தூங்க வில்லை. தூக்கம் எப்போது வேண்டும் என்றாலும் தூங்கிக் கொள்ளலாம். ஆனால் அவளது அருகாமை முக்கியம் என்பதால் அவள் மடியில் படுத்து அவளிடம் பேசிக் கொண்டிருந்தான்.
அவளிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாலும் அவன் கண்கள் அவளை அளவிட்டுக் கொண்டு தான் இருந்தது. நெற்றியில் சின்னதாக சிவப்பு பொட்டு, காதை ஒட்டிய சிறு கம்மல், கழுத்தில் ஒரு கோதுமை செயின், கையில் கவரிங் வளையல் இது தான் அவளது அணிகலன்களாக இருந்தது.